Tuesday, January 15, 2019

தமிழகத்தில் பட்டையை கிளப்பும் பிரியாணி பிசினஸ்: ஆண்டுக்கு ரூ.4.500 கோடி வருவாய்

Published : 14 Jan 2019 12:01 IST

Updated : 14 Jan 2019 15:22 IST

சங்கீதா கந்தவேல்  சென்னை




தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரியாணி விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பிரியாணிக்கு புகழ் பெற்ற அஞ்சப்பர், புஹாரி, ஜூனியர் குப்பண்ணா, அசீப் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாகட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் பெருமளவு கிளைகள் பரப்பி வளர்ந்து வருகின்றன. சென்னையை தவிர மற்ற பல நகரங்களிலும் பிரியாணி விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பிரியாணி விற்பனையில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் மேல் வர்த்தகம் செய்கின்றன.

இவை மட்டுமின்றி அமைப்பு சாரா நிறுவனங்கள், தனிநபர்கள், அந்தபகுதிகளில் மட்டும் உள்ள உள்ளூர் கடைகள் மூலம் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பிரியாணி விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு பிரியாணி மூலம் 4,500 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பெரு நிறுவனங்களை பொறுத்தவரையில் ஒவ்வொன்றும் மாதத்துக்கு 25 லட்சம் ரூபாய் என்ற அளவில் பிரியாணி மூலம் வர்த்தகம் செய்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் என்ற அளவில் ஒரு நிறுவனம் பிரியாணியை வர்த்தகம் செய்ய முடிகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரு நிறுவனங்கள் நடத்தும் கடைகளில் பிரியாணி 180 ரூபாய் முதல் 600 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் அமைப்பு சாரா உள்ளூர் கடைகளில் விற்கப்படும் பிரியாணி 50 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நாளொன்றுக்கு 10 முதல் 15 கிலோ என்ற அளவில் பிரியாணி (ஒரு கிலோ பிரியாணியை 8 முதல் 10 பேர் சாப்பிடலாம்) தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களும் கணிசமான லாபம் ஈட்டி வருகின்றன. சிறிய கடைகளில் அரை பிளேட் பிரியாணி 70 முதல் 90 ரூபாய்க்கும், கால் பிளேட் பிரியாணி 40 ரூபாய் முதல் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


தமிழகத்தில் பிரியாணி தொழில் வளர்ந்து வருவது குறித்து தலப்பாகட்டி நிர்வாக இயக்குநர் சதீஷ் நாகசாமி கூறுகையில் ‘‘தமிழகம் முழுவதும் பிரியாணி தொழில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சந்தை விரிவடைந்து வருவதால் தேவையும் உயர்ந்து வருகிறது. நாள்தோறும் 4 ஆயிரம் கிலோ பிரியாணியை நாங்கள் தயாரிக்கிறோம். தமிழகம் முழுவதும் இதனை 40 ஆயிரம் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு செல்கின்றனர். எங்கள் நிறுவனத்தை பொறுத்தவரையில் மேலும் 100 கடைகள் திறந்தாலும், அதற்கு தேவையான அளவு வர்த்தகம் நடைபெறும் அளவுக்கு தற்போது தேவை உள்ளது’’ எனக் கூறினார்.

இதுபோலவே அசீப் பிரியாணி நிர்வாக இயக்குநர் திலிப் குமார் கூறுகையில் ‘‘நாள்தோறும் 30 ஆயிரம் பேர் சாப்பிட்டு செல்கின்றனர். திருப்தியான சாப்பாடு என்பதால் மக்கள் பிரியாணியை விரும்புகின்றனர்’’ எனக் கூறினார்.

எனினும் பிரியாணி தொழிலை பொறுத்தவரை சில சவால்களும் உள்ளன. பெருமளவும் குடும்பம் சார்ந்த தொழில் என்பதால் முடிவெடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. சுவை மாறினால் வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை, சமையலுக்கு அதிகமான தொழிலாளர்களை சார்ந்து இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன.
'சர்கார்' முதல் நாள் வசூலை முந்தாத 'பேட்ட' + 'விஸ்வாசம்' வசூல்: என்ன காரணம்?

Published : 14 Jan 2019 19:07 IST

ஸ்கிரீனன்




'சர்கார்' படத்தின் முதல் நாள் வசூலை 'பேட்ட' + 'விஸ்வாசம்' வசூல் இணைந்து முறியடிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

ஜனவரி 10-ம் தேதி 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. முதல் முறையாக தமிழக பாக்ஸ் ஆபிஸில் ரஜினி - அஜித் படங்களின் நேரடி மோதலால் வசூல் எப்படியிருக்குமோ என்று விநியோகஸ்தர்கள் முதலில் கொஞ்சம் தயங்கினார்கள்.

ஆனால், இரண்டு நடிகர்களின் படமுமே நல்ல வசூல் செய்து வருகிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் படக்குழுவினர் என அனைவருமே பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த இரண்டு படங்களின் வசூலால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகிறார்கள். காரணம் என்னவென்றால், முதல் நாள் வசூலில் இரண்டு படங்களுமே 'சர்கார்' மற்றும் 'மெர்சல்' படத்தின் முதல் நாள் வசூலைத் தாண்டவில்லை. ஏன், 'பேட்ட' - 'விஸ்வாசம்' ஆகிய படங்களின் முதல் நாள் தமிழக மொத்த வசூல் என்பது 28 கோடியைத் தாண்டியுள்ளது. ஆனால், 'சர்கார்' படத்தின் முதல் நாள் வசூல் 32 கோடி.

