Thursday, January 17, 2019


ஓய்வுபெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
By DIN | Published on : 17th January 2019 01:30 AM |



கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சாந்தி தாக்கல் செய்த மனுவில், நான் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள திருவள்ளுவர் நடுநிலைப் பள்ளியில் கடந்த 1973-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். கடந்த 32 ஆண்டுகளாக பணியாற்றிய பின் கடந்த 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றேன். இதனையடுத்து 2005-2006 கல்வி ஆண்டு முழுவதும் அதாவது 2006-ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை பணிநீட்டிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். ஆனால் எனது பணி திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தைக் கூறி, எனது கோரிக்கையை பள்ளியின் தாளாளர் நிராகரித்து விட்டார். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி எம்.வி.  முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கடந்த 32 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.அவர் மீது பணி தொடர்பாக ஒரு குற்றச்சாட்டுக்கூட இல்லை. ஆனாலும், பணி திருப்திகரமாக இல்லை எனக்கூறி பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டுள்ளது. கல்வியாண்டின் நடுவில் ஓர் ஆசிரியர் பணி ஓய்வு பெற்றால் அந்தப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவேதான் அந்த ஆசிரியர் விரும்பும்பட்சத்தில் கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற பொதுவான நடைமுறை உள்ளது.

இந்த நடைமுறை மனுதாரர் விவகாரத்தில் மறுக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுத்து பள்ளியின் தாளாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். 

மேலும், கல்வியாண்டின் நடுவில் ஒய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலன்கருதி அந்த கல்வியாண்டு முடியும் வரை பணியாற்ற பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

வருமானவரி வரம்பு ரூ. 5 லட்சமாக உயரும்?: பிப்.1-இல் மத்திய பட்ஜெட்

By DIN | Published on : 17th January 2019 04:00 AM 




ரூ.5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு வரிவிலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் 2019-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டின்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்த அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் வரும் சூழலில், வரி செலுத்தும் தனி நபர்களின் ஆதரவைக் கவரும் வகையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனத் தெரிகிறது. 

தற்போதைய நிலையில் ரூ.2.5 லட்சம் வரையில் ஈட்டப்படும் தனி நபர் வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு 5 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேலான வருவாய்க்கு 30 சதவீதமும் வரியாக வசூலிக்கப்படுகிறது.
80 வயதுக்கு மேற்பட்டோர் ஈட்டும் ரூ.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு தற்போது வரி விலக்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ரூ.5 லட்சம் வருவாய் ஈட்டும் ஒரு நபர், மருத்துவ மற்றும் போக்குவரத்துச் செலவினங்களாக தனது வரித் தொகையிலிருந்து ரூ.40,000 வரையில் கழித்துக் கொள்ள வழிவகை உள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் புதிய வரி விலக்கு வரம்பு தொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் நிதிச் செயல்பாடுகள் சற்று சுணக்கத்தை அடைந்தன. வரி விலக்கு வரம்பை உயர்த்தும் மத்திய அரசின் திட்டம் சமுதாயத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு பலனளிப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரி விலக்கு வரம்பை ரூ.5 லட்சத்துக்கு உயர்த்த வேண்டுமென இந்திய தொழிற் கூட்டமைப்பு (சிஐஐ), பட்ஜெட்டுக்கு முந்தைய தனது பரிந்துரைகளில் ஒன்றாகத் தெரிவித்துள்ளது. அத்துடன், சேமிப்பு நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில், பிரிவு 80 சி-இன் கீழ் வரும் செலவினங்களுக்கான வரம்பை ரூ.2.50 லட்சமாக உயர்த்தவும் இந்திய தொழிற் கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.

ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு, தனது பொருளாதார தொலைநோக்குக் கொள்கைகளை குறிப்பிட்டுக் காட்டுவதன் மூலமாக, வரும் தேர்தலிலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயலுகிறது. எனவே, அதிக அளவிலான கொள்கை முடிவுகளை மேற்கொள்ளாத வகையில், அந்த அரசு எவ்வாறு இத்தகைய முக்கிய மாற்றங்களை இடைக்கால பட்ஜெட்டில் கொண்டுவரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினரிடையேயும் மேலோங்கியுள்ளது. 

