Sunday, October 9, 2016

செல்போன் டவர் சந்தேகம் தீரவேண்டும்

தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் என்றாலும், நீதிபதிகள் என்றாலும் சரி, கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஓய்வுபெறும் நாளன்றுகூட, தங்கள் பணியை திறம்பட முடித்துவிட்டுத்தான் செல்வார்கள் என்ற நற்பெயர் இந்தியா முழுவதிலும் உண்டு. ஓய்வுபெற்ற தமிழக அரசு உணவுத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, மயிலாடுதுறையில் வருவாய்கோட்ட அதிகாரியாக பணியாற்றியபோது, ‘‘தூத்துக்குடி மாவட்டம், உமரிக்காட்டைச் சேர்ந்த எஸ்.ராமஜெயம் என்ற துணைகலெக்டர் ஓய்வுபெறும் நாளன்று இரவு 7 மணிவரை நெல் கொள்முதலுக்கான பணிகளில் அந்த மாவட்டம் முழுவதும் சுற்றி அலைந்தார். அவரது வழியனுப்பு விழாவே இரவில்தான் நடந்தது. ஒரு அதிகாரி எப்படி பணிபுரியவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்’’ என்று பெருமையாக பேசுவார். அதேபோலத்தான் உச்சநீதிமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி, கடந்த திங்கட்கிழமை ஓய்வுபெற்ற தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சி.நாகப்பனின் பணியும் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.நாகப்பன் மாவட்ட நீதிபதி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி, ஒடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி என்று பணியாற்றி, கடந்த 3½ ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.

ஓய்வுபெறும் நாளன்று கடைசியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் சி.நாகப்பன், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் கொண்ட பெஞ்சு, மக்களுக்கு செல்போன் டவர் மீதுள்ள அச்சத்தை நீக்குவதற்கு ஒரு நல்ல வழியைக்காட்டி தீர்ப்பளித்துச்சென்றிருக்கிறது. இந்தத்தீர்ப்பின் முடிவு எதிர்காலத்தில், ‘செல்போன் டவர் மீது கொண்டுள்ள கதிர்வீச்சு அபாய அச்சம் சரியானதுதானா?, தேவையில்லையா?’ என்பதற்கு ஒரு சரியான விளக்கத்தைத்தரும். 1995–ம் ஆண்டு ஜூலை 31–ந் தேதி அன்று முதல் செல்போன் பயன்பாட்டை அப்போதைய மேற்குவங்காள முதல்–மந்திரி ஜோதிபாசு, மத்திய தகவல் தொடர்பு மந்திரியாக இருந்த சுக்ராமுடன் பேசி தொடங்கிவைத்தார். அப்போது ஒரு நிமிடத்திற்கு செல்போன் கட்டணம் ரூ.16 ஆக இருந்தது. அப்படியிருந்த செல்போன் இன்று பரம ஏழைகளுக்குக்கூட அத்தியாவசிய சாதனமாகிவிட்டது. இந்தியாவில் இப்போது 103 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன்கள் புழக்கத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடியே 13 லட்சத்து 42 ஆயிரத்து 122 செல்போன்கள் இருக்கிறது.

