Thursday, January 7, 2016

களத்தில் பெண்கள்: அனைத்தையும் மீட்டெடுக்கும் பெண் சக்தி! .... பிருந்தா சீனிவாசன்

Return to frontpage

அதிகாரத்தின் கோர முகத்தையும் ஆக்கிரமிப்பின் பேரழிவையும் மட்டுமல்ல, மனித மனங்களில் மலர்ந்து கிடக்கும் பேரன்பையும் பெருங்கருணையையும் சேர்த்தே உலகறியச் செய்திருக்கிறது இந்தப் பெருமழை. சில நாட்களுக்கு முன்னால் வெள்ளத்தில் தத்தளித்த சென்னையில், திரும்பிய திசையெங்கும் அபயக் குரல்களும் மரண ஓலங்களும் ஏற்படுத்திய வேதனை சொல்லில் வடிக்க இயலாது. ஆனால், அந்த வேதனைக் குரல்கள் ஒலித்த திசையெங்கும் நீண்ட அன்பின் கரங்களை எத்தனை வணங்கினாலும் தகும்.

எங்கோ ஒரு மூலையில் விசும்புகிற குழந்தையின் பசி போக்கக் கழுத்தளவு நீரில் மிதந்தபடி பால் பாக்கெட் ஏந்திச் சென்ற கைகள் யாருடையவை? கைகள் முழுக்க உணவுப் பொட்டலங்களைச் சுமந்தபடி சுழற்றியடிக்கும் மழையிலும் சுற்றியிழுக்கும் சேற்றிலும் நடந்த கால்கள் எவருடையவை? அடித்துச் செல்லும் வெள்ளத்தை எதிர்த்துப் படகு செலுத்தி, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தவர்களை எல்லாம் இழுத்துவந்து கரைசேர்த்தவர்களின் இனம் என்ன? தன் வீடு மொத்தமும் மூழ்கிய பிறகும் தேவைப்படுகிறவர்களுக்கு எல்லாம் ஓடி ஓடி உதவியவரின் பெயர் என்ன? சென்னையின் கதறலைக் கேட்டு நொடியும் தாமதிக்காமல் வண்டி வண்டியாக நிவாரணப் பொருட்கள் அனுப்பிவிட்டு, அனைவரும் நலம் பெற பிரார்த்தனை செய்தவர்களின் மதம் என்ன? இப்படி முகம் தெரியாத, பெயரைச் சொல்லிக்கொள்ள விரும்பாத எத்தனையோ பேரின் கருணையினால்தான் சென்னை ஓரளவு கரைசேர்ந்திருக்கிறது.

சென்னையின் துயர் துடைக்கும் சேவையில் பெருவாரியான பெண்கள் தங்களை இணைத்துக்கொண்டனர். பள்ளிச் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள், முதியவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் களத்தில் இறங்கிப் பணியாற்றியது, பெண்மையின் திண்மைக்குச் சான்று.

ஆசிரியரின் அறப்பணி

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் பாதிப்பைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மனம் பதறியது ரமா பிரபாவுக்கு. வேலூர் மாவட்டம் திருவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரியும் இவர், தவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையிலாவது உதவ வேண்டுமே என தவித்தார். தான் வசிக்கும் சிவானந்தா நகரைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னையிலிருந்து அரும்பாடுபட்டு வீடு திரும்பிய கதையைக் கேட்டதுமே ரமா பிரபாவின் தவிப்பு இருமடங்கானது. அந்த இளைஞர்களோடு தன் நகரில் இருக்கும் வீடுகளின் கதவைத் தட்டினார். மறு வார்த்தை பேசாமல் அனைத்து வீடுகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் குவிந்தன. தன் கணவரின் உதவியோடு நகர் மக்களை ஒன்றிணைத்து இரவோடு இரவாகச் சமையலைத் தொடங்கினார். ஆயிரம் பேருக்குத் தேவையான உணவுப் பொட்டலங்களுடன் மற்ற நிவாரணப் பொருட்களுடனும் சென்னைக்குக் கிளம்பினார்.

“சென்னையில நடந்த துயரத்தைப் பார்த்ததுமே வேதனையா இருந்துச்சு. ஏதோ ஒரு மூலையில இருக்கற என்னால என்ன உதவி செய்ய முடியும்னு மறுகிப் போனேன். ஆனா நிச்சயமா ஏதாவது செய்யணும்னு எங்க நகர்ல இருக்கறவங்ககிட்டே உதவி கேட்டேன். ஒருத்தரும் ஒரு வார்த்தைகூட மறுத்துப் பேசலை. அவங்க எல்லாரோட சார்பாவும் நானும் எங்க நகர் இளைஞர்களும் சென்னைக்குக் கிளம்பினோம். காஞ்சிபுரம் தாண்டினதுமே மழை வலுத்துடுச்சு. எப்படியோ தட்டுத் தடுமாறி மாநகரத்துக்குள்ளே நுழைஞ்சோம். திரும்பின பக்கமெல்லாம் தண்ணி மட்டும்தான் தெரிஞ்சது. முழங்காலுக்கு மேல ஓடற தண்ணியில இறங்கி, கூவம் கரையோரமா இருக்கற மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் நிவாரணப் பொருட்களையும் கொடுத்தோம். இந்த ஒரு வேளை உணவு போதுமா அவங்க மீண்டு வர்றதுக்குங்கற நினைப்பு என்னை ஒரு சிறு துரும்பா உணர வச்சது. இந்த மக்களுக்கு வேற எதுவும் செய்ய முடியலையேங்கற இயலாமையோடதான் திரும்பினோம்” என்று சொல்லும்போதே ரமா பிரபாவுக்குக் குரல் தழுதழுக்கிறது. கடலூருக்கும் தங்கள் நகர் மக்களிடமிருந்து நிவாரணப் பொருட்களைப் பெற்று அனுப்பிவைத்திருக்கிறார் இந்த நல்லாசிரியர்.

“நாங்க செய்யறது எல்லாமே தற்காலிக நிவாரணம்தான். பாதிக்கப்பட்ட மக்களோட வாழ்வை மீட்டெடுக்கறதுதான் இதுக்கு நிரந்தர நிவாரணம். ஆனா எந்தவொரு நிவாரணப் பணியிலும் எந்தக் கட்சியோட முத்திரையும் இருக்கக் கூடாது. அரசாங்க முத்திரை மட்டும்தான் இருக்கணும்” - எதையுமே அரசியலாக்கும் அற்பர்கள் மீதான கோபமும் கசப்புணர்வும் வெளிப்படுகின்றன ரமாவின் கணவர் பரந்தாமனின் வார்த்தைகளில்.

நிரந்தர நிவாரணமே தீர்வு

வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார் வானகரத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி. வீட்டை நெருங்குவதற்கு முன்னாலேயே பல வீடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரில் மூழ்குவதைப் பார்த்துப் பதறினார். தன் கண் முன்னே மக்கள் அருகிலிருந்த தேவாலயத்திலும் பள்ளியிலும் தஞ்சம் புகுந்ததைப் பார்த்து உடைந்துபோனார். வீட்டுக்குச் சென்றவர் வீட்டிலிருந்த துணிகளைத் தன் காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு கிளம்பினார். மாற்று உடை கூட இல்லாமல் உயிரை மட்டுமே வைத்திருந்தவர்களுக்கு உடைகளை வழங்கினார். பெரிய சாலைகளைத் தாண்டி உள்ளுக்குள் சென்றபோதுதான் பாதிப்பின் வீரியம் அவருக்குப் புரிந்தது. உடனே தன் சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்று அங்கிருந்தவர்களிடம் நிவாரணப் பொருட்களைப் பெற்றுத் திரும்பினார்.

“மெயின் ரோட்டை ஒட்டியிருந்தவங்களுக்கு ஓரளவு உதவி கிடைச்சுது. ஆனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாம உள்ளே பலர் மாட்டிக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு முதல்ல உதவணும்னு நினைச்சோம். என் கணவர் தன்னால முடிஞ்ச இடங்களுக்குப் போனார். சில இடங்களில் ஆட்களோட எண்ணிக்கை அதிகமா இருந்துச்சு. அதனால எங்ககிட்டே இருந்த நிவாரணப் பொருட்களை அங்கே இருந்த நிவாரண முகாம்ல கொடுத்து, அவங்களையே எல்லாருக்கும் பிரிச்சு கொடுக்கச் சொல்லிட்டோம்” என்று சொல்லும் விஜயலட்சுமி, சென்னை மக்களின் தேவை இதுபோன்ற தற்காலிக உதவிகள் மட்டுமல்ல என்பதையும் குறிப்பிடுகிறார்.

“வீடு, வாசல், உறவுகள்னு எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிற மக்களுக்கு இந்த உதவிகள் எம்மாத்திரம்? முதலில் அரசாங்கம் இவர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடத்தையாவது அமைச்சு தரணும். எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கறவங்களுக்குத்தான் அதோட வலியும் வேதனையும் புரியும்” என்கிறார் விஜயலட்சுமி.

“என்னால வெள்ளம் பாதிச்ச இடங்களுக்கு நேர்ல போய் உதவ முடியாது. மக்களுக்கு நிவாரணம் போய்ச் சேர விடாம சிலர் தடுக்கறதாகவும் கேள்விப்பட்டோம். அதனால நிவாரணப் பொருட்கள் வழங்குற முகாம்ல என்னைத் தன்னார்வலரா இணைச்சுக்கிட்டேன். இங்கே என்கூட இன்னும் இருபது பெண்கள் தன்னார்வலரா இருக்காங்க” என்று சொல்லும் மீனாட்சிக்கு 62 வயது. கடலூர் நிவாரணப் பணிகளில் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் செயல்பட வைத்துக்கொண்டிருக்கிறார் இவர்.

மருத்துவ உதவி அவசியம்

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ருச்சி. வெள்ளத்தை மீறிய மக்களின் துயரமும் கண்ணீரும் ஸ்ருச்சியை கடலூருக்கு வரவழைத்தது. உணவு, பாய், உடைகள் போன்றவைதான் பெருமளவில் நிவாரணப் பொருட்களாகக் குவிவதைப் பார்த்த இவர், மருந்துப் பொருட்களின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார்.

“கடலூரில் நான் பார்த்த பகுதிகள் முழுக்கக் குடிசைகள்தான். மொத்தமும் நீரில் மூழ்கியிருந்தன. நிற்கக்கூட கூரையில்லாமல் அலைபாய்ந்தபடி நிவாரணப் பொருட்களுக்காகக் காத்திருந்தனர் பலர். இவர்களுக்கு ஏதோ ஒரு வகையிலாவது நிவாரணப் பொருட்கள் கிடைக்கும். ஆனால் தொழுநோயாளிகளுக்கு? சாதாரண நாட்களிலேயே இவர்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். மழையின் இந்தத் தாண்டவத்துக்குப் பிறகு இவர்களை யார் கைதூக்கிவிடுவார்கள்?” என்று கேட்கும் ஸ்ருச்சி, தொழுநோயாளிகளுக்கான மருந்து, மாத்திரைகளை கையோடு வாங்கிச் சென்றிருக்கிறார்.

“சிலர் மாட்டுக் கொட்டகையில இருந்தாங்க. காயங்கள் சரியா பராமரிக்கப்படாம பெரிய புண்ணாகியிருந்துச்சு. மூணு நாளா சாப்பிடாம இருக்குறோம்னு சொன்னதைக் கேட்டுப் பதறிட்டேன். அப்புறம் அங்கேயே தங்கியிருந்து பத்து நாளுக்கு சாப்பாடு கொடுத்தோம். இதோ நிவாரணப் பணி முடிஞ்சு ஊருக்குக் கிளம்பிட்டேன். இப்போ அந்த மக்களுக்கு யார் ஆதரவு தருவாங்க?” என்ற ஸ்ருச்சியின் கேள்வி நியாமானதே.

“இங்கே விவசாயம்தான் மக்களோட வாழ்வாதாரம். அவங்க வளர்த்த ஆடு, மாடு, கோழி எல்லாமே வெள்ளத்துல அடிச்சிக்கிட்டுப் போயிடுச்சு. அதனால அவங்க வாழ்வை மீட்டுத்தர வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு இருக்கு. சொல்லப்போனா சின்ன உதவிகூட கிடைக்காம இன்னும் பல கிராமங்கள் கடலூருக்குள்ள இருக்கு” என்கிறார் ஸ்ருச்சி.

அன்னமிட்ட கைகள்

திருப்பூரைச் சேர்ந்த சசிகலா, ஸ்ரீபுரம் டிரஸ்ட் உதவியுடன் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த இரண்டு வாரங்களாக உணவு வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

“எங்களுக்குச் சொந்தமா லாரி இருக்கறதால இங்கே திருப்பூர்ல சேகரிச்ச மளிகை பொருட்களை அதுல கடலூருக்கு அனுப்பினோம். அங்கே பஞ்சாயத்து ஆட்கள் உதவியோடு அங்கிருக்கற பள்ளியில் தினமும் உணவு சமைத்துத் தருகிறோம். இதுல என் பங்கு எதுவுமே இல்லை. நான் உதவின்னு கேட்டதுமே மறுகேள்வி கேட்காமல் உதவியவர்களுக்குதான் எல்லா நன்றியும் போய் சேரணும்” என்கிறார் சசிகலா.

கவனம் பெறாத பெண்களின் தேவை

கோயம்புத்தூரைச் சேர்ந்த காயத்ரி, சென்னையில் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களாகிறது. அதற்குள் வெள்ளம் அவருக்குப் புதியதொரு தரிசனத்தைக் கொடுத்திருக்கிறது.

“மழை அதிகமானதுமே எப்படியாவது சொந்த ஊருக்குப் போயிடணும்னு தோணுச்சு. எப்படியோ அடிச்சி புடிச்சி ஊருக்குக் கிளம்பிட்டேன். ஆனா அப்படிப் போகும்போதுதான் பாதிக்கப்பட்டவங்களுக்கு எதுவுமே செய்யாம இப்படி தப்பிச்சு ஓடுறமேன்னு குற்ற உணர்வா இருந்துச்சு. நடுராத்திரிக்கு மேலதான் ஊருக்குப் போனேன். தூக்கமே வரலை. மறுநாள் முதல் வேலையா சென்னை மக்களுக்கு எது அவசிய தேவைன்னு லிஸ்ட் எடுக்க ஆரம்பிச்சேன். இங்கே தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து வேலை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. அதனால அந்த நண்பர்களோடு சேர்ந்து நிவாரணப் பொருட்களை சேகரிக்கத் தொடங்கினேன்” என்று சொல்லும் காயத்ரி, பெண்களுக்குத் தேவையான பொருட்கள் மீது அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.

“உணவும் தண்ணீரும்தான் அதிகமா விநியோகிக்கப்பட்டது. அதனால நாங்க மற்ற பொருட்களைச் சேகரிச்சோம். பெண்களுக்கு உள்ளாடைகளும் நாப்கின்களும் அவசியம்னு புரிஞ்சுது. நிவாரணப் பொருட்கள் சேகரிக்கறவங்கக்கிட்டே பலரும் இதைக் கேட்கத் தயங்கறாங்க. நாங்களே வீடு வீடா போய் பெண்களைச் சந்திச்சு அவற்றைக் கொடுத்தபோது பலரும் கூச்சப்பட்டாங்க. இந்தத் தயக்கமும் கூச்சமும் அவசியமில்லாதவை. பெண்களுக்கான தேவைகளும் அடிப்படைத் தேவைகள்தான்னு எல்லாரும் புரிஞ்சுக்கணும்” என்று நிதர்சனத்தைப் பகிர்ந்துகொண்டார் காயத்ரி.

சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மொத்தமாகச் சேர்த்து 55 லாரிகளில் இவர்கள் பகுதி மக்கள் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டார்.

“இந்த ஐந்து நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. ஆண், பெண் வித்தியாசமின்றி வயது வேறுபாடில்லாமல் அனைவரும் நிவாரணப் பொருட்களை சேகரிச்சோம். லாரியில இருந்து பொருட்களை ஏற்றி, இறக்கின புருஷோத்தமன் தாத்தோவோட அக்கறை என்னை பிரமிக்க வச்சுது. அறுவது வயசை தாண்டின அவரு, தன்னோட இழப்பையெல்லாம் பொருட்படுத்தாம பாதிக்கப்பட்டவங்களுக்காக ஓடி ஓடி உதவினாரு. அதே போல சாய் சித்ராவும் ஒவ்வொரு வீடா போய் டோக்கன் போட்டு நிவாரண பொருட்களைக் கொடுத்தாங்க. இவங்களோட பணிக்கு முன்னால என்னோட பங்களிப்பு எதுவுமே இல்லை” என்று உணர்வுபொங்கச் சொல்கிறார் காயத்ரி.

இவர்கள் மட்டுமல்ல, இன்னும் பல்லாயிரக்கணக்கான ஈர இதயங்கள்தான் இருண்டிருந்த சென்னைப் பள்ளங்களில் வெளிச்சக் கீற்றை வாரியிறைத்திருக்கின்றன. இணைந்த கரங்களால் நிச்சயம் மீண்டெழும் தமிழகம்!
Return to frontpage

கனமழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளின்போது சமூகத்தில் மன அழுத்த பாதிப்பும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் அதை எப்படிச் சமாளிப்பது? சில வழிமுறைகள்:

வாழ்வை எளிமையாக்குங்கள்

விரைவாக இயங்கும் நமது சமுதாயத்தில், மிகக் குறைவான நேரத்திற்குள் மிக அதிகமான செயல்பாடுகளை அடைத்துத் திணித்துக்கொள்வதும் தனிப்பட்ட முறையில் உங்களுக்காகக் குறைவான நேரத்தை ஒதுக்குவதும்தான் பெரும்பாலும் மன அழுத்தமாக விளங்குகிறது. எனவே, எல்லாவற்றையும் உள்ளடக்கிச் செயல்படுவதற்கு வழிதேட முயல்வதுடன், சிலவற்றை கைவிட்டுச் செல்வதற்கும் வழிதேட முயலுங்கள். இவ்வாறு, வீட்டிலும் பணியிடத்திலும் உங்கள் வாழ்வை எளிமையாக்கி சமநிலையில் வைத்துக்கொள்வதற்குச் சில ஆலோசனைகளைப் பார்ப்போம்.

