Thursday, August 9, 2018

வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை: விக்ரம் கவலை!

By எழில் | Published on : 08th August 2018 02:41 PM



திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து - சிவகாம சுந்தரியின் மகள் வழிப் பேரனும், கெவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே.ரங்கநாதன் மகன் மனோரஞ்சித்தை விக்ரமின் மகள் அக்‌ஷிதா கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
'கருணாநிதி இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது'
அரசியல் தலைவர்கள் அஞ்சலி ...dinamalar

















சென்னை : 'தி.மு.க., தலைவர் கருணாநிதியின் இடத்தை, இனி வேறு யாராலும் நிரப்ப முடியாது' என, அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.



உடல்நலக் குறைவால், சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, சென்னை ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது, 'கருணாநிதி இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது' என, புகழாரம் சூட்டினர்.

முதல்வர் பழனிசாமி: தி.மு.க., தலைவராக, 50 ஆண்டுகளாக இருந்தார். வயது முதிர்வு காரணமாக, அவர் இயற்கை எய்தியுள்ளார். அவரது இழப்பு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினகரன்: தேசிய அரசியலுக்கு மிகப்பெரிய அடையாளமாக இருந்தவர். அவரது சாதனையை, யாரும் செய்ததில்லை; இனி யாரும் செய்ய முடியாது.

ராதாரவி: கருணாநிதி என்ற மந்திர சொல் மறைந்து விட்டது. இது, தமிழ் இனத்திற்கே மிகப்பெரிய இழப்பு. ஸ்டாலின் தலைமையில், அனைவரும் ஒற்றுமையாக இருந்து, கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும்

நடிகர் சிவகுமார்: என் தமிழ் ஆசான் மறைந்து விட்டார். திருவாரூரில், 5ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, கற்பு குறித்து கவிதை எழுதி, ஆசிரியர் பாராட்டை பெற்றார். ஜாதி, மத பேதம், பெண்ணடிமையை ஒழித்தார். கலை, இலக்கியம், அரசியலில், அவரது எல்லையை, வேறு யாராலும் தொட முடியாது.

நடிகர் பிரபு: எங்கள் குடும்பத்தின் மீது, பிரியமாக இருந்தவர். தமிழ் இருக்கும் வரை, அவரது புகழ் இருக்கும்.

நடிகர் சங்கத் தலைவர் நாசர்: ஒரு வரலாறு முடிந்துள்ளது. கருணாநிதியை, அரசியலை தாண்டி, எழுத்தாளராக, படைப்பாளியாக, எங்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினராக பார்க்கிறோம். அவர் விட்டு சென்ற இடத்தை, யாராலும் நிரப்ப முடியாது. அவர் செய்த நல்ல காரியங்களை தொடர்வது தான், அவருக்கு செய்யும் மரியாதை.

நடிகர் கருணாஸ்: ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கடைசி தலைவர். எழுத்து துறையாக இருந்தாலும், பேச்சு துறையாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும், தன்னை முன்னிலைப்படுத்தி சாதனை படைப்பதில், அசாத்திய திறமை படைத்தவர்.

கவிஞர் வைரமுத்து: தமிழ் போராளி மறைந்தார். '95 வயதில் மறைந்தது இயற்கை மரணம் தானே' என, சிலர் கூறுகின்றனர்.

தாஜ்மஹால் மண்ணுக்குள் மறைந்தால், பழமையானது மறைந்தது என, ஏற்க முடியாது. அதுபோல, கருணாநிதியின் மறைவையும் ஏற்க முடியாது. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். படைப்பாளி, போராளி என, இரு துருவங்களைக் கொண்டவர்.

நடிகர் ராஜேஷ்: திரையுலகத்திற்கு அவர் ஆற்றிய பங்கு சொல்லி மாளாது. அவர் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது இடத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது. மிகப்பெரிய மனிதராக வாழ்ந்தார்; இனிமேலும் வாழ்வார். தமிழ் உள்ளவரை, அவரது புகழ் நிற்கும்.

நடிகர் டி.ராஜேந்தர்: என் வாழ்நாளில் மிகப்பெரிய துக்க நாள். தி.மு.க.,வில் சிறு வயது முதல் இருந்தேன். தேசிய அளவில், இவரை போன்ற தலைவர் இருந்ததில்லை. அவர் இழப்பு மிகப்பெரிய இழப்பு. நான் கருணாநிதியை தவிர, வேறு யாரையும் தலைவராக ஏற்றுக் கொண்டதில்லை.

நடிகர் பசுபதி: அவர் மறைவு மிகப்பெரிய சோகம். அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நடிகர் ஸ்ரீமன்: கருணாநிதி மறைந்தாலும், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள், எங்கள் மூச்சில் கலந்திருக்கும்; அவர் கொள்கையை பரப்ப, தயாராக உள்ளோம்.

