Thursday, February 1, 2018

திருப்பதியில் பக்தர்கள் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே தரிசிக்க அனுமதி? அமைச்சர் மாணிக்கயால ராவ் அதிரடி பேட்டி

By DIN | Published on : 31st January 2018 08:59 AM



திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும் ஆந்திர மாநில அமைச்சர் மாணிக்கயால ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தினந்தோறும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் நிற்காமல் சென்றால் அரை மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யக் கூடிய நிலை உள்ளது.

மேலும் ஒருவரே பல முறை தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்தால் சாமி தரிசனம் செய்து வைக்க முடியாமல் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.

எனவே, ஆதார் அட்டை மூலம் இணைத்து முதல் முறை வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து பின்னர் வாய்ப்பு இருந்தால் கூடுதல் தசரிசனத்திற்கு அனுமதிக்க உள்ளதாக அவர் தெரித்தார்.

இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மேலும் பல பக்தர்கள் பயனடைவார்கள் என்றும் இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளதாகவும் அமைச்சர் மாணிக்கயால ராவ் தெரிவித்தார்.
அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் செல்லாது: குடும்ப அட்டைதாரர்களே வைத்துக் கொள்ளலாம்

By DIN | Published on : 01st February 2018 01:20 AM

கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் இனி செல்லாது. மின்னணு குடும்ப அட்டைகள் பெற்றுள்ள அனைவரும் தங்களிடம் உள்ள அச்சிடப்பட்ட பழைய அட்டைகளை அவர்கள் வசமே வைத்துக் கொள்ளலாம் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதற்கு முன்பாக, சுமார் 2 கோடி அட்டைகள் புழக்கத்தில் இருந்தன. ஆதார் தகவல்களின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் தயாரிக்கப்பட்ட காரணத்தால் போலி குடும்ப அட்டைகள் பெருமளவு தவிர்க்கப்பட்டு வருகின்றன. இதனால், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையும் 1.94 கோடியாகக் குறைந்துள்ளது.
99 சதவீதப் பணிகள்: தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மின்னணு குடும்ப அட்டை கிடைக்கப் பெற்றவர்கள் ஏற்கெனவே தங்கள் வசம் வைத்துள்ள அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகளை என்ன செய்ய வேண்டுமென்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் அளித்த விளக்கம்:-

தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் மூலமாகவே நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கப்படும். மின்னணு குடும்ப அட்டைகளின் விவரங்களை நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிந்து கொள்ள தனித்துவமான கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், இயந்திரங்கள் பழுதானாலும் 10 சதவீதம் அளவுக்கு மாற்று இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்ட பிறகு, அவற்றின் மூலமாக மட்டுமே பொருள்கள் அளிக்கப்படும்.

எனவே, அச்சிடப்பட்ட பழைய குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்காது. அவை செல்லாது என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த அட்டைகளை குடும்ப அட்டைதாரர்களே தங்கள் வசம் வைத்துக் கொள்ளலாம்.

முகவரி மற்றும் இருப்பிடச் சான்றுக்கான ஆவணமாக புதிதாக வழங்கப்பட்டுள்ள மின்னணு குடும்ப அட்டைகளையே காண்பிக்கலாம். மாநிலம் முழுவதும் இதுவரை 99 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள ஒரு சதவீதம் பேருக்கு விரைவில் வழங்கப்படும் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வானில் இரண்டு சூப்பர் நீல நிலாக்கள்

By நெல்லை சு. முத்து  |   Published on : 31st January 2018 11:02 AM
muthu
வானத் திரை அரங்கில் சூரிய விளக்கு அணைந்த பிறகுதான் நட்சத்திரங்கள் கண் சிமிட்டும். நிலாவும் அதே ரகம். ஆனாலும், இந்த நிலாவையும் நட்சத்திரங்களையும் ரசிப்பவர்கள் ஏராளமம். காவிய ரசம் சொட்டச் சொட்ட எத்தனையோ பக்தர்கள், ஜென் சித்தர்கள், கவிக் கொத்தர்கள், சொற் குயவர்கள், சிறுகதைத் தச்சர்கள் பலரும் படைப்புகள் தயாரித்து உள்ளனர்.

சுய ஒளி அற்ற நிலா, பிற ஒளியை ஏற்றுத்தானே 'நீல வான ஆடைக்குள் முகம் மறைத்து' இரவில் எட்டிப் பார்க்கிறது?

