Saturday, May 7, 2016

ஏமாற்று வேலைகளை நிறுத்திக்கொள்ளுங்கள்!

Return to frontpage
பெரும்பான்மை மக்கள் பொருளாதாரரீதியாக அடிமட்டத்தில் வாழும் ஒரு நாட்டில் இலவசங்கள், மானியங்களை மலினப் பார்வையில் பார்க்க முடியாது. என்றாலும், இலவசமாக அளிக்கப்படுபவையும் அவற்றுக்கான தேவையும் அவை ஏற்படுத்தும் விளைவுகளுமே இலவசங்கள் தொடர்பான கருத்துக்கு முழுமை தரும். இரு திராவிடக் கட்சிகளும் முன்பு மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள், மடிக்கணினிகள், ஏழைகள் திருமணத்துக்குத் தங்கம், விவசாயிகளுக்கு ஆடு - மாடுகள் என்று எவ்வளவோ அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு அர்த்தம் இருந்தது. டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் என்று அந்த அறிவிப்புகள் மாற ஆரம்பித்தபோது, பாதை பெருமளவில் மாறியது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளைத் தூக்கியெறிந்துவிட்டு, ஆக்க பூர்வ அறிவிப்புகளில் கவனம் செலுத்தும்போது இரு பெரிய கட்சிகளும் மீண்டும் மக்களை மாயையில் தள்ளப் பார்க்கின்றன. அதிலும் திமுகவேனும் செல்பேசி அறிவிப்போடு நிறுத்திக்கொண்டது; அதிமுக செல்பேசி, பெண்களுக்கு மொபெட் வாங்குவதற்கு 50% மானியம் என்று வரிசை கட்டி வெளியிட்டிருக்கும் அறிவிப்புகள் முகம் சுளிக்க வைக்கின்றன.

இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்ட செல்பேசி இணைப்புகள் இருக்கின்றன. ட்ராய் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2013-லேயே தமிழ்நாட்டில் 7 கோடிக்கும் அதிகமான செல்பேசி இணைப்புகள் இருந்தன. நிலைமை இப்படியிருக்க, தமிழகத்தின் 1.95 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்பேசி அளிப்போம் எனும் அறிவிப்பு ஏற்படுத்தும் தாக்கம் என்னவாக இருக்கும்?

தமிழகத்தில் இன்றைய நாளில் 2 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கின்றன. போக்குவரத்து நெரிசலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், தனிநபர் போக்குவரத்தைக் குறைத்து, பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டிய ஒரு அரசு, மொபெட் வாங்க 50% மானியம் தருகிறேன் என்று மக்களின் நுகர்வைத் தூண்டிவிடுவதை எப்படிப் புரிந்துகொள்வது? தவிர, இந்தத் திட்டத்தால் பயனடையப்போகும் பயனாளிகள் யார்? ஏழை, எளியவர்களால் எப்படி 50% தொகையைச் செலுத்த முடியும்? இப்படிக் கிளப்பப்படும் நுகர்வு வெறி கடன் வாங்கும் நிலைக்குப் பல குடும்பங்களை இட்டுச் செல்லும். மாதச் செலவில் கூடுதல் பெட்ரோல் சுமையைக் கொண்டுவரும். இன்னும் என்னென்ன விளைவுகள் வரும் என்பதையெல்லாம் ஒரு அரசியல் இயக்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் பல கேள்விகளை எழுப்புகிறது. தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கும் நிலையில், இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்துவது விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும். கடைசியில், இந்தத் திட்டத்தின் பாதகமான விளைவுகள் அனைத்தும் அதிமுக தலையில் அல்ல; பொதுமக்கள் தலையிலேயே விடியும்.

குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு எனும் வாசகம் பெரும் நம்பிக்கையைத் தரலாம். ஆனால், அறிக்கையை விரிவாகப் படித்தால், அதில் வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் தொடர்பாகத்தான் வாக்குறுதிகள் இருக்கின்றன. மேலோட்டமாகக் கவர்ந்திழுக்கும் இது போன்ற அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் காரியம் இல்லையா?

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அடிப்படைக் கட்டமைப்பில் மாறுதலைச் செய்யாமல், இலவச அறிவிப்புகளை அள்ளித் தெளிப்பது மக்களின் மீதான அக்கறையின்மையைத்தான் காட்டுகிறது. இதுபோன்ற அரசியல் தந்திரங்கள் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்விதத்திலும் உயர்த்தப்போவதில்லை. இலவசங்களாலும், நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளாலும் தங்களுக்குப் பயனேதும் இல்லை என்பதை அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர்கள் உணர்த்த வேண்டிய தருணம் இது!

