Sunday, February 14, 2016

ஏ.மருதகாசி 10


Return to frontpage


திரைப்பட பாடலாசிரியர்

தமிழ் திரையுலகின் பிரபலமான பாடலாசிரியரும், திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்தவருமான ஏ.மருதகாசி (A. Marudakasi) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.

l திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் (1920) பிறந்தார். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பயின்றார். அருணாச்சல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார்.

l கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் தேவி நாடக சபா நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதிவந்தார். கவிஞர் கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். அங்கு இசையமைத்து வந்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்குப் பாட்டு எழுதி வந்தார். பாடலாசிரியர் ராஜகோபால ஐயரிடம் உதவியாளராகவும் பணியாற்றினார்.

l திருச்சி லோகநாதன் மூலமாக 1949-ல் இவரது திரையுலகப் பயணம் தொடங்கியது. மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மாயாவதி’ படத்துக்காக ‘பெண் எனும் மாயப் பேயாம்’ என்ற பாடலுடன் தன் திரையிசைப் பயணத்தை தொடங்கினார்.

l 1950-ல் வந்த ‘பொன்முடி’ படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதினார். அனைத்தும் சூப்பர் ஹிட். பிறகு ‘மந்திரிகுமாரி’ படத்துக்கு பாடல்கள் எழுதினார். இவையும் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக இந்த படத்தில் வரும் ‘வாராய் நீ வாராய்’, ‘உலவும் தென்றல் காற்றினிலே’ பாடல்கள் மறக்க முடியாதவை.

l ‘அமரகவி’, ‘தூக்குத் தூக்கி’ திரைப்படப் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. பல்வேறு திரைப்பட நிறுவனங்களிடம் இருந்து இவருக்கு அழைப்புகள் குவிந்தன. மெட்டுக்கு விரைவாகப் பாட்டு எழுதுவதில் வல்லவர். எனவே அனைத்து இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடலாசிரியராகத் திகழ்ந்தார்.

l ‘எந்நாளும் வானிலே’, ‘மணப்பாறை மாடு கட்டி’, ‘மாசிலா உண்மைக் காதலே’, ‘சத்தியமே லட்சியமாய்’, ‘சமரசம் உலாவும்’, ‘ஏர்முனைக்கு நேர் இங்கே’, ‘கடவுள் எனும் முதலாளி’, ‘வருவேன் நான் உனது’, ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’, ‘இன்று போய் நாளை வாராய்’, ‘மனுஷனை மனுஷன்’ என்பது உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாகாவரம் பெற்ற திரைப்பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.

l தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்கள் எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழ்பெற்றவர். 250 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

l சக கலைஞர்களை மதித்துப் போற்றியவர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை தன் தம்பி போல கருதி பாசம் கொண்டிருந்தார். உடுமலை நாராயண கவியை தன் அண்ணன் போலவும், குருவுக்கு சமமாகவும் மதித்தவர். ‘என் 2 ஆயிரம் பாடல்கள் கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது’ என்று தன்னடக்கத்தோடு கூறுவார்.

l எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உட்பட அனைத்து நடிகர்களுக்கும் அவரவருக்குப் பொருத்தமாகப் பாடல்களை எழுதினார். டி.எம்.சவுந்தரராஜனை சினிமாவுக்கு கொண்டுவந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. தன்னை தாய்போல ஆதரித்தவர் மருதகாசி என்று குறிப்பிட்டுள்ளார் வாலி.

l தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி பாடலாசிரியராகத் திகழ்ந்த ‘திரைக்கவித் திலகம்’ மருதகாசி, 69-வது வயதில் (1989) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

Thursday, February 11, 2016

மாணவி மோனிஷாவுக்கு என்ன நடந்தது? பிரேத பரிசோதனையில் திடுக் தகவல்

vikatan.com
விழுப்புரத்தில் நடந்த பிரேத பரிசோதனையில் மாணவி மோனிஷாவின் சிறுநீரகம், நுரையீரல், இதயம், கர்ப்பபை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மோனிஷா தந்தையின் வழக்கறிஞர் ரஜினிகாந்த் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்த சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய மூன்று மாணவிகளின் மரணத்தில் இன்னும் மர்மங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்குப்பிறகு இந்த வழக்கு சூடுபிடித்துள்ளதோடு பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட மூன்று மாணவிகளின் உடல்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவிகள் பிரியங்கா, சரண்யா ஆகியோரின் உடல்கள் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மோனிஷாவின் உடலை வாங்க மறுத்து விட்டார் அவரது தந்தை தமிழரசன்.

தொடர்ந்து மோனிஷாவின் உடலை மீண்டும் மறுபரிசோதனை சென்னையில் நடைபெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தமிழரசன். இதற்கு நீதிமன்றமும் சம்மதித்து உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 28-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மோனிஷாவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 40 சதவிகிதம் பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மோனிஷாவின் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறுகையில், "மோனிஷாவின் உடல் பரிசோதனையில் விழுப்புரத்துக்கும், சென்னைக்கும் உள்ள முடிவில் வித்தியாசங்கள் உள்ளன. அவர், தண்ணீரில் மூழ்கி சாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது கொலை என்றே கருதுகிறோம். அடுத்து, விழுப்புரத்தில் நடந்த பிரேத பரிசோதனையில் மோனிஷாவின் சிறுநீரகம், நுரையீரல், இதயம், கர்ப்பபை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான அனுமதியை அவரது பெற்றோரிடம் பெறவில்லை. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
விழுப்புரம் பிரேத பரிசோதனையில் 4 இடங்களில் ரத்தக்காயங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் 15 இடங்களில் ரத்தக்காயங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக நீரில் மூழ்கி இறப்பவர்களின் வாயில் நுரை தள்ளும். ஆனால் கிணற்றிலிருந்து மோனிஷாவின் உடல் வெளியே எடுத்தவுடன் எடுத்த புகைப்படத்தில் அவரது வாயில் நுரையில்லை. எனவே அவர் தண்ணீரில் மூழ்குவதற்கு முன்பே அவர் மரணம் அடைந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த மரணத்துக்கு முன்பு மோனிஷா தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடி இருக்கிறார். அவரது மூக்கு மற்றும் வாயை பொத்தியதற்கான அறிகுறிகள் முகத்தில் காணப்படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது எதற்காக போராடினார் என்பது தெரியவில்லை. இன்னும் வரவுள்ள முடிவில் அதற்கான விடை தெரிந்து விடும். மேலும் இரண்டு மாணவிகளின் செல்போன் குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை" என்றார்.

மோனிஷாவின் தந்தை தமிழரசன், "போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காகவே என்னுடைய மகள் உள்பட மூன்று மாணவிகள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். பள்ளி தாளாளர் வாசுகி பேசிய உரையாடலில் மூன்று மாணவிகளையும் கடுமையாக மிரட்டுவது தெரிகிறது. என்னிடம் 5 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி மோனிஷாவின் தமிழ், ஆங்கில கையெழுத்து, கல்வி சான்றிதழ்கள், சிடி உரையாடல் உள்ளிட்ட 25 ஆவணங்களை பெற்று சென்று இருக்கின்றனர். அரசு அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் நிவாரண தொகையை இந்த வழக்கு முடிந்து தீர்ப்புக்கு பிறகே வாங்குவேன். அதுவரை வாங்குவதில்லை" என்றார்.

சரண்யாவின் தந்தை ஏழுமலை, "என்னுடைய மகளின் உடலையும் மீண்டும் பிரேத பரிசோதனை செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளியே தெரியவரும். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மோனிஷாவின் உடலில் சில பாகங்கள் இல்லாததால் அவருடைய சாவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. ஆனால் சரண்யாவின் உடலில் எந்த பாகத்தையும் எடுக்கவில்லை. அதன் மூலம் இந்த வழக்கில் மறைந்துள்ள மர்மமுடிச்சுக்கள் அவிழ வாய்ப்புள்ளது. இதற்காகவே அவரது உடலை செய்யாறில் புதைத்தோம். மூன்று மாணவிகளின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன். அநியாயமாக என்னுடைய மகளை கொன்று விட்டார்களே" என்றார்.

-எஸ்.மகேஷ்

படங்கள்: 
சொ. பாலசுப்ரமணியன்

வெடிக்கும் செல்போன்கள்... இரவு முழுவதும் சார்ஜில் போடுவது ஆபத்து!

வெடிக்கும் செல்போன்கள்... இரவு முழுவதும் சார்ஜில் போடுவது ஆபத்து!


vikatan.com
செல்போன் வெடித்ததால் படுகாயம், உயிர் பலி என்கிற கவலைக்குரிய செய்திகள் அடிக்கடி வருகின்றன. இரு வாரங் களுக்கு முன்பு, சென்னை வியாசர்​பாடியைச் சேர்ந்த ஒருவர் இரவு நேரத்தில் செ​ல்போனை சார்ஜ் போட்டு​விட்டுத் தூங்கிவிட்டார். அதிகாலையில் அந்த செல்போன் வெடித்ததில், வீடே தீப்பிடித்தது. அதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் கழித்து, மதுராந்தகம் அருகே செய்யூர் பகுதியில் செல்போன் வெடித்ததால் பள்ளி மாணவன் ஒருவனின் கண் பாதிக்கப்பட்டது.

செய்யூரைச் சேர்ந்த கூலித்தொ ழிலாளி எட்டியப்பன் - மனைவி வெண்ணிலா. இவர்களின் மூன்றாவது மகன் தனுஷ். அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான். வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனை தனுஷ் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, போன் வெடித்துச் சிதறியது. கண் பாதிக்கப்பட்டு, சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறான் தனுஷ். வெண்ணிலாவிடம் பேசினோம்.
“போன வாரம் என் பையன் ஸ்கூல் போய்ட்டு வந்தான். நான் சமையல் செஞ்சிட்டு இருந்தேன். வீட்டுக்குள்ள விளையாடிட்டு இருந்தான். அப்போ, டமார்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. ஓடிப்போய் பார்த்தா கண், முகம், கை எல்லாம் ரத்தம். உடனே அவனை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போனோம். அப்புறம் தான் தெரிஞ்சுது செல்போன் வெடிச்சதுல, கண் பார்வை பறிபோய் இருக்குனு. எழும்பூர் கண் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க. இங்கே ஆபரேஷன் பண்ணினாங்க. இப்போ, கொஞ்சம் பார்வை கிடைச்சிருக்கு. பழைய மாதிரியே கண்பார்வை வருமான்னு தெரியல” என்று சொல்லி அழ ஆரம்பித்தார்.

எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குநர் வஹிதாவிடம் பேசினோம். “பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் இந்தப் பையனை இங்க கொண்டு வந்தாங்க. செல்போனை முகத்துக்கு நேர வைத்துப் பார்த்துட்டு இருக்கறப்போ போன் வெடிச்சதுல, அதன் துகள்கள் கண்ணுக்குள்ளே போயுள்ளன. அதனால பார்வை பறிபோய் இருக்கிறது. வலது கண்ணின் கருவிழி முற்றிலும் சேதம் அடைந்தும், இடது கண்ணில் விழித்திரையும் கிழிந்தும் உள்ளன. முதற்கட்ட சிகிச்சையில், கருவிழி பாதிக்கப்பட்டிருந்த கண்ணில் அறுவைச்சிகிச்சை மூலம் மாற்றுக் கருவிழி பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகுதான் அதில் லென்ஸ் பொருத்த முடியும். இடது கண்ணில் விழித்திரையும் தைக்கப்பட்டது. அந்த அறுவைச்​சிகிச்சைக்குப் பிறகு, தனுஷுக்கு 4 முதல் 5 மீட்டர் வரை பார்வை கிடைத்துள்ளது. சார்ஜ் போட்டிருக்கும் போனைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் ஆர்.பாலசுப்பிர மணியன், “செல்போன் வெடித்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சந்தைகளில் தரமில்லாத எலக்ட்ரானிக் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதுபோன்ற விபத்துகளுக்கு அதுதான் முக்கியக் காரணம். சார்ஜரில் வோல்டேஜ் அதிகமாகும்போது, அதை முறைப்படுத்தும் தொழில்நுட்பங்கள் விலை குறைவான சார்ஜர்களிலும், செல்போன்களிலும் இருப்பதில்லை. எனவே, அவை வெடித்துச் சிதறுகின்றன. எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் என்கிற அளவீடு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்று சர்வதேச வரையறை உள்ளது. அப்படி எந்த முறையும் இந்தியாவில் இல்லை. அரசும் அதைப்பற்றிக் கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற விஷயங்களில் இனிமேலாவது அரசு கவனம் செலுத்தவேண்டும். தரமான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணமும், அதுபற்றிய விழிப்பு உணர்வும் மக்களுக்கு வரவேண்டும்’’ என்றார்.
இன்றைக்கு, பெரும்பாலானோர் கடைகளுக்குச் சென்று தரத்தை ஆராய்ந்து பொருட்கள் வாங்குவதில்லை. பேனா, மொபைல் என என்ன வாங்குவதாக இருந்தாலும், ஆன்லைன் ஷாப்பிங்தான். ‘குறைந்த விலையில் பவர் பேங்க்’ என்று முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்த ஒருவர், அந்த இணைப்பை கிளிக் செய்துள்ளார். சிறப்பான பேக்கிங்கில் பவர் பேங்க் வந்து சேர்ந்தது. பல மணிநேரம் சார்ஜ் போட்டுள்ளார். ஆனால், சார்ஜ் ஏறவே இல்லை. சந்தேகப்பட்டு பவர் பேங்க்கை உடைத்துப் பார்த்தபோது, அதில் 7 பேட்டரிகள் இருந்தன. அதில் ஒன்று மட்டுமே நிஜமான பேட்டரி. மற்றதெல்லாம் மண் நிரப்பட்ட கூடு. இணையத்தில் பொருள் வாங்குவது தவறல்ல. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெருள்தானா என்பதை உறுதிசெய்து அதை வாங்க வேண்டும். 

மொத்தத்தில், செல்போனில் எச்சரிக்கையாக இருங்கள்.

- மா.அ.மோகன் பிரபாகரன்
படங்கள்: ப.சரவணகுமார்

பொருளாதாரம்: இது பட்ஜெட்களின் காலம்

Return to frontpage

அம்மாவோ அப்பாவோ ‘‘செலவுக்கு வைச்சுக்க’’ என்று தருகிற பாக்கெட் மணிக்கு நீங்கள் பட்ஜெட் போட மாட்டீர்களா? ‘‘முதல்ல இதை வாங்கிக்கலாம். இன்னும் கொஞ்சம் காசு சேரட்டும். அப்புறமா அதை வாங்கலாம்” னு மனசுக்குள்ளே பட்ஜெட்டுக்கான ஒரு திட்டம் போட மாட்டீங்களா? அப்படித்தான் பல அம்மா, அப்பாக்களும் பட்ஜெட் போட்டு வாழ்கிறார்கள்!

அவர்களின் பட்ஜெட்களில் உங்களின் படிப்புகளுக்கான செலவுகள் முதல் இடத்தில் இருப்பது நீங்கள் அறிந்ததுதானே?

அதுபோலத்தான் இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசுகளும் மாநகராட்சிகள் உள்ளிட்ட பஞ்சாயத்து அரசாங்கங்களும் தங்களுக்கான பட்ஜெட்களைப் போட்டுச் செயல்படுகின்றன.

ஆமாம் ஆனா இல்லை

ஒரு குடும்பம் தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் ஒரு கம்பெனி தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் ஒரு நாடு தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் சிறு சிறு ஒற்றுமைகள் இருக்கலாம். அதே நேரத்தில் பலவிதமான வேற்றுமை களும் இருக்கவே செய்கின்றன.

ஒரு நிறுவனம் தனது ஒரு ஆண்டின் வரவையும் செலவுகளையும் ஒப்பிட்டுச் சமன் செய்து கணக்கை முடிப்பதுபோல ஒரு நாட்டின் பட்ஜெட் இருக்காது.

மத்தியப் பட்ஜெட்

மத்திய அரசை எடுத்துக்கொள்வோம். அது நாட்டின் பாதுகாப்பு, உள்நாட்டுக்குள்ளே சட்டம் ஒழுங்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்ற சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவது என்னும் பல முனைகளில் செயல்படுகிறது. இவற்றை எல்லாம் செய்வதற்கு அரசாங்கத்துக்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. வெளிநாடுகளுடனான கொடுக்கல் வாங்கல்களில் உள்நாட்டு பணமான ரூபாய் நோட்டுகள் பயன்படாது. வெளிநாட்டுப் பணம் எனப்படுகிற அந்நியச் செலாவணியும் தேவையாக இருக்கிறது.

மத்திய அரசு தனக்குத் தேவையான பணத்தை மக்களின் மீது விதிக்கப்படும் பல விதமான வரிகள், கட்டணங்கள், அரசு நிறுவனங்களின் வருமானம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிடமும் கடன்கள் வாங்குதல் என்ற முறைகளில் சேகரிக்கிறது.

ஏன் பட்ஜெட்?