கவிதையும், ஆன்மிகம் மாதிரிதானே? உள்ளத்தால் உணரப்படுவது. எதையும் கூட்டம் திரட்டி, பொருள் ஈட்டி, வார்த்தைகளில் பிறர்க்கு உபதேசிக்க முற்பட்டால் அது நிச்சயம் உணர்வை ஊட்டுவதாக இருக்கவே முடியாது.
சூப்பர் ஸ்டார் என்றால் தெரியும். சூப்பர் நிலா என்றால் என்ன என்றுதானே கேட்கிறீர்கள்?

முப்பது ஆண்டுகளுக்கு முன்னம், அமெரிக்க சோதிடர்கள் பேரவையின் சிறப்புச் சான்றிதழ் பெற்ற ரிச்சர்ட் நோல்வி என்பவர்தான் இந்தக் கலைச் சொல்லினை அறிவித்தவர்.

கடந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் முக்கிய 'சூப்பர் நிலா' சந்திர கிரகணம் இன்று (2018 ஜனவரி 31) கீழை - வடகிழக்கு வானில் நிகழ்கிறது.

இன்று வழக்கத்திற்கு மாறாக, சந்திரன் சராசரி அளவினைக் காட்டிலும் எட்டில் ஒரு பங்கு (12 சதவீதம்) பெரிதாகத் தோன்றும். பொலிவும் மூன்றில் ஒரு பங்கு (30 சதவீதம்) கூடுதல்.

இருள் கவ்விய நிலாவின் ஒரு பகுதி இலேசான சிவப்பு வண்ணம் படிந்தது போல இருக்கும். அதனால் இதற்கு, 'சூப்பர்', 'குருதி', 'ரத்த' நிலா போன்ற 'விருதுப் பெயர்கள்' சேர்த்து அழைக்கிறோம்.

சந்திர கிரகணம் என்பது நிலாவில் விழும் சூரிய ஒளியினை நமது பூமி மறைப்பதால் ஏற்படும் இயல்பான வானவியல் நிகழ்வு. இதனையே 'திங்களைப் பாம்பு கொண்ட' நிகழ்ச்சியாக வள்ளுவரும் (குறள் 1146) ஏற்றுப் பாடுகின்றார்.

திருமால் மோகினி வடிவில் தோன்றித் தேவர்களுக்கு அமுது பகிர்ந்து அளித்தார். அப்போது தேவர் வேடத்தில் சூரிய, சந்திரர் இருவருக்கும் நடுவில் இராகு புகுந்து அமுது வாங்கினார்.

சூரிய, சந்திரர்கள் அது குறித்துத் திருமாலிடம் புகார் கூறினர். அதனால் மோகினியான திருமால் தனது கையில் இருந்த சட்டுவத்தால் இராகு தலையில் அடித்தார். தலை இராகு என்றும், தேகம் கேது என்றும் பிளந்தது. இராகு கரும்பாம்பு. கேது செம்பாம்பு. இவர்கள் தங்களைத் திருமாலிடம் காட்டிக் கொடுத்த சந்திர, சூரியர்களை அவ்வப்போது மறைப்பதுதான் சந்திர, சூரிய கிரகணங்களாம்.

'பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்...' (நற்றிணை 128), 'அரவு நுங்கு மதி' (குறுந்தொகை 395), 'பாம்பு சேர் மதி போல' (கலித்தொகை 15), 'திங்களை உறின்' (கலித்தொகை 140), 'பால் மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும்' (கலித்தொகை 104) - எனப் பல பாடல்களில் சங்கப் புலவர்களும் குறிப்பிடுகின்றனர்.

அதனால்தானே கிரகண வேளைக்குச் சில உணவுக் கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டன. எதிலும் உடனடியாக மெய்ப்பொருள் காண்பதைவிட 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்ற சமரசத்தையும் புத்திசாலி வள்ளுவரே வகுக்கிறார்.