இதனிடையே, நேரடி வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டம் குறித்த அறிக்கை வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிடுவது கண்டனத்துக்குரியதாக இருக்கும்.

நேரடி வரி விதிப்பு குறித்த புதிய சட்டமானது, வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம், வரி செலுத்தும் வரம்புக்குள் அதிகமான மக்களை கொண்டுவரவும், பாரபட்சமில்லாத வகையிலானதாக வரி விதிப்பு அமைப்பை மாற்றுவதற்கும் முயற்சிக்கப்படுகிறது.

அத்துடன், பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தை குறைப்பதன் மூலம் நிறுவனங்களிடையேயான ஆரோக்கியமான போட்டியை அதிகரிக்கவும், சட்ட நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் இதர வரி விலக்கு வரம்புகளை வழக்கொழிக்கவும் இந்த புதிய நேரடி வரி விதிப்பு விதிகள் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

தன்னிகரற்ற தலைவர்!


By கே. மகாலிங்கம் | Published on : 17th January 2019 01:17 AM |

இன்று தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள். 1972-ஆம் ஆண்டு முதல் 1987 வரை நான் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் நேர்முக உதவியாளராக பணியாற்றியுள்ளேன்.

அந்தக் காலகட்டத்தில் புரட்சித் தலைவர் இல்லம் அமைந்துள்ள ராமாபுரம் பகுதிக்கு நந்தம்பாக்கத்திலிருந்து வரும் கார்களும், பேருந்துகளும் குறுகிய பாதையாக இருந்த சாலையில்தான் இரு மார்க்கத்திலும் செல்ல வேண்டும். அந்தக் காலத்தில் 54ஏ என்ற எண்ணுள்ள சுந்தரம் மோட்டார்ஸ் என்ற பேருந்தும் மற்றும் சில அரசு பேருந்துகளும் அந்த வழியாகத்தான் சென்று வரும்.

மணப்பாக்கம் ஆற்றின் குறுக்கே ஒரு வழிப்பாதையாக பாலம் இருக்கும். அந்தக் குறுகிய பாலத்தில் ஒரு புறம் பேருந்தோ அல்லது கார்களோ வரும் போது மறு பாதையில் வரும் வண்டிகள் நின்று தான் போக வேண்டும். எம்ஜிஆரின் ராமாபுரம் தோட்டத்தில் சாலை மிக குறுகியது. சிறிது ஓரமாக போனால்கூட போகும் வண்டிகள் எடை தாங்காமல் சரிந்து விடும்.
அந்தச் சாலையில் வரும் பேருந்துகள் சில சரிந்து விழுந்து விடும். உடனே அதில் பயணிக்கும் பொதுமக்கள் பேருந்திலிருந்து கீழே விழுந்து விடுவார்கள். பேருந்திலிருந்து விழும் பொது மக்கள் விழும் சத்தம் கேட்டு, தோட்டத்தின் உள்ளே இருக்கும் நானும் மற்றவர்களும் பேருந்தில் வந்தவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு டீ, காபி போன்றவைகள் தந்து ஆசுவாசப்படுத்துவோம். இது போன்ற சம்பவங்கள் மூன்று அல்லது நான்கு முறை நடந்துள்ளது. 

இந்தச் சம்பவங்கள் நடக்கும்போது தோட்டத்தில் எம்ஜிஆர் இருந்தால், அவரே நேரில் வந்து ஆறுதல் கூறுவார்.இவ்வாறு இருந்த சமயத்தில் 1977 ஜூன் 30-ஆம் நாள் தமிழக முதல்வராக எம்ஜிஆர் பொறுப்பேற்றார். அவர் முதல்வரான பிறகும் இதே நிலை நீடித்தது.