வீட்டில் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் வீடு அமைதிப் பூங்காவாக விளங்கவேண்டும் மன அழுத்தத்தை தோற்றுவிக்கும் இடமாக அது இருக்கக்கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வீட்டில் உங்களுடைய மன அழுத்தச் சுமையை எளிதாக்கப் பின்வரும் ஆலோசனைகளை முயன்று பாருங்கள்:

# உணவு அட்டவணையை ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிடுங்கள். உங்கள் வார விடுமுறையின் ஒரு பகுதியை உணவுப் பொருட்களை வாங்குவதற்கும், பின்னால் அதை உடனடியாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு பக்குவப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்துங்கள். விருந்துகளில் வாழை இலையையோ காகிதத் தட்டுகளையோ பயன்படுத்துங்கள்.

# கால அட்டவணை ஒன்றை உருவாக்கி, அடுத்துவரும் மூன்று மாதங்களில் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் வரிசைப்படுத்துங்கள்.

# எதிர்பாராத மாற்றத்துக்கான திட்டங் களை கணவனும் மனைவியும் சேர்ந்து உருவாக் குங்கள்: `நான் வருவதற்கு முன்பு, நீ வீட்டுக்கு வந்துவிட்டால்…’ என்பது போன்ற திட்டங்கள்.

# பொருட்கள் குப்பை போல் குவிந்துவிடுவதை அகற்றுங்கள். காகிதங்கள் சேர்ந்துவிடுவதைத் தடுப்பதற்கு ஓர் எளிய மூன்றடுக்கு கோப்பு முறையைப் பயன்படுத்துங்கள்: பில்களுக்கு ஒன்று, ஒருமாத காலத்திற்குள் உங்களுடைய கவனம் தேவைப்படுகிறவற்றுக்கு இன்னொன்று, கோப்பில் இட வேண்டியவற்றுக்கு மூன்றாவது.

# துப்புரவு குறித்து மறு-வரையறை செய்யுங்கள். நாள்தோறும் உங்கள் வீட்டைத் துப்புரவு செய்வதற்கு எவ்வளவு நேரத்தை உங்களால் செலவிட முடியும் என்பதை முடிவு செய்யுங்கள். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே துப்புரவுக்காகச் செலவு செய்ய நீங்கள் விரும்பினால், ஒவ்வொரு அறையிலும் அதற்காக ஐந்து நிமிடங்களைச் செலவுசெய்யுங்கள். இதை மிளிர வைக்கவேண்டும், அதைக் கறையில்லாமல் வைக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்கெல்லாம் இப்போது டாட்டா காட்டிவிடுங்கள்.

# உங்களுடைய நேரத்தை அதிக அளவு எடுத்துக்கொள்ளும் வாசலைப் பெருக்குவது, வீட்டு வேலை, பில் அல்லது வரி செலுத்துவது போன்ற பணிகளை எல்லாம் மற்றவரிடம் ஒப்படையுங்கள் அல்லது அவற்றுக்காகச் சம்பளம் கொடுத்து ஒருவரை பணியில் அமர்த்துங்கள். இந்த நேரத்தை உங்கள் குடும்பத்தினருடன் செலவிடுங்கள். அல்லது நல்லதொரு பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்.

பணியிடத்தில் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்

பணியில் உங்கள் நேரத்தைப் புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதன் மூலம், நாள்தோறும் கூடுதல் வேலைகளைச் செய்து முடிக்கலாம். மன அழுத்தத்தைக் குறைக்கலாம். உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம். பணியிடத்தில் செய்ய வேண்டிய பணித் திட்டங்களின் எண்ணிக்கை அல்லது அதன் ஆழம் உங்களுக்குப் பெரும் பாரமாக உள்ளதா? பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்ற முயலுங்கள்:

# ஒவ்வொரு நாளுக்கும் திட்டமிடுங்கள். `செய்ய வேண்டியவை’ பட்டியலை எழுதி, மிக முக்கியமான பணிகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள். இதை, நீங்கள் வீட்டிற்குச் செல்லும்முன் செய்ய முயலுங்கள். அப்போதுதான் அடுத்த நாள் வேலைக்கு அது தயாராக இருக்கும்.

# பொறுப்பை ஒப்படையுங்கள். நீங்கள் உங்களுடைய `செய்ய வேண்டியவை’ பட்டியலைப் பார்த்து, எவற்றை இன்னொருவரின் பொறுப்பில் ஒப்படைக்கலாம்; எவற்றை முற்றிலும் விட்டுவிடலாம் என முடிவுசெய்யுங்கள்.

# தரமாக வேலையைச் செய்வதற்கு போதிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். வேலையை முதல் முறையே சரியாகச் செய்வதற்குச் சற்று கூடுதலான நேரம் ஆகலாம். எனினும், பிழைகள் ஏற்பட்டால் அவை சார்ந்த திருத்தங்களுக்கு மேலும் நேரம் செலவாகி, ஒட்டுமொத்த பணி நேரத்தை அது அதிகரிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

# அவசியமற்ற வேலைகளை எடுக்காதீர்கள். கூடுதல் வேலையை ஏற்பதற்கு முன்பு உங்களுடைய குறிக்கோள்களையும் கால திட்டத்தையும் கருத்தில் கொள்ளுங்கள்.

# அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பெரிய பணிகளைச் சிறுசிறு பணிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒவ்வொன்றாகச் செய்வதற்கும் சில நிமிடங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படியாக முழு பணியையும் நிறைவு செய்யுங்கள்.

# உங்கள் நேரத்தை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பதை மதிப்பிடுங்கள். மூன்று நாளைக்கு நீங்கள் செய்ய வேண்டியவை அனைத்தையும் எழுதிவையுங்கள். மேலும், புத்திசாலித்தனமாக நேரத்தைப் பயன்படுத்துவதற்கு வழி தேடுங்கள். எடுத்துக்காட்டாக, பேருந்தில் பணிக்குச் செல்வதன் மூலம், பயண நேரத்தைப் படிப்பதற்காகப் பயன்படுத்தலாம், இல்லையா?

# நன்றாகத் தூங்குங்கள்; நிறைய உடற்பயிற்சி செய்யுங்கள். கவனமும் கவனக்குவிப்பும் மேம்படும்போது, உங்கள் பணியைக் குறைவான நேரத்தில் முடிப்பதற்கு துணை புரியலாம்.

# நேர மேலாண்மை பற்றிய வகுப்புக்குச் செல்லுங்கள். உங்கள் பணியிடத்தில் நேர மேலாண்மை வகுப்புக்கு ஏற்பாடு இல்லையெனில், ஓர் உள்ளூர் சமுதாயக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் அதற்கான ஏற்பாடு இருக்கிறதா என விசாரியுங்கள்.

# உங்களுக்குத் தேவைப்படும்பொழுது பணியில் இடைவெளி விடுங்கள். உங்கள் பணியிடத்திலேயே சற்று உடலை வளைத்துப் பயிற்சி செய்யுங்கள். பணியிடத்தில் ஒரு சுற்று நடை போடுங்கள். ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்.



நன்றி: மேயோ கிளினிக் ‘மனஅழுத்தத்தைச் சமாளிப்பது எப்படி?’
உங்கள் நலவாழ்வுக்கான எளிய வழிகள் புத்தகம்
தொடர்புக்கு: அடையாளம், 1205/1,
கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் 621310,
திருச்சி.
தொலைபேசி: 04332-373444.

மறைந்துபோன பண்டிகை கால வாழ்த்து அட்டை பரிமாற்றம்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மோகத்தால் குறைந்துபோன அஞ்சல் சேவை ...ஒய்.ஆண்டனி செல்வராஜ்

Return to frontpage

பண்டிகை கால வாழ்த்துகள் ஜாதி, மதம், மொழி, கலாச் சாரத்தைக் கடந்து ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தின. கடிதங்கள் மூலம் அனுப்பும் வாழ்த்துகள் என் றும் அழியாமல் நினைவில் நிற் பவை. அன்பான உணர்வையும் வாழ்த்து அட்டைகள் ஏற்படுத்தின. அவற்றை் வாழ்நாள் முழுவதும் மலரும் நினைவுகளாக போற்றி பாதுகாக்கும் பழக்கம் மக்களி டையே இருந்தது.

அதனால், பொங்கல் பண்டிகை, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் கடைகள், தபால் நிலையங்களில் வாழ்த்து அட்டைகளின் விற்பனையும் அமோகமாக இருக்கும்.

தற்போது இ-மெயில், ஃபேஸ்புக், சமீபத்திய ‘வாட்ஸ் அப்’ உள் ளிட்ட மின்னணு தகவல் பரிமாற் றங்களின் வளர்ச்சியால் வாழ்த்து அட்டை பரிமாற்றம் தற்போது முற்றி லும் மறையத் தொடங்கிவிட்டது.

இதுகுறித்து தேசிய விருது பெற்ற கோவை அஞ்சல் அலுவலர் ந.ஹரிஹரன் கூறியதாவது:

தமிழகத்தில் 1970-ம் ஆண்டில் தபால் அலுவலகங்கள் மூலம் 69 லட்சத்து 72 ஆயிரம் வாழ்த்து அட்டைகள் பட்டுவாடா செய்யப்பட் டன. இது 1980-ம் ஆண்டில் 78 லட்சத்து 82 ஆயிரமாகவும், 1990-ம் ஆண்டில் 85 லட்சத்து 27 ஆயிர மாகவும் பல மடங்கு அதிகரித்தன.

2010-ம் ஆண்டில் இ-மெயில் ஃபேஸ் புக் மோகத்தின் அதிகரிப்பால் வெறும் 2 லட்சத்து 60 ஆயிரமாக வாழ்த்து அட்டை பரிமாற்றம் குறைந்துவிட்டது. நடப்பாண்டு (2015) ‘வாட்ஸ் அப்’ வளர்ச்சியால் தமிழக தபால் நிலையங்களில் வெறும் சில ஆயிரங்களாக வாழ்த்து அட்டைகள் பரிமாற்றம் குறைந்துவிட்டது. 2007-ம் ஆண் டில் ரூ.5 மதிப்பீட்டில் சிறப்பு வாழ்த்து அஞ்சல்தலைகளை வெளி யிட்டது. தற்போது குடும்பமாக, குழுவாக சேர்ந்து கொண்டாடும் பண்டிகைக் கொண்டாட்டங்கள் குறைந்துவிட்டன.

அனைவரும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், செல்போன் உள்ளிட்ட நவீன தகவல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. உணர்வுபூர்வ மான விழா கொண்டாட்டங்கள், தகவல் பரிமாற்றங்கள் குறைந்து விட்டன.

அதனால், அஞ்சல் நிலையங்களில் வாழ்த்து அட்டைகளின் விற்பனை நிறுத்தப்பட்டது. கடை களில் விற்பனை செய்யப்படும் வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பும் பழக்கமும் மக்களி டையே குறைந்துவிட்டன என்றார்.

கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி வழங்கியது நியாயமான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல: அமலாக்கப் பிரிவு வாதம் ..எம்.சண்முகம்

Return to frontpage

டிபி குரூப்’ நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி ரூபாய் சென்றிருப்பது நியாயமான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல என்று நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி பணபரிமாற்றம் நடந்தது தொடர்பாக சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் ஒன்பது நிறுவனங்கள் உட்பட 16 பேர் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி அமலாக்கப்பிரிவு சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக ஆஜரான அமலாக்கப்பிரிவு சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ‘டிபி குரூப் நிறுவனம் வேறு நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி வழங்கியுள் ளது. இது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு கைமாறாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் வர்த்தகம் எதிலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. கலைஞர் டிவி-க்கு முறையற்ற வழியில் பணத்தை கொடுக்கவே இந்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணபரிமாற்றம் நியாயமான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல. ஒரு விவசாய நிறுவனம் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பணம் தர வேண்டிய அவசியம் இல்லை. எதற்காக இந்த பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் இல்லை. இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த பிணை உத்தரவாதமும் காட்டப்படவில்லை. கணக்குகள் அனைத்தும் மோசடியாக உருவாக்கப்பட்டுள்ளன’ என்று வாதிட்டார்.

ஆங்கிலம் தெரியாத ஆசிரியர் உடனடி பணி நீக்கம்: கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை..hindu tamil

ஆங்கிலம் தெரியாத ஆசிரியர் உடனடி பணி நீக்கம்: கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை

ஆந்திர மாநில கல்வித்துறை முதன்மை செயலாளர் சிசோடியா நேற்று அனந்தபூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தாடிமர்ரி மண்டலம், ஏகபாதம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஒரு வகுப்பில் ஆங்கில பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் சர்தார் பாபு வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
அங்கு முதன்மை செயலாளர் சிசோடியா, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வந்ததை கண்டதும், வகுப்பில் இருந்த மாணவ, மாணவியர் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.
பின்னர் வகுப்புக்குள் சென்ற முதன்மை செயலாளர், பாடத்தை நிறுத்த வேண்டாம் என கூறி தொடர்ந்து பாடம் நடத்தும்படி ஆசிரியர் சர்தார் பாபுவை கேட்டுக்கொண்டார். ஆனால் சர்தார் பாபு ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்காமல் பாடம் நடத்தினார்.
இதைக் கண்டு முதன்மை செயலாளர் சிசோடியா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆசிரியர் சர்தார் பாபுவை சோதிப்பதற்காக அவரிடம் ஆங்கிலத்தில் உரையாடி னார். ஆனால் பதில் அளிக்க முடியாமல் ஆசிரியர் திணறினார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த சிசோடியா, ஆசிரியர் சர்தார்பாபுவை உடனடியாக பணிநீக்கம் செய்து, அதற்கான உத்தரவையும் வகுப்பிலேயே வழங்கினார்.

கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?

கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?