கிரகண வேளையில்மட்டும் அல்ல, மற்ற நேரம் கெட்ட நேரங்களில் கூட உண்பதும், நீர் அருந்துவதும் குளிப்பதும், குளிக்காததும் அவரவர் விருப்பம்.
போகட்டும். நளாயினி சூரியனை 'நில்' என நிறுத்தியது போன்ற புராண, கர்ண பரம்பரைக் கதைகள் நம் நாட்டிலும் உண்டு. பாரதப் போரின்போது சூரியனை கிரகண இருள் கவ்விய இதிகாசக் கதைகளும் நாமறிவோம்.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பாட்ரிக் துறவியார் அயர்லாந்து நாட்டு மக்களை தெய்வ விசுவாசிகளாக மாற்றிடவும் சூரிய கிரகணங்கள் உதவியுள்ளன!

அது சரி... நீல நிலா என்றால் புரியவில்லையா? நிலா, பூமியைச் சுற்றி வரும் கால அளவினை வெறுமனே மாதம் என்கிறோம். ஆனால், வானவியலில் பல வகை மாதங்கள் உள்ளன.

விண்வெளியில் ஒரு குறித்த விண்மீன் திசையினைப் பொருத்தமட்டில், ஒரு தடவை சுற்றும் சராசரி காலம் 'திசை மாதம்' (சைடீரியல்' மாதம்). இது 27.32 நாட்கள். இலத்தீன் மொழியில் 'சைடஸ்' என்றால் விண்மீன்.

இரண்டு பௌர்ணமிகளுக்கு இடையே 29.531 நாட்கள் இடைவெளி வரும். இதுவே ஆங்கிலத்தில் 'சைனோடிக் மாதம்'. தமிழில் 'திங்கள் மாதம்' ('லூனார்' மாதம்) என்று கூறலாம். 'சைனோடிக்' என்றால் சந்திப்பு.

அதனால் ஒரு சில ஆங்கில மாதங்களில் இரண்டு முறை பெளர்ணமி தோன்றினால், யாரும் வருத்தப்பட வேண்டாம். இரண்டாம் தடவை காட்சி தரும் முழு நிலவுக்கு 'நீல நிலா' என்பதுதான் பட்டப் பெயர்.

யாரேனும் ஆபாசப் படம் மாதிரி என்று நினைத்துவிட வேண்டாம். பச்சையான (பாட்டு), மஞ்சள் (பத்திரிகை), சிவப்பு (விளக்கு விவகாரம்), கருப்பு (பணம்) போல சில திரைப்படங்களுக்கு 'நீலம்' என்பது 'கெட்ட' வார்த்தை!

நமக்கு என்னவோ இந்தியாவில் ஒருவர் சொன்னார் என்பதை விட, எஸ்கிமோ சொன்னால்தான் ஏற்றுப் பதிவு செய்வோம். நியூஃபவுண்ட்லாந்து நாட்டுப்புற வழக்கு மற்றும் மொழி ஆவண நினைவுப் பல்கலைக்கழகத்தினர் நீல நிலா குறித்துப் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

1985-ஆம் ஆண்டு 'உலக நாட்காட்டிப் பதிப்பக'த்தின் வழி மார்கோ மக்லூன்-பஸ்டா மற்றும் ஆலிஸ் சீகல் தொகுத்து வெளியிட்ட 'குழந்தைகளுக்கான உலக சாதனைகள் மற்றும் உண்மைகள் நாட்காட்டி' (World Almanac of Records and Facts, World Almanac Publications, New York, 1985)  என்கிற நூலில் நீல நிலா பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.

1883-ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் கிரக்கதோவா எரிமலை வெடித்தது. அதில் இருந்து சீறிப் படர்ந்த சாம்பல் புகை மூடி, அந்திவானம் பச்சை நிறம் பூண்டது. இரவில் முழு நிலாவும் நீல நிறமாகத் தோன்றியதாம்.

1951-ஆம் ஆண்டு மேற்கு கனடாவில் காடு தீப்பற்றி எரிந்தது. வட அமெரிக்காவின் வட கிழக்கு வானில் சாம்பல் திரைமறைவில் நிலவு நிறமாகக் காட்சி அளித்தது.

எப்போதாவது நிகழும் இத்தகைய சம்பவங்களால் மேனாட்டில் உதித்தது ஒரு பழமொழி. 'நீல நிலா உதித்தால்தான் நமக்குத் திருமணம்' என்கிற சொலவடை.
'அத்தி பூத்தாற்போல' என்பது போல... 'நீல நிலாக் காலம் வந்தால்தான் கட்சி தொடங்குவோம்' என்பது இங்கு நம் புது மொழி!