நடிகை குஷ்பு: மெரினாவில் கருணாநிதிக்கு இடமில்லை என்றால், வேறு யாருக்கும் இடம் கொடுக்கக் கூடாது. அவர் அரசியல் பிதாமகன்.

கேரள கவர்னர் சதாசிவம்: சிறு வயதிலிருந்தே, கருணாநிதியை தெரியும். பின் தங்கிய, அடித்தட்டு மக்கள் மேலே வர, பல முயற்சிகள் எடுத்து, பல திட்டங்களை அறிவித்துள்ளார். தமிழ் மொழிக்காக, அதிக பணிகளை செய்துள்ளார். விவசாயிகள் நல்ல நிலையில் இருப்பதற்கு, கருணாநிதியின் திட்டங்களும் காரணம். அவரது மறைவு, இந்திய நாட்டிற்கே பேரிழப்பு.

காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்: கருணாநிதி தேசிய அடையாளம். மிகப்பெரிய தலைவர்; சிறந்த எழுத்தாளர்; ஏராளமான திறமைகளை கொண்ட அரசியல்வாதி. அடித்தட்டு மக்களுக்காக, சமூக நீதிக்காக, சம உரிமைக்காக போராடியவர். முதல்வராக, எதிர்க்கட்சி தலைவராக, கட்சி தலைவராக இருந்த அவர், இன்று நம்மிடம் இல்லை. ஆனாலும், அவரது பணி, சிந்தனை, தொடர்ந்து நமக்கு வழிகாட்டும். அவருடன் இணைந்து, 40 ஆண்டுகளாக செயல்பட்டுள்ளேன். அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு.

தேசியவாத காங்., தலைவர் சரத்பவார்: கருணாநிதி சிறந்த தலைவர்; அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக, அவர் நம்மை, பிரிந்து விட்டார். அவரின் மறைவு தமிழகத்திற்கு மட்டுமின்றி, நாட்டு மக்கள் அனைவருக்கும் இழப்பு.

கர்நாடகா முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி: சென்னை வரும் போது, கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெறுவதை, 40 ஆண்டுகளாக பழக்கமாக வைத்திருந்தேன். அவரது மறைவு, நாட்டிற்கு பெரும் இழப்பு. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்: நம் நாட்டிற்கு கருணாநிதி, மிகப்பெரிய சேவை செய்துள்ளார். இந்த தேசம் அவருக்கு, கடமைப்பட்டுள்ளது. குறிப்பாக, தென் மாநில மக்களுக்கு, அவர் நற்பணிகள் ஆற்றியுள்ளார். அவரை தந்தையாக மதிக்கிறோம்.

சீதாராம் யெச்சூரி: கருணா நிதி மிகப்பெரிய தலைவர். தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில், அரசியலில் சேவை செய்துள்ளார். கூட்டாட்சி தத்துவம் மீது, நம்பிக்கை உடையவர். மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். தற்போது நாட்டில் நிலவும், இக்கட்டான சூழ்நிலையில், கருணாநிதியின் மறைவு, மிகப்பெரிய இழப்பு.

நடிகர் கமல்: கருணாநிதியுடனான உறவு, கட்சிக்கு அப்பாற்பட்டது. கலைத்துறையில் கடைக்குட்டி நான்; அவர், மூத்தவர். அப்படித்தான் பழகினோம். நாடு தலைவரை இழந்துள்ளது; தனிப்பட்ட முறையில், குடும்ப தலைவரை இழந்துள்ள உணர்வு எனக்கு உள்ளது. கலைத் துறையில், அவரது பணியை குறைத்துக் கொண்டாலும், அந்த ரீங்காரம், எங்கள் துறையில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது; அவரை வணங்க வந்துள்ளோம்.

சி.பி.ராதாகிருஷ்ணன்: ஒரு இயக்கத்தை, 50 ஆண்டுகள் கட்டிக்காத்தது, அரசியல் வரலாறு. தன் இயக்கம் தேர்தல் களத்தை துவக்கிய நாளிலிருந்து, இன்று வரை களம் கண்ட தேர்தல்களில் வெற்றி பெற்றவர். இந்தியாவின் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவராக திகழ்ந்தார். தன் கொள்கையை நடைமுறைப்படுத்தியவர்; அவர் தந்த திட்டங்கள் எல்லாம் மகத்தான திட்டங்கள்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இந்திய அளவில், கருணாநிதியை தவிர யாரும் இல்லை. பன்முகத்தன்மை கொண்ட அவர், எந்த துறையையும் விட்டு வைக்கவில்லை. அந்த அளவிற்கு தமிழ் மக்களுக்கு, தமிழுக்கு அயராது பாடுபட்டவர். அவர் மறைந்தாலும், அவர் விட்டு சென்ற பணிகளை, தொடர்ந்து நாம் செய்வோம். அவரது நினைவை, தமிழர்கள் உள்ளங்களிலிருந்து பிரிக்க முடியாது.

பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி: கருணாநிதி மறைவு, மிகுந்த வேதனை அளிக்கிறது. உடல் நலம் தேறி வீடு திரும்புவார் என, நம்பினோம். சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்து, நீண்ட காலம் முதல்வராக பணியாற்றியவர். பொது வாழ்க்கையில், 80 ஆண்டுகளாக ஈடுபட்டவர்.

நடிகர் வடிவேலு: எதையும் தாங்கும் இதயத்தை, கடைசி வரை கடைப்பிடித்தவர். சிறு பிரச்னை வந்தாலும் தாங்க முடியாது. அவர் வாழ்க்கையே போராட்டமாக இருந்தது. மக்களுக்காக உழைத்தவர்; அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.

தமிழ்நாடு இளைஞர் கொங்கு பேரவை தலைவர் தனியரசு: கருணாநிதி மறைவு, தமிழ் சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் பற்று கொண்டவர். தன்னலம் கருதாமல், சுய மரியாதையோடு, மக்கள் வாழ வழி கண்டவர்.

தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: தமிழர்களின் அருந்தவப் புதல்வர், ஐந்து முறை முதல்வர். 50 ஆண்டுகள், தி.மு.க., தலைவர். சட்டசபை தேர்தலில் தோல்வி காணாத தலைவர். அனைத்து துறைகளிலும் புகழ் பெற்றவர். இந்தியாவின் மூத்த தலைவர். அவரது மறைவு, தமிழக, இந்திய அரசியலுக்கு பேரிழப்பு.

கருணாநிதியை போல், பன்முகத்தன்மை உடைய, அனைத்து துறைகளிலும் விற்பன்னராக திகழ்ந்தவரை, மீண்டும் பெற எத்தனை ஆண்டுகள் தவமிருக்க வேண்டுமோ; யார் அறிவார். அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர், செ.கு.தமிழரசன்: அம்பேத்கர் பெயரில் ஒரு மாவட்டம் அமைய வேண்டும் என்பதற்காக, வேலுார் மாவட்டத்தை அறிவித்தார். ஜாதி ஒழிப்பில் முன்னுதாரணமாக திகழ்ந்தவர். தமிழகத்தில் அர்ச்சகர் பணியில் இட ஒதுக்கீடு, அம்பேத்கர் விரும்பிய சமத்துவபுரம் போன்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

கலைப்புலி தாணு: கருணாநிதி இல்லாமல், கலை உலகம் கண்ணீரில் தத்தளிக்கிறது. தாணு என்றால், தாய்மார்கள் சோறு பரிமாறும் போது, 'தாணு இல்லையா' என, கேட்பர்; தாணு என்பது, காய்கறிகள். 'தாணு இல்லை என்றால், கலையுலகம் சிறக்காது' என, கருணாநிதி கூறினார். அவர் இழப்பு தமிழர்களுக்கு பேரிழப்பு.

மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன்: பிறவிப் போராளி. தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக, வாழ்நாள் முழுவதும் போராடியவர். பகுத்தறிவு கொள்கையை கடைப்பிடித்தவர். தமிழக அரசியலில், தேசிய அரசியலில், ஆளுமை மிக்க தலைவராக வாழ்ந்தார். ஆட்சி காலத்தில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அவருக்கு இடம் ஒதுக்க, தமிழக அரசு மறுத்தது கண்டிக்கத்தக்கது. நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளது.

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: இன்று வானம் மங்கி உள்ளது. காரணம், தமிழ் சூரியன் மறைந்துள்ளது. தொண்டர்களின் இதய சூரியனாக திகழ்ந்தவர். அவர் தோல்வியே கண்டதில்லை. எந்த ஒரு அரசியல் சூழலிலும், அவர் பங்கு இல்லாமல் இல்லை. பா.ஜ., சார்பில், ஒரு வாரத்திற்கு, கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளோம். பன்முக தலைவருக்கு அஞ்சலி. இன்னொரு அரசியல் வரலாறு, வேறொருவரால் எழுத முடியாது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்: கருணாநிதி நம்மை விட்டு பிரிந்திருப்பது, நம் உயிரின் ஒரு பகுதி பிரிந்திருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அவர் இடத்தை நிரப்ப யார் என கேட்கின்ற தருணத்தில், ஸ்டாலினை உருவாக்கி, அவருக்கு ஆதரவாக தொண்டர்களை உருவாக்கி உள்ளார். அவர் வகுத்து கொடுத்த பாதை சமதர்ம பாதை; தமிழகத்திற்கு வெற்றி பாதை.

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: ஓய்வறியா உழைப்பாளி கருணாநிதி. அவருக்கு இயற்கை ஓய்வு கொடுத்திருப்பது வருத்தம் அளிக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: கருணாநிதியின் இழப்பு, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இழப்பு. நெருப்பாற்றில் நீச்சல் அடித்து, அரசியலில் வெற்றி பெற்றவர். இவ்வாறு பலரும் புகழாரம் சூட்டினர்.