இதையெல்லாம் தன்னிடம் வாங்கிக்கொள்கிற மத்திய அரசு தனது விருப்பத்துக்கு ஏற்ற மாதிரிச் செலவழித்துக்கொள்ள வேண்டியதுதானே? ஏன் பட்ஜெட் என்று ஒவ்வொரு வருடமும் மக்கள் முன்னிலையில் வெளிப்படையாகச் சமர்ப்பிக்க வேண்டும்? நிறைய பணம் வருகிற சில பணக்கார வீடுகளில் வீட்டுச் செலவுகளுக்கு எல்லாம் தனியாகப் பட்ஜெட் போட்டு நேரத்தை வீணாகச் செலவு செய்ய மாட்டார்கள். அது மாதிரி வருகிற வருமானத்தை வைத்துக்கொண்டும் நினைக்கிற செலவைச் செய்துகொண்டும் அரசாங்கம் பாட்டுக்கு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கவேண்டியதுதானே என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.

அப்படி எல்லாம் ஒரு நாட்டால் செய்ய முடியாது.

ஒரு நாட்டில் வளங்கள் எவ்வளவுதான் இருந்தாலும் அவை எல்லாம் ஒரு வரம்புக்குட்பட்டவைதான் என்பது முதல் காரணம். நாட்டின் வளங்களைச் செலவழித்துக்கொண்டே இருந்தால் அவை என்றோ ஒருநாளில் தீர்ந்துபோக வேண்டியவைதான். அப்படி நடந்துகொள்கிற நாடுகள் பொறுப்பில்லாத அரசுகளாகத்தான் இருக்க முடியும்.

இரண்டாவதாக, ஒரு அரசாங்கம் எப்படித் தனக்கான நிதியாதாரங்களை பயன்படுத்துகிறது என்பதும் எப்படிச் செலவழிக்கிறது என்பதும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் இறுதியில் அந்த நாட்டையும் பாதிக்கும். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, ஒவ்வொரு வருடமும் மக்களிடம் வெளிப்படையாகத் தனது வரவு செலவுகளைக் காண்பிக்க வேண்டும்.

இந்த இரண்டும் தார்மிகரீதியான காரணங்கள். இந்தியாவுக்கு மூன்றாகவதாக ஒரு காரணமும் இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் இப்படிப் பட்ஜெட் போடுவதை ஒரு கட்டாயக் கடமையாக நிர்ணயித்துள்ளது.

அரசியல் கடமை

இந்தியா ஒரு நாடாளுமன்ற ஜனநாயக நாடு. நமது நாடாளு மன்றத்தை ஒரு அரசியல் சாசனம் வழிநடத்துகிறது. அந்த அரசியல் சாசனம் மத்திய அரசாங்கத்துக்குப் பல கடமைகளை நிர்ணயித்துள்ளது.

மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரும் அரசாங்கம் தனது வரவு செலவுகளையும் நாட்டின் வளங்களை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதையும் நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தி அனுமதி பெற்றே செயல்பட வேண்டும் என்பதைக் கட்டாயக் கடமையாக அது நிர்ணயித்துள்ளது. அதனால்தான் மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் தனது பட்ஜெட்டை நாடாளுமன்றம் முன்பாகச் சமர்ப்பிக்கிறது.

அரசியல் சாசனத்தில் 112, 265, 266 எனும் எண்களைக்கொண்ட சட்டக்கூறுகள் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளின் அனுமதி பெறாமல் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவுகள் நடக்கக்கூடாது என்பதற்கான கடமைகளை நிர்ணயித்துள்ளன.

பட்ஜெட்டின் பகுதிகள்

ஏப்ரல் 1 முதலாக மார்ச் 31 வரையான காலம் நிதியாண்டு எனப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் செய்யக்கூடிய வரவு செலவுக்கான அனுமதியை நாடாளுமன்றத்தில் வாங்குவதற்காகத்தான் பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுகிறது.

பட்ஜெட்டில் பொதுவாக இரண்டு பகுதிகள் இருக்கின்றன: செலவுகளுக்கான பட்ஜெட், வருமானங்களுக்காகப் பட்ஜெட். செலவுகளுக்கான பட்ஜெட்டில் அந்தச் செலவுகளின் மூலமாக வரும் வருமானங்கள் விவாதிக்கப்படலாம். வருமானங்களுக்கான பட்ஜெட்டில் வருமானத்தைக் கொண்டுவரக்கூடிய செலவினங்கள் பற்றிய விவாதங்களும் விவரங்களும் இருக்கலாம்.

அடுத்த நிதியாண்டில் எவ்வளவு பணத்தை எந்த எந்த விஷயங்களில் என்ன என்ன வகைகளில் செலவு செய்ய அரசு நினைக்கிறது என்பது பொதுவாக, செலவுகளுக்கான பட்ஜெட்டில் விளக்கமாகத் தரப்படும்.

அரசு தான் செலவு செய்ய நினைத்துள்ள பணம் எங்கிருந்தெல்லாம் வரும் என்பதையும் அந்தப் பணம் வரக்கூடிய நிதி ஆதாரங்களையும் என்னென்ன முறைகளில் சேகரிக்கப்போகிறது என்பது வருமானங்களுக்கான பட்ஜெட்டில் விளக்கப்படும்.

மாப்பிள்ளைத் தோழன்

மத்திய அரசின் பட்ஜெட் கல்யாண மாப்பிள்ளை என்றால் அதன் பக்கத்திலேயே மாப்பிள்ளைத் தோழன் போல ரயில்வே பட்ஜெட் வெளியாகிறது. இது ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய மரபு. சில நாட்கள் இடைவெளியில் இரண்டு பட்ஜெட்களும் வெளியாகின்றன.

இந்தியாவின் இருப்புப் பாதைகளைச் சீரமைப்பதற்காக வில்லியம் அக்வொர்த் என்பவர் தலைமையில் 1920-ல் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைப்படி 1924-ல் இந்தியாவின் இருப்புப் பாதை வரவு-செலவு அரசின் பொதுநிலையிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது.

இந்தப் பழக்கம் இன்றும் சுதந்திர இந்தியாவில் கடைப்பிடிக்கப் படுகிறது. இப்போதும் ரயில்வே பட்ஜெட் தனியாகச் சமர்ப்பிக்கப் பட்டாலும் பொதுப் பட்ஜெட்டின் விவரங்களுக்குள் ரயில்வே பட்ஜெட்டின் விவரங்களைக் கொண்டுவந்துவிட்டார்கள்.

ஒரு சம்பிரதாயமாகத்தான் ரயில்வே பட்ஜெட் தனியாக வெளியாகிறது.

பட்ஜெட் போடுவது என்ன பெரிய இமயமலை ஏறும் சாதனையா? அதையே செய்ய முடிகிறபோது, இதையும் செய்ய உங்களாலும் முடியும்.

விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை


பொதுமக்கள் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம்: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

THE HINDU TAMIL

ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம் என்று தமிழக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் மற்ற பொருட்களைப் போலவே மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மருந்து வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 13,14 ஆகிய தேதி களில் நாடு முழுவதும் உள்ள 8 லட் சம் மருந்து கடைகளை அடைத்து 40 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டனர்.

ஆன்லைனில் வேண்டாம்

ஆன்லைன் மருந்து விற்ப னைக்கு தடை விதிக்கக்கோரி மத் திய அரசை மருந்து வணிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற னர். இந்நிலையில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு மையம், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை. ஆன்லைனில் யாராவது மருந்து விற்றால் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

தமிழக மருந்து கட்டுப்பாடு துறையும் தீவிரமாக செயல்பட்டு ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்த சிலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம் என்று தமிழக மருந்து கட்டுப்பாடு துறை தெரிவித்துள்ளது.

கடும் நடவடிக்கை

இது தொடர்பாக தமிழக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் கூறியதாவது:

ஆன்லைனில் விற்கப்படும் மருந்துகளின் தரத்தை கண்டுபிடிப் பது கடினம். இதனால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப் புள்ளது. ஆன்லைனில் மருந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மருந்து கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நட வடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம். டாக்டர் பரிந்துரைச் சீட்டை காண்பித்து மருந்து கடைகளில் மருந்துகளை வாங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆன்லைனில் 19 நிறுவனங்கள்

இதுபற்றி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:

நாடு முழுவதும் 19 நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்று வருகின்றன. ஆன்லைனில் மருந்து கள் விற்பனைக்கு இதுவரை யாருக்கும் உரிமம் வழங்கவில்லை. ஆனால் சட்டத்தை மீறி மருந்து களை விற்பனை செய்து வருகின் றனர். இதனால் போலி மற்றும் தரமில்லாத மருந்துகள் புழக்கத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளது.

மருந்து என்பது மற்ற பொருட்களைப் போல் இல்லை, உயிர் காக்கும் பொருளான மருந்துகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். மக்கள் டாக்டரின் பரிந்துரைச் சீட்டுடன் வந்து மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Wednesday, February 10, 2016

நகை வாங்க ‘பான் கார்டு’ எதற்கு?

logo


கடந்த ஜனவரி மாதம் முதல் ரூ.2 லட்சத்துக்குமேல் நகை வாங்கும்போது, வருமானவரித்துறையிடம் விண்ணப்பம் செய்து பெற்ற நிரந்தர கணக்கு எனப்படும் ‘பான் கார்டு’ விவரத்தை கொடுக்கவேண்டும் என்ற மத்திய அரசாங்கத்தின் உத்தரவை எதிர்த்து, இந்தியா முழுவதிலும் உள்ள நகைக்கடைக்காரர்கள் இன்று ஒருநாள் அடையாள கடை அடைப்பு நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். நாடு முழுவதிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நகைக்கடைகள், 300 சங்கங்களின் கீழ் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் இருக் கின்றன.

கருப்பு பணத்தை ஒழிக்கவும், வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ‘பான் கார்டு’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சார்பில் கூறப்படுகிறது. இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக, கடந்த ஒரு மாதத்திலேயே நகைக்கடைகளில் விற்பனை 30 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாக நகைக்கடை அதிபர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த விற்பனை வீழ்ச்சியால் அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய மற்ற வரிகளின் வருமானமும் நிச்சயமாக குறைந்து இருக்கும். நகைக்கடைகளில் தற்போது உள்நாட்டு விற்பனை ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் கோடியாகும். இந்தியாவில் உள்ள தங்க விற்பனையில் 50 சதவீதம் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. 2018–ம் ஆண்டில் இந்த விற்பனை ரூ.5 லட்சம் கோடிக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒருமாதத்தில் 30 சதவீத விற்பனை குறைந்துவிட்டதால், தங்கத்தை யாரும் வாங்காமல் இருந்துவிட்டார்கள் என்று பொருளல்ல. ‘பான் கார்டு’ கேட்காத வியாபாரிகளிடம் வாங்கியிருப்பார்கள், அல்லது கிராமப்புறங்களில் உள்ள நகை தொழிலாளர்களிடம் வாங்கியிருப்பார்கள்.

இந்த திட்டத்தை நாட்டில் அனைவரும் ‘பான் கார்டு’ வாங்கியபிறகு, அல்லது வாங்க வைத்தபிறகு கொண்டுவந்து இருக்கலாம். ஏனெனில், இந்தியா முழுவதுமே இப்போது 22 கோடியே 30 லட்சம் பேர்களுக்குத்தான் ‘பான் கார்டு’ கொடுக்கப்பட்டுள்ளது. நகை வாங்க வருபவர்களில் 70 சதவீதம் பேர் கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள்தான். பொதுவாக நகை வாங்க வருபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள். அதுபோல, கிராமப்புறங்களில் இருந்தும், வீடுகளில் சுபகாரியங்களுக்கும், பெண்களுக்கு அணிகலன்களுக்காகவும் நகை வாங்க வருவார்கள். இதுமட்டுமல்லாமல், விவசாய வருமானத்துக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இவ்வளவு நாளும் ‘பான் கார்டு’க்கு அவசியமே இருந்திருக்காது. மேலும், தங்கத்தின் விலை தற்போது உயர்ந்துகொண்டே போகிறது. நேற்று காலையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்து, ரூ.21 ஆயிரத்து 344–க்கு விற்பனை ஆனது. ரூ.2 லட்சம் என்றால், செய்கூலி, சேதாரம், கல் விலை எல்லாம் கணக்கிட்டால் 7 சவரன்தான் தேறும். இப்போது திருமண நேரம். இந்த நேரத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 7 பவுன் என்பது சாதாரணம். மேலும், ரூ.2 லட்சம் என்பதை சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டி கொஞ்சம் கொஞ்சமாக ரொக்கமாகவே சேர்த்து வைத்திருப்பார்கள். அவர்களிடம் ‘பான் கார்டு’ கேட்டால், இந்த பணம் எங்கிருந்து வந்தது? என்று கேட்பார்கள், நோட்டீசு அனுப்புவார்கள், வருமானவரி வளையத்துக்குள் தேவை இல்லாமல் விழவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்ற பயம் மக்களுக்கு இருக்கிறது.

பொதுமக்கள் வாங்கும் தங்கத்துக்கு நகைக்கடைகள் பல்வேறு வகைகளில் அரசுக்கு வரியை கட்டுகிறார்கள். ஆகவே, வருமான இழப்பு என்பது இருக்காது. மேலும், வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து, தங்கம் வாங்கவரும்போது பணப்புழக்கம் அதிகரிக்கும். அது பொருளாதாரத்துக்கும் நல்லது. எனவே, தங்கம் வாங்குவதற்கு ‘பான் கார்டு’ தகவல் தரவேண்டும் என்பது உள்பட எந்தவித கட்டுப்பாடும் தங்கம் வாங்க வருபவர்களுக்கு, மத்திய அரசாங்கத்தால் விதிக்கப்படக்கூடாது.