எப்படியோ, இத்தகைய மாதமிரு முழு நிலாக் காட்சியினை ஒரு நாட்டுப் புறக் கதையோடு இணைத்து மேனாட்டில் வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகள் அலைபரப்பாயின.

நமக்கு வந்த சோதனை, இங்கு ஊடகங்களில் இன்னமும் தமிழர்களை ஆற்றுப்படுத்த ஏதேனும் இருட்டு அரங்கின் நட்சத்திரம் உதிக்காதா என்றே விவாதங்கள்.

துயரச் சூழலில்தான் 'நீல நிலா கருக்கிறதே' என்று மேலைநாட்டவர் பாடுவார்களாம். முன்பு 'வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு' என்று பாடும்போது சோக நிலா, வெள்ளி ஆன காலம் காலாவதி ஆயிற்று.

இந்த ஆண்டு வேறு பல வானியல் நிகழ்வுகளும் அரங்கேற இருக்கின்றன. பண்டைக் காலத்தில் வானில் இருந்து விண்மீன் விழுந்தால் தீ நிமித்தம் என்று கருதப்பட்டது.

கோச்சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறப்பிற்கான தீ நிமித்தம் கருதினார் கூடலூர் கிழார்.

கார்த்திகை, அனுஷம், உத்திரம், மிருகசீரிஷம் ஆகிய விண்மீன்கள் இடையே 'கனை எரி பரப்பக் கல் எதிர்பு பொங்கி ஒரு மீன் விழுந்தன்றால்' (புறநானூறு 229: 11, 12) என்று பாடுகிறார்.

உண்மையில், நட்சத்திரங்கள் தரை இறங்கி வந்து விளம்பரம் நாடுவது இல்லை. வந்தவை எல்லாம் விண்கற்கள், அவ்வளவுதான்.

இப்போதைய 2018-ஆம் ஆண்டிலும் திசைதோறும் விண்கற்கள் பறக்க இருக்கின்றன. யாழ் ஒத்த உடுகணத்தின் பின்னணியில் லிரிட்டுகள் (ஏப்ரல் 22, 23); கும்ப உடுக்கணத்தில் ஈடா அக்வாரிட்டுகள் (மே 6, 7); டெல்டா அக்வாரிட்டுகள் (ஜூலை 27, 28); பெர்சியஸ் உடுக்கணப் பிராந்தியத்தில் பெர்சியடும் (ஆகஸ்ட் 12, 13); ட்ரக்கோனிடுகள் (அக்டோபர் 8); வேட்டைக்கார உடுக்கணத்தில் ஓரியனிடுகள் (அக்டோபர் 21, 22); மேட உடுக்கணத்தில் டாரிடுகள் (நவம்பர் 5, 6 ); சிம்ம உடுக்கணத்தில் லியோனிடுகள் (நவம்பர் 17, 18); மிதுன உடுக்கணத்தில் ஜெமினிடுகள் (டிசம்பர் 13, 14); சப்தரிஷி மண்டலத்தை ஒட்டி உர்சிடுகள் (டிசம்பர் 21, 22) என்று ஆண்டு நெடுகிலும், அதிகாலையிலோ பின்னிரவிலோ அடிவானில் சகட்டுமேனிக்கு விண்கல் மழைதான் போங்கள்!

ஆதலால், தெருவோரப் பலகைக்கு பாலபிஷேகம் செய்யும் நட்சத்திர ஆர்வலர்களே, பிறகு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்! திருமண மண்டபங்கள், நினைவு மண்டபங்கள் போன்ற பொது இடங்களில் திரண்டு நேரத்தையும் உழைப்பையும் வீண் அடிக்காதீர்.

குழந்தைகளுடன் அருகிலுள்ள அறிவியல் மையங்களுக்குச் சென்று சூப்பர் நிலா அற்புதங்களை தரிசியுங்கள். அடுத்த தலைமுறைக்கேனும் அறிவியல் தேடலில் ஆர்வம் ஊட்டுங்கள்.
பொறுப்பை தட்டிக் கழிக்கும் அதிகாரிகளிடம்...  பாடாய்ப்படுது தகவல் அறியும் உரிமைச்சட்டம்!

