Tuesday, January 17, 2017


தனியே... தன்னந்தனியே...

By கிருங்கை சேதுபதி  |   Published on : 17th January 2017 01:41 AM 
sethupathi
ஆணோ, பெண்ணோ ஒன்றுபெற்றால் போதும் என்று முடிவு செய்துகொண்டு இல்லறத்தை இனிதே நடத்துகிற பெற்றோர்களைப் பார்க்கிறோம். குடும்பநலத் திட்டப் பிரசாரம் என்கிற கட்டுப்பாடுகளையெல்லாம் கடந்து இதுதான் நம்மால் இயலும், இதுவே சரி என்கிற நிலைப்பாட்டில், இவர்கள் இயங்குவதையும் பார்க்கிறோம்.
பெருகிவரும் மக்கள் தொகைக்கு இதுவே மாற்று என்று முடிவு செய்துகொள்வதைத் தவறென்று சொல்ல முடியாது. ஆனாலும், இதன் மறுதலையாக இன்னும் சில எதிர்விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன.
இந்தியப் பண்பாட்டிற்கே உரிய அடிப்படையான சகோதரத்துவம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள். ஆணோ, பெண்ணோ அது ஒன்றுதான். எனவே, பெண்களை உடன்பிறந்த சகோதரியராகக் கருதுகிற உணர்வு முற்றிலும் அற்றுப் போய்விட்டது.
என்னதான் பெண்களைச் சகோதரியாகப் பாருங்கள் என்று திரும்பத் திரும்பச் சொன்னாலும் அந்த உணர்வு மெய்யாகத் தோன்றவில்லையே. உடன்பிறந்திருந்தால்தானே அந்த உணர்வும் பாசமும் வரும்? அதிலும் திரைசார் ஊடகங்கள் தற்போது வரம்புகடந்து சகோதர உணர்வுகளை முற்றிலும் நிராகரித்துக் கொச்சைப்படுத்தி வருவதைப் பார்க்க வேதனையாகத்தான் இருக்கிறது.
இதில், இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. ஒற்றைப் பிள்ளையைப் பெற்ற தம்பதி, தங்கள் பிள்ளைக்கு மணமுடித்தபிறகு, அப்பிள்ளை யார் பக்கம் இருக்க முடியும்? பெண்ணைப் பெற்றவர்களோ, ஆணைப்பெற்றவர்களோ, யாரேனும் ஒரு தம்பதி நிராதரவாய் அனாதை இல்லங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துவைத்துவிட வேண்டியதுதான்.
ஆபத்துக்குக்கூட, பிள்ளை வந்து பார்க்க முடியாத அவலத்தை இன்று அதிகம் பேர் சந்தித்துக் கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகிவிடுகிறது. அவசரப்பட்டுப் பெண் பிள்ளை வேண்டாம் என்று இழந்தது எவ்வளவு ஆபத்து என்று உணர்கிறவர்களும் இன்று மிகுந்து வருகிறார்கள்.
வசதிகளையும் நிதியாதாரங்களையும் பெருக்கிக் கொண்டுவிட்டால், நிரந்தரமான நிம்மதி கிடைக்கும் என்று அரும்பாடுபட்டு உழைத்த அப்பா அம்மாக்கள் பேணத்தவறிய பாசத்தை, பரிவை, அன்பை இப்போது பிள்ளைகளிடமிருந்து பெறமுடியாது தவிப்பதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. ஒற்றைக்குழந்தை பெற்ற அனேக பெற்றோர்கள் - தாயும் தந்தையும் வேலைக்குப் போகிறவர்களாக இருக்கிறார்கள். பிள்ளை என்ன கேட்டாலும் இல்லையென்று சொல்லாத, எதற்கும் ஏங்கவிடாது எல்லாவற்றையும் தந்துவிடுகிற வசதிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
செல்லக் குழந்தையாக வளர்கிற குழந்தைக்குப் பெரும்பாலும் எதிர்பார்த்த எல்லாமும் எப்படியும் கிட்டிவிடுகின்றன.
இல்லையென்ற நிலை வந்தால், அழுதோ, அடம்பிடித்தோ, இன்னபிற சேட்டைகள் செய்தோ பெற்றுவிடுகிறார்கள்.
வேலைக்குப் போகிற அவசரத்தில், அல்லது பிள்ளை அழுவது பொறுக்காமல், சமாதானப்படுத்தி, நன்றோ தீதோ அது கேட்டதை, கருதியதைக் கைவசமாக்கிவிடுகிற இயல்பு இப்போது எல்லா வீடுகளிலும் அரங்கேறுகிறது.
எல்லாரும் எல்லாமும் பெற்றுவிடுகிற இடத்தில் இந்தச் சமூகம் இல்லை. ஆனால், இன்றைய நடுத்தர, உயர்தர வர்க்கத்துப் பிள்ளைகளுக்குப் பெரும்பாலும், எல்லாமும் கிட்டிவிடுகின்றன. ஏறத்தாழ, சின்னச் சின்ன ஏமாற்றங்களைக்கூடச் சந்திக்கிற அனுபவம் அவர்களுக்கு இல்லாத நிலை.
இதற்கிடையில், ஏமாற்றங்களையோ, சின்னஞ்சிறு தோல்விகளையோ எதிர்கொள்ள வலுவின்றி இளையபாரதம் தற்கொலை செய்து கொள்வதும் நிகழ்ந்துவிடுகிறது.
அண்மைக்காலமாய், பள்ளித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பெற்ற பின்னர், பலர் இத்தகு காரணங்களால்தான் உயிரிழக்கிறார்கள். இதற்கு அடுத்தநிலையில், காதல் தோல்வி.
இவர்கள் செய்வது காதலும் இல்லை, இது வெற்றிதோல்விகளை நிர்ணயப்படுத்தும் விளையாட்டும் அல்ல என்பதை எடுத்துச்சொல்லக்கூட வலுவற்றவர்களாக நம் பெற்றோர் இருக்கிற துயரை எங்கு முறையிடுவது?
இதைவிடக் கொடுமை, தனக்கு வேண்டியதைத் தராவிடில், வன்முறையில் ஈடுபடுவேன், அவமானம் தரும் செயல்களில் ஈடுபடுவேன், தற்கொலை செய்துகொள்வேன் என்றெல்லாம் பெற்றோர்களை மிரட்டுகிற பிள்ளைகள் பெருகிவருகிறார்கள்.