Tuesday, February 9, 2016

குடும்ப வன்முறையும், குழந்தைகளும்

Dinamani



By அ. கோவிந்தராஜூ

First Published : 09 February 2016 01:18 AM IST


நான் பணியாற்றும் பள்ளியில், வாராந்திர விடுமுறைக்குப்பின் அன்றும் வழக்கம்போல் மழலையர் வகுப்புகள் தொடங்கின. குழந்தைகளின் பெயரைச் சொல்லி அழைக்க, யெஸ்! மிஸ். யெஸ்! மிஸ்.. என்று குழந்தைகள் சொல்ல, ஆசிரியை வருகைப் பதிவு எடுத்து முடித்தார். அப்போது ஒரு குழந்தை எழுந்து "மிஸ் எங்கம்மா செத்துப் போயிட்டாங்க' என்று சொல்ல ஆசிரியைக்குத் தூக்கி வாரிப் போட்டது.
உடனே, அந்தக் குழந்தையை அழைத்துக்கொண்டு எனது அறைக்கு வந்தார். மெதுவாக அச் சிறுமியிடம் பேசிப் பார்த்தேன். என்னிடமும் அப்படியேதான் சொன்னாள். ஆசிரியையிடம் சிறுமியின் அப்பாவைத் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு பேசச் சொன்னேன்.
இதற்கிடையில், அக்குழந்தையிடம் பேசியபோது அதிர்ச்சித் தகவல் ஒன்றைச் சொன்னாள். பேச்சின் இடையே அவளுடைய அப்பா கொத்தனார் வேலை செய்வதாகச் சொன்னாள்.
மீண்டும் உள்ளே வந்த ஆசிரியை கண்ணீர் மல்க ஏதோ சொல்ல விரும்பினார். ஒரு பலூனைக் கையில் கொடுத்து ஊதி விளையாடுமாறு அக்குழந்தையை வெளியே அனுப்பினேன். "ஹாய்! ப்ளூ பலூன்' என்றபடி வெளியில் சென்றாள். அக் குழந்தை சொல்வது உண்மைதான் என்றும் நேற்றுதான் காரியம் எல்லாம் முடிந்தது என்றும் அச் சிறுமியின் அப்பா சொன்னதாக என்னிடம் தெரிவித்தார்.
அச் சிறுமியைக் கவனமாகக் கண்காணிக்குமாறு ஆசிரியையிடம் சொல்லி அனுப்பினேன். என்றாலும் என் மனம் என்னவோ இதையே நாள் முழுவதும் அசைப் போட்டுக் கொண்டிருந்தது. அச் சிறுமியின் தளிர் விரலைப் பிடித்தபடி அடிக்கடி பள்ளிக்கு வரும் அந்த இளம்தாய் என் மனத் திரையில் தோன்றி மறைந்தார்.
கணவன் - மனைவி வாய்ச் சண்டை முற்றி வன்முறையில் முடிந்தது. அவர் சமையல் கட்டுக்குள் ஓடி மண்ணெண்ணையை மேலே ஊற்றிக்கொண்டு பற்ற வைத்துக் கொண்டார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நான்கு நாள்களுக்குப்பின் உயிரை விட்டார். கடைசி நேரத்தில் கணவன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால், "ஸ்டவ் வெடித்து ஆடையில் தீப்பற்றிக் கொண்டதாக' மரண வாக்குமூலம் கொடுத்தார். பிரச்னை அதோடு முடிந்தது.
இந்தப் பிரச்னையில் அதிகப் பாதிப்பு அந்தக் குழந்தைக்குதான். அந்தக் கோரக்காட்சி, நேரில் பார்த்த குழந்தையின் ஆழ் மனதில் பதிவாகி இருக்கும். வளர்ந்து பெரியவளாகும்போது தன் அப்பாவை ஒரு கொலைகாரனாகப் பார்ப்பாள்.
அது மட்டுமா? தான் செய்யாத தவறுக்கு அக் குழந்தை வாழ்நாள் முழுதும் தாய்ப் பாசத்துக்கு ஏங்கித் தவிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? ஒவ்வோர் அம்மாவுக்கும் ஒரு வாசனை உண்டு. அதை அவளுடைய குழந்தை மட்டுமே முகர்ந்து உணர முடியும். அந்த வாசனையையும், தாயின் மடி சுகத்தையும் குழந்தைக்கு வேறு எவராலும் தர முடியாது.
உலகிலேயே அதிகமான குடும்ப வன்முறை நம் நாட்டில் நிகழ்வதாகவும், நம் நாட்டில் மட்டும் பார்த்தால் தமிழ் நாட்டில்தான் அதிகம் எனவும் ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
குடும்ப உறுப்பினர்கள் கடுங்கோபம், வெறுப்பு, பொறாமை, அவமதிப்பு, பேராசை, கடுங்காமம், தான் என்ற தன்முனைப்புப் போன்ற எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால்தான் குடும்ப வன்முறைகள் உருவாகின்றன.
இந்த எதிர்மறை எண்ணங்கள் செயல் வடிவம் பெறும்போது சிக்கல் பெரிதாகிறது. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் எடுத்துச் சொல்லி அல்லது இடித்துச் சொல்லி சமாதானப்படுத்துவார்கள். கூட்டுக்குடும்ப அமைப்பு இப்போது சிதைந்து விட்டதால் குடும்பச் சண்டையைத் தடுத்து நிறுத்துவாரில்லை.
ஒரு கணவன் மனைவியைத் தாக்குவது (physical abuse), கெட்ட வார்த்தைகளால் திட்டுவது (verbal abuse), அவளுடைய சுய கௌரவத்திற்குப் பங்கம் ஏற்படுத்துதல் (emotional abuse), அவளுடைய விருப்பத்திற்கு மாறான அல்லது இயற்கைக்கு மாறான பாலியல் நுகர்வு (sexual abuse), அவளுடைய பெற்றோரிடம் பணம் வாங்கி வரச்சொல்லுதல் அல்லது சம்பளப் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு பூ பொட்டு வாங்குவதற்குக்கூட காசு தராமல் இருப்பது (Economical abuse) மற்றும் குடி போன்ற பல காரணங்களால் குடும்ப வன்முறைகள் தோன்றுகின்றன.
வன்முறையின் தாக்கம் எல்லை மீறும்போது கண நேரத்தில் கொலையிலோ, தற்கொலையிலோ முடிந்து விடுகின்றன. அதன் பிறகு அக்குடும்பம் புயலில் சிக்கிய கப்பல் போல தடுமாறுகிறது, சில சமயம் தடம் மாறுகிறது. இத்தகைய குடும்பங்களில் வாழும் சின்னஞ் சிறிய அரும்புகள் அன்புக்காக ஏங்கி அலை மோதுகின்றன.
கணவனும் மனைவியும் பொழுதுக்கும் சண்டையிடும் குடும்பங்களில் தற்கொலை, கொலை, மணமுறிவு முதலியவை ஏற்பட்டு, வளரும் குழந்தைகளின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்படும், படிப்பில் பின்தங்கும்.
குடும்ப வன்முறைகளைத் தவிர்ப்பது எப்படி? குடும்பத்தில் உள்ள அனைவரும் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அற வழியில் பொருளீட்டி, செலவைக் குறைத்துச் சேமிக்க வேண்டும். கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசினாலே பாதிச் சிக்கல் தீர்ந்து விடும். ஆணாதிக்கப் போக்கை அறவே விட்டொழிக்க வேண்டும். மனைவிதான் வீட்டைப் பெருக்க வேண்டும் என்பதில்லை; கணவரும் பெருக்கலாம். செய்யும் தவறுகளைப் பெரிதுபடுத்தி வாதம் செய்வதை நிறுத்தி, மன்னிக்கும் மனப் பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தீயினால் சுட்ட புண்ணின் வடு மறைந்துவிடும். ஆனால், நாவினால் சுடும்போது ஏற்படும் வடு மறையவே மறையாது என்று வள்ளுவர் சொல்லுவதை கணவன் - மனைவி இருவரும் உணர வேண்டும்.
கணவன் - மனைவி சண்டை முற்றி அதன் வீச்சு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால், உடனே கணவன் வீட்டை விட்டு வெளியே சென்று கோபம் தணிந்ததும் திரும்ப வேண்டும். இல்லையேல், ஒரு நாவலை எடுத்துச் சென்று அறையினுள் உட்கார்ந்து படிக்க வேண்டும்.
திருக்குறள் இன்பத்துப் பாலில் கணவன் - மனைவி உறவை நட்பு எனக் குறிப்பிடுவார் திருவள்ளுவர். எனவே, பெற்றோர் நண்பர்களாக வாழத் தொடங்கினால் மட்டுமே குடும்பச் சண்டைகள் ஒழிந்து இல்லந்தோறும் மகிழ்ச்சிப் பொங்கும். அங்கே குழந்தைகள் மன வளத்துடன் வளரும்.
இது சாத்தியமா? சாத்தியம். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

கூட்டங்களின் கொடிய முகம்


Dinamani


By எஸ். ஸ்ரீதுரை

First Published : 08 February 2016 01:05 AM IST


நம் நாட்டில் சட்ட திட்டங்களை மதிப்பது என்பதே ஓர் அலாதியான விஷயம்.
வலியோர் - எளியோர், பணக்காரர் - ஏழை, அதிகாரி - கடைநிலை ஊழியர், அரசியல் கட்சியினர் - சாதாரண பொதுமக்கள் என்ற எதிரெதிர்ப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதில் வெளிப்படையான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.
கூட்டங்கள் - தனி மனிதர் என்ற இன்னொரு பிரிவையும் சேர்த்தே அவதானிக்க வேண்டியுள்ளது. நியாயமான விஷயத்தைக் கேட்கவே ஒரு தனி மனிதன் தயங்க வேண்டியுள்ளது. ஆனால், கூட்டமாகப் பலர் சேர்ந்துவிட்டால் எத்தகைய அக்கிரமங்களையும் அரங்கேற்றி விடலாம் என்பது புதிய கலாசாரமாகியுள்ளது.
தனி மனிதன் ஒருவன் சற்றே நாகரிகம் கொண்டவன் போல் நடந்து கொண்டாலும், பல தனி மனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமாக உருவானால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காட்டுமிராண்டி ஆகி விடுகிறான் என்பது இப்போது பொது விதி ஆகியிருக்கிறது.
பெங்களூருவில் ஒரு தான்சானிய மாணவி எல்லோரும் பார்க்கப் பலரால் தாக்கப்பட்டதை வர்ணிக்கக் காட்டுமிராண்டித்தனம் என்பதை விட வலுவான வார்த்தை ஒன்று கிடைத்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
சாலையில் விபத்து நேர்கிறது என்னும் போது, விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முனைபவர்களைக் காட்டிலும், விபத்துக்குக் காரணமானவர்கள் என்று ஒரு கூட்டத்தால் கருதப்படுபவரை அடித்துத் துவைக்கும் நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன.
திருட வந்து மாட்டிக் கொள்பவனை அல்லது மாட்டிக்கொள்பவளைக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் குற்றுயிரும் குலை உயிருமாக ஆக்குவது அவ்வப்போது செய்தியாகி வருகிறது. நிஜத் திருடர்களை விட, திருடர்களாகத் தவறாக எண்ணப்படுபவர்களும் கூட இதிலிருந்து தப்ப முடிவதில்லை.
அரசியல் கட்சிகளோ, ஜாதி இயக்கங்களோ ஓர் ஊரில் மாநாடு கூட்டிவிட்டால் போதும், அந்தப் பகுதி மக்கள் படும் அவதி சொல்லி முடியாது.
ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் வம்பு வளர்த்துப் பணம் கொடுக்காமல் போவது, தங்களுக்கு எதிரான இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட சிலைகள், அலுவலகங்கள், பேனர்கள், போஸ்டர்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்துவது, நினைவுச் சின்னங்களைச் சிதைப்பது இவையெல்லாம் தாராளமாக அரங்கேறும்.
நகரமே குலுங்கியது, சாலைகள் கிடுகிடுத்தன என்று மறுநாள் செய்தி வரவேண்டும் என்பதற்காகவே பெரும் கூட்டத்தைக் கூட்டி வித்தை காட்டும் பொறுப்பற்ற தலைமைகளின் கைங்கரியம்தான் இத்தகைய அத்துமீறல்களுக்கு அஸ்திவாரம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ...?
தனிமாநிலக் கோரிக்கை, இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை என்று போராடும் அரசியல் கட்சியினரும், ஜாதி அமைப்பினரும் அரங்கேற்றும் அராஜகங்கள் ஒன்றா? இரண்டா?
முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற மீனா இனத்தவர் போராட்டம், குஜராத்தில் நடை பெற்ற படேல் இனத்தவரின் போராட்டம், வட இந்தியாவில் ஜாட் உள்ளிட்ட இனத்தவர்கள் அவ்வப்போது நடத்தும் போராட்டம் ஆகியவற்றால் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நஷ்டங்களும், பொது மக்களுக்கு விளையும் இன்னல்களும் மறக்கக் கூடியவைதானா?
தமிழகத் தலைநகர் சென்னையை எடுத்துக்கொண்டால், சட்டக் கல்லூரி உட்பட, பல்வேறு மாணவர் அமைப்பினர் நடத்தும் போராட்டங்களின் போது எவ்வளவு பொருள்சேதங்களும், உடற்காயங்களும் ஏற்படுகின்றன. இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையேயும், ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கிடையேயும் நடைபெறும் சண்டை சச்சரவுகளில் எத்தனை பொதுச் சொத்துக்கள் பாதிக்கப்படுகின்றன?
மாணவர்களின் போராட்டம் மற்றும் சண்டைதான் என்று இல்லை, கல்லூரி மாணவர் அமைப்புத் தேர்தல் வெற்றி மற்றும் நீதிமன்றங்களாலேயே கண்டிக்கப்பட்ட பேருந்து தினம் ஆகிய கொண்டாட்டங்களின் போதும் பொதுப் போக்குவரத்திற்கு எத்தனை இடைஞ்சல்கள்?
கொண்டாட்டத் தருணங்களின் போது கூட்டமாகச் சேருவோர் செய்யும் இடைஞ்சல்களைக் கூட ஒரு மாதிரி பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், பொது இடத்தில் ஏற்படுகின்ற விபத்துகளின் போது, குற்றவாளிகளைத் தண்டிக்கிறோம் என்று கூட்டமாகக் கிளம்புவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அதிலும், பெங்களூர் சம்பவத்தை எடுத்துக் கொண்டால், இந்த தான்சானியா நாட்டு மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமை எல்லாவிதத்திலும் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
பெங்களூரில் தங்கிப் படிக்கும் ஆப்பிரிக்கப் பின்னணி கொண்ட மாணவர் ஒருவர் கண்மூடித்தனமாகத் தனது மகிழுந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக, அவரது இனத்தைச் சேர்ந்த மாணவியிடம் ஒரு கூட்டமே வன்முறை செய்வது என்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.
அரசியல் தலைவர்கள், கட்சியினர், ஜாதி அமைப்பினர், மாணவர்கள் ஆகியோர் கூட்டமாகத் திரளும் போது உருவாகின்ற ஒருவித கட்டுப்பாடின்மையும் வெறியும் பொதுமக்கள் அனைவரிடமும் பரவி விட்டால், அப்புறம் சட்டம் என்பது எதற்காக இருக்கிறது?
இவ்விதம் வெளிநாட்டுக் குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை நமது தேசத்தைப் பற்றிய மதிப்பினை உலக அரங்கில் குலைப்பதுடன், பிறநாடுகளுடனான் சுமுக உறவுக்கு வேட்டு வைத்துவிடும்.
சட்டம், கொஞ்சம் தாமதமாகவேனும், தனது கடமையைச் செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். கூட்டங்கள் அளிக்கின்ற தண்டனைகளும், சட்டத்தின் பார்வையில் தண்டனைக்குரியவைதான் என்பதைப் பொதுமக்கள் உணரவேண்டும்.

Monday, February 8, 2016

வாழ்வு இனிது: நடப்போம், நலம் பெற!

Return to frontpage

நடை அழகு

பிறந்த குழந்தை தானாகவே புரண்டு படுத்து, பிஞ்சுக் கால்களை மடித்துத் தவழத் தொடங்குவதைக் காட்டிலும் நெகிழச் செய்வது தத்தித் தத்தி நடக்கத் தொடங்கும் தருணம்தான். நடை அத்தனை மகத்துவமானது. ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை உலகின் பெருவாரியான மக்கள் நடையின் மூலமாகத்தான் பயணித்தனர். நடப்பது என்பது சுவாசிப்பதைப் போன்ற இயல்பான செயல்பாடு. அதை நீரிழிவு வரும் நிலையிலோ வந்த பிறகோ மருத்துவர் சொன்ன பிறகும்கூட செய்யத் தயங்கும் அளவுக்கு மனச் சோம்பலுக்கு ஆளாகிவிட்டோம் நாம்.

நட ராஜா!

எரிக்கப்படாத கலோரிகள் உடல் பருமனை அதிகரித்து மாரடைப்பு, நீரிழிவு, மூட்டு வலி, மறதி உள்ளிட்ட நோய்களுக்கு இட்டுச்செல்லும். கலோரிகளை எரிக்கச் சிறந்த வழி நடை. ஒரு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால் 415 கலோரிகள் எரிக்கப்படும். 6 இட்லியில் கிடைத்த கலோரிகளை ஒரு மணி நேர நடை மூலம் சமன்படுத்தலாம். ஒரு மசாலா தோசையில் 415 கலோரிகள் உள்ளன. மதிய சாப்பாட்டில்1200 கலோரிகள். சாப்பாட்டுப் பிரியராக இருந்தால் நிச்சயம் காலையும் மாலையும் இரு மணிநேரம் நடந்தாக வேண்டும்.

அரசியல் நடை

அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பல்வேறு விதமான தொழிலாளர்களும் நீதி கேட்டோ, நிதி கேட்டோ, ஓட்டு கேட்டோ நடைப் பயணம் மேற்கொள்கின்றனர். சட்டத்தை மீறி உப்பு காய்ச்ச நடந்தது, பூதானம் கோரி நடந்தது, மதுவிலக்குக்காக நடப்பது என்று நடைப் பயணம் சாத்வீகப் போராட்டங்களின் வழிமுறையாகவும் அமைகிறது. கோட்டை நோக்கி, முதல்வரின் வீடு நோக்கி, பிற நாட்டுத் தூதரகங்களை நோக்கி ... என நடைப்பயணங்கள் தொடர்கின்றன.

வீர நடை, விழிப்புணர்வு நடை

மிடுக்கான நடை எனபது ராணுவத்தினரின் வழக்கமான பயிற்சிகளில் ஒன்று. என்.சி.சி. போன்ற தேசிய மாணவர் படையினரும் ஆண்டில் ஒரு நாள் சாலை அணிவகுப்பு என்ற பெயரில் சில கிலோ மீட்டர்கள் நடக்கின்றனர். புற்று நோய், சர்க்கரை நோய் விழிப்புணர்வு போன்ற சமூக, மருத்துவ நோக்கங்களுக்காக மாரத்தான் நடைக்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

கலோரி எதிரி அல்ல

கலோரி என்றாலே உடல் நலத்துக்கு எதிரிபோலப் பார்க்கப்படுகிறது. ஆனால் அது நம் உடலுக்கு அத்தியாவசியமான ஆற்றல். உணவுப் பண்டங்கள் அனைத்திலும் வெவ்வேறு சதவீதத்தில் கலோரிகள் உள்ளன. அன்றாடம் நாம் செய்யும் வேலைகளுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவது கலோரிதான். வேலை செய்யச் செய்ய கலோரிகள் எரிக்கப்படும். எரிக்கப்படாத கலோரி கொழுப்பாக மாறி உடல் பருமனை அதிகரித்துவிடும். நமது அன்றாடச் செயல்களின் மூலம் 60% கலோரிகள் எரிந்துவிடும். மீதமுள்ள கலோரிகளை எரிக்கக் கூடுதல் உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி தேவை.

ஆன்மிக நடை

ஆதி சங்கரர், மத்வாசாரியர், ராமானுஜர், விவேகானந்தர், சிவானந்தர், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், விசிறி சாமியார், சைவ மடாதிபதிகள், ஆசார்ய துளசி உள்ளிட்ட ஜைன தீர்த்தங்கரர்கள், சீக்கிய மத குருக்கள்,இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், கிறிஸ்துவின் சீடரான புனித தாமஸ் உள்ளிட்டவர்கள்,அன்னை தெரசா, சத்ய சாய் பாபா உள்ளிட்டவர்கள் நடந்தே தம் பணிகளைச் செய்தனர். பக்தர்களும் திருவிழாக்களை ஒட்டியும் பிரார்த்தனையின் பேரிலும் பாதயாத்திரை செல்கிறார்கள்.

வியர்த்தால் எடை குறையுமா?