Added : பிப் 01, 2018 02:24



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, பதில் தருவதில்லை என்பதில், கோவையிலுள்ள பல்வேறு துறை அதிகாரிகளும் ஓரணியில் உள்ளனர். இதற்கு உதாரணமாக, ஒரு கேள்விக்கு பதில் தருவதால், 'உயிருக்கு ஆபத்து' என்று பதில் கூறி, தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளார், மாநகராட்சி தணிக்கைத்துறை அதிகாரி.

கடந்த, 2005ல் அமலுக்கு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக, அரசு துறைகளில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அரசின் மெத்தனப்போக்கு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கும், இதனால் மக்களுக்குத் தெரியவந்துள்ளது. இதன் எதிரொலியாக, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பல்வேறு பாதிப்புகளுக்கும், தண்டனைகளுக்கும் உள்ளாக வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

பல விதங்களிலும் பாதிக்கப்படும் அதிகாரிகள், இதற்குப் பதில் தருவதற்குப் பதிலாக, அசாத்தியமான துணிச்சலுடன், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, மனுவையும், சட்டத்தையும் உதாசினப்படுத்துவது, சமீப காலமாக அதிகரித்துள்ளது. அதாவது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கும் கேள்விகளுக்கு, நேரடியாக பதில் அளிக்காமல் மழுப்பி விடுகின்றனர்; அல்லது, பதிலே தர முடியாது என்று பகிரங்கமாக தட்டிக் கழித்து விடுகின்றனர்.

சில உதாரணங்கள்...

கோவை மாநகராட்சியில், கடந்த, 2016, அக்., 25 முதல், தனி அலுவலராக, மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். மாமன்ற நடைமுறையின் கீழ், ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அவை, மாநகராட்சி இணைய தளத்தில் வெளிப்படையாக வெளியிடப்பட்டன. யார் வேண்டுமானாலும், பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை பின்பற்றப்பட்டது.

சமீபகாலமாக, விதிமுறைகளை மீறி, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், அவை எதுவும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. சமூக ஆர்வலர் தியாகராஜன், கடந்த, 2017, ஜூலை முதல் டிச., வரை நிறைவேற்றிய தீர்மான நகல் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், மாநகராட்சிக்கு விண்ணப்பித்தார். அதற்கு வந்த பதில், அவரை அதிர வைத்துள்ளது.

அந்த பதிலில், 'மொத்தம் 129 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. முதல் மூன்று பக்கங்களுக்கு ரூ.100, மற்ற பக்கங்களுக்கு ரூ.10 வீதம், மொத்தம், ரூ.13 ஆயிரத்து 600 செலுத்த வேண்டும்' என்று மாநகராட்சி பதிலளித்து உள்ளது. மூன்று பக்கங்களுக்கு நுாறு ரூபாய், ஒரு பக்க நகலுக்கு 10 ரூபாய் என்பது என்ன கணக்கு என்பதே தெரியவில்லை.

மற்றொரு சமூக ஆர்வலர் டேனியல் என்பவர், கடந்த, 2011 அக்., முதல், கடிதம் கிடைக்கும் நாள் வரை, உள்ளாட்சி தணிக்கை துறையால் தணிக்கை செய்து சமர்ப்பித்த அறிக்கையின் நகல் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தார். அதற்கு, 'உயிருக்கு அல்லது உடமைக்கு ஆபத்து உண்டாக்கும்' என்ற சட்டத்தை சுட்டிக்காட்டி, 'தணிக்கை அறிக்கை நகல் வழங்க இயலாது' என, உள்ளாட்சி நிதி தணிக்கை துணை இயக்குனர் பதில் அளித்துள்ளார்.

எப்படித்தான் கேட்பதோ?

தணிக்கை துறை அறிக்கை என்பது, நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிதி இழப்பு மற்றும் முறைகேடுகளை சுட்டிக்காட்டுவதாகும். இந்த அறிக்கையின் பரிந்துரையை ஏற்று, நிதி இழப்புக்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; நிதி விரயம் செய்திருந்தால், அத்தொகையை திரும்பச் செலுத்தவும் அறிவுறுத்தப்படும். இதற்கு முன், தணிக்கைத்துறை அறிக்கை, மாமன்ற பார்வைக்கு வெளிப்படையாக வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.

தற்போது மாமன்ற நடைமுறை இல்லாததால், தணிக்கைத்துறை அறிக்கை விபரங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. அதைக் கேட்டதற்கு, தணிக்கைத் துறை இப்படி ஒரு தனித்துவமான பதிலை அனுப்பி, பதற வைத்துள்ளது.

