Wednesday, August 8, 2018

ஜெயலலிதாவிடம் பிடித்த விஷயம்















ஆட்சிச் சக்கரம் இல்லாவிட்டாலும், அரசியல் சக்கரத்தை எப்போதும் தன் கையில் வைத்திருப்பவர் தி.மு.க தலைவர் கருணாநிதி. தன்னைச் சுற்றியே தமிழ்நாட்டு அரசியல் சுழல வேண்டும் என்பதில், எப்போதும் கவனமாக இருப்பவர். அதைக் கைப்பற்றியும் வைத்திருப்பவர். வயது முதிர்வால் அவரது மேடை முழக்கங்கள் குறைந்துவிட்டன. ஆனாலும், தனது எண்ணங்களை எழுத்துக் கர்ஜனைகளால் கொண்டு செலுத்துவதில் 95 வயதைத் தாண்டியும் சலிக்காமல் இருந்தவர். அவர் கடைசியாக ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டி.



'நினைத்ததை முடித்துவிட்டுத்தான் கண்ணை மூடுவேன்' என, தி.மு.க முப்பெரும் விழாவில் திடீரெனப் பேசினீர்களே... எதனால் இந்த வேகமும் கோபமும்?”''உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னது அல்ல; உள்ளத்தால் சொன்னது அந்தச் சொற்கள். 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்பார்களே, அதைப் போன்றது இந்த மாபெரும் இயக்கம். திராவிட இயக்கம் தொடங்கப்பட்டு, 100 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 100 ஆண்டுகளில் எத்தனையோ லட்சியங்களை நிறைவேற்றி இருக்கிறோம். தமிழ் இன, மொழி, நாட்டு முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் ஆற்றிட வேண்டிய பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்திட வேண்டும். அவற்றை வரையறை செய்து, பாதை மாறாமல் பயணம் தடை ஏதும் இன்றி நடைபெறவும், இந்த இயக்கத்தை எதிர்காலங்களுக்கு எடுத்துச் செல்லவும், தேவையானவற்றை வகுத்துத் தொகுத்திட வேண்டும் என்ற சிந்தனையில் சொல்லப் பட்ட கருத்து அது; உண்மையான ஈடுபாட்டுடன் சொல்லப்பட்ட எண்ணம் அது.”

''எந்த நோக்கத்துக்காக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களோ, அது நிறைவேறிவிட்டதா?”

''பெரும் அளவுக்கு நிறைவேறியுள்ளது. நிறைவேறியது அனைத்தும் முழுமையான அளவுக்கு மனநிறைவைத் தந்துவிட்டது என என்னால் சொல்ல முடியவில்லை. இன்னும் நிறைவேறவேண்டியவை நிறைய உள்ளன. அந்த நோக்கங்களையும் நிறைவேற்றிடத்தான் நான் இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.”

''ஒருகாலத்தில் நீங்கள் பேசிய பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகள், தி.மு.க தொண்டர்களிடம் இன்று குறைந்துவிட்டதா?”

''பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொடக்ககாலத் தொண்டர்களும், அவர்களின் நேரடித் தலைமுறையினரும் எந்தவித சமரசமும் இன்றி அவற்றைப் பின்பற்றிவருகின்றனர். தி.மு.கழகம், இன்றைக்கு சமுத்திரம்போல் பெருகிவிட்டது. கடலில் பல்வேறு நதிகளும் ஓடிவந்து கலந்துவிடுவதைப்போல, பல்வேறு திசைகளில் இருந்தும் தோழர்கள் கழகத்தில் ஐக்கியமாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் புதியவர்களில் ஒருசிலர் இந்த இயக்கத்தின் மூலக்கொள்கைகளைப் புரிந்துகொள்ள சில காலம் ஆகலாம். அதை வைத்து, கொள்கை குறைந்து விட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.”

