Saturday, May 12, 2018

முதல் பார்வை: ‘நடிகையர் திலகம்’

சாதாரண கிராமத்தில் பிறந்த சாவித்ரி, மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, சினிமாவில் நடிகையானார். அவருக்கும் ஜெமினி கணேசனுக்குமான காதல், கல்யாணம், பிரிவு, இறுதி வாழ்க்கை என சாவித்ரியின் ஒட்டுமொத்த வாழ்க்கைதான் ‘நடிகையர் திலகம்’ படத்தின் கதை.

சாவித்ரி குழந்தையாக இருக்கும்போதே அவர் அப்பா இறந்துவிடுகிறார். இதனால், சிறு வயதிலேயே தன் பெரியம்மா வீட்டில் அம்மாவுடன் தஞ்சம் புகுகிறார் சாவித்ரி. அவரின் சுட்டித்தனத்தைப் பார்த்து, ‘சாவித்ரியை நாட்டியத்தில் சேர்த்து விட்டால் நன்றாக சம்பாதிக்கலாம்’ என்று ஒருவர் சொல்ல, சாவித்ரியின் பெரியப்பா அவரை நாட்டியம் கற்றுக் கொடுக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அவரின் குறும்புகளைப் பார்த்து, ‘உன்னால் நாட்டியம் கற்றுக்கொள்ள முடியாது’ என்கிறார் வாத்தியார். அவர் ‘முடியாது’ என்ற சொன்ன ஒரு வார்த்தைக்காகவே தூரத்தில் இருந்தே அவர் கற்றுக் கொடுப்பதைப் பார்த்தும், தன் தோழி சுசீலாவிடம் இருந்தும் நாட்டியம் கற்றுக் கொள்கிறார் சாவித்ரி.
சாவித்ரியை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக சென்னை அழைத்து வருகிறார் அவருடைய பெரியப்பா. ஆனால், முதல் படத்தில் அவருக்கு ஒழுங்காக டயலாக் பேசி நடிக்கத் தெரியவில்லை. ‘உனக்கு நடிப்பே வராது’ எனத் திட்டுகிறார் அந்தப் படத்தின் இயக்குநர். ‘உன்னால் முடியாது’ என்று யாராவது சொன்னால், உடனே அதை செய்து காட்டுவதுதான் சாவித்ரியின் பிடிவாதமாயிற்றே... அதே ஸ்டுடியோவில் வேறொரு படத்தில் நடைபெற்ற ஆடிஷனில் செலக்ட் ஆகி, சிறிய வேடத்தில் நடிக்கிறார். அவரின் நடிப்பைப் பார்த்து அசந்து, எந்த இயக்குநர் ‘உனக்கு நடிப்பு வராது என்று திட்டினாரோ, அதே இயக்குநரே ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறார். ஜெமினி கணேசனும் ஹீரோவாகிவிடுகிறார். தெலுங்கு மட்டுமே தெரிந்த சாவித்ரி, தமிழ் வசனங்களைப் பேச சிரமப்படுகிறார். ‘தெலுங்கு - தமிழ் புத்தகத்தைப் படிப்பதைவிட, மனிதர்களிடம் இருந்து மொழியை கற்றுக்கொள்’ என்று அவரைப் பல இடங்களுக்கும் அழைத்துப் போகிறார் ஜெமினி கணேசன்.
நாளடைவில் இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. அந்தக் காதல், கல்யாணத்திலும் முடிகிறது. ஆனால், நாளடைவில் அவர்கள் இருவருக்குள்ளும் இடைவெளி விழுகிறது. இந்த இடைவெளி எப்படி அதிகமானது? ஜெமினியை விட்டு சாவித்ரி பிரிந்ததற்கு என்ன காரணம்? குடிக்கு அடிமையாகி, தன் சொத்துக்களை எல்லாம் சாவித்ரி இழந்தது எப்படி? என்பதெல்லாம் மீதிக்கதை. இந்தக் கதை, சாவித்ரி கோமாவில் விழுந்தபிறகு ரிப்போர்ட்டரான சமந்தா, தேடித்தேடி சேகரித்தது.