காங்., தலைவர் சோனியா: கருணாநிதியின் இறப்பு, எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு. அவர், என்னிடம், மிகவும் கனிவுடன் பழகியதை எப்போதும் மறக்க மாட்டேன். அவர் ஒரு தந்தையை போன்றவர். தமிழகம் மட்டுமல்லாமல், தேசிய அளவில் தலைசிறந்த தலைவராக திகழ்ந்தார்.

சமூக நீதி மற்றும் சமத்துவம், தமிழக வளர்ச்சி, ஏழை மற்றும் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டார். இலக்கியத்தில் சிறந்தவரான கருணாநிதி, தமிழகத்தின் உயர்ந்த மற்றும் தனித்துவமான கலாசாரம் மற்றும் கலைகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கச் செய்தார்.
மாநில செய்திகள்

‘கருணாநிதியின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை’ - அமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் கண்ணீர் வீடியோ





கருணாநிதியின் மறைவுக்கு அமெரிக்காவில் இருந்து கண்ணீர் மல்க விஜயகாந்த் இரங்கல் வீடியோ வெளியிட்டார். அதில் கருணாநிதியின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

பதிவு: ஆகஸ்ட் 09, 2018 04:14 AM
சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-

நான் அமெரிக்காவில் இருந்தாலும் என்னுடைய எண்ணங்களும், நினைவுகளும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. கருணாநிதி இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

நானும், கருணாநிதியும் நல்லா பழகி இருக்கிறோம். அவர் என்னை ‘விஜி’, ‘விஜி’ என்று தான் அழைப்பார். இப்போது அது எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது (துக்கம் தாங்காமல் கதறி அழுகிறார்). கருணாநிதியின் மறைவை என்னால் தாங்கமுடியவில்லை. என்னால் நம்பவும் முடியவில்லை (மீண்டும் கதறி அழுகிறார்.

அதைத்தொடர்ந்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வீடியோவில் பேசியதாவது:-

தி.மு.க. தலைவரும், இந்தியாவின் மூத்த அரசியல்வாதியுமான கருணாநிதியின் மறைவு ஈடு இணையில்லாதது. அவரை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், தி.மு.க.வினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடன் பழகிய நாட்கள் எங்கள் வாழ்வில் மறக்க முடியாது. கருணாநிதியை அப்பாவாகவே நானும், கேப்டனும் நினைத்தோம்.

அவருடைய தலைமையில் தான் எங்கள் திருமணம் நடந்தது. அதை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. நிச்சயமாக தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பேரிழப்பு தான். இந்த இழப்பு ஈடு இணையில்லாதது. கருணாநிதியின் இறுதி சடங்குகளில் பங்குபெறாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். இவ்வாறு பிரேமலதா பேசும்போது அருகில் உட்கார்ந்து இருந்த விஜயகாந்த் அழுதபடியே இருந்தார்.

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு தே.மு.தி.க. சார்பில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் விஜயகாந்தின் மகன் செண்பக பாண்டியன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
மாவட்ட செய்திகள்

“தென்னாடு காக்க ஓர் ஆளில்லையே பொன்னாடை போர்த்த ஒரு தோளில்லையே” கவிஞர் வைரமுத்து கண்ணீர்





‘தென்னாடு காக்க ஓர் ஆளில்லையே! பொன்னாடை போர்த்த ஒரு தோள் இல்லையே!’ என்று கவிஞர் வைரமுத்து கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 08, 2018 10:28 AM

கடைசியில் அது நேர்ந்தேவிட்டது. கலைஞர் மறைந்துவிட்டார்; எங்கள் கவியரங்கம் கலைந்துவிட்டது. எங்கள் முப்பத்தைந்து வருட உரையாடல் முடிந்துவிட்டது. தமிழ் இனத்தின் தனிப்பெருந் தலைவர் தமிழாக வாழ்ந்த கலைஞர் தன் போராட்டத்தை நிறுத்திக்கொண்டுவிட்டார். குடையைத் தாண்டிய மழையைப்போல் கண்ணீர் கொட்டுகிறது. நகக்கண்கள் தவிர, தமிழர்களின் எல்லாக் கண்களும் கலங்குகின்றன.

பள்ளத்தாக்கில் பெற்றெடுக்கப்பட்டு சிகரம் ஏறி சிம்மாசனம் பிடித்தவர். இரண்டு நூற்றாண்டுகளில் இரண்டு கால்களை ஊன்றித் தமிழ்ச் சமுதாயத்தைத் தாங்கிப் பிடித்தவர். ஒரு கையில் எழுதுகோலையும் மறுகையில் செங்கோலையும் எழுபது ஆண்டுகள் ஏந்தி இதயங்களை ஆண்டவர். அய்யோ! இன்று நம்மிடையே இல்லை.