ரஜினி மற்றும் அஜித் ஆகிய நட்சத்திரங்கள் இணைந்துமே, விஜய் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்க முடியவில்லை என்று கொண்டாடி வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று சில விநியோகஸ்தர்களிடம் கேட்டோம்.

அதற்கு அவர்கள் கூறியதவாது:

''முதலில் 'மெர்சல்' மற்றும் 'சர்கார்' இரண்டுமே தனியாக வெளியான படங்கள். இரண்டுக்குமே எந்தவொரு படமும் போட்டியாக வெளியாகவில்லை. 'சர்கார்' மட்டும் தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகள் வரை வெளியானது. ஆனால், 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' தனித்தனியாக சுமார் 450 திரையரங்குகள் வரை வெளியாகியுள்ளது.

'மெர்சல்' மற்றும் 'சர்கார்' இரண்டுமே படம் வெளியான அடுத்த நாளே சர்ச்சை தொடங்கிவிட்டது. இதனை முன்வைத்து மக்கள் கூட்டம் அதிகரித்தது. 'சர்கார்' படம் வெளியான சில நாட்களுக்கு முன்பு வரை சர்ச்சைகள் தொடர்ந்து. வெளியான அடுத்த நாளே அரசாங்கத்தை விமர்சித்துள்ளனர் என்று மீண்டும் சர்ச்சையானது. அதற்குப் பிறகு அக்காட்சியை படத்திலிருந்தே நீக்கினார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டு படத்துக்குமே ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதியளித்தது. ஆனால், 'பேட்ட' - 'விஸ்வாசம்' இரண்டுக்குமே ஸ்பெஷல் ஷோவுக்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை.

அதே போல், 'சர்கார்' படத்தின் முதல் நாள் வசூலைப் போல் இன்னொரு விஜய் படம் வசூல் செய்யுமா என்பதில் சந்தேகம் உள்ளது. ஏனென்றால், அரசை விமர்சித்தது உள்ளிட்ட காரணத்தைக் கணக்கில் கொண்டு அனுமதியளிக்க மாட்டார்கள் என நினைக்கிறோம்.

'சர்கார்' படத்தின் முதல் நாள் வசூல் என்பது முறியடிக்கக் கூடியது தான். ஆனால், அதற்கு ரஜினி அல்லது அஜித் படங்கள் தனி வெளியீடாக வந்திருக்க வேண்டும். இரண்டுமே சேர்ந்து வந்ததால் தான் முறியடிக்க முடியாமல் போனதாக கருதுகிறோம். 'தெறி', 'மெர்சல்' கூட்டணி இணைந்திருக்கும் 'தளபதி 63' கூட்டணி கண்டிப்பாக 'சர்கார்' முதல் நாள் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

தொலைக்காட்சிகளில் பொங்கலுக்கு ஒளிபரப்பாகும் புதிய படங்கள்: முழு விவரம்!

By எழில் | Published on : 14th January 2019 11:59 AM |



@vijaytelevision

இந்தப் பொங்கல் சமயத்தில் சன், விஜய், ஜீ தமிழ் ஆகிய மூன்று தொலைக்காட்சிகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.


சமீபத்தில் வெளிவந்த ராட்சசன், சண்டக்கோழி 2, சாமி 2, பரியேறும் பெருமாள், வட சென்னை, நடிகையர் திலகம் ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படவுள்ளன. நேற்று, விஜய் டிவியில் செக்கச் சிவந்த வானம் ஒளிபரப்பானது.

சன் டிவி

செவ்வாய்

காலை 11 மணி - விஐபி 2
மாலை 6.30 மணி - சண்டக்கோழி 2

புதன்

காலை 11 மணி - ராட்சசன்
மாலை 6.30 மணி - தெறி 


விஜய் டிவி

செவ்வாய்

காலை 11 மணி - சாமி 2

மதியம் 2.30 - பரியேறும் பெருமாள்

புதன்

காலை 11 மணி - வட சென்னை

வியாழன்

மதியம் 2.30 மணி - கடைக்குட்டி சிங்கம்


ஜீ தமிழ் டிவி

திங்கள்

மாலை 4.30 - நடிகையர் திலகம்

செவ்வாய்

மாலை 5.30 மணி - ஜுங்கா

தைப்பொங்கல்: ஒன்பது கிரஹங்களின் ஆசி நிறைந்த உத்தம திருவிழா!


By - அஸ்ட்ரோ சுந்தரராஜன் | Published on : 14th January 2019 05:47 PM




தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தைமாதம் முதல் நாள் தைப்பொங்கல். சூரியனைப் பொங்கலிட்டு நன்றியுணர்வோடு வழிபாடு செய்கிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். மாடுகளுக்குப் பொங்கல் வைத்து வணக்கம் செலுத்துகிறோம். மூன்றாம் நாள் சிலபகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்னும் வீர விளையாட்டு நடைபெறும். சில பகுதிகளில், உறவினர்களோடு கூடி மகிழும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆறு, கடல் பகுதிகளில் உறவினர்கள், நண்பர்கள் கூடி மகிழ்வர்.