உடலின் வெப்ப நிலை அதிகரிக்கும்போது மீண்டும் குளிரூட்டவே வியர்வை சுரக்கிறது.ஆக, வியர்த்தால் எடை குறையாது என்கின்றனர் நிபுணர்கள். நம் உடலில் 450 கிராம் எடையைக் குறைக்க 3500 கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஆனால் வியர்வை மூலமாக உடலில் இருக்கும் நீரின் எடை மட்டுமே குறைகிறது.

சரியான நடை

நடப்பது இயல்பானதுதான் என்றாலும் எல்லோரும் சரியாக நடக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. முதுகெலும்பு நேராக இருக்க, கைகளை முன்னும் பின்னும் வீசி, பாதங்களைத் தரை மீது அழுத்திப் பதித்து நடக்க வேண்டும். என்னதான் டிரெட் மில்லில் நடைபயின்றாலும் காற்றோட்டமான வெளியில் சுறுசுறுப்பாக நடப்பதற்கு இணையாகாது. இறுக்கமான உடை அணிந்தோ, பளு தூக்கிக்கொண்டோ, மிகவும் நிதானமாகவோ நடந்து பயனில்லை. நடக்கும்போது பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

வியர்வை நச்சுக் கொல்லி

வியர்வையை வைத்து கலோரி எரிவதைக் கணக்கிட முடியாது. ஆனால் அது உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவுகிறது. விறுவிறுப்பாக நடந்து வியர்க்கும்போது எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தோல் மீது படிந்திருக்கும் கழிவுகள் அகலும், சிறு நீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்கப்படும், சளி காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.

நோய் அகற்ற நடை…

தினந்தோறும் 30 நிமிட விறுவிறுப்பான நடை மாரடைப்பு, வலிப்பு, நீரிழிவுநோய், மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைத் தடுக்க உதவும். தசைகளுக்கு வலு சேர்க்கும், அதிகாலை சூரிய ஒளியில் நடப்பதன் மூலம் வைட்டமின் டி கிடைத்து எலும்புகள் வலுப்பெறும்.

வாழ்க்கையோடு கலந்தது…

இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 26 கோடியே 30 லட்சம். எவ்வளவுதான் நவீன தொழில்நுட்பங்கள் வேளாண்மையில் புகுத்தப்பட்டாலும் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் மட்டுமே இன்றும் நாம் சோற்றில் கைவைக்க முடியும். நாற்று நடுதல் முதல் நீர்ப் பாசனம், களை பறித்தல், அறுவடை வரை விவசாயிகள் தினசரி 15 கி.மீ. நடக்கிறார்கள். அதுவே அவர்களுடைய உடல் ஆரோக்கியத்துக்கும் ஆதாரமாகிறது. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் பேசிக்கொண்டே சராசரியாக நாள் தோறும் 40 கி.மீ. நடக்கிறார்கள்.

Sunday, February 7, 2016

கண்ணா இவர்களையும் காப்பாற்று!


Dinamani


By ஜோதிர்லதா கிரிஜா

First Published : 06 February 2016 05:20 AM IST


பல்லாண்டுகளுக்கு முன்னால், கல்கி இதழில் ஒரு சிரிப்புத் துணுக்கு வந்தது. எழுதிப் படமும் வரைந்தவர் அமரர் சாமா. அரைகுறை ஆடையணிந்து தெருவில் சுற்றும் பெண்களைப் பார்த்தபடி, மகாபாரத திரெளபதி கவலையுடன் கண்ணா இவர்களையும் காப்பாற்று என்று வேண்டிக்கொள்ளுவார்.
இந்நாளில் சில பெண்கள் கால்களில் எதுவுமே அணியாதது போல் தோல் நிறத்து ஒட்டுறைகளை (லெக்கின்ஸ்) அணிந்து செல்வதைப் பார்த்தால் திரெளபதி கண்ணனைக் கூப்பிட மாட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில், இத்தகைய பெண்களைக் கண்ணனாலும் காப்பாற்ற முடியாது என்று அவருக்குத் தெரியும்.
அண்மையில், "டீன் ஏஜ்' பெண்களுக்கான பனியன்கள் மிகவும் அருவருப்பான வாசகங்களைத் தாங்கி வருகின்றனவே, பெண்ணுரிமை அமைப்புகள் இவற்றைக் கண்டுகொள்ள மறுப்பது ஏன்? எனும் வாசகர் ஒருவரின் கேள்விக்கு, அசிங்கத்தைத் தாங்கிக்கொள்ளுவது அவர்களின் அடிப்படை உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. தவிர, இதையெல்லாம் தடுக்க முயல்வது பெண்ணியத்துக்கு எதிரானது எனும் துக்ளக் ஆசிரியர் சோவின் பதிலில் ஒலிப்பது நையாண்டி மட்டுமன்று; கசப்பும் வேதனையும் கூட அதில் ஒலிக்கின்றன.
பெண்ணுரிமைவாதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் பேசுவதையும், எழுதுவதையும் கவனிக்கும்போது அப்படித்தான் என்னைப்போன்ற பெண்ணுரிமைவாதி
களுக்கும் தோன்றுகிறது.
இதுபோன்ற வக்கிரமான வாசகங்கள் உள்ள பனியன்களைத் தயாரிப்பவர்களும் கண்டனத்துக்கு (ஏன் தண்டனைக்கும்) உரியவர்களே. முக்கால் நிர்வாணப் படங்களுடன் ஏடுகளை வெளியிடும் பத்திரிகைக்காரர்களும் கூடத்தான்.
இருக்க வேண்டிய அடிப்படைக் கூச்சநாச்சங்களைக் கூடத் துறந்து விட்டுச் சில பெண்கள் இப்படி அலைந்து கொண்டிருப்பதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டியவர்கள் பல தரத்தினராவர். இவர்களில் இப் பெண்களின் பெற்றோரும் அடங்குவர்.
நம் பெண்களில் சிலர் ஏனிப்படித் தரந்தாழ்ந்து போயினர் என்பதற்கான பல காரணங்களிடையே கூட்டுக் குடும்பங்கள் குலையத் தொடங்கி உள்ளதால் கவனிக்கவோ, கண்டிக்கவோ, வழிகாட்டவோ வீட்டில் பெரியவர்கள் அற்றுப் போனதும் ஒரு காரணமாகும்.
கண்ணியமாக உடையணியும் பெண்களையும், சின்னஞ்சிறு அறியாச் சிறுமிகளையும் கிழவிகளையும்கூடச் சில ஆண்கள் விட்டு வைப்பதில்லை என்கிற கசப்பான உண்மையையும் இங்கே சொல்லத்தான் வேண்டும்.
எனவே, அவர்களின் தவறான நடத்தைக்குப் பெண்களின் உடையைக் காரணம் காட்ட முடியாது என்கிற வாதத்தைச் சில பெண்ணியக்காரர்கள் முன்வைப்பதை புறந்தள்ளவும் முடியாது. ஆனால், இது விவாதத்துக்கு மட்டுமே சரியாக இருக்கலாமே தவிர, இதில் விவேகம் துளியும் இல்லை.
கண்ணிய உடையணிபவர்களே சீண்டப்படும் போது, வெளிப்பாடாக உடையணிபவர்கள் இன்னும் அதிக ஆபத்தைத் தாங்களாகவே தேடிக் கொள்ளுகிறார்கள் என்கிற வாதத்தில் பெண்ணியக்கவாதிகள் என்ன தவற்றைக் காண்கிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.
சில நாள்களுக்கு முன்னால், அனைத்திந்திய மாதர் இயக்கத்தோடு தொடர்பு உடைய ஒரு தலைவி, Youlook sexy (நீ செக்ஸியாகத் தோன்றுகிறாய்) என்று ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் கூறினால் அதை ஒரு compliment (பாராட்டு) ஆக எடுத்துக்கொள்ள வேண்டுமேயல்லாது பெண்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது என்று திருவாய் மலர்ந்தார். இதைப் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.
செக்ஸி என்பதற்குக் கண்ணியமான பொருளும் உள்ளதோ என்றறியச் சில அகராதிகளைப் புரட்டினால், எல்லாவற்றிலுமே, பாலுணர்வைத் தூண்டும்படியான என்கிற பொருளே தரப்பட்டிருந்தது. இத்தகையப் பாராட்டுக்கு நன்றி கூறி ஒரு பெண் புன்னகை செய்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும்?
சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: "தன் மனைவியைத் தவிர வேறு பெண்மணி ஒவ்வொருத்தியும் ஓர் ஆணுக்கு அன்னையாகவே தோன்ற வேண்டும். பால் வேற்றுமையைப் புறக்கணித்துவிட்டு, ஆண்களுடன் பழகத் தெரிந்து கொள்ளாத அமெரிக்கப் பெண்கள் உண்மையான முன்னேற்றத்தை அடையப் போவதில்லை... அமெரிக்க ஆண்கள் பெண்களை வணங்கித் தலை தாழ்த்தி, அவர்கள் முதலில் அமர ஆசனம் அளிக்கிறார்கள்.
அதே மூச்சில், "ஓ உன் விழிகள் எவ்வளவு அழகானவை' என்று ஒரு பெண்ணின் அழகைப் புகழ்கிறார்கள். இந்த அளவுக்கு ஆடவர்க்கு எப்படித் துணிச்சல் வந்தது? பெண்களாகிய நீங்கள் இதை அனுமதிக்கலாமா? இத்தகையச் சொற்கள் ஆண் -பெண்களை இழிவு நோக்கியே இட்டுச் செல்லும்'.
}விவேகானந்தரின் இந்த அறிவுரையை, மேற்சொன்ன பெண்ணுரிமை இயக்கத் தலைவி பிற்போக்குத்தனம் என்பாரோ?
ஆண்களைத் திருத்த வேண்டும்தான். அதற்கான முயற்சிகளும் தேவையே. ஆனால், அது மெத்தக் கடினம். எனினும், நல்ல ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள்.
அவர்களின் கண்ணியத்தையும் நாசமாக்கும் இழி செயலை, தங்களின் தவறான நடையுடைபாவனைகள் வாயிலாக பெண்கள் செய்யக் கூடாது. சம உரிமை என்பதன் பெயரால் பெண் தன்னைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது.
ஒரு பெண் எதிர்ப்பட்டால், விலகி வழி விட ஓர் ஆணுக்குத் தோன்றும்படி அவள் உடையணிந்திருக்க வேண்டுமேயல்லாது, விரசமான சொற்களை அவளை நோக்கிச் சொல்லும் வக்கிரத்தை, அவளது தோற்றம் விளைவிக்கக் கூடாது.
சில நாள்களுக்கு முன், ஒரு பெண்ணுரிமைவாதி "இருட்டில் உலாவுவது ஆண்களுக்கு மட்டுமே உள்ள உரிமையா?' எனும் கேள்வியை எழுப்பி அந்த உரிமை பெண்களுக்கும் உண்டு என்று வாதிட்டார். சில வாதங்கள் கேட்பதற்கு மட்டுமே சரியானதாக இருக்கும். நடைமுறை என்கிற ஒன்றையும் நினைத்துப் பார்க்கும் அறிவு நமக்கு வேண்டும்.
ஆண்கள் அனைவரும் திருந்திய பின் (அதாவது அத்தைக்கு மீசை முளைத்து அவள் சித்தப்பா ஆனதன் பிறகு), இது போன்ற அசட்டுத்தனங்களைப் பெண்கள் செய்யட்டும்.
மேலும், இது போன்ற உடைகள் ஆரோக்கியத்துக்கு ஊறு செய்பவை. இவற்றைத் தயாரிப்பதையும் அரசு தடை செய்ய வேண்டும்.

கொடிதினும் கொடிது - முதுமையில் தனிமை

Dinamani


By இரா. கதிரவன்

First Published : 06 February 2016 05:19 AM IST


யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் - எனத் துவங்கும் பாடல் ஒன்று புறநானூற்றில் உண்டு.

பண்பாலும் அறிவாலும் நிறைந்த மனைவி மக்கள், கற்றறிந்த சான்றோர் வாழும் ஊர், அறம் வழுவா நல்லாட்சி தரும் அரசு - தீங்கு செய்யா அரசன் ஆகியோர் அமைந்தமையால், தமக்கு முதுமை எய்தியும், நரை விழவில்லை என, ஒரு புலவர் எழுதிய பாடல். இது அந்தக் கால நிலை...
இன்றைய காலகட்டத்தில், முதியோர் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க எத்தனிப்போம். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில்,மருத்துவ வசதிகள் மற்றும் கல்வி வசதிகள் அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் சென்றடைந்திருக்கின்றன. இது தவிரவும், மத்திய - மாநில அரசுகளின் திட்டங்கள் எல்லோருக்கும் உணவு என்ற உணவுப் பாதுகாப்பினை பெருமளவுக்கு உறுதி செய்கின்றது
.
இந்தச் சூழலில் மக்களின் ஆயுள்காலம் அதிகரித்திருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில், மக்களின் சராசரி ஆயுள்காலம் 43 ஆண்டுகளாக இருந்தது. இப்போது, மேற்சொன்ன காரணங்களால்,சராசரி ஆயுள்காலம் 62-ஐ எட்டியிருக்கிறது.

இன்றைய தினம், பெண்கள் கல்வியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆண் - பெண் இரு பாலரும் வேலைக்குச் செல்லுதல் - குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பது - கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்பது, நகரமயமாதல் காரணமாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடும்பங்கள் இடம் பெயருதல் மற்றும் முக்கியமாக உலகமயமாதல் காரணமாக வேலை செய்யும் ஆண் - பெண் இரு பாலரும் புலம் பெயருதல் போன்றவை, சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த மாற்றங்கள், வயோதிகத்தை அடைந்தவர்கள் பால் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காண முற்படுவோம்.

முதியோர்களை மூன்று முக்கிய பிரிவினர்களாக பிரிக்கலாம்.
அவர்களது பிள்ளைகளுடன் அல்லது உறவினர்களோடு வசிப்பவர்கள்.
கணவன் - மனைவி என்று இருவர் மட்டும் தனியாக வசிப்பவர்கள்.
ஆணோ அல்லது பெண்ணோ தனியாக வசிப்பவர்கள்.
மத்திய அரசின் புள்ளியியல் துறை கணக்கெடுப்புப்படி, இந்திய மக்கள்தொகையில், 1960-ஆம் ஆண்டு மக்கள்தொகையில் ஐந்து சதவீத மக்கள் 60 வயதை கடந்தவர்களாக இருந்தார்கள். 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகையில், சுமார் 10 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்கள்.
இந்த வயோதிகர்களில், சுமார் 20 சதவீதம் பேர் கணவன் - மனைவி என்ற இருவர் மட்டும், வேறு துணை ஏதுமின்றி வாழ்கின்றனர். மேலும், ஐந்து சதவீதம் பேர் எந்தத் துணையும் இன்றி தனித்து வாழ்கின்றனர்.
ஆக, தற்போதைக்கு சுமார் 10 கோடிக்கும் மேல் 60 வயதைக் கடந்தவர்கள். இவர்களில் கணவன் - மனைவி மட்டுமோ அல்லது துணையின்றியோ வாழ்வோரின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியைத் தாண்டும். வயோதிக தம்பதியினர், தனித்து வாழும் முதியோர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், பிள்ளைகள் அல்லது உறவினர் என எவரும் இல்லாதவர்கள், ஏழ்மையில் உழல்பவர்கள் என்ற பிரிவினராக இருக்கின்றனர்.

சில பொதுவான விஷயங்கள்: ஒரு குறிப்பிட்ட வயதினைத் தாண்டி வசிக்கின்ற எல்லோரையும் முதுமை பீடிக்கின்றது. முதுமையில் கணிசமானவர்கள் எதிர்கொள்ளும் சில பொதுவான பிரச்னைகள்: மற்றவர்களால் உதாசீனப்படுதல், பொருளாதார ரீதியில் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை, தளர்ச்சியுறும் உடல்நலம், குடும்பத்தினரிடமிருந்து தனிமைப் படுதல், பிறரோடு ஒன்ற முடியாத நிலை, பிறர் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகுதல், வாழ்க்கையில் பிடிப்பின்மை அல்லது அலுப்பான சூழல்.

முதுமை என்பது ஏதோ ஒரே இரவில் வந்துவிடுவதில்லை. எனவே, முதுமை எய்தும் முன்னரே, தன்னை அதற்குத் தயார்படுத்திக் கொள்ளுதல் முக்கியம். தவிரவும், முதுமை யாரைப் பீடிக்கிறதோ அவர்களை மட்டுமல்ல, அவர்களை சுற்றி இருப்பவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, முதுமையை எய்துபவர்கள் மட்டுமல்ல, அவர்களைச் சேர்ந்தவர்களும்கூட தம்மை, இந்தப் புதிய சூழலுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதியோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இரு முக்கியப் பிரிவாகப் பிரிக்கலாம். முதல் பிரிவு அவர்களது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுதல், அது தொடர்பான பிரச்னைகள்.

