Wednesday, May 12, 2021

என் நுால்களை யாரும் வினியோகிக்க வேண்டாம் அரசு அலுவலர்களுக்கு இறையன்பு வேண்டுகோள்

என் நுால்களை யாரும் வினியோகிக்க வேண்டாம் அரசு அலுவலர்களுக்கு இறையன்பு வேண்டுகோள்

Added : மே 11, 2021 20:35

சென்னை:'அரசு விழாக்களில், அரசு அலுவலர்கள் யாரும், என் நுால்களை, அரசு செலவிலோ, சொந்த செலவிலோ, பூங்கொத்துகளுக்கு பதில் வினியோகிக்க வேண்டாம்' என, தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு, வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அவரது அறிக்கை:நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும், எனக்கு தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களை தொகுத்தும், சில நுால்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே, முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை.

இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக, பள்ளி கல்வித்துறைக்கு, ஒரு மடல் எழுதி உள்ளேன். அதில், 'நான் எழுதியுள்ள நுால்களை, எக்காரணம் கொண்டும், எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமை செயலராகப் பணியாற்றும் வரை, எந்த திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது' என, தெரிவித்துள்ளேன்.

பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக, அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி, களங்கம் விளைவிக்கும் என்பதால் தான், இத்தகைய கடிதத்தை எழுதி உள்ளேன். எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம்.அரசு விழாக்களில் பூங்கொத்துக்கு பதிலாக,புத்தகம் வழங்கினால் நன்று என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது, 2006ல் பிறப்பிக்கப்பட்டது.

அரசு விழாக்களில், அரசு அலுவலர்கள் யாரும், என்னை மகிழ்விப்பதாகஎண்ணி, என் நுால்களை, அரசு செலவிலோ, சொந்த செலவிலோ, பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் வினியோகிக்க வேண்டாம் என்று, அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன்.இவ்வேண்டுகோள் மீறப்பட்டால், அரசு செலவாக இருந்தால், தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு, அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது.

எனவே, இத்தகைய சூழலை, எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம்.இவ்வாறு இறையன்பு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.03.2024