நடை, உடை, பாவனை என அச்சு அசல் சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவருடைய சினிமா வாழ்க்கையில் இந்த ஒரு படமே போதும் என்று சொல்லும் அளவுக்கு, ஒவ்வொரு அசைவிலும் சாவித்ரியை நினைவுபடுத்துகிறார் கீர்த்தி. இதற்காக அவர் செய்த ஹோம்வொர்க் ஏராளம். குறிப்பாக, கீர்த்தியின் மேக்கப்மேனுக்கு மிகப்பெரிய பாராட்டு. இளமை சாவித்ரி, உடல் எடை கூடி பெருத்த கொஞ்சம் வயதான சாவித்ரி என கொஞ்சம் கூட குறைசொல்ல முடியாத அளவிற்கு கீர்த்தியை சாவித்ரியாகவே மாற்றியிருக்கிறார்.

ஜெமினி கணேசன் எப்போது இவ்வளவு ஒல்லியாக இருந்தார் என்ற கேள்வி எழுந்தாலும், தன் நடிப்பில் கொஞ்சமும் குறை வைக்காமல் அவரைப் போலவே நடித்திருக்கிறார் துல்கர் சல்மான். ஆரம்பத்தில் வரும் சமந்தா காட்சிகள் கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், க்ளைமாக்ஸில் ஸ்கோர் செய்திருக்கிறார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, பானுப்ரியா, பிரகாஷ் ராஜ், நாக சைதன்யா என எல்லாருமே அருமையாக நடித்திருக்கின்றனர்.
மிக்கி ஜெ மெயர் இசையில், பின்னணி இசை அருமை. தமிழில் ‘தந்தாய்... தந்தாய்...’ பாடல் கேட்க கேட்க இதமாக இருக்கிறது. டேனி சஞ்செஸ் - லோபெஸ் ஒளிப்பதிவில் அத்தனை பிரம்மாண்டம். குறிப்பாக, கீர்த்தி சுரேஷ் கோபத்துடன் வந்து மது குடிக்கிற காட்சியில், பின்னால் இருந்து தலைக்கு மேலே வந்து முன்புறம் கேமரா வரும் ஷாட், சிறப்போ சிறப்பு. அந்தக் காலத்தை அப்படியே செட்டில் கொண்டுவந்த கலை இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் ஹேட்ஸ் ஆஃப்!

ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தாலும், பெரும்பாலும் அது போரடிக்கும் டாக்குமென்ட்ரி போல இருக்கும். ஆனால், ஒரு இடத்தில் கூட அப்படித் தோன்றாதபடி இயல்பாக எடுத்திருக்கிறார் நாக் அஸ்வின். குறிப்பாக, சாவித்ரியின் உதவும் உள்ளத்தைப் பல இடங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார். சாவித்ரியைப் பற்றி பல விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் எனப் பலரிடம் பேசி இந்தக் கதையை உருவாக்கிய இயக்குநரின் உழைப்பு, நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.
‘என் அம்மாவின் உண்மைக்கதை முதன்முதலில் வெளியாகியுள்ளது’ என சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி கூறியிருப்பதில் இருந்தே, உண்மைக்கு நெருக்கமாக இந்தப் படம் இருக்கிறது எனத் தெரிகிறது. எப்போதுமே உண்மைக்கு மிகப்பெரிய வலிமை இருக்கிறது. அந்த வலிமை, இந்தப் படத்தில் இருக்கிறது.
எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது: திவாகரனுக்கு சசிகலா தரப்பு நோட்டீஸ்

Published : 11 May 2018 20:57 IST

சென்னை

 

திவாகரன், சசிகலா | கோப்புப் படம்.

எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவகாரன் பயன்படுத்தக்கூடாது என்று சசிகலா தரப்பிடமிருந்து திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திவாகரனுக்கு அனுப்பிய நோட்டீஸில் தெரிவித்துள்ளதாவது:

''தாங்கள் சசிகலாவின் உடன் பிறந்த சகோதரர். உங்கள் மீது சசிகலா அதிக பாசம் கொண்டவர் என்பது தாங்கள் அறிந்ததே. ஆனாலும், தங்களின் முரண்பட்ட செயல்பாடுகளும் வெளிப்பாடுகளும் சசிகலாவை கனத்த மனதுடன் இந்த அறிவிப்பை தங்களுக்கு அனுப்பும் சூழலுக்கு தள்ளியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரைப் புகழ்ந்தும் அவர்களது துரோகச் செயல்களை மறைக்கும் வண்ணமாக தாங்கள் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதலாக தொடர்ந்து பத்திரிகைகள், காணொளிகள், சமூக வலைதளங்களில் தவறான விஷயங்களை பேட்டிகள் கொடுத்து வருகிறீர்கள்.