இதேபோன்று, லோகநாதன் என்ற வக்கீல், 'அவிநாசி ரோட்டில், அண்ணாதுரை சிலைக்கு அருகில், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., சிலைகள் வைக்க துறைரீதியாக அனுமதி தரப்பட்டதா' என்று மாநில நெடுஞ்சாலைத்துறையிடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு, 'தாங்கள் கோரியுள்ளது, கேள்விகள் வடிவில் உள்ளதால், அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது' என்று இத்துறையின் கோட்டப் பொறியாளர் பதிலளித்து அசத்தியுள்ளார்.

இவ்வாறாக, கோவையில், மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் என எந்தத் துறையிடம், எந்தத் தகவலைக் கோரினாலும், அதற்கு உரிய பதில் கிடைப்பதில்லை. மேல் முறையீடு செய்தாலும், முழுமையான பதில் தருவதில்லை என்பதே வாடிக்கையாகி விட்டது. இப்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டம், கோவை அதிகாரிகளிடம் பாடாய்ப்படுகிறது. மாநில தகவல் ஆணையமோ, ஐகோர்ட்டோ தலையிட்டால் மட்டுமே, இதற்கு தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

இப்படியும் நடக்குது!

கோவையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, சில தகவல்களை வாங்கிக் கொண்டு, அவற்றை வைத்து, அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் சிலர் ஈடுபடுகின்றனர். இவர்களால், சமூக அக்கறையோடு, தகவல் கேட்பவர்களுக்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது. இது ஒரு புறமிருக்க, அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தமும், அதிகாரிகளை தகவல் தராமல் தடுக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.


-நமது நிருபர்-
கடன் வாங்கி தற்கொலையானவர் மகனுக்கு வங்கி,'நோட்டீஸ்'

Added : பிப் 01, 2018 02:19

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, வெங்கமேட்டூரில் வறட்சியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி முத்துசாமி வாங்கிய, மூன்று லட்சம் ரூபாயை செலுத்தும்படி, அவரது மகனுக்கு, வங்கி மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கொடுமுடி தாலுகா வெங்கமேட்டூரைச் சேர்ந்தவர் முத்துசாமி, 70; விவசாயி. இவருக்கு சொந்தமாக, 40 சென்ட் நிலம் உள்ளது.

ஐந்து ஏக்கரை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தார். கடந்த, 2015 -1 6 - 17ம் ஆண்டுகளில் கடும் வறட்சியால், இவரது நிலத்தில் நிலக்கடலை உட்பட சாகுபடி செய்த பயிர்கள், நாசமானது.

கொடுமுடி கத்தோலிக் சிரியன் வங்கியில், இவர், மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். தவிர, விவசாய பணிக்காக, தனி நபர்களிடமும் கடன் பெற்றிருந்தார்.

விவசாயம் பொய்த்ததால், கடந்த, 2016 நவ., 19ல் விஷம் குடித்து, முத்து சாமி தற்கொலை செய்து கொண்டார். மாவட்ட நிர்வாகம் மூலம் அவருக்கு, இழப்பீடும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அவரது மகன் கணேசனுக்கு, வங்கியில் இருந்து, மூன்று லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் செலுத்தும்படி, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் முனுசாமி தலைமையில், கலெக்டர் பிரபாகரை, கணேசன் சந்தித்து மனு வழங்கினார்.
'விவசாயம் பொய்த்ததால், தன் தந்தை இறந்துவிட்டார். அவர் இறப்பு, வறட்சியால் நடந்தது என்று அரசும் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, அவர் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.
இதுபற்றி, நடவடிக்கை எடுக்க, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

சந்திரசேகர் கூறிய தாவது:

கடனை தள்ளுபடி செய்ய முடியுமா என தெரியவில்லை. இருப்பினும், அந்த வங்கியிடம், அவர் பெற்ற கடன், அவர் திரும்ப செலுத்திய விபரம், மீதமுள்ள தொகை, கடனை தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளதா என்ற விபரத்தை அறிய வேண்டும்.