தனியார் மருத்துவ கல்லூரிகள் தேர்வு நடத்த அனுமதியில்லை: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதியில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேசிய நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லாமல், ‘ரேங்க்’ அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவதால் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மருத்துவ கவுன்சில் ஆதரவு

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனில் தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ‘மாநில அரசுகள் தங்கள் நடைமுறைப்படி, மாணவர் சேர்க்கையை நடத்த இந்த ஆண்டு மட்டும் அனுமதி அளிக்கலாம். ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி அளிக்க கூடாது’ என்று தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், ‘‘மாநில அரசுகளும் தேசிய நுழைவுத்தேர்வை ஏற்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி வருகிறார்கள். எனவே, இதுகுறித்தும் முதல்கட்ட தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வை எழுத அனுமதி அளிப்பது குறித்தும் கருத்து தெரிவிக்க வரும் 10-ம் தேதி வரை அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘‘தேசிய நுழைவுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி இல்லை.

மாநில அரசுகள் தற்போது பின்பற்றி வரும் நடைமுறைப்படி, இந்த ஆண்டு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்படும். மத்திய அரசு பதில் தெரிவித்தபின் இதில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Thursday, May 5, 2016

‘பறக்கும் பாவை’ படத்தில் எம்.ஜி.ஆர்., காஞ்சனாவின் அசத்தும் ஆட்டம்.

எம்ஜிஆர் 100 | 58 - நடனக் கலைஞர்!


M.G.R. நடனக் காட்சிகளில் தூள் கிளப்புவார். அவரது ஆட்டத்தில் புயலின் வேகமும் தென்றலின் சுகமும் இருக்கும். திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களையும் ஆடவைப்பது அவரது ஆட்டத்தின் சிறப்பு.

‘மதுரை வீரன்’ படத்தில், ‘ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?...’, ‘ராஜா தேசிங்கு’ படத்தில், ‘கானாங்குருவி காட்டுப் புறா...’ ஆகிய பாடல்களில் பத்மினியுடன் எம்.ஜி.ஆர். ஆடும் நடனங்கள், ‘மன்னாதி மன்னன்’ படத்தில் பத்மினியுடன் ஆடும் போட்டி நடனம், ‘கலங்கரை விளக்கம்’ படத்தில், ‘பல்லவன் பல்லவி பாடட் டுமே…’ பாடலில் அவரது பரத நாட்டிய அபிநயங் கள், ‘மீனவ நண்பன்’ படத்தில், ‘பட்டத்து ராஜாவும்…’ பாடலுக்கு அவர் போடும் ஸ்டெப்ஸ் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாக, படங்களில் எம்.ஜி.ஆர். ஆடிய எல்லா நடனக் காட்சிகளுமே ‘டாப்’ என்று சொல்லிவிடலாம். என்றாலும், இரண்டு நடனக் காட்சிகள் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாதவை. ‘அன்பே வா’ படத்தில் ‘நாடோடி, நாடோடி…’ பாடலிலும், ‘குடியிருந்த கோயில்’ படத்தில் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு…’ பாடலிலும் அமர்க்களப்படுத்தியிருப்பார்.

எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய பலமே தனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கத்தோடு இருப் பதுதான். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை பத்மபிரியா, ‘‘உங்களை தாழ்த்திக் கொண்டே உயர்ந்து விடுகிறீர்கள்’’ என்று கூறுவார். இந்த வசனம் எம்.ஜி.ஆருக்கு முற்றிலும் பொருந் தும். வழக்கம் போல, தனது இந்த அடக்க குணம் காரணமாக முதலில் ‘அன்பே வா’ படத்தின் பாடலுக்கு ஆட எம்.ஜி.ஆர். மறுத்துள்ளார்.

இயக்குநர் திருலோகசந்தரை எம்.ஜி.ஆர். அழைத்து, ‘‘நாடோடி, நாடோடி… பாடலுக்கு நவீன ஆங்கில இந்திய ‘கதக்’ பாணி களில் நடன அசைவுகளை நடன இயக்குநர் சோப்ரா அமைத்துள்ளார். என் னால் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். யாராவது நடனக்காரப் பையனை ஆடச் சொல்லி படமாக்கிவிடுங்கள். என் ‘குளோஸ் அப்’களை அங் கங்கே சேர்த்துக் கொள்ள லாம்’’ என்றார்.

ஆனால், திருலோகசந்தருக்கு எம்.ஜி.ஆரின் திறமை தெரியும். இருந்தாலும் எம்.ஜி.ஆர். சொல்லும்போது உடனே மறுத்தால் மரியாதை இல்லை என்பதால் அப்போதைக்கு சரி என்றார். அவர் சொன்னபடியே, ஒரு இளைஞரை வைத்து நடனக் காட்சியில் சில ஷாட்களை எடுத்தார். அவர் மனதில் வேறொரு திட் டம் இருந்தது. பின்னர், பாடல் காட்சியை படமாக்க வேண்டிய நாள் வந்தது. திருலோகசந்தரிடம் எம்.ஜி.ஆர். ‘‘அந்த இளைஞர் ஆடிய நடனக் காட்சிகளைப் பார்க்கலாமா?’’ என்றார்.