அதிலும், திருமணமாகிப்போகிற பெண் பிள்ளைகள் இத்தகு மிரட்டல்களை முன்வைத்துக் கணவர்களைத் தன்வசப்படுத்திக் கொள்ள முனைகிறபோது, குடும்பப் புரிதல்கள் குறைந்து நீதிமன்றங்களில் கொண்டுபோய் நிறுத்திவிடுவதாக, அத்துறை சார்ந்த நண்பர் ஒருவர் அனுபவப் பகிர்வு செய்தபோது எதிர்கால, இந்தியாவின் நிலையை எண்ணி இரக்கம் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அதற்குள் இருவருக்கும் பிறந்த பிள்ளையின் நிலைப்பாடு இன்னும் பரிதாபகரமானது.
வலிமை குன்றியவர்கள் தன்னைத் தானே சிதைத்துக்கொள்வதும் உடல் வலிமை மிக்கவர்கள் பிறவற்றையும் பிறரையுமே சிதைத்துவிடத் துணிகிறபோது வன்கொடுமை வளர்கிறது. இவ்வாறே பயங்கரவாதம் அவர்களுள் பால்பிடிக்கத் தொடங்கிவிடுகிறது.
இவற்றை ஈடுகட்ட லஞ்ச லாவண்யங்கள் வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படத் தொடங்குகின்றன. ஒற்றைப் பிள்ளைப் பெற்றுக்கொண்ட தலைமுறைப்பெருக்கத்தால், அண்ணன், தங்கை, மாமன் மைத்துனன், சித்தப்பா, பெரியப்பா என்று பல்கிப்பெருகிய பாசக்கிளைகள் முற்றிலும் அகன்று ஒற்றைப் பனைமரமாய் நிற்கிற உறவில், இற்றுப்போய்விட்டது குடும்பம் எனும் ஆலமரம். இனி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடுவது இயலாத காரியம்.
முறைசார்ந்த உறவுமுறைகள் அருகிப்போய்விட்ட அவலத்தால், கிடைப்பவர்களோடு கலந்து பழக நேர்வதால், ஏற்படும் நன்மை, தீமைகளை அதிகம் அறியாத சூழலில் பிள்ளைகள் வளர்கிறார்கள்.
அவர்களுக்குக் கிட்டும் தனிமை, ஊடக, பொழுதுபோக்கு சாதனங்கள், அவைகுறித்த அபரிமிதமான அறிதிறன், எதிலும் வரம்புமீற வேண்டும் என்கிற இளமைப்பருவத்து வேட்கை எல்லாம்கூடிக் கிளர்த்துகிற ஆசையில், பல பிஞ்சுநெஞ்சங்கள் பழுப்பதாய்க் கருதி வெம்பிவிடுகிறநிலை.
தனிப்பட்ட மனோநிலையில், எந்தத் தவறையும் செய்யத் துணியாத இளம்பருவத்தவர்கள், உடன்இருப்பவர்கள் துணையோடு கும்பல்மனோபாவத்துக்கு ஆளாகி முறைபிறழ்கிறார்கள். முறைகேடான பாலியல் இனக்கவர்ச்சிகள், போதைப் பொருட்பயன்பாடுகள், இன்னபிற சமூகத் தீங்குதரும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றுக்கு வெகு சாதாரணமாகத் தம்மை உட்படுத்திக்கொள்கிறார்கள்.
இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கிற வீடுகளில், சின்னச் சின்ன போட்டிகள், பொறாமைகள், சண்டைகள் சச்சரவுகள் இருந்துகொண்டே இருக்கும். அதில் இருந்து பற்பல அனுபவங்களை அப்பிள்ளைகள் பெறுவார்கள். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள், மான, அவமானப் பிரச்னைகளைச் சின்னச் சின்ன அளவில் சந்திக்கிற களமாக அப்போது வீடு இருந்தது.
குறைந்த பட்சம், நல்லது, கெட்டது என்று பொதுவாகக்கூடி, பங்காளி, மாமன் மைத்துனர் உறவு பேணி, வம்பும் அன்பும் வளர்க்கிற பொதுமைப் பாங்கு இப்போது முற்றாக அருகிவிட்டது.
இளம்பருவத்தில் இயல்பாக எழுகிற உணர்வுகளை நளினமாக வெளிப்படுத்த அத்தை, மாமன் மக்கள் இருந்தனர். கேலி பேசி மகிழவும் கிண்டல் செய்து உறவாடவும் உறவினர் இசைவோடு அவ்வுணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளும் களமாக வீடுகள் இருந்தன.
இப்போது அதற்கெல்லாம் இடமேயில்லை. எல்லாம் வெளியில்தான். ஒளிவுமறைவின்றி, அனைத்தையும் விளக்கிக்காட்ட மின்சாதன ஊடகங்களை எளிதில் துணைக்கொள்கிற அறிவியல் அறிவு வசப்பட்டுப்போன இளைய உள்ளங்கள், அன்பின் வசப்பட்டோ, அறம் சார்ந்த நெறிப்பட்டோ வளர்வதற்கு வாய்ப்பின்றிப்போகிறார்கள். நிலைமை தெரிந்து தெளிவதற்குள் எல்லாம் முடிந்துவிடுகிறதே என்பதுதான் வருந்தவைக்கிறது.
வணிகமயமாகிவிட்ட கல்வியோ, ஆன்மிகமோ, அறம் சாரா அரசியலோ இதற்குஉரிய மாற்றுகளை முன்வைக்க முடியாத நிலையில் என்ன செய்யப்போகிறோம் நாம்?
மற்றைய வளங்களையெல்லாம் மிகைப்படுத்திப் பார்க்கத் தெரிந்த நாம், மனிதவளத்தின் மேன்மையை உணரத் தவறிவிட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
மாமன் வேட்டியில் மஞ்சள் நீர் ஊற்றுவதும், அத்தை மகள் அழகை எள்ளி நகையாடுவதும், பெற்ற மகளுக்குப் பிறந்த வீட்டுச் சீதனமாய், பொங்கல் சீர், தீபாவளி வரிசையெலாம் கொண்டு தருகிற காலம் அந்தக் காலம்.
அப்போது எழுதப்படிக்கத் தெரியாத என் பக்கத்துவீட்டு வீராயிப்பாட்டி, பட்டணத்துப் பெண்பிள்ளையைப் பார்த்து, "ஒற்றைக்குரங்குபோல, ஒண்ணே ஒண்ணைவச்சிருக்கா, என்ன கதிக்கு ஆளாகப்போறாளோ' என்று சொன்னது, என் செவியில் இப்போதும் எதிரொலிக்கிறது.
குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்த மனிதவர்க்கம் மீண்டும் மிருகங்கள் ஆகாமல் இருக்க, என்ன செய்யலாம்?