இதன் காரணமாக, இவர்கள் வெளியில் எங்கும் செல்ல இயலாமல் வீட்டில் சிறைவாசம்போல் முடங்கிக் கிடத்தல், வீட்டில் சிறு சிறு வேலை செய்ய இயலாமை, மளிகை, கறிகாய், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பிறரைச் சார்ந்திருத்தல், சமூகத் தொடர்பு அற்றுப் போகுதல், எழுதப் படிக்க இயலாமை உள்ளிட்ட பிரச்னைகள். இந்தப் பிரச்னைகள் அனைத்தும் உடல் சார்ந்தவை. இவர்களைச் சுற்றி இருப்பவர்கள், அக்கறையோடு சிறு சிறு உதவிகள் செய்தால்கூட, ஓரளவு இப்பிரச்னைகளை முதியோரால் சமாளிக்க இயலும்.

அடுத்தது, மனம் சார்ந்த பிரச்னைகள்: பிறரைச் சார்ந்திருப்பது, அவர்களால் உதாசீனப்படுவது, நிந்திக்கபடுவது, பய உணர்வு, தனிமை உணர்வு போன்றவற்றால் அவதிப்படுவது, நேரத்தை உபயோகப்படுத்த இயலாமை, பொழுதுபோக்கின்மை மற்றும் வாழ்வில் சுவாரசியமின்மை போன்றவை ஏற்படுத்தும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகும்.
இவர்களது மிக முக்கிய தேவை என்பது, அன்பு, ஆதரவு, கரிசனம், இன்சொல், கவனிப்பு போன்றவைதான். ஆனால், முதியோர் அனுபவிக்கும் பிரச்னைகளில் மிகக் கொடுமையானது,அவர்கள் அனுபவிக்கும் தனிமைதான்.

உதாரணத்துக்கு, ஒரு பெரிய நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் பலரோடு சேர்ந்து பணி செய்த ஒருவர், தனிமையில் பேச்சு துணைக்கூட இன்றி இருப்பது, தன் மனதில் தோன்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளக்கூட எவரும் இல்லாது இருத்தல், தனது சுக, துக்கங்களை மனம் விட்டு பேச முடியாது இருத்தல் போன்ற விஷயங்கள் அவர்களை கொடுமைப்படுத்துகின்றன.

வேலைக்கார ஆள் அல்லது வீட்டுக்கு வரும் விற்பனை பிரதிநிதி ஆகியோரோடு மட்டுமே பேசக்கூடிய அவல நிலையில் இருக்கும் முதியவர்கள், இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏராளம். வாரம் ஒரு நாளோ அல்லது மாதம் ஒரு நாளோ, அயல் நாட்டிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பு ஒன்றுதான், அவர்களுக்கு எங்கோ ஒரு மகன் அல்லது உறவினர் இருக்கிறார் என்பதற்கான ஒரே அடையாளம்.
தவிரவும், இவர்களின் இந்தப் பிரச்னைகளை பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாதபோது, அவற்றுக்கு தீர்வு என எதுவும் கண்ணில் தெரிவதுமில்லை. நகரங்களோடு ஒப்பிடுகையில் கிராமங்களில் நெஞ்சில் கொஞ்சம் ஈரம் ஒட்டிக் கொட்டிருப்பது என்னவோ உண்மை.

வயோதிகர்களை அவர்கள் தனிமையில் இருந்தால்,அவர்களை வீட்டில் எட்டிப் பார்ப்பது, பேச்சுக் கொடுப்பது, சிறு சிறு உதவிகள் செய்வது என்ற பழக்கம் நம் கலாசாரா ரீதியாக இன்னும் கிராமங்களில் மறையாமல் இருப்பது சற்று ஆறுதலான விஷயம். ஆனால், பெருநகரங்களில் பக்கத்து வீட்டுக்காரரைத் தெரியாது என்று கூறுவது போலி கெளரவம்.
முதியோரின் இத்தகைய பிரச்னைகளை அரசு அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது. அதனால் சில சட்ட ரீதியான நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது. முதியோருக்கு உதவ முற்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஊக்கம் மற்றும் சலுகைகள் தருவது, முதியோர் பிரச்னைகள் - தீர்வுகள் குறித்த தகவல் திரட்டுதல் மற்று ஆய்வு ஆகியனவற்றுக்கு உதவி, ரயில் பிரயாணம் மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் சலுகைகள் என்ற விஷயங்களில் நடவடிக்கை எடுத்திருக்கின்றன.
முதியோர் படும் இன்னல் குறித்து சராசரி மனிதர்கள் என்ன செய்ய முடியும்? நாளை நமக்கு முதுமை வரும்போது எந்த வகையில் நாம் நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அதேபோல இன்று நம் முன் நடமாடும் முதியோரை நாம் நடத்த வேண்டும் என்ற கருத்தினை அனைவரும் மனதில் பதித்துக் கொள்ளும்போது, நம்மைச் சுற்றியுள்ள முதியோர், நமக்கு அன்னியர்களாகத் தெரிய மாட்டார்கள்.

நாம் எங்கோ சந்திக்கும் ஒரு முதியவர் அல்லது மூதாட்டியின் உடல் நலம் விசாரிப்பதோ அல்லது பேச்சுக் கொடுப்பதோகூட அவர்களுக்குப் பெரும் ஆறுதல் தரும். அதுகூட முடியவில்லை என்றால், ஒரு சிறு புன்னைகைகூட அவர்களுக்கு நிம்மதி தரும்.

பெரும்பாலான முதியோர்கள் ஏங்குவது நிச்சயமாக பணத்துக்காக அல்ல. அவர்களின் தேவை கொஞ்சம் அன்பு, கரிசனம், நல்லதாக நான்கு வார்த்தைகள், முடிந்தால் கொஞ்சம் உதவி அவ்வளவுதான். இதனை செய்யும் திறன் நம் எல்லோரிடமும் இருக்கிறது.

முதுமை ஒரே இரவில் வந்துவிடுவதில்லை. முதுமை யாரைப் பீடிக்கிறதோ அவர்களை மட்டுமல்ல, அவர்களை சுற்றி இருப்பவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, முதுமையை எய்துபவர்கள் மட்டுமல்ல, அவர்களைச் சேர்ந்தவர்களும்கூட தம்மை, இந்தப் புதிய சூழலுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

Saturday, February 6, 2016

உற்சாகம் களை கட்டலாம்! உயிரை பறிக்கலாமா?- தலையங்கம்

Logo

சென்னை, பிப்.5-


ஒரு தனி மனிதனின் உற்சாக கொண்டாட்டத்தில் ஒரு குடும்பத்தின் ஒட்டு மொத்த மகிழ்ச்சியும் பறிபோய் இருக்கிறது. அந்த குடும்பம் வாழ்க்கையே கேள்விக்குறியாகி நடுத்தெருவில் வந்து நிற்கிறது.

ஈரோடு தொழில் அதிபர் முகமது சபீக் போதையில் போட்ட ஆட்டம் தான் இதற்கு காரணம்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முகம்மது சபீக் கண்காட்சி அரங்கம் அமைத்து இருக்கிறார். அதற்காக நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த முகமது சபீக் இரவு முழுவதும் குடித்து கும்மாளமிட்டுள்ளார்.

போதை இறங்காத நிலையில் சொகுசு காரை கிளப்பி கொண்டு நந்தம்பாக்கம் புறப்பட்டார்.

ஆள் அரவம் அடங்கிய அதிகாலை நேரத்தில் அண்ணா சாலையில் ஒரு வழிப்பாதையில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காரை விரட்டி இருக்கிறார். போதையில் மிதந்தவருக்கு கார் பறந்தது தெரியவில்லை.

எதிரே பணி முடித்து டூ விலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வாலிபர் கெவின்ராஜ் என்பவர் மீது கார் மோத – ஆங்கில சினிமா காட்சிகளை போல் டூவிலர் உடைந்து நொறுங்கி பறந்தது.

கெவின்ராஜ் உடலும் கூடவே அந்த ரத்தில் பறந்து ரோட்டோர கம்பியில் உயிரற்ற உடலாய் விழுந்து தொங்கியது. அடுத்ததாக ஒரு லாரி மீது மோதிய வேகத்தில் அந்த லாரியின் சக்கரங்கள் கழண்டு லாரியும் கவிழ்ந்தது.

ஆனால் விலை உயர்ந்த காரில் இருந்த பாதுகாப்பு கவசத்தால் தொழில் அதிபரும், அவரது நண்பரும் தப்பித்துக் கொண்டார்கள்.

விலை மதிக்க முடியாத ஒரு அப்பாவி இளைஞரின் உயிர் பறிபோய் விட்டது.

வழக்கு – விசாரணை போன்ற சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவாகி இருக்கிறது.

ஒன்றிரண்டு ஆண்டுகள் வரை வழக்கு விசாரணை நீடிக்கலாம். இறுதியில் சில ஆண்டு தண்டனையோ அல்லது சில ஆயிரம் அபராதமோ விதிக்கப்படலாம். ஒரு தொழில் அதிபருக்கு இதெல்லாம் தூசு தட்டி விட்ட கதைதான். ஆனால் கெவின்ராஜை இழந்த குடும்பத்துக்கு...

ஒரே மகனை பறிகொடுத்து விட்டு அந்த குடும்பம் நடுரோட்டில் நிற்கிறது. சாகும் காலம் வரை நமக்கு சோறுபோட்டு காப்பான் என்று நினைத்த மகனை சாகடித்து விட்டனர். அதோடு அந்த குடும்பத்தின் மகிழ்ச்சி – எதிர்கால வாழ்க்கை எல்லாவற்றையுமே சாகடித்து விட்டனர்.

தொழிலதிபர் வழக்கில் இருந்து மீண்டு விடுவார். ஆனால் அந்த குடும்பம் துயரத்தில் இருந்து மீளுமா?

இதே போல் போதையில் வாகனம் ஓட்டுவதும், விபத்துகள் நிகழ்வதும் அதிகரித்து வருகிறது. அவர்கள் உயிரை இழப்பது மட்டுமல்ல. அடுத்தவர் உயிரையும் பறித்து விடுகிறார்கள். அடுத்தவர் உயிரை பறிக்க நமக்கென்ன உரிமை இருக்கிறது?

‘குடித்து விட்டு வாகனம் ஓட்டாதே’ என்று வீதி வீதியாக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன பயன்?

பாமரன் குடித்து விட்டு தள்ளாடினால் அறிவில்லாமல் குடித்து சீரழிகிறான் என்கிறோம். படித்தவர்களும், பணக்காரர்களும் அறிவிருந்தும் இப்படி அறிவீனமாக நடந்து கொள்வதை என்னவென்பது?

மது பழக்கம் என்பது எல்லா தரப்பு மக்களிடையேயும் பரவி இருக்கிறது. குடிப்பது தப்பு என்று சொல்லவும் முடியாது. சொன்னால் ஏற்கவும் மாட்டார்கள். குடித்தாலும் நிதானம் இழந்து விடாதீர்கள் என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது.

வசதி இல்லாதவன் குடித்து விட்டு வீதியில் வீழ்ந்து கிடக்கிறான். வசதி படைத்தவன் குடித்துவிட்டு கண்மூடித்தனமாக அடுத்தவன் உயிருக்கு உலை வைக்கிறான். குடிப்பது, கும்மாளம் போடுவது அவரவர் உரிமை. அதை யாரும் தடுக்கப்போவதில்லை. குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவது, வெளியே நடமாடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அது அவர்களுக்கும் நல்லது. அவர்களால் அடுத்தவர்களுக்கும் தொல்லை நேராது.

வெளிஉலக தொடர்பு இன்றி இந்தோனேசிய தீவுகளில் வாழும் அபூர்வ ஆதிவாசிகள்

Logo

ஜகர்த்தா, பிப். 6–

வெளி உலக தொடர்பு இன்றி இந்தோனேசிய தீவுகளில் அபூர்வ ஆதிவாசிகள் வாழ்கின்றனர்.

இந்தோனேசியா பல தீவுகளை உள்ளடக்கிய நாடு. அங்குள்ள தீவுகளில் பலவித கலாசாரங்களுடன் கூடிய ஆதிவாசிகள், பூர்வக்குடி மக்கள் வாழ்கின்றனர்.

அவர்களில் சுமத்ரா தீவில் மென்டாவை என அழைக்கப்படும் அபூர்வ ஆதிவாசிகள் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொள்கின்றனர். மேலும் நாடோடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அதில் விசேஷம் என்னவென்றால் நாடோடிகளாக வாழும் இவர்கள் தாங்கள் குடியிருக்கும் இடங்களில் வேட்டையாடும் விலங்குகளின் மண்டை ஓடு மூலம் வீடு அமைத்து வாழ்கின்றனர்.

இவர்கள் வெளிஉலக தொடர்பின்றி ஒதுங்கியே வாழ்க்கை நடத்துகின்றனர். செடி, கொடி உள்ளிட்ட அனைத்துக்கும் ஆத்மா இருப்பதாக நம்புகின்றனர். மெண்டாவை இன மக்கள் சுமார் 64 ஆயிரம் பேர் உள்ளனர்.

இவர்கள் குறித்து மலேசியாவில் கெலடன் பகுதியை சேர்ந்த முகமது சாலேபின் டோலாஹ் என்பவர் வீடியோவை வெளியிட்டார். புகைப்பட துறையில் ஆர்வமுடைய இவர் இந்தோனேசியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச் சூழலை போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

Wednesday, February 3, 2016

சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமர் -லட்சுமணர் மீது வழக்கு! தள்ளுபடி செய்த பீகார் கோர்ட்

பாட்னா: கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் சீதையை காட்டுக்கு அனுப்பிய அண்ணன் தம்பிகளான ராமர்-லட்சுமணர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பீகாரில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை சீதாமாரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துள்ளது

 நீதிமன்றங்களில் எத்தனையோ வழக்குகள் விசாரணைக்கு வருவதுண்டு. ஆனால் ராமாயணம், மகாபாரதக் கதையை முன்வைத்து வழக்குப் போடுவது அதிகரித்து வருகிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார்சிங் என்பவர், சீத்தாமரி மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்குதான் தற்போது வட மாநிலத்தில் அனலை கிளப்பி விட்டிருக்கிறது. இதிகாச காவியமான ராமாயணத்தில் ராமரின் மனைவியான சீதா முன்னர் ஜனகபுரியை ஆட்சி செய்த ஜனக மகாராஜாவின் மகளாக மிதிலை நகரில் பிறந்ததாக காணப்படுகிறது. அந்த பழங்கால மிதிலை நகர் தற்போதையை பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீதையின் நினைவாகவே இந்த மாவட்டத்துக்கு பிற்காலத்தில் இந்த பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. சீதையின் கணவர் ராமர். ராமரின் தம்பி லட்சுமணர். சிற்றன்னை பேச்சை மீறாமல் 14 ஆண்டுகாலம் ராமர், தன் மனைவி சீதையுடன் வனவாசம் போகிறார். வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ராமர், அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், இராவணனால் சீதை கடத்திச் செல்லப்பட்டது தொடர்பாக அவதூறு பேசியதை அறிந்த இராமர் சீதையைக் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கர்ப்பிணிப் பெண். வனத்தில் சீதை வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வந்தாள். அங்கு சீதைக்கு லவன், குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர். இதை கண்டித்துதான் சீதையை காட்டுக்கு ராமரும், அவர் தம்பி லட்சுமணரும் கொண்டு போனது தவறென்றும், அண்ணன் தம்பியர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் சந்தன்குமார் வழக்குப் போட்டுள்ளார். சீத்தாமரி மாவட்ட தலைமை நீதிபதி ராஷ்பிஹாரி முன்பு, சந்தன்குமார் சிங்கின் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராஷ்பிஹாரி, " வாதி சந்தன்குமார் சிங் தாக்கல் செய்துள்ள மனுவானது , உண்மைக்கு மாறான பல சம்பவங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.

 இது ஒரு பக்கம் இருக்க, ''சந்தன்குமார் சிங்கின் இந்த செயல் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்துகிறது, மத நம்பிக்கையை காயப்படுத்துகிறது... ' என்று மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் இதுவரையில் நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். சந்தன்குமார்சிங்கின் உறவினர்கள் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசும்போது, வழக்கைத் தொடுத்த சந்தன்குமார்சிங், இந்த வழக்கை மேல்முறையீடுக்கு கொண்டு போகும் மனநிலையில்தான் அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால், இந்த வழக்கை கீழ் கோர்ட்டுக்கு கொண்டு போனதற்கே, சந்தன்குமார்சிங்கிற்கு எதிர்ப்புகள் கிளம்பி விட்டது. நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர் மிரட்டலுக்கு உள்ளானார். கோர்ட்டுக்கே பாதுகாப்புடன்தான் போய் வரவேண்டிய சூழ்நிலை உருவானது. இப்போது வீட்டுக்கும் பாதுகாப்பு கேட்டு போலீஸ் எஸ்.பி.யிடம் சந்தன்குமார் மனு கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/court-finds-case-against-lord-ram-laxman-beyond-logic-sq-245920.html

ஆகாய ஆக்கிரமிப்புகள்!


Dinamani


By ஆர்.எஸ். நாராயணன்

First Published : 03 February 2016 01:43 AM IST


ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா } அலங்காரத் தாரகையோடு ஆனந்தம் காணுதே...'

