Monday, August 29, 2016

Posted Date : 11:30 (29/08/2016) 30 ஆண்டுகள் சேதி சொல்லும்,'தகவல் மனிதர்' பழனிச்சாமி!

VIKATAN NEWS

திருச்செங்கோட்டில் இருந்து, ஈரோடு செல்லும் வழியில் இருக்கிறது ஐந்து பனை பேருந்து நிறுத்தம். இங்கு வைக்கப்பட்டிருக்கும் தகவல் பலகைகள் இந்த ஊர் மக்களுக்கு மட்டும், ரொம்ப ஸ்பெஷல். காரணம், இந்த தகவல் பலகையில் தினமும் அன்றைய செய்திகள், பொது அறிவுத் துணுக்குகள், அரசின் அறிவிப்புகள் என முக்கிய விஷயங்கள் தினமும் இடம் பெறும். இந்த தகவல் பலகையில், கடந்த 30 வருடங்களாக இந்த தகவல்களை எழுதி சேவை செய்து வருகிறார் அந்த ஊரின் தகவல் மனிதர் பழனிச்சாமி.
யார் அந்த பழனிச்சாமி என விசாரித்து, அவரைக் காண சென்றோம். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார் பழனிச்சாமி. ஆனால் 30 ஆண்டுகளாக ஊர் மக்களுக்காக தகவல் பலகையில் எழுதி வருகிறார். இதனால் ஊர்மக்கள் இவருக்கு வைத்திருக்கும் பெயர் 'தகவல் மனிதர்'. இது குறித்து சில கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

எத்தனை வருடமாக, நீங்கள் தகவல் பலகை எழுதுகிறீர்கள்?

"நான் சிறுவனாக இருந்தபோது, என் வீட்டில் வறுமை. அதனால் எட்டாம் வகுப்பைக் கூட, முழுமையாக முடிக்காம நின்று விட்டேன். ஆனால் அதற்குப் பிறகும், நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்ததால் தினசரி நாளிதழ்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். சமூக ஆர்வமும் எனக்கு அதிகம். அதனால், ஏதாவது செய்ய வேண்டுமென்று சிந்தித்துக் கொண்டிருந்த போதுதான் இந்த யோசனை வந்தது. சரியாக 1985-ல் இருந்து தகவல் பலகையில் எழுதி வருகிறேன். இன்னும் எழுதுவேன்".

ஏன் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் எழுத நினைத்தீர்கள்?

"பேருந்துக்காக இங்கே நிற்கும் போது, அவர்களுக்கு நிறைய நேரம் இருக்கும். அப்போது அவர்கள் படிக்க வசதியாக இருக்கும் என்றுதான் இங்கே எழுத ஆரம்பித்தேன். பேருந்தில் வருபவர்களும் இதைப் படிக்க முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலருக்கும் உபயோகமாக இருக்கும். அவர்களும் இதனைப் பாராட்டுகிறார்கள். அனைவருக்கும் பயன்படும் விதமாக அரசு வேலைவாய்ப்பு, அரசு அறிவிப்புகள், பொது அறிவு விஷயங்கள் போன்றவற்றை எழுதுகிறேன்".




இதற்காக மாதம் எவ்வளவு செலவு செய்வீர்கள்?

"தினமும் இரண்டு அல்லது மூன்று தினசரிகள் வரை வாங்குவேன். எழுதுவதற்குத் தேவையான மாவும், சாயமும் வாங்கிவந்து நானே எழுதுவேன். பிறகு பள்ளிக்கூட விசேஷம், கண்தான முகாம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இலவசமாக எழுதிக் கொடுப்பேன். ஒரு தட்டி வைக்க சுமார் 50 ரூபாய் செலவாகும். வாரம் 6 தட்டி வைப்பேன். அத்துடன் மாவு, சாயம் என 1,500 ரூபாய் வரை செலவாகும். இதை ஒரு சேவையாக நினைத்து செய்வதால், இந்த செலவும், கஷ்டங்களும் தெரிவதில்லை".

இதைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?

நிறையப் பேர் பாராட்டுவார்கள். ஒரு சிலர் கேலியும் செய்வர். என் பையன் மட்டும் அப்பப்போ என்னை திட்டுவான். அவன் திட்டுவதற்குக் காரணம், எனக்கு சுகர் இருப்பதால் அவ்வப்போது மயக்கம் வரும். அப்போதும் நான் எங்கேயாவது எழுதிக் கொண்டே இருப்பேன். யார் என்ன சொன்னால் என்னங்க? நாம் செய்வதால் மற்றவர்கள் பயனடைகிறார்கள். அது போதுங்க" என்றார் பழனிச்சாமி.