குழந்தைகள், மாணவர்களை அதிகம் கவர்ந்த புத்தகங்கள் இவைதான்.    

 .! #BookFairUpdate


சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் நடந்து வரும் 40வது புத்தகக் காட்சி குழந்தைகளையும், மாணவர்களையும் பெரிதும் ஈர்த்து வருகிறது. ஏராளமானோர் பொங்கல் விடுமுறையில் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற நிலையிலும், ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளாலும், மாணவர்களாலும் புத்தகக் காட்சி நிறைந்திருந்தது. தொடக்கத்தில் சில நாட்கள் போதிய கூட்டம் இல்லாததால் பதிப்பாளர்கள் மிகவும் கவலையில் இருந்தார்கள். ஆனால் சனி மற்றும் ஞாயிறுக் கிழைமைகளில் கூட்டம் நிறைந்திருந்தது. செழுமையான இலக்கியங்கள், வாழ்வியல் நூல்களைக் கொண்ட ஸ்டால்களுக்கு இணையாக குழந்தைகளுக்கான குறிப்பேடுகள், வண்ணச் சிறுகதைகள், பஸ்ஸில்ஸ் புத்தகங்கள், பேரண்டிங் சார்ந்த நூல்கள், ஸ்போக்கன் இங்கிலீஷ் நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் விற்கப்பட்ட ஸ்டால்களில் கூட்டம் அலைமோதியது.




முல்லைநகர் டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் இருந்து வந்திருந்தது மாணவர் பட்டாளம். அகராதிகள், மேப், தன்னம்பிக்கை நூல்கள் என்று ஆளுக்கொரு கட்டு புத்தகங்களோடு ஸ்டால்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் ஜீவாவுக்கு கலாம் தான் ரோல்மாடல்.

‛‛கலாமின் வெற்றிப் பருவங்கள்” என்ற புத்தகம் அவனுடைய தேர்வு. ராகுல்,

அன்பு இல்லத்தின் பாடகனான ராகுல், தமிழ் திரைப்படப் பாடல்கள் அடங்கிய பெரிய தொகுப்பு ஒன்றை நெஞ்சோடு அணைத்திருந்தான். லோகேஷ் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியும், ராஜா லிப்கோ டிக்ஸ்னரியும் வாங்கியிருந்தார்கள். சந்திரமூர்த்தி, ‛அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?' என்ற புத்தகத்தைத் தேடித்திரிந்து வாங்கினானாம். “பார்க்கிற எல்லாப் புத்தகத்தையும் வாங்கனும்போல இருக்கு. ஆனா, அப்பா திட்டுவாரு... அதான், பாத்து பாத்து வாங்குறோம்...“ என்று சிரிக்கிறார்கள்.

குழந்கைளுக்கென்றே பிரத்யேகமாக சில பதிப்பகங்கள் இயங்குகின்றன. குறிப்பிடத்தகுந்தது சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட். வழக்கமாக, கெட்டி அட்டைகளுடன் கூடிய பெரிய எழுத்து வண்ணக் கதைப்புத்தகங்கள் ஆங்கிலத்தில்தான் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்தாண்டு சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட் தமிழிலும் அத்தகைய நூல்களைக் கொண்டு வந்திருக்கிறது. விலையும் கட்டுபடியாக இருக்கிறது. பொம்மைக் குதிரை, சும்கி அஞ்சலில் சேர்ப்பித்த கடிதம், பலூனும் நானும், மணவிழா ஆடைகள், கிராமத்துக்கு வந்த குரங்குகள் போன்ற அழகிய வண்ண அட்டைகளுடனான குட்டி குட்டிப் புத்தகங்கள் குழந்தைகளை ஈர்க்கின்றன.