திருலோகசந்தர் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த திட்டப்படி, ‘‘எடிட்டர் ஊரில் இல்லை. அந்த ஷாட்களை எங்கே வைத்திருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான் படமாக்கிய காட்சிகள் நினைவில் இருக்கின்றன. இப்போது உங்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்துவிடுவோம்’’ என்றார்.

திருலோகசந்தரும் நடன இயக்குநர் சோப்ரா வும் கேமராமேன் மாருதி ராவும் ஏற்கெனவே பேசி வைத்துக் கொண்டபடி வேலையைத் தொடங் கினர். எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஆடினார். ‘ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்..’ என்று அந்தப் பாடலில் வரும் வரியின்போது அதற்கேற்ற மூவ்மென்ட்களை ஊதித் தள்ளினார். பாடலுக்கு ஆடிய நடனக் கலைஞர்கள் உட்பட யூனிட்டில் இருந்த எல்லோரும் அசந்து போய் நின்றனர்.

பின்னர், எம்.ஜி.ஆரிடம் திருலோகசந்தர் உண் மையைக் கூறி, ‘‘இளைஞர் ஆடிய ஷாட்களை பார்க்கிறீர்களா?’’ என்று கேட்டு போட்டுக் காட்டினார். எம்.ஜி.ஆர். ஆடியதில் பத்தில் ஒரு பங்கு கூட அந்த இளைஞர் ஆடவில்லை என்பது தெரிய வர, திருலோகசந்தரின் தோளைத் தட்டி, சிரித்தபடியே எம்.ஜி.ஆர். எழுந்துவிட்டார்.

இதேபோலத்தான், ‘குடியிருந்த கோயில்’ படத் தில், ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு...’ பாடலுக்கும் நடனமாட முதலில் எம்.ஜி.ஆர். மறுத்தார். பாடலில் அவருடன் கூட ஆடுபவர் எல்.விஜயலட்சுமி என்ற நடிகை. மிகப்பெரிய டான்ஸர். ‘பஞ்சாப் பாங்க்ரா’ நடனக் காட்சி இடம் பெற்ற பாடல் அது. ‘‘மூவ் மென்ட் தவறினால் தப்பா இல்ல ஆயிடும்’’ என்று எம்.ஜி.ஆர். தயங்கினார். ‘‘அண்ணே, உங்க திறமை எனக்குத் தெரியும். டான்ஸ் மாஸ்டர் சொல்றதை அப்படியே நீங்க ஆடணும்னு இல்லை. உங்களுக்கு பிடிக்கலைன்னா அப்புறம் தூக்கிடுவோம்’’ என்றார் இயக்குநர் கே.சங்கர்.

நடனத்துக்காக பயிற்சி எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக ஆடி முடித்தார் எம்.ஜி.ஆர்.! இன்றும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் பாடல் காட்சி அது. அதன் பின்னர், பல படங்களிலும் ‘பஞ்சாப் பாங்க்ரா’ நடனக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றாலும், எம்.ஜி.ஆரின் நடனம் போல அமையவில்லை.

‘இதயக்கனி’ படத்தில் ‘அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி...’ என்று தொடங்கும் கவிஞர் நா.காமராசனின் அருமையான பாடல். கதைப் படி, போலீஸ் அதிகாரியான எம்.ஜி.ஆர்., மாறுவேடத்தில் வில்லன் கோஷ்டியினர் இடத்துக்குச் செல்வார். அங்கு அளிக்கப்படும் விருந்தின்போதுதான் இந்தப் பாடல் காட்சி.

இந்தப் பாடலிலும் நடிகைகள் ராதா சலூஜா, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆகியோருக்கு ஈடு கொடுத்து ஆடி எம்.ஜி.ஆர். அசத்தியிருப்பார். பாடல் முடிந்ததும், வில்லியாக நடிக்கும் நடிகை ராஜசுலோசனாவும் அவரது கையாளாக வரும் நடிகர் ஆர்.எஸ். மனோகரும் எம்.ஜி.ஆரிடம் ‘‘பிரமாதமாக ஆடினீர்கள்’’ என்று பாராட்டுவார்கள்.

அதற்கு, வில்லன் கோஷ்டியை கிண்டல் செய்யும் வகையிலும் அப்போதைய சூழலில் தனது அரசியல் எதிரிகளுக்கு பதில் சொல்லும் வகையிலும் எம்.ஜி.ஆர். கூறும் பதிலால் தியேட்டரே அதிரும். தனது ஆட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட வில்லன் கோஷ்டிக்கு எம்.ஜி.ஆரின் பதில் இது...