- ச.செந்தமிழ்செல்வன், லோ.பிரபுகுமார்
(மாணவப்பத்திரிகையாளர்கள்)

“ரேஷன் கார்டு அச்சடிக்க பணம் வேண்டும்...” லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்! (வீடியோ ஆதாரம்)

vikatan news

லஞ்சம் வாங்குவதும் குற்றம்.. கொடுப்பதும் குற்றம்...' இந்த வாசகம் எல்லா அலுவலகங்களில் நீக்கமற நிறைந்திருப்பதுபோல, லஞ்சமும் ஊழலும் குடி கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் மக்கள் லஞ்சம் கொடுத்து காரியங்களை விரைவாக முடித்துக்கொண்ட காலம் மலையேறிவிட்டது. மக்கள் தற்போது லஞ்சம் கொடுப்பதை அசிங்கமாகப் பார்ப்பதுடன், லஞ்சம் கேட்கும் ஊழியர்களைப் பொது மக்கள் தைரியமாக அம்பலப்படுத்தவும் தொடங்கிவிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் ராமன். உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லாததால் திருப்பூரில் டைலராக வேலை பார்க்கும் இவருக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு தனியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார். ஐந்து வருடங்களில் பலமுறை அரசு அலுவலகங்களுக்கு நடந்ததில் ராமனின் செருப்பு தேய்ந்ததுதான் மிச்சம். ஐந்துமுறை அவரிடன் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்து உள்ளனர். ஏன் என்று கேட்டால் சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ காரணம் சொல்லி உள்ளனர். அதிகாரிகளைப் பொறுத்தவரை ராமன் செய்த தவறு, அவர்கள் கேட்ட லஞ்ச பணத்தைத் தர மறுத்தது. லஞ்சம் தராமல் ரேஷன் கார்டைப் பெற்றுவிடவேண்டும் என ராமன் வைராக்கியத்துடன் இருக்க... ஒவ்வொரு முறையும் அவரது விண்ணப்பம் தட்டிக்கழிக்கப்பட்டதால் வெறுத்துப்போன ராமன் ஒரு முடிவுக்கு வந்தார்.

அந்த முடிவை ராமனே விவரிக்கிறார், ''லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏதாவது பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் போன் கேமராவை ஆன் செய்துவிட்டு, சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பேச்சம்பள்ளி தாலுக்கா ஆபீஸில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் அதிகாரி சிவச்சந்திரன் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். என்னுடைய விண்ணப்பத்தைப் பார்த்த அவர், 'புது ரேஷன் கார்டுக்கு பிரின்டிங் செலவு இருக்கு, பல கட்டத்தைத் தாண்டி உங்க விண்ணப்பம் போகணும். அதனால செலவு ஆகும்' என்றார். 'ரேஷன் கார்டு வந்த உடன் பணம் தருகிறேன்' என நான் கூறியவுடன், கையெழுத்துப் போட்டு விண்ணப்பத்தை எறிந்தார். இதை அப்படியே பதிவுசெய்து வந்துவிட்டேன். நான் லஞ்சம் தராததால், ஏதாவது காரணத்தைச் சொல்லி விண்ணப்பத்தை ரிஜக்ட் செய்துவிடுவார்கள். 5000 ரூபாய் தந்திருந்தால் ஒரே மாதத்தில் எண்ணால் புது ரேஷன் கார்டைப் பெற்றிருக்க முடியும். ஆனால், நான் அதை விரும்பவில்லை. எங்கள் ஊரில் பலர், பிறந்த குழந்தைக்கு, பிறந்த சான்றிதழைப் பெற முடியாமல் தவிக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஒரு தீர்வு வேண்டும்'' என்றார் ஆதங்கத்துடன்.

இதுபற்றி கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அதிகாரி ராஜேந்திரனிடம் பேசினோம். அவர், ''நீங்கள் சொல்லிய பிறகுதான் இந்த விஷயம் என் கவனத்துக்கு வருகிறது. புது ரேஷன் கார்டுக்காக மக்கள் ஒரு பைசாகூடக் கொடுக்க வேண்டியதில்லை. இதனை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.

சென்னை 377: இடைவிடாத 372 ஆண்டு சேவை

THE HINDU TAMIL

தமிழகத்தின் முதல் நவீன மருத்துவமனையான சென்னை அரசு மருத்துவ மனைக்கான விதை 1644-ல் புனித ஜார்ஜ் கோட்டையில் இடப்பட்டது.

அதேநேரம் சென்னை அரசு பொது மருத்துவமனை 1772-ல் இருந்து கடந்த 245 ஆண்டுகளாக ஒரே இடத்திலேயே செயல்பட்டு வருகிறது. 1644 - 1772-க்கு இடைப்பட்ட காலத்தில் அரசு மருத்துவமனை கட்டிடம் 9 முறை மாற்றப்பட்டது. 2002-ல் கட்டிடம் கட்டப்பட்டது 11-வது முறை.