9ம் வகுப்பு படிக்கும் அம்பத்தூர் அமிர்தவர்ஷினிக்கு ஓவியம் வரைவதில் தீவிர ஈடுபாடு. தந்தை சின்ன சின்ன ஜோதிட நூல்களைத் தேட இவர், பெருசு.. பெருசா நிறைய டிராயிங் ஆக்டிவிட்டி புத்தகங்கள், பெயிண்டிங் நூல்களை வாங்கியிருக்கிறார்.
“பத்திரிகைகள்ல வர்ற கார்ட்டூன்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி வரைஞ்சு பார்ப்பேன். போன புத்தகக் காட்சியில நிறைய புத்தகங்கள் வாங்குனேன். அதெல்லாம் பிராக்டீஸ் பண்ணி முடிச்சுட்டேன். இப்போ மதுபாணி பெயிண்டிங்ல இன்ட்ரஸ்ட் வந்திருக்கு. அதுக்காக நிறைய புத்தகங்கள் வாங்கியிருக்கேன்” என்கிறார் அமிர்தவர்ஷினி.

பாரதி புத்தகாலயம் வழக்கம் போலவே ஏராளமான குழந்தைகள் நூல்களை வெளியிட்டிருக்கிறது. இந்திய வளர்ச்சி நிறுவனத்தின் ”யுரேகா புக்ஸ்” ஸ்டாலில் குட்டி குட்டி அறிவியல் படக்கதை நூல்கல் கவனம் ஈர்க்கின்றன. சுனாமி, புயல் என சிறு தலைப்புகளில் 20-30 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல்கள் எளிய மொழியில் அறிவியல் பேசுகின்றன.

புத்தகங்கள் மட்டுமின்றி குழந்தைகளை ஈர்க்க வேறு சில அம்சங்களும் புத்தகக் காட்சியில் இருக்கின்றன. மகேந்திரா ஓவியப்பணி இல்லம் என்ற அமைப்பு, தன் ஸ்டால் முழுவதும் வண்ண வண்ண பென்சில்களை இறைத்து வைத்திருக்கிறது. அட்டைகளையும் அவர்களே தருகிறார்கள். குழந்தைகள் அமர்ந்து அவர்களுக்குப் பிடித்த ஓவியங்களை வரையலாம். ஆர்வத்தோடு வரையும் குழந்தைகளுக்கு ஓவிய நேர்த்தியை கற்றும் தருகிறார்கள். இறுதியில் குழுந்தைகள் வரையும் ஓவியம், அவர்களின் பெயரோடு அந்த ஸ்டாலிலேயே காட்சிப்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் ஓவிய ஆர்வத்தைத் தூண்டவே இந்த ஏற்பாடு என்கிறார்கள்.



ஹனிபீ பப்ளிகேஷன் என்ற நிறுவனம் சில புத்தகங்களோடு நிறைய ஓவிய அட்டைகளை வைத்து ஒரு சூழலியல் கண்காட்சியையே அமைத்திருக்கிறது. தனியார் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியரால் நடத்தப்படும் இந்த நிறுவனத்தில் மழை எப்படி பெய்கிறது, மரம் எப்படி வளர்கிறது, தவளை எப்படி கத்துகிறது என்றெல்லாம் அழகிய அட்டைகளால் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

குழந்தைகளை ஈர்க்கும் இன்னொரு ஸ்டால் இயல்வாகை அமைப்பினுடையது. இயற்கை வேளாண்மை, குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் அடங்கிய நூல்கள் மட்டுமின்றி நிறைய கைத்திறன் பொருட்கள், கொட்டாங்கச்சி சிற்பங்கள், குருவிக்கூடுகள் என ஒரு சூழலியல் வாழ்க்கையையே தங்கள் ஸ்டாலில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். கூடவே சின்ன சின்ன பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நாட்டு விதைகளும், புத்தகங்களுக்கு இணையாக குழந்தைகளைக் கவர்கிறது.

குழந்தைகளின் வாசிப்பைத் தூண்டுவதோடு, அவர்களின் பன்முகத் திறனையும் சிந்தனையையும் வளர்க்கும் இடமாகவும் இருக்கிறது சென்னை புத்தக் காட்சி.

“ஹலோ நான் இனோவா பேசுறேன்!”


“ஹலோ நான் இனோவா பேசுறேன்!”

ஹாய் டியூட்ஸ்...


‘‘ ‘காதல்ல ஏமாந்தவங்களைவிட, கார் வாங்கி ஏமாந்தவங்க அதிகம்’னு ஒரு ஆட்டோ மொபைல் பழமொழி இருக்கு. ஆனா, என் விஷயத்துல நிச்சயமா அது பொய்யாத்தான் இருக்க முடியும். என்னை நம்பிக் கெட்டவங்க யாரும் கிடையாது (நாஞ்சில் சம்பத்தை இழுக்காதீங்க பாஸ்!). எனக்கு இந்த வருஷத்தோட 11 வயசு முடியப் போகுது. 2005-ல்தான் இந்தியாவுக்கு வந்தேன். ஜோதிகா காலத்தில் இருந்து ராதிகா ஆப்தே காலம் வரைக்கும் விதவிதமா என்னை மக்கள் ரசிச்சுக்கிட்டு வர்றாங்க.