இந்த நேரத்தில், செல்போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் மூளையில்கட்டி, நரம்புக்கோளாறுகள், மார்பக புற்றுநோய், கருச்சிதைவு, இதயநோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த கதிர்வீச்சின் பாதிப்பால்தான் சிட்டுக்குருவிகள், அணில் போன்ற சின்னஞ்சிறு பிராணிகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்று ஒரு அபாயகரமான தகவல் நாடு முழுவதும் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்டும் வகையில், நீதிபதி சி.நாகப்பன் இடம்பெற்றுள்ள அந்த பெஞ்சு இந்தப்பிரச்சினை குறித்து மத்திய அரசாங்கம் வருகிற 17–ந் தேதி ஒரு அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அந்த அறிக்கையில், ‘செல்போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளால் மனிதகுலத்திற்கோ, பறவைகளுக்கோ, அல்லது மற்ற பிராணிகளுக்கோ, ஏதாவது பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்து அறிவியல் பூர்வ ஆய்வு எதுவும் நடத்தப்பட்டுள்ளதா?, அப்படி நடத்தப்பட்டுள்ளது என்றால், அந்த அறிவியல் ஆய்வின் முடிவுகள் என்ன?, கதிர்வீச்சு இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று செல்போன் டவருக்கு, ஏதாவது அளவை மத்திய அரசாங்கம் வகுத்துள்ளதா?, மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுபார்க்கும்போது, இந்தியாவில் கதிர்வீச்சின் அளவு எந்தளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?, ஏதாவது அந்த அளவுமீறல் நடந்துள்ளதா?, அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?, சாதாரண மனிதர்களுக்கு, தங்கள் வீட்டின் அருகிலுள்ள செல்போன் டவரில் கதிர்வீச்சு எந்தளவு இருக்கிறது?, நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருக்கிறதா? என்பதை கொஞ்சம் கட்டணம் செலுத்தியே அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறதா?’ என்பதையெல்லாம் தெரிவிக்கவேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆக, வரும் 17–ந் தேதி மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போகும் அறிக்கையில், செல்போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் மக்களுக்கும், பறவைகளுக்கும் அபாயம் இருக்கிறதா?, இல்லையா? என்ற பெரிய கேள்விக்கு நிச்சயம் விடைக்கிடைத்துவிடும்.
மத வழக்கப்படி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது சிறுமி சாவு விசாரணை நடத்த உத்தரவு

ஐதராபாத்,

மத வழக்கப்படி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது சிறுமி இறந்தார். இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.

13 வயது சிறுமி

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஆராதனா (வயது 13). 8–ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தந்தை செகந்திராபாத் பாட்பஜார் பகுதியில் பிரபல நகைக்கடை நடத்தி வருகிறார்.

ஆராதனாவை அவருடைய பெற்றோர், உறவினர்கள், அப்பகுதி மக்கள் குழந்தை துறவியாக ஆராதித்து வந்தனர். ஜைன மத வழக்கப்படி அவரை உண்ணாவிரதம் இருக்க அவர்கள் ஊக்குவித்து உள்ளனர்.

பரிதாப சாவு

அதன்படி ‘சந்த்தாரா’ எனப்படும் உண்ணாவிரதத்தை ஆராதனா மேற்கொண்டார். 68 நாட்கள் உண்ணாவிரதத்தை 1–ந் தேதி முடித்தார். அதன் பிறகு 2 நாட்களுக்கு திரவ உணவை மட்டுமே உட்கொண்டார்.

இதனால் ரத்த அழுத்தம் குறைந்து அவருடைய உடல்நிலை மோசமானது. உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் 3–ந் தேதி பரிதாபமாக இறந்தார். ஆராதனா அவருடைய பெற்றோருக்கு ஒரே குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணைக்கு உத்தரவு

சிறுமி சாவு குறித்து அறிந்த குழந்தைகள் நல அமைப்பினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர். அதன்படி இது பற்றிய விசாரணைக்கு ஐதராபாத் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் துணை கமிஷனர் சுமதி கூறுகையில், ஆராதனா இறந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை உண்ணாவிரதம் இருக்குமாறு உறவினர்கள் கட்டாயப்படுத்தி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூடுதலாக நிர்ணயம் செய்ததாக கூறி விஏஓக்களின் பென்ஷனில் பிடித்தம் கருவூல உத்தரவுக்கு ஐகோர்ட் தடை
dinakaran

மதுரை: கூடுதலாக நிர்ணயம் செய்ததாக கூறி ஓய்வு பெற்ற விஏஓக்களின் பென்ஷனில் பிடித்தம் செய்த கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.   சிவகங்கை மாவட்டம், ஆணையடியைச் சேர்ந்த முத்துராமன், செக்காலை கனகசபாபதி, கண்டதேவி ஜெயப்ரகாஷ் ஆகியோர் விஏஓவாக பணியாற்றி ஓய்வு பெற்றனர். இவர்கள், தேவகோட்டை துணைக்கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் நிர்ணயித்தபோது கூடுதலாக நிர்ணயம் செய்துள்ளதாகக் கூறி, பென்ஷனில் முறையே ரூ.1,520, ரூ.1,404, ரூ.1,531, கடந்த ஏப்.1 முதல் பிடித்தம் செய்யப்பட்டது.

