Sunday, June 4, 2017

டாக்டர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்: அரசு விதிமுறைப்படி நடத்த உத்தரவு
பதிவு செய்த நாள்03ஜூன்  2017 21:06

சென்னை, :'இடமாறுதல், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங்கில், கடைசி கட்டமாக, முதுகலை மருத்துவ மாணவர்களை அனுமதிக்க வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலஉத்தரவிட்டுள்ளது.

'சர்வீஸ்' டாக்டர்கள் நலச் சங்கத்தின் செயலர், ஜி.சுரேஷ் தாக்கல் செய்த மனு:அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களின் இடமாறுதலுக்கான கவுன்சிலிங் குறித்து, 2007ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. பின், கவுன்சிலிங் வரிசையை, 2017 ஜனவரி யில், அரசு அறிவித்தது.

அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட டாக்டர்கள், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் பணியாற்றும் டாக்டர்களுக்கு, முதல் கட்டமாக, கவுன்சிலிங்கில் வாய்ப்பு அளிக்கப்படும். அதை தொடர்ந்து, முதுகலை மருத்துவப் படிப்பை முடிக்கும் நிலையில் உள்ள, அரசு டாக்டர்கள் பரிசீலிக்கப்படுவர்.

மருத்துவக் கல்வி இயக்குனர், 2017 மே, 24ல், ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். வரிசைப்படி கவுன்சிலிங் நடக்கும் தேதிகள், அதில் அறிவிக்கப்பட்டன. பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு முன்னதாக, முதுகலை மருத்துவப் படிப்பை முடிக்கும் தருவாயில் உள்ள மாணவர்கள், கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, இந்த சுற்றறிக்கை வழி வகுக்கிறது.
இது, 2007 அரசாணை மற்றும், 2017 ஜனவரி உத்தரவை மீறுவதாக உள்ளது. எனவே, மருத்துவ கல்வி இயக்குனர் பிறப்பித்த சுற்றறிக்கையை, ரத்து செய்ய வேண்டும். 2007 மற்றும், 2017 ஜனவரி உத்தரவுகளின் அடிப்படையில், கவுன்சிலிங் நடத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன், ''முதுகலை மருத்துவ மாணவர்கள், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், கவுன்சிலிங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், ஓராண்டு வரை காலியாக இருக்கும். 2007 மற்றும், 2017 ஜனவரியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, முன்னுரிமை அடிப்படையில் கவுன்சிலிங் நடந்தால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி டி.ராஜா பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
அரசு, 2007 நவம்பர் மற்றும், 2017 ஜனவரியில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான வழிமுறைகள், கீழ்கண்ட முறையில் பின்பற்றப்பட வேண்டும்.

* அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள்
* மருத்துவ அதிகாரிகளாக, தற்காலிகமாக நியமிக்கப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய சிறப்பு தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்கள்
* மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் நடத்தும், போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள்
* மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பு தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்று, நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள்
* மேற்கூறியவர்களுக்கு அடுத்த படியாக மட்டுமே, முதுகலை மருத்துவப் படிப்பை முடிக்கும் தருவாயில், தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களை, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கு விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, நீதிபதி ராஜா தள்ளிவைத்துள்ளார்.
கவுன்சிலிங் ரத்து

அரசு டாக்டர்களின் பணி இடமாறுதல் கவுன்சிலிங், மே, 29 முதல் நடந்து வருகிறது. இதில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், முறைகேடுகள் குறித்து வழக்கு தொடரப்பட்டது. அதனால், ஜூன், 2 முதல், 7ம் தேதி வரை, நடைபெற இருந்த இடமாறுதல் கவுன்சிலிங்கை, மருத்துவ கல்வி இயக்ககம் ரத்து செய்துள்ளது.
பயணியிடம் ரூ.20 லட்சம் 'அபேஸ்' ஹவாலா பணமா என விசாரணை
பதிவு செய்த நாள்04ஜூன் 3 2017 01:31




கடலுார், கடலுாரில், பஸ் பயணியிடம், 20 லட்சம் ரூபாயை பறித்து, பதுக்கி வைத்திருந்த போலீசார் சிக்கினர். இது, ஹவாலா பணமா என, விசாரணை நடக்கிறது.

கடலுார் மாவட்ட எல்லையான ஆல்பேட்டை சோதனை சாவடியில், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில், போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் இருந்து, கடலுார் வந்த அரசு பஸ்சை நிறுத்தி, சோதனையிட்டனர். பயணி ஒருவர், லெதர் பேக்குடன் இருந்தார். அவரை கீழே இறக்கி, விசாரித்தனர்.