என்னோட லேட்டஸ்ட் பெயர்: டொயோட்டா இனோவா கிரிஸ்டா. முன்ன மாதிரி இல்லாம 7 காற்றுப் பைகள், ABS (இந்த பிரேக் இருந்தா வீல் லாக் ஆகாது), டச் ஸ்க்ரீன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்னு எல்லா வசதிகளோடும் வர ஆரம்பிச்சுட்டேன். கண்ணை மூடிக்கிட்டு என்னை ஹைவேஸில் ஓட்டலாம். அந்த அளவு ஸ்டெபிலிட்டிக்கு நான் கியாரன்ட்டி. அது மட்டுமில்ல; நாஞ்சில்கூட ஒரு பேட்டியில சொல்லியிருக்காரு... ‘நோவாமல் பயணிக்க இனோவா’ அப்படீனு! இப்போல்லாம் நான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்; வேகம்னு வந்துட்டா ஃபெராரி, டியூட்ஸ்!

ஒரு காரில் மஞ்சள் போர்டு ரிலீஸ் ஆகிட்டா, (அதாவது, வாடகை கார்) சொந்தமா கார் வாங்குறவங்க அந்தக் காரை ‘டாக்ஸி கார்’னு ஒதுக்கிடுவாங்கனு ஒரு டாக் இப்போவும் இருக்கு. அதை உடைச்சதுல எனக்கு இன்னும் கொஞ்சம் கர்வம். ஒரு கறவை மாடு இருந்தா ஒரு குடும்பமே பிழைச்சுக்கும்னு சொல்வாங்களே... அந்த மாதிரி என்னை வாங்கி வெச்சுக்கிட்டா ஒரு டாக்ஸி டிரைவரோட மொத்தக் குடும்பத்துக்கும் நான் கியாரன்ட்டி.



கொஞ்சம் கொஞ்சமா நான் அரசியல், சினிமா, மிடில் க்ளாஸ்னு எல்லா ஏரியாவுலேயும் ரவுண்டு கட்டி சுத்த ஆரம்பிச்சேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகூட இன்னும் என்கூட பயணம் பண்றதைத்தான் விரும்புறார்னு சொன்னா நம்புவீங்களா? இப்படி எல்லாம் கௌரவமா இருந்த என் மேல, சமீபகாலமா ஒரு டாக் இருக்கு. அதாவது, அரசியல்ல என்னை ஒரு காமெடி பீஸாகவும் ராசி இல்லாதவன்னும் சொல்றாங்க! எப்படீனு கேட்கிறீங்களா?

2011-ல் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவோட கூட்டணி வெச்சுக்கிட்டு ஜெயிச்சாரே... ஞாபகம் இருக்கா? அப்போ கவர்ன்மென்ட் சார்பா அவருக்கு என்னைத்தான் கொடுத்ததா சொன்னாங்க. ஆனா, நடந்து முடிஞ்ச சட்டசபைத் தேர்தலுக்கு அப்புறமா, ‘ஓட்டுகளைப் பிரிச்சுட்டார்’னு அவர் மேல ஏகப்பட்ட கமென்ட்ஸ். மக்கள் நலக் கூட்டணி டவுன் ஆனதுக்கு, என் மேல பழி போட்டா எப்படி மக்கழே?

ஓர் அரசியல்வாதிக்கு நான் ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கேன். அவரால நான் தமிழ்நாட்ல பட்டிதொட்டியெல்லாம் ஃபேமஸ் ஆனேன். கண்டுபிடிச்சிருப்பீங்க... யெஸ், நாஞ்சில் சம்பத்! அவர் பேரையே என்னோட லிங்க் பண்ணி மீடியாக்கள்லாம் கிண்டல்கூட பண்ணியிருக்காங்க. அம்மா கட்சியில துணை கொ.ப.செ-வா நாஞ்சில் சம்பத் சேர்ந்ததுக்கப்புறம், அவர் வீட்டு வாசல்ல நான் பரிசா இறங்கினேன். அதுக்கப்புறம் ஒரு டி.வி பேட்டியில வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம, கட்சித் தலைவருக்கு நல்லது பண்றேன்னு நினைச்சு அவர் பேசினது காமெடியாகி, அவரைக் கட்சிப் பதவியிலேருந்தே தூக்கிட்டாங்க. ‘இந்த காருக்காகத்தான் நீங்க கட்சி மாறுனதா சொல்றாங்க; தயவுசெஞ்சு அதைத் திருப்பிக் கொடுத்துடுங்க’னு என்னைப்பத்தி அவருகிட்டே போட்டுக் கொடுத்திருக்காங்க.! என்னால அவர் மானமே போச்சுங்கற மாதிரி மீடியாவுலயும் எழுதுறாங்க. இப்போகூட அம்மா போனதுக்கப்புறம், என்னைத் திருப்பிக் குடுத்துட்டாரு; ஆனா, அதுக்கப்புறம் அவருக்கு சூப்பரான செகண்ட் இன்னிங்ஸ் கிடைக்கறதுக்கும் நான்தான் காரணமா இருந்திருக்கேன்! இப்போ மறுபடியும் அவரோட செட்டில் ஆகிட்டேன்!