ஆனால், இதற்கான உத்தரவு ஜூலை 12ல்தான் வழங்கப்பட்டுள்ளது. உத்தரவிடுவதற்கு முன்பே ெபன்ஷனில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பென்ஷனில் பிடித்தம் செய்த உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இதைப் போன்ற வேறு வழக்கில் ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேவகோட்டை துணைக்கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.
மாத்திரைகள் ஏன்? எதற்கு? எப்படி?

dinakaran

சாப்பாட்டுக்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரையை மறந்துவிட்டால், சாப்பிட்ட பிறகு எடுத்துக் கொள்ளலாமா? மாத்திரைகளின் பக்க
விளைவுகளைத் தவிர்ப்பது எப்படி? தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? வைட்டமின் மாத்திரைகளை நாமே எடுத்துக் கொள்ளலாமா? மாத்திரைகள் பற்றி இதுபோன்ற சந்தேகங்கள் எல்லோருக்கும் எழுவதுண்டு. நாளமில்லா சுரப்பிகள் மருத்துவரான பரத் இந்தக் குழப்பங்களுக்கு விளக்கமளிக்கிறார்.

சத்துக்குறைபாடு காரணமாகவோ, எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாகவோ உடலில் நோய் ஏற்படுகிறது. அந்த வேளையில் சில வேதிப்பொருட்களின் உதவியுடன் உடல்நிலையை சமன்படுத்துகிறோம். அதற்குப் பெயர்தான் மாத்திரை. வட்டம் அல்லது நீள்வட்டம், கேப்ஸ்யூல் என வடிவத்தைப் பொறுத்தவரை மாத்திரைகள் இருவிதமாக இருக்கின்றன. இதில் இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் பார்த்தால் நீரில் கரையக்கூடிய மாத்திரைகள் (Water soluble), கொழுப்பில் கரையக் கூடிய மாத்திரைகள் (Fat soluble) என்று இருவிதங்கள் உண்டு.

ஒருவேளைக் கான மாத்திரை தவறினால் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. அடுத்த வேளைக்கு சேர்த்து எடுத்துக் கொள்வதால் பலன் இல்லை... பக்கவிளைவுதான் உண்டு. கால்சியம் மாத்திரையை ஒன்றுக்குப் பதிலாக இன்னொன்றைச் சேர்த்து எடுத்தாலும் அந்த இன்னொன்று கழிவுப்பொருள்தான். அதேபோல், சர்க்கரை நோயாளிகள் சிலர் காலையில் தவற விட்ட மாத்திரையை இரவில் சேர்த்து எடுப்பார்கள். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் அபாயம் ஏற்படலாம்.

ஆன்டிபயாடிக் வகை மாத்திரைகளை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் எடுத்தால் போதும். ஹார்மோன் குறைபாடுகளுக்கான மாத்திரைகளை மட்டும் தொடர்ந்து எடுக்க வேண்டியிருக்கும். சில மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். காரணம், மாத்திரை உணவுக்குழாயில் தங்கிவிடாமல் சிறுகுடல் பகுதிக்கு முழுமையாகச் சென்று சேர வேண்டும் என்பதுதான். இல்லாதபட்சத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 கிளாஸ் தண்ணீராவது பருக வேண்டும். உணவுக்குழாயில் மாத்திரை தேங்கிவிட்டால் புண் உண்டாகிவிடலாம்.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி மாத்தி ரைகளை நீரில் கரையக்கூடிய மாத்திரைகள் என்றும் வைட்டமின் ஏ, டி, ஈ, கே மாத்திரைகளை கொழுப்பில் கரையக்கூடிய மாத்திரைகள் என்றும் பிரிக்கலாம். நீரில் கரையக்கூடிய மாத்திரைகள் பக்கவிளைவுகள் அற்றவை. ஏனெனில், உடலிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் கழிவாக வெளியேறி விடும். ஆனால், கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின் மாத்திரைகள் உடலில் இருக்கும் கொழுப்புப் பகுதியில் சென்று அப்படியே தங்கி விடும். அதனால்தான் வைட்டமின் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