அவரைப்போல் உழைக்கப் பிறந்தவர் ஒருவரும் இல்லை. உடன்பிறப்பே என விளித்து 7000 கடிதங்கள் 4168 பக்கங்களில் நெஞ்சுக்கு நீதியின் 6 பாகங்கள் 75 திரைப்படங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள். அவர் எழுதியதை அடுக்கி வைத்தால் அது அவரைவிட உயரமானதாக இருக்கும். கலைஞர் வாழ்வு உணர்த்திச் செல்லும் முதற்செய்தி: ‘உழைப்பு’.

போராடப் பிறந்தவர் கலைஞர். உயிர்ப்புள்ள ஒரு கட்சிக்கு 50 ஆண்டுகள் தலைவராக இருந்தவர், 13 சட்டமன்றத் தேர்தல்களில் தோற்காதவர், 5 முறை முதல்-அமைச்சராக இருந்தவர், இந்தி எதிர்ப்பு, கல்லக்குடி, பாளையங்கோட்டைச் சிறை, எம்.ஜி.ஆர். பிரிவு, நெருக்கடி நிலை, ஆட்சியில் இல்லாத 13 ஆண்டுகள், கண்ணுக்குத் தெரிந்த வெளிப்பகை, கண்ணுக்குத் தெரியாத உட்பகை, கடைசியில் உடம்போடு உயிர்ப் போராட்டம் என்று வாழ்வே போராட்டமாய் வாழ்ந்தவர். கலைஞர் வாழ்வு உணர்த்திச் செல்லும் இரண்டாம் செய்தி: ‘போராடு’.

உழைக்கும் மக்களுக்குக் குடிசைமாற்று வாரியம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கை ரிக்‌ஷா ஒழிப்பு, இடஒதுக்கீடு, சமத்துவபுரம், பிச்சைக்காரர் மறுவாழ்வு, தலித்துகளுக்கு இலவச வீடுகள் இன்னும் எத்துணையோ எத்துணையோ. கலைஞர் வாழ்வு உணர்த்திச் செல்லும் மூன்றாம்செய்தி : ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்’.

தமிழுக்குச் செம்மொழி பெற்றுத்தந்த பெருமகன். இனமொழி அடையாளங்களை எழுத்தால் சொல்லால் செயலால் மீட்டெடுத்தவர். ஈராயிரமாண்டு நாகரிகத்தை அகழ்ந்து 21-ம் நூற்றாண்டுக்கு அடையாளம் காட்டியவர். கலைஞர் வாழ்வு உணர்த்திச் செல்லும் நான்காம் செய்தி: ‘தமிழா! இனமொழி அடையாளங்களை இழந்து விடாதே’.

ஓர் அரசனே புலவனாகவும், புலவனே அரசனாகவும் இருந்த பழைய வரலாற்றின் கடைசி நாயகன் கலைஞர்தான். 70 ஆண்டுகளாய்த் தமிழ்நாட்டுக் காற்று அவரது குரலுக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தது. அரசியல் அவரது கருத்துக்குக் காத்திருந்தது. திரையுலகம் அவரது எழுத்துக்கு ஏங்கி நின்றது. பராசக்தியும் மனோகராவும் திரைத் தமிழுக்கு அன்றுமுதல் இன்றுவரை அளவுகோல்களாகிவிட்டன.

தொடக்ககாலத் தி.மு.கவில் ஐம்பெருந் தலைவர்களுள் ஒருவராகக்கூட இல்லாத கலைஞர் அண்ணாவுக்குப் பிறகு அரைநூற்றாண்டு காலம் அந்த இயக்கத்திற்கே தலைமை தாங்கியது ஆகாயமே அண்ணாந்து பார்க்கும் ஆச்சரியமாகும்.

நீண்ட வரலாறு கொண்ட திராவிட இயக்கத்தில் தந்தை பெரியாருக்குப் பிறகு 45 ஆண்டுகளும், அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு 49 ஆண்டுகளும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு 31 ஆண்டுகளும் இந்த மண்ணில் திராவிட லட்சியங்களைத் தன் தோளில் சுமந்து நடந்தவர் கலைஞர்.

அவர் இன்று இல்லை என்று நினைக்கிறபோது எனக்கு இன்றே இல்லை என்றே தோன்றுகிறது.

‘கனவில்லாத தூக்கத்தைப் போன்றது மரணமென்றால் அதற்காக நான் ஏன் பயப்பட வேண்டும்’ என்று எழுதிய தலைவர் கனவில்லாத தூக்கத்தில் கலந்துவிட்டார். ‘மானம் அவன் கேட்ட தாலாட்டு; மரணம் அவன் ஆடிய விளையாட்டு’ என்று எழுதிய தலைவர் மரணத்தோடு விளையாடப் போய்விட்டார்.

தமிழர்களின் சோகத்தோடு என் தனிச்சோகமும் என்னைத் தாக்குகிறது. பள்ளி வயதில் என்னை எழுதவைத்தவரே எங்கே உங்கள் கரங்கள்? என் பதினெட்டு நூல்களை வெளியிட்டவரே! எங்கே தலைமைதாங்கிய உங்கள் தலை?