அதிமுகவில் உள்ள தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக சசிகலா பல வழக்குகளை சென்னை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களில் வழக்குகளாக தொடுத்துள்ளார். மேலும், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும் மேற்படி நீதிமன்றங்களில் எதிர்கொண்டு வருகிறார். அவை அனைத்தும் தற்போதும் நிலுவையில் இருந்து வருகிறது. வழக்குகளின் அனைத்து விவரங்களும் வழக்காடும் தன்மையும் சசிகலாவின் ஆலோசனையின்படியே நடந்து வருகின்றன. அதே போல சசிகலாவால் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராய் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனும் என் கட்சிக்காரரிடம் அவ்வப்போது உரிய ஆலோசனைகளைப் பெற்று கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தினகரன் கடும் இன்னல்களுக்கிடையே அதிமுகவின் பெருவாரியான உண்மைத் தொண்டர்களை ராணுவம் போன்று கட்டுக்கோப்புடன், கட்சியை அனுதினமும் பலப்படுத்தி வருகிறார். நிலவரங்கள் இவ்வாறு இருக்க, உண்மைக்கு மாறாக காழ்ப்புணர்வுடனும், இல்லாததையும் பொல்லாததையும் தாங்கள் பொதுவெளியில் பேசி வருவது சசிகலாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத தாங்கள், அதிமுகவின் பொதுச் செயலாளராகிய சசிகலா பற்றி அவதூறாகப் பேசி வருவது சட்டத்தின் பார்வையில் சரியானதல்ல. எனது கட்சிக்காரர் சசிகலாவின் நிர்வாகத் திறமை, தலைமை சார்ந்த பண்பு, கட்சிப் பணி மற்றும் அவருக்கும் அதிமுகவின் தொண்டர்களுக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்புக்கு எதிராக தாங்கள் உள்நோக்கத்துடன் பேட்டிகள் கொடுத்து வருவதை சசிகலா இந்த சட்ட அறிவிப்பின் வாயிலாக கண்டிக்கிறார்.

தினகரன் குறித்து தாங்கள் பொதுவெளியில் உண்மைக்கு மாறாகப் பேசி வரும் விஷயங்கள் தங்கள் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்குதல் உணர்வை வெளிப்படுத்துகின்றன. தங்களின் பேட்டிகள் சசிகலாவின் தலைமை மாண்புக்கும் ஆளுமைக்கும் குற்றம் கற்பிக்க, யாரையோ திருப்திப்படுத்த முயன்று வருகிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்துவதாக அவரே தெரிவிக்கிறார்.

என் கட்சிக்காரர் சசிகலா அதிமுகவும் அதன் ஒன்றரை கோடி தொண்டர்களுமே பிரதானம் என்றும் அவரது குடும்பம் அவருக்கு இரண்டாவது பட்சம் என்பதையும் தெரிவிக்கிறார்.

தாங்கள் எந்த ஒரு பெயரிலும் அரசியல் ரீதியாக செயல்படுவது தங்களின் சொந்த விருப்பம் என்றும், ஆனால் என் கட்சிக்காரர் சசிகலாவின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த வகையிலும் தாங்கள் பயன்படுத்தக் கூடாது என்பதனை இந்த சட்ட அறிவிப்பின் மூலமாக தெரிவிக்கிறார்.

அதேபோல் என் கட்சிக்காரர் உயிருக்கும் மேலாக நினைத்து வணங்கும் ஜெ.ஜெயலலிதாவை ஒருமையிலும், தரக்குறைவாகவும், அவரது நற்புகழை களங்கப்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருவதை எள்ளளவும் என் கட்சிக்காரரும், கட்சித் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, அதை மனதில் கொண்டு அதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் தாங்கள் இனிமேல் எவ்வகையிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்யக்கூடாது, பேசக்கூடாது.