அவரது பேக்கில், 50 லட்சம் ரூபாய் இருந்தது. விசாரணைக்கு பின், அந்நபரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி, கடலுார் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு பேருந்து நிறுத்தத்தில் இறக்கி அனுப்பியுள்ளனர்.
அந்த பயணி, தன் நண்பர்கள் மூலமாக, போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதில், தான் 50 லட்சம் ரூபாய் கொண்டு வந்ததாகவும், போலீசார், 20 லட்சம் ரூபாயை பறித்து, 30 லட்சத்துடன் தன்னை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கடலுார் புதுநகர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, சோதனை சாவடிக்கு அருகில் உள்ள புதரில் இருந்து, லெதர் பேக் ஒன்றை கண்
டெடுத்தனர். அதில், 2,000 ரூபாய் நோட்டுகள், ஐந்து கட்டு, 500 ரூபாய் நோட்டுகள், 20 கட்டு என, மொத்தம், 20 லட்சம் ரூபாய் இருந்தது.

போலீசார் 'சஸ்பெண்ட்'

ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் பணியில் இருந்த, மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏட்டுகள் ரவிக்குமார் செல்வராஜ், ஆயுதப்படை போலீஸ்காரர் அந்தோணிசாமிநாதன் ஆகிய மூவரிடமும், எஸ்.பி., விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின், மூவரும், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பஸ் பயணி கொண்டு வந்தது, ஹவாலா பணமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.


கதிர் வீச்சை தடுக்கும் புதிய ஆடை மதுரை டாக்டர் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்ஜூன் 03,2017 23:20



மதுரை, எக்ஸ்ரே மையங்களில் கதிர் வீச்சை தடுக்கும் ஆடையை, மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி ரேடியோலாஜி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கண்டுபிடித்துள்ளார்.

அவர் கூறியதாவது: எக்ஸ்ரே மையங்களுக்கு நோயாளிகளுடன் வருவோர் மற்றும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர் கதிர்வீச்சை தடுக்கும் 'லெட் ஏப்ரான்' எனும் ஆடையை பயன்படுத்துகின்றனர். இதற்கான மாற்று ஆடையை கண்டு பிடித்துள்ளேன்.பிஸ்முத், ஆன்டிமோனி, பேரியம் சல்பேட், பாலிமர் ஆகிய மூலப்பொருட்களை கொண்டு தயாரித்தேன். இது 'லெட் ஏப்ரான்' ஆடையை விட 25 சதவீதம் கதிர்வீச்சை தடுக்கும். சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காது. விலை குறைவு. 3 கிலோ எடை கொண்டது. மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.

மடித்து வைக்க, மறு சுழற்சி, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. ஐந்து ஆண்டு ஆராய்ச்சிக்கு கிடைத்த பரிசு இது.இந்த ஆடையை உருவாக்க 75 ஆயிரம் ரூபாய் செலவானது. இந்திய அளவில் லெட் ஏப்ரானுக்கு முதல் மாற்று ஆடை என்ற பெருமை பெற்றுள்ளது. ஆடை ஒன்று 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கலாம். மொத்தமாக தயாரிக்கும்போது செலவு குறையும். இக்கண்டுபிடிப்பை அங்கீகரித்து ஆதித்யா பிர்லா நினைவு மருத்துவமனை விருது வழங்கியது, என்றார்.

இவரது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் பெற ஏ.இ.ஆர்.பி. (அட்டாமிக் எனர்ஜி ரெகுலேஷன் போர்டு) பரிந்துரைக்காக அனுப்பப்படும் என டீன் வைரமுத்து ராஜூ தெரிவித்தார்.
41 வயதில் பிளஸ் 2வில் முதலிடம் பீஹாரில் மோசடி நபர் கைது

பதிவு செய்த நாள்03ஜூன்2017 23:07




பாட்னா, பீஹாரில், தன் வயதை மறைத்து, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த, 41 வயது நபரை போலீசார் கைது செய்தனர். அவரை தேர்வு எழுத அனுமதித்த, பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து
வருகின்றனர்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, பி.எஸ்.இ.பி., எனப்படும், பீஹார் பள்ளி தேர்வுகள் வாரியம் நடத்திய, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வில், கலைப் பிரிவில், கணேஷ் குமார் என்ற மாணவர் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கணேஷ் குமாரின் வயது, 41 என்றும், 1990ல், ஏற்கனவே, 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அவர், 2015ல் மீண்டும் ஒரு முறை, 10ம் வகுப்பு தேர்வெழுதி, அதன்பின், இந்த ஆண்டு நடந்த, பிளஸ் 2 தேர்வில் பங்கேற்றது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, மாநில கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த, கணேஷ் குமாரின், நிஜப் பெயர், கணேஷ் ராம். 1975ல், தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்த இவர், 1990ல், 10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று  உள்ளார்.