35 ஆண்டுகளாய் என் அதிகாலைத் தொலைபேசியில் ஓசையோடு பேசிய அந்த ஆசை வாய் எங்கே? தந்தைபோல என்னைத் தாங்கிப்பிடித்தவரே! இப்போதுதான் என்னை நான் அனாதை என்று அறிகிறேன். நான் நொறுங்கிக் கிடக்கிறேன். உங்கள்மீது விழுந்த மரணத்தின் சம்மட்டி என் உள்ளத்தையும் அல்லவா உடைத்துப் போட்டுவிட்டது!

‘தென்னாடு காக்க ஓர் ஆளில்லையே! பொன்னாடை போர்த்த ஒரு தோள் இல்லையே!’ என்று ஊருக்கு ஓடிப்போய் தென்னைமரத்தடியில் ஓங்கிப் புலம்பி ஒப்பாரிவைக்கத் தோன்றுகிறது.

ஆனால் அவர் விட்டுச் சென்ற லட்சியம் எங்கள் கண்களைத் தொட்டுத் துடைக்கிறது.

தமிழின் கடைசி எழுத்து உள்ளவரை கலைஞர் வாசிக்கப்படுவார்; கடைசித் தமிழன் உள்ளவரை கலைஞர் பேசப்படுவார். தமிழ் நிலத்தின் கடைசி அங்குலம் உள்ளவரை அவர் பாதச் சுவடுகள் அழிவதில்லை.

தங்கத் தலைவனே! தமிழாசானே! நீ எனக்குப் பரிசளித்த உன் பேனா,

உன் புகழைப் பாடிக்கொண்டே இருக்கும். நீ விட்ட இடத்தை அது தொட்டுத் தொடர்ந்துகொண்டே இருக்கும். வானம் போன்றது உன் புகழ்; அது சுருங்குவதே இல்லை.

உனக்கு மரணமில்லை; தமிழின் ஒவ்வோர் எழுத்திலும் நீ வாழ்ந்துகொண்டேயிருப்பாய்.
மாவட்ட செய்திகள்

ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் ... ‘திரையுலகில் கருணாநிதி ஒரு சரித்திரம்’




தமிழ் சினிமா உலகில் சரித்திரமாக விளங்குபவர் கருணாநிதி. அடுக்கு மொழி வசனங்கள், அழுத்தமான கதைகள் மூலம் வெற்றிப் படங்களை கொடுத்தார்.

பதிவு: ஆகஸ்ட் 08, 2018 10:31 AM

கருணாநிதி எழுத்தில் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், ‘பழனியப்பன்.’ இது 1944-ம் ஆண்டு திருவாரூர் பேபி டாக்கீஸில் நடத்தப்பட்டது. அப்போது கருணாநிதிக்கு வயது 20.

முதன்முதலில் ‘அபிமன்யு’ படத்துக்கு அன்றைய அரசியல் சூழலை மையமாக வைத்து வசனம் எழுதி இருந்தார். ஆனால் படத்தில் வசனம் என்று அவர் பெயரைப் போடவில்லை, அதற்காக வருத்தப்படவில்லை. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான ‘ராஜகுமாரி’ படத்தில் தான் கருணாநிதியின் பெயர் முதன் முதலாக திரையில் வந்தது. 1947-ம் ஆண்டு இந்த படம் வெளியானது.

1950-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மந்திரிகுமாரி’. குண்டலகேசியின் ஒரு பகுதியை படமாக மாற்றியிருந்தார் கலைஞர். திரைப்பயணத்தை ‘ராஜகுமாரி’ மூலம் 1947-ல் தொடங்கிய கருணாநிதி, 2011-ம் ஆண்டு ‘பொன்னர் சங்கர்’ படம் வரை 64 வருடங்கள் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என தமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளிலும் முத்திரைப் பதித்தார். 21 நாடகங்களை எழுதிய கருணாநிதி 69 படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

பராசக்தியில் பணத்தையெல்லாம் இழந்த சிவாஜி கணேசன் சாலை ஓரமாய் படுத்துத் தூங்கும்போது ஒரு போலீஸ்காரர் வந்து தட்டி எழுப்புவார்.‘டேய்... நீ பிக்பாக்கெட்டா?’ ‘இல்லை... எம்ட்டி பாக்கெட்“, ஏண்டா... முழிக்கிறே?, ‘தூங்குறவனை எழுப்பினால் முழிக்காம என்ன பண்ணுவான்?...இதுபோல அந்த படம் முழுவதும் ‘பளிச்’ வசனங்கள் இடம் பெற்று இருந்தன.