''உங்கள் ஆட்சிக் காலத்தின்போது 'தீர்க்க முடியாமல் போய்விட்டதே!' என எந்த விஷயத்தை நினைத்து இப்போதும் வேதனைப்படுகிறீர்கள்?”
''காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைதான் இன்றளவும் என்னை வேதனைப்படுத்துகிறது. அறிஞர் அண்ணா முதலமைச்சராகவும், நான் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் இருந்தும், பின்னர் நானே முதலமைச்சர் ஆன பிறகும், தொடர்ந்து பலமுறை கர்நாடக அரசோடும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும், பலமுறை கடிதங்கள் அனுப்பியும்,

நீதிமன்றங்களுக்குச் சென்றும் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மூலம் காவிரி நடுவர் மன்றம் அமைத்தும், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தும்கூட, இதுவரை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு முழுமையாக நிறைவேற்றப்படாமல் காவிரிப் பிரச்னை முடிவு இல்லாமல் நீடித்துக்கொண்டே இருப்பது எனக்கு வேதனையைத் தந்துகொண்டிருக்கிறது.”

''நாகரிகச் சூழலும் மக்களின் மனநிலையும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய சூழலில் தி.மு.க-வின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?”
''யாருக்கும் சந்தேகம் வேண்டாம், தி.மு.க-வின் அரசியல் எதிர்காலம் ஒளி நிறைந்ததாகவும், ஊக்கமூட்டுவதாகவும் எப்போதும் இருக்கும்.”

'ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்' என்ற பேச்சும் எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளதே. உங்கள் அரசியல் வாரிசு யார்?”

''ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, தி.மு.க-வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார்.”

''தி.மு.க-வை வழிநடத்த, ஒரு தலைமைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?”

தலைவன்-தொண்டன் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, அண்ணன்-தம்பி என்ற பாசப்பிணைப்பு, கட்சித் தோழர்களின் பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் அக்கறை, கட்சித்தோழர் எவரிடமும் பகை-வெறுப்பு பாராட்டாத பண்பு, எல்லோரும் பின்பற்றும் லட்சிய மாதிரியாகத் திகழுதல், பகுத்தறிவு - சுயமரியாதை, இனஉணர்வு காத்திடும் போர்க்குணம், அரசியல் நிகழ்வுகளின் போக்கை முன்கூட்டியே தீர்மானிக்கும் பார்வை, சமரசம் இல்லாத கொள்கைப்பிடிப்பு போன்றவையே தலைமைக்கான தகுதிகள்.”

'கருணாநிதி குடும்ப அரசியல் செய்பவர்!' என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்!”

''நான், பல லட்சம் குடும்பங்கள் இணைந்து ஒற்றுமை உணர்வோடு ஈடுபட்டிருக்கும் ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைவரே அன்றி, உங்கள் கேள்வியில் சுட்டிக்காட்டி இருப்பதைப்போல, ஒரு குடும்பத்துக்குள் அரசியல் செய்பவன் அல்ல. என்னை குடும்ப அரசியல் செய்பவன் என்று, இன்றைய 'ஆனந்த விகடன்' வேண்டுமானால் கருதலாம். ஆனால், வாசன் காலத்து ஆனந்த விகடனோ, பாலசுப்ரமணியன் காலத்து ஆனந்த விகடனோ நிச்சயமாகக் கருதாது என்பதை நான் நன்றாகவே அறிவேன்.”

நீங்கள் எதிர்த்து அரசியல் செய்த தலைவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

எவரையும் எதிர்த்தோ, எதிர்ப்பதற்காகவோ நான் அரசியல் நடத்தியது இல்லை. நான் கொண்ட கொள்கைகளை பெரியார் - அண்ணா வழி நின்று வளர்த்தெடுத்து, நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் என்னுடைய அரசியல் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது.”

ஜெயலலிதா உங்களுக்கு எத்தகைய அளவில் சவாலாக இருக்கிறார்?
நான் இதுவரை யாரையும் எனக்குச் சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டது இல்லை.”

முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நிலை குணமாகவேண்டி முதலில் நீங்கள்தான் அறிக்கை வெளியிட்டு வாழ்த்தினீர்களே!
அருமை நண்பர் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது,

 'நானும் பிரார்த்திக்கிறேன்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரையே எழுதியிருந்தேன். அதே உணர்வோடுதான் இப்போதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பரபரப்பாகச் செய்தி வந்தவுடனேயே, அவர் விரைவில் முழுமையான உடல் நலம் பெற்று, பணிக்குத் திரும்பிட வேண்டும் என வாழ்த்தி, அப்போதே அறிக்கை வெளியிட்டிருந்தேன். இப்போதும் வாழ்த்துகிறேன்.”

ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள்?

பிடித்த விஷயம் நடனம், நடிப்பு. பிடிக்காத விஷயம் காழ்ப்புஉணர்ச்சி அரசியல்.”

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அவரை 'மிஸ்' பண்ணிவிட்டோம் என என்றாவது நினைத்தது உண்டா?

எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரையில், அவர் தொடக்கத்தில் என்னுடன் பழகிய காலத்தில் இருந்த இனிய நினைவுகள்தான் எனது உள்ளத்தில் மேலோங்கி இருக்கின்றனவே தவிர, கட்சியைவிட்டுப் பிரிந்த பிறகு நடைபெற்ற சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், அவர் மறைவுக்குப் பிறகு அவரை 'மிஸ்' பண்ணிவிட்டோம் என நான் பலமுறை நினைத்திருக்கிறேன்.”

இத்தனை வருட அரசியல் வாழ்க்கை, உங்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன?
என்னால் பயன்பெற்றவர்கள், கைதூக்கிவிடப்பட்டவர்கள் எப்போதும் என்னிடம் நன்றி உணர்வோடு நடந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும்; ஒருவருக்கு நாம் செய்யும் உதவியை நமக்குக் கிட்டிய நல்வாய்ப்பாகக் கருதி செய்து முடித்ததும் அதை மறந்துவிட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்திருக்கிறது.”

அரசியலில், பொதுவாழ்வில் வெற்றிபெற நினைப்பவர்கள் செய்யக் கூடாத தவறுகள் எவை?”

காழ்ப்புஉணர்ச்சி கூடாது; யாரிடமும் வெறுப்பு - விரோதம் கூடாது; சோம்பி இருக்கக் கூடாது; சுறுசுறுப்போடு உழைப்பு; அரசியல் நிகழ்வு எதையும் அலட்சியம் செய்யக் கூடாது; காரியம் ஆற்றுவதிலும், கருத்துரைப்பதிலும் தாமதம் கூடாது. இப்படிப்பட்டவர்களால்தான் பொதுவாழ்வில் வெற்றிபெற முடியும்.”

உங்களது ஒருநாள், எப்படிக் கழிகிறது?

''காலை எழுந்தவுடன் காபி குடித்துவிட்டு, அனைத்து நாளேடுகளையும் படிப்பேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு, உடன்பிறப்பு மடல், கேள்வி-பதில், அறிக்கைகள் போன்றவற்றை உதவியாளர்களிடம் 'டிக்டேட்' செய்வேன். பின்னர் அமர்ந்தால், கட்சிப் பிரச்னைகள்தான். கழகத்தின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள தம்பிமார்களுடன், மதியம் சாப்பிடப்போகும் நேரம் வரை கலந்துபேசி முடிவுகளைக் காண்பேன். மதியம் ஒரு மணி நேரம் குட்டித் தூக்கம். மாலையில் வீட்டிலோ, அண்ணா அறிவாலயத்திலோ அமர்ந்து, கழகத்தினருடன் உரையாடுவேன். நிகழ்ச்சிகள் இருக்கும் நாளில் அவற்றில் கலந்துகொள்வேன். திருமண வரவேற்பு நிகழ்ச்சி களுக்குச் செல்வேன். நேரம் கிடைக்கும்போது 'டி.வி.' பார்ப்பேன்.”

நீங்கள் தி.மு.க தலைவராகி அரை நூற்றாண்டு நெருங்க இருக்கிறது. இதை எப்படி உணர்கிறீர்கள்?