புதிய இடம்

1771 வரை நகரின் மையமாகக் கருதப்பட்ட ஆர்மீனியன் தெருவில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. 1760-களிலேயே மருத்துவமனையை இடம்மாற்றுவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டு, இடமும் தேர்வு செய்யப்பட்டுவிட்டாலும் 1771 வரை ஒரு கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை. 1680-களில் மதராஸ் நரிமேடு பகுதியின் தாழ்வான சரிவுகளில் கிழக்கிந்தியக் கம்பெனியின் கார்டன் ஹவுஸ் அமைந்திருந்தது. அந்த இடத்தில்தான் தற்போதைய சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் அமைந்துள்ளன. அதையடுத்த இடமே அரசு மருத்துவமனை கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

அரசு பொது மருத்துவமனை தற்போது அமைந்துள்ள இடத்தில் முதல் கட்டிடத்தைக் கட்டியவர் ஜான் சல்லிவன். 1772 அக்டோபர் 5-ம் தேதியில் இருந்து புதிய இடத்தில் அரசு மருத்துவமனை செயல்பட ஆரம்பித்தது. அன்றைக்கு நகரைப் பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த கோட்டை போன்ற டவுன் சுவரில், அரசு மருத்துவமனைக்கு வழிவிடும் ஒரு கதவு இருந்தது. அது ‘ஹாஸ்பிடல் கேட்’ என்றே அழைக்கப்பட்டது.

அழகை இழந்த கட்டிடங்கள்

ஆண்டுகள் செல்லச் செல்ல அரசு பொது மருத்துவமனையில் நரம்பியல், இதயநோயியல், மற்றச் சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட, 1960-களில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் தனித்தனிக் கட்டிடங்கள் கட்டப்பட ஆரம்பித்தன. ஆனால், பழைய கட்டிடங்களின் வடிவ அழகை அவை பெற்றிருக்கவில்லை. 2002-ம் ஆண்டில் அரசு மருத்துவமனையின் இரண்டு முதன்மை கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

இன்றைக்கும் முகப்பில் உள்ள இரண்டு குவிமாட கட்டிடங்களில் இருக்கும் டாக்டர் எம். குருசாமி, டாக்டர் எஸ். ரங்காச்சாரியின் சிலைகள் மட்டுமே 1930-களின் காட்சிகளை நினைவுபடுத்தும் ஒரே அடையாளமாகத் திகழ்கின்றன. முகப்பைத் தாண்டி உள்ளே சென்றால் பழசை நினைவுபடுத்தும் கட்டிடங்கள் இந்த வளாகத்துக்குள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அதேநேரம், இந்தக் கட்டிடங்கள் பலவும் பராமரிப்புக்காக ஏங்கித் தவிக்கின்றன.

மக்கள் மருத்துவமனை

மதராஸ் முதல் மருத்துவமனையின் பெயர் 1692-ல் அரசு மருத்துவமனை என்று மட்டுமே வழங்கப்பட்டது. ‘பொது’ என்ற வார்த்தை அப்போது இல்லை. அதற்குக் காரணம் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே அந்த மருத்துவமனை சிகிச்சை அளித்து வந்ததுதான்.

1842-ல்தான் அரசு பொது மருத்துவமனை ஆனது. அப்போதுதான் இந்தியர்களுக்கும் இந்த மருத்துவமனை சிகிச்சை அளிக்க ஆரம்பித்தது. 1899-ல்தான் ராணுவச் சேவையை விடுத்து, முழுக்க முழுக்க மக்களுக்கான மருத்துவமனையாக இது மாறியது.

சென்னையின் மருத்துவச் சாதனைகள்

அரசு பொது மருத்துவமனை பல்வேறு புதிய கண்டறிதல்களுக்காகவும் புகழ்பெற்றிருக்கிறது. காலா அசர் என்ற பயங்கர நோய்க்குக் காரணமாக இருந்த கிருமியை மதராஸ் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்த கர்னல் சி. டோனவன் 1903-ல் கண்டறிந்தார். இந்தத் தகவல் இங்கிலாந்துக்குச் சென்றபோது, டாக்டர் லீஷ்மேன் என்பவரும் அதே கிருமியைக் கண்டறிந்திருந்தது தெரியவந்தது. அதனால், அந்தப் பாக்டீரியாவைக் கண்டறிந்த பெருமை இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அந்தப் பாக்டீரியாவின் பெயரில் இருவருடைய பெயரும் Leishman Donovani இடம்பெற்றது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பொறுப்பாளராக இருந்த டோனவன், அந்த மருத்துவமனையில்தான் அந்தக் கிருமியைக் கண்டறிந்திருக்க வேண்டும்.



அதேபோலப் பெப்டிக் அல்சருக்கான நவீன சிகிச்சைகளில் ஒன்றை இந்தியாவிலேயே முதன்முறையாக வெற்றிகரமாக நடத்தியவர் டாக்டர் டபிள்யு.ஜெ. நிப்லாக். அரசு மருத்துவமனையில் 1905 மார்ச் 2-ம் தேதி இது நிகழ்த்தப்பட்டது.