சில மாத்திரைகளை உணவுக்கு முன்னும், சில மாத்திரைகளை உணவுக்குப் பின்னும் மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். அதற்குக் காரணம் நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம்தான். நாம் சாப்பிடுவதற்கு முன்பு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரப்பும் வீரியமும் அதிகமாக இருக்கும். உணவு உண்டபின் அதன் வீரியம் குறைவாக இருக்கும். கால்சியம், இரும்புச்சத்து மாத்திரைகள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் கரைந்தால்தான் பலன் தரும். அந்த வகை மாத்திரைகளை ஹைட்ரோகுளோரிக் அமிலம் வீரியமாக இருக்கும்போது, அதாவது, உணவுக்கு முன்பு எடுத்துக் கொண்டால்தான் பலன் கிடைக்கும். சில மாத்திரைகளின் வீரியத்தை ஹைட்ரோகுளோரிக் அமிலம் தடுத்துவிடும். அந்த வகை மாத்திரைகளை உணவுக்குப் பின் அதாவது, அமிலத்தன்மை குறைந்திருக்கும் போதுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

‘மருத்துவர்கள் நிறைய மாத்திரை எழுதிக் கொடுக்கிறார்கள். ஒருவேளை, இரண்டு வேளை சாப்பிட்டால் போதாதா’ என்று பலரும் நினைக்கிறார்கள். அதேபோல, நோயின் அறிகுறிகள் மறைந்த உடனே மாத்திரையையும் பலர் நிறுத்தி விடுகிறார்கள். இந்த இரண்டும் தவறானதே. ஒரு வாரத்துக்கான மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் பட்சத்தில் அந்தக் கால அளவு முழுவதும் எடுத்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் நோய்க்கிருமிகள் முழுமையாக நீங்கும். பாதியில் மாத்திரைகளை நிறுத்தும்போது பாதி நோய்க்கிருமிகளும் தப்பித்துவிடும். இதனால் நாம் ஏற்கெனவே உட்கொண்ட மருந்துகளின் சக்தியைத் தாண்டி புது எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடும்.

வைட்டமின் டி பற்றாக்குறைக்கான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பலரும் எடுக்கிறார்கள். வாரம் ஒருமுறை எடுக்க வேண்டிய மாத்திரையை தினமும் உட்கொள்கிறவர்களும் உண்டு. இதனால் கால்சியம் சத்து உடலில் அதிகமாகி சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது முதல் சிறுநீரகச் செயல் இழப்பு வரை பல்வேறு பாதிப்புகள் உண்டாகக் கூடும். வைட்டமின் ஏ மாத்திரைகளால் மூளையில் நீர் கோர்த்துக் கொள்வது, வாந்தி ஏற்படுவது, கண் பார்வை மங்குவது போன்ற பக்கவிளைவுகள் உண்டாகும். வைட்டமின் ஈ மாத்திரைகளால் இதயம் பாதிக்கும் என்பது பற்றிய ஆய்வுகளும் இருக்கிறது.