நான் கழகத்தின் தலைவராகி, 47 ஆண்டுகள் நிறைவடைந்து 48-வது ஆண்டு நடைபெறுகிறது. இந்த 48 ஆண்டுகளில் எத்தனையோ உயர்வு-தாழ்வுகள், மேடு-பள்ளங்கள், வேதனை- சோதனை-சாதனைகள், இழிமொழிகள், பழிச்சொற்கள், புகழ்ச்சிப் பாராட்டுக்கள் என அனைத்தையும் பார்த்துவிட்டேன். ஆனாலும் சின்னஞ்சிறு வயதில், தமிழ்க் கொடி தாங்கி, எத்தகைய எழுச்சி உணர்வுகளோடு பொதுவாழ்வில் கால் பதித்தேனோ, அதே உணர்வுகள்தான் இன்றைக்கும் எனது இதயத்தில் நிரம்பி வழிகின்றன. பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கிய 'திராவிட முன்னேற்றக் கழகம்' எனும் ஆலமரத்துக்காக, 48 ஆண்டுகள் இரவு-பகல் பாராமல் உழைத்திருக்கிறோம் என்ற பெருமித உணர்வும் எனக்கு ஏற்படுகிறது.

பள்ளி, கல்லூரிக்கு விடுமுறைதமிழக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம்

dinamalar 08.08.2018

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி, இன்று ஒரு நாள், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கவும், தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடவும், அரசு விழாக்களை ரத்து செய்யவும், முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.




இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் பழனிசாமியை, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அழகிரி, டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் பெரியசாமி, 'முரசொலி' செல்வம் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது, முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான கருணாநிதியின் உடல்நிலையில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என, டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, ராஜாஜி ஹாலை, மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஒதுக்க வேண்டும்.

காமராஜர் சாலையில் உள்ள, அண்ணா சதுக்கத்தில், அவரை நல்லடக்கம் செய்ய, இடம் ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலனை செய்த முதல்வர், சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவற்றின் விபரம்:

* மிக முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும், கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த, சென்னை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, ராஜாஜி ஹால் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்

* இறுதி சடங்கு நடைபெறும் இன்று, ஒரு நாள், விடுமுறை அளிக்கப்படும். பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* கருணாநிதி உடலை, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும், அத்தருணத்தில், தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடவும், அவர் மீது தேசியக் கொடி போர்த்தி, ராணுவ மரியாதையுடன், குண்டு முழங்க மரியாதை வழங்கவும், நடவடிக்கை எடுக்கப் படும்

* தமிழக அரசு சார்பில், ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அந்த காலகட்டத்தில், தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு சார்ந்த விழாக்கள் ரத்து செய்யப்படும்

* தமிழ்நாடு அரசிதழில் இரங்கல் வெளியிடப்படும். இவ்வாறு தலைமை செயலர் தெரிவித்துள்ளார்.

மெரினாவில் இடமில்லை : தமிழக அரசு கைவிரிப்பு

சென்னையில், நேற்று மதியம், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, 'கருணாநிதியின் உடலை, அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்ய, அனுமதி அளிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர். அதை பரிசீலனை செய்த முதல்வர், 'நீதிமன்ற வழக்கு காரணமாக, அங்கு இடம் ஒதுக்க இயலாது' என, கூறியுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, காமராஜர் சாலையில் உள்ள, மெரினா கடற்கரையில், நல்லடக்கம் செய்வதற்கு தடையாக, பல வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மண்டபம், காமராஜர் நினைவகம் அருகே, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக, இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை, ஒதுக்கீடு செய்ய, அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்
 
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி சிக்கியது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி சிக்கியது
 
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி சிக்கியது. 
 
வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அவற்றை பார்த்து ரசிக்க தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து, செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மைசூரு ஸ்ரீ சாம ராஜேந்திரா உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 2 ஜோடி கோடிட்ட கழுதைப்புலி உள்ளிட்ட சில விலங்குகள் கொண்டுவரப்பட்டன.