சமஸ்
C  

1
நாஞ்சில் சம்பத் விவகாரம் அடங்கியபாடில்லை. ஒரு கட்சிப் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்படுவது - மன்னியுங்கள், விடுவிக்கப்படுவது - அவ்வளவு பெரிய செய்தியா? இந்த ஆட்சியில் இதுவரை 22 முறை அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது; 20 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்; 10 பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்; 6 பேர் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவை அத்தனைக்குமான காரணங்கள் நமக்குச் சொல்லப்பட்டனவா? நாம்தான் கேட்டோமா?
பட்டத்து யானைகள் யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவை அல்ல என்றே தம்மைக் கருதுகின்றன. அதிலும் எறும்புகள் அதிகபட்சம் உழைப்பதற்கும் ஓட்டுப் போடுவதற்கும் மட்டுமே உரிமயுடையவை என்றும் அவை கருதுகின்றன. நம்மூரில் ஜனநாயகத்துக்கான அதிகபட்ச மதிப்பு அவ்வளவுதான். சர்ச்சைக்குரிய அந்தப் பேட்டிகளில் நாஞ்சில் சம்பத் இதைத்தான் அவருக்கே உரிய திராவிட நடையில் சொல்லியிருக்கிறார்: “எறும்புகள் சாகின்றன என்பதற்காகப் பட்டத்து யானைகள் ஊர்வலம் போகாமல் இருக்க முடியுமா?”
நாஞ்சில் சம்பத் அதிமுக கட்சிப் பதவியிலிருந்து ‘விடுவிக் கப்பட’ அவர் கொடுத்த பேட்டிகள்தான் காரணம் என்று அக்கட்சியின் தலைமை சொல்லவில்லை. என்றாலும், மக்கள் அப்படித்தான் பேசுகிறார்கள். மேலும், “அதுதான் உண்மை யான காரணம் என்றால், அவர் பதவி நீக்கப்பட்டது சரிதானே?” என்றும் கேட்கிறார்கள். அதுதான் காரணமா என்று நமக்குத் தெரியாது. ஆனால், அதுதான் காரணம் என்றால், அங்கே ஒருவர்கூடப் பதவியில் நீடிப்பது நியாயமாக இருக்காது.
நாஞ்சில் சம்பத் ஒரு பதச் சோறு
நாஞ்சில் சம்பத் பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மேடைப் பேச்சில் தேறியவர். பேட்டிகளும் இக்கட்டான கேள்விகளும் அவருக்குப் புதியவை அல்ல. “ஐயோ, மேடையிலேயே அவர் கொச்சை கொச்சையாகப் பேசுவாரே!” என்று நீங்கள் கேட்பீர்களேயானால், மேடைக்குக் கீழே அவர் இன்னும் பேசுவார் என்பதே பதில். நாஞ்சில் சம்பத்திடம் வெளிப்பட்டது ஆட்சியாளர்களின் மமதைக்கு ஒரு பதம் சோறு. சுற்றிலும் விளக்குகள் எரிய, கேமராக்கள் முன் தான் பேசுவதைக் கோடிப் பேர் பார்ப்பார்கள்; விமர்சிப்பார்கள் எனும் எல்லைக்குட்பட்ட சூழலில், பொதுவெளிக்கு ‘நன்கு பயிற்சி பெற்ற’ சம்பத்தே இப்படிப் பேசுகிறார் என்றால், ஏனையோர் எப்படிப் பேசுவர்?
இந்த வெள்ளம் தொடர்பாக ஒரு மாதமாகப் பல்வேறு தரப்பினருடனும் ஊடகவியலாளர்கள் உரையாடிக்கொண்டிருக்கிறோம். என்னிடம் பேசிய ஒரு அதிமுககாரரும் பரிவோடு பேசி நான் கேட்டதில்லை. “ஆமாம், வெள்ளம் வந்துச்சு… ஆத்தோரம் இருந்தா அடிச்சுக்கிட்டுப்போவத்தான் செய்யும். நாங்க என்னா பண்ண முடியும்? கூட விழுந்து சாவணும்கிறீங்களா?” என்று ஈவிரக்கமே இல்லாமல் கேட்டவர்களே அதிகம்.
அதிகார வாசம் ஏற்படுத்தும் மமதை ஒரு கட்டத்துக்கு மேல் உடலில் தோல் மாதிரி மனதுக்குள் படர்ந்துவிடுகிறது. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. அரசியல் யானைகள் தங்களை எப்போதும் பட்டத்து யானைகளாகவே கருதுகின்றன. இலங்கைத் தமிழர் படுகொலையின்போது உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகின்றனவா? குண்டுகள் தமிழர்கள் மீது கொத்துக்கொத்தாக விழுந்துகொண்டிருந்தபோது, “மழை விட்டாலும் தூவானம் விடவில்லை” என்றார் கருணாநிதி. “போர் ஒன்று நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றார் ஜெயலலிதா.
வார்த்தைகள் ஒரு வெளிப்பாடு. அவற்றைவிட ஆயிரம் மடங்கு அர்த்தமுள்ளவை செயல்பாடுகள். “ஒரு வீட்டில் ஒப்பாரிச் சத்தம் கேட்கிறது என்பதற்காக, பக்கத்து வீட்டில் கல்யாணக் கச்சேரியைத் தவிர்க்க முடியுமா?” என்று கேட்ட நாஞ்சில் சம்பத்தின் வார்த்தைகள், ஒரு கட்சியின் அலட்சியத்தின் வெளிப்பாடு என்றால், வெள்ளப் பிணங்கள் சுடுகாட்டைச் சேரும் முன் மதுக் கடைகளைத் திறந்த ஒரு அரசின் செயல்பாடுகளை எப்படிப் புரிந்துகொள்வது?
செய்தியாளர்கள் குணசேகரனும், ரங்கராஜ் பாண்டேவும் எழுப்பிய கேள்விகள் மக்களின் கேள்விகள். வெளியே இதைவிடவும், பல மடங்கு கோபத்தோடும் கேள்விகளோடும் இருக்கிறார்கள் மக்கள். அன்றைய தாய ஆட்டத்தில் நிகழ்தகவில் விழுந்த புள்ளி நாஞ்சில் சம்பத். வேறு யாரேனும் அங்கு உட்கார்ந்திருந்தால் மட்டும் என்ன பதில் சொல்லிவிடப்போகிறார்கள்? “ஆமாம், எங்கள் கட்சி தவறிழைத்துவிட்டது. மக்கள் இன்னலில் உழன்றுகொண்டிருக்கும்போது கட்சிக் கூட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் இவ்வளவு பிரம்மாண்டமும் இப்படியான கொண்டாட்டமும் நடந்தது அநாகரிகம். எங்கள் இயக்கம் சார்பில் நான் மன்னிப்பு கோருகிறேன்” என்று பேச இன்றைக்கு இங்கே எந்த அரசியல்வாதிக்காவது மனசாட்சி இருக்கிறதா அல்லது அப்படியான ஜனநாயகம்தான் எந்தக் கட்சியிலாவது இருக்கிறதா? எந்த நடராஜனோ ஆட்சியைப் பற்றி விமர்சித்தால், எந்த நடராஜனையோ கட்சியைவிட்டு நீக்கிச் சேர்க்கும் அளவுக்குத்தானே உட்கட்சி ஜனநாயகம் இங்கே இருக்கிறது!
யூனூஸுடன் ஓர் உரையாடல்
ஓரிரு நாட்களுக்கு முன் முஹம்மது யூனூஸைச் சந்தித்தேன். இந்த மழை வெள்ளம் நமக்குக் காட்டிக்கொடுத்த நல்மனிதர்களில் ஒருவரான அதே யூனூஸ்.
“இங்கேதான் நுங்கம்பாக்கத்தில் சின்னதாக ஒரு அலுவலகம் நடத்துறேன். இணைய வர்த்தகம்” என்றார். “எது உங்களை மீட்புப் பணிக்கு உந்தித் தள்ளியது?” என்ற கேள்விக்குப் பின் அவர் சொன்ன தகவல்கள் ஒவ்வொன்றும் நாம் இன்றைய அரசியல்வாதிகளோடு பொருத்திப் பார்க்க வேண்டியது.
“இந்த டிசம்பர் மழைக்கு முன்னாடி நவம்பர்ல ஒரு பெருமழை பெஞ்சுது இல்லையா, அதுதான் என் வாழ்க்கையில திருப்புமுனை. அதுவரைக்கும் என் வாழ்க்கையோட குறிக்கோள் நூறு கோடி ரூபா சம்பாதிக்கிறது. வேகமா சம்பாதிச்சுக்கிட்டும் இருந்தேன். நவம்பர்ல அந்த மழை பெஞ்ச நாளுக்கு மறுநாள் வீட்டுலேர்ந்து வீதிக்கு வந்தப்போ நிறையப் பேர் வீட்டைவிட்டு வெளியே வந்து நின்னதைப் பார்த்தேன். ஓர் இளம்பெண் கைக்குழந்தைக்கு வீதியில உட்கார்ந்து பால் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. மனசு என்னமோ மாதிரி இருந்துச்சு.
எனக்குச் சொந்தமான வீடுகள்ல சில வீடுங்க காலியா இருந்துச்சு. வீதியில நின்ன சில குடும்பங்களை அழைச்சுக்கிட்டு வந்து அங்கே தங்க வெச்சோம். தலை மேல கை வெச்சி அவங்க வாழ்த்தினப்போ, வாழ்க்கையோட அர்த்தமே வேறன்னு புரிஞ்சுச்சு.
அடுத்த மழை பிடிச்சப்போ சமூக வலைதளங்கள்ல நண்பர்க ளோட சேர்ந்துக்கிட்டு முடிஞ்சவரைக்கும் உதவிக்கிட்டு இருந்தோம். டிசம்பர் 1 அன்னைக்கு உதவி கேட்டு நூத்துக்கணக்கானவங்க தொடர்ந்து போன் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. அப்படித்தான், ஊரப்பாக்கத்துலேர்ந்து ஒரு அழைப்பு வந்துச்சு.
`வெள்ளம் ஆறா அடிச்சிக்கிட்டுப்போவுது. எல்லாம் மாடில குழந்தைங்களோட நிக்கிறோம். எப்படியாவது காப்பாத்துங்க'ன்னு. அரசாங்கத் துறைகள் யாரையும் அணுக முடியலை.
ஆயிரக்கணக்கானவங்க சிக்கியிருக்காங்க. பெரிய வெள்ளம். படகுங்க இல்லாம உதவிக்குப் போக முடியாது. கடக்கரையை நோக்கி ஓடினோம். 20 படகோட்டிகளோட 9 படகுகளை எடுத்துக்கிட்டு ரொம்பக் கஷ்டங்களுக்கு மத்தியில போய்ச் சேர்ந்தோம். நாங்க போனப்போ, அது ஊரா இல்லை. வெள்ளக்காடா இருந்துச்சு. குறைஞ்சது பத்தடித் தண்ணீ கடுமையான வேகத்துல ஆறாப் பாயுது. கும்மிருட்டு வேற. ராத்திரி மூணரை மணி இருக்கும். அப்போ ஆரம்பிச்சு மறுநாள் ராத்திரி ஒன்பதரை மணி வரைக்கும் போராடிக் காப்பாத்தினோம்.”
அப்படிக் காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவர்தான் நிறைமாதக் கர்ப்பிணி சித்ரா. தன் பிள்ளைக்கு இப்போது யூனூஸ் பெயரைச் சூட்டியிருக்கிறார். வெள்ளத்தில் உதவிக்கு அழைத்தவர்கள் யூனூஸுக்குப் பரிச்சயமானவர்களா? இல்லை. படகோட்டிகள் பரிச்சயமானவர்களா? இல்லை. “நீச்சல் தெரியுமா?” என்று கேட்டால், அதுவும் “தெரியாது” என்றார். அப்புறம் எப்படி திடீரென்று அந்த இருட்டில் கிளம்பிப்போனார்? ‘‘உயிருக்குப் போராடுற இடத்துல நம்மை வைக்காம, உதவுற இடத்துல நிறுத்தியிருக்கார் கடவுள். அப்போ உதவுறது கடமை இல்லையா?’’ என்றார். இந்த மீட்புப் பணியின்போது யூனூஸ் ஒரு இடத்தில் தவறி விழுந்திருக்கிறார். வெள்ளம் அடித்துச் செல்லவிருந்தவரை இழுத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள். “மொத்தம் எத்தனை பேரை மீட்டீர்கள்?” என்றேன். “1,500 குடும்பங்கள்” என்றார். கையைப் பிடித்துக்கொண்டேன்.
ஒரு யூனுஸால் 1,500 பேரை மீட்க முடிந்திருக்கிறது என்றால், சர்வ வல்லமையும் கொண்ட ஒரு ஆளுங்கட்சியினரால் இன்னும் எவ்வளவு பேரை மீட்டிருக்க முடியும்? தமிழகத்தில் எல்லா பெரிய கட்சிகளுமே மீனவர்கள் அணி என்று ஒன்றை வைத்திருக்கின்றன. உள்ளதிலேயே பெரியது ஆளுங்கட்சியின் மீனவர் அணி. ஒரு யூனூஸ் அழைத்தால் 20 பேர் ஓடி வருகிறார்கள் என்றால், ஆளுங்கட்சியினர் அழைத்திருந்தால் எத்தனை பேர் ஓடிவந்திருப்பார்கள்? இன்னும் எவ்வளவு பேரை மீட்டிருக்க முடியும்?
பரிவு எங்கே?
எது ஒரு யூனூஸைத் தன் உயிரையும் பொருட்படுத் தாமல் ஓடச்செய்ததோ, அது இல்லாததுதான் இன்றைக்கும் நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்பையும் பொருட்படுத்தாமல் ஆளுங்கட்சியினரை மமதையோடு பேசச் செய்கிறது. அன்பு - பரிவு - கருணை.
பட்டத்து யானைகள் வலியவை. பிரம்மாண்டமானவை. பட்டத்து யானைகள் பீடுநடைக்கு முன் எறும்புகளின் சாவுகள் ஒரு பொருட்டல்லதான். ஆனால், சக எறும்புகளை அவை கலங்கவைக்கும்; துன்புறுத்தும்; அச்சத்தில் ஆழ்த்தும்; ஒன்றுதிரட்டும். பட்டத்து யானைகள் பட்டத்து யானைகள்தாம். எறும்புகள் எறும்புகள்தாம். ஆனால், கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னாகும்? யோசிக்க வேண்டும்!
- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

Wednesday, January 6, 2016

TAMIL NADU PLUS TWO EXAMINATION TIME TABLE 2016

AMRITA ADMISION NOTIFICATION 2016-17

நேருவும் நேஷனல் ஹெரால்டும்...