முதல் தலைமை மருத்துவரின் விநோதங்கள்

மதராஸ் மருத்துவமனையின் முதல் தலைமை மருத்துவராக டாக்டர் எட்வர்டு பல்க்லே 1692-ல் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டே இந்தியாவின் முதல் மருத்துவ-சட்ட ரீதியிலான பிரேதப் பரிசோதனையை அவர் நடத்தினார். கிழக்கிந்திய கம்பெனியின் மூத்த அதிகாரி ஒருவருக்குத் தவறாகக் கொடுக்கப்பட்ட மருந்தால் ஏற்பட்ட இறப்பு காரணமாக இந்தப் பிரேதப் பரிசோதனை நடந்தது. ஏற்கெனவே ஆர்செனிக் இருந்த பாத்திரத்தை ஒழுங்காகக் கழுவாமல் மருந்து தயாரித்ததால் இந்த இறப்பு நேர்ந்தது. அதேபோல முதல் மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர், முதல் காயமடைந்ததற்கான சான்றிதழை வழங்கியவரும் எட்வர்டு பல்க்லேதான். அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ராணுவக் கட்டுப்பாட்டு பகுதியில் இவருடைய கல்லறை உள்ளது. மாநிலத் தொல்லியல் துறையின் கீழ் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ள இந்தக் கல்லறையை இப்போதும் பார்க்கலாம்.

நன்றி: மெட்ராஸ் மியூஸிங்ஸ்

குறள் இனிது: கொஞ்சமாவது நினைச்சுப் பாரு குமாரு!

THE HINDU TAMIL

விளையாட்டுகளை பெரிய திரையில் விளையாடிய அனுபவம் உண்டா உங்களுக்கு?

வீடியோ இப்ப இந்தத் துரத்தும் (chase) விளையாட்டை விளையாடலாம் வாங்க.

ராட்சத மோட்டார் பைக்கில் சிரமப்பட்டு பாலன்ஸ் செய்து உட்கார்ந்து விட்டீர்கள் நீங்கள். புர்புர் எனும் பயங்கர சத்தத்துடனும் பெரும் புகையுடனும் வண்டி கிளம்பி விட்டது.

மானசீகமாக வேகம் கொடுக்கின்றீர்கள்; எதிரில் வரும் வண்டியில் மோதி விடாமல் வளைக்கின்றீர்கள்; பின்னால் வரும் பெரிய லாரிக்கு வழி விடுகின்றீர்கள்.

பெரும் இரைச்சலுடன் சீறிப் பாயும் வண்டி உங்கள் கையசைவுகளுக்கெல்லாம் பணிவது ஒரு கிறக்கத்தைத் தருகிறது இல்லையா? ஆனால் புயலாய்ப் பறக்கும் வேளையில் கொஞ்சம் கவனம் சிதறுகிறதே! அடாடா, வண்டி இடது பக்கச் சுவரில் படாரென மோதி விழுகிறதே! அச்ச்சோ தீப்பிழம்பாய் எரிகிறதே! அத்தகைய கோர விபத்தில் உங்கள் உடம்பில் மட்டும் என்ன மிஞ்சும்?

ஆனால் இது வீடியோ விளையாட்டுத்தானே! ஒன்றும் நடக்காதது போல உடனே எழுந்து மீண்டும் ஓட்ட முடிகிறது! இதுவே நிஜ வாழ்க்கையில் சாத்தியமா? விமானப் படை பயிற்சிக் கல்லூரியில் எழுதி வைக்கப் பட்டிருந்த இந்த வாசகத்தைப் பாருங்கள்.

‘மற்றவர்களின் தவறுகள் மூலம் கற்றுக்கொண்டு விடுங்கள்; ஏனெனில் உங்கள் தவறுகள் வழியாகக் கற்றுக் கொள்ள நீங்கள் உயிரோடு இருப்பீர்களா எனச் சொல்ல முடியாது!'

உண்மைதானே. அதனால்தான் விமான ஓட்டிகளுக்கு பயிற்சி அறையிலேயே உட்கார்ந்து கொண்டு வானத்தில் விமானத்தை ஓட்டுவதைப் போன்ற சூழ்நிலையைத் தத்ரூபமாக உருவாக்கி விமானத்தைச் செலுத்துவதன் நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள்! அண்ணே, நமது வாழ்க்கையில் நிகழக்கூடிய விபத்துகளை, தவறுகளை இந்த மாதிரி கற்பனை விளையாட்டு விளையாடி கற்றுக் கொள்ளமுடியாதே!

சாலையில், வானத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் வரும் பொழுது என்ன செய்யவேணும் எனப் பயிற்சியளிப்பது போல இதற்கும் ஏதேனும் வழி உண்டா? ஆமாம், இதற்கும் ஓர் எளிய வழி இருக்கிறது. மற்றவர்களின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வதுதான் அது! விளம்பரத்தில், விற்பனையில், வியாபாரத்தில் மற்றவர்கள் செய்த தவறுகளைக் கவனிப்பதும் அவற்றை நாம் தவிர்த்து விடுவதுமான யுக்தி!

ஆனால் கோபம் வந்து கண்ணை மறைப்பது போலவே வெற்றி வந்தாலும் சிலருக்குக் கண்ணை மறைத்து விடுகிறது!

வெற்றி தலைக்கு ஏறக்கூடாது, தோல்வி இதயத்தைத் தாக்கக் கூடாது என்பார்கள்.

இந்த மாதிரியான நேரங்களில் நம்முடன் போட்டியிட்டுத் தோற்றவர்களையும் அவர்கள் செய்த தவறுகளையும் நாம் எண்ணிப்பார்த்தால் நிதானம் வரும்!