ஒரு வீட்டின் திண்ணையில் படுத்திருந்த சிவாஜி மீது அந்த வீட்டுக்காரர் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டுவார். அதற்கு சிவாஜி, ‘அப்படியே சோப்பு இருந்தா கொடுங்க. குளிச்சி நாலு நாளாச்சி’ என்பார். ‘ஓடினாள், ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்’. ‘என் செயலை சுயநலம் என்பீர்கள், ஆம்... சுயநலம்தான். ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன்... அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது’ என பாமரர்கள் ரசிக்கும் வகையில் எழுதினார். ‘கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக் கூடாது’ என்ற வசனமும், ‘அடேய் பூசாரி.. அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்?’ என்ற கேள்வியும் 66 ஆண்டுகள் கடந்து இப்போதும் உயிரோட்டத்துடன் இருக்கும் வசனங்கள்.

‘மனோகரா’ படம் அதில் ஒரு மைல்கல். “பொறுத்தது போதும்...பொங்கியெழு” என்கிற தாய் கண்ணாம்பாவும், ‘என் தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்’ என்கிற மகன் சிவாஜியும் கலைஞரின் வசனத்தில் போட்டி போட்டு நடித்து இருந்தார்கள்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன் கோவலனாகவும் விஜயகுமாரி கண்ணகியாகவும் நடித்திருந்த பூம்புகார் படத்தில் வசனங்களால் புதிய புரட்சியையே ஏற்படுத்தினார் கலைஞர். ‘யார் கள்வன் என் கணவன் கள்வனா? அவரை கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர் நல்லான் வகுத்ததா நீதி? இந்த வல்லான் வகுத்ததே நீதி இது கோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை இது கோவலன் தேவியின் சிலம்பு. நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு? மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு? என்று தீப்பொறி கிளப்பி இருந்தார்.

‘என்னடா ஆச்சரியக் குறி போடுகிறாய்?’ ‘ஆச்சரியக்குறிதான் ஜமீன்தார் அவர்களே.. கொஞ்சம் வளைந்தால் அதுவே கேள்விக்குறியாக மாறிவிடும். ஞாபகம் இருக்கட்டும்! அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசம் இல்லை’ பண்ணையாருக்கும், தொழிலாளிக்கும் இடையிலான ‘நாம்’ பட வசனம் இது.

மந்திரிகுமாரி தொடங்கி 21 படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார். பராசக்தியில் “பூமாலை நீயே.. புழுதி மண்மேலே..., பூம்புகார் படத்தில் வாழ்க்கையெனும் ஓடம்..., மறக்கமுடியுமா? படத்தில் ‘காகித ஓடம்... கடல் அலை மீது’ போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை.

நூற்றாண்டு கண்ட இந்திய சினிமாவில் கலைஞரின் பங்கு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. முதல்வராக இருந்த காலகட்டத்திலும் அவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 1980-களில் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ‘பாலைவன ரோஜாக்கள்‘, ‘நீதிக்குத் தண்டனை‘, ‘பாசப்பறவைகள்‘ போன்ற வெற்றிப் படங்களைத் தந்தார். 2011-ம் ஆண்டில் தன் 88-வது வயதில்கூட ‘பொன்னர்சங்கர்‘ என்ற வரலாற்றுப் படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதினார். கதை, திரைக்கதை, வசனம் என்று 75 படங்களில் அவரது பங்களிப்பு உள்ளது. மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ், கலைஎழில் கம்பைன்ஸ், பூம்புகார் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில் 29 படங்களை தயாரித்துள்ளார்.

கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொலைக்காட்சித் தொடர், ‘ஸ்ரீ ராமானுஜர்’ மதத்தில் புரட்சி செய்த மகான். இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த தொடருக்கு வசனம் எழுதத் தொடங்கியபோது அவரது வயது 92.
தலையங்கம் 

அருகருகே, அண்ணன்–தம்பி





தமிழக அரசியலில் ஒரு பெரிய சகாப்தம் முடிந்துவிட்டது. திராவிட இயக்கத்தில் மூத்த தலைவராக வாழ்ந்த, 95 வயது தலைவர் கலைஞர் தமிழகத்தையே, ஏன் ஒட்டுமொத்த இந்திய அரசியல் உலகத்தையே கண்ணீர் கடலில் தத்தளிக்க விட்டுவிட்டு, தான் மட்டும் தன் உயிராக கருதிய அண்ணா துயிலும் இடத்திற்கு அருகே சென்றுவிட்டார்.

