Wednesday, August 8, 2018


பள்ளி, கல்லூரிக்கு விடுமுறைதமிழக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம்

dinamalar 08.08.2018

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி, இன்று ஒரு நாள், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கவும், தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடவும், அரசு விழாக்களை ரத்து செய்யவும், முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.




இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் பழனிசாமியை, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அழகிரி, டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் பெரியசாமி, 'முரசொலி' செல்வம் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது, முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான கருணாநிதியின் உடல்நிலையில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என, டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, ராஜாஜி ஹாலை, மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஒதுக்க வேண்டும்.

காமராஜர் சாலையில் உள்ள, அண்ணா சதுக்கத்தில், அவரை நல்லடக்கம் செய்ய, இடம் ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலனை செய்த முதல்வர், சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவற்றின் விபரம்:

* மிக முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும், கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த, சென்னை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, ராஜாஜி ஹால் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்

* இறுதி சடங்கு நடைபெறும் இன்று, ஒரு நாள், விடுமுறை அளிக்கப்படும். பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* கருணாநிதி உடலை, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும், அத்தருணத்தில், தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடவும், அவர் மீது தேசியக் கொடி போர்த்தி, ராணுவ மரியாதையுடன், குண்டு முழங்க மரியாதை வழங்கவும், நடவடிக்கை எடுக்கப் படும்

* தமிழக அரசு சார்பில், ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அந்த காலகட்டத்தில், தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு சார்ந்த விழாக்கள் ரத்து செய்யப்படும்

* தமிழ்நாடு அரசிதழில் இரங்கல் வெளியிடப்படும். இவ்வாறு தலைமை செயலர் தெரிவித்துள்ளார்.

மெரினாவில் இடமில்லை : தமிழக அரசு கைவிரிப்பு

சென்னையில், நேற்று மதியம், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, 'கருணாநிதியின் உடலை, அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்ய, அனுமதி அளிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர். அதை பரிசீலனை செய்த முதல்வர், 'நீதிமன்ற வழக்கு காரணமாக, அங்கு இடம் ஒதுக்க இயலாது' என, கூறியுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, காமராஜர் சாலையில் உள்ள, மெரினா கடற்கரையில், நல்லடக்கம் செய்வதற்கு தடையாக, பல வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மண்டபம், காமராஜர் நினைவகம் அருகே, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக, இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை, ஒதுக்கீடு செய்ய, அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...