எனது அக்கா, என் உடன் பிறந்த சகோதரி எனும் உரிமையைக் கோரி தாங்கள் எனது கட்சிக்காரரைப் பற்றி ஊடங்களில் பேசி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த சட்ட அறிவிப்பினை அனுப்புவதன் நோக்கமே, உண்மைக்கு மாறாக தவறாக தொடர்ந்து ஊடகங்களில் பேசி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த சட்ட அறிவிப்பைனைப் பெற்ற பிறகும் தாங்கள் தொடர்ந்து பொய்யான விஷயங்களைப் பேசும் சூழலில் ரத்த சம்பந்த உறவு என்பதை ஒதுக்கிவைத்துவிட்டு தங்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவீர்கள்.''

இவ்வாறு ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சசிகலா சிறைக்குச் செல்லும்போது தனக்கு அடுத்த நிலையில் தினகரனை நியமித்தார். அதற்கேற்ப ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தினகரன் தனது அரசியல் திறமையை நிரூபித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான தினகரன், அமமுக என்ற கட்சியைத் தொடங்கினார். பி.வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் உள்ளனர்.

ஆனாலும், சசிகலா குடும்பத்தில் திவாகரன் உள்ளிட்டோருக்கும் தினகரனுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு தினகரனின் கை ஓங்கியதால் திவாகரனால் கட்சியில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. தனது கணவர் ம.நடராஜன் இறந்தபோது 15 நாட்கள் பரோலில் வந்த சசிகலா, தினகரன் - திவாகரன் இடையே சமாதானம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

அரசியலில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில் குடும்பத்துக்குள் மோதல் என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, எதிர்காலம் கருதி அமைதியாக இருக்குமாறு சசிகலா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் மோதல் ஓய்ந்த பாடில்லை.

இந்நிலையில் எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவகாரன் பயன்படுத்தக்கூடாது என்று சசிகலா தரப்பிடமிருந்து திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. சிறுமி பலாத்கார வழக்கு: பாஜக எம்எல்ஏ செங்கார் மீதான குற்றச்சாட்டு உறுதி

Published : 11 May 2018 21:03 IST

புதுடெல்லி



உன்னாவ், சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜகவின் குல்தீப் சிங் செங்கார். - படம். | ராஜீவ் பட்.

உத்தரபிரதேசத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீதான குற்றச்சாட்டினை சிபிஐ உறுதி செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தன்னை பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏவான குல்தீப் சிங் செங்கார், பலாத்காரம் செய்ததாகவும் மிரட்டுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தகவலறிந்த எம்எல்ஏ குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள், புகாரை திரும்பப் பெறக் கோரி, சிறுமியின் தந்தை பப்பு சிங்கை கடுமையாக தாக்கினர்.

ஆனால், அங்கு வந்த போலீஸார், தாக்குதலில் படுகாயமடைந்த பப்பு சிங்கை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே சிறைக்குள் பப்பு சிங் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எம்எல்ஏ குல்தீப் சிங், அவரது உதவியாளர் சாஷி சிங் உள்ளிட்டோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், எம்எல்ஏ குல்தீப் சிங் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ உறுதி செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சிபிஐ உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

எம்எல்ஏ குல்தீப் சிங் மீது சிறுமி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கில் குல்தீப் சிங்கை காப்பாற்றுவதற்காக போலீஸார் பல முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான சிறுமியின் வாக்குமூலத்தை நீதிபதியின் முன்னிலையில் சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த பலாத்கார வழக்கைப் பயன்படுத்தி சிபிஐ அதிகாரிகள் போல நடித்து, குல்தீப் சிங்கின் மனைவியிடம் ரூ.1 கோடி பணம் பறிக்க முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
பணி விடுவிப்பு ஊழியருக்கு இலவச பாஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : மே 12, 2018 06:24