ஆகஸ்ட் 09 2018, 03:30

தமிழக அரசியலில் ஒரு பெரிய சகாப்தம் முடிந்துவிட்டது. திராவிட இயக்கத்தில் மூத்த தலைவராக வாழ்ந்த, 95 வயது தலைவர் கலைஞர் தமிழகத்தையே, ஏன் ஒட்டுமொத்த இந்திய அரசியல் உலகத்தையே கண்ணீர் கடலில் தத்தளிக்க விட்டுவிட்டு, தான் மட்டும் தன் உயிராக கருதிய அண்ணா துயிலும் இடத்திற்கு அருகே சென்றுவிட்டார். 1969–ம் ஆண்டு அண்ணா மறைவதற்கு முன்பு ஒருவிழாவில் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் பாதி சரித்திரத்தை நான் எழுதிவிட்டேன். மீதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்’’ என்று சொல்லியதுதான் கலைஞருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

1959 ஏப்ரல் மாதம், சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. போட்டியிட வேண்டாம் என்று முதலில் அண்ணா முடிவெடுத்தவுடன், அந்த நேரம் கலைஞர், ‘‘நாம் நிச்சயம் போட்டியிடுவோம் வெற்றிமகுடத்தை கொண்டுவந்து உங்களிடம் ஒப்படைப்பதே என்கடமை’’ என்று உறுதியளித்து, மாநகராட்சி தேர்தலில் பெருவாரியான வெற்றியை ஈட்டித்தந்தார். அதை பாராட்டும் வகையில், பேரறிஞர் அண்ணா ‘‘நான் என் மனைவிக்குக்கூட நகைவாங்க கடைக்குச்சென்றதில்லை. என் தம்பி கருணாநிதிக்காக, நானே கடையில் போய் வாங்கி வந்த தங்க மோதிரம் இது’’ என்றுசொல்லி கலைஞரின் கையில் அணிவித்தார். அன்று முதல் அந்த மோதிரம் அவரது கையைவிட்டு அகலவேயில்லை.

அண்ணா மறைந்தவுடன் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கலைஞர் ஒருகவிதை எழுதியிருந்தார். அதில் இறுதிவரிகளாக,

கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்கு தெரியும் – அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா...
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?

என்று சொன்னார்.

இரவலாக அண்ணாவின் இதயத்தை பெற்றுக்கொண்ட கலைஞர், இரவலை திருப்பிக்கொடுக்கவேண்டும் என்ற நியதிப்படி அண்ணாவின் காலடியில் வைக்க அவர் பக்கத்திலேயே சென்றுவிட்டார்.

அண்ணாவை தன்உயிராக கருதிய கலைஞரை, அவர் துயில்கொள்ளும் இடத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்யவேண்டும் என்று, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர், கட்சியினர், முதல்–அமைச்சரை நேரில் சந்தித்து இடம் ஒதுக்கக்கோரி மனு கொடுத்தனர். சட்டசிக்கல் இருப்பதால், மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கமுடியாது. அதற்கு பதிலாக, கிண்டியில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து உடனே, தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்து வழங்கிய தீர்ப்பில், ‘‘அண்ணா சமாதிக்கு அருகிலேயே உடனடியாக இடம் ஒதுக்க வேண்டும்’’ என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. வாழும்போது ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டுக்காக போராடியவர், இன்று தன் இறுதி உறக்கத்துக்கான இட ஒதுக்கீட்டுக்காக போராடி வென்றிருக்கிறார். கலைஞரின் வாழ்வே போராட்டம்தான், போராட்டம் வெற்றிதான். வாழும்போது, அண்ணா பெயரை சொல்லியே வாழ்ந்த கலைஞருக்கு, அவரது மறைவுக்கு பிறகும், அண்ணனின் அருகிலேயே துயில் கொள்ளச்செய்வது மிகவும் பொருத்தமுடையதாகும். ‘‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’’ என்று 33 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தன் நினைவிடத்தில் எழுதவேண்டும் என்று சொன்னது நிறைவேறிவிட்டது.

Wednesday, August 8, 2018

76 answer scripts from Chennai zone to be sent to forensic lab 

DECCAN CHRONICLE.

Published Aug 7, 2018, 3:20 am IST


The DVAC is conducting the inquiry and they have taken all the answer scripts. 



Anna University

Chennai: The internal inquiry committee of Anna University has decided to send 76 answer scripts which had more than 15 per cent increase after revaluation in Chennai zone to forensic lab to test whether the answer scripts were manipulated.

The five-member committee is currently scrutinising all answer scripts from Chennai zone which had upward revision in April/May 2017 exams. 


“These answer scripts having marks variation from 28 to 50 marks after revaluation. We suspect impersonation and forging the answer scripts during revaluation. To verify the handwriting, the committee has decided to send these answer scripts to forensic lab,” a source said.

The committee has already conducted inquiry with the examiners and other officials in charge for evaluation.

DVAC has filed a case against former controller of examinations in connection with the revaluation scam happened in the Tindivanam camp in April/May 2017. “The DVAC is conducting the inquiry and they have taken all the answer scripts.

Our inquiry will be a parallel internal inquiry,” source added. The inquiry committee will also scrutinise answer sheets from Tiruchi and Coimbatore zones.

“The scandal has happened in the previous year. We have already initiated the corrective measures. The guilty will not go unpunished,” Anna University Vice-Chancellor M.K. Surappa said.

NEWS TODAY 27.06.2026