‘‘நீங்க போட்ட ஆட்டத்தை விடவா?’’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்




நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேவலமாக பேசிய காலம் இருந்தது. நடிகர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கக்கூட யோசிப்பார்கள். அதை மாற்றி நடிகர்களுக்கு மரியாதையும் சமூக அந்தஸ்தும் கிடைக்க எம்.ஜி.ஆர்.காரணமாக இருந்தார். படங்களில் பாடி, ஆடி நடிக்க மட்டுமல்ல, நடிகனுக்கு நாடாளவும் தெரியும் என்பதை முதன்முதலில் உலகுக்கு நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.!


முந்தைய தொடர்களை வாசிக்க: எம்ஜிஆர் 100

Wednesday, May 4, 2016

மனதுக்கு இல்லை வயது

மனதுக்கு இல்லை வயது

 
அந்தப் பெரியவரை மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு அழைத்து வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்புவரை நன்றாக இருந்தவர், திடீரென்று குழப்பமாகப் பேச ஆரம்பித்து விட்டார். ஆட்களைச் சரியாக அடையாளம் தெரியவில்லை.இடம், காலக் குழப்பம் என்று தடுமாறினார். குழந்தையைப்போல ‘நாளைக்கு இட்லி சாப்பிட்டேன்’, ‘நேற்றுக்கு வீட்டுக்கு போவேன்’ என்றார். இரவானால் இந்தத் தொந்தரவுகள் அதிகமாகின்றன. யாரோ வந்திருப்பதுபோலப் பேசுகிறார். சில சமயம் எழுந்து ஓடவும் செய்தார். என்ன காரணம் என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது. அவர் நான்கு நாட்களாக மருத்துவர் ஆலோசனை இன்றி இருமல் மருந்தைக் குடித்து வந்திருக்கிறார். அதிலுள்ள ஒரு மருந்தே அவரது திடீர் குழப்பத்துக்குக் காரணம்.

பெரும்பாலும் காய்ச்சல் வந்து குழப்பத்தில் புலம்புவதை ‘ஜன்னி’ என்கிறோம். இது டெலிரியம் (Delirium) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஜன்னி காய்ச்சலில் மட்டுமன்றி வேறு சில உடல் பாதிப்புகளிலும் ஏற்படும். குறிப்பாக, வயதானவர்களுக்கு இது எளிதில் ஏற்படும்.

வயதாகும்போது மூளையில் சில ரசாயனங்கள் குறையத் தொடங்கும். குறிப்பாக, அசிட்டைல்கோலின் (Acetylcholine) என்ற ரசாயனம் வெகுவாகக் குறைந்திருக்கும். லேசான காய்ச்சல் அல்லது ரத்தத்தில் சர்க்கரை , ரத்த அழுத்தம், யூரியா, சோடியம் போன்றவை லேசாகக் கூடிக் குறைந்தால்கூட மூளையின் அசிட்டைல்கோலின் அளவு குறைந்து வயதானவர்களுக்கு தாங்க முடியாத குழப்பம் ஏற்படக்கூடும்.

குறிப்பாக, இருமல் மருந்து, தூக்க மாத்திரைகள் போன்ற சில மருந்துகளாலும் அசிட்டைல்கோலின் அளவு குறைந்து குழப்பம் ஏற்படும். இந்தக் குழப்பம் வேறு உபாதைகளுக்காக மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் முதியவர்களில் 20 முதல் 30 சதவீதம் வரை காணப்படும். குறிப்பாக, மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகள் ஏற்பட்டவர்களின் மூளைக்குச் சரியானபடி ரத்த ஓட்டம் இல்லாததால் இந்தக் குழப்பம் அதிகம் காணப்படும்.

இவர்களுக்கு எங்கு இருக்கிறோம் என்ற குழப்பம், சம்பந்தம் இல்லாமல் பேசுவது, மறதி, யாரோ இருப்பது, பேசுவது போன்ற மாயத்தோற்றங்கள் இருப்பதால் இவர்களை மனநல மருத்துவர்களிடம் அழைத்து வருவதுண்டு.

இந்த ஜன்னியின் அறிகுறிகள் நாம் ஏற்கெனவே பார்த்த டிமென்ஷியா போலவே இருக்கும். ஆனால் டிமென்ஷியாவில் கொஞ்சம் கொஞ்சமாக மறதி ஏற்படும். ஜன்னி திடீரென்று ஏற்படுவது. டிமென்ஷியாவில் மூளையின் செல்கள் மரிப்பதால் நிரந்தரமான பாதிப்பு ஏற்படுகிறது. ஜன்னி மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் வருவதால் அது தற்காலிகமானது.

எனவே, வயதானவர்களுக்கு உடலில் ஏற்படும் சிறு பிரச்சினைகளைக்கூட அலட்சியப்படுத்தக் கூடாது. மருத்துவ ஆலோசனை இன்றி சில மருந்துகளை எடுத்துக் கொள்வதும் ஆபத்தாக முடியும். வயதானவர்களின் உடல் சீட்டுக்கட்டால் ஆன கோபுரம் போன்றது. எங்காவது ஒரு இடத்தில் சிறு பிரச்சினை வந்தாலும் மொத்த கோபுரமும் பாதிக்கப்படும்.