உத்தம வாழ்வு தரும் உத்திராயணம்

மக்கு ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள். அதில் உத்திராயணம் என்பது பகல் பொழுது. தக்‌ஷிணாயனம் என்பது இரவுப்பொழுது. அதில் தை மாதம் என்பது தேவர்களின் சூரியோதய காலமாகிய காலை பொழுதாகும். சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்யக்கூடிய தை 1 முதல், ஆனி 30 வரையிலான காலம் உத்தராயண புண்ணிய காலம் எனப்படும்.

இக்காலங்களில் பிறப்பவர்கள் மட்டுமின்றி இறப்பவர்களும் (இயற்கை மரணம்) புண்ணியம் செய்தவர்கள் எனப்படுகிறது. சங்கராந்தி துவங்கி சூரியன் வடதிசை நகரும் இந்த ஆறு மாதமும் அகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அற்புதக் காலம். பாரதப் போரில் பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்து புண்ணியமான இந்த மகரசங்கராந்தி வரும் வரை காத்திருந்து பின் பூவுலகு நீங்கினார். தெற்கு நோக்கி சூரியன் சஞ்சரிக்கும் காலமான ஆடி1 முதல் மார்கழி 30 வரையான தட்சிணாயனம் எனப்படுகிறது. உத்திராயணத்திற்கு இணையான சிறப்பு இக்காலத்தில் இல்லை. சுபகாரியங்கள் செய்வதற்கு உத்தராயண காலமே சிறந்தது.



உத்திராயண புண்ணிய காலங்களில் பிறந்தவர் நல்லதை நினைப்பான், நல்லதைச் செய்வான், நல்லதை உண்பான் என்றும் சொல்வார்கள்! சுபகாரியங்கள் உத்திராயண காலத்தில், அதாவது தை முதல் ஆனி வரையிலான மாதங்களில் செய்வது உத்தமமானது என்று கருதப்படுகிறது. ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம் தட்சிணாயனம் எனப் படுகிறது. சங்கராந்தி துவங்கி சூரியன் வடதிசை நகரும் இந்த ஆறு மாதமும் அகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அற்புதக் காலம்.பாரதப் போரில் பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்து புண்ணியமான இந்த மகரசங்கராந்தி வரும் வரை காத்திருந்து பின் பூவுலகு நீங்கினார்.

தீமை போக்கும் போகி

பொங்கலின் முதல் தினமான "போகி"யில் வீடு, வீடுகளுக்கு வெள்ளையடித்து அலங்கரித்து பழைய, தேவையில்லாத பொருட்கள், குப்பைகளை எரித்துத் தூய்மையைக் கொள்வர். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாகப் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்தப் போகி பண்டிகை அமைந்திருக்கும். போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். சுகாதார நோக்கில் இது மிகவும் அவசியமான ஒன்று. இந்தப் பண்டிகை துயரங்களை போக்குவதாக கருதப்படுவதால் அதை ‘போக்கி’ என்றார்கள். அந்த சொல்லே நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது.



ஜோதிடத்தில் இந்தப் போகியின் நாயகர்கள் யாரென்று தெரியுமா உங்களுக்கு? சனீஸ்வர பகவானும் சுக்கிர பகவானும் தான். பழைய, முதிய, கழிந்த போன்ற வார்த்தைகளுக்குக் காரகர் சொந்தக்காரர் சனீஸ்வரர் தான். உழைப்புக்கு சனீஸ்வர பகவானும் அதன் பலனான போக வாழ்விற்கு சுக்கிரனும் காரகமாக அமைந்தது பொருத்தம் தானே! புதிய விடியலான உத்திராயணத்திற்கு முன் தேவையற்ற விஷங்களைப் போக்கி சுத்தமாவதும் சிறப்பு தானே!

தித்திக்கும் பொங்கல்

ஆறு மாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளே தைமுதல் நாள். இந்த நாளையே மகரசங்கராந்தி என்பர். இந்நாளில் சூரியனை வழிபாடு செய்வதால் வாழ்வு செழிக்கும் என்று கூறுவர். சமஸ்கிருதத்தில் "சங்க்ரமன" என்றால், "நகரத் துவங்குதல்" என்று அர்த்தம். நவக்கிரகங்களில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் மூவரும் எப்போதும் ஒன்றாக (சில விதிகளுக்குட்பட்டு) பயணம் செய்வர். எனவே அவர்களை முக்கூட்டுகிரகங்கள் என்பர். சுக்கிரனும், புதனும் சூரியனுக்கு முன்னும், பின்னும் எப்பொழுதும் சுற்றி வரும். இவர்களின் இணைவே முக்கிய நிகழ்வுகளெல்லாம் ஏற்படுகின்றன. உலக பயிர்கள் சுபிட்சமாக வாழ மழையைத் தருவது சூரியன்.