Dinamani


By தி. இராசகோபாலன்

First Published : 05 January 2016 12:56 AM IST


பிரசவ வேதனையைப் பெண்ணுக்கு மட்டும் ஏன் வைத்தான், என்று பல நேரங்களில் சஞ்சலப்பட்டதுண்டு. ஆனால், பத்திரிகைக் குழுமத்தைச் சார்ந்தவர்கள் மறுநாள் வரவேண்டிய பத்திரிகையை, முதல்நாள் இரவே மூட்டைக் கட்டி அனுப்ப வேண்டுமென்பதில் படுகின்ற பாடுகள் இருக்கின்றனவே, அவற்றை எண்ணிய நேரத்தில் படைத்தவன் சமதர்மவாதிதான் என்பது புலப்பட்டது. இத்தகைய பெரும்பாடுகள் நேஷனல் ஹெரால்டு தோன்றிய காலத்திலிருந்து அதன் அந்திம காலம் வரை அகலவே இல்லை.
பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மூளைதான் நேஷனல் ஹெரால்டு. லண்டனில் படிப்பை முடித்து நேரு அலகாபாத் திரும்பிய நேரத்தில், இன்டிபெண்டன்ட் எனும் பெயரில் ஓர் ஆங்கிலப் பத்திரிகை மோதிலால் நேருவின் முழுமையான பொருளாதாரப் பின்புலத்துடன் வெளிவந்து கொண்டிருந்தது. நேரு அப்பத்திரிகையில் தொடர்ந்து எழுதலானார். ஆனால், மனிதவளம் இல்லாமல் போனதால் அப்பத்திரிகை அகால மரணமடைந்தது.
நேருவின் எழுத்துக்களில் இலக்கிய நயம் இல்லை என்று சிலர் விமர்சித்தபோது, "நான் ஓர் இலக்கியக்கர்த்தா அல்ல. ஆனால், ஒரு பத்திரிகை எழுத்தாளனைப்போல் இருக்கின்றேன்' என நவின்றார்.
இன்டிபெண்டன்ட் பத்திரிகை மறைந்த சோகம் நேருவைக் கப்பிக்கொண்டது. என்றாலும், அதுவே அடுத்தொரு பத்திரிகையைத் தொடங்க வேண்டும் எனும் வேகத்தையும் தந்தது. காங்கிரஸ் கட்சியினுடைய நடப்புகளையும், போராட்டங்களையும் காஷ்மீரத்திலிருந்து, இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனும் ஆதங்கத்தில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை 09.09.1938 அன்று லக்னெளவில் தொடங்கினார்.
இதழியல் துறையில் ஒரு துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்த கே.ராமா ராவை நேஷனல் ஹெரால்டின் ஆசிரியராக்கினார் நேரு. இரண்டாவது உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில்கூட பத்திரிகைக்கு ஆல்பெர்ட் எனும் கனரக இயந்திரத்தை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்தவர் நேரு. பத்திரிகையின் நோக்கம், சுதந்திரம் ஆபத்தான நிலையில் உள்ளது; எதையும் தியாகம் செய்து அதனைக் காப்போம் என்பதாகும்.
இந்தக் குறிக்கோளைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர், இந்திரா காந்தி. கேபிரியல் எனும் கார்ட்டூனிஸ்ட் வரைந்த கார்ட்டூனுக்குக் கொடுத்த தலைப்பு அது. அதனை நறுக்கி இந்திரா, நேருவுக்கு அனுப்பினார். நேரு அதனைப் பத்திரிகையின் நோக்கமாக்கினார். இதனைப் பத்திரிகை உலகம், மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகையின் குறிக்கோளாகிய ‘Comment is free;’ but facts are sacred என்பதற்குச் சமமானதாகப் பாராட்டியது. ஆசிரியர் கே. ராமாராவ், எங்களுடைய மூலதனம் நேருபிரான். எங்களது முதல் வங்கி ஏழைகளின் சட்டைப் பையே என எழுதினார்.
நேஷனல் ஹெரால்டில் ராமா ராவின் எழுத்துக்கள் தீப்பந்தங்களாகவும், கண்ணி வெடிகளாகவும் ஆங்கில ஏகாதிபத்தியத்தைக் கலங்கடித்தது. ஆங்கிலேய அரசு பத்திரிகையின் மீது தனது கிடுக்கிப்பிடியை இறுக்கிப் பிடித்தது. முன்ஜாமீனாக ரூ.6,000/- கட்டச் சொன்னது. அதனைக் கட்டி முடித்தவுடன் மீண்டும் 12,000/- ரூபாயைக் கட்டியாக வேண்டும் அல்லது பத்திரிகை நிறுத்தப்படும் என அச்சுறுத்தியது. ஆத்திரமடைந்த நேரு, ஒரே ஓர் அறிக்கையினைப் பத்திரிகையில் வெளியிட்டார். உடனடியாக ரூ.42,000/- பொதுமக்களிடமிருந்து வந்து குவிந்தது.
ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றி ராமாராவ் காரசாரமாக எழுதினார். லக்னெள சிறைச்சாலைக்குள்ளேயே தடியடி செய்து, விடுதலைப் போராட்ட வீரர்களை அடித்து நொறுக்கிய அநாகரிகச் செயலை, ரத்தம் கொப்பளிக்கத் தக்கவகையில் தீட்டிக் காட்டினார் ராமாராவ்.
ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசு, கறுப்புச் சட்டத்தைக் கையில் எடுத்து ராமா ராவைக் கூண்டிலேற்றி ஆறு மாத காலம் சிறையில் அடைத்தது. வெகுண்டெழுந்த நேரு, அலகாபாத்திலிருக்கும் ஆனந்தபவனத்தை விற்றாவது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்துவேன் என்றறிக்கை விட்டார். நேரு என்ற ஒரே ஓர் உறைக்குள், தேசியமும் பத்திரிகா தர்மமும் இரண்டு வாள்களாகக் கிடந்தன. என்றாலும், அதிகார வர்க்கம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை இழுத்து மூடியது.
மறுபடியும் நேஷனல் ஹெரால்டு 1945-இல் புத்துயிர் பெற்று எழுந்தது. மணிகொண்டா சலபதி ராவ் ஆசிரியராக வந்தார். நேருவுக்கு நெருக்கமான நண்பர். சலபதி ராவ், 30 ஆண்டுகாலம் அப்பத்திரிகையில் கோலோச்சினார். அமரர் ஏ.என். சிவராமன் கணக்கன் எனும் பெயரில் பத்திரிகை உலகத்தின் லகானைக் கையில் பிடித்திருந்ததுபோல, சலபதி ராவ் எம்.சி. எனும் பெயரில் (மணிகொண்டா சலபதிராவ்) அதிகார வர்க்கத்தை நெம்புகோல் போட்டு நெம்பினார்.
நேஷனல் ஹெரால்டில் நேருவின் எழுத்துக்கள் முழு வீரியத்தோடும், வேகத்தோடும் மின்சாரத்தைப் போல் பாய்ந்தன. போட்டி பத்திரிகையாளர் நேருவுக்கு ஒரு பத்திக்கு ரூ.150/- தருவதாகக் கூறி எழுத அழைத்தனர். ஆனால்,நேரு, பாரதியாரைப் போல,"காசு பெரிதில்லை நெஞ்சிலுள்ள காதல் பெரிது காண்' என மறுதலித்துவிட்டார். 1947-இல் நேரு பிரதமர் ஆனவுடன், பத்திரிகையில் மேலாண்மைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
நேஷனல் ஹெரால்டில் பொருளாதார நெருக்கடி வந்தது. பத்திரிகைக் குழுமம் முழுவதும் ஊதியம் வாங்காமலேயே பத்திரிகையை நடத்தினர்.
1968-இல் லக்னெள அலுவலகம் தில்லிக்கு இடம் பெயர்ந்தது. சலபதி ராவ் நேருவின் நண்பராக இருந்தபோதிலும், ஆட்சியின் தவறான அணுகுமுறைகளைக் கண்டிக்கத் தவறுவதில்லை. நேருவினுடைய ஆட்சிக்காலத்தில் பிகினி எனும் இடத்தில் ஓர் அணுச் சோதனை நடந்தது. அதனைக் குறித்துப் பத்திரிகை நிருபர் கேட்டபொழுது, பேட்டி தர மறுத்துவிட்டார் நேரு.
ஆனால், சலபதி ராவ் அது குறித்து நேருவிடம் எடுத்துச்சொல்லிவிட்டு, அது எமனின் ஏஜெண்ட் என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் தீட்டினார். சலபதி ராவ் தலையங்கங்களைத் துல்லியமாகவும், அறிவுப்பூர்வமாகவும் எழுதுவார்.
சலபதி ராவின் நடுநிலைக்கு ஒரு நிகழ்ச்சியைச் சான்றாகக் காட்டலாம். பண்டித கோவிந்த வல்லப பந்த் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது, ஓர் அரசு விழாவில், விநாயகர் பூஜையை முடித்துவிட்டுப் பேசத் தொடங்கினார். மதச்சார்பற்ற நாட்டில் ஓர் அரசு விழாவில் விநாயகர் பூஜை முடித்துவிட்டுத் தொடங்கியதைச் சலபதி ராவ், தலையங்கத்தில் கண்டித்துக் கடுமையான சொற்களால் காய்ச்சி எடுத்துவிட்டார்.
இது பிரதமர் நேருவின் பார்வைக்குச் சென்றவுடன், அவர் அதனைப் பல படிகள் எடுத்து எல்லா மத்திய அமைச்சர்களுக்கும், முதல்வர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி, எதிர்காலத்தில் அதுமாதிரி நடக்கக்கூடாது என எச்சரித்தார்.
மேலும், சலபதியின் போர்க்குணத்திற்கு மற்றொரு நிகழ்ச்சியையும் எடுத்துக் காட்டலாம். ஒரு பெரிய பணக்காரக் கோடீஸ்வரன் வீட்டு நாய் செத்துப் போயிற்று. செல்வந்தர்கள் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துக் கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்து, பிடிஐயில் எட்டுப் பத்திக்குப் படத்தோடு செய்தி வரும்படியாகச் செய்துவிட்டனர். அதனை எல்லாப் பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்துவிட்டன.
அதே நாளில், ஓவியக்கலையில் உலகப் புகழ்பெற்ற மாமனிதர் அபீந்தரநாத் தாகூரின் மறைவும் நேரிட்டது. அதனை ஒரு சிறிய பெட்டிச் செய்தியில், அவருடைய மரணத்தைக் குறிப்பிட்டுவிட்டு, அவர் இரபீந்திரநாத் தாகூருக்கு உறவினர் என்பதையும் குறிப்பிட்டிருந்தனர்.
இங்கிலாந்தில் ஓவியக்கலையில் வல்லுநர்கள் மேலும் தம் அறிவை அபிவிருத்தி செய்வதற்காக அபீந்திரநாத் தாகூரின் ஓவியக்கூடத்திற்கு வந்து போவது, சலபதி ராவுக்குத் தெரியும். அபீந்தரநாத் அவர்களின் ஆர்வத்தின் காரணமாகத்தான், இரபீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்தது எனவும் சிலர் எழுதியிருக்கின்றனர்.
அத்தகைய உலகப் புகழ் பெற்ற ஓவியருக்குப் பெட்டிச் செய்தியும், கோடீஸ்வரன் வீட்டு நாய்க்கு எட்டுப்பத்தியில் இறுதி ஊர்வலத்தை வருணித்திருந்ததும், சலபதி ராவை நக்கீரப் பார்வைக்குக் கொண்டு சென்றது. தலையங்கத்தின் தலைப்பு: அ. தாகூர் - ஒரு நாய் - பிடிஐ என்பதாகும். தலையங்கம் எழுதிய தாள்கள் தீப்பற்றும் அளவுக்கு வார்த்தைகளால் வறுத்து எடுத்துவிட்டார்.
சலபதி ராவ் கடைசி வரை கட்டைப் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். பத்திரிகை உலகம் அவரைப் பத்திரிகைகளுக்காகவே வாழ்க்கைப்பட்டுவிட்டார் என எழுதியது. பத்திரிகை ஊழியர்களின் கண்ணியம் கிஞ்சித்தும் பாதிக்கப்படாதவாறு பார்த்துக் கொண்டார். பத்திராதிபர்கள் அத்துமீறி நிர்வாகத்தில் தலையிடுவதை அவர் அனுமதித்ததில்லை.
பல பெரிய மனிதர்களையும், பல பெரிய பிரச்னைகளையும் ஊர் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய சலபதி ராவின் மறைவு, பரிதாபப்படத்தக்கதாக அமைந்தது. 1983-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் சிக்கித் தெருவோரமாக அவருடைய சடலம் கிடந்தது.
நேருவின் மறைவுக்குப் பிறகு நேஷனல் ஹெரால்டு, தாயை இழந்த ஊமைக் குழந்தை போலாயிற்று. காங்கிரஸ் கட்சி, அப்பத்திரிகை தனக்கு வாளும் கேடயமுமாக இருந்ததை மறந்தது. நிதிப்பற்றாக்குறையாலும், கடன் சுமையாலும் லக்னெளவில் இருந்த ஹெரால்டு கட்டடம் ஏலம் விடப்பட்டது.
ஊதியம் இல்லாத காரணத்தால், ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்திரா காந்தி, குஷ்வந்த் சிங்கை அப்பத்திரிகையின் ஆசிரியர் ஆக்கினார். 2000 பத்திரிகைகள் தாம் விற்பனை ஆயின. குஷ்வந்த் சிங் நிலைமையை உணர்ந்து, ஊதியம் வாங்காமலேயே பணியாற்றினார். பி.டி.ஐ., யு.என்.ஐ.க்குரிய சந்தாக்கள் செலுத்தப்படாமையால், 2008-இல் இரட்டைப் பூட்டாகப் போட்டுப் பத்திரிகையை இழுத்து மூடினர்.
கவியரசர் கண்ணதாசன் பெற்ற பிள்ளையைப்போல் போற்றி வளர்த்த தென்றல் பத்திரிகை வேறொரு பெரிய முதலாளியால் வாங்கப்பட்டபோது, தன் கன்னத்தில் வடிந்த கண்ணீரைக் கவிதையாகத் தீட்டினார்:
அந்தோ என் செல்வம் ஆழிவாய்ப்
பட்டதம்மா
பந்தாடும் தென்றல், பாய்போட்டுத்
தூங்குதம்மா
பாண்டியனார் நாட்டில், பழம்பெரிய சோணாட்டில் தோன்றிய நாள்தொட்டுத் தொடர்ந்தோடும் தென்றலது,
ஆண்டி உடற்சாம்பல், அணுபோல்
பறந்ததம்மா
எனக் கண்ணதாசன் பாடியதுபோல், நேருவும், நேஷனல் ஹெரால்டு நின்று போனதைக் கல்லறையின் காதுகளின் வழியே கேட்டிருந்தால், கண்ணதாசன் அழுகையை ஆங்கிலத்தில் வடித்திருப்பார்.

ஜல்லிக்கட்டும் தீர்வும்!

Dinamani


By ஆசிரியர்

First Published : 05 January 2016 12:55 AM IST


கல்யாணத் தேதி குறித்துவிட்டு மாப்பிள்ளை தேடிய கதையாக பொங்கல் இன்னும் பத்து நாள்களில் கொண்டாடப்படவிருக்கும் வேளையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா என்று அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், இவர்களுடன் ஊடகங்களும் மல்லுக்கட்டுகின்றன. ஆனாலும், மத்தியிலிருந்து எந்தவிதமான ஆதரவான சூழலும் தென்படவில்லை.
இந்த விவகாரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அங்கமாகிய காங்கிரஸ், தி.மு.க. இரண்டும்தான் இந்த நிலைமைக்குக் காரணம் என்று பொதுவான குற்றச்சாட்டை மற்ற அரசியல் கட்சிகள் பேட்டியளித்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக, கடந்த 18 மாதங்களாக பா.ஜ.க. அரசு என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்புகிறார் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி குஷ்பு.
அரசியல் கட்சிகளை விட்டுத்தள்ளுவோம். ஏன் இதுநாள் வரை, தமிழர் பண்பாட்டில் அக்கறையும் ஆர்வமும் உள்ள அமைப்புகள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தத் தவறின என்கிற கேள்வியை யாரும் எழுப்பத் தயாராக இல்லை.
உயர்நீதிமன்றம் 2009-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை அடியொட்டி, மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு, காவல் துறையின் கட்டுப்பாடு, அனுமதிக்கப்பட்ட குழுவின் மேற்பார்வை ஆகியவற்றோடு, காளைகளைத் துன்புறுத்தாமல், மது ஊட்டாமல், வெறியேற்றும் செயல்களில் ஈடுபடாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட நிலையில், எத்தகைய குற்றச்சாட்டும் அல்லது நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டதாகவும் எந்தச் சம்பவங்களும் இல்லாத நிலையில், உச்சநீதிமன்றம் தடை விதிக்க நேர்ந்தது ஏன்? நீதிமன்றத்துக்கு இது தொடர்பாக சரியான புரிதலை முன்வைக்கத் தமிழக அரசோ, இதில் அக்கறையுள்ளவர்களோ இல்லாமல் போனதுதான் காரணம்.
ஜூலை 11, 2011-ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை வெளியிட்ட அரசு அறிவிக்கையின்படி, "கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம், காளை ஆகியவற்றைக் காட்சிப்படுத்தவோ அல்லது கேளிக்கை பொருளாக்கவோ கூடாது. இந்த விலங்குகளின் பாலின வேறுபாடு எதுவாக இருப்பினும் இந்த விலங்குகள் அனைத்துக்கும் அந்தச் சட்டம் பொருந்தும். காளை என்று இந்த சட்டத்தில் குறிப்பிடும்போது அது எருமை, மாடு (காயடிக்கப்பட்டது), பசு, கன்று அனைத்துக்கும் பொருந்தும்' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காளை என்ற சொல்லுக்கு, எருமை, மாடு, பசு, கன்று எல்லாமும் அடங்கும் என்றால், எருமையும் பசுவும் தாங்களாக விருப்பப்பட்டா மனிதருக்குப் பால் தருகின்றன? கன்றுக்காக சுரக்கும் பாலை மனிதன் கறப்பது துன்புறுத்தல் அல்லவா? அதன் இயல்புக்கு அப்பாற்பட்டு செயல்படச் செய்யும் விலங்கு - விரோத நடவடிக்கை அல்லவா? கன்றுக்கான பாலை மனிதன் திருடிக்கொள்வது குற்றமல்லவா? அந்தப் பாலை விற்பனை செய்வது, பசுவைத் துன்புறுத்தும் மானுட வணிகம்தானே!
ஒரு நாள் நடைபெறும் ஜல்லிக்கட்டு தடை செய்யப்படும்போது, ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாய் வணிகத்துக்காக பசுக்களை பயன்படுத்துவதும் குற்றம்தானே! ஏறுதழுவுதல் துன்புறுத்தல் என்றால், மாட்டை ஏர் பூட்டுவதும், வண்டி பூட்டுவதும்கூட துன்புறுத்தல்தானே? அவற்றின் இயல்புக்கு பொருந்தா செயல்தானே!
இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம், கரடி, குரங்கு, சிறுத்தை, புலி, சிங்கம் ஆகியவற்றை வைத்து தொழில்புரியும் சர்க்கஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதுதான். ஆனால், இதில் காளை சேர்க்கப்பட்டதன் காரணம், ரேக்ளா போன்ற பந்தயத்தைப் போன்று, ஜல்லிக்கட்டும் ஒரு பந்தயம் என்பதாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுதான்.
ஜல்லிக்கட்டு பந்தயம் அல்ல இது ஒரு வீரவிளையாட்டு. இந்த வீரத்துக்குப் பரிசாகக் காளையின் கழுத்தில் அதன் உரிமையாளர் காசுகளை கட்டிவிடுகிறார். இது பணத்துக்காக அல்லது தனிநபர் அல்லது தனி அமைப்பின் லாபத்துக்காக நடத்தப்படும் பந்தயம் அல்லது சூதாட்டம் என்பதாக கருதப்படும் என்றால், உறியடித் திருவிழாக்களும்கூட வெறும் சூதாட்டம் என்று ஆகிவிடும் அவலம் நேரும்.
ஆயிரக்கணக்கில் அடிமாடுகள் லாரிகளில் போய்க்கொண்டிருக்கின்றன. மாடுகள் இறைச்சி ஏற்றுமதி நடந்து கொண்டே இருக்கிறது. காளை என்ற சொல் மாடு என்பதையும் உள்ளடக்கியது என்றால், இது எவ்வாறு நடக்கின்றது? மிகப்பெரும் தோல்பொருள் ஏற்றுமதியும் விற்பனையும் எவ்வாறு நடக்கிறது?
காளையை, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டத்தை அரசியல்ரீதியாக யாரும் நடத்தவில்லை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில், உச்சநீதிமன்றம் தடைவிதிப்பது முறையல்ல என்பதை நீதிமன்ற வழக்காற்றின் அடிப்படையில் எதிர்வினை புரியவும் தமிழ்நாட்டின் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தவறிவிட்டன.
ஜல்லிக்கட்டு என்கிற தமிழர் மரபு சார்ந்த, உணர்வுசார்ந்த விவகாரத்தை, சரியான புரிதல் இல்லாமல் தடுப்பதால், வடநாட்டினர் தமிழர் நலனுக்கு எதிரானவர்கள் என்கிற எண்ணத்தை விதைப்பதாக அமைந்துவிடும். ஒரு சிறிய விவகாரத்தைப் பெரிதாக்கி, தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு எதிரான விஷத்தை விதைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கலாமா?
இந்த விவகாரத்தில், அண்மையில் ஒரு பேட்டியில் பழ. நெடுமாறன் குறிப்பிட்டதைப்போல, காட்சிப்படுத்தல் விலங்குகளின் பட்டியலை தீர்மானிக்கும் பொறுப்பை மாநில அட்டவணைக்கு மாற்றுவது நல்லது. இது இந்தியாவுக்கு பெரும் நன்மை சேர்க்கும். அதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு.

வாட்ஸ்அப் தகவல்களைப் பரப்பலாமா?....நிதின் பாய்

Return to frontpage

அவசரகதியில் பகிரப்படும் தகவல்களால் தீமைகள்தான் அதிகம்

எதையும் அலசி ஆராய்ந்து வாதப் பிரதிவாதம் செய்யும் இந்தியர்களின் இடத்தை எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கியெழும் இந்தியர்கள் அபகரிக்கத் தொடங்கிவிட்டார்களோ எனும் ஐயம் எழுகிறது. விசாலமான பார்வைகளை முன்வைக்கும் பொது விவாத மேடைகள் அரிதாகிவருகின்றன. பொது மேடைப் பேச்சுகள் என்றாலே கத்திக் கூப்பாடுபோடுவது என்றாகிவிட்டது. இந்தப் போக்கு தணியப்போவதாகத் தெரியவில்லை. ஆக, தலைப்புச் செய்திகளையும் உடனடி அலசல்களையும் விட்டு விலகி நிற்க வேண்டிய நேரம் இது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஊழலுக்கு எதிராகக் களமிறங்கிப் போராடினார்கள். அதன் பிறகு, இந்தப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அந்த வரிசையில் நடிகர் மற்றும் இயக்குநர் அனுபம் கெருக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தது நினைவிருக்கும். இந்தியாவில் சகிப்புத்தன்மையும் பாதுகாப்பின்மையும் அதிகரித்துவிட்டதாக நடிகர் அமிர்கான் கூறியதைக் கண்டித்து, அனுபம் கெர் ஊர்வலம் நடத்தினார். இப்படி எதிர்ப்பை எதிர்த்ததற்காக அனுபம் கெருக்கு எதிர்ப்புக் கிளம்பியது.