இருப்பினும், கணேசனின் மனுவை அவ்வங்கி மூலம், அவர்களது தலைமைக்கு அனுப்பப்படும். அங்கிருந்து வரும் பதிலுக்குப்பின், விபரம் தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
கத்தியை சுழற்றிய மாணவர்களுக்கு டி.சி.,

Added : பிப் 01, 2018 01:06

''கத்தியை சுழற்றிய போக்கிரி மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன் தெரிவித்துள்ளார்.

நீக்கம் : சென்னை பச்சையப்பன் கல்லுாரி மற்றும் மாநில கல்லுாரியில் படிக்கும், மாணவர்களில் ஒரு தரப்பினர், அவ்வப்போது பஸ்களில் ரகளை செய்வது, சாலைகளில் வன்முறையில் இறங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.

ஏற்கனவே நடந்த சம்பவங்களில் ஈடுபட்ட மாணவர்கள், அதிரடியாக கல்லுாரிகளில் இருந்து நீக்கப்பட்டனர். சில மாதங்களாக பிரச்னை இன்றி இருந்த நிலையில், மீண்டும் வன்முறை தலை துாக்கியுள்ளது. பஸ்களில் ரகளையில் ஈடுபட்டவர்கள், தற்போது, ரயில்களில் மோதலில் ஈடுபட துவங்கி உள்ளனர். மின்சார ரயில்களில் சென்ற, கல்லுாரி மாணவர்கள், நேற்று முன்தினம், சென்னை, அம்பத்துார் அருகே உள்ள பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில், ரயிலில் கத்தி, வீச்சரிவாளுடன் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம், கல்லுாரிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது, ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 'கத்தியையும், அரிவாளையும் சுழற்றும் போக்கிரி மாணவர்கள், கல்லுாரியிலேயே இனி இருக்கக் கூடாது. அவர்களுக்கு, மாற்று சான்றிதழ் தர வேண்டும்' என, கல்லுாரி முதல்வர்களுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

நடவடிக்கை : இது குறித்து, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன் கூறியதாவது: கல்லுாரிகளில் அமைதியாக மாணவர்கள் பாடம் படித்து, நல்ல நிலைக்கு வரவேண்டும் என நினைக்கிறோம்.

ஆனால், சில மாணவர்கள், மிக மோசமாக செயல்படுவதை பார்த்து கொண்டிருக்க மாட்டோம். ஆயுதங்களை துாக்கி, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
1975 முதல் வில்லங்க விபரங்களை பார்க்கும் வசதி: பதிவுத்துறை முடிவு

Added : பிப் 01, 2018 00:31

புதிதாக வீடு, மனை வாங்குவோர், 1975 முதல் பதிவான ஆவணங்களை, ஆன் - லைனில் பார்க்கும் வசதியை ஏற்படுத்த, பதிவுத்துறை தயாராகிவருகிறது. வீடு, மனை வாங்குவோர், அது தொடர்பான முந்தைய பரிமாற்றங்கள் முறையாக நடந்துள்ளதா என்பதை, வில்லங்க சான்று வாயிலாக அறியலாம். இதற்காக, ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்தி சான்றிதழ் வாங்குவதற்கு பதிலாக, 'ஆன்லைன்' முறையில் இலவசமாக பார்க்கும் வசதி, 2013ல், அறிமுகமானது. இதன்படி, பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே, பதிவுத்துறை இணையதளத்தில், இதற்கான பகுதியில், சொத்து குறித்த விபரங்களை அளித்தால், வில்லங்க விபரங்கள், பி.டி.எப்., வடிவில் கிடைக்கும். அதில், தற்போதைய நிலவரப்படி, 1987 முதல் பதிவான, பரிமாற்ற விபரங்களை மட்டுமே, ஆன் லைன் முறையில் பார்க்கவும், பிரதி எடுக்கவும் முடியும். அதற்கு முந்தைய விபரங்கள் தேவைப்படுவோர், வழக்கமான முறையில், கட்டணம் செலுத்தி பெற வேண்டும். தற்போது, இதற்கு தீர்வு காணும் வகையில், சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆன்லைன் வில்லங்க சான்று சரி பார்ப்பு வசதியில், 1975 முதல், பத்திரப்பதிவு விபரங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி விரைவில், நடைமுறைக்கு வர உள்ளது. அத்துடன், ஸ்கேன் செய்து, பதிவுத்துறை தொகுத்துள்ள பத்திரங்களின் விபரங்களையும், பொது மக்கள் இலவசமாக பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் - -

NEWS TODAY 14.06.2026