போகிக்கு மறுநாளான தை முதல் தேதி பொங்கல் திருநாள். அன்று, புதுப்பானையில் புது அரிசியில் பொங்கலிடுவது தமிழர்களின் வழக்கம். அப்போது மஞ்சள், கரும்பு, நெல், வாழை என்று, வயலில் விளைந்தவற்றை எல்லாம் சூரிய பகவானுக்கு படைப்பார்கள். தொடர்ந்து, பொங்கல் வைத்து, பொங்கி வந்த பொங்கலை தலை வாழை இலையில் இட்டு, முதலில் சூரிய பகவானுக்குப் படைப்பார்கள். தொடர்ந்து, பொங்கலை அனைவரும் உண்டு மகிழ்வார்கள்.



தமிழர்கள் பொங்கல் திருநாளாய் இதனைக் கொண்டாடுகின்றனர். கிராமங்களில், புது நெல்லில் பொங்கல் வைத்து அறுவடையின் முதல் படையலை இயற்கைக் கடவுளான சூரியபகவானுக்கே அர்ப்பணிப்பர். பொங்கல் பிரசாதத்தை, குடும்பத்தில், வேலைக்காரர்களுக்கு, பக்கத்து வீட்டினருக்கு என்று அனனவருக்கும் கொடுத்து மகிழ்வர். யஜமானர் எல்லாவற்றையும் தனக்கே எடுத்துக் கொள்ளாமல், தன் வேலையாட்களுக்கும் உணவு, புது உடைகள் கொடுத்து அவர்தம் உழைப்பைக் கௌரவப்படுத்துவர். பகிர்வின் உன்னதத்தை உணர்த்தும் சடங்குகள்.

"புதிய" என்ற வார்த்தையின் நாயகனே நம்ம சுக்கிரன் தான். புத்தாடை, புத்துணர்ச்சி, புது வீடு, புதிய வாகனம். இப்படி புதிய எனத் தொடங்குமிடத்திலெல்லாம் சுக்கிரனின் ஆட்சிதான். ஆக போகியன்று பழைய கஷ்டங்கள், பழைய பொருட்கள், பழமையைக் குறிக்கும் இருட்டு ஆகிய அனைத்தும் விலகி புதிய விடியலை ஏற்படுத்தும் தினம் என்பதால் சுக்கிரனுக்குரிய தினம்தானே! அதிலும் சுக்கிர வாரத்திலேயே அமைந்தது சிறப்பு தானே! பொங்கலன்றும் பாருங்கள். புதிய பானை, புதிய அரிசி ஆக எல்லாம் சுக்கிர மயம்தான். மண்ணின் அதிபதி சனி. அது பானையாகி உருபெற்றால் அதன் காரகன் சுக்கிரன். செந்நெல்லின் அதிபதி சந்திரன். அது விளையக் காரணம் சுக்கிரன். மஞ்சளுக்கும் இனிய செங்கரும்பிற்கும் அதிபதி குரு. அது விளையக் காரணம் சுக்கிரன். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கவும் பானையில் பொங்கல் பொங்கவும் காரணன் சுக்கிர பகவான் தாங்க.



எல்லா பொருட்களும் இருந்தாலும் பொங்கல் பொங்க நெருப்பு வேண்டுமல்லவா? ஜோதிடத்தில் ஆண்மையின் காரகராக நெருப்பு கிரகமான செவ்வாயும் பெண்மையின் காரகராகச் சுக்கிரனும் கூறப்பட்டுள்ளது. புதிய மணமகனும் புதிய மணமகளும் சேர்ந்திருக்கும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சியைப் போன்றே இந்த வருடம் செவ்வாய் கிழமையில் சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் சுக்கிர சேர்க்கையில் பொங்கல் திருவிழா அமைந்திருக்கிறது. இந்தச் செவ்வாய் சுக்கிர சேர்க்கை இந்த ஆண்டு திருமணத்திற்காக காத்திருக்கும் காளையருக்கும் கன்னியருக்கும் இந்த ஆண்டு திருமணம் நடந்துவிடும் எனும் செய்தியை கூறும் விதமாக அமைந்திருக்கிறது. பொங்கல் பொங்கும்போது இடும் குலவை சத்தம் என்னும் இசைக்கும் காரகன் சுக்கிரனே.

மாட்டுப்பொங்கல்

பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப் பொங்கல். வயலும், வயல் சார்ந்த இடமுமான, மருத நிலத்துக்குரிய தெய்வம் இந்திரன். நிலத்தை உழுவதற்குப் பயன்படுவது மாடுகள். இவர்களை நன்றியுடன் நினைத்து 3 நாட்கள் மக்கள் விழா எடுத்து மகிழ்கின்றனர். உழவுத் தொழில் சிறப்பாக நடைபெற மனிதனுக்கு உதவியாக இருப்பவை மாடுகள். அந்த வாயில்லா ஜீவன்களுக்கு இந்த நாளில் நன்றி தெரிவிக்கப்படுகிறது. அதோடு, பசுவையும், அதன் கன்றுவையும் நீராட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றின் கொம்பிலும், கழுத்திலும் சலங்கை, மாலைகள் அணிவித்து அலங்கரித்து பூஜை செய்வார்கள். சுவைமிகு பொங்கலும் உண்ணக் கொடுப்பார்கள்.