மற்றவர்களின் தவறுகளிலிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்; ஏனெனில் எல்லாத் தவறுகளையும் செய்து பார்க்க உங்கள் வாழ்நாள் போதாது என எலெனர் ரூஸ்வெல்ட் சொல்லியதை மறுக்க முடியுமா?

நாம் மகிழ்ச்சியில் திளைத்து மயங்கும் பொழுது, தம் மறதியினால் கெட்டுப் போனவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்!

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ( குறள்: 539)

somaiah.veerappan@gmail.com

இரட்டை ஜடை போட்டால்தான் படிப்பு வருமா?...பாரதி ஆனந்த்

Return to frontpage

பள்ளிச் சிறுமிகள் பற்றிய நம் நினைவலைகளைத் தட்டிவிட்டால் நம் கண் முன் முதலில் தோன்றும் காட்சி உச்சி வகிடெடுத்து, இரட்டைப் பின்னல்கள் அதன் கீழ் அழகாய்க் கட்டப்பட்டிருக்கும் ரிப்பன்களுடன் ஓர் உருவம்.

இந்த இரட்டைப் பின்னல்தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் ஒரு புகாரை முன்வைத்திருக்கிறார்.

அதில் இடம்பெற்றிருந்த ஐந்து குற்றச்சாட்டுகள்:

1. ஈரமான தலைமுடியை அப்படியே பின்னலாகக் கட்டும்போது அதிலிருந்து துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் பேன் தொல்லை ஏற்படுகிறது.

2. தினமும் இரட்டைப் பின்னல் கட்டிக்கொள்வது நேர விரயமாகிறது. வீட்டில் இருப்பவர்கள் உதவியை நாட வேண்டியிருக்கிறது.

3. இரட்டைப் பின்னலால் முடி உதிர்வு அதிகமாகிறது.

4. காலையில் தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

5. இந்த விதிமுறை பாலினப் பாகுபாட்டை ஊக்குவிக்கிறது.

இந்தப் புகாரை ஆராய்ந்த மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பெண் குழந்தைகளை இரட்டைப் பின்னல் போட்டுக்கொள்ளும்படி பள்ளிகள் நிர்பந்திக்கக் கூடாது, அதேவேளையில் மாணவிகள் தலைமுடியைச் சீராக வாரி வர வேண்டும் என்பதைக் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

இதுதான் சங்கதி. இந்த உத்தரவுக்கு ஆதரவு இருக்கும் அளவுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. அண்டை மாநிலத்தின் இந்தச் செய்தியை முன்வைத்து நம்மூரில் சிலரிடம் இது குறித்துக் கருத்து கேட்டோம். அந்த மாணவியின் கருத்தை ஆதரிக்கும் தாய்மார்கள், தினமும் எண்ணெய் தேய்த்து இரட்டைப் பின்னல்கள் கட்டுவதும், வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே தலையில் தண்ணீர் விட்டு அலசும் நெருக்கடி ஏற்படுவதும் நிச்சயம் சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு நேர விரயத்தையும் இது ஏற்படுத்துகிறது. இரட்டைப் பின்னல்களும் ரிப்பன்களும் இல்லாமல் தலையைச் சீராக வாரிக்கொண்டு வருமாறு தெரிவிப்பதும் நல்லது என்று சொல்கிறார்கள்.

ஒருசில தாய்மார்களைப் பொறுத்தவரை நேர விரயம் என்றாலும் பள்ளிக்குச் செல்லும்போது சீராக இருப்பதுதான் அழகு. அதுமட்டுமல்லாமல் எப்படி வேண்டுமானாலும் தலைவாரிக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டால் பிள்ளைகள், அதுவும் பதின்பருவ பிள்ளைகள், சிகை அலங்காரத்துக்கே அதிக நேரம் செலவழிப்பார்கள் என்று கூறுகின்றனர்.

இந்த இரு வாதங்களையும் ஆசிரியர் ஒருவரிடம் முன்வைத்தோம். புதுச்சேரி சவராயலு நாயகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஹேமாவதி கூறும்போது, “கேரள மாணவியின் வாதங்கள் அனைத்தும் ஏற்புடையதே. நம் நாடு முழுவதும் கல்வியில் சமத்துவம் இருக்கிறதா? கல்வியில் சமத்துவம் ஏற்பட்டால் இளைய சமுதாயம் ஊக்கம் பெற்று ஏற்றம் காணும். அதை விடுத்து இது போன்ற சிறிய விஷயங்களில் கட்டுப்பாடு கடைப்பிடிப்பதால் என்ன நன்மை இருக்கிறது? ஒரு பெண் குழந்தை அவளது தலைமுடியை நீளமாகவோ கட்டையாகவோ வைத்துக்கொள்வது அவளது உரிமை. பள்ளிக்கு வரும்போது தலை முடியைச் சீராக வாரி வந்தால் போதுமானதே. இரட்டைப் பின்னலும் ரிப்பனும் ஒழுங்கின் அடையாளம் அல்ல. அது நாம் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுக்க நெறி பிம்பம். கேரள மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு அமைப்பின் உத்தரவை எல்லா மாநிலங்களும் பரிசீலிக்கலாம்” என்றார்.