-என்று கண்டசாலா அன்று பாடினார். இன்று அந்த இனிமையான பாடல் நம் மனதில் நிற்கிறது. ஆனால், நாளுக்கு நாள் ஆகாய வீதியும் குப்பையாகி வருகிறது. அழகான வெண்ணிலாவைச் சுற்றி நிற்பது மேகமா? மாசுகளா?

புவியில் கட்டப்பட்ட தொழிற்சாலைகளினாலும் கார், லாரி போன்ற வாகனங்களாலும் எழுந்த கார்பன் புகைதான் கார்மேகங்களாகத் தெரிகின்றன. கார்பன் புகைகள் கார்மேக நீரை உறிஞ்சி விடுவதால் பயந்து ஓடும் கார்மேகங்கள் ஒரே இடத்தில் கூடி ஒரே ஒரு ஊரில் மழை பெய்துவிட்டு மறைவதால் மற்ற ஊர்கள் வறட்சியில் வாடுகின்றன.

பஞ்ச பூத சக்திகளில் நீருக்கு விலை உண்டு. காற்றுக்கு (எஅந) விலை உண்டு. மண்ணுக்கு நிறையவே விலை உண்டு. தீக்கும் (எரிபொருள்) விலை உள்ளது. ஐந்தாவது பூதமாகிய வெளிக்கு விலை இல்லை.

"வெளி' என்பது ஆகாயம். 100 அடி உயரமுள்ள மரமானாலும் 1 அடி உயரமுள்ள செடியானாலும் மண்ணில் வேர் பதித்தாலும் அவற்றின் தலையும் உடலும் வெளியில்தான் உள்ளன. வீடுகளும், கட்டடங்களும், ஆலைகளும், சாலைகளும், அணைகளும், கால்வாய்களும் வெளியில் உள்ளன. மனிதன் மண்ணில் கால் பதித்து நின்றாலும் நடந்தாலும் அது வெளிதானே. நாம் வெளியை நம்பி வாழும் உண்மையை நமக்குப் புரிய வைக்கவே திருச்சிற்றம்பலத்தில் கூத்தபிரானாகிய நடராஜன் கனகசபையில் ஆனந்த நடனம் ஆடுகிறான்.

"வெளி' உருவமற்று இருப்பதால் அதை "சிதம்பர ரகசியம்' என்று ஆன்றோர் மொழிந்தனர். பஞ்சபூத சக்திகளை தெய்வங்களாகப் போற்றி வளர்த்த காரணமே இயற்கையின் பாதுகாப்புக்குத்தான். மெத்தப் படித்தவர்களுக்கு இந்தப் பொது அறிவு புரியவில்லை.

மண்ணைக் காக்க காஞ்சியில் ஏகாம்பரநாதருக்கு ஒரு கோயில். காற்றைக் காக்க காளஹஸ்தியில் காளத்திநாதருக்கு ஒரு கோயில். நீரைக் காக்க திருவானைக்காவலில் ஜலகண்டேஸ்வரருக்கு ஒரு கோயில். தீயைக் காக்க திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு ஒரு கோயில். விண்வெளி காக்க சிதம்பரத்தில் கூத்தபிரானுக்கு ஒரு கோயில்.

நாமோ மண்ணை மாசாக்கினோம். காற்றை மாசாக்கினோம். நீரை மாசாக்கினோம். வெளியை அதிகபட்சம் மாசாக்கி வருகிறோம். ÷தீ மட்டும் எஞ்சியுள்ளது. தீ மட்டும் மிஞ்சினால் உலகே சாம்பலாகும். புவிவெப்பமாகும் பொருள் தீ தானே. இதைக் கருத்தில் கொண்டுதான் இஞட - 21 என்று சுருக்கமாகக் கூறப்பட்ட 21-ஆவது புவி உச்சி மகாநாடு பாரீஸில் கூடியது.

புவிவெப்பமாதலின் விளைவால் சென்னை மாநகரில் ஏற்பட்ட பேரிடர் பேய் மழையாகக் கொட்டித் தீர்த்துக் கழிவுநீர் ஓடிய கூவமும் அடையாறும் கரை புரண்டோடி சுத்தமானாலும், நிகழ்ந்த சோகம் மறக்க முடியாதது. வெள்ளம் சூழ்ந்து தத்தளித்த சென்னை, உலகச் செய்தியாகி 21-ஆவது பாரீஸ் மகாநாட்டைத் தலைமையேற்று நடத்திய பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர் லாரன்ஸ் ஃபேபியஸ் புவிவெப்பமானதால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுக்குச் சென்னை வெள்ளத்தை உதாரணம் காட்டி அறிவித்தது நினைவிருக்கலாம்.

பூமி வெப்பமாவதால் தட்பவெப்பம் தடுமாறுவதைத் தவிர்க்கும் முயற்சியில்தான் இஞட - 21 - புவி உச்சிமகாநாடு 29.11.2015-இல் தொடங்கி 12.12.2015 வரை 14 நாள்கள் தொடர்ந்து பாரீஸில் நிகழ்ந்தது. இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் 30.11.2015 அன்று உரையாற்றினார்கள்.

ஒவ்வொரு நாடும் வளர்ச்சியைக் காரணம் காட்டிப் புகை விட்டுப் புகை விட்டு ஆகாயத்தை ஆக்கிரமித்தால், 2050-ஐ நாம் நெருங்கும்போது எரிமலை, பூகம்பம், அளவு மீறிய வறட்சி, வெள்ளிப் பனிமலை உருகுதல், ஊழிக்காற்று, ஊழிவெள்ளம், கடல் மட்டம் உயர்தல், சுனாமி போன்ற பேரிடர்கள் மிக அதிகமாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உலகத் தலைவர்கள் இதைக் கருத்தில் கொண்டு புவிவெப்பமாகும் இன்றைய நிலை 2 டிகிரி சென்டிகிரேடு என்பதை 1.5 டிகிரி சென்டிகிரேடு நிலைக்குக் குறைக்க வேண்டுமென்பதில் ஏகமனது முடிவை எடுத்துள்ளனர். இதன் காரணமாக பாரீஸ் புவி மகாநாட்டை "வரலாற்றுச் சிறப்புடையது' என்று ஒவ்வொரு தலைவரும் கூறியதை வரவேற்போம். அதேசமயம் இது நிகழக் கூடியதா?

வடக்கு நாடுகளும் வளரும் நாடுகளும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி ஆகாய ஆக்கிரமிப்புகளை நிறுத்தப் போவதாகத் தோன்றவில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாடு நிறைய உண்டு. ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லாமல் உணர்ச்சி நிரம்பிய பேச்சுக்களால் ஆகப் போவது என்ன? புவிவெப்பமாவதைத் தவிர்க்கும் நடவடிக்கைகளில் தன்னை விட்டால் கிடையாது என்று மார் தட்டும் அமெரிக்கா எந்த அளவில் சாதித்தது?

"நாங்கள் இதுநாள் வரை வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்து மரபுசாரா எரிசக்திப் பயனை உகந்த அளவுக்கு வளர்த்தோம். இனி வருங்காலத்தில் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள்தாம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி ஆகாய ஆக்கிரமிப்பைக் குறைக்க வேண்டும்...' என்று ஒபாமா கூறுகிறார். பார்க்கப் போனால் அமெரிக்கா அப்படி எதுவும் சாதித்து விடவில்லை.

2030-ஐ நெருங்கும்போது அமெரிக்காவால் வெளியிடப்படும் கார்பன் புகை அளவு 155 கோடி டன்களாம். இன்றைய நிலவரப்படி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கார்பன் புகை அளவில் 155 கோடி டன்கள் என்பது 75 சதவீதம். ஆகாய ஆக்கிரமிப்பில் முக்கால் பங்கை ஒரே நாடு முழுங்கினால் மற்ற நாடுகள் எங்கே செல்லும்?

2030-இல் அமெரிக்காவின் நிலக்கரி உற்பத்தி 60 கோடி டன்கள் ஆகுமாம். இன்றைய இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியின் அளவும் இதுவே. 2030-இல் அமெரிக்காவில் 60 சதவீத மின்சார உற்பத்தி நிலக்கரி அனல் மின் நிலையங்களிலிருந்து பெறப்படும். 3 சதவீதம் மட்டுமே சூரிய எரிசக்தி.

பாரீஸ் மகாநாட்டில் அமெரிக்கா பேசியதெல்லாம் வாய்ச்சொல் வீச்சுக்களே. 2035-க்குள் உலக நாடுகளின் நிலக்கரிப் பயனை - அதாவது ஊர்ள்ள்ண்ப் ஊன்ங்ப் பயன்பாட்டை பூஜ்ஜியமாக்கினால்தான் புவிவெப்பமாகும் அளவை 1.5 டிகிரி சென்டிகிரேடு என்ற இலக்கை சாதிக்க முடியும். இவ்வாறே, பெட்ரோல் - டீசல் ஆகியவற்றின் மாற்றாக எத்தனால் - உண்ணாத் தாவர எண்ணெய்ப் பயனீடும் உயர வேண்டும்.

இந்தியாவின் சார்பில் பேசிய பிரதமர் மோடியின் உரையில் நல்ல பொருள் உண்டு. மரபுசாரா எரிசக்திப் பயனில் இந்திய எழுச்சி சிறப்புமிக்கது என்றும் 2022-இல் இந்திய மரபுசாரா எரிபொருள் உற்பத்தி 175 ஜிகா வாட் (எ.ர.) அளவில் உயரும் என்றும் இதில் 50 சதவீதம் சூரியசக்தி என்றும் குறிப்பிட்டார். வடக்கு நாடுகள் உதவினால் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் மேலும் வளர்ச்சி பெறலாம் என்று கூறிய அவர், ஆகாய ஆக்கிரமிப்பில் அமெரிக்க அக்கிரமங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

ஆகாய ஆக்கிரமிப்பில் நிலவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்ட அவர், வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது வடக்கு நாடுகளின் ஆகாய ஆக்கிரமிப்புகள் மிக அதிகம் என்றும், ஆகவே, வடக்கு நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் கார்பன் புகை வெளியேற்றத்தில் ஒரே அளவுகோல் பொருந்தாது என்றும், அமெரிக்காவும், வளர்ந்த வடக்கு நாடுகளும் ஆகாயத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்றார் காட்டமாக.

இந்நிலையில், வளரும் நாடுகளுக்கு விண்ணில் நியாயமான இடம் தரவேண்டும் என்றும், வளர்ச்சியை அலகாக வைத்து எந்த நாடு, எந்த அளவில் கார்பன் புகையை வெளியேற்ற வேண்டுமென்று வித்தியாச அடிப்படையில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்பதே தலையான பிரச்னை.

வெப்பநிலையை 2 டிகிரி சென்டிகிரேடிலிருந்து 1.5 டிகிரி சென்டிகிரேடாகக் குறைக்க வேண்டுமென்பதில் ஒருமித்த கருத்து உண்டு. இது பொதுவான திட்டம். இதை நாம் ஏற்றே தீர வேண்டும். ஆனால், ஆகாய ஆக்கிரமிப்பில் சமத்துவம் என்பது வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு வழிவிட்டு வேற்றுமைப்பட்ட அளவுகோலை உருவாக்குவதே நியாயம்.

ஆகாய ஆக்கிரமிப்பை நிறுத்தும் நிலை பொதுவானது. அதற்குரிய தீர்வு முற்றிலும் மரபுசாரா எரிசக்திப் பயனைச் சார்ந்துள்ளது. மரபுசாரா எரிசக்தியின் தொழில்நுட்பம் வடக்கு நாடுகளின் பிடிப்பில் உள்ளது.

வளரும் நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் மரபுசாரா எரிசக்தி நுட்பங்களை விற்று லாபம் பார்ப்பதே அவர்களின் லட்சியம். இவற்றை இறக்குமதி செய்து வளர வேண்டிய கட்டாயம் வளரும் நாடுகளுக்கு உள்ளதால் செலவு கூடுகிறது. மரபுசாரா எரிசக்தியை ஏற்கும் ஆர்வம் தணிந்து விடுகிறது.

வடக்கு நாடுகள் மரபுசாரா எரிசக்தி நுட்பங்களை உதவி அடிப்படையில் ஏழை நாடுகளுக்கு வழங்க முன்வர வேண்டும். அப்போதுதான் ஆகாய ஆக்கிரமிப்பில் சமத்துவம் நிலவும்.

இந்தியாவின் அணுகுமுறையை ஏற்கும் வடக்கு நாட்டுத் தலைவர்கள், "உறுப்பு நாடுகள் ஏற்கும் வண்ணம் ஆகாயத்தில் எவ்வளவு இடம் வேண்டுமென்று கூட்டாக நிர்ணயித்துப் பங்கீட்டு இலக்குகளை நிர்ணயம் செய்துவிட்டுப் பேச்சுக்கு வாருங்கள்' என்று சவால் விடுகின்றனர். உறுப்பு நாடுகளிடையே ஒற்றுமை ஏற்பட்டால்தான் "வேற்றுமைப்பட்ட அளவுகோல்' சாத்தியம். அதுவரை வடக்கு நாடுகளே ஆகாயத்தை ஆக்கிரமிக்கும்.

உலகை வாழ வைக்க ஆண்டுதோறும் உலகத் தலைநகரங்களில் புவி மகாநாட்டை ஐக்கிய நாடுகள் சபை கூட்டுகிறது. முதல் புவி உச்சி மகாநாடு 1994-இல் பிரேசிலில் ரியோடி ஜெனிரோவில் கூடியது. அங்குதான் முதல் முறையாகப் புவி வெப்பமாதலை நிறுத்தும் யோசனையை முன்வைத்து ஒவ்வொரு நாடும் அதற்கான இலக்குகளை நிர்ணயித்து, மறு ஆண்டு கூடும் மகாநாட்டில் விவாதிக்கப் பணித்தது.

அதன் பின், 19 உலக மகாநாடுகள் கூட்டப்பட்டன. உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி வாய்கிழியப் பேசுவதில் ஒரு குறையும் இல்லை. இன்றுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. பாரீஸில் 2015 இறுதியில் இஞட 21 கூடியது. கி.பி. 2050 வருவதற்குள் இன்னும் 30 மகாநாடுகள் உலகத் தலைநகரங்களில் கூடப் போகின்றன. "இப்போது என்ன அவசரம் மெதுவாகப் பார்த்துக் கொள்ளலாம்...' என்று ஒவ்வொரு நாடும் நினைத்துவிட்டால் 1.5 டிகிரி சென்டிகிரேடு என்ற இலக்கை எட்ட முடியாது.

பேச்சுவார்த்தைகள் மட்டுமே மிச்சம் என்று மெத்தனமாயிருந்தால் "அண்ணாமலைக்கு அரோகரா'! பஞ்ச பூதங்களில் தீ மட்டும் மிஞ்சும். பூமியை யாராலும் காப்பாற்ற முடியாது.

பெற்றோர் கவனத்திற்கு...

Dinamani


By சமதர்மன்

First Published : 02 February 2016 01:22 AM IST


பெற்றெடுத்த குழந்தைகளை சான்றோராக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் நியாயமான ஆசையாகவும் கனவாகவும் இருக்கிறது. ஆனால், எத்தனை பெற்றோரின் கனவு நனவாகிறது? வெகுசில பெற்றோரின் குழந்தைகளே ஊர் மெச்சும் சான்றோராக உருவாகின்றனர்.

சான்றாண்மை என்பது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமன்று, நல்லறிவு, ஒழுக்கம் மற்றும் இயலாதவர்களுக்கு உதவுதல் போன்ற பல நற்குணங்களின் கலவையே சான்றாண்மையாகும்.

ஆனால், இன்றைய பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகள் சான்றோராக உருவாவதற்கு ஊரிலேயே அதிக கட்டணம் வசூல் செய்யும் ஒரு தனியார் பள்ளி, குழந்தைகள் பொழுதுபோக்கி விளையாடி மகிழ ஒரு தொலைக்காட்சி, இணைய வசதியுடன் கூடிய ஒரு கணிப்பொறி மற்றும் ருசிப்பதற்கு கொழுப்புப் பண்டங்கள், புத்தம் புதிய ஆடை வகைகள் போன்றவையே போதுமென எண்ணுகின்றனர்.

இவைகளை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டாலே தங்களது குழந்தைப் பராமரிப்புப் பணி முடிந்துவிட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். குழந்தைகளுடன் அமர்ந்து ஆக்கப்பூர்வமாக இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலானோர் உரையாடுவதில்லை.

நேரமின்மையைக் காரணமாக சொல்லும் இவர்கள் வீடுகளில் தொலைக்காட்சி, செல்லிடப்பேசி போன்றவற்றின் காலவரம்பற்ற பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டாலே அனைத்திற்குமே நேரம் கிடைக்குமே?

ஒரே அறையில் இருந்தாலும் அம்மா தொலைக்காட்சியிலும், அப்பா கட்செவிஅஞ்சலிலும், பிள்ளைகள் கணினியின் முன்பும் இருந்து பொழுதுபோக்குகின்றனர். மென்பொருள் உலகிலிருந்து இவர்கள் மீண்டு வருவது எப்போதோ?