தொடர்ச்சியாக மாத்திரை சாப்பிடுகிறவர்களும் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவரைச் சந்திப்பதே நல்லது. இதே மாத்திரைதானே மருத்துவர் எழுதிக் கொடுப்பார் என்று நாமே வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவரின் கண்காணிப்பு இருக்கும்பட்சத்தில் அந்த மாத்திரையால் பக்கவிளைவுகள் வருகிறதா என்று ஆராய்ந்துதான் மீண்டும் அதே மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்.ரத்த அணுக்களின் எண்ணிக்கை, கல்லீரலின் செயல்பாடு, சிறுநீரகத்தின் ஆரோக்கியம் போன்றவற்றையும் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்கள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சத்தான உணவுமுறையைப் பின்பற்றுவதும் அவசியம்.

சூரிய ஒளியும் காற்றும் பட்டுவிட்டால் சில மாத்திரைகளின் வீரியம் போய்விடும். எனவே, இந்த மாத்திரைகளை கவனமாகக் கையாள வேண்டும். சில்லறையாக அவ்வப்போது வாங்காமல் மொத்தமாக வாங்குவதே பலன் தரும். உதாரணம், தைராய்டு மாத்திரைகள். மாத்திரைகளை முறையாகப் பயன்படுத்தினாலே எந்த பக்கவிளைவுகளும் வராது. தலைவலியாக இருந்தாலும் என்ன காரணத்தால் தலைவலி வந்தது என்று மருத்துவரைச் சந்தித்து தெளிவு பெறுவதே சரியானது. மருத்துவர் பரிந்துரைக்காமல் எந்த மாத்திரையையும் நாம் பயன்படுத்தக் கூடாது. நமக்கு நாமே மருத்துவம் பார்க்கிற அளவுக்கு நாம் மருத்துவர் இல்லை என்பதையும் உணர வேண்டும்!

ஞானதேசிகன்
முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும்...

நன்றி குங்குமம் தோழி

கல்வி வேலை வழிகாட்டி

பொதுவாகவே பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிப் படிப்பு தொடங்கும்பொழுது சில பிரச்னைகளை மாணவர்கள் சமாளிக்க வேண்டிவரும். அதிலும், பொறியியல் போன்ற தொழிற்படிப்புக் கல்லூரிகள் என்றால், கூடுதல் பிரச்னைகள் எழும். தொடக்கத்தில் குழப்பத்தையும் மிரட்சியையும்கூட பொறியியல் கல்லூரிகள் ஏற்படுத்தக்கூடும். அந்தச் சூழலைச் சமாளிக்கும் திறனை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். என்னென்ன பிரச்னைகள் வரும்? அவற்றை எப்படி சமாளிக்க வேண்டும்?

பள்ளியில் தமிழ் பயிற்றுமொழியில் படித்தவர்களும், ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருந்தும் தமிழிலேயே சிந்தித்தும், புரிந்து கொண்டும் பழகியவர்களும் பொறியியல் கல்லூரிகளில் ஆங்கிலத்திலேயே பயில வேண்டியிருப்பது திடீர் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் (பொறியியல் டிப்ளமோ படித்து விட்டு இரண்டாம் ஆண்டில் சேருபவர்கள் இப்பிரச்னையை அதிகமாகவே உணர்வார்கள்). இச்சங்கடம் முதல் சில நாட்களுக்குத்தான் இருக்கும். நாளடைவில் சரியாகிவிடும். இந்த மாற்றத்தை வெறுக்காமல் மனமுவந்து ஏற்று, விரைவில் பழகிவிட வேண்டும். புதிதாக எதிர்கொள்ளும் ஆங்கிலக் கலைச்சொற்களையும் கிரகித்துப் பயன்படுத்திப் பழக வேண்டும்.