மணப்பாக்கம் குறுகிய பாலத்தில் எம்ஜிஆரின் கார், மறுபக்கம் வரும் வாகனங்களுக்கு வழி விட்டுத்தான் செல்லும். முதல்வராக எம்ஜிஆர் பொறுப்பேற்றதும் போக்குவரத்துத் துறை அமைச்சராக சி. பொன்னையன் பதவி ஏற்றார். அவரிடம் இந்த விவரத்தைக் கூறி, ராமாபுரம் சாலையையும் மணப்பாக்கம் பாலத்தையும் அகலப்படுத்த வேண்டும் என்று கூறினேன். எம்ஜிஆர் அனுமதி கொடுத்தால் உடனடியாக உத்தரவு போடலாம் என்று அவர் கூறி விட்டார். 

எம்ஜிஆரிடம் இரண்டு, மூன்று முறை ராமாபுரம் சாலையைப் பற்றியும், பாலத்தை அகலப்படுத்துவது குறித்தும் அனுமதி கேட்ட போது, அனுமதி தர மறுத்து விட்டார். எனக்காக சாலையை அகலப்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சியினர் குறை கூறுவார்கள்; தேவையில்லை என்று கூறிவிட்டார். அமைச்சர் பொன்னையன் கூறியும்கூட எம்ஜிஆர் மறுத்து விட்டார்.
1980-இல் எம்ஜிஆர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று அவர் முதல்வராக பதவியேற்றபோது, போக்குவரத்துத் துறை அமைச்சராக முத்துசாமி பொறுப்பேற்றார். 1982-ஆம் ஆண்டு நந்தம்பாக்கம் முதல் பூவிருந்தவல்லி வரை உள்ள சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு திட்டம் போடப்பட்டது. அப்போதுதான் அந்தச் சாலை அகலப்படுத்தப்பட்டது. பாலமும் அகலப்படுத்தப்பட்டது.
முதல்வராக பத்தாண்டுகள் ஆட்சி செய்தாலும் தனக்கென அரசு அதிகாரத்தை அவர் துஷ்பிரயோகம் செய்யவில்லை. தன்னுடைய சொந்தக் காரையே பயன்படுத்தினார். அதற்கான பராமரிப்பு, பெட்ரோல் செலவை தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து செய்தார்.

1977-இல் எம்ஜிஆர் முதல்வரானபோது, தான் பயணிக்கும்போது பொது மக்களுக்கு தன்னால் எந்தவித இடையூறோ, சிரமமோ ஏற்படக் கூடாது என்று தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதே போன்று காரில் செல்லும் போது ஒலி எழுப்பான் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார். இதை அவர் தனது இறுதிக் காலம் வரை கண்டிப்புடன் கடைப்பிடித்து வந்தார்.

தன்னிடம் பணிபுரியும் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை யாரையும் அவர்களின் பெயர்களைச் சொல்லி அன்போடு அழைப்பார். அவர்களின் தொழிலைக் குறிப்பிட்டு யாரையும் அழைக்க மாட்டார். 

அவரிடம் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஒரு முறை கதிரேசை கூப்பிடு என்றார். நான் அதற்கு டிரைவரையா என்று கேட்க, உடனே அப்படிச் சொல்லக் கூடாது என்று எம்ஜிஆர் கூறினார். மேலும், அவர்களின் பெயர்களையோ அல்லது அடைமொழியோடு அழைப்பதால் அவர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். கார் ஓட்டியை டிரைவர் என்றோ, வாயில் காப்பாளனை வாட்ச்மேன் என்று தொழில் ரீதியாக அழைத்தால் அவர்களுக்குப் பரிவினை ஏற்படுத்துவது போலாகும். இதைத் தவிர்க்கவே நான் எல்லோரையும் அவர்களின் பெயரை வைத்து அழைக்கிறேன் என்று எனக்கு விளக்கம் அளித்து அறிவுரை கூறினார்.