எம்ஜிஆர் 100 | 57 - ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கியவர்!

‘இதயக்கனி’ படத்தின் ரிசர்வேஷன் சாதனை விளம்பரம்

எம்ஜிஆர் 100 | 57 - ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கியவர்!


M.G.R. தன் மீது வீசப்பட்ட ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கி வெற்றி கண்டவர். இயற்கையாக ஏற்பட்ட தடைகள் மட்டுமின்றி, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தடைக் கற்களையும் படிக்கற்களாக்கி உயர்ந்தவர். ஒரு காலகட்டத்தில் அவரது படங்களின் ரிசர்வேஷன் சாதனைகூட, படத்துக்கு சிக்கலையும் கெடுபிடியையும் ஏற்படுத்தின.

பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக- வில் எம்.ஜி.ஆர். இணைந்தார். திமுக-வில் அவர் சேர்ந்தபோது, அது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியல்ல. 1956-ம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாட்டில் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் விருப்பப்படி 1957-ம் ஆண்டில்தான் திமுக தேர்தலில் போட்டி யிட்டது. அப்போது, காங்கிரஸ்தான் ஆளும் கட்சி. அதனால், எந்த லாப நோக்கத்தோடும் திமுகவில் எம்.ஜி.ஆர். சேரவில்லை. சொல்லப்போனால், அன்றைய சூழலில் திமுகவில் இருந்ததால் அவருக்கு இழப்புகளும் சோதனைகளும்தான் அதிகம். அவரது படங்களுக்கு சென்சாரின் பிடி இறுகும். புராணப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது, திமுகவின் கொள்கைகளை மனதில் கொண்டு அந்த வாய்ப்புகளை எம்.ஜி.ஆர். நிராகரித்தார்.

1959-ம் ஆண்டில் நாடகத்தில் நடித்தபோது அவருக்கு காலில் மிகக் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். ‘‘இனிமேல் அவரால் நடிக்க மட்டுமல்ல; நடக்கவே முடியாது’’ என்றனர். ஆனால், நடக்காது என்பது எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடக்காது. வெற்றிகரமாக மீண்டு முன்பை விட வேகமாகவும் வலிமையோடும் சண்டைக் காட்சிகளில் நடித்தார். 1967-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின், ‘‘அவர் உயிர் பிழைத்திருக்கலாம்; ஆனால், சினிமா வாழ்வு முடிந்தது’’ என்றனர். அதைப் பொய்யாக்கி சினிமாவில் ஏற்கனவே இருந்த சாதனைகளை முறியடித்தார்.

அப்படி, ரிசர்வேஷனிலேயே சாதனை படைத்த படம் ‘இதயக்கனி’. 1950-களில் தியேட்டர்களில் அலங்காரம், கொடி, தோரணங்கள், கட் அவுட்கள், ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஆகியவை எம்.ஜி.ஆர். படங்களில் இருந்துதான் முதலில் ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர்.படங்களை பார்க்க ரிசர் வேஷனுக்கு முதல் நாள் இரவில் இருந்தே தியேட்டர்களில் ரசிகர்கள் காத்திருந்த அதிசயமும் நடந்தது.

‘இதயக்கனி’ திரைப்படம் சென்னையில் மட்டும் ரிசர்வேஷனிலேயே மூன்றே நாட்களில் வசூல் ரூ.90 ஆயிரத்தைத் தாண்டியது. அந்த நாட்களில் ஒரு டிக்கெட் விலை எவ்வளவு என்று தெரிந் தவர்களுக்கு, இந்த 90 ஆயிரம் வசூல் எத்தகைய சாதனை என்பது புரியும். அதுவரை இல்லாத இந்த சாதனையை, படத்தை தயாரித்த ஆர்.எம்.வீரப் பன், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விளம்பரமாக வெளியிட்டார். அந்த விளம்பரம் இங்கே இடம் பெற்றுள்ளது. அந்த விளம்பரமே படத்துக்கு சோதனையை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி மக்களின் ஆதரவோடு கட்சி வேகமாக வளர்ந்து வந்த நேரம் அது. படத்துக்கு கெடுபிடி தொடங்கியது.

