Friday, May 18, 2018

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா; விரைவில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என உறுதி: காங்கிரஸ், மஜத கட்சிகள் கடும் எதிர்ப்பு

Published : 18 May 2018 07:03 IST


இரா.வினோத் பெங்களூரு





பெங்களூரு ராஜ்பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். - படம்: வி.ஸ்ரீனிவாசமூர்த்தி

காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். விரைவில் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) 38, மற்றவை 2 ஆகிய‌ இடங்களைப் பெற்றன. எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 112 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில், மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து, மஜத மாநில தலைவர் குமார சாமி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து, மஜத, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் 2 சுயேச்சைகள் உட்பட 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனிடையே பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பா, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் அளித்தார். இந்நிலையில், ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஆட்சி அமைக்க வருமாறு எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மஜத, காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் நள்ளிரவில் அவசர மனுவை தாக்கல் செய்தன‌. இதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் நள்ளிரவு 1.45 மணிக்கு கூடியது. நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.பாப்தே ஆகியோர் முன்னிலையில் நடந்த விசாரணையில் மஜத, காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும் பாஜக சார்பில் முகுல் ரோஹத்கியும் வாதிட்டனர்.

அதிகாலை காலை 5 மணி வரை 3 மணி நேரமாக இரு தரப்புக்கும் இடையே காரசார வாதம் நடந்தது. இறுதியில் எடியூரப்பாவின் பதவி ஏற்பு விழாவுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் எடியூரப்பா ஆளுநரிடம் அளித்துள்ள எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தின் நகலை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

இதையடுத்து நேற்று காலை 9 மணி அளவில் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா தனது தொண்டர்களுடன் பெங்களூருவில் உள்ள ராஜ்பவனுக்கு வந்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் அனந்த் குமார், சதானந்த கவுடா, பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான், ஆதரவாளர் ஷோபா கரந்தலாஜே உள்ளிட்டோரும் வந்தனர். அங்கு மிக எளிமையாக நடந்த நிகழ்ச்சியில் கர்நாடகாவின் 23-வது முதல்வராக எடியூரப்பா கடவுளின் பெயராலும் விவசாயிகளின் பெயராலும் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளு நர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது ஆளுநர் மாளிகைக்கு முன்பு தர்ணாவில் ஈடுபட காங்கிரஸ், மஜத தலைவர்கள் முயன்றனர். போலீஸார் அனுமதி மறுத்ததால் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா, குமாரசாமி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் ஆளுநரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

விவசாய கடன் தள்ளுபடி

முதல்வராக பதவியேற்ற பிறகு எடியூரப்பா கூறும்போது, “தேசிய வங்கிகளில் பெறப்பட்ட ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டுள்ளேன். இதன்மூலம் அரசுக்கு ரூ.56 ஆயிரம் கோடி சுமை ஏற்படும்.

ஆளுநர் அளித்துள்ள 15 நாட்கள் கால அவகாசத்துக்கு முன்பாகவே சட்டப்பேரவையை கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவேன். அதில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன். அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்வேன். காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 24 பேர் வரை எனக்கு ஆதரவு தர தயாராக இருக்கிறார்கள். எனவே அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிப்பேன். காங்கிரஸ், மஜத பாவக் கூட்டணி. மக்களால் நிராகரிக்கப்பட்ட அவர்கள் அதிகாரத்தை கைப்பற்ற‌ அலைகிறார்கள்” என்றார்.

கோவா, மேகாலயா, மணிப்பூரில்

இதனிடையே, கர்நாடகாவைப் பின்பற்றி கோவா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தங்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கி உள்ளது. இதே கோரிக்கையை பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளமும் முன்வைத்துள்ளது.

போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் ரூ.8 கோடி நஷ்டம் 

dinamalar 18.05.2018

சென்னை: தமிழக அரசு, டீசல் மானியத்தை ரத்து செய்ததால், தினமும், எட்டு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்கள் தள்ளாடுகின்றன.



ஊழியர்கள் ஊதிய உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால், அரசு போக்குவரத்து கழகங்கள் திண்டாடின. இதற்கு தீர்வு காண, இந்தாண்டு ஜனவரியில், பஸ் கட்டணத்தை, 60 சதவீதம் வரை, தமிழக அரசு உயர்த்தியது.தினமும், இரண்டு கோடி பேர் பயணம் செய்த நிலையில், தற்போது, 30 லட்சம் பேர், பஸ் பயணத்தை தவிர்த்துள்ளனர். பஸ் கட்டண உயர்வால், பெரிதாக வருவாய் உயர்வு ஏற்படவில்லை; 10 சதவீதமே வசூல் கூடியுள்ளது.