மதுரை : நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் நாகேந்திர பிள்ளை என்பவர் பணிபுரிந்தார். மருத்துவக் காரணங்கள் அடிப்படையில் 2015 ல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஓய்வு பெற்றவர்கள்,விருப்ப ஓய்வு பெற்றவர்களைப்போல் தனக்கும், மனைவிக்கும் இலவச பஸ் பாஸிற்குரியஅடையாள அட்டைவழங்க வேண்டும் என போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார்.நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நாகேந்திர பிள்ளை மனு செய்தார்.
நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவு: மனுதாரர் 2016ல் அளித்த மனுவைதிருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் தகுதி அடிப்படையில் பரிசீலித்து, சட்டத்திற்குட்பட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
லாலுவுக்கு 6 வாரம் ஜாமின் : ஜார்க்கண்ட் ஐகோர்ட் உத்தரவு

Added : மே 12, 2018 00:52

ராஞ்சி: ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவுக்கு, மருத்துவ காரணங்களுக்காக, ஆறு வாரத்துக்கு மட்டும், தற்காலிக ஜாமின் வழங்கி, ஐார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு தாக்கல் : ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கால்நடை தீவன ஊழல் வழக்குகளில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத், ஜார்க்கண்ட் தலைநகர், ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.லாலுவின் மூத்த மகன், தேஜ் பிரதாபுக்கு, பீஹார் தலைநகர் பாட்னாவில், இன்று திருமணம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, 10 நாள், 'பரோல்' வழங்கும்படி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில், லாலு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று நாட்கள் மட்டும் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதைஅடுத்து, சிறையிலிருந்து வெளியே வந்த லாலு, பாட்னாவில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றார்.இந்நிலையில், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில், லாலு சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், அபிஷேக் சிங்வி, பிரபாத் குமார் ஆகியோர், நேற்று காலை தாக்கல் செய்த மனுவில், 'லாலு பிரசாத், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். 'அவர் மருத்துவ சிகிச்சை பெற, 12 வாரம் ஜாமின் வழங்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

ஆறு வாரம் : இதை விசாரித்த உயர் நீதிமன்றம், லாலுவுக்கு ஆறு வாரம், தற்காலிக ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும், 'மூன்று நாள் பரோல் முடிந்த பின், சிறைக்கு லாலு திரும்ப வேண்டும். அதன்பின், இந்த ஆறு வார ஜாமின் உத்தரவை காட்டி, சிறையிலிருந்து வெளியே வர வேண்டும். 'ஜாமின் காலத்தில், எந்த அரசியல் நிகழ்ச்சிகளிலும், லாலு பங்கேற்க கூடாது' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Added : மே 12, 2018 00:50

புதுடில்லி: நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரபல நடிகை, ஸ்ரீதேவி, 54; தமிழில், மூன்றாம் பிறை, வறுமையின் நிறம் சிகப்பு உட்பட பல படங்களில் நடித்தவர்.

சந்தேகம் : பிப்ரவரியில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு சென்றிருந்தார். அங்கு ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவர், குளியல் அறையில் இறந்து கிடந்தார். 'மாரடைப்பால் அவர் இறந்தார்' என, முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், 'மது அருந்தியதால், ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் விழுந்து, ஸ்ரீதேவி இறந்துள்ளார்' என, கூறப்பட்டிருந்தது.நீண்ட விசாரணைக்கு பின், ஸ்ரீதேவியின் இறப்பில் சந்தேகம் இல்லை எனக் கூறி, அவரது உடலை, குடும்பத்தினரிடம்,, துபாய் போலீசார் ஒப்படைத்தனர். இந்நிலையில், ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, இயக்குனர் சுனில் சிங் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்தார்.

இன்சூரன்ஸ் : இந்த மனு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறுகையில், ''ஸ்ரீதேவி பெயரில், 240 கோடி ரூபாய்க்கு, ஓமனில் இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது. ''ஐக்கிய அரபு எமிரேட்சில், அவர் இறந்தால் மட்டுமே, அந்த பாலிசி தொகை கிடைக்கும்; இந்த நிலையில், துபாயில் அவர் திடீரென இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்,'' என்றார். ஆனால், 'துபாய் போலீசார் நடத்திய விசாரணையில், சந்தேகப்படுவதற்கு ஏதும் இல்லை' என கூறி, மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