உண்மையிலேயே அவ்வளவு டிக்கெட்கள் முன்பதிவு ஆகியிருக்கிறதா? என்று வணிகவரித் துறை அதிகாரிகள் படம் வெளியாக இருந்த தியேட்டர்களை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். படம் பார்க்க வரும் மக்கள் மிரண்டு திரும்பிப் போகும் அளவுக்கு டிக்கெட் கவுன் டர்களுக்கு வெளியே பலமான கண்காணிப்பு களும் கட்டுப்பாடுகளும் போடப்பட்டன. தியேட் டர்களின் அலுவலகத்திலும் கெடுபிடிகள். இவ்வளவையும் தாண்டி ‘இதயக்கனி’ படம் அபார வெற்றி பெற்றது. சென் னையில் சத்யம் தியேட்டரில் முதன்முதலில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையையும் பெற்றது ‘இதயக்கனி’.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் சென்னையில் தேவி பார டைஸ் அரங்கில் ரிசர்வேஷனின் போதே, 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாவதற்குள் எத் தனையோ இடையூறுகள். 2014-ம் ஆண்டு செப்டம்பர் 14-ல் ‘தி இந்து’ தமிழ் நாளித ழில், ‘உலகம் சுற்றிய வாலிபன் தூத்துக்குடிக்கு வந்த கதை’ என்ற கட்டுரை வெளியானது. அதில், பஸ் இன்ஜின் உள்ளே பாதுகாப்பாக மறைத்து ரீல் பெட்டியை தியேட்டருக்குள் கொண்டு சென்ற செய்தி இடம் பெற்றது நினைவிருக்கலாம்.

கெடுபிடிகள் காரணமாக, போஸ்டர்கூட ஒட்டப்படாமல் படம் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடி, எம்.ஜி.ஆர். வசூல் சக்கரவர்த்தி என்பதை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ நிரூபித்தது. படத்துக்கான பணிகள் நடக்கும்போது அடிக்கடி மின்தடை ஏற்படும். அதை எல்லாம் எம்.ஜி.ஆர். சமாளித்தார். அந்த நெருக்கடியிலும் நண்பரின் பிள்ளைகளுக்காக படத்தை அவரது வீட்டுக்கே அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!

படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏ.பி.நாகராஜன், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு, தனது மகன்கள் வெங்கடசாமி, பரமசிவம் ஆகியோரிடம் படத்தின் சிறப்புகளை தெரிவித் தார். அவர்களுக்கு உடனடியாக படம் பார்க்க ஆசை. தியேட்டருக்குச் சென்றால் படத்துக்கு டிக்கெட் கிடைக்காது என்பதால் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்ட ஏ.பி.நாக ராஜன், தனது மகன்களுக்காக இரண்டு டிக்கெட்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஏ.பி.நாகராஜனின் மகன்களுக்காக படத்தின் பிரின்ட்டையே எம்.ஜி.ஆர். அனுப்பிவைத்தார். படத்தை பார்த்துவிட்டு உடனடியாக அவற்றை பல்லாவரம் லட்சுமி திரையரங்கிற்கு அனுப்பி வைத்துவிடும்படி கூறினார். உருகிவிட்டார் ஏ.பி.நாகராஜன். இத்தனைக்கும் அவர் அதுவரை எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தது இல்லை.

திமுகவின் முக்கிய பிரமுக ராக விளங்கிய மதுரை முத்து, ‘‘உலகம் சுற்றும் வாலிபன் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன்’’ என்றுகூட சவால்விட்டார். படம் வெளியான பிறகு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவருக்கு புடவைகளை பார்சலில் அனுப்பி வைத்தனர். இங்கே எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு ஒரு உதாரணம். பின்னர், அதே மதுரை முத்து அதிமுகவில் சேர்ந்தபோது அவரை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டதோடு, மதுரை மாநகராட்சி மேயராகவும் ஆக்கினார்.

எதிரிகளையும் நண்பர்களாக்கி, சோதனை களை சாதனைகளாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதுவரை வெளியான தமிழ் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, சென்னை தேவி திரையரங்கில் 1970-ல் வெளியான ‘மெக்கனாஸ் கோல்ட்’ (Mackenna’s Gold) ஆங்கிலப் படம்தான் அதுவரை இந்தியாவில் ஒரே திரையரங்கில் அதிக நாள் ஓடியதில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. அந்த சாதனையையும் தேவி பாரடைஸ் அரங்கில் வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ முறியடித்தது.

எம்ஜிஆர் 100 | 56 - கேட்காமலேயே கொடுத்தவர்!

பட பூஜை ஒன்றில் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் தர் (இடது ஓரம்), நடிகை லதா, அவர் அருகே இயக்குநர் கே.சங்கர்.

எம்ஜிஆர் 100 | 56 - கேட்காமலேயே கொடுத்தவர்!