இன்னும் பெண் சிசுக் கொலையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை; பெண்களுக்கு முழுமையாகக் கல்வி கொடுக்க முடியவில்லை; பாலியல் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. செய்வதற்கு இவ்வளவு இருந்தும் நம் சமூகத்துக்கு இரட்டைப் பின்னல்தான் இன்னும் பிரச்சினை என்பதை நினைத்துப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கிறது.

Sunday, August 28, 2016

நீங்கள் ஒரு நல்ல கணவரா?- 10PointCheck



vikatan.com

"வேலை..குடும்பம்..குழந்தைன்னு நான் நல்லாதானே பாத்துக்கிறேன்.. அப்புறம் எங்க மிஸ் ஆகுது”ன்னு யோசிக்கறீங்களா? அப்ப இந்த 10 பாயிண்ட்ஸ் உங்களுக்குதான். புது ஜோடியில இருந்து சில்வர் ஜூப்லி கொண்டாடின ஜோடிகள் வரைக்கும் இந்த மேட்டர் பொருந்தும். கல்யாணமே ஆகலைன்னாலும் எதிர்காலத்துல யூஸ் ஆகும் ப்ரோ.



1. சமைச்சு கொடுங்க :

உங்க மனைவிதான் தினமும் உங்களுக்கு சமைச்சு தறாங்களா? அப்ப ஒருநாள் நீங்க சமைச்சு கொடுக்க டிரை பண்ணுங்க. சமையல் அறை பக்கம் எட்டிக்கூட பார்க்காத ஆளாக இருந்தால், இன்னும் சிம்பிள். உங்க மனைவிகிட்டயே 'நீ சமைக்க சொல்லிக்கொடு, நான் கத்துக்கறேன்'னு அவங்க சொல்லச் சொல்ல கேட்டு அவங்களுக்கு இஷ்டமானதையே செஞ்சு கொடுக்கலாம். சமைச்சது ரொம்ப சுமாராக இருந்தாலும் கண்டிப்பாக இந்த சாப்பாடு அவங்களுக்கு டேஸ்டாக தான் இருக்கும்.


2.எழுதுங்க :

லவ் லெட்டரை காதலிக்கற பொண்ணுக்கு தான் கொடுக்கணும்னு கிடையாது. மனைவிக்கும் கொடுக்கலாம். அவங்களை எவ்வளவு லவ் பண்றீங்க, அவங்க வந்ததுக்கு பிறகு உங்க வாழ்க்கை எப்படி எல்லாம் மாறி இருக்குனு குட்டி காதல் கடிதமா எழுதி கொடுங்க. 'பேப்பர்ல எழுதி பல வருஷம் ஆச்சு பாஸ்?னு யோசிச்சா... மெசேஜ் டைப் பண்ணி அனுப்புங்க. திருமண வாழ்க்கையும், ஒரு வகையான காதல் வாழ்க்கைதாங்க.



3. கிப்ட் கொடுங்க :

வைர மோதிரமோ, தங்க வளையலோ, காஸ்ட்லி டிரஸோ தான் வாங்கிதரணும்னு கிடையாது. அவங்க ரொம்ப நாளா ஒரே செப்பலை பயன்படுத்தறாங்கனு தெரிஞ்சா புது செப்பல் வாங்கிக்கொடுக்கங்க. சின்ன சின்ன பரிசுகள் வாழ்க்கையை சுவாரசியமாக்கும். (அதுக்குன்னு வளையல் வாங்கித் தந்தத எல்லாம் கணக்குல காட்டாதீங்க பாஸ்)



4. கட்டிப்பிடிங்க :

கமல் சொன்ன அதே கட்டிப்பிடி வைத்தியம் தான். காலையில எழுந்ததும், ஆபிஸ் விட்டு வந்ததும், தூங்கப்போவதுக்கு முன்னரும்னு சின்ன ஹக் பண்ணுங்க. கிஸ் கொடுங்க. அப்புறம் பாருங்க, ரேம் க்ளீன் ஆன ஆண்ட்ராய்டு ஃபோனா வாழ்க்கை சும்மா ஸ்மூத்தா போகும்.



5. சண்டை வந்தா சமாளிக்கணும் :

ரோடு போட்டதும் சாலைகள் குண்டும் குழியுமாக ஆவதும், கல்யாணம் பண்ணதும் பேமிலிக்குள்ள சண்டை வரதும் சகஜம் தான். சண்டை வந்தால், உடனே மனைவி மேல குற்றம் சொல்லாதீங்க. திட்டாதீங்க. எதனால சண்டை வந்ததுனு உட்கார்ந்து பேசி அப்பவே தீர்த்துடுங்க. குழந்தைங்க முன்னாடியோ, உறவினர்கள் முன்னாடியோ சண்டை போட்டுக்காதீங்க. யார்கிட்டயும் உங்க மனைவியை விட்டுக்கொடுத்து பேசாதீங்க. (உங்க அம்மாகிட்ட கூட பாஸ்)



6. ஷேர் பண்ணுங்க :

புது விஷயங்களை ஏதாவது படிச்சலோ, பார்த்தாலோ, கேட்டாலோ ஃபேஸ்புக்ல ஷேர் பண்ற மாதிரி உங்க மனைவியிடமும் ஷேர் பண்ணுங்க. அவங்க ஏதாவது சொன்னா காது கொடுத்து கேளுங்க. பக்கத்து வீட்டு கதையை சொன்னால் கூட சுவாரஸ்யமா கேட்டுக்கோங்க. அலுத்துகாதீங்க. 'நீ சமைச்சு கொடுத்த சாப்பாடு சூப்பர்' , ' டிரஸ் செம'னு அடிக்கடி பாராட்டுங்க.