அதன் பின், தன் பெயரை, கணேஷ் குமார் என குறிப்பிட்டு, பீஹாரை சேர்ந்த தனியார் பள்ளி மூலம், 2015ல், 10ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார்.
அதன் பின், வேறொரு பள்ளியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்த கணேஷ், சமீபத்தில் நடந்த, பிளஸ் 2 தேர்வில் பங்கேற்றுள்ளார்.
ஏற்கனவே, 10ம் வகுப்பு படித்ததை மறைத்து, இரண்டாவது முறை தேர்வெழுதியது; வயதை மறைத்து பிளஸ் 2 தேர்வு எழுதியது; போலி பெயர் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களின் அடிப்படையில், அவர் மீது போலீசில் புகார் அளித்தோம். அதன்படி, போலீசார் கணேஷை கைது செய்தனர்.

கணேஷ் குமாரின் சான்றிதழ்கள் அனைத்தும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவருக்கு சேர்க்கை வழங்கிய இரு பள்ளிகளுக்கு எதிராக புகார் அளித்துள்ளோம். அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு, பீஹாரில் நடந்த, பிளஸ் 2 பொதுத் தேர்வில், முதலிடம் பிடித்த மாணவி, செய்தியாளர் சந்திப்பின் போது, பாடதிட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட சாதாரண கேள்விகளுக்கு கூட பதில் கூற முடியாமல் திணறினார். 

அந்த மாணவியிடம் நடந்த விசாரணையில், அவர் மோசடி செய்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து, மாணவியின் சாதனை செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு மீண்டும் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவைத் மருத்துவமனைகளில் ரூ.1.60 லட்சத்திற்கு வேலை

பதிவு செய்த நாள்03ஜூன்2017 22:04

மதுரை, குவைத் எண்ணெய் நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் ஜூன் 8க்குள் விண்ணப்பிக்கலாம்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளதாவது: மருத்துவமனை நிர்வாக பிரிவில் டிப்ளமோ மற்றும் ஐந்தாண்டு பணி அனுபவமுள்ள இருபாலரும் மேற்பார்வையாளர்கள், இளநிலை பட்டத்துடன் டிப்ளமோ கம்ப்யூட்டர் தேர்ச்சியுடன் ஐந்தாண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப உதவியாளர்கள், ஓராண்டு பணி அனுபவமுள்ள ஜி.என்.எம்., ஏ.என்.எம்., தேர்ச்சி பெற்றவர்கள் பெண் செவிலியர்கள், பெண் மொழி பெயர்ப்பு கிளினிக்கல் உதவியாளர்கள், அறுவை சிகிச்சை பிரிவு உதவியாளர்கள் ஆகிய பணிகளுக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் ஜூன் 14 முதல் 24 வரை நடக்கிறது.
மேற்பார்வையார் பணிக்கு 1.60 லட்சம், தொழில்நுட்ப உதவியாளருக்கு 95 ஆயிரம், வார்டு பிரிவு பணியாளருக்கு 74 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தகுதி மற்றும் அனுபவமுள்ளவர்கள் www.omcmanpower.com வலைதளத்தில் உள்ள 'சாம்பல் ரிசுயூம்' என்ற தலைப்பினை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து omckoc2017@gmail.com என்ற இமெயிலுக்கு ஜூன் 8க்குள் அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு 044-2250 5886ல் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டு பிழைகளை திருத்த ஏற்பாடு
பதிவு செய்த நாள்03ஜூன்2017 19:24

'ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள பிழைகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை; அவற்றை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என, உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து, உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
'ஸ்மார்ட்' கார்டில் உள்ள, பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள், மத்திய அரசின், 'ஆதார்' அட்டையில் இருந்து எடுக்கப்பட்டவை. ஸ்மார்ட் கார்டில் உள்ள விபரங்களை, தமிழில் வழங்குமாறு, அரசு தெரிவித்தது.
பழைய முகவரியில் இருந்த பலர், தற்போது புதிய முகவரியில் வசிப்பதாக தெரிகிறது. 

எனவே, முகவரி தவறாக இருந்தால், யாரும் கவலை அடைய தேவையில்லை. கார்டுதாரர், எந்த கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், தங்கள் கார்டை பதிவு செய்தாரோ, அதே கடையில் பொருட்களை தொடர்ந்து வாங்கலாம். அந்த கடையில் தான், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
ஸ்மார்ட் கார்டு தரும்போது, முகவரி, பிழை இருந்தால், பொது வினியோகத் திட்டத்தின் இணையதளத்தில் சரி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

- நமது நிருபர் -
பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு
பதிவு செய்த நாள்03ஜூன்  2017 18:58

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட
உள்ளன. அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டு
உள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
-நமது நிருபர் -

NEWS TODAY 19.09.2026