பசுவை ஸ்ரீமகாலக்ஷமியின் அம்சம் என்போம். ஆக பால் தரும் பசுவும் சுக்கிரனின் அம்சமே. அனைத்துக் கால்நடைகளும் சந்திர அம்சமாகும். நீர் மற்றும் மழையின் காரகர்களும் சந்திர பகவானும் சுக்கிரபகவானுமே ஆவர். விவசாயத்தின் காரகனும் சந்திரனும் சுக்கிரனுமே! பண்டைய தமிழர்கள் மாட்டை செல்வமாக கருதினார்கள். மாடு என்றால் செல்வம் என்ற பொருளும் உண்டு. இதனால்தான் அவர்கள் மாட்டை ‘ஆநிரை’ என்றும் அழைத்தார்கள். செல்வத்தின் காரகனும் மஹாலக்‌ஷ்மியின் சகோதரர் மற்றும் ராஜ கிரகமான சந்திரனும் மஹாலக்‌ஷ்மியை அதிதேவதையாகக் கொண்ட சுக்கிரனுமே ஆகும்.

கனுப்பொங்கல்

பிராமண சம்பிரதாயங்களில் மாட்டுப்பொங்கன்று காலை கனுப்பொங்கல் எனச் சகோதரிகளால் சகோதரர்கள் நலம் சிறக்க கொண்டாடப்படுகிறது. ”பொங்கலன்று அனைவர் இல்லங்களிலும் செய்யப்படும் சிறப்பு உணவு வகை சர்க்கரைப் பொங்கல். அடுத்ததாக கணுக்கூட்டு. காணும் பொங்கல் (அ) கனுப்பொங்கல் அன்று செய்வதால் கணுக்கூட்டு என்ற பெயர் வந்தது. அப்போது பெண்கள், உடன்பிறந்த சகோதரர்கள் நலம் வேண்டி, காக்கைக்கு கனுப்பிடி வைப்பார்கள். சாதத்தில் மஞ்சள்பொடி சேர்த்து மஞ்சள் நிறத்திலும், சாதத்துடன் சுண்ணாம்பு – மஞ்சள்பொடி சேர்த்து சிவப்பு நிறத்திலும், வெறும் சாதமாக வெள்ளை நிறத்திலும் சிறிய உருண்டைகள் செய்வார்கள். இந்த உருண்டைகள் மற்றும் முதல் நாள் செய்த சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை மஞ்சள் இலையில் போட்டு, குளக்கரை அல்லது மொட்டை மாடியில் வைப்பார்கள். பிறகு சாமி கும்பிட்டு, பெரியோர்களிடம் ஆசி பெற்று தேங்காய் சாதம், புளியோதரை, தயிர்ச்சாதம் போன்ற கலந்த சாதத்துடன் கணுக்கூட்டை தொட்டுச் சாப்பிடுவது வழக்கம். ஜோதிடத்தில் சகோதர காரகர் செவ்வாய் பகவான்.

ஏறு தழுவல் எனப்படு ஜல்லிக்கட்டு



ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன. வீரம் மற்றும் விளையாட்டின் காரகர் செவ்வாய் பகவான் ஆவார். பல தடங்கல்களுக்கு பின் மீண்டும் ஜல்லிக்கட்டு கம்பீரமாக நடைபெறுவதைக் குறிக்கும் வண்ணம் இந்த ஆண்டு பொங்கல் திருவிழா செவ்வாய் கிழமையில் அமைந்திருக்கிறது.



வீர் விளையாட்டிலும் சில விபரீதங்கள் நிகழத்தானே செய்கிறது? காளை மாட்டினால் ஏற்படும் விபத்திற்கு காரகர் ராகு பகவான் ஆவார். திருவிழா சமயங்களில் ஏற்படும் கொத்து கொத்தான மரணங்களுக்குக் காரகர் கேது பகவான் ஆவார். அதே நேரத்தில் நாம் கவனத்தோடு செயல்படும்போது மருத்துவத்தின் காரகர்களாகவும் ராகு-கேதுக்களே பொறுப்பேற்கிறார்கள். எனவே இந்தப் பொங்கல் திருவிழாவில் எல்லாவற்றையும் அளவோடு செய்து மகிழ்வோடு கொண்டாடினால் விபத்துக்களோ விபரீதங்களோ நேராது. அமிர்தம் கூட அளவுக்கு மிஞ்சினால் விஷம் தானே!

காணும் பொங்கல்

பொங்கல் கொண்டாட்டத்தின் கடைசி நாள் காணும் பொங்கல். இது உறவினர்களையும், நண்பர்களையும் காணும் நாளாகும். இந்த நாளில் சுற்றுலா செல்வது விருப்பமானதாக மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள வர்கள் கடற்கரை அல்லது ஆற்றங்கரைகளுக்கோ, அந்த வாய்ப்பு இல்லாதவர்கள் வயல்வெளிகளுக்கோ குடும்பத்தோடு சென்று மகிழ்கிறார்கள். காணும் பொங்கலுக்கு ‘கன்னிப் பொங்கல்’, ‘கன்றுப் பொங்கல்’, ‘காளையர் பொங்கல்’ என்ற வேறு பெயர்களும் உண்டு. நவக்கிரகங்களில் பெண்களை குறிப்பவர் சந்திரன், சுக்கிரன் மற்றும் புதன் ஆவர். சில ஊர்களில் ‘மாரியம்மன் பொங்கல்’ என்றும் இதை அழைக்கிறார்கள். தங்களைத் தேடி வரும் எளியவர்களுக்குப் பொருட்களை தானமாக வழங்கி, அதனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சியைக் கண்டு நாமும் மகிழ்வதே காணும் பொங்கலின் நோக்கம். இந்த நாளில் எந்தவொரு ஏழை உதவிக் கேட்டாலும் ‘இல்லை’ என்று சொல்லாமல் உதவ வேண்டும்.