இன்றைய சிறுவர்கள் செல்லிடப்பேசியையே விளையாட்டு மைதானமாக ஆக்கிக் கொண்டதன் விளைவாக இளமையிலேயே உடற்பருமன், கண்பார்வைக் குறைபாடு, சுறுசுறுப்பை இழத்தல் போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

ரீடிங் ரூம் என்ற பெயரில் ஒரு தனி அறையில் மாணவர்களை அடைத்துவிட்டு பக்கத்து அறையில் பெற்றோர் தொலைக்காட்சிளை பலத்த ஒலியளவுடன் கண்டுகளிக்கும் வழக்கம் இன்று பெரும்பாலான குடும்பங்களில் உள்ளது. இது பிள்ளைகளுக்கு சலிப்பு உணர்வையும், கவனச் சிதறலையுமே ஏற்படுத்தும் என்பதைப் பெற்றோர் உணர்வதில்லை.

அன்றோ ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஐந்து பிள்ளைகள் இருந்தனர். ஆனால், இன்று ஒரு குடும்பத்தில் ஒன்றிரண்டு குழந்தைகளே இருப்பதால் குழந்தைகளின் தேவைகள் பெற்றோரால் எளிதில் பூர்த்தி செய்யப்பட்டு கூடுதல் செல்லத்துடன் வளர்க்கப்படுகின்றனர்.

இது ஒருபுறம் நல்லதுபோல தோன்றினாலும், மறுபுறம் அனைத்துமே எளிதில் கிடைப்பதால் பிள்ளைகளுக்குப் பொருள்களின் அருமை பெருமை தெரிவதில்லை. மேலும், அவர்களுக்கு பணத்தின் மதிப்பு, விலைவாசி ஏற்றம் பற்றியும் புரிவ

தில்லை.

மொத்தத்தில் பெற்றோரின் கஷ்டங்கள் பிள்ளைகளால் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒரு கிரிக்கெட் மட்டையை அப்பாவிடமிருந்து பெற மூன்று வருடம் காத்திருந்த காலம் முன்பிருந்தது. இன்றோ காலையில் கேட்கப்பட்ட பொருள் மாலையிலேயே பெற்றோரால் வாங்கித் தரப்படுகிறது. அதிகமாக செல்லம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதன் விளைவாக பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்த காலம்போய், பெற்றோர் பிள்ளைகளுக்குக் கீழ்ப்படியும் காலம் உருவாகிப்போனது.

இன்றைய மாணவர்கள் பலர் அவர்களது அப்பா - அம்மா அழைத்தால் கூட திரும்பிப் பார்க்காமல் தொலைக்காட்சியிலோ, அல்லது செல்லிடப் பேசியிலோ மூழ்கிக்கிடப்பதைக் காண முடிகிறது.

இத்தகைய கீழ்ப்படியாத பிள்ளைகள், நாளை அவர்தம் சொந்த தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாமல் போவதுடன், தங்கள் பெற்றோருக்கும் பாரமாக இருக்க நேரிடும். ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்பது நம் முன்னோர் அவர்தம் வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாக வகுத்த பழமொழி.

பள்ளிகளில் நியாயமான காரணங்களுக்குக் கூட தமது செல்லப்பிள்ளைகளை ஆசிரியர்கள் கண்டிப்பதை விரும்பாத பெற்றோர், வீட்டிலாவது அவர்களை கண்டிப்புடன் வளர்க்க வேண்டியது மிக அவசியம்.

பிள்ளைகளை சான்றோராக ஆக்க பெற்றோர் தங்களது வாழ்க்கை அனுபவம், கடந்து வந்த பாதையின் கஷ்ட, நஷ்டங்கள் போன்றவற்றை வாழ்க்கைப் பாடமாக அவர்களுக்கு உணவுபோல ஊட்ட வேண்டும்.

நம் முன்னோர்கள் வகுத்த வாழ்வியல் நெறிகள், நமது பாரம்பரியம், வேற்றுமையில் ஒற்றுமைகாணும் நமது நாட்டின் தனித்தன்மை, போன்ற பல பொதுவான விஷயங்களை சிறுவர்களுக்குப் புகட்ட வேண்டியது பெற்றோரின் கடமை.

இதனால் நாளைய சமுதாயத்தை ஜாதி, மத, மொழி, இன பேதமற்ற சிறந்த மனிதாபிமானம் கொண்டதாக உருவாக்க முடியும்.

உலகின் சிறந்த நூல்களுள் ஒன்றாக கருதப்படும் திருக்குறள், ஏனைய பிற நீதி நூல்கள், செய்தித்தாளில் இடம்பெறும் அறிவியல், பொதுஅறிவு சார்ந்த உலகளாவிய நிகழ்வுகள் போன்றவற்றை வாசிக்கும் பழக்கத்தை சிறுவர்களுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். லட்சோப லட்சம்பேரை அறிவு ஜீவிகளாக மாற்றிய ஒரு பெருங்கருவி நல்ல புத்தகங்களே அன்றி வேறென்ன?

பாட்டி சொல்லிய கற்பனைக் கதைகளும், தாத்தா சொல்லிய அனுபவக் கதைகளும் அன்றைய சிறுவர்களுக்குக் கிடைத்தன. அதன் மூலம் அவர்கள் வாழ்வியல் நெறியை கற்றுக் கொண்டனர். ஆனால், இன்றைய தனிக்குடித்தன எந்திரமயமான வாழ்வில் இதற்கெல்லாம் இடமில்லாமல் போனதே!

தொலைக்காட்சி இணையதளம், திரைப்படம், செல்லிடப்பேசி போன்றவை மட்டுமே வாழ்க்கை என்ற ஒரு மாயை எப்படியோ உருவாகிவிட்டது. இந்நிலைமாற, பெற்றோர் முதலில் இவைகளின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை எனும் பழமொழிக்கேற்ப பெற்றோர் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அனைவருமே உணர வேண்டிய நேரம் இது.

Tuesday, February 2, 2016

Case Filed Against Lord Rama for Throwing Wife Sita Out of House By Online Desk Published: 01st February 2016 06:40 PM Last Updated: 01st February 2016 06:43 PM

File/EPS
Bizarre cases in the country's courts are aplenty and here is one which can figure amongst the weirdest.
A practising lawyer in Bihar has filed a case against Rama for sending his wife Sita out of his house.
Do the names ring a bell...?
Yes, Ramayana.
Lawyer Thakur Chandan Kumar Singh has filed the case against Lord Rama in a court in Sitamarhi in North Bihar and the CJM has agreed to take up the matter for hearing.
According to a report by Hindustan Times, the complainant has alleged that Lord Rama had banished Devi Sita to life of exile in the forest without any suitable justification after just listening to accusations by a washerman.
Chandan has alleged that Rama did not think about how a woman could live alone in a forest among wild animals and had banished Sita even after she had sworn an oath in front of the sacred fire.
Chandan has however cleared that his intention is not to hurt the religious sentiments of anybody but to get justice for Sita. He says that until the women from Treta Yug are not given justice, women in kalyug can't expect a fair treatment.

ஹெச்எம்டிக்கு நேரம் சரியில்லை! .... பெ. தேவராஜ்

THE TAMIL HINDU

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப புரட்சியின் விளைவில் உருவான உபகரணங்கள் இல்லாத காலத்தில் நாட்டுக்கே நேரத்தை கணித்த கடிகார உற்பத்தி நிறுவனத்துக்கு இன்று நேரம் சரியில்லை. ஆம் 1960 களில் தொடங்கப் பட்ட ஹெச்எம்டி நிறுவனம் மூடப்பட்டு விட்டது. இந்த நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டத்தை வழங்கவுள்ளது.

ஹிந்துஸ்தான் மெசின்ஸ் டூல்ஸ் (ஹெச்எம்டி) என்ற உற்பத்தி நிறு வனம் 1953-ம் ஆண்டு இந்திய அரசாங் கத்துடன் இணைக்கப்பட்டது. கடிகாரம், டிராக்டர்ஸ், அச்சு இயந்திரங்களை தயா ரித்து வந்தது. 1961ம் ஆண்டு ஹெச்எம்டி நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்த சிட்டிசன் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டு பெங்களூருவில் உள்ள ஆலை யில் முதலாவது கைக் கடிகாரத்தை தயாரித்தது. அதை சந்தையிட்ட பெருமை நாட்டின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவைச் சாரும்.

ஹெச்எம்டி பைலட், ஹெச்எம்டி ஜாலக், பார்வையற்றவர்களுக்காக ஹெச்எம்டி பிரையிலி என விதவித மான மாடல்களில் வாட்ச் தயாரிக்கப் பட்டன. 1976-ம் ஆண்டில் 10 லட்சம் கடிகாரங்களை இந்நிறுவனத்தின் மூன்று ஆலைகளும் உற்பத்தி செய்து சாதனை புரிந்தன.

இப்படி அதிகமான விற்பனை கண்டு வந்த ஹெச்எம்டி தற்போது மூடப்படுவதற்கு மூன்று காரணங்களை சொல்லுகிறார்கள். ஒன்று தொழில் நுட்பத்தை மேம்படுத்தி கொள்ளாதது, இரண்டு டைட்டன் நிறுவனத்தின் வருகை, மூன்று உறுதியான முடிவு களை எடுக்காமல் இருந்தது.

1970க்கு பிறகு டிஜிட்டல் குவார்ட்ஸ் வாட்சுகள் உலக சந்தைக்கு வரத் தொடங்கின. 2 டாலர் மதிப்புள்ள கடி காரம் 1,000 டாலர் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சுகளை விடத் துல்லியமாக நேரம் காட்டியது. ஹெச்எம்டி நிறுவன மும் குவார்ட்ஸ் வாட்சுகளை அறிமுகப் படுத்தின. ஆனால் ஹெச்எம்டி நிறுவனம் மிகக் குறைந்த மாடல் களையே தயாரித்தன.

டைட்டன் நிறுவனத்தின் வருகை

டாடா நிறுவனம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தோடு இணைந்து 1984-ம் ஆண்டு முதல் கைக்கடிகார தயாரிப் பில் ஈடுபட்டது. உலகத்தரம் வாய்ந்த இன்ஜினீயர்களை இந்த நிறுவனம் பணியில் அமர்த்தியது. அதுமட்டு மல்லாமல் அனலாக் மற்றும் டிஜிட்டல் குவார்ட்ஸ் வாட்சுகள் என இரண் டுக்குமே முன்னுரிமை கொடுத்து புதுப் புது மாடல்களில் வாட்சுகளைத் தயாரித்து ஹெச்எம்டிக்கு கடும் போட்டி யாக இருந்து வந்தது.

ஹெச்எம்டி நஷ்டத்தில் இயங்கி வந்ததற்கு டைட்டன் வருகை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. உறுதியான முடிவுகளை எடுக்க தவறியதும் ஒரு காரணம். வாட்ச் தயாரிப்புகளில் மக்களின் ரசனைக்கு ஏற்ப புதுப்புது தொழில்நுட்பத்தில் வாட்சுகளைத் தயாரிக்க வேண்டும். அதற்கு உறுதியான தலைமை தேவை. முடிவுகளும் வேகமாக எடுக்க வேண் டும். அவ்வாறு செய்யாததும் ஹெச்எம்டி நிறுவனத்தின் நஷ்டத்திற்கு காரணம் என்கிறார்கள். மேலும் உற்பத்தி ஆலை களிலும் தொழில்நுட்ப ரீதியாக முன் னேற்றம் செய்யவில்லை.

மேலும் அதிகமான ஊழியர்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன் படுத்துவதில்லை. நிறைய ஊழியர் களுக்கு முறையான பயிற்சி வழங் காததும் நஷ்டத்திற்கு காரணம்.

ஹெச்எம்டியை மூட வேண்டாம் என்றும் போர்க்கொடிகள் உயர்ந்துள் ளன. அங்கு பணியில் இருக்கும் ஊழி யர்கள், எங்களுக்கு இன்னும் சர்வீஸ் இருக்கிறது ஏன் நாங்கள் விருப்ப ஓய்வு கொடுக்கவேண்டும் என்று கேட்கிறார்கள். பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை விட ஹெச்எம்டி குறைவான நஷ்டத்தில் (வருடத்திறகு 233 கோடி நஷ்டம்) தான் இயங்கி வருகிறது. அதனால் இதை மூடக்கூடாது என்று கூறுகின்றனர்.

மிகப் பெரிய வளர்ச்சியை கண்டி ருக்கும் சிங்கப்பூரிலும் பொதுத்துறை நிறுவனங்கள் அதிகம் உள்ளன. ஆனால் அவை யாவும் நஷ்டத்தில் இயங்கு வதில்லை மாறாக அதிக லாபத்தை ஈட்டுகின்றன. இதற்கு காரணம் அரசின் நடவடிக்கைகள் தான். பொதுத்துறை நிறுவனங்களுக்கு என்று பிரத்யேகமாக நிதியை ஒதுக்குவது அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தினந் தோறும் அந்நிறுவனங்களை கண் காணிப்பது, முக்கிய முடிவுகளை உடனடியாக எடுப்பது போன்றவற்றால் அவர்கள் உற்பத்தி திறனை மேம் படுத்துகிறார்கள்.

இந்தியா போன்ற நாடுகள் ஆரம்பத்திலேயே இது போன்ற நடவடிக்கைகளை பின்பற்றியிருக்க வேண்டும். அமைச்சர்களும் அரசு அதி காரிகளும் விழிப்புணர்வோடு இருந்தி ருந்தால் இவ்வளவு நஷ்டம் ஏற்பட்டி ருக்காது. இவ்வளவு ஊழியர்களும் கட்டாய விருப்ப ஓய்வுக்கு தள்ளப் பட்டிருக்கிற நிலைமை ஏற்பட்டிருக்காது. அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மீது வெகு சீக்கிரமான கொள்கை முடிவை எடுக்க வேண்டிய தருணமிது.

devaraj.p@thehindutamil.co.in

விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்



malaimalar

பெங்களூர், பிப். 1–

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த குனிக்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாசம்– சவுபாக்கியம்மா தம்பதி மகள் சவுமியா.

இவருக்கும் ஸ்ரீராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக்கு குனிக்கல் கிராமத்தில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது.

திருமணத்துக்கு முதல் நாள் இரவு திருமண வரவேற்பு விருந்து நடந்தது. மணமகன் ராஜு தனது குடும்பத்தினருடன் மிக தாமதமாக மண்டபத்துக்கு வந்தார்.

அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது அவர்கள் ரசம் கேட்டனர். ஆனால் ரசம் காலியாகி விட்டது என்று பதில் வந்தது.

உடனே மணமகன் குடும்பத்தினர் ஆவேசம் அடைந்தனர். பெண் வீட்டாரிடம் தகராறு செய்தனர். "உங்களுக்காக தனியாக உணவு எடுத்து வைத்திருந்தோம். யாரோ அதனை பரிமாறி காலி செய்து விட்டனர்" என்று எவ்வளவோ கூறி சமரசம் செய்தனர். ஆனால் மணமகன் வீட்டார் சமாதானம் அடையாமல் மண்டபத்தில் அவர்களுக்கு ஒதுக்கிய அறைக்கு சென்றனர்.

மறுநாள் அதிகாலை நலுங்கு நிகழ்ச்சிக்காக மணமகன் குடும்பத்தினரை அழைக்க அவர்களது அறைக்கு சென்றனர். ஆனால் அங்கு மணமகன் இல்லை.

தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் இரவோடு இரவாக மண்டபத்தை காலி செய்து விட்டு சென்றது தெரிய வந்தது. இதனால் திருமணம் நின்றது. பெற்றோர்கள் கதறி அழுதனர். மணமகள் சவுமியா தேம்பி தேம்பி அழுதார்.

இதனை கண்ட திருமண விழாவுக்கு வந்த கோவிந்த ராஜ் என்ற வாலிபர் சவுமியாவை நான் திருமணம் செய்வதாக கூறினார். இதற்கு பெரியவர்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர். சவுமியாவும் சம்மதம் தெரிவித்தார்.

இதனால் அதே முகூர்த்தத்தில் சவுமியா கழுத்தில் கோவிந்தராஜ் தாலி கட்டினார்.

திருமணத்துக்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள். ரசம் பரிமாறாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

வெளிப்படையாகட்டும் கல்வி நிர்வாகம்!


THE HINDU TAMIL...கருத்து பேழை

வெளிப்படையாகட்டும் கல்வி நிர்வாகம்!
கல்லூரிகள் இணையதளத்தில் எல்லா விவரங்களையும் வெளியிட வேண்டும்!

தமிழகம் நம்பிவரும் பொய்கள் பல. அவற்றில் முக்கியமானது கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பது. சமீபத்தில் 1,50,000 மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 80%க்கும் மேல் எந்த வேலைக்கும் தகுதியற்றவர்கள் என்று தெரியவருகிறது. அறிக்கையை முழுவதுமாகப் படித்தால் சில உண்மைகள் தெரிகின்றன. மென்பொருள் சேவையைப் பொறுத்த அளவில்தான் சுமார் 20 சதவீதத்தினர் வேலைக்குத் தகுதியானவர். மென்பொருள் உற்பத்திக்கு வந்தால், இது நான்கு சதவீதத்துக்கும் கீழே வருகிறது. அடிப்படைத் தொழில்நுட்பத் துறைகளில் 10 சதவீதத்துக்கும் கீழ். கல்லூரிகள் அதிகமாக இருந்தால் கல்வித்தரமும் உயர்வாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதற்குத் தமிழகமும் ஒரு சான்று.