M.G.R. சொந்தமாக மூன்று படங்களை தயாரித்தார். ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய இரண்டு படங்களை அவரே இயக்கினார். மற்றொரு படமான ‘அடிமைப் பெண்’ படத்தை அவர் இயக்கவில்லை. தானே சிறந்த இயக்குநராக இருந்தும் தனது சொந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை வேறு இயக்குநருக்கு கொடுத்தார். அந்தப் பெருமையைப் பெற்றவர் இயக்குநர் கே.சங்கர்.
‘நல்லவன் வாழ்வான்’ படப்பிடிப்பு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தபோது, முதன்முத லாக எம்.ஜி.ஆரை சந்தித்தார் கே.சங்கர். தான் பணியாற்றிய படங்களைப் பற்றி கே.சங்கர் கூறினார். ஒவ்வொரு படத்திலும் சிறந்த காட்சிகளையும் ‘ஷாட்’களையும் குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பாராட்ட, இந்த அளவுக்கு தனது படங்களை கவனித்திருக்கிறாரே என்று வியந்துபோனார் கே.சங்கர்.
ஜி.என்.வேலுமணி தயாரிப்பில் தான் நடித்த ‘பணத்தோட்டம்’ படத்தை கே.சங்கர் இயக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பினார். சங்கர் அதுவரை எம்.ஜி.ஆர். பாணியிலான படங்களை இயக்கியதில்லை. இந்த தயக்கத்தால், கதையை காரணம் காட்டி படத்தை தட்டிக் கழிக்க விரும்பினார். ஆனால், கதையை மாற்றும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டதால், கள்ள நோட்டு பிரச்சினையை மையமாக வைத்து 18 நாட்களில் தயாரிக்கப்பட்டது ‘பணத்தோட்டம்’ படம்.
‘‘எம்.ஜி.ஆர். படங்களில் வேலை செய் தால் நிறைய குறுக்கீடுகள் இருக்கும். தொந்தரவுகள் இருக்கும் என்று படவுல கில் பயமுறுத்தியிருந்தார்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர் நல்ல ரசிகர். ஒவ்வொரு காட்சியையும் கேமரா கோணத்தில் கண்டு மகிழ்வார்’’ என்று சங்கர் பின்னர் தனது அனுபவத்தைக் குறிப்பிட்டார். ‘பணத்தோட்டம்’ பட வெற்றிக்குப் பின், சங்கரிடம் எம்.ஜி.ஆர். , ‘‘என் படத்தை டைரக்ட் செய்யத் தயங்கி னீர்களே? இப்போது என்ன சொல்கிறீர் கள்?’’ என்று கேட்டார். அதற்கு சங்கரின் பதில், ‘‘என்னை மன்னித்து விடுங்கள்.’’
பின்னர், ‘கலங்கரை விளக்கம்’, ‘சந்தி ரோதயம்’, ‘குடி யிருந்த கோயில்’, ‘உழைக்கும் கரங் கள்’, ‘பல்லாண்டு வாழ்க’, ‘இன்று போல் என்றும் வாழ்க’ என்று இரு வர் கூட்டணியில் வெற்றிப் படங்கள் வந் தன. தனது சொந்தத் தயா ரிப்பான ‘அடிமைப் பெண்’ படத்தை இயக்கும் வாய்ப்பை சங்க ருக்கு எம்.ஜி.ஆர். கொடுக்கும் அளவுக்கு இருவரின் நட்பும் பலப்பட்டது. படத்தை ஜெய்ப்பூரில் எடுக்கலாம் என்று யோசனை சொன்னதே சங்கர்தான். அதை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார்.
சாதாரணமாகவே எம்.ஜி.ஆர். செலவு செய்வார். தனது சொந்தப் படம் என் றால் கேட்கவே வேண்டாம். படத்துக்காக மட்டுமின்றி, படப்பிடிப்புக் குழுவினருக் கும் எந்த குறையும் வைக்காமல் தாராள மாக செலவு செய்தார். பாலைவனப் பகுதியில் குடிநீர் கிடைப்பது கஷ்டம் என்பதால் ‘கோக கோலா’ வேனையே கொண்டுவந்து நிறுத்தினார்.
‘‘ஜெய்ப்பூர் அரண்மனையில் ஆறா வது மாடியில் உள்ள மன்னரின் அறையில் காட்சிகளை படமாக்கினால் நன்றாக இருக்கும். ஆனால், தரையில் உள்ள விரிப்புக்கு பதிலாக சன்மைக்கா பதித்து காட்சிகளை எடுத் தால் சிறப்பாக இருக்கும்’’ என்பது சங்கரின் யோசனை. சன்மைக்கா அறிமுக மான சமயம் அது. எம்.ஜி.ஆர். உடனே, டெல் லிக்கு ஆள் அனுப்பி விமானம் மூலம் சன்மைக்காவை வரவழைத்தார். அந்த நாளிலேயே அதன் மதிப்பு ரூ.40 ஆயிரம். படத்தின் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, அரண்மனை யில் தன் செலவிலேயே சன்மைக்காவை பதித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.! ‘ஆயிரம் நிலவே வா…’ பாடலின் இறுதியில் வரும் காட்சிகள் அந்த அறையில்தான் படமாக்கப்பட்டன.
‘கலங்கரை விளக்கம்’ படத்தின் படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தன் மகளுக்கு வரன் பார்த்து வரும் விஷ யத்தை எம்.ஜி.ஆரிடம் சங்கர் சொன்னார். ‘‘கல்யாண வயதில் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, ‘‘சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு (சக்ரபாணியின் மகன் ராம மூர்த்தி) பார்த்தால் என்ன?’’ என்று கேட் டார். சங்கருக்கோ தயக்கம் ஒருபக்கம், மகிழ்ச்சி மறுபக்கம். ‘‘சார் ஏன் அவசரப் படுறீங்க?’’ என்றார்.
அதற்கு, ‘‘ராமுவை நான் வளர்த்து படிக்க வைத்தேன். அவன் என் பையன். அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். சங்கர் அவரது சம்பந்தியானார். ஐயப்ப பக்த ரான சங்கர், ‘‘எம்.ஜி.ஆர். படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது மட்டு மின்றி, அவருக்கே சம்பந்தியாக என்னை ஆக்கியது ஐயப்பனின் கருணை’’ என்று சிலிர்த்துப் போனார்.
‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் நடந்தது. அந்த சமயத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயி லுக்கு முதன்முதலில் எம்.ஜி.ஆரை சங்கர் அழைத்துச் சென்றார். கோயிலுக்கு பின்புறம் சங்கரபீடம் இருக்கிறது. அங்கே தான் ஆதிசங்கரர் தவம் செய்து பின்னர், மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்தார். சிறப்பு அனுமதி பெற்று சங்கரபீடத்தின் உள்ளே எம்.ஜி.ஆர். தனிமையில் தியானம் செய்ய சங்கர் ஏற்பாடு செய்தார். ஒரு மணி நேரத் துக்கு பின் வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ‘‘நிம்மதியாக இருந்த இந்த தருணத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.
சங்கர் வீட்டில் மற்றொரு திருமணத் தின்போது, அவருக்கு பண உதவி செய் வதாக கூறியவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டனர். திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. அது முடிந்தவுடன் வேலை செய்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வ தென்று தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தார் சங்கர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மணமக்களை வாழ்த்திவிட்டு சங்கர் கையில் இரண்டு பாக்கெட்களை திணித்தார். அவற்றில் சங்கருக்குத் தேவையான பணம் இருந்தது.
சங்கர் நெகிழ்ந்து கூறினார்: ‘‘மகாபார தக் கர்ணன்கூட கேட்டவர்களுக்குத்தான் கொடுத்தான். கேட்காமலேயே மற்றவர் களுக்கு கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.!’’
- தொடரும்...
படங்கள் உதவி : ஞானம்
பிறருக்கு உதவும் குணமும் மொழி, இன, மாநில எல்லைகளைத் தாண்டி மக்களின் துயரைத் துடைக்க உதவும் மனப்பான்மையும் எம்.ஜி.ஆரின் உடன்பிறந்தவை. ‘அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக அவர் ராஜஸ்தான் சென்றபோது, அங்கு கடும் வறட்சி. மாநில அரசிடம் வறட்சி நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்தை எம்.ஜி.ஆர். அளித்தார்.