7. எல்லாத்துக்கும் எதிர்பார்க்காதீங்க :

சிலர் எது வேணும்னாலும் அவங்க மனைவியை தான் எதிர்பார்ப்பாங்க. எந்த பொருள் எங்க இருக்குனு கூட தெரியாத அப்பாவி ஜீவனாகவே வளர்ந்து இருப்பாங்க. அவங்க உங்களுக்கு தேவையானதை பார்த்துப் பார்த்து எடுத்துக்கொடுத்தாலும், நாட்கள் போக... போக... இது சலிப்பை ஏற்படுத்தும். 'நம்மள ஒரு வேலைக்காரி மாதிரி பயன்படுத்தறாரோ'னு கூட யோசிக்கலாம். அதுனால, இனி கூப்பிட்ட குரலுக்கு அவங்க ஓடி வரணும்னு நினைக்காதீங்க. ”யாரங்கே”ன்னு கேட்க நாம என்ன புலிகேசியா?


8. ஹெல்ப் பண்ணுங்க :

டைம் கிடைச்சா, அவங்களுக்கு சின்ன சின்ன உதவி பண்ணுங்க. வாஷ்பேஷின்ல பாத்திரம் இருந்தால் கழுவி கொடுங்க. வீட்டை சுத்தப்படுத்துங்க. துணி துவைச்சு காயப்போட உதவுங்க. இந்த ஹெல்ப் எல்லாம் நீங்க அவங்க மேல எவ்வளவு கேர் எடுத்துக்கறீங்கனு புரிஞ்சுப்பாங்க.

9. டூர் போங்க :

அலுவலகம், வீடு, குழந்தைகள்னு ஒரே இடத்தை சுற்றி சுற்றி வந்தால் சலிப்பு வரலாம். வருஷத்திற்கு ஒருமுறையாவது மனைவி, குழந்தைகளுடன் டூர் போங்க. கொஞ்சம்டைம் இருந்தால் மனைவி கூட லாங் டிரைவ் போங்க. அவங்க அம்மா, அப்பாவையோ, அவங்களுக்கு பிடித்த நண்பரையோனு சர்ப்ரைஸாக வர வைத்து அவங்க முன்னாடி நிறுத்துங்க. இதுக்கு எல்லாம் பலன் கொஞ்ச நாட்களிலேயே தெரிஞ்சுப்பீங்க.

10. பணமும் முக்கியம் :

ஒர் குடும்பம் நல்லா இருக்கணும்ன்னா, கண்டிப்பா பொருளாதாரமும் முக்கியம். உங்க சம்பளம் எவ்வளவு? மாசம் என்னென்ன செலவு ஆகுதுனு மனைவிகிட்ட உட்கார்ந்து பேசி செக் லிஸ்ட் போட்டு செலவு பண்ணுங்க. குழந்தைங்க படிப்பு, எதிர்கால திட்டம்னு எல்லாத்துக்கும் அவங்க கூட கலந்து பேசுங்க. அவங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்கனு புரிஞ்சுப்பாங்க.

இப்படியாக வாழ்ந்தால் “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை தான்” பாஸ்,



- ஹேமா

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் செல்ல உள்ள தடை நீங்குமா?



இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில்,பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பது ஆகம விதி என்பார்கள்.இதனால் ஆண்டாண்டு காலமாகப் பெண்கள் மாத விலக்குக் காலங்களில் கோயிலுக்குள் செல்வதே இல்லை.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் மட்டும் மாதவிலக்கு காலங்களில் மட்டுமல்ல, குழந்தை பெற்றுகொள்ள தகுதியுடைய எந்தப் பெண்ணும் கோயிலுக்குள் போகக் கூடாது என்று அதன் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது,' கடவுள் ஐய்யப்பன் ஒரு நித்திய பிரம்மாச்சரி' அதனால் 10 வயதில் இருந்து 50 வயதுடைய மற்றும் மாதவிலக்கு நிற்காத பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கும்.

அதையும் மீறி பெண்கள் நுழைந்தால், அவர்கள் கோயில் நிர்வாகத்தால், வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு பிரபல கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலைக்குள் சென்று ஐய்யப்பன் சிலையைத் தொட்டு வழிபட்டதாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து கேரள தேவசம் போர்டு அவர் மீது வழக்கும் தொடர்ந்தது. திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கோபால கிருஷ்ணன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை எதிர்த்து #HappyToBleed அமைப்பு சமூக வலைதளங்களில் ஒரு பக்கத்தை உருவாக்கியது .