மருத்துவக் கல்வியின் நிலை என்ன?

தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் கல்வியின் நிலை இது என்றால், மருத்துவக் கல்வி இதைவிட மோசமாக இருக்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அரசு நடத்தும் கல்லூரிகளையும், சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரிகளையும் தவிர, மற்ற கல்லூரிகளில் கல்வியின் தரம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அலோபதி அல்லாத மருத்துவக் கல்லூரிகளில் நிலைமை மிகவும் மோசம். இந்தத் துறையில் பல வருடங்கள் பணி செய்துவரும் ஓர் அறிஞர் சொல்வது இது: “தொழில்நுட்பக் கல்வி இயந்திரங்களைச் சார்ந்திருக்கிறது. மாறாக, மருத்துவக் கல்லூரிக்கு உயிருள்ள மனிதர்கள் அவசியம். உயிரிழந்த உடல்கள் அவசியம். சில சித்த ஆயுர்வேதக் கல்லூரிகளில் பயின்றவர்களின் பெற்றோர்கள் என்னைச் சந்தித்தனர். 10 லட்சம் ரூபாய் கூடுதல் தொகையும் வருடம் இரண்டு லட்சம் ரூபாய் படிப்புக் கட்டணமாகவும் கொடுத்து தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தவர்கள். படித்து வெளிவந்தவர்களில் ஒரு நோயாளியைக்கூட நேரில் பரிசோதித்திராதவர்களே அதிகம் என்கிறார்கள். எல்லா நேராய்வு ஆவணங்களும் பொய்யாகத் தயாரிக்கப்படுகின்றன. நோயாளிகளுக்குத் தேவையான வசதிகள் ஏதும் இந்தக் கல்லூரிகளில் இல்லை என்கிறார்கள்.”

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 643 கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் அரசால் நடத்தப்படும் கல்லூரிகளைத் தவிர, மற்றவற்றில் எத்தனை கல்லூரிகள் காசு பார்ப்பதற்காக மட்டுமே நடத்தப்படுகின்றன என்பது பல்கலைக்கழகத்துக்குத் தெரியும். அரசுக்கு நிச்சயமாகத் தெரியும். கண்களை மூடிக்கொண்டு விட்டால் சிலருக்குப் பல வசதிகள் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தினால், கண்களை மூடிக்கொண்டிருந்தனர். மூன்று மாணவிகளின் - 20 வயதுகூட நிரம்பாத மாணவிகளின் - மரணத்தினால் இன்று இவர்களுக்குக் கண்களைத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

மிகச் சிறிய உலகம்

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற ரோகித் வெமுலாவின் தற்கொலை நாடு தழுவி விவாதிக்கப்படுகிறது. தலித்துகளுக்கு நடக்கும் இழிவு களும் நாடு தழுவியது என்றாலும், இந்தியாவில் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் அவர் பயின்ற பல்கலைக்கழகமும் ஒன்று. அவருக்கு உலகம் முழுவதும் நடந்தவற்றை, நடப்பவற்றைப் பற்றிய புரிதல், தெளிவு இருந்தது. அவரது உலகம் விரிந்தது. மாறாக, தமிழ கத்தில் பலரும் கேள்விப்படாத ஒரு கிராமத்தில், மரணித்த சிறுமிகளின் உலகம் மிகவும் சிறியது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், செங்கற்களை எண்ண வேண்டாம். சிமெண்ட் மூட்டை களை எண்ண வேண்டாம். கழிப்பறைகளைக் கழுவ வேண் டாம். ஒரே அறையில் 30 பேர்களுக்கும் மேலாக தங்கள் இரவுகளைக் கழிக்க வேண்டாம். இவை அனைத்தையும் சிறுமிகள் செய்யத் தயாராக இருந்தார்கள். அவர்கள் பதிலாகக் கேட்டது ஒன்றே ஒன்று - தரமான கல்வி.

நாம் கேள்வி கேட்க வேண்டும்

கல்வியின் துணைகொண்டு தங்களது மிகச் சிறிய உலகத்தில் ஓரளவு பிரச்சினைகள் இன்றி வாழலாம் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் கல்லூரியில் சேர்ந்தார்கள். எல்லா அவமதிப்புகளையும் தாங்கிக்கொண்டார்கள். அரசிடமும் கல்லூரி நிர்வாகத்திடமும் முட்டி மோதி யதில் அந்தச் சிறிய உலகம் அவர்கள் கண் முன்னா லேயே உடைந்து சிதறியபோது, வாழ்க்கையின் மீதிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். என்னைப் பொறுத்தவரையில், சிறிய உலகங்கள் மிகப் பெரிய உலகத்தைவிட முக்கியமானவை. சிறிய உலகங்களை நாம் கவனித்துக்கொண்டால் பெரிய உலகம் தன்னைத் தானே கவனித்துக்கொள்ளும்.

அவர்கள் உலகங்கள்தான் சிறியவை; மரணங்கள் சிறியவையல்ல. அவற்றை விதிவிலக்காகப் பார்ப்பதைவிட அபாயகரமானது ஏதும் இல்லை. இவர்களைப் போல தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் கல்லூரிகள் என்று சொல்லப்படும் நரகக் குழிகளில் உழல்கிறார்கள். இவர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. காப்பாற்றுவது கடினமன்று. நாம் எல்லோரும் சேர்ந்து அரசையும் அரசியல் செய்பவர்களையும் கட்டாயப்படுத்தினால் இது நிச்சயம் நடக்கும்.

செய்ய வேண்டியவை என்ன?

முதலாவதாக, கல்லூரிகள் ஆண்டுக்கு ஒரு முறை யாவது பார்வையிடப்பட வேண்டும். அவை இப்போது நடப்பது போன்று உப்புக்குச் சப்பாணியாக இல்லாமல் மிக விரிவாக நடத்தப்பட வேண்டும். பார்வையிடும் பல்கலைக்கழகமோ, அரசுத் துறையோ பார்வையீடு அறிக்கைகளை முழுமையாக, மாற்றங்கள் ஏதும் இல்லாமல் தங்கள் வலைதளங்களில் அனைவரும் பார்த்தறியும் வண்ணம் வெளியிட வேண்டும்.

இரண்டாவதாக, கல்லூரிகள் தங்களது வலைதளங்களில் கீழ்க்கண்ட தகவல்களை வெளியிட வேண்டும் என்று அரசு ஆணையிட வேண்டும்.

* கல்லூரியில் இருக்கும் வசதிகளைப் பற்றிய தெளிவான முழுத் தகவல்.

* கல்லூரி விடுதிகளில் இருக்கும் அடிப்படை வசதிகள், குறிப்பாக சமையலறை, கழிப்பறை பற்றிய தகவல். விடுதிக்கும் கல்லூரிக்கும் இடையே உள்ள தூரம். விடுதிகளில் இருக்கும் அறைகளின் எண்ணிக்கை. கொடுக்கப்படும் உணவைப் பற்றிய தகவல். மருத்துவ வசதிகளைப் பற்றிய தகவல்.

* அரசிடம் இருந்து பெற்ற அனுமதிகளின் நகல்கள்.

* மாணவர்களின் சான்றிதழ்கள் அவர்களிடம் திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டன என்ற உறுதிமொழி.

* கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணங்களின் அட்டவணை.

* ஆசிரியர்களைப் பற்றிய முழுத் தகவல்.

* கல்லூரியில் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் அவர்களைப் பற்றிய செய்திகள் அடங்கிய தனிப் பக்கங்கள்.

மூன்றாவதாக, நிறுவன ஒதுக்கீட்டில் சேர்ப்பதற்கும் வரைமுறை வேண்டும். உதாரணமாக, நிறுவன ஒதுக்கீட்டு அடிப்படையில் சேரும் மாணவனிடம் ஐந்து லட்சம் ரூபாய் அதிகம் வாங்கினால், ஐந்து லட்சம் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

பங்காரம் எஸ்.வி.எஸ். கல்லூரி சிறுமிகளின் மரணத்துக்கு நாடு இன்று வரை வெடித்தெழவில்லை. காரணம், இது நகர நிகழ்வல்ல. ஏதோ ஓர் ஓரத்தில் நடந்தது. மேலாக, கல்லூரிகளின் பின்புலத்தில் அரசியல் வாதிகள் இருக்கிறார்கள். மீடியா சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். கேள்வி கேட்டால், எதிர்க் கேள்விகள், பதில்கள் சொல்ல முடியாத கேள்விகள் கேட்கப்படும் என்ற அச்சம் அவர்களுக்கு.

இவர்கள்தான் கல்வியை மரணப் படுக்கைக்குக் கொண்டுவந்தவர்கள். கல்வியின் உயிர் காப்பாற்றப்பட வேண்டுமானால், நாம் இவர்களிடம் கூரிய கேள்விகள் கேட்க வேண்டும். தயங்காமல் கேட்க வேண்டும்.

- பி.ஏ. கிருஷ்ணன்,

‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

50 எம்பிபிஎஸ் இடங்களுடன் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் காரைக்கால் கிளை: ஜூலையில் தொடங்க முடிவு

THE HINDU TAMIL


50 எம்பிபிஎஸ் இடங்களுடன் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் காரைக்கால் கிளை: ஜூலையில் தொடங்க முடிவு

புதுச்சேரி பிராந்தியமான காரைக் காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி யின் கிளை வரும் ஜூலை மாதம் முதல் 50 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங்கப்படுகிறது.


ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கடந்த 1823-ம் ஆண்டு பிரெஞ்சு அரசால் "எக்கோல் தி மெடிசின் பாண்டிச்சேரி" என்ற பெயரில் நிறுவப்பட்டது. பிரெஞ்சு இந்திய ஒப்பந்த மாறுதல் அடிப்படையில் தன்வந்திரி மருத்துவக் கல்லூரி என அழைக்கப்பட்டது. பின்னர் அந்த கல்லூரி மண்டல முதுநிலை மருத்துவக் கல்லூரியாக, மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத் துறையால் நேரு நினைவாக, ஜிப்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது 5,500 படுக்கை களுடன், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் தென் னிந்தியாவின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 141 இடங் கள் அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்தி நிரப்பப் படுகிறது. மீதமுள்ள 9 இடங்களில் 5 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்படும். 4 இடங்கள் மத்திய சுகாதார அமைச்சகம் மூலம் நிரப்பப்படும்.

தற்போது புதுச்சேரி பிராந் தியத்தின் ஒரு பகுதியாக காரைக்காலில் ஜிப்மர் கிளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி அரசு காரைக்காலில் மருத்துவக்கல்லூரி தொடங்கு வதற்கு தேவையான நிலத்தை ஜிப்மர் நிர்வாகத்துக்கு ஒதுக்கி யுள்ளது. இதற்கான அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜிப்மர் இயக்கு நர் டாக்டர் எஸ்.சி.பரிஜா கூறுகையில், “வரும் ஜூலை மாதம் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை காரைக்காலில் 50 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங்கப்படுகிறது. பொதுப் பணித் துறைக்கு சொந்தமான பழைய கட்டிடங்களில் தற்காலிக மாக மருத்துவக் கல்லூரி இயங்கும். 2 ஆண்டுகளில் கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டு அங்கு மருத்துவக் கல்லூரி மாற்றப்படும். மருத்துவப் பயிற்சி அளிக்க காரைக்கால் அரசு மருத்துவமனை தற்போது பயன்படுத்திக் கொள்ளப்படும்” என்றார்.

புதுச்சேரிக்கு வாய்ப்பில்லை

அதே நேரத்தில் புதுச்சேரியி லுள்ள ஜிப்மரில் எம்பிபிஎஸ் இடங்களை உயர்த்த வாய்ப்பில்லை என்று ஜிப்மர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக புதுச்சேரி பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கூறியதாவது: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர மாணவர்களிடம் கடும் போட்டி நிலவுவதால் ஆண்டுதோறும் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் மருத்துவர்களின் தேவையை கருத்தில் கொண்டு பாரம்பரிய மருத்துவக்கல்லூரி நிறுவனங்கள் 100 இடங்கள் வரை கூடுதலாக அதிகரித்துக்கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இடங்களை அதிகரித்துள்ளன. ஆனால், ஜிப்மர் மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் இடங் களின் எண்ணிக்கையை உயர்த் தவில்லை. மொத்தமுள்ள 150 இடங்களில் 40 எம்பிபிஎஸ் இடங்கள் புதுச்சேரி மாணவர் களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஜிப்மர் இடங்களை அதிகரித்தால் புதுச்சேரி மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும். இடத்தை உயர்த்தாததால் இந்த வாய்ப்பு நழுவுகிறது என்று குறிப்பிட்டனர்.

ஜிப்மர் வட்டாரங்களில் கேட்டதற்கு, “நடப்பாண்டும் புதுச்சேரியிலுள்ள ஜிப்மரில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்குத்தான் சேர்க்கை நடக்கும். இடங்கள் அதிகரிக்கப்படவில்லை” என்ற னர்.

குறள் இனிது: தன் இடம்... தனி பலம்....சோம.வீரப்பன்

THE HINDU TAMIL

சோம.வீரப்பன்

சந்தன வீரப்பனை எளிதில் மறக்க முடியுமா? தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என்று மூன்று மாநில அரசுகளும் பல ஆண்டுகளாகத் தேடின, தேடின, தேடிக்கொண்டே இருந்தன! தலைக்கு ரூ.5 கோடி என அறிவித்துப் பார்த்தார்கள். தனிப்படை அமைத்தும் தவித்தார்கள். இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, நெருங்குவதற்கு ஆன செலவு சுமார் ரூ. 700 கோடிக்கும் மேல் 18 ஆண்டுகளுக்கு பிறகுதான் சுட்டுக்கொல்லப்பட்டதாகச் செய்தி வந்தது.

பின்னணியை விடுங்கள். அதன் வாதப்பிரதிவாதங்களை விடுங்கள். அரசியலை விட்டே விடுங்கள். ஆனால் சற்றே சிந்தித்துப் பாருங்கள். வேறு மாநிலத்திற்கு, ஏன் வேறு நாட்டிற்கே தப்பிச் செல்பவர்களைக்கூட (மனது வைத்தால்) தேடிக் கண்டுபிடித்து விடும் அரசுக்கு வீரப்பனை பிடிக்க இவ்வளவு காலம் ஆனது ஏன்? காரணம் ... அவன் மறைந்திருந்த இடம் காடு. அவனைத் தேடியவர்களுக்கு தெரிந்த இடமோ நாடு. அவன் இருந்த சத்தியமங்கலம் மலைப்பகுதியும், அதன் சுற்றியுள்ள காடுகள் அத்தனையும் அத்துப்படி.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கும் போகும் பொழுது பார்த்து இருப்பீர்கள். நாம் உயரத்தில் இருக்கும் பொழுது தூரத்தில் வரும் வண்டியின் சத்தம் கூட நன்றாகக் கேட்கும். வெகு தொலைவில் உள்ள மனித நடமாட்டத்தையும் சிறு பிம்பமாகப் பார்த்து விடலாம். ஆனால் அடிவாரத்தில் இருப்பவர்களுக்கு அப்படித் தெரியாது. அது தவிர வீரப்பனுக்கு பறவைகளின் மொழி தெரியுமென்றும், விலங்குகளின் நடமாட்டத்தை வைத்தே பலவற்றை ஊகித்து விடுவானென்றும் படித்திருப்பீர்கள். உள்ளுர் வாசிகள் உதவியது தனிக்கதை.

வீரப்பனிடம் பெரிய கோட்டை இருக்கவில்லை. அரசாங்கத்திடம் இருந்ததைப் போல பல்லாயிரக்கணக்கான ஆள் பலம் இல்லை. ஆயுதங்களும் இல்லை. ஆனால் அந்த காட்டைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு விட்டான். நல்ல அரணும் மற்ற சிறப்பும் இல்லாதவரென்றாலும் எதிரியை அவர்கள் வாழும் இடத்தில் தாக்குவது கடினம் என்கிறார் வள்ளுவர்.

நண்பர்களே இதில் நாம் ஒரு நல்ல மேலாண்மைப் பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம். தனக்கேற்ற இடத்தில் இருப்பவனை வெளியிலிருந்து வருபவன் அதிக சக்தியுடன் வந்தாலும் வெற்றி கொள்வது கடினம் என்பது உண்மைதானே! நீங்களே சொல்லுங்கள். அல்வா என்றால் திருநெல்வேலியும் இருட்டுக்கடையும் தானே ஞாபகம் வருகின்றன. இட்லி என்றால் மதுரை, முகூர்த்தப்பட்டு என்றால் இன்றும் காஞ்சி பட்டு என்று விடாமல் படையெடுப்போரை திசை மாற்ற முடியுமா? இவர்கள் தமதாக்கிக் கொண்ட இடங்கள் அவரவர்கள் ஊர்கள் மட்டுமல்ல, தனித் தரமும், நற்பெயரும் தான். அப்படிப்பட்டவர்களை பெரும் விளம்பரங்கள், விலைக்குறைப்பு போன்றவைகளால் வெல்வது அரிது!


சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது (குறள் 499)

somaiah.veerappan@gmail.com

NEWS TODAY 20.09.2024