எதிர்பார்த்த வருவாய் இல்லாததோடு, பஸ் கட்டணத்தை உயர்த்தியதால், 2011 முதல் வழங்கி வந்த டீசல் மானியத்தை, தமிழக அரசு ரத்து செய்து உள்ளது.

இதனால், அரசு போக்கு வரத்து கழகங்கள் தள்ளாடி வருகின்றன. போக்கு வரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசு போக்கு வரத்து கழகத்தில், ஒவ்வொரு நாளும், 30 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. ஐந்து மாதங்களில் டீசல் விலை,லிட்டருக்கு, 15 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது.

செலவு அதிகரித்து வரும் நிலையில், டீசல் மானியத்தை அரசு ரத்து செய்ததால், தினமும், எட்டு கோடி ரூபாய் வரை, நஷ்டம் ஏற்படுகிறது. டீசல் மானியத்தை அரசு மீண்டும் தர வேண்டும்; இல்லாவிட்டால், அரசு போக்குவரத்து கழகங்கள், பஸ்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பஸ் ஊழியர்களுக்கு நிலுவை ரூ.7,000 கோடியாக உயர்வு

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை, மீண்டும், 7,000 கோடி ரூபாயை எட்டிஉள்ளதால், தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடைக்காக, குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அவற்றை, உரிய வங்கிக்

கணக்கில் செலுத்தாமல், மற்ற நிர்வாக செலவுகளுக்கு செலவிடப்படுகிறது.

இந்த வகையில், 7,000 கோடி ரூபாய் நிலுவை இருந்ததால், அவற்றை அரசு வழங்கக் கோரி, தொழிற்சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து,ரூ. 2,054 கோடி தமிழக அரசு வழங்கியது. அதனால், நிலுவை தொகை, 5,000 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது. தற்போது, நிலுவைத் தொகை, மீண்டும் பழைய நிலையான, ரூ.7,000 கோடி எட்டியுள்ளது.

இதுகுறித்து, தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்பட்ட நிலுவைத் தொகையை, உரிய கணக்கு களில் செலுத்த வேண்டும்; இல்லையேல், மீண்டும் போராட்டம் நடத்துவோம்' என்றனர்.
அவசர சிகிச்சை ஊக்க மதிப்பெண் இல்லை: ஐகோர்ட் உத்தரவு

Added : மே 17, 2018 23:04

சென்னை, அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு, முதுநிலை படிப்புக்கான ஊக்க மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மருத்துவ முதுநிலை படிப்புக்கான சேர்க்கையின் போது, தொலைதுாரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதியில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, 10 முதல், 30 சதவீதம் வரை, ஊக்க மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது.இதில், தொலைதுாரம், செல்ல முடியாத பகுதி, கடினமான பகுதி எது என்பதை வரையறை செய்து, மார்ச், 23ல், தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.இதில், உண்மையிலேயே தொலைதுாரப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு, பலன் கிடைக்கவில்லை எனக் கூறி, அரசு மருத்துவர்கள் பிரவீன், மகேஷ், ரமேஷ்குமார் உட்பட சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.விசாரித்த தனி நீதிபதி, தமிழக அரசு பிறப்பித்த ஆணையை, ரத்து செய்து உத்தரவிட்டார்.தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், அரசு வழக்கறிஞர் ராஜகோபாலன் ஆஜராகினர். மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தொலைதுார பகுதிகள் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் பணியாற்றும், அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை படிப்பில் சேர்வதற்கான ஊக்க மதிப்பெண் வழங்கும் விதிகள் செல்லும்.மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைப் பிரிவுகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள், இந்த ஊக்க மதிப்பெண்களை பெற முடியாது. இந்த சலுகை, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உள்ளது.இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையில், குறிப்பிட்ட இந்தப் பகுதியை மட்டும் ரத்து செய்கிறோம்.எதிர்காலத்தில், இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, ஊக்க மதிப்பெண் வழங்கும் பகுதிகளை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோடைக்கால சுற்றுலா திட்டம்