இதனைத் தொடர்ந்து அனைத்து பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

"கோயில் என்பது பொதுவான ஆன்மிக தலம். அங்கு வரும் பெண்களுக்கு அனுமதி மறுக்க முடியாது. அரசியல் சட்டத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு அனுமதி மறுப்பது, அடிப்படை உரிமைகளை மீறும் செயல். இந்த பிரச்னையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இந்த வழக்கு அரசியல் சட்ட பெஞ்சுக்கு அனுப்புவதற்கு உகந்தது என்று நாங்கள் நினைக்கக்கூடும். அப்படி மாற்றுவதாக இருந்தால், விரிவான உத்தரவைப் பிறப்பிப்போம் என்று கூறியதோடு, நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தர்ஹாவுக்கு, பெண்கள் செல்ல உரிமை உள்ளது

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்ஹாவுக்கு, பெண்கள் செல்ல உரிமை உள்ளது’ என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்பை வழங்கியுள்ளது.

பாரதி முஸ்லிம் மகிலா அன்டோலன் அமைப்பைச் சேர்ந்த ஜாகியா சோமான் மற்றும் நூர்ஜகான் சபியா ஆகியோர் 2014-ம் ஆண்டு பொது நல மனு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவின் மீதான விசாரணையில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.எம்.கனடே மற்றும் ரேவதி மொஹிட்டி ஆகியோர் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

‘‘பாலினப் பாகுபாட்டைக் காரணம் காட்டக் கூடாது!’’

‘தர்ஹாவுக்குப் பெண்கள் செல்வதற்கு உரிமை உள்ளது’ என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14, 15, 19 மற்றும் 25 ஆகியவற்றில் சொல்லப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டம், அனைவருக்கும் பொதுவானது. எனவே, தர்ஹாவின் மையப் பகுதிக்குப் பெண்கள் செல்வதற்கு உரிமை உள்ளது. மதத்தை வழிநடத்தவும், அதன் கொள்கைகளைப் பின்பற்றவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. எனவே, பாலினப் பாகுபாட்டைக் காரணம் காட்டி நாம் தடைபோடக் கூடாது." என்று தீர்ப்பில் கூறியுள்ளோம் ..

ஏன் இந்த தீர்ப்பை முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது ?

இந்தத் தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள பெண்கள் கொண்டாடி வரும் நிலையில், சபரிமலை கோயில் விவகாரத்திற்கும் முன்னுதாரணமாக வைத்து, ஏன் பார்க்க கூடாது என பெண்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து உழைக்கும் பெண்கள் உரிமை அமைப்பு குழுவின் இணை அமைப்பாளர் லதாவிடம் பேசினோம்... "இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த தீர்ப்பு, சபரிமலை வழக்கிற்கு முன்னுதாரணமாக அமையும் என்று நம்பிக்கை உள்ளது. கேரளாவில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள இடது சாரிகள் தலைமையிலான அரசு உடல் ரீதியான விஷயங்களை வைத்து பெண்களை தடுப்பது அவர்களின் உரிமையை பறிக்கும் செயல் என்று கூறியுள்ளது. எனவே இதை எடுத்துக்கட்டாக எடுத்துக்கொண்டு இதற்காகப் போராடி வரும் அமைப்புகள் விரைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. கேரள அரசின் மீது நம்பிக்கை உள்ளது. சபரிமலை கோயிலிலும் விரைவில் பெண்கள் செல்லுவதற்கு சட்டரீதியாக வழிபிறக்கும் என்றார். அதே நேரத்தில் தேவஸ்தான அமைப்பு இந்தத் தீர்ப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் .

மனிதர்கள் வகுத்த சட்டங்களை மனிதர்கள் மாற்ற முடியும்

இது தொடர்பாக வழக்கறிஞர் அருள் மொழியிடம் பேசினோம். "மதம் ,ஆட்சி அரசியல், குடும்பம் இவை மூன்றும் ஆண்களின் கையில்தான் உள்ளன. இவை மூன்று இடங்களிலும் பெண்கள் சம உரிமைக்காக போராடி வருகிறார்கள். வழிபாட்டுத் தலம் மற்றும் நினைவுசின்னம் எதுவாக இருந்தாலும் அந்தப் பெண்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்தத் தீர்ப்பு எதிர்காலத்தில், இதுபோன்று உரிமைக்காக போராடும் பெண்களுக்கு உதாரணமாக இருக்கும். இதைப் போன்றது தான் கோயிலில் பெண்கள் நுழையக்கூடாது என்ற விதி முறைகளும். அதனை எதிர்த்து போராட்டத்தை துவங்கி உள்ள பெண்களுக்கு உரிமை கிடைக்க வழிவகை உள்ளது. கோயிலின் சான்றுகளிலோ அல்லது புராணங்களிலோ பெண்கள் நுழையக்கூடாது என்று சொல்லவில்லை. எனவே நல்ல முடிவு வரும். இது மனிதர்கள் வகுத்தது. இதனை மனிதர்களால் நீக்க முடியும்." என்றார்.


கே. புவனேஸ்வரி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...