ஆசிரியர்கள் கற்பிக்கும் வேகமும், மாணவர்கள் கற்கும் வேகமும் பள்ளிப்படிப்பின் போது இருந்ததை விடவும் கல்லூரியில் அதிகமாக இருக்கும். மாதம் ஒரு டெஸ்ட்டும், 4 மாதங்களுக்கு ஒரு செமஸ்டர் தேர்வும் வருவதால் பாடங்களை விரைவாக நடத்துவார்கள். ஒவ்வொரு மாணவனின் பேரிலும் ஆசிரியர் தனிக்கவனம் செலுத்த இயலாது. மாணவனே தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டிவரும். அதனால், ஓய்வைக் குறைத்து உழைப்பை உயர்த்திக் கொள்ளுங்கள். வகுப்பில் பாடக்குறிப்பை ஒழுங்காக எழுதிக்கொண்டு, கொடுத்த ‘வீட்டுவேலை’யை முறையாகச் செய்து, சந்தேகங்களை வகுப்பில் எழுப்பி, தெளிவு பெறுங்கள். தொய்வு ஏற்பட்டால், வார இறுதி விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) அதைச் சரி செய்து விடுங்கள். பொறியியல் படிக்க அறிவுக் கூர்மையைவிட, தள்ளிப்போடாமையே சிறந்த பலன் தரும்.

கிராமப்புறங்களில் இருந்து வந்து படிப்பவர்கள் புதிய சூழ்நிலையால் அதிக தாக்கத்துக்கு உள்ளாகலாம். தாழ்வு மனப்பான்மையும் உருவாகலாம். வீட்டு நினைவுகளும் வந்து, ஓடிவிடலாமா என்று கூடத் தோன்றும். இது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய அனுபவம்தான் என புரிந்துகொள்ள வேண்டும். ‘நாமாவது உள்நாட்டிலேயே இருக்கிறோம்... சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் படிக்கப் போகிறவர்கள் எப்படி இருப்பார்கள்?’ என்று நினைத்துப் பார்த்து சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும். பழகப் பழக இதுவும் சரியாகி விடும்.

ராகிங், ஈவ்டீசிங் ஆகியவை கடுமையாகத் தடுக்கப்பட்டிருந்தாலும் பல கல்லூரிகளில் அவை லேசாகத் தலை தூக்கக்கூடும். இவற்றை நகைச்சுவையாகக் கையாள முடிந்தால் சரி. வரம்பு மீறுவதாக இருந்தால், உரிய கண்காணிப்புக் குழுவினரிடம் முறையிடுங்கள். நிர்வாகம் உங்களைப் பாதுகாக்கும். சொந்த ஊரில் வீட்டிலிருந்தே பள்ளிக்குச் சென்று வந்த மாணவர்கள், இப்போது ஹாஸ்டலில் படிக்க நேர்ந்தால் மிரளுவார்கள்.

ஒரே அறையில் வேறு சில மாணவர்களுடனும் தங்க வேண்டி வரும். வகுப்புத் தோழர்களும், விடுதித் தோழர்களும் வெவ்வேறாக இருக்கலாம். சீனியர்களுடன் ஒத்துப்போக வேண்டியிருக்கும். குடும்ப சூழ்நிலைகளும், மொழிகளும், இனங்களும், பொருளாதாரச் சூழலும் வேறுபடலாம். இவற்றால் விடுதி வாழ்க்கை பிடிக்காமல் போகலாம். ஆனால், இவை அனைத்தையும் ரசிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் பழகிவிட்டால் விடுதி வாழ்க்கை இனிக்கும். பொறுமை, சகிப்புத்தன்மை, ஆளுமைத்திறமை, கூட்டுப்பொறுப்பு, பரந்த மனப்பான்மை ஆகிய அரிய பண்புகளைப் பெற விடுதி வாழ்க்கையை ஒருவாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

நீங்கள் +1, +2 படித்தபோது, +2 பொதுத்தேர்வுக்கான பாடப்பகுதிகளைத் தவிர, மற்ற பாடங்களையும் பகுதிகளையும் முறையாகப் படிக்காமல் ஒதுக்கிய கூட்டத்தைச் சேர்ந்தவரா? அப்படியானால், உங்கள் உயர்கல்வி என்ற கனவுக்கட்டிடம் உறுதியான அடித்தளமின்றி ஆட்டம் கண்டுவிட வாய்ப்பு இருக்கிறது. கணிதம், இயற்பியல் பாடங்களில் +1, +2 வகுப்புகளில் ஒதுக்கி வைத்த பகுதிகளை முறையாகப் பயிலுங்கள். அவற்றோடு சேர்த்து மொத்தப் பாடத்தையும் ‘மீள்பார்வை’ செய்தீர்களானால், பள்ளி, கல்லூரி கற்றலுக்கு இடையே தொய்வு விழாமல் சரளமாகக் கல்லூரிப் படிப்பைத் தொடரலாம். நான்காண்டு காலத்தை முறையாகச் செலவிடுங்கள்... பிறகு நாற்பதாண்டு பணிக்காலத்தில் நிறைவாக வாழ்ந்திடுங்கள்!