மைசூருவில் இருந்து பெறப்பட்ட கோடிட்ட கழுதைப் புலிகளை வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் உள்ள விலங்குகள் மருத்துவமனை அருகே தனியாக ஒரு கூண்டில் அடைத்து வைத்து கழுதைப்புலிகளுக்கு ஏதாவது நோய் தொற்றுகள் உள்ளதா? என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வந்தனர். இந்த கழுதைப்புலிகள் 3 வார மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த 3 வயது உடைய ஆண் கழுதைப்புலி ஒன்று சற்றும் எதிர்பாராத வகையில் கூண்டில் கம்பிகள் இடையே உள்ள வழியை பயன்படுத்தி தப்பி ஓடியது. கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கழுதைப்புலி மாயமாகி இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தப்பிய ஓடிய கழுதைப் புலியை இரவு நேரம் வருவதற்குள் பிடிக்க முயன்றனர். ஆனால் அது நடக்கவில்லை. கழுதைப்புலி தப்பி ஓடிய தகவல் பூங்கா உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் தப்பி ஓடிய கழுதைப்புலியை இரவுக்குள் பிடிப்பதற்காக பூங்காவில் இருள் சூழ்ந்த பகுதியில் மின்விளக்குகளை அமைத்தனர். பின்னர் தப்பி ஓடிய கழுதைப்புலியை பிடிப்பதற்காக 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இரும்பு கூண்டை வைத்து அதில் கழுதைப்புலி சாப்பிடுவதற்காக மாட்டு இறைச்சியை தொங்கவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து பூங்கா முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கழுதைப்புலியின் நடமாட்டம் இருக்கிறதா என்பதை ஊழியர்கள் இரவு முழுவதும் கண்காணித்து வந்தனர். மேலும் கழுதைப்புலியை பூங்கா வளாகத்திற்குள் உள்ள காட்டுப்பகுதியிலும் தேடினர்.

இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் தப்பி ஓடிய கழுதைப்புலி பூங்கா மருத்துவமனை அருகே கூண்டில் வைக்கப்பட்டு இருந்த மாட்டு இறைச்சியை சாப்பிடுவதற்காக வந்தது.

இதைப்பார்த்த பூங்கா ஊழியர்கள் கழுதைப்புலியை லாவகமாக கூண்டிற்குள் அடைத்தனர். கழுதைப்புலியின் உடலில் பல்வேறு இடங்களில் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது. இந்த காயங்களுக்கு பூங்கா மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து தப்பி ஓடி, பின்னர் சிக்கிய கழுதைப்புலியை மட்டும் தனியாக ஒரு இரும்பு கூண்டில் அடைத்து வைத்து பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தப்பி ஓடிய கழுதைப்புலி சிக்கியதால் பூங்கா ஊழியர்களும், அதிகாரிகளும் நிம்மதி அடைந்தனர்.
மாநில செய்திகள்

ராஜாஜி அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது





திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #RIPKarunanidhi

பதிவு: ஆகஸ்ட் 08, 2018 05:55 AM
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

பின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்களும், தொண்டர்களும் அதிக அளவில் திரண்டிருந்தனர். பின்னர் கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனியில் இருந்து ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.












தலையங்கம்

அரசியலில் இமயம் சாய்ந்துவிட்டது




ராஜாஜி, அண்ணா, காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள், ஜெயலலிதா ஆகிய 7 முதல்–அமைச்சர்களுக்கு இரங்கல் அறிக்கைகளை அவர்கள் மறைவுக்குப்பிறகு தன் கைப்பட எழுதிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி, இந்தமுறை தனக்கு அனைவரும் இரங்கல் அறிக்கை வெளியிட வகைசெய்யும் வகையில் இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார்.

ஆகஸ்ட் 08 2018, 04:00

ராஜாஜி, அண்ணா, காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள், ஜெயலலிதா ஆகிய 7 முதல்–அமைச்சர்களுக்கு இரங்கல் அறிக்கைகளை அவர்கள் மறைவுக்குப்பிறகு தன் கைப்பட எழுதிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி, இந்தமுறை தனக்கு அனைவரும் இரங்கல் அறிக்கை வெளியிட வகைசெய்யும் வகையில் இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்து வெற்றிகண்ட கலைஞர் கருணாநிதி, உடல்நலக்குறைவு என்ற போராட்டத்தில்தான் வெற்றி காண முடியவில்லை. இதிலும் ஒரு நீண்ட போராட்டத்தை சந்தித்து, தன் ஓட்டத்தை முடித்துக்கொண்டார். தமிழன்னையின் தவப்புதல்வன் மறைவை தாங்கமுடியாமல் மக்கள் கண்ணீர் விட்டு கதறுகிறார்கள். யாருக்கு–யார் ஆறுதல் சொல்வது? என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து எந்தவித பின்புலமும் இல்லாமல், தன் கொள்கை பிடிப்பினாலும், அறிவாற்றலாலும், செயல்திறனாலும் தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக ஒளிவீசியவர் கலைஞர். ஒரு அரசியல் கட்சித்தலைவராக 50 ஆண்டுகள் இருந்த சரித்திரத்தை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதிதான்.