எதிர்ப்புச் சங்கிலிகள்

இதேபோன்று சமீபத்தில் பெங்களூருவில் நடத்தப்பட்ட இலக்கியச் சங்கமமும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொடூரமாகக் கொல்லப்பட்டத்தைக் கண்டித்து, இந்தியாவில் சகிப்பின்மையும் வெறுப்பு அரசியலும் அதிகரித்துவருவதாகக் கூறி, எழுத்தாளர்கள் பலர் தங்களது விருதுகளைத் திரும்ப ஒப்படைத்தனர் இல்லையா! அந்த எதிர்வினையைச் சிலர் விமர்சித்தனர். அப்படி விமர்சித்தவர்களில் ஒருவர் எழுத்தாளர் விக்ரம் சம்பத். இவர் இலக்கியவாதிகளின் ஒப்பற்ற படைப்புகளுக்கு அரசு சாரா நிறுவனமான சாகித்ய அகாடமி கொடுத்த விருதுகளை எதற்காகத் திருப்பித் தர வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். அவர் ஒருங்கிணைத்த இலக்கியக் கூட்டம்தான் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த விழாவை முறியடிக்கச் சில எழுத்தாளர்கள் முயன்றதாகச் சிலர் ஆவேசப்படுகிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு நிகழ்வுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவோம். அதற்கு அடுத்த காலகட்டத்தில் ஒரு பிரச்சினைக்கு ஊடகம் ஏற்படுத்தும் பிம்பத்துக்கு எதிர்வினை ஆற்றத் தொடங்கினோம். இப்போது சமூக வலைதளங்கள் மூலம் எதிர்வினைக்கு எதிர்வினை ஏவப்படுகின்றன. இப்படியாக எதிர்வினைக்கு எதிர்வினை. மீண்டும் அதற்கு எதிர்வினை என ஒரு தொடர் சங்கிலியாக எதிர்வினைகள் முடிவிலியில் சுழன்றுகொண்டிருக்கின்றன. ஆக, செய்திகளுக்குப் பதிலாக எதிர்வினைகளும் எதிர்ப்பலைகளும் சுழன்றுகொண்டே இருக்கின்றன. பொதுவெளிகளில் விவாதம் என்பது சுருங்கிக்கொண்டே போகிறது. நாடகத்தனமாகக் கூச்சலிடும் செய்தித் தொகுப்பாளர்களும், கத்திக் கூப்பாடுபோடும் பேச்சாளர்களும், பிரச்சினையைப் பூதாகாரமாக்கும் நிருபர்களும், ஒருதலைப்பட்சமான வர்ணனையாளர்களும், சந்தர்ப்பவாதிகளான ஆதரவாளர்களும், தான் நினைப்பது மட்டுமே சரி எனப் பதாகை தூக்கிப்பிடிக்கும் இணையவாசிகளும் ஒன்றுகூடி நாளொன்றுக்கு ஒரு சாத்தானைத் தேடி அலைகின்றனர்.

செயல்படாத ஜனநாயகம்

இந்தப் போக்கு சமூக நலத்துக்கு அபாயகரமானது. அதைவிடவும் ஜனநாயகத் தூணையே அசைத்துப் பார்க்கிறது. அரசியல் கொள்கைகள் இதுவரை காணாத அளவுக்குத் தூக்கி எறியப்படுகின்றன. அரசியல் அதிகாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எதுவுமே உண்மை என நம்ப முடியாத இடத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒருபுறம் முழுமையான ஜனநாயகம் மறுபுறம் ஜனநாயகத்துக்குச் சவால்விடும் சம்பவங்கள். இப்படி இரண்டுக்கும் இடையில் லாவகமாகக் கயிறு மேல் நடப்பதுபோன்ற சாகசத்தைப் பல தசாப்தங்களாக இந்தியா செய்துவந்தது. ஆனால், அந்தக் கயிற்றிலிருந்து இந்தியா இடறி விழுந்துவிடுமோ எனும் அச்சத்தைச் சமீபகாலப் போக்குகள் ஏற்படுத்துகின்றன. ‘அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்பார்கள். ஆனால், ஜனநாயகத்தைப் பொறுத்தவரை மக்கள் எவ்வழியோ அரசன் அவ்வழியே. நம்மில் ஒருவர்தான் நம்மை ஆளுகிறார் என்பதுதானே ஜனநாயகம். ஆனால், இன்றைய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் ஆன்மாவை இழந்துவருகிறது. சரியான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான கலந்துரையாடல்களுக்குப் பதிலாகக் களேபரங்கள்தான் அநேகமாக நாடாளுமன்றத்தில் நிகழ்கின்றன.

சமூகவியலாளர் மற்றும் குற்றவியல் ஆய்வாளரான ஸ்டேன்லி கோஹன் 1960-களில் உருவாக்கிய சொல்லாடலான

`தார்மீகப் பதற்றம்’என்பதில் நாம் ஆழ்ந்திருக்கிறோம். ஸ்டேன்லி பார்வையில் இத்தகைய தார்மீகப் பதற்றத்தை ஊடகம்தான் கட்டமைக்கிறது. மக்கள் எதைப் பார்த்து அஞ்ச வேண்டும், எதைக் கண்டிக்க வேண்டும், எதை நிந்திக்க வேண்டும் என்பதையெல்லாம் ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. ஊடகங்கள் இல்லையேல் தார்மீகப் பதற்றமே இல்லை என்றுகூடச் சொல்லலாம். சில தனிநபர்களையும் அமைப்புகளையும் சமூக விரோதிகள் போல கட்டமைப்பது மோசமான சில ஊடகங்கள்தான் என்கிறார் ஸ்டேன்லி. ஒரு கட்டத்தில் காரணம் தெரியாமலேயே இப்படியாக முன்நிறுத்தப்படும் பிம்பங்களை மக்கள் வெறுக்கிறார்கள், தண்டிக்கிறார்கள். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தார்மீகப் பதற்றம் உருவாகலாம். மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் அவை ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. இதன் விளைவாகத்தான், எதற்கெடுத்தாலும் எதிர்ப்புத் தெரிவிப்பது என்னும் போக்கு உருவெடுக்கிறது.

சமூக ஊடகங்களின் தாக்கம்

சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு தார்மீகப் பதற்றத்தின் போக்கு மாறியுள்ளதா என்பதை இதுவரை யாரும் கல்வி நிறுவனங்களில் ஆராயவில்லை. அதிலும் மொபைல் போன்களும், இணையதளமும், சமூகத்துக்குள் ஊடுருவிய பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, பொதுவெளிகளில் நடைபெறும் கருத்துரையாடல்களின் தரத்தை டுவிட்டர் தளர்த்திவிட்டது. ஒரு காலத்தில் வலைப்பூ எழுத்துகள் தரத்தை மேம்படுத்த உதவின. ஆனால், தற்போது பொதுப்படையான கண்ணோட்டம் இல்லாமல் தனிப்பட்ட பார்வையிலிருந்து ஒரு செய்தியை விவரிக்கும் முறையான ‘கான்சோ ஊடகவியல்’தான் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு உகந்த உதாரணம் வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் தகவல்கள். தனிப்பட்ட கருத்துகளை இதன்மூலம் நாம் முன்னோக்கிப் பரப்புகிறோம். இதில் ஆபத்து என்னவென்றால், வெகுஜன ஊடகங்களில் காணும் செய்திகளைவிடவும் இத்தகைய ஃபார்வர்ட் தகவல்கள் உளவியல்ரீதியாக நமது நம்பகத்தன்மையைச் சுலபமாகச் சம்பாதித்துவிடுகின்றன. “தான் நினைப்பதுபோலவே பலரும் நினைக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ளும் துறுதுறுப்பில் எதை வேண்டுமானாலும் பரப்பும் போக்கு அதிகரித்துவருகிறது. அரசியல் மதிநுட்பமே இல்லாமல் பொத்தாம்பொதுவாகப் பரப்பப்படும் இத்தகைய தகவல்கள், ஒரு கட்டத்தில் இயக்கமாகவே உருமாறுகின்றன” என எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் சந்தோஷ் தேசாய் சுட்டிக்காட்டுகிறார்.

இதை எப்படித்தான் எதிர்கொள்வது என்றால், செய்திகளை வாசிக்கும் அனைவரும் தங்களுக்குள் அதை ஆழமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதே போலச் சமூக ஆர்வலர்களும், ஊடகமும், பொதுச் சமூக அறிஞர்களும் பரபரப்புக்குப் பின்னால் ஓடாமல் ஒவ்வொரு சம்பவத்தின் மையத்தையும் கேள்விக்குட்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். என் கருத்தை நான் திணிப்பதாகக்கூட வாசகர்கள் நினைக்கலாம். ஆனால், முதல் கட்டமாகத் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்பேன். எல்லா சேனல்களையும்தான் சொல்கிறேன்! வாட்ஸ்அப் தகவல்களையும், ஃபார்வர்ட் மின்னஞ்சல்களையும் நம்ப வேண்டாம். நெருக்கடியான சூழல்களைத் தவிர மற்ற நேரங்களில் சமூக ஊடகங்களைக் கையில் எடுப்பதைத் தவிர்க்கலாம். என்றென்றும் பேட்டரி சார்ஜ் இறங்காத சிறந்த வயர்லெஸ் தொழில்நுட்பம் நாளிதழ்களும் பத்திரிகைகளும்தான்! உங்கள் டுவிட்டர் ஆப்ஸும் தொலைக்காட்சியும் தரும் சுடச்சுடச் செய்திகள் ஆற அமர விரிவான செய்தி தரும் அச்சு ஊடகத்துக்கு இணையாகாது.

இத்தனையும் சொல்லிவிட்டு இந்தக் கட்டுரையை நான் டுவீட் செய்வேன், ஃபேஸ்புக்கில் பகிர்வேன், வாட்ஸ்அப்பிலும் மின்னஞ்சலிலும் ஃபார்வர்ட் செய்வேன். எப்படியும் என்னை எதிர்த்துப் போராட யாரோ, எங்கேயோ தயாராக இருப்பார்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில்: ம.சுசித்ரா

Tuesday, January 5, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? 15 - தற்கொலை எண்ணத்தைத் தூர எறிவோம் .....டாக்டர் ஆ.காட்சன்

Return to frontpage

வளர்இளம் பருவத்தில் ஒரு சிலருக்குத் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதும், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையும் காண முடிகிறது. இது இயல்பானதல்ல. இது போன்ற எண்ணங்கள், முயற்சிகளை எதிர்கொள்வதற்கு என்ன செய்யலாம்?

l வளர் இளம் பருவத்தினர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தினால், அதைப் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக மனநல ஆலோசனைக்கு அழைத்துச்செல்வதே சரி.

l ஒருமுறை தற்கொலைக்கு முயன்ற நபர், மருத்துவச் சிகிச்சைக்குப் பயந்து மறுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்யமாட்டார் என்பதும் தவறான நம்பிக்கை. அவர்கள்தான் அதிக ஆபத்தான வட்டத்தில் இருப்பவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

l வீட்டில் பெரியவர்கள் யாராவது மருத்துவச் சிகிச்சைக்காகத் தூக்க மாத்திரை சாப்பிட்டுவந்தால், அதைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவேண்டும். பார்வையில் தெரியும்படி வீட்டில் பூச்சிக்கொல்லிகளை வைக்கக் கூடாது.

l வளர்இளம் பருவத்தினரின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், மனநல ஆலோசனைக்கு அழைத்துச் செல்வது அவசியம். ஏனென்றால், எல்லா மனநோய்களும் வெளிப்படையாகத் தெரிந்துவிடுவதில்லை.

l தற்கொலை எண்ணங்கள் கொண்ட எல்லோரையும் கவுன்சலிங்கால் மட்டுமே மாற்றிவிட முடியாது. மனநோய்களால் ஏற்படும் தற்கொலை எண்ணங்கள், காரணமே இல்லாமல் ஏற்படக்கூடியவை. மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்.

l ஊடகங்கள் மற்றும் சினிமாக்களில் காண்பிக்கப்படும் தற்கொலை சம்பந்தப்பட்ட காட்சிகள் பல நேரங்களில் ‘தற்கொலை செய்வது எப்படி?’ என்று தேவையற்ற பாடம் எடுப்பது போலவே பல நேரம் அமைந்துள்ளன. இதுபோன்ற காட்சிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சமீபத்தில் நான் பார்த்த ஒரு மாணவன் ‘3’ படத்தில் தனுஷ் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொள்வதைப் போலவே, முயன்றது ஓர் உதாரணம்.

l பள்ளி வகுப்புகளிலும் பாடத்திட்டங்களிலும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வு சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், வளர்இளம் பருவத்தினரின் திடீர் மரணத்துக்கு இரண்டாவது முக்கியக் காரணம் தற்கொலை என்பதை மறந்துவிடக் கூடாது. பல வளர்இளம் பருவத்தினர் தங்கள் எண்ணங்களைச் சக மாணவர்களிடமே முதன்முதலில் வெளிப்படுத்துகின்றனர்.

l காசநோயின் அறிகுறிகள் பற்றியும், புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? என்றும், அவசரத் தேவைக்கு 108-ஐக் கூப்பிடுங்கள் என்றும் செய்யப்பட்ட தொடர் விளம்பரங்கள் எந்த அளவுக்குப் பலன் தந்தனவோ அதைப் போலவே தற்கொலைக்கான காரணங்கள், ஆலோசனைக்கான வழிகாட்டுதல்களை அரசு மற்றும் தொண்டுநிறுவனங்கள் விளம்பரம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

l மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களிடம்கூடத் தற்கொலை குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது வேதனையான விஷயம். ஏனென்றால், தற்கொலை முயற்சிக்கான முதலுதவி சிகிச்சை முடிந்ததும், மனநலப் பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும் வளர்இளம் பருவத்தினரின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. தற்கொலை முயற்சி என்பதே ஒரு மனநலப் பாதிப்பின் அறிகுறிதான்.

l இவர்களுக்குப் பெற்றோரின் ஆறுதலும் அரவணைப்பும்தான் முதல் தேவையே தவிர, தண்டனையும் கண்டிப்பும் அல்ல. பெற்றோருக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், சமூக நம்பிக்கைகளின் அடிப்படையில் தற்கொலை ஏற்கத்தக்க விஷயம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

(அடுத்த முறை: ஏன் இந்த அழுத்தம்?)

தமிழகத்தில் தற்கொலைத் தடுப்பு இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் முன்னோடி அமைப்பு சிநேகா. இந்த நிறுவனத்தின் தொலைபேசி உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம்: 044-2464 0050, 044-2464 0060. நேரடியாகக் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை ஆலோசனை பெறலாம். முகவரி: சிநேகா, 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028 / www.snehaindia.org

மின்னஞ்சல் தொடர்புக்கு: help@snehaindia.org

இலவச ஆலோசனை

புதுச்சேரியில் தற்கொலைத் தடுப்பு உளவியல் ஆலோசனை வழங்கும் அமைப்பு மைத்ரேயி. தொலைபேசி எண்: 0413-2339999, மின்னஞ்சல் முகவரி: bimaitreyi@rediffmail.com. நேரடியாக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரை அணுகலாம். முகவரி: மைத்ரேயி, 225, தியாகமுதலி தெரு, புதுச்சேரி - 615001

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

பெண்கள் கிண்டலுக்குரியவர்களா? by அரவிந்தன்

Return to frontpage

இன்றைய காலகட்டத்தின் நியதிக்கு உட்பட்டு நானும் வாட்ஸ்அப் குழுக்கள் சிலவற்றில் சேர்க்கப்பட்டிருக்கிறேன். Literary & Intellectuals என்றொரு குழு அதில் உண்டு. பல்வேறு செய்திகள், கட்டுரைக்கான இணைப்புகள், குறிப்புகள் ஆகியவற்றுடன் சில சமயம் நகைச்சுவைத் துணுக்குகளும் அதில் பரிமாறிக்கொள்ளப்படும். அதில் அண்மையில் ஒரு நகைச்சுவைத் துணுக்கு வந்திருந்தது. ஒரு மனைவியின் பிறழ் நடத்தையை வைத்து உருவாக்கப்பட்ட துணுக்கு.

இந்தத் துணுக்கைப் பார்த்ததும் “பெண்களை இழிவுபடுத்தும் நகைச்சுவைத் துணுக்குகளைத் தவிர்க்கலாமே” என்று அதற்குப் பதில் எழுதினேன். அந்தத் துணுக்கைப் பதிவிட்டிருந்த நண்பர் அப்படிச் செய்தது தவறுதான் என ஒப்புக்கொண்டார். “ஆனால், எல்லா ஜோக்குகளும் யாராவது ஒருவரை இழிவுபடுத்துபவைதானே?” என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். “பெண்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் வரலாறு கொண்டவர்கள் நாம். இனிமேலாவது அதற்குப் பிராயச்சித்தம் செய்வோம்” என்று பதில் எழுதினேன்.

ஆதரித்து ஒரு செய்தி

சில வாரங்களுக்கு முன்பு வேறொரு குழுவில் (இது எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் குழு) பெண்களைக் கேலி செய்யும் வேறொரு துணுக்கு பதிவிடப்பட்டிருந்தது. அப்போதும் நான் எதிர்க் குரல் எழுப்பினேன். பதிவிட்டவரிடமிருந்து அதற்குப் பதில் வரவில்லை. குழுவில் இருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து என்னை ஆதரித்து ஒரு செய்தி வந்தது.