அவர் ஆட்சியில் இருந்தவரை, தன்னிடம் பணியாற்றிய அரசு அதிகாரிகளையோ, அலுவலர்களையோ, ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளையோ தன்னுடைய சொந்த விஷயங்களுக்கு என்றுமே பயன்படுத்திக் கொண்டதில்லை.

இதுபோன்ற பல உயர்ந்த பண்புகளை அவரிடம் நாம் காணலாம். அவர் மறைந்து 32 ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் வாழ்கிறார்.
மதுரைக்கு வழி! காட்டுமா 'செம்மொழி' எக்ஸ்பிரஸ் ரயில்... சும்மா நிற்கும் நேரத்தில் இயக்கலாமே!

Added : ஜன 17, 2019 00:17




கோவை:மன்னார்குடியில் இருந்து கோவை வரை இயக்கப்படும், செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை, சும்மா நின்றுகொண்டிருக்கும் இடைப்பட்ட நேரத்தில், மதுரை வரை நீட்டித்து இயக்க, பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மன்னார்குடியில் இருந்து தினமும் இரவு, 8:15 மணிக்கு புறப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சை, திருச்சி, ஈரோடு வழியாக மறுநாள் காலை, 4:45க்கு கோவை வந்தடைகிறது. 

கோவையில் இருந்து நள்ளிரவு, 12:30க்கு புறப்படும் ரயில் காலை, 7:40 மணிக்கு மன்னார்குடி சென்றடைகிறது.

காலை, 4:45 மணிக்கு கோவை வந்தடையும் ரயில் இரவு, 12:30 மணி வரை ஸ்டேஷனில் எவ்வித பயன்பாடுமின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது. போத்தனுார் - பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், கோவை - பொள்ளாச்சி, கோவை - பழநி இடையே பயணிகள் ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், கோவையில் இருந்து போத்தனுார், பொள்ளாச்சி வழியாக மதுரை, ராமேஸ்வரம் என தென்மாவட்டங்களுக்கு ஏற்கனவே இயக்கிய ரயில்களை, மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், பெட்டிகள் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களைக்கூறி, தெற்கு ரயில்வே தட்டிக்கழித்து வருகிறது.இந்நிலையில், சும்மா நின்று கொண்டிருக்கும், செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை, போத்தனுார், பொள்ளாச்சி வழித்தடத்தில், மதுரை வரை இயக்க, கோரிக்கை எழுந்துள்ளது.ரயில் பயணிகள் கூறுகையில்,'காலை, 4:45 மணிக்கு கோவை வந்தடையும் செம்மொழி ரயிலை, காலை, 7:00 மணியளவில் மதுரைக்கு இயக்கினால், பொள்ளாச்சி, பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், மிகவும் பயன் பெறுவர்' என்றனர்.'டீல்' நடக்கிறதா?போத்தனுார், பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, 'அல்வா' கிடைத்ததுதான் மிச்சம் என புலம்பும் பயணிகள், பஸ் உரிமையாளர்களுடன் இது தொடர்பாக, 'டீல்' நடப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
நான்கு ,நாட்களுக்கு,தமிழகத்தில்,கடுங்குளிர்!:எச்சரிக்கிறது வானிலை ஆய்வு மையம்


சென்னை:-இதுவரை இல்லாத அனுபவமாக, தமிழகத்தை குளிர் வாட்டி வருகிறது. இது, மேலும் அதிகரித்து, வரும் நான்கு நாட்களில், கடுங்குளிர் நிலவும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை காலம், 2018 டிச., 31ல் முடிந்தது. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவ மழை காலத்தில், நான்கு புயல்கள் உருவானாலும், 'கஜா' புயல் மட்டுமே, ஓரளவு மழை கொடுத்தது. அதிலும், புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால், மழைக்கான பலன் கிடைக்க வில்லை. அதேநேரம், டிச., முதல், பனிக் காலம் துவங்கியது. ஒன்றரை மாதமாக, தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் குளிர் வாட்டி எடுக்கிறது. தமிழகத்தில், முதன்முறையாக, ஆறு ஆண்டுகளில் இல்லாத குளிர், சென்னையில் பதிவானது.