ஆகப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினால் உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைவதோடு அனைத்துக் கிரகங்களின் ஆசியும் கிடைக்கும்படியாக அமைந்துள்ளது. என்ன நேயர்களே! இந்தப் பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழலாமல்லவா?

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510
தேவை மனநல ஆலோசனை மையங்கள்!

By அ. ஆனந்தன் | Published on : 15th January 2019 01:36 AM |

இன்றைய இந்திய இளைஞர்கள், வேகமாக ஆதிக்கம் பெற்று வரும் மேலைநாட்டு நாகரிக மோகத்தில் மூழ்கியுள்ளதால் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.

ராகிங், ஈவ் டீசிங்கில் ஈடுபடுவது, மது-போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, இணையதள-செல்லிடப்பேசி போன்ற தகவல் தொடர்புச் சாதனங்களின் அறிவியல் வளர்ச்சியைத் தவறாகக் கையாளுதல், பெருகிவரும் பாலியல் குற்றங்கள், திரைப்பட காட்சிகளைப் பார்த்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு பலவிதமான மோசடிகளில் ஈடுபடுதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் எனப் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.

மேற்கண்ட நிலை மாற, அனைத்துக் கல்வி நிலையங்களிலும், கல்லூரி விடுதிகளிலும், இளைஞர்கள் தங்கும் ஓய்வு விடுதிகளிலும் மனநல ஆலோசனை மையங்கள் தொடங்குவது அவசியம். தகுதியும் தேர்ச்சியும் பெற்ற மனநல மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர்கள், சமூகப் பணியாளர்கள், தன்னார்வ ஆர்வலர்களின் வழிகாட்டுதலுடன் இந்த மையங்கள் செயல்படவேண்டும். 

குறிப்பாக, மாணவ, மாணவியருக்கு பாலியல் உணர்வுகள் துளிர்விடும் பருவத்தில், உடல், மன ரீதியாக ஏற்படும் மாற்றங்களினால் சரியான வழிகாட்டுதல் இன்றி திசை மாறிச் செல்ல தூண்டல்கள் பல ரூபங்களில் இன்று அதிகரித்துள்ளன.

பெற்றோரைச் சார்ந்திருக்கின்ற நிலையிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகச் செயல்பட நினைக்கும் காலகட்டம் இளம் வயது. சக நண்பர்களோடு சேர்ந்து கொண்டு தவறான பாதையை சில இளம் வயதினர் நாடிச் செல்வதுண்டு. ஆர்வக் கோளாறால் போதைப் பொருள்களுக்கு அடிமையாதல், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுதல், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படுதல் ஆகிய விளைவுகளைச் சந்திக்கின்றனர். எனவே, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புக்குரிய மாணவர்களின் வயது அளவிலேயே மனநல மையங்கள் செயல்படுவது மிகவும் சிறந்தது. 

சட்டத்தின் கெடுபிடிகள் மூலம் ஈவ் டீசிங் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். இளம் வயதினரைக் கைது செய்வது, போலீஸ் விசாரணை, நீதிமன்ற விசாரணை என்பது மற்ற இளைஞர்களுக்கு எச்சரிக்கையாக அமையுமே தவிர, ஆரோக்கியமான வழிகாட்டல் அல்ல. பிரச்னைக்குள்ளாகும் மாணவர்களை வகுப்பறையில் ஆசிரியர்கள் கண்டிப்பது, அடிப்பது தவறான அணுகுமுறையாகும். அத்தகைய மாணவர்களைப் பரிவுடன் தனியே அழைத்துப் பேசி மனநல மையத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். உரிய ஆலோசனையை உளவியல் ஆலோசகர்கள் வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர் தன்னுடைய நிலைமையை உணரவும், தான் செய்தது தவறு எனப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.

உடற்பயிற்சி, விளையாட்டு, என்.சி.சி., என்.எஸ்.எஸ். போன்றவற்றில் ஈடுபடுத்துவது போன்று மாணவர்களின் மன நிலையைச் சீர்படுத்த, நல்ல குறிக்கோள்களை அவர்கள் அமைத்துக் கொள்ள பள்ளிகள் உதவ வேண்டும். அதாவது, மன நலம் தொடர்பான பயிற்சி வகுப்புகள், யோகா, தியானம், பிரார்த்தனை, தன்னம்பிக்கை வளர உதவும் பயிற்சிகள் உள்ளிட்டவை அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கட்டாயமாக்கப்படவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்களின் குணக் கோளாறுகளையும் நடத்தைக் கோளாறுகளையும் தொடக்கத்திலேயே சரி செய்ய முடியும். உடல் நலத்தையும் மன நலத்தையும் காத்து நல்ல ஒழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்கலாம்.