மதுரையில அழகிரிக்கும் என் மேல ஒரு கிரேஸ் இருந்துச்சு. ‘அண்ணனோட இனோவா வருதுடா’னு ஒரு காலத்துல மதுரையையே கிடுகிடுக்க வெச்சுக்கிட்டிருந்தோம். அதுக்கப்புறம் அவர் பண்ணின அட்ராசிட்டியில, வழக்கம்போல நம்மளைக் கோத்துவிட்டாய்ங்க! நல்லவேளை, ஏர்போர்ட்ல சசிகலா புஷ்பாகிட்ட அறை வாங்கின தி.மு.க எம்.பி சிவா, இப்போ டாடா சஃபாரி வெச்சிருக்காரு... இல்லேன்னா, அவர் அந்தம்மாகிட்ட அறை வாங்குனதுக்குக் காரணம் நான்தான்னு எழுதுனாலும் எழுதுவாங்க.

துரைமுருகன், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கம் தென்னரசு, டி.கே.எஸ்.இளங்கோவன்னு இன்னும் நிறைய பேர் என்னை செல்லமா வெச்சிருக்காங்க. சினிமாக்காரங்க பென்ஸ் காரை ‘ராசியில்லாத காரு’ன்னு ஒதுக்கற மாதிரி, அரசியல்வாதிங்க என் பேரைக் கேட்டாலே பதறுறீங்களே... ஏன்? எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கோங்க... ஏன் ராசி பார்த்து அடுத்தவங்களைப் பழி வாங்குறீங்க? 8 கோடி ரூபாய் போட்டு ரோல்ஸ் ராய்ஸ் வாங்கினாலும், அது ரோட்டுக்கு வந்துதான் ஆகணும் பாஸ்! நான், நீங்கள்லாம் எம்மாத்திரம்? வடிவேலு சொல்ற மாதிரி சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு!’’

- தமிழ்
படம்: ஆர்.ராம்குமார்

85 வயதில் மீன்குழம்பு சமையலில் கலக்கும் கொடிவேரிப் பாட்டி!

பழனியம்மாள்

ஈரோடு மாவட்ட சுற்றுலாத் தலங்களில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையும் ஒன்று. இயற்கை சூழலில் அழகாய் அமைந்துள்ளது கொடிவேரி. இங்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள கடைகளின் மீன் வறுவலை சுவைக்காமல் செல்வதில்லை. எக்கச்சக்கமான கடைகள் இங்கே வந்துவிட்ட போதும் மிகச்சுவையான வறுவலும் மீன் குழம்பும் இங்கே கிடைத்தாலும் இந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் என்னவோ அப்படியேதான் இருக்கிறது.

பல தரப்பட்ட கடைகள் இங்கே முளைத்து விட்ட போதும் இங்கே பாட்டிகடை என்பது பிரசித்தம். அப்படியென்ன சிறப்பு அங்கே.. யார் அந்த பாட்டி என்று அறிந்துகொள்ள ஆவலுடன் அந்தக் கடைக்கு சென்றோம். நாம் யாரென்று அறியாத போதும், ‘வாங்கப்பா சாப்பிடுங்க.. சாப்பாடு எடுத்து வை’ என்ற சத்தம் காதினில் விழுந்தது. 85 வயது பாட்டி முதுமையிலும் நம்மை அன்போடு வரவேற்றார். அவரைப் பார்த்ததும் உழைத்து வாழ வயது ஒரு தடையே அல்ல என்பது நமக்குப் புரிந்தது.



கால்கள் தள்ளாடும் வயதிலும் வார்த்தை தள்ளாடாமல் அவரின் வாழ்க்கையின் அனுபவங்களை நம்மோடு அழகாக பகிர்ந்துகொண்டார்.

“என் பேரு பழனியம்மாள். என் கணவர் பேரு காளியண்ணன். இங்கதான் மீன் பிடிக்கிறார். நான் இங்க வந்து 30 வருசத்துக்கு மேல ஆச்சு தம்பி. நான் இங்க மீன் கடை வச்சு இருக்கேன். நான் இங்க வந்தப்போ மொத்தமே ரெண்டு கடைதான் இருந்துச்சு. அப்போ அஞ்சு ரூபாய்க்கு மீன் குழம்பும் சாப்பாடும் செஞ்சி போட்டேன். வயிறு நிறைய நிறைய சாப்பிடலாம். அப்போ விலையெல்லாம் கம்மி.. அதனால அவ்வளோ கம்மியான பணத்துக்கு சாப்பாடு போட்டேன். அந்த விலையில இருந்து இப்போ முப்பது ரூபாய்க்கு விலையை ஏத்தியாச்சு., அதுக்கு முப்பது வருசம் ஆகிடுச்சு” எனச் சிரிக்கிறார் அந்த பாட்டி. அந்த சிரிப்பினில் தெரிந்தது குறைந்த விலையிலும் மற்றவர்களின் பசியை நிரப்பும் மகிழ்ச்சி.



ஈரோடு கொடிவேரி அணையை சுற்றியுள்ள மக்களின் அழகியல் வாழ்க்கை...
சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...