வால்பாறை, ஊட்டி, குன்னுார், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில், பகலில் மூடுபனியும், இரவு மற்றும் அதிகாலையில், உறைபனியும் நிலவுகிறது.



அங்கு, மலையோர கிராமங்களில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.இரவில் பனிக் காற்று வீசுவதால், பெண்கள், குழந்தைகள், வயதானோர் வெளியே நடமாட முடியவில்லை. அதிகாலையில், மூடுபனி காரணமாக, நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், ஈரப்பதம் இல்லாத, வறண்ட குளிர் நிலவுவதால், பகலில் வெப்ப நிலை மாறுபடுகிறது.
இந்நிலையில், வரும், நான்கு நாட்கள், தொடர்ந்து கடும் குளிர் வாட்டும் என்றும், பின், மெல்ல குறைந்து, பிப்., வரை நீடிக்கும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இது குறித்து,

இம்மையம் தெரிவித்து உள்ளதாவது:நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், ஊட்டியில், குறைந்தபட்ச வெப்பநிலை, வெறும், 3 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே பதிவானது. அதனால், ஊட்டி மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், உறைபனி உருவானது.

குன்னுார், 8; வால்பாறை, 9; கொடைக்கானலில், 10 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே, வெப்பநிலை பதிவானது.அதேபோல், கோவை, தர்மபுரி, வேலுார், திருத்தணி, 16; நாமக்கல், கரூர், பரமத்தி, 17 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே வெயில் பதிவானது. இந்த பகுதிகளில், இரவிலும், அதிகாலை யிலும் நடுங்க வைக்கும் குளிர் நிலவியது. சென்னையில், முந்தைய நாட்களை விட,

குளிர் குறைந்து, நுங்கம்பாக்கம், 21; மீனம்பாக்கம், 20 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவியது. இந்த நிலை, வரும் நாட்களில் மாறுபட்டு, இன்னும் சில நாட்கள், கடுங்குளிர் நிலவும். இவ்வாறு, வானிலை மையம் கூறியுள்ளது.
'வரும் நாட்களை பொறுத்தவரை, இன்னும் நான்கு நாட்களுக்கு, மலையோர பகுதிகளில், கடுங்குளிர் நீடிக்கும். சில இடங்களில், உறைபனி நிலவும்.'மற்ற இடங்களில், மூடுபனியாக இருக்கும். பகலில், மந்தமான வெயிலுடன் குளிர்ந்த காற்று வீசும்' என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், '2018ம் ஆண்டில், குளிர் அதிகரிப்பால், இரவு நேரங்களில், சராசரியாக, 6 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்ப நிலை சரிந்தது. 'சில இடங்களில் மட்டும், மைனஸ், 5 டிகிரி செல்ஷியஸாக சரிந்து, கடும் உறைபனி ஏற்பட்டது' என, கூறப்பட்டுள்ளது.