பெரம்பலூர் அருகே விபத்து : காஞ்சியை சேர்ந்த 9 பேர் பலி

Updated : மே 12, 2018 00:19 | Added : மே 12, 2018 00:18



காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்திலிருந்து, கேரளாவுக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர் பயணித்த கார், பெரம்பலுார் அருகே விபத்துக்குள்ளாகி, ஒன்பது பேர் இறந்த சம்பவம், இப்பகுதியில் பயங்கர சோகத்தை ஏற்படுத்திஉள்ளது. காஞ்சிபுரத்தின் திருமால் நகர், அஸ்தகிரி தெரு, அமுதபடி தெரு, அம்மங்கார தெரு போன்ற பகுதியில் வசிப்போர், இந்த சம்பவத்தால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சின்ன காஞ்சிபுரம், திருமலை நகரைச் சேர்ந்தவர், எஸ்.ஆர்.மோகன்; பட்டு சேலை உற்பத்தியாளர். இவர் மனைவி லஷ்மி, 28. இந்த தம்பதிக்கு, பவித்ரா, 14; நவிதா, 8, மற்றும் வரதராஜன், 5, என, மூன்று பிள்ளைகள். குடும்பத்துடன் நிம்மதியாக வசித்து வந்த மோகன், கேரளாவிற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். தன் குடும்பத்துடன், அக்கா கணவர் முரளி, மற்றொரு அக்காவின் மகள் சோபனா, 19, ஆகியோரை அழைத்துக்கொண்டு, நேற்று முன்தினம் மாலை புறப்பட்டனர். காஞ்சிபுரத்திலிருந்து, 'டவேரா'காரில் புறப்பட்ட இந்த ஏழு பேருடன், அம்மங்கார தெருவைச் சேர்ந்த பூபதி மற்றும் நாராயணன் என்ற பிரபாகரன் ஆகிய இரு ஓட்டுனர்களும் சென்றனர். நேற்று முன்தினம் இரவு, திருச்சி நோக்கி இவர்களின் கார் சென்று கொண்டிருந்தது. பெரம்பலுார் நான்கு வழிச்சாலையில், எதிரே வந்த காரின் டயர் வெடித்து, அந்த கார் பறந்து வந்து, மோகன் சென்ற கார் மீது விழுந்துள்ளது.இதில், படுகாயம் அடைந்த மோகன் உள்ளிட்ட ஒன்பது பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்து குறித்து, தகவல் தெரிந்தவுடன், காஞ்சிபுரத்தில் உள்ள மோகனின் உறவினர்கள் பெரம்பலுார் புறப்பட்டு சென்று, பிரேத பரிசோதனைக்கு பின், அவர்களின் உடலைபெற்றுள்ளனர். தகவலறிந்தவர்கள் மோகனின் வீட்டில் குழுமியுள்ளனர். மோகன் குடும்பத்தினர் வசித்த, திருமலை நகர் பகுதிவாசிகள், இந்த தகவலை கேட்டு, சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுபோல், சோபனா, முரளியின் அஸ்தகிரி தெருஎன சின்ன காஞ்சிபுரம் பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும், பூபதி மற்றும் நாராயணன் ஆகிய கார் ஓட்டுனர்களின் வீடுகளும் களையிழந்து காணப்பட்டன.

ஒன்பது பேரின் உடல்களுக்கும், இன்று இறுதி சடங்கு நடைபெறும் என, உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். \பத்தாண்டுகளாக சிரமப்பட்டு, கைத்தறி தொழிலில் உயர்ந்து வந்தார். இப்படி ஒரு விபத்து நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. என் மாமா அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர். இறந்தவர்களின் உடல்களை கைப்பற்ற, உறவினர்கள் பெரம்பலுார் சென்றுள்ளனர். சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்.
பி.பாலாஜி, மோகனின் மைத்துனர்

உறவினர் சுற்றுலா செல்வதால், சோபனாவும் புறப்பட்டு சென்றாள். ஆனால், அவள் இப்படி திரும்பி வருவாள் என, எதிர்பார்க்கவில்லை. கல்லுாரியில் நன்றாக படிப்பார். பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார். எங்கள் குடும்பமே இதனால், சோகத்தில் ஆழ்ந்துள்ளோம். இதுபோன்ற துயரம் யாருக்கும் ஏற்படக் கூடாது.

ஜி.ஆர்.கீதா, சோபனாவின் சகோதரி

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...