Tuesday, May 3, 2016

நிறுத்தப்பட்டுள்ள காரில் ஏசி போட்டு தூங்கலாமா?


கோடைக் காலம் என்பதால் எல்லோரும் தங்களுடைய காரில் ஏசி உபயோகிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். கார் ஓட்டும் போது ஏசி உபயோகிப்பது தவறல்ல. ஆனால் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ள காரில் ஏசி போட்டு உறங்குவது ஆபத்தில் முடிந்து விடும்.


பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ள காரில் ஏசி போட்டு உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கார் இன்ஜின் இயக்கத்தில் இருக்கும் போது வரும் புகையில் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறும். அவ்வாறு வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடு ஃபயர் வால், காரின் அடிப்பகுதி வழியாக காரினுள் வர வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு உள்ளே வரும் கார்பன் மோனாக்ஸைடை நாம் சுவாசிக்கும் போது நம் ரத்தத்தில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜன் குறைவாகக் கிடைத்து நமக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது ஒரு கட்டத்தில் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

இது போன்ற அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, காரினுள் ஏசியை போட்டு தூங்க நேர்ந்தால் காரின் கண்ணாடியை சற்று கீழே இறக்கிய நிலையில் வைத்து உறங்குவது நல்லது. அதாவது வெளிக்காற்று உள்ளே வந்து செல்லும் வகையில் இருந்தால் நச்சு பாதிப்பு குறையும்.

நிறுத்தப்பட்ட நிலையில் உள்ள காரில் ஏசி பயன்படுத்தும் போது ரீ சர்குலேஷன் மோடில் (Recirculation mode) வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தகவல் உதவி: கே. ஸ்ரீனிவாசன், உதவி துணைத் தலைவர், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.

வாசகர்கள் வாகன பராமரிப்பு தொடர்பான சந்தேகங்களை இ-மெயில் அல்லது கடிதம் மூலம் கேட்டால் அதற்கு இதே பகுதியில் பதில் அளிக்