“என்னோட பையனும் மீன் பிடிக்கிறதுன்னு போய் அஞ்சாவது மேல படிக்காம போய்ட்டான். இப்போ பேரனைத்தான் இங்கிலீசு மீடியம் படிக்க வைக்கிறோம்” என்றார். இவருக்கு உதவியாய் இருக்கும் இவரது மருமகள், “பாட்டி சும்மாவே இருக்க மாட்டாங்க.. ஏதாவது வேலை பார்த்துகிட்டே இருப்பாங்க. அதற்கு தகுந்த மாதிரி இங்க வர்றவங்களும் பாட்டி கடையை தேடி வர்றாங்க. அவங்க பாட்டி தான் எங்களுக்கு பரிமாறணும்னு சொல்வாங்க. பாட்டி மேல அவங்களுக்கு அவ்ளோ மரியாதை. இங்கே வருபவர்களில் நிறைய பேர் இங்கே உடைமைகளை வைத்துவிட்டு செல்வார்கள். அதில் தங்கம் நகை பணம் எல்லாம் இருக்கும். நான் கேட்பேன், ‘எப்படி இந்த மாதிரி நம்புறீங்க’னு. ‘பாட்டியை எங்களுக்குத் தெரியாதா’ன்னு சொல்வாங்க. அந்த அளவு பாட்டி மேல அவங்களுக்கு நம்பிக்கை.



ஒருதடவை திருப்பூர்ல இருக்கிற பனியன் கம்பெனிகாரங்க இங்க வந்து கம்பெனியோட பில்-பணம் எல்லாத்தையும் விட்டுட்டு போயிட்டாங்க. அடுத்த நாள் வந்து தேடுனாங்க நான் பத்திரமா எடுத்து வச்சு இருந்து அவங்ககிட்ட கொடுத்துட்டேன். அதுக்கப்புறம் அவங்க அடிக்கடி இங்க வந்து பாட்டி கையால சாப்பிட்டுதான் போவாங்க. போன வாரம் கூட வந்து 300 ரூபாய் கொடுத்துட்டு போனாங்க. ஒருமுறை தனியார் தொலைக்காட்சியில பாட்டியோட மீன் குழம்பு சமையல் வந்துச்சு. அதுக்கப்புறம் பாட்டி கடைதான் இங்க ஃபேமஸ்” என்றார் அவரது மருமகள்.



''இதுல பெருசா வருமானம் வரலையப்பா., 100 ,150 னு தினம் கிடைக்கும் அதுவும் எல்லாத்துக்கும் சரியாய் போகிடும். லீவு நாட்கள்ல 200, 300 னு கிடைக்கும் அவ்ளோதான். வேற எதுவும் எங்களுக்கு தெரியாதுப்பா'', 'பேசாமல் வீட்டில் ஓய்வு எடுக்கலாமே' என்று நாம் கேட்டதுக்கு “இத்தனை ஆண்டுகள் வர்றவங்க, போறவங்க முகத்தை பார்த்துட்டு இருந்து பழக்கமாகிடுச்சு திடீர்னு அவர்களை பார்க்காமல் இருக்க முடியலை. வீட்டில் இருந்து சும்மா சாப்பாடு சாப்பிடவும் முடியலை. அதான் என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ வேலை செய்கிறேன். இனிமேலும் செய்வேன். உழைக்கறதுல என்ன கஷ்டம் தம்பி?” என்று நம்மிடமே கேட்டு அடுத்து வந்தவர்களை கவனிக்க சென்றார்.

இக்காலத்தில் அதுவும் இந்த முதுமையடைந்த வயதில் உழைத்து உண்ண நினைக்கும் இந்த பாட்டி ஓர் அதிசயம்தான். நமது வாழ்த்துக்களை பாட்டிக்கு சொல்லிவிட்டு, பாட்டி கையால் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

- ச.செந்தமிழ் செல்வன்,
மு. முருகன்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

Monday, January 16, 2017

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள்: வங்கிகளுக்கு நாளை விடுமுறை

      

குறள் இனிது: சந்தேகம் வந்திடுச்சா... காரியம் கெட்டுச்சு..! சோம.வீரப்பன்

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறுஆக
நினைப்பானை நீங்கும் திரு (குறள்: 519)
எனது நண்பர் ஒருவர் ஒரு வங்கியில் 1970-களில் அதிகாரியாக சேர்ந்தார். எந்த ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையைப் பார்த்தாலும் அதன் நிறைகுறைகளை உடனே பிட்டுப்பிட்டு வைத்து விடுவார். யமகாதகர், ஏமாற்ற முடியாது, எக்ஸ்-ரே கண் அவருக்கு என்பார்கள்.

கடன் துறையில் பணியாற்றியவர்களுக்கும் வங்கிகளில் கடன் கேட்டவர்களுக்கும் தெரியும். ஒப்புதலுக்கு விண்ணப்பம் வந்தால் வங்கியின் முதல் வேலை அதிலுள்ள குறைகளை எல்லாம் பட்டியலிடுவதுதான். ஆனால் நம்ம நண்பர் அதிலுள்ள நிறைகளைப் பட்டியலிடுவார்! விண்ணப்பதாரருக்கு ஏன் கடன் கொடுக்க வேண்டுமென்று ஆராய்வார், எழுதுவார், வாதிடவும் போரிடவும் செய்வார்! தரமான விண்ணப்பம் என்றால், முதலில் ஒப்புதலை அனுப்பி விடுவார். தனியே ஒரு கடிதம் எழுதி பதில் வாங்கிக் கொள்வார்!

என்னப்பா, இப்படிச் செய்கிறாயே, பெயருக்காவது கேள்வி கேட்டு, காலந்தாழ்த்தி பின்னர் ஒப்புதல் கொடுத்தால்தான் நமக்குத் தொந்தரவு வராது என யாரும் கூறினால் அலட்டிக்க மாட்டார். நான் நேர்மையானவன், என்னை வங்கி நம்புகிறது. நான் செய்வதெல்லாம் வங்கியின் வர்த்தகம் வளர்வதற்காக என்பார். உண்மைதானுங்க. அப்பழுக்கற்றவர். யாரிடமும் ஒரு இனிப்புப் பெட்டியோ, நாட்காட்டியோ கூட எதிர்பார்க்க மாட்டார்!