நண்பர் சொன்னது ஒரு விதத்தில் சரிதான். நகைச் சுவைத் துணுக்கு என்பதே ஒருவரின் அசட்டுத்தனம், முட்டாள்தனம், அபத்தம், பிறழ் நடத்தை ஆகிய எதையேனும் பகடிசெய்து சிரிப்பதுதான். யாரையும் சற்றேனும் நெளியவைக்காமல் நகைச்சுவை, கிண்டல், கேலி ஆகியவை இருக்க முடியாது. இது அளவோடு இருக்கும்வரை பரவாயில்லை. எல்லை மீறிப் புண்படுத்தும் அளவுக்கு இது செல்லக் கூடாது. ரசனையும் நாசூக்கும் கொண்ட நகைச்சுவைத் துணுக்குகள் அவற்றுக்கு இலக்காகுபவர்களையும் மனம்விட்டுச் சிரிக்கவைத்துவிடும். எல்லை மீறும் துணுக்குகள் அவமானத்துக்கு உள்ளாக்கும்.

பெண்களைப் பற்றிய துணுக்குகள் பெரும்பாலும் இரண்டாவது ரகத்திலேயே இருப்பதுதான் சிக்கல். பெண்கள் மீதான ஈர்ப்பும் இளக்காரமும் ஒருங்கே கொண்ட ஆண்கள், பெண்களைப் பற்றிய தங்கள் மனப் பிறழ்வுகளைப் பழமொழிகள், நகைச்சுவைத் துணுக்குகள் எனப் பல விதங்களிலும் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள். பெண்களைப் பற்றிய மேலோட்டமான, ஒருதலைப்பட்சமான விமர்சனமே இந்தக் கேலிகளின் அடிப்படை. மேற்படிக் குழு ஒன்றில் பகிர்ந்துகொள்ளப்பட்ட துணுக்கு ‘ஓடிப் போன’ பெண் பற்றி ஒரு கணவனின் பார்வையாக வெளிப்பட்டிருக்கிறது. பெண்களை இலக்காக்கும் எல்லாத் துணுக்குகளிலும் இதுபோன்ற போக்கைக் காணலாம்.

ஏன் பெண்களை, அதிலும் மனைவியரைக் குறிவைத்தே அதிகத் துணுக்குகள் உருவாக்கப்படுகின்றன? ஆண்கள் அபத்தம், முட்டாள்தனம், பிறழ் நடத்தை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்களா? ஆண்களைக் கேலிசெய்யும் துணுக்குகள் ஆணை / கணவனைப் பொதுமைப்படுத்திப் பேசுவதில்லை. தொழில், ஊர், மதம் ஆகிய பிரிவுகளுக்குள் ஆணைச் சித்தரித்துக் கேலி செய்கின்றன. கேலிக்குரியவர் ஆண் என்றால், அவர் பொதுவாக டாக்டர், வக்கீல், மேனேஜராக இருப்பார். கேலிக்குரியவர் பெண் என்றால், பொதுவாக மனைவி, மாமியார் அல்லது அம்மா பாத்திரமாகச் சித்தரிக்கப்பட்டுப் பரிகசிக்கப்படுவார். அல்லது

`வேலைக்காரி ஜோக், நர்ஸ் ஜோக்'. ஒரு கணவன் அல்லது ஒரு ஆண் என்று குறிப்பிட்டு ஆணைப் பொதுவாகக் கேலிசெய்யும் துணுக்குகள் முதலமைச்சரின் பேட்டி போலவே அரிதானவை. ஆண்கள் அல்லது கணவர்கள் கேலிக்குரியவர்கள் இல்லையா?

கைபேசியில் இடம் பொருள் ஏவல் அறியாமல் சத்தமாகப் பேசும் கணவன்மார்களைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொள்ளும் மனைவிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். மனைவியுடன் போய்க்கொண்டிருக்கும்போதும் வெட்கமில்லாமல் பிற பெண்களைப் ‘பராக்கு’ பார்க்கும் ஒரு ஆண், தன் மனைவி மீது பிற ஆண்களின் கண் பட்டால் ரோஷப்படும் அபத்தமும் அன்றாடம் அரங்கேறத்தான் செய்கிறது. நடுத்தர வயதைத் தாண்டிவிட்ட கணவன்கள், எதிர் வீட்டுக்குப் புதிதாகக் குடிவரும் கல்லூரிப் பெண்ணைப் பார்த்து அசடுவழியும் அற்பத்தனமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ‘குடும்பத் தலைவர்’களான கணவன்களுக்கு ‘ஓடிப் போக’ வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், பிறழ் உறவுகளுக்கும் சில்லறைச் சபலங்களுக்கும் பஞ்சமே கிடையாது. மாட்டு வண்டியே தன்னைக் கடந்துபோனாலும் கவலைப்படாத ஆண் சிங்கங்கள், ஒரு பெண்ணின் இரு சக்கர வாகனம் கடந்து சென்றுவிட்டால் அவமானமடைந்து ஆக்ஸிலேட்டரைத் திருகும் கேலிக்கூத்தும் சாலைகளில் அன்றாடக் காட்சிதான். பொது இடம் என்றும் பாராமல் கிடைக்கிற சந்துகளுக்கெல்லாம் சிறுநீர் அபிஷேகம் நடத்தும் ஆண்களை எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம். சாலைகளில் (சிகரெட்) புகை மண்டலப் பூஜை நடத்திப் பிறரைத் துன்புறுத்துவதும் பல ஆண்களுக்கு வாடிக்கைதான். இதையெல்லாம் பரிகசித்து, நாகரிகம் இல்லாத ஆண் அல்லது விவஸ்தையற்ற கணவன் என்னும் பொதுப் பாத்திரத்தை முன்வைத்துத் துணுக்குகள் அதிகம் வருவதில்லை.

`பெண்டாட்டிக்குப் பயப்படும் கணவன்' ஜோக் மட்டுமே வருகிறது. யதார்த்தத்துக்குப் புறம்பான இதை விட்டுவிட்டால் கணவன் பாத்திரம் பொதுவாக கிண்டலடிக்கப்படுவதில்லை.

இதே ஆண்கள் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பெண்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள். சிறுமிகள் முதல் மூதாட்டிகள்வரை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை வரையறுக்கிறார்கள். அவர்கள் எங்கே, எப்போது, எப்படிப் போகலாம் அல்லது போகக் கூடாது என்பதைத் தீர்மானிக்க முயல்கிறார்கள். குடும்பத்தில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் “பொம்பள சரியில்ல, அதான் காரணம்” என்று கூசாமல் சொல்கிறார்கள். பொது வாழ்வில் வெற்றிபெறும் பெண்கள் மீது வெட்கமின்றி அவதூறு சுமத்துகிறார்கள். இதெல்லாம் போதாதென்று, அவர்களைப் பரிகசித்து நகைச்சுவைத் துணுக்குகளையும் அள்ளிவிடுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒன்றுதான்: பெண்களை இழிவாக, இளக்காரமாக, இரண்டாந்தர மனிதர்களாகப் பார்க்கும் போக்கு.

தொடரும் அசிங்கம்

ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இந்தச் சமூக அமைப்பு, பெண்களுக்கு இழைத்துவரும் அநீதிகளில் ஒன்றாகவே இந்தத் துணுக்குகளையும் பார்க்க முடிகிறது. வீடுகளிலும் பத்திரிகை, நாடகம், திரைப்படங்கள் ஆகியவற்றிலும் இவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி ரசிப்பதன் மூலம், ஆண் சமூகம் இவற்றை சகஜப்படுத்திவைத்திருப்பது இந்தத் துணுக்குகளைக் காட்டிலும் கொடுமையானது. உடன்கட்டை ஏறுதல், விதவைகளை முடக்கிவைத்தல், கல்வி மற்றும் சொத்துரிமையை மறுத்தல் போன்ற குற்றங்களுக்குப் பரிகாரம் கண்டதுபோலவே ஆண் உலகம் இதற்கும் பரிகாரம் காண வேண்டும்.

முதலாவதாக, நீண்ட காலமாகத் தொடரும் இந்த அசிங்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அடுத்தபடியாக, ஆண்கள் தங்களைப் பரிகசிக்கும் நகைச்சுவைத் துணுக்குகளை உருவாக்கிப் பெருமளவில் உலவவிடலாம். மிஸ்டர் எக்ஸ் என்ற பாத்திரத்தை வைத்துத் துணுக்குகள் வந்ததுபோல ‘அசட்டுக் கணவன்’ அல்லது ‘அலட்டல் பையன்’ என்னும் பாத்திரத்தை வைத்துத் துணுக்குகளை ஆண்களே உருவாக்கலாம். பெண்களும் அதில் பெருமளவு உதவலாம். வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் இவற்றைப் பகிர்ந்துகொண்டு கைகொட்டிச் சிரிக்கலாம். பெண்களைக் கேலிப்பொருளாக்கியதற்கான பிராயச்சித்தத்தைச் சிரித்துக்கொண்டே தொடங்க இது நல்ல வழியாக இருக்கும்.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

4G-ஐ விட வேகமான 40 ஆயிரம் வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகளை இந்தியா முழுவதும் நிறுவுகிறது பி.எஸ்.என்.எல்

இந்தூர்,

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நாடு முழுவதும் 40 ஆயிரம் வை-ஃபை ஹாட் ஸ்பாட்டுகளை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது. 4G இண்டர்நெட் சேவையை வழங்க போதுமான வசதிகள் இல்லாததால் அதை சமாளிக்கும் வகையில் இந்த வசதியை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வை-ஃபை ஹாட் ஸ்பாட்டு இண்டர்நெட் வசதி 4G-ஐ விட வேகமானது. இதுவரை 500 ஹாட் ஸ்பாட்டுகளை நிறுவியிருப்பதாகவும், இந்த ஆண்டு முடிவுக்குள் 2,500 ஹாட் ஸ்பாட்டுகளை நாடு முழுவதும் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதுதவிர, தொலைதொடர்பு சேவையை அதிகரிக்க 25 ஆயிரம் புதிய மொபைல் டவர்களை நிறுவவும் முடிவு செய்துள்ளது பி.எஸ்.என்.எல்.

இலவசங்கள், மானியங்கள் வேண்டாம்!

logo


ஒருமாத காலமாக கனமழையால் தத்தளித்த தமிழ்நாட்டில், இப்போது அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மே மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதையொட்டி, ஒவ்வொரு கட்சியுமே, இப்போதே ‘கோதாவில்’ இறங்க தயாராகிவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் அடுத்த கட்சித்தலைவர்களை குறிவைத்து அறிக்கைககள் விடத்தொடங்கிவிட்டனர். முதல்–அமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாசை பா.ம.க. அறிவித்துவிட்டது. ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணியை அமைத்துவிட்டது. பா.ஜ.க.வை பொருத்தமட்டில், எங்கள் கூட்டணி அப்படியே இருக்கிறது என்று சொன்னாலும், அதில் சலசலப்பு இருப்பது தெரிகிறது. அடுத்து தி.மு.க. கூட்டணியில் யார்–யார் இடம்பெறப்போகிறார்கள்? என்பது ஒரு எதிர்பார்ப்பு. அ.தி.மு.க.வை பொருத்தமட்டில், பாராளுமன்ற தேர்தலைப் போல தனித்து போட்டியிடுமா?, அல்லது கூட்டணி வைக்குமா? என்று ஏற்பட்டுள்ள சந்தேகத்துக்கு விடையளிக்கும் வகையில், சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவு எடுப்பேன் என்று பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா அறிவித்து விட்டார். விரைவில் ஒரு தெளிவான நிலை ஏற்பட்டுவிடும்.

இந்த பிரச்சினைகளில் எல்லாம் ஒரு தெளிவு ஏற்பட்டவுடன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதைச்செய்வோம், இதைச்செய்வோம், இதைத்தருவோம், அதைத் தருவோம் என்று இலவசங்கள், மானியங்கள் பட்டியல் அடுக்கடுக்காக வரப்போகிறது. ஆனால், உழைப்பே உயர்வுதரும் என்று வாழும் இந்த தமிழ்நாட்டில், 45 ஆண்டுகளுக்கு மேலாக ஓசியே, மானியங்களே, சுகம் தரும் என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. உழைத்து சம்பாதிக்கவேண்டிய வயதில், ஓசிகளை வாங்கியே வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற ஒரு சோம்பேறித்தனமான எண்ணம் ஆழமாக வேரூன்றிவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு நிச்சயமாக இதுபோன்ற எண்ணங்கள் பயனளிக்காது. முன்னுக்கு செல்லவேண்டிய தமிழ்நாட்டை பின்னுக்கு இழுத்துவிடும்.

தமிழ்நாட்டில், அரசின் மொத்த வருவாயில் 41 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காகவும், பென்சனுக்காகவும் சென்றுவிடுகிறது. 40 சதவீத வருவாய் அரசு வழங்கும் மானியங்களுக்காகவும், சலுகைகளுக்காகவும் சென்றுவிடுகிறது. வருகிற மார்ச் இறுதியில் தமிழக அரசின் மொத்தக்கடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 ரூபாயாக இருக்கும். இந்த கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டிக்காக 12 சதவீதம் சென்றுவிடுகிறது. வருவாயின் இவ்வளவு தொகை இந்த 3 இனங்களுக்கு மட்டுமே சென்று விட்டால், எப்படி வளர்ச்சித் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கமுடியும்? அரசு இனிமேலும் கடன்வாங்கி காலத்தை தள்ளமுடியாது. ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைத்து, மேலும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினால்தான் மாநிலம் வளர்ச்சியை காணமுடியும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 87 லட்சத்தை நெருங்கிவிட்டது. ஆக, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி, உட்கட்டமைப்பு வசதிகள், தொழில்வளர்ச்சி, விவசாய வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தேர்தல் அறிக்கை வரவேண்டுமே தவிர, இலவசங்கள், மானியங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி, நாட்டை பின்னுக்கு தள்ளக்கூடிய தேர்தல் அறிக்கை தேவையில்லை என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

குஜராத்தில் முதல்–மந்திரியாக இருந்த நரேந்திரமோடி, ஒருபோதும் இலவசங்களை அறிவித்து ஓட்டு கேட்கவில்லை என்று பெற்ற பெயரை, வருகிற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் அதைப்போல அறிவித்து, நற்பெயரை பெறவேண்டும். இறக்கம் தரும் இலவசங்கள், மானியங்கள் வேண்டாம். ஏற்றம் தரும் வேலைவாய்ப்புகளை தந்தால், அவர்களே உழைத்து சம்பாத்தியம் செய்துக் கொள்வார்கள்.

Monday, January 4, 2016

ஏரியை ஆக்கிரமித்தால் தட்டி கேளுங்கள்: ஐஏஎஸ் அதிகாரி அமுதா வலியுறுத்தல்

Return to frontpage

மழை வெள்ள மீட்பு பணிக்கான சிறப்பு அதிகாரி அமுதா ஐஏஎஸ்: நமது உடலில் உள்ள நீர் மற்றும் மலம் எங்கும் ஒன்றாக சேராது. இரண்டும் தனித்தனியாகத் தான் உடலில் இருந்து வெளியேறும். இயற்கை அப்படித்தான் நம்மை படைத்துள்ளது. வெளியே வந்ததும் நாம் ஒன்றாக சேர்த்துவிடுகிறோம். அதன்பின் அதனை பிரிக்க செலவு செய் கிறோம். இயற்கை செய்தது போலவே நாமும் செய்தால் கோடிக் கணக்கான பணம் மிச்சம் ஆகும்.

மாற்றம் மனதளவில் நம்மிடையே வரவேண்டும். அந்த மாற்றம் உள்ளிருந்து வரவில்லை என்றால், இதுபோன்ற பேரழிவுகள் வந்து கொண்டே இருக்கும். நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் எங்கு தேங்குமோ அங்குதான் தேங்கும். நாம் அங்கு சென்று வீடுகளை கட்டிவிட்டு தண்ணீர் தேங்குகிறது என்று சொன்னால் அது நம்முடைய குற்றம். தண்ணீரோட குற்றம் இல்லை. நீர் மேலாண்மையில் நம்முடைய முன்னோர்கள்தான் உலகத்துக்கே முன்னோடி.

ஆறு, ஏரி, கலங்கல், மதகு, குட்டை, தாங்கல் என்று அந்த காலத்தில் இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,200-க்கும் மேல் ஏரிகள் இருந்துள்ளன. எப்படி திட்டமிடப்பட்டதோ அதேபோல் கடந்த 20, 30 ஆண்டுகளில் திட்டமிட்டு அழித்துவிட்டோம். ரியல் எஸ்டேட் மூலம் நிறைய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் அரசு தான் காரணம் என்கிறார்கள். நம்முடை யது ஜனநாயக நாடு. நாம்தான் அரசு. நாம் எல்லாவற்றையும் விட்டு விலகியிருக்கிறோம்.

சிலர் தவறு செய்யும் போது, அதனை தட்டிக்கேட்டு நிறுத்தாததால் எல்லோரும் கஷ்டப்படுகிறோம். ஒரு ஏரியில் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்யும் போதோ அல்லது வீடு கட்டும் போதோ தட்டிக்கேட்க வேண்டும். நமக்கு சொந்தமான ஏரி, வாய்க்கால், நீர்நிலைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும். மக்கள் சக்திக்கு முன்னால் எதுவும் ஒன்றுமில்லை.