பேரறிஞர் அண்ணா மறைவுக்குப்பிறகு, தி.மு.க. என்ற தீபத்தை அணையாமல் காத்து, மேலும் ஒளிவீச செய்தவர் அவர்தான். தி.மு.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் முன் கட்சியை வளர்க்க பல்வேறு இன்னல்கள், இடையூறுகளைத் தாண்டி, தமிழ்நாடு முழுவதும் பிரசார கூட்டங்களில் பேசியிருக்கிறார். அவர் கால்படாத ஊர்களே இல்லை எனலாம்.

ஏராளமான போராட்டங்களில் கலந்துகொண்டு ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை என்னை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை’ என்று மிகவும் துணிச்சலாக சிறைவாசம் கண்டவர். அரசியல் நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கலைஞர், அரசியல்வாதி, எழுத்தாளர், பத்திரிகையாளர், பாடலாசிரியர், கவிஞர், நாடக நடிகர், தமிழறிஞர் என பன்முக ஆற்றல் கொண்டவர். எப்போதுமே நான் ஒரு பத்திரிகையாளர் என்று கூறிய அவர், பத்திரிகையாளருக்கும் பிதாமகனாகவே திகழ்ந்தார். அரசியலில் 80 ஆண்டுகள் கண்டவர் என்றால், இந்திய அரசியல் வரலாற்றிலேயே கலைஞர் ஒருவராகத்தான் இருக்கமுடியும். 1924–ம் ஆண்டு ஜூன் 3–ந் தேதி பிறந்த அவர், தன் மாணவ பருவத்திலேயே அரசியலிலும், தீவிர இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டவர். அதுபோல, சிறுவயதிலேயே கையெழுத்து பிரதி நடத்தியவர். தான் கொண்ட கொள்கையில் மிக உறுதியானவர். அவரது கொள்கை பிடிப்பை பார்த்துத்தான் தந்தை பெரியார், கலைஞர் நமக்கு கிடைத்த அரிய பொக்கி‌ஷம் என்றார். அண்ணா ஒருமுறை அவரைப்பற்றி கூறும்போது, ‘தண்டவாளத்தில் தலைவைத்து படு என்றாலும் சரி, அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள் என்றாலும் சரி, இரண்டையும் ஒன்றுபோல ஏற்றுக்கொள்வார் என் தம்பி கருணாநிதி’ என்றார். மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர்., தனக்கென ஒரு கொள்கை, தனக்கென ஒரு தலைவன் என்று வைத்துக்கொண்டு பற்றோடும், பிடிப்போடும் அயராது உழைத்து வந்தவர் கலைஞர் என்றார். இப்படி அவரைப்பற்றி பாராட்டாத தலைவர்களே இல்லை எனலாம். இதுவரையில் அவர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றதேயில்லை.