அவருக்குப் பதவி உயர்வு வந்த பொழுது வங்கியின் தலைமை அலுவகத்தில் கடன் பிரிவின் தலைவராக அமர்த்தப்பட்டார். அவரது அணுகுமுறை வங்கியெங்கும் பலன் தர ஆரம்பித்தது! நல்ல விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதே வேகத்தை சரியில்லாத விண்ணப்பங்களை நிராகரிப்பதிலும் காட்டினார் அவர். மாலை வீடு திரும்பும் பொழுது கோப்பு எதுவும் தன் மேசையில் தங்கி இருக்கக் கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

இங்கு மட்டும் வேலை எப்படி இவ்வளவு வேகமாக நடக்கிறது என்கிற பேச்சு எழ ஆரம்பித்தது. தலைமையகத்தில் இருந்த சில பழம் பெருச்சாளிகளுக்கு இது பிடிக்கவில்லை. நண்பர் பல வாடிக்கையாளர்களிடம் நெருங்கிப் பழகுவதைப் பார்த்த உயரதிகாரிகள் சிறிது சந்தேகப்படவும் ஆரம்பித்தனர். அவரிடம் அவரது உயரதிகாரி வாடிக்கையாளர்களிடம் நேரடியாகப் பேச வேண்டாம், கிளை மூலமாகவேதொடர்பு கொள்ள வேண்டுமென்றார்.

வந்தது பாருங்க கோபம் நம்ம நண்பருக்கு. என்னை நம்பவில்லையா என்று விடுமுறை போட்டுவிட்டு கிளம்பியவர் பின்னர் வேலையை ராஜினாமாவும் செய்து விட்டார். வங்கிக்கு அந்த மாதிரி ஆள் பின்னர் கிடைக்கவேயில்லை! நீங்களே சொல்லுங்கள். ஓட்டுனர் நன்றாகக் கார் ஓட்டும் பொழுதா பாடம் சொல்வது? சிறந்த சமையற்காரர் சமையல் செய்யும் பொழுதோ, தையல்காரர் துணி வெட்டும் பொழுதோ திறமையைச் சந்தேகப்பட்டுப் பேசலாமா?
சிறந்தவன் எனத் தெரிந்து பொறுப்பைக் கொடுத்து, வேலையும் ஒழுங்காக நடக்கும் பொழுது சந்தேகத்தைக் காட்டலாமா? காரியத்திலேயே கருத்தாக இருப்பவன் நடத்தையை தவறாக நினைத்தால் செல்வம் நீங்குமென்கிறது குறள்.
- somaiah.veerappan@gmail.com

பெட்ரோல் நிரப்பும் இடத்துக்கு அருகில் 'ஸ்வைப்' இயந்திரங்கள் பயன்பாட்டால் தீ விபத்து ஏற்படும் அபாயம்: எச்சரிக்கையை கண்டுகொள்ளுமா மத்திய அரசு?

க.சக்திவேல்

பெட்ரோல் நிரப்பும் இடத்துக்கு அருகில் ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால், அதன் மூலம் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க தெளிவான வழிகாட்டுதல்களை எண்ணெய் நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து டெபிட், கிரெடிட் கார்டுகள், மொபைல் வாலட், இணையதளம் மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, தற்போது பெரும்பாலான பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த மாதம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (பிஇஎஸ்ஓ) அனுப்பிய கடிதத்தில், “பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடத்துக்கு அருகில் மொபைல் வாலட் பயன்படுத்தினால் அல்லது கார்டு ஸ்வைப் இயந்திரம் செய்தால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, அபாயகரமான பகுதியை குறிப்பிட்டு ஸ்வைப் மெஷின்களை பாதுகாப்பாக பயன்படுத்த விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” என தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கமும், தென்மண்டல தலைமை வெடிபொருள் கட்டுப்பாடு அதிகாரி மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதில், “எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலிய விற்பனையாளர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்டி அபாயகரமான பகுதி குறித்து தெளிவான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தது.

விபத்து அபாயம்:

ஆனால், இதுவரை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பும் இடத்துக்கு அருகிலேயே தற்போது வரை ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி, பொதுச்செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நாடு முழுவதும் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களும், தமிழகத்தில் 4,570 பெட்ரோல் நிலையங்களும் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவற்றில் மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பயன்பாடு அதிகரிப்பு

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, ஸ்வைப் இயந்திரங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் நிரப்புவோரின் எண்ணிக்கை 35 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெட்ரோலிய விதிகள் 2002-ன்படி பெட்ரோல், டீசல் விநியோகிக்கும் இடத்துக்கு அருகில் அபாயகரமான பகுதிகளை குறிப்பிட்டு, அந்த பகுதியில் செல்போன், ஸ்வைப் இயந்திரம் உள்ளிட்டவற்றை உபயோகப்படுத்தக் கூடாது என வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இந்த அளவீடுகள் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை.

விழிப்புணர்வு வேண்டும்

மேலும், பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசலை டீலர்கள் விற்பனை செய்தாலும், வெடிபொருள் பாதுகாப்பு உரிமத்தை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (பிஇஎஸ்ஓ) எண்ணெய் நிறுவனங்களுக்குத்தான் வழங்குகிறது. எனவே, அதைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு உள்ளது. எனவே, ஸ்வைப் மெஷினை எவ்வளவு தூரத்தில், எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection  Sparsh Upadhyay 28 Mar 20...