பெற்றோரை கல்வி நிலையங்களின் நிர்வாகிகள் அடிக்கடி அழைத்துப் பேசி ஆலோசனை வழங்கி, குறைகளை நிவர்த்தி செய்யும்போது குடும்பச் சூழல் அமைதியாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைகிறது. இதைத் தொடர்ந்து பெற்றோர், உறவினரிடம் அன்பாகவும் பாசமாகவும் குழந்தைகள் நடந்து கொள்வர்.

பிரச்னை ஏற்படும்போது மாந்த்ரீகம், பில்லி சூனியம், செய்வினைஎன தகுதியற்றவர்களை நாடிச் சென்று பெரும் தொகையை இழந்து ஏமாற்றம் அடைகின்றனர். இறுதியில் பாதிப்பு தீவிரமாக தற்கொலை செய்துகொள்வோரும் உண்டு.

மனநல மருத்துவரையோ அல்லது உளவியல் ஆலோசகரையோ நாடிச் சென்று முறையான ஆலோசனை பெற, சிகிச்சை பெறப் பலர் தயக்கம் காட்டும் நிலை மாற வேண்டும். மனநல பாதிப்பு ஏற்படும்போது, ஆலோசனைகள், தொடர் சிகிச்சை, குடும்ப அங்கத்தினர்களின் ஒத்துழைப்பு மூலம் முழுமையாகக் குணம் பெறலாம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் சிறிய அளவில் மனநல காப்பகங்களை அமைப்பது அவசியம். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மனநலம், மன நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மனநல ஆலோசனைமையங்கள் மூலம் நடத்தலாம். இதன் மூலம் மூட நம்பிக்கைகளைப் போக்க முடியும்.

திரைப்படங்களில் பெண்கள் கேலி செய்யப்படுவதையும் ராக்கிங் கட்சிகளையும் அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகளையும் தடை செய்ய வேண்டும். குறிப்பாக, நாகரிக வளர்ச்சிக்கேற்ப கௌரவமான ஆடைகளை கல்லூரி மாணவிகள் அணிவது நல்லது.
தற்கொலை மரணங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் இறங்குபவர்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவது குறித்து, சமூகநல அக்கறையுடன் ஊடகங்கள் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும். ஏனெனில் இது போன்ற செய்திகள் மற்றவர்களுக்கு மன ரீதியான தூண்டுகோலாக அமைகிறது. 

பல துறைகளில் புதுமைகளைப் புகுத்தி வரும் தமிழக அரசு, பள்ளிகளில் மன நல ஆலோசனை மையங்களை உடனடியாகத் தொடங்குவது தற்போதைய அவசரக் கடமையாகும்.
பதிவிறக்கம் செய்த தீர்ப்பு நகலை ஏற்க வேண்டும் * அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : ஜன 15, 2019 03:20


சென்னை, பதிவிறக்கம் செய்யப்பட்டு, வழக்கறிஞரால் சான்றளிக்கப்பட்ட, நீதிமன்ற தீர்ப்புகளை அதிகாரிகள் ஏற்று, நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இதுகுறித்து, அனைத்து துறைகள், அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பும்படி, தலைமை செயலருக்கும் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், குட்டப்பாளையம் கிராமத்தில், ௩.௨௫ ஏக்கர் விவசாய நிலத்துக்கு, மின் இணைப்பு வழங்க கோரி, உயர் நீதிமன்றத்தில், குணசேகர செந்தில் என்பவர், மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வாசுதேவன் ஆஜரானார்.மனுவை விசாரித்த, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:மீட்டர் பெட்டி வரை, மின் இணைப்பு வழங்குவதை, வாரியம் உறுதி செய்ய வேண்டும். அதன்பின், நிபந்தனைகளின்படி, மின்சாரத்தை, மனுதாரர் பயன்படுத்த வேண்டும். விசாரணையின்போது, நீதிமன்ற உத்தரவுகள் தாமதமாக வழங்கப்படுவதாக, மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.வழக்கறிஞர்களிடம் இருந்து பொதுவாக, சான்றளிக்கப்பட்ட உத்தரவின் நகல், தீர்ப்புகள் வருவதற்கு நீண்ட தாமதம் ஏற்படுவதாக, புகார்கள் கூறப்படுகின்றன. 

நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள், நிலுவையில் உள்ளன. உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வழக்குகள் அனைத்திலும், விரைந்து நகல்கள் வழங்குவது, நடைமுறையில் சிரமாமாக உள்ளது.உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட உடன், அசல் ஆவணங்களில், நீதிபதிகளின் கையெழுத்து இடப்படும். அந்த உத்தரவுகள், உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அவ்வாறு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டால், அவை, பொது தளத்தில் கிடைத்து விடும்.எனவே, தீர்ப்புகள், உத்தரவுகளில் நீதிபதிகள் கையெழுத்திட்ட பின், தாமதம் செய்யாமல், விரைவில், அவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த உத்தரவின் நகலை, உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, வழக்கில் சம்பந்தப்பட்டோர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பதிவிறக்கம் செய்யப்பட்ட உத்தரவின் நகலில், வழக்கு தொடுத்த வழக்கறிஞர், சான்றொப்பம் செய்ய வேண்டும். வழக்கறிஞரின் பெயர், பார் கவுன்சிலில் பதிவு எண், முத்திரை உடன், சான்றளிக்கப்பட்ட நகல் இருக்க வேண்டும். 