13 சட்டமன்ற தேர்தல்களிலும், ஒருமுறை மேல்–சபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அண்ணாவின் ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், 5 முறை முதல்–அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பே சட்டசபையில் பொன்விழா கண்டவர். நிர்வாகத்திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கலைஞர். அவருடைய ஆட்சியில் நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் அவரது பெருமையை என்றும் பறைசாற்றிக்கொண்டே இருக்கும். தாய்மொழியாம் தமிழ்மீது அளப்பரிய பற்றுகொண்டவர். அய்யன் திருவள்ளுவரை போற்றி வணங்கியதால்தான், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், கன்னியாகுமரி கடலில் 133 அடி உயர சிலையும் உருவாக்கினார். உழைப்புக்கும், நினைவாற்றலுக்கும், தமிழ்ப்பற்றுக்கும், அரசியல் நாகரிகத்துக்கும், நிர்வாகத்திறமைக்கும், மாற்றாரையும் மதிக்கும் பண்புக்கும், சுறுசுறுப்புக்கும், கொள்கை பிடிப்புக்கும், தொண்டரையும் தன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பாக கருதும் நற்குணத்துக்கும் வேறு பெயர் வைக்க வேண்டுமென்றால், கலைஞர் என்றுதான் வைக்கவேண்டும். பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் மறைந்தால், அடுத்த தலைவர் யார் என்பதில் ஒரு குழப்பம் இருக்கும். ஆனால், தி.மு.க.வில் இதனால் ஒரு சலசலப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மு.க.ஸ்டாலினை அடையாளம் காட்டிவிட்டார். மொத்தத்தில், அரசியலில் கலைஞர் என்ற இமயம் சாய்ந்துவிட்டது. தமிழ் உள்ளளவும் அவர் பெயர் பட்டொளி வீசி பறந்துகொண்டு இருக்கும். முழு வாழ்க்கை வாழ்ந்து மறைந்த அவர் புகழ் காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.
மாநில செய்திகள்
 
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுக வழக்கு: காலை 8 மணிக்கு மீண்டும் விசாரணை

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுக வழக்கு: காலை 8 மணிக்கு மீண்டும் விசாரணை
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுக வழக்கில் காலை 8 மணிக்கு மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. #Karunanidhi #RIPKarunanidhi 
 
சென்னை,

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. மதியம் திமுக தலைவர்கள் முதல்-அமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

திமுக தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா சமாதிக்கு அருகே கருணாநிதிக்கு நினைவிடம் வைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். பார்ப்போம் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார், முழுமையான பதிலை அவர் இன்னும் தரவில்லை என்று கூறினார்.

இந்நிலையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்வதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும், அத்தருணத்தில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டிற்கு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் வருகை தந்தனர். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் விசாரணை நடத்தினர். திமுக தரப்பில் சண்முக சுந்தரம், வில்சன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். தற்போது விசாரணை நிறைவு பெற்றது. இதில் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக மனு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 6 மணிக்கு பதில் மனு தாக்கல் செய்ய முடியுமா? - நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுக வழக்கில் காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை அரசு பதில் மனு தாக்கல் செய்தவுடன் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tuesday, August 7, 2018

Student on bail commits suicide in Thoothukudi

DECCAN CHRONICLE. | M. ARULOLI

PublishedAug 7, 2018, 3:24 am IST

Thoothukudi South police registered three cases against these two youths and arrested them on July 11.



However, Velmurugan since released on bail, was said to be in a frustrated mood and on Sunday evening, when nobody was at home, he was reported to have hung himself to death.

Thoothukudi: A college student, on bail in connection with three mobile theft cases against him, committing suicide here triggered tension as the student’s Federation of India (SFI) launched a protest, demanding Rs 20 lakh compensation and government job for a member of the victim’s family.

A second year B. Com student, Velmurugan (20) son of Murugan along with his friend, Saji (22) son of Raja, studying second year Economics at another college in Thoothukudi, was accused of indulging in mobile snatchings.

Three women including a nurse working at Thoothukudi government Medical college hospital lost their mobiles to the two youths, whose modus operandi was to snatch the mobiles from its users while riding on motorbike.

Thoothukudi South police registered three cases against these two youths and arrested them on July 11. The court, however, on August 3 released Velmurugan and Saji on bail with a condition to sign daily at the police station.

However, Velmurugan since released on bail, was said to be in a frustrated mood and on Sunday evening, when nobody was at home, he was reported to have hung himself to death.

As Velmurugan was a member of SFI, the students body on Monday morning launched a strike in front of the private college (V O C College) and allowed nobody inside. The students too charged the police with falsely implicating Velmurugan in the three cases. As tension mounted, the college administration, on the advice of the police, declared holiday on Monday.

The agitated students, however, demanded a compensation of Rs 20 lakh to the family of Velmurugan and a government job to one of the family members of the deceased.

NEWS TODAY 27.06.2026