வெ.நீலகண்டன்
தீபாவளி சுற்றுலா ரயில் : ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, கயா, வாரணாசி, அலகாபாத், டில்லி மற்றும் ஆக்ரா சென்று வரும் வகையில், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில், பாரத தர்ஷன் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், மதுரையிலிருந்து வரும், 25ம் தேதி புறப்படுகிறது; திண்டுக்கல், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படுகிறது. 'ஏசி' மூன்றடுக்கு பெட்டியில் பயணம் செய்ய, 13 ஆயிரத்து, 940 ரூபாய் கட்டணம்; இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கு, 10 ஆயிரத்து, 35 ரூபாய் கட்டணம். மேலும் தென்னிந்திய சைவ உணவும், சாலை வழியாக சுற்றிப் பார்க்க, வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலா, 12 நாட்கள் பயணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 044 - 6459 4959 என்ற தொலைபேசி எண்ணிலும், 90031 40681 என்ற மொபைல் போனிலும் தொடர்பு கொள்ளலாம்.

தனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம்: உச்சநீதிமன்றம்

டில்லி: தன் வயதான பெற்றோரை உடன் வைத்து பராமரிக்க சம்மதிக்காமல் தனிக்குடித்தனம் செல்ல கோரும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பாக டில்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி அனில் ஆர் தவே வெளியிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது: பெற்றோரால் வளர்க்கப்பட்ட மகனுக்கு, வருமானம் இல்லாத அல்லது குறைவான வருமானம் உடைய பெற்றோரை பராமரிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு இருக்கிறது. இது சட்டபூர்வமான கடமையாகவும் கருதப்படுகிறது. வெளிநாடுகளில் திருமணம் முடிந்ததும் அல்லது குறிப்பிட்ட வயது வந்ததும் பெற்றோருக்கும் மகனுக்கும் தொடர்பில்லாத கலாச்சாரம் நிலவி வருகிறது. ஆனால் இந்தியாவில் இந்து சமுகத்தில் பிறந்த ஆண், அவரது பெற்றோரை பிரிந்து வாழ்வது கலாச்சாரத்திற்கு எதிரானது. பணம் சம்பாதிக்க முடியாத அல்லது குறைவாக சம்பாதிக்கும் நிலையில் உள்ள பெற்றோர் அவர்களது மகனின் தயவில் வாழ்வது தவிர்க்க முடியாத ஒன்று. அவர்களை பிரிப்பது சரியான செயல் அல்ல. எனவே சரியான காரணமின்றி பெற்றோரிடம் இருந்து கணவனை பிரிக்க மனைவி நினைப்பது கொடுமையாகவே கருதப்படும், இது போன்ற சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் '' என கூறப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் மாமியார்-மருமகள் சண்டையால் பல கூட்டு குடும்பங்கள் சிதறி தனிக்குடித்தனமாக வாழும் குடும்பங்கள் அதிகமாகி வருகிறது. இது இந்தியாவின் எதிர்கால சந்ததியினருக்கு குடும்பங்கள் மற்றும் உறவுகள் மீதுள்ள பாசம் பற்றிய புரிதல் இல்லாமலேயே போய் விட கூடிய நிலை ஏற்படும் என பேச்சு அடிபட்டு வருகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பில் வெளியிட்டுள்ள கருத்து குடும்பநல ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...