Added : மே 17, 2018 22:42

சென்னை, தமிழக சுற்றுலாத்துறை சார்பில், கோடை கால, மூன்று நாள் சுற்றுலா திட்டத்தை அறிவிக்கப்பட்டு உள்ளது.கோடைக்காலத்தில், பொதுமக்கள் குடும்பத்துடன் பாதுகாப்பான சுற்றுலா மேற்கொள்ளும் வகையில், சுற்றுலாத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டுகள், கோடைகால சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது.அவ்வகையில் தென்மாநிலங்களில் உள்ள, பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு, ஒவ்வொரு வெள்ளி இரவும் புறப்பட்டு, திங்கள் காலை, சென்னை திரும்பும் வகையில், மூன்று நாள் சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது.அதன் படி, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகனேக்கல், குற்றாலம், மைசூர், பெங்களூரு, மூனார் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு, பயணியர் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.சுற்றுலா பயணியர் வசதிக்காக, சாதாரண, குளிர்சாதன பேருந்துக்கள், தங்கும் அறைகள் உள்ளன. சுற்றுலா இடத்திற்கு ஏற்ப, 3,900 ரூபாய் முதல் 5,800 வரை வசூலிக்கப்படுகிறது. சிறார்களுக்கு கட்டணத்தில் சலுகை உள்ளது.மேலும் தகவல்களுக்கு, 044--2533 3333, 044--2533 3444 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பிளஸ் 2வில், 1,200க்கு, 'குட்பை'; வரும் ஆண்டில் 600, 'மார்க்' தான்

Updated : மே 18, 2018 01:28 | Added : மே 17, 2018 21:57 |




  பிளஸ் 2வில், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல், 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. இதில், 8.60 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்று, 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். வரும், 21ம் தேதி முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு அறிமுகமாகி, 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, ஆறு பாடங்களுக்கு, தலா, 200 மதிப்பெண் என, மொத்தம், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.தற்போது, நுழைவு தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டு உள்ளதால், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வுஅறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண் வழங்கப் படும் முறை, 100 மதிப்பெண்ணாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை, நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகமாகி உள்ளது.இதன்படி, பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், 600 மதிப்பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த, 600 மதிப்பெண் முறை, வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2க்கும் அறிமுகம் ஆகிறது. எனவே, இந்த ஆண்டுடன், 1,200 மதிப்பெண் முறை முடிவுக்கு வந்துள்ளது.
மேலும், பிளஸ் 2க்கு மட்டும், தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையும் முடிவுக்கு வருகிறது. வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு ஒரு சான்றிதழ், பிளஸ் 2க்கு ஒரு சான்றிதழ் வழங்கப்படும். இறுதியாக, இரண்டு வகுப்புகளுக்கும் ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
- நமது நிருபர் -
'கூரியர்' பணியில், 'டப்பாவாலா'க்கள்?

Added : மே 17, 2018 22:14



மும்பை, மும்பையில், 'கூரியர்' பணிகளில், 'டப்பாவாலா'க்கள் ஈடுபட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநில தலைநகர், மும்பையில், தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு, அவர்களின் வீடுகளில் இருந்து, மதிய உணவை வினியோகம் செய்யும் பணியில், டப்பாவாலாக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கூரியர் மற்றும் பொருட்களை வினியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட, டப்பாவாலாக்கள் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து, டப்பாவாலாக்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:பொருட்களை வினியோகம் செய்வதன் மூலம், எங்களது வருமானம் அதிகரிக்கும். உணவு வினியோகம் போக, நேரம் கிடைக்கும் போது, இந்த பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.இது குறித்து, எங்கள் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, 15 நாட்களில், அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளோம். கூரியர் மற்றும் பொருட்களை வினியோகம் செய்யும் பணியை, சோதனை முறையில் அமல்படுத்தி உள்ளோம். இது குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, ஏற்கனவே, 'இ - காமர்ஸ்' நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
விமானம் தாமதம்; ரூ.57 கோடி அபராதம்?

Added : மே 18, 2018 02:07 



  புதுடில்லி: விமானம் தாமதமாக சென்றதால், 'ஏர் - இந்தியா' விமான நிறுவனம், பயணியருக்கு, 57 கோடி ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் - இந்தியா நிறுவனத்தின் விமானம், மே, 9ல், 323 பயணியருடன், தலைநகர் டில்லியிலிருந்து, அமெரிக்காவின், சிகாகோவுக்கு சென்றது. மோசமான வானிலை காரணமாக, விமானம் தாமதமாக சென்றது.

மேலும், அமெரிக்காவின் மில்வாக்கியில் தரையிறங்கியது. அங்கிருந்து சிகாகோவுக்கு செல்ல, 19 நிமிடங்கள் ஆகும். ஆனால், அங்கிருந்து தாமதமாக சென்றது. விமானத்தில், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் நீண்ட நேரம் காத்திருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், அமெரிக்க சட்டப்படி, சர்வதேச விமானங்களில், நான்கு மணி நேரத்திற்கும் மேல் பயணியர் காத்திருந்தால், அதற்கு, சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், பயணியருக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்பது விதி. இதன்படி, டில்லி - சிகாகோ விமானத்தில் பயணம் செய்த, 323 பயணியருக்கு, 57 கோடி ரூபாய், ஏர் - இந்தியா அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.

NEWS TODAY 25.07.2026