இந்த சான்றளிக்கப்பட்ட நகலை, வழக்கில் சம்பந்தப்பட்டோருக்கு தெரியப்படுத்தலாம்.இப்படி சான்றளிக்கப்பட்ட உத்தரவுகளை, அதிகாரிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த உத்தரவை, உயர் நீதிமன்ற இணையதளத்தின் வழியாக, சோதித்து பார்க்க வேண்டும். பின், உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த உத்தரவு நகல்களை, அதிகாரிகள் நிராகரிக்கக் கூடாது. அவற்றை ஏற்று, உத்தரவுப்படி நடக்க வேண்டும். இதில் மீறல்கள் இருந்தால், பாதிக்கப்படும் நபர்கள், நீதிமன்றத்தை அணுகலாம். எனவே, தலைமைச் செயலருக்கு, இந்த உதத்தரவு பற்றி தெரியப்படுத்த வேண்டும்.பதிவிறக்கம் செய்த, சான்றளிக்கப்பட்ட உத்தரவின் நகல்களுக்கு, முறையாக பதில் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், அனைத்து துறைகளுக்கும், அதிகாரிகளுக்கும், நான்கு வாரங்களுக்குள், தலைமைச் செயலர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இதே நடைமுறையை பின்பற்றும்படி, கீழமை நீதிமன்றங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலும், சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.உத்தரவை அமல்படுத்தியது குறித்து, பிப்., ௧௪ல், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.***
'ஓசி மட்டன்' கேட்டு அடாவடி முதியவரை தாக்கிய போலீசார்

Added : ஜன 15, 2019 01:28

சேலம், சேலத்தில், 'ஓசி'யில் ஆட்டுக்கறி கேட்டு, முதியவரை தாக்கிய, இரண்டு போலீஸ் அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சேலம், பனமரத்துப்பட்டி அடுத்த கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் மூக்குத்தி, 75. இவர், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே, புதன், ஞாயிறு என, இரண்டு நாட்கள், ஆட்டுக்கறி வியாபாரம் செய்து வருகிறார். உதவியாக, மனைவி பழனியம்மாள், 68, உள்ளார்.அன்னதானப்பட்டி போலீசார் சிலர், முதியவரிடம், அடிக்கடி ஓசியில் இறைச்சி வாங்கி செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, எஸ்.ஐ., பாலசுப்ரமணி, 55, சிறப்பு, எஸ்.ஐ., சிவபெருமாள், 45, ஆகியோர், ஜீப்பில் கறிக்கடைக்கு சென்றுள்ளனர்.முதியவரிடம், 2 கிலோ ஆட்டிறைச்சி தரும்படி சிவபெருமாள் கேட்டுள்ளார். 

முதியவர், 'கடந்த வாரம், 2 கிலோ கறி, ஓசியில் கொடுத்தாகி விட்டது. இம்முறை தர முடியாது' என, மறுத்துள்ளார். இதில், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த, எஸ்.ஐ., பாலசுப்ரமணி, முதியவரை தாக்கி, ஜீப்பில் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். அங்கு சக போலீசார் சேர்ந்து, முதியவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கு ஓடி வந்த பழனியம்மாளை, மிரட்டி வெளியேற்றினர்.முதியவரின் மகன் விஜயகுமார், 35, ஸ்டேஷனுக்கு சென்று, நடந்த சம்பவத்தை கேட்டபோது, அவரையும் தாக்கியுள்ளனர். பின், ரேஷன் கார்டை எடுத்து வரச் சொல்லி தந்தை, மகன் இருவரிடமும் வெள்ளைத் தாளில் கையெழுத்து பெற்று, 9:30 மணிக்கு, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.போலீசார் தாக்கியதில், பலத்த காயமடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பரிசோதனையில், விஜயகுமாருக்கு காதில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, கேட்கும் திறன் இழந்து விட்டது தெரிந்தது.இதற்கிடையே, 'வாட்ஸ் ஆப்'பில் பதிவான, 'கறிக்கடை வாக்குவாதம்' வேகமாக பரவியது. நிலைமையை சமாளிக்க, எஸ்.ஐ., பாலசுப்ரமணி, கறிக்கடைக்கு சென்று, பகிரங்கமாக கேட்ட மன்னிப்பும், 'வாட்ஸ் ஆப்'பில் பரவியது. இதன் எதிரொலியாக, இருவரையும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி, கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, உதவி கமிஷனர் ஈஸ்வரன் நடத்திய முதல்கட்ட விசாரணையில், போலீசார், அதிகார துஷ்பிரயோகம் செய்தது தெரிந்தது. தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.

NEWS TODAY 25.08.2026