காட்டுக்குள் பொங்கல் கொண்டாடிய பெண்கள்

Added : ஜன 16, 2019 22:30




சிவகங்கை: சிவகங்கை அருகே, பெண்கள் வெள்ளை சேலை உடுத்தியும், ஆண்கள் சட்டை அணியாமலும், காட்டுக்குள் பொங்கல் வைத்தனர்.
வலையராதினிப்பட்டி முத்தரையர் சமூகத்தினர், விஷ்ணு, ராமன், சிவன் என, மூன்று பிரிவினராக உள்ளனர். விஷ்ணு, ராமன் பிரிவினர் பொன்னழகி அம்மன், சிவன் பிரிவினர் பஞ்சநாட்சி அம்மனை வழிபடுகின்றனர். அவர்கள், மாட்டு பொங்கலை, இறைவன் அனுமதி கிடைத்தால் மட்டுமே கொண்டாடுகின்றனர். இதற்காக மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு பிரிவினரும் தலா, ஏழு குழிகள் தோண்டி, தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.ஊருக்கு வெளியே, காட்டுப்பகுதியில் இருக்கும் அவரவருக்கான மாட்டு தொழுவத்தில் மண் பிடி கொடுத்ததும், விழா துவங்குகிறது. அதன்படி இந்த ஆண்டு, ஜன., 3ல் விழா துவங்கியது. 14 நாட்களும் இரவில் தொழுவம் அருகிலேயே ஆண்கள் தங்கினர்; வீட்டிற்கு செல்லவில்லை. பெண்கள் வீட்டில் விரதம் இருந்தனர். கை வளையல் உட்பட, எந்த அணிகலனும் அணியவில்லை. நேற்று, மூன்று பிரிவினரும் அவரவருக்கு பாத்தியப்பட்ட தொழுவத்தில் பொங்கல் வைத்தனர்.விஷ்ணு பிரிவில் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தியும், ஆண்கள் சட்டை அணியாமலும், மண் பானையில் வெண் பொங்கல் வைத்தனர். சிவன் பிரிவில் வண்ண ஆடைகள் அணிந்தனர். பொங்கல் வைத்ததும், அதனுடன் காய்கறி, பயறு வகைகளை கலந்து, 21 தலைவாழை இலையில் படையல் வைத்து வழிபட்டனர். புதிதாக பிறந்த கன்றுக்குட்டிகளுக்கு காதறுப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாடுகளுக்கு துண்டு கட்டி, அவிழ்த்து விட்டனர். 

படையல் உணவை, திருமணமாகாத ஆண்கள் மட்டுமே சாப்பிட்டனர்.
ஆர்.மேகலா கூறியதாவது: விரதம் இருக்கும் நாட்களில், ஆடம்பரமாக இருக்க மாட்டோம். குழம்பை தாளிக்க மாட்டோம். பொன்னழகி அம்மனுக்கு வெள்ளை உடை தான் அணிவிப்போம். அதனால், நாங்களும் வெள்ளை சேலை அணிகிறோம். குழந்தை வரம் கேட்டு, வெளியூர்களில் இருந்து, ஏராளமானோர் வருவர். குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர். அந்த கரும்பை ஏலம் விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.போஸ் கூறியதாவது: பல நுாறு ஆண்டுகளாக, பொங்கலை கோவில் விழா போன்று சிறப்பாக கொண்டாடுகிறோம். நாங்கள் கடந்த காலங்களில், முயல், கவுதாரி போன்றவற்றை வேட்டையாடினோம். அவற்றுக்கு படைக்கும் வகையில் காட்டுக்குள் பொங்கல் வைக்கிறோம். மூன்று கிளையினருக்கும் தனித்தனி சாமியாடி உள்ளனர். அவர்களது பானை தான் முதலில் பொங்கும். இந்த ஆண்டு சில காரணங்களால் ராமர் கிளையினர், பொங்கல் வைக்கவில்லை. அவர்களும், வெள்ளை சேலை உடுத்தி தான் பொங்கல் வைப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.


தஞ்சை பெரியகோவிலில் மகரசங்காரந்தி விழா : நந்திக்கு ஒரு டன் காய்,பழங்களால் அலங்காரம்

Added : ஜன 16, 2019 22:28



தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு, 1,000 கிலோ அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்புகளால், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் உள்ள, நந்தியம் பெருமானுக்கு பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு பால், தயிர் மற்றும் மஞ்சள் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.தொடர்ந்து மாட்டு பொங்கலான நேற்று அதிகாலை லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின், 9:15 மணிக்கு உருளை கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பலவகையான பழங்களாலும், முறுக்கு மற்றும் பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு, ஒரு டன் பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.மேலும், நந்திபெருமான் சிலை முன், 108 பசுக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, பசுக்கள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு கோ பூஜை நடந்தது. பின்னர் நந்திபெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில், ஆயிரக்கணக்கான பக்தகர்கள் பங்கேற்றனர்.

NEWS TODAY 26.08.2026