முதல் மழைக்கும் இரண்டாவது மழைக்கும் இடைப்பட்ட காலத்தில் அடையாறை 30 மீட்டரில் இருந்து 60 மீட்டருக்கு ஆழப்படுத்தினோம். முன்னதாக அங்கிருந்த 127 குடும்பங்களை உடனடியாக அரசுசின் உத்தரவு வாங்கி பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்றினோம். அந்த குடும்பங்களுக்கு வீடு கிடைத்ததால் சந்தோஷமாக இருக் கிறார்கள். அடையாறை ஆழப் படுத்தியதால் 5 ஆயிரம் குடும்பங் கள் காப்பாற்றப் பட்டுள்ளனர்.

மக்கள் நியாயமான எந்த செயலாக இருந்தாலும் ஆதரவு தருவார்கள். மக்கள் நல்லவர்கள். சுனாமி, தானே, வெள்ளம் வரும்போது மட்டும் மனிதாபிமானத்தை காட்டக் கூடாது. அது எப்பவும் இருக்க வேண்டும். அரசு நல்ல படியாக செயல்பட வேண்டும் என்றால் மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் முடியும். இந்த மழை வெள்ளம் நம்மை ஒன்று சேர்த்துள்ளது.

அரசு சொத்து எல்லாம் என்னுடைய சொத்து. பள்ளி, மருத்துவமனை, சாலை, தெரு விளக்கு என அனைத்தையும் நான் பாதுகாப்பேன். யாராவது சேதப்படுத்தினால் நான் தட்டிக்கேட்பேன் என்று இருக்க வேண்டும்.

பார்வை: ஆடையால் கெடுகிறதா புனிதம்?....அஜிதா



Return to frontpage

ஆடையால் நமது கோயில்களின் புனிதம் கெட்டுவிடுவதாகக் கருதி, இந்து சமய அறநிலையத் துறையின் சட்டத்தின் விதியை மேற்கோள் காட்டி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேசத்தையே உலுக்கிய நிர்பயா கொடூரத்துக்கும்கூட ஆடை பற்றிய கருத்துக்கள் வெளிவந்தன. ‘நிர்பயாவைப் போல இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் கவர்ச்சிகரமான உடையில் வெளியே போனால்…’ என்ற ரீதியில் வன்மமான கருத்துக்களைப் பேசியவர்களில் பலரும் நன்கு படித்த, வசதி வாய்ப்புள்ள நடுத்தர வர்க்கத்தினரே.

ராமாயண, மகாபாரதக் காலத்திலிருந்து இன்றுவரை பெண்களின் மீதான வன்முறைகளுக்குக் காரணம் பெண்தான் என்ற வன்முறைவாதம், வன்முறையாளர்களுக்கு மட்டுமே ஏற்புடைய ஒரு விஷயம், மக்களின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

சரி இப்போது ஆடைகளுக்கு வருவோம். “நமது கலாச்சாரம் காக்கப்பட வேண்டும்” என்கிற வாதத்தை எடுத்துக்கொள்வோம். நமது கலாச்சாரம் புடவை கட்டுதல், வேட்டி அணிதல் என்று வைத்துக்கொள்வோம். இன்றைக்கு 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் - பெண்களைத் தவிர புடவையும் வேட்டியும் மட்டுமே தமது உடை என்று கருதாதவர்கள் 90 சதவீதம் பேர்.

ஆண்களில் அதுவும் இல்லை. கிராமப்புறங்களைத் தவிர்த்து சிற்றூர், நகரங்கள் உட்பட 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பேண்ட் சட்டைதான் அணிகிறார்கள். வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வேட்டி கட்டுவது வழக்கத்தில் உள்ளது. எனவே, ‘நமது கலாச்சாரம்’ என்று கூறுவது வெகுவாக மாறிவிட்டது. 25-30 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடையில் ‘நமது கலாச்சாரத்தில்’ இல்லை என்பது நிதர்சனமான உண்மை. எனவே, வாழ்க்கையில், உடையில் ஏற்படும் மாற்றத்தை நீதித்துறை முதல் பள்ளி, கல்லூரிவரை ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு மாற்றத்துக்கு உள்ளாகிவிட்ட ஆடையைச் சட்டம் போட்டு, விதிகளைப் போட்டாலும் மாறுவது கடினம். அநாகரிகமாக இல்லை என்றால் ஏற்றுக்கொண்டு போக வேண்டும் என்பதுதான் நியதி.

“பிறர் கண்ணை உறுத்துவது போல் இருக்கக் கூடாது” என்று சொல்லப்படுகிறது.

பேசாமல் எல்லாரும் உடல் முழுக்க மூடும் புர்க்காவை அணிந்துவிட்டால் யார் கண்ணையும் உறுத்தாது. நமது சமூகத்திலேயே வாழும் இஸ்லாமிய சமூகத்தினர்கூட இதில் மாற்றம் வர வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால், எது எவர் கண்ணை உறுத்தும் என்ற கேள்விக்கு ஒரு விடை சாத்தியமில்லை. “சரி துப்பட்டாவைப் போடுங்கள், சுடிதாரை ஏற்றுக்கொள்கிறோம்” என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இது இன்றைக்குக் கோயில்களில் வைக்கப்படுவது மட்டுமல்ல. பல முன்னணிக் கல்லூரிகளில், ஏறக்குறைய எல்லாப் பொறியியல் கல்லூரிகளிலும் துப்பட்டாவை ஊக்கு போட்டு இருபக்கமும் ஆடையுடன் குத்திக்கொள்ள வேண்டும் என்று விதி இருக்கிறது. இது மார்பகங்கள் தெரியாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அன்றி வேறல்ல. ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு தாவணி போட வேண்டும் என்று 90-களுக்கு முன்பு இருந்த பள்ளிக்கூட விதிக்கு ஒப்பானது.

சமீபத்தில் நண்பர் ஒருவர் மிகவும் மனமொடிந்து கூறும்போது, முன்பெல்லாம் என் 11 வயது மகளை நான் சுதந்திரமாக உடுத்த அனுமதித்தேன். இப்போது நான் துப்பட்டாவைப் போட்டு மறைக்கும் விதமாக உடுத்தச் சொல்கிறேன் என்று கூறினார். ஏனெனில், பக்கத்து வீட்டுக்காரரின் பார்வை சரியில்லாமல் இருக்கிறது என்று வேதனையுடன் கூறினார். இதே தந்தையின் வேதனையை, சமீபத்தில் தீர்ப்பெழுதிய நீதித்துறையின் மனநிலையோடு ஒத்ததாக இருக்கும் என்று கருத முடியுமா? முடியாது. ஏனெனில் இவர்களுடைய நோக்கம் வக்கிரப் பார்வையுடன் பார்க்கும் ஆணின் கண்களிலிருந்து பெண்ணைக் காப்பாற்றுவது அல்ல. மாறாக, பெண்ணின் உடையால் ஆணின் மனது (சமூகம்) வக்கிரப்படக் கூடாது என்பதும், இதுபோன்ற வக்கிரமான உடையால் கோயிலின் புனிதம் கெடக் கூடாது என்பதும்தான். எப்படிப்பட்ட அணுகுமுறைக் கோளாறு இது? எப்படிப்பட்ட கருத்து வக்கிரம் இது?

உண்மையில் ஆண் மனது பெண்ணின் அங்க அவயங்களைப் பார்த்தால் உணர்ச்சி தூண்டப்பட்டு, வன்முறை புரிய இடமளிக்கும் என்று கருதுகிறதா இந்தத் தீர்ப்பும் சுற்றறிக்கையும்? உண்மையில் நமது இளைஞர்கள் அப்படி இல்லை என்பதுதான் நிஜம். அப்படிப்பட்ட உணர்வுரீதியாகப் பண்படாத ஆண்கள் இருக்கும்வரை இந்தச் சமூகம் எப்படி வளரும்? அப்படியானால் ‘பெண்களின் உடையால்தான் பாலியல் வன்முறைகள் பெருகுகின்றன’, ‘பெண்கள்தான் அவர்கள் மீதான வன்முறைக்கு காரணம்’ என்ற கருத்துகளும் சரிதானோ? நிர்பயா குற்றவாளி சொன்னதுபோல், அவ்வளவு எதிர்ப்பு காட்டாவிட்டால் அவ்வளவு வன்முறை நடந்திருக்காது என்று ‘இந்தியாவின் மகள்’ விவரணப் படத்தில் அவன் பேசிய வார்த்தைகளின் மற்றொரு பரிமாணம்தானா இந்தச் சமீபத்திய தீர்ப்பும் சுற்றறிக்கையும் என்று நாம் யோசிக்க வேண்டியுள்ளது. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்? என்ன விதமான பொய்மைகளில் பெருமை கொள்கிறோம் நாம் என்று யோசிக்க வேண்டும்.

கோயில்களின் புனிதத்தை ஆடைகள் கெடுக்க முடியுமா ?

கோயில்களின் புனிதம் உள்ளுறை தெய்வங்களால் ஏற்பட்டதா? அந்த தெய்வங்களைக் கும்பிட வரும் மனிதர்களால் ஏற்பட்டதா? ஒரு புனிதமான கோயிலுக்குள் நூறு பாவங்களைச் செய்த பாவிகள் வருகிறார்கள். மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கொடியவர்கள் வருகிறார்கள். பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளிகள் வருகிறார்கள். மனத்தில் இருளையும், செயல்களில் கயமையும் வைத்துள்ளவர்கள் வருகிறார்கள். அதனால் கெடாத கோயில்களின் புனிதம் பெண்கள் உடையால் ஆண்களின் அரைக் கால் சட்டைகளால் கெடுவதாகக் கூறுகிறீர்களே, நீங்கள் கடவுளின் புனிதம் குறித்தும் கடவுள் உறையும் கோயில்களின் புனிதம் குறித்தும் இவ்வளவுதான் உணர்ந்துள்ளீர்களா?

ஒவ்வொரு மதமும் பற்றற்று இருப்பதையே தமது மத தத்துவத்தின் அடி நாதமாகக் கொண்டுள்ளது. ஆகவே, பெண்ணின் உடைக்குக் கட்டுப்பாடு போட்டு ஒழுக்கத்தைக் கொண்டுவரப் பார்ப்பது மாட்டுக்கு முன்னால் வண்டியைக் கட்டும் வேலை. இத்தகைய சமூகம் முன்னே செல்லாது.

- கட்டுரையாளர், வழக்கறிஞர்.
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

நாஞ்சில் சம்பத் சறுக்கல்: கட்சியின் குரல்களும் கேள்விகளும்!

Return to frontpage

ப.கோலப்பன்


தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு கட்சி செய்தித் தொடர்பாளரின் பொறுப்பு மிகவும் சவாலானது. அது முழுக்க முழுக்க கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டுக் கீழ் உள்ள பதவியாகும்.

நாஞ்சில் சம்பத் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டு தனியார் தொலைக்காட்சிகளில் அடுத்தடுத்து அவர் அளித்த பேட்டிகளே இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் எதிர்கொண்டுள்ள சவால் எவ்வளவு சிக்கலானது என்பதை நாம் சற்றே ஆழமாக அலசுவோம். ஒவ்வொரு கட்சியின் செய்தித்தொடர்பாளரும் கம்பியின் மீது நடந்து வித்தை காட்டும் நபரைப் போலவே ஆட்டுவிக்கப்படுகிறார் என்றால் அது மிகையாது.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு கட்சி செய்தித் தொடர்பாளரின் பொறுப்பு மிகவும் சவாலானது. அது முழுக்க முழுக்க கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டுக் கீழ் உள்ள பதவியாகும். அதேபோல், கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்படும் பதவியும் கூட. கட்சியின் மேடை பேச்சாளருக்கும், செய்தித் தொடர்பாளருக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.

கட்சி செய்தித்தொடர்பாளர் உதிர்க்கும் வார்த்தைகள் தலைமையின் மனதில் உள்ளவையாக இருக்க வேண்டும். அதே வேளையில் கட்சியின் கொள்கையை எடுத்துரைப்பதாகவும் இருக்க வேண்டும். ஒரு மெலிசான கோட்டின் மீது நிற்பது போன்றது. ஆனால், கட்சியின் மேடை பேச்சாளருக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை.

இத்தகைய மெலிசான கோட்டில் பயணித்தபோது, கட்சி தலைமையை பாதுகாக்க முயன்றபோது நாஞ்சில் சம்பத் சறுக்கியிருக்கிறார். வெள்ளத் துயரத்தில் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டம் தேவையா என்ற கேள்விக்கு 'ஒப்பாரி சத்தம் கேட்கிறது என்பதற்காக திருமணத்தை நிறுத்த முடியுமா' என்ற சர்ச்சை கேள்வியை கேட்டு சறுக்கியிருக்கிறார்.

1990-களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக ஞானதேசிகன் அக்கட்சியின் தலைவர் மூப்பனாரால் நியமிக்கப்படும் வரை தமிழக அரசியல் வட்டாரத்தில் செய்தித் தொடர்பாளர் என்றொரு பதவியும், சொல்லும் புதிதாகவே இருந்தது.

திராவிட அறிஞர் திருநாவுக்கரசு செய்தித் தொடர்பாளர் பதவி குறித்து கூறும்போது, "கட்சிக்காக செய்தித் தொடர்பாளரை நியமிக்கும் வழக்கம் டெல்லியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். தமிழக அரசியலில் இத்தகைய கலாச்சாரமே இல்லை. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டங்கள் மூலமாக மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தனர். இல்லாவிட்டால் ஊடகங்கள் வாயிலாக மக்களுடன் தொடர்பில் இருந்தனர்" என்றார்.

ஆனால், டெல்லி அரசியல் வட்டாரத்தில் உள்ள செய்தித் தொடர்பாளர்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக தெரிவிக்க முடியும். ஆனால், தமிழக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் தாங்கள் பேசவிருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் நிதானித்துப் பேச வேண்டும். ஒரு வார்த்தை தவறினால்கூட கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரும்.

திமுக தலைமையின் கருத்துடன் ஒத்திராத கருத்துகளை தெரிவித்ததற்காக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கட்சித் தலைமையின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

டி.கே.எஸ்.இளங்கோவன் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வேலையை பல ஆண்டுகளாக செய்துவந்தாலும் கடந்த ஆண்டுதான் அவர் முறைப்படி அப்பதவியில் அமர்த்தப்பட்டார்.

இந்நிலையில் செய்தித்தொடர்பாளர் பதவி குறித்து அவர் கூறும்போது, "ஒரு செய்தித்தொடர்பாளர் ஒவ்வொரு பிரச்சினையிலும் கட்சித் தலைமையின் நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல், கட்சியின் கொள்கையையும், கட்சியின் திட்டங்களையும் நன்றாகவே புரிந்து வைத்திருக்க வேண்டும். பிரச்சினைகளில், என்னுடைய சொந்த கருத்துகளை தெரிவித்தபோது மட்டுமே கட்சித் தலைமையால் நான் கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன்" என்றார்.

சேட்டிலைட் சேனல்களும், செய்தித்தாள்களும் புற்றீசல் போல் பெருகிவிட்ட சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க செய்தித்தொடர்பாளர்களை நியமிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு விதிவிலக்காக தேமுதிக மட்டும் திகழ்கிறது.

செய்தித் தொடர்பாளர் பணியை எப்படி நேர்த்தியாக செய்யலாம் என ஞானதேசிகன் கூறும்போது, "கட்சித் தலைமையின் மனநிலை குறித்த தெளிவான புரிதலும், கட்சி பயணிக்கும் திசையை நன்கு உணர்ந்திருந்தாலே இப்பதவியை செவ்வனே செய்யலாம். மூப்பனார், எனக்கு நல்ல சுதந்திரம் அளித்திருந்தார். 1998-ல் ஐக்கிய முன்னணியில் எங்கள் கட்சி வெளியேறுவதையே நான்தான் அறிவித்தேன்" என்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தபோதும் சரி தற்போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருக்கும்போதும் சரி பல்வேறு சவால்களை சந்தித்திருப்பதாக கூறுகிறார் கோப்பண்ணா. அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்பது என்பது முகவும் கடினமாக பணியே என அவர் கூறியுள்ளார்.

NAAC report goes missing in Barkatullah University?



The Times of India
TIMES OF INDIA

BHOPAL: Even after failing to improve its NAAC grading, Barkatullah University (BU) authorities seem to have adopted a casual approach towards it.

Sample this: After last year's NAAC accreditation, the inspection team had given a report to BU to make improvements in different university teaching departments (UTDs). However, UTDs are yet to receive the report even when the VC office had got it almost six months back. The UGC has made NAAC mandatory for every university and college to take accreditation. BU has been receiving B grade during last two accreditations. Educational institutions are graded under four categories which are A, B, C and D, denoting very good, good, satisfactory and unsatisfactory levels, respectively.


Pleading anonymity, a senior BU officer, said, "After every grading the inspection team submits a report to the vice-chancellor. This report carries feedbacks and suggestions by the team to improve the respective areas where they find bottlenecks. After receiving the report, the VC sends it to the concerned departments where NAAC suggested improvements. On the basis of this report, departments make improvements to get better grading in next inspection." However, the BU authorities apparently forgot to provide the report, having feedback, to the departments.



Sources said that in such a situation, BU will not be able to improve its accreditation in the next inspection. "Every department needs time to make improvement according to the NAAC report. If they don't get it on time then it won't be possible for them to do it," said a head of the department, without quoting his name.



When contacted, BU vice-chancellor Prof MD Tiwari, admitted that the report was received after NAAC inspection last year. He rubbished speculations that the report has gone missing. "The report is in the office and will be provided to the departments over the next couple of days," he said.



National Assessment and Accreditation Council (NAAC) is an autonomous body established by the UGC to assess and accredit institutions of higher education in the country. It is an outcome of the recommendations of the National Policy in Education (1986), which laid special emphasis on upholding the quality of higher education in India. NAAC was established in 1994 with its headquarters at Bangalore.




Share to Twitter

சொல்லிக் கொடுக்காத கல்வி!

Dinamani


By உதயை மு. வீரையன்

First Published : 02 January 2016 01:00 AM IST


அண்மைக்காலமாக நிகழும் சம்பவங்களும், அது பற்றி வரும் செய்திகளும் மனதிற்குக் கவலையைத் தருகின்றன. நாட்டு நலனில் ஆர்வமும், சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையும் கொண்டவர்களுக்கு அத்தகைய வருத்தம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சியில்தான் நாடும் இருக்கிறது; நாமும் இருக்கிறோம். அதற்குத் தளர்ச்சி ஏற்படுமானால் என்ன செய்வது?
நாடெங்கும் கடந்த ஆண்டில் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இத் தகவலை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தம் தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வமாக இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் 7,753 மாணவர்களும், யூனியன் பிரதேசங்களில் 315 மாணவர்களும் என மொத்தம் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதில் அதிகப்படியாக மகாராஷ்டிரத்தில் 1,191 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 853 பேரும், மேற்கு வங்காளத்தில் 709 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தெரிகிறது.
மாணவர் தற்கொலையில் மட்டுமல்லாமல் விவசாயிகள் தற்கொலையிலும் மகாராஷ்டிரம் முதலிடம் பெறுகிறது. கடந்த 14 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 17,276 என்று மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது.
விவசாயிகளின் தற்கொலையை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அதற்குக் கூடுதலான காரணங்கள் இருக்கின்றன. வேளாண்மையில் ஈடுகட்ட முடியாத இழப்பும், கடன் தொல்லையும் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. "மேழிச் செல்வம் கோழை படாது' என்று கூறப்பட்டாலும், அதையும் மீறி மானமே பெரிதென எண்ணும் மறவர் பெருங்குடி இவ்வாறு மரணத்தைத் தழுவுவது வேதனையானது.
எல்லாம் சரி, சிறகடித்துப் பறக்க வேண்டிய வயதில் இந்த மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? படிப்பைத் தவிர வேறு நெருக்கடிகள் ஏதும் உண்டா? இல்லை, படிப்பே ஒரு நெருக்கடியாகிப் போனதா? இதுபற்றி இந்தச் சமுதாயம் கவலைப்பட வேண்டாமா?
"பள்ளிப் படிப்பு கூழாங்கற்களுக்கு ஒளியேற்றும்; வைரங்களை ஒளி மழுங்கச் செய்யும்' என்ற மேலை நாட்டு அறிஞனின் சொற்கள் நினைவுக்கு வருகின்றன. இதனையே நமது நாட்டுப்புற மக்கள், "பள்ளிக் கணக்கு புள்ளிக்கும் உதவாது' என்று கூறிச் சென்றுள்ளனர். என்றாலும், அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.
"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே'
என்று நமது நீதி நூல் கூறுகிறது.
சங்க இலக்கியமாகிய புறநானூறு கல்வியின் பெருமையைப் போற்றிப் பாடு
கிறது. அதன் தேவையையும் எடுத்துப் பேசுகிறது.
"உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே'
பல பிள்ளைகளைப் பெற்ற தாயும் கல்வியில் சிறந்தவனையே விரும்புவாள். ஒரே குடியில் பிறந்த பல பிள்ளைகளுள் கல்வி கற்காத மூத்தவனை அரசன் மதிக்க மாட்டான். இளையவனாயினும் கற்றவனையே மதிப்பான்.
வேறுபாடுடைய நால்வகைக் குலத்துள் கீழ் நிலையிலுள்ள ஒருவன் கல்வி கேள்விகளில் வல்லவன் ஆயின் மேல்நிலையிலுள்ளவனும் அவனை மதித்து மரியாதை செய்வான் என்று அக்காலத்திலேயே பாடப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட கல்வியைப் பயிலும் இக்கால மாணவர் சமுதாயம் வாழ்க்கையை ஏன் வெறுக்க வேண்டும்? உயிர் வாழ ஆசைப்பட வேண்டிய வயதில் தற்கொலையைத் தேர்வு செய்வதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா?
மாணவர்களுக்கு மன அழுத்தமும், மனச்சோர்வும் ஏற்படுவதற்குக் காரணம் கல்வி வணிகமாக மாறியதுதான் என்று கல்வியாளர்களும், உளவியல் வல்லுநர்களும் கூறுகின்றனர். "மாதா பிதா குரு தெய்வம்' என்ற நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
கல்வி என்பது மனவளமும், பண்பாடும், ஒழுக்கமும் கற்றுத் தருவதுதான் என்ற நிலை மாறி, கல்வி என்பது பணம் பண்ணுவதற்கான புதிய கருவி என்ற நிலை உருவாகிவிட்டது. கல்வி இப்போது கடைச்சரக்காகி விட்டது. முயற்சியும், உழைப்பும் இல்லாமல் வாங்கும் பொருளாக நிலை தாழ்ந்துவிட்டது.
பெற்றோரின் பேராசைக்குத் தீனி போடும் நிலையங்களாகத் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக கசக்கிப் பிழியப்படுகின்றனர்.
அவர்கள் விரும்பாத பாடத்தை பெற்றோரின் கட்டாயத்துக்காகப் படிக்க வேண்டியுள்ளது. மாணவர்களின் இளமைக்கால விளையாட்டு வாழ்க்கையே பறிக்கப்படுகிறது. அவர்களது சிரிப்பும், கும்மாளமும் எங்கே போனது?
இப்படிப்பட்ட பெற்றோர்களுக்காகவே கவிஞர் கலீல் கிப்ரான் கூறுகிறார். "உங்கள் குழந்தைகளிடம் அன்பைக் கொடுங்கள். உங்கள் எண்ணத்தை விதைக்காதீர்கள். அவர்கள் தங்கள் எண்ணத்துடன் வளரட்டும்'.
அவர்களது குழந்தைகளாகவே இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் திணிப்பது வன்முறையேயாகும். வன்முறைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிள்ளைகள் சுதந்திரமாக வளர்வதைப் பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.
ஆண்டுதோறும் மாணவர்கள் தேர்வின் தோல்வியால் மனமுடைந்து தற்கொலையை நாடுவோர் தொகை இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. கல்லூரிகளில் "ஈவ் டீசிங்' என்னும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர். இவர்களில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் என்று கூறலாம்.
2012-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவி தைரியலட்சுமியின் சோகம் அனைவரும் அறிந்ததுதான். தமிழ்வழியில் படித்து 92 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்குக் கூறப்பட்ட காரணம் ஆங்கிலம் புரியவில்லை என்ற அவமானம் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான்.
பள்ளி முதல் உயர்கல்வி வரை மாணவியர் பலர் ஆசிரியர்களின் பாலியல் வன்முறை காரணமாகத் தற்கொலை வரை சென்ற நிகழ்வுகளும் உண்டு. வெளியில் சொல்ல முடியாத ஊமைக் காயங்கள் அவர்களை வாழ்க்கையின் இறுதிக்கே இட்டுச் செல்கிறது.
மாணவர்களின் தற்கொலை மட்டுமல்லாமல் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கையும், சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 1912-ஆம் ஆண்டில் 39,822- ஆக இருந்த சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கை, அடுத்த ஆண்டு 43,506-ஆக அதிகரித்துள்ளது என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2014 அன்று இது 48,230 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசும், கல்வித்துறையும் தேர்ச்சி விழுக்காட்டை முதன்மைப்படுத்த ஆணைகளை வெளியிடுகின்றன. மாணவர்கள் தண்டிக்கப்படுவதைத் தடைசெய்துவிட்டு, தேர்ச்சி விழுக்காட்டுக்கு கேள்வி எழுப்புகிறது. தலைமையாசிரியரும், பாட ஆசிரியர்களும் தேர்ச்சிக் குறைவுக்குப் பதில் கூற வேண்டும்.
இதனால் மாணவர்களைப் பண்படுத்தக்கூடிய நீதிபோதனை வகுப்புகளும், மன இறுக்கத்தைக் குறைத்து மகிழ்ச்சியைத் தரும் விளையாட்டு மற்றும் இசை வகுப்புகளும் இல்லாமல் போய்விட்டன. பொது அறிவை வளர்க்கும் நூலக வகுப்புகளும் இல்லை.
இந்த வகுப்புகள் எல்லாம் பாட வகுப்புகளாக மாற்றப்பட்டு, அவர்களது முறையான வளர்ச்சி பறிக்கப்பட்டு விட்டது. மாணவர்களின் மன இறுக்கம் தொடர்பான வடிகால்கள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன.
தற்கொலை என்பது திட்டமிட்டு நடத்தப்படுவதல்ல; உணர்ச்சிவயப்பட்டு ஒரு சில நொடிகளில் நடந்து முடியக்கூடியதாகும். அந்த நேரத்தில் அது தடுக்கப்படுமானால் தற்கொலை செய்ய முயன்றவர்கள் தான் செய்ய நினைத்த தவறுக்காக வாழ்நாள் முழுவதும் வருந்துவார்கள், வெட்கப்படுவார்கள் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நூறாண்டு காலம் வாழ வேண்டிய இனிய வாழ்க்கையை அற்பக் காரணங்களுக்காக முடித்துக் கொள்ளத் துடிக்கும் மாணவர்கள் தங்களை நம்பியுள்ள பெற்றோரையும், மற்றோரையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தேவையற்ற இறப்பையும், இழப்பையும் தடுத்துவிட வேண்டும்.
"ஒருவரிடமுள்ள சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியாகும். மனித வர்க்கமாகிய புத்தகத்தைவிடச் சிறந்த புத்தகம் வேறு இருக்க முடியுமா?' என்று கேட்கிறார் காந்தியடிகள்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கானது. அது தனக்காக மட்டும் வாழும் சுயநலம் கொண்டது அல்ல. தன்னை நம்பியுள்ள மனித சமுதாயத்துக்காக வாழும் பொதுநலம் சார்ந்தது. அதை இடையில் முடித்துக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. இதனைச் சொல்லிக் கொடுக்காத கல்வியை என்னென்பது?
பெற்றோர்களுக்காகவே கவிஞர் கலீல் கிப்ரான் கூறுகிறார், "உங்கள் குழந்தைகளிடம் அன்பைக் கொடுங்கள். உங்கள் எண்ணத்தை விதைக்காதீர்கள். அவர்கள் தங்கள் எண்ணத்துடன் வளரட்டும்'.

மதத்தில் இல்லை, மனதில் தேடுங்கள்...


Dinamani

By மதுரா

First Published : 04 January 2016 03:41 AM IST


இறைவன் இருக்கிறாரா, இல்லையா என்று கேட்பவர் ஒரு சிலர். இறைவனுக்கு உருவம் இல்லை, அவர் ஜோதி வடிவானவர் என்று கூறுவோர் ஒரு பக்கம். இவர் ஒருவர் தான் இறைவன் என்று கூறுவோர் ஒரு பக்கம். இறைவனை பல உருவங்களில் வடித்து இவர் தான் இறைவன் என்று கூறுவோர் ஒரு பக்கம்.
இறைவன் பெயரில் மதங்களை வளர்த்து போற்றும் அனைத்து மதவாதிகளுக்கும் சில கேள்விகள்:
இறைவனை மதம் என்ற ஒன்றில் அடக்கலாமா? இறைவனை ஒரே ஒரு நாமத்தில் (பெயரில்) அடக்கிவிடமுடியுமா? இறைவனை வேதம் அறிந்தவர்கள் தான் அறிய முடியுமா? வாய் பேசமுடியாத உயிரினங்கள் இறைவனை வணங்க முடியாதா? இறைவன் பெயரில் உருவான மதங்கள் சொல்வது என்ன?
இறைவனை தீபமாக பார்ப்பதும், சிலையாய் பார்ப்பதும் அவரவர் மனநிலையைப் பொருத்தது இல்லையா? எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை எப்படி உணர்ந்தால் என்ன? என்னை வழிபடுபவரைத்தான் நான் காப்பாற்றுவேன் என்று இறைவன் கூறியதுண்டா?
இயற்கையை நாம் வணங்கினால் இறைவன் கோபித்துக் கொள்வாரா? அப்படி அவர் நினைத்தால் இறைவனின் மனநிலை சராசரி மனிதர்களின் மன நிலை தானா? இறைவனை நேசித்து ஒற்றுமையாக இருக்க வேண்டியவர்கள் இறைவனை பகடையாக வைத்து சண்டையிடுவது சரியா?
எங்கள் இறைவன் தான் சிறந்தவர் என்று சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் துன்புறுத்திக் கொள்வது சரியா?
ஆதி மனிதன் முதலில் நெருப்பை கண்டுபிடித்து, பின் அந்த நெருப்பால் உணவுகளை சமைத்து சாப்பிட ஆரம்பித்தான். அதன் பிறகு, வேளாண்மை செய்து வாழத் தொடங்கிய மனிதன் சூரியனையும், இயற்கையையும் தன்னை வாழ வைக்கும் கடவுளாக வணங்கியிருப்பான்..
மனிதர்கள் பெருக பெருக, கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கினான். கூட்டங்களாக வாழ்ந்த மனிதன், அந்தந்த மண் சார்ந்த உணவு முறைகளை பயிரிடத் தொடங்கி அவனுக்கென்று உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் என்று வளரத்தொடங்கினான்.
வெளிநாடுகளின் தட்ப வெப்ப நிலைக்கு தகுந்தாற் போல் அந்நாடுகளின் மக்களின் வாழ்க்கை முறை, உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் அமைந்துள்ளன. அவர்களின் பழக்கங்களுக்கு தகுந்த மாதிரி அவர்களின் இறைவழிபாடும் உள்ளது.
அதேபோல், இந்திய நாட்டில் வாழும் மக்களுக்கு பழக்க வழக்கங்கள் வழிபாட்டு முறைகள் என்று உள்ளன. இந்தியா இயற்கை வளங்கள் கொண்ட நாடு. இங்கு விளையும் பொருள்களை, நன்றி சொல்லும் வகையில் முதலில் இறைவனுக்கு செலுத்தும் வகையில் இறைவனை வணங்கிவிட்டு பிறகு தான் அதை நாம் பயன்படுத்துவோம். இது இந்திய கலாசாரம்.
மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்திற்கு தகுந்த முறையில் அவர்களின் இறை வழிபாடு உள்ளது. அவரவர் மொழிக்குத் தகுந்த முறையில் இறைவனுக்குப் பெயர் வைத்து அழைக்கின்றனர்.
ஆனால், அவரவரும் தாங்கள் அழைக்கும் நாமம் தான் இறைவன் என்று சண்டை போட்டுக் கொள்கிறோம். அதர்மங்கள் ஆட்சி செய்யும் இடங்களில் எல்லாம் இறைவன் அவதரித்து தர்மத்தை போதித்துள்ளான்.
இறைவன் பல ரூபத்தில் அவதரித்தாலும் "அன்பாய் இரு, பிறரை துன்புறுத்தாதே, இல்லாதவர்க்கு உதவி செய்' என்றுதான் போதித்துள்ளான். ஆனால், மனிதன் அந்த போதனைகளைக் கைவிட்டு தன் சமுதாய கலாசாரத்தை பெரிதுபடுத்தவே போராடுகிறான்.
ஆதி மனிதன், தினம் விடியலை தந்த சூரியனையும் இரவில் வரும் நிலவையும், அவன் பசிக்கு உணவு தரும் மரம் செடிகளை தான் கடவுளாக வணங்கியிருப்பான். நமக்கு உதவி செய்பவர்களை மதிப்பதும் நன்றி செலுத்துவதும் மனிதனின் நற்பண்பு அல்லவா? இதை இந்திய கலாசாரம் செய்கிறது.
நம் இந்திய கலாசாரம் ஓர் உன்னதமான கலாசாரம். நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்து வைத்தான் தமிழன். ஒவ்வொரு நிலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும், செய்யும் தொழிலும் வேறுபடுகின்றன.
அவரவர் வாழ்க்கை முறைக்கு தகுந்த வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆனால், இதற்கு மனிதன் மதச்சாயம், சாதிச்சாயம் பூசி என் மதம் தான் சிறந்தது, என் சாதிதான் சிறந்தது என்று சண்டையிடத் தொடங்கினான்.
காலப்போக்கில் இறைவன் பெயரில் மனிதநேயத்தை வளர்ப்பதற்குப் பதிலாக மதத்தையும், சாதியையும் வளர்க்கிறான். மனிதன் ஒன்று கூடி இறைவனை வணங்கவேண்டும் என்றுதான் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் கட்டப்பட்டன. இதுவும் அந்தந்த நாட்டின் கட்டட கலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது.
கட்டடக் கலையில், இந்தியக் கட்டடக் கலை மனிதனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அதனால்தான்,கோயில்களில் மனிதர்கள் போலவும், விலங்குகள் போலவும் சிற்பங்களை வடித்தார்கள்.
இறைவனை மதங்களில் தேடாதீர்கள்.. மனங்களில் தேடுங்கள். இறைவனை கோயிலிலும், தேவாலயத்திலும், மசூதியிலும் காணலாம். எங்கும் இறைவனைக் காணும் மனநிலை தான் பண்பட்ட மனம் ஆகும்.

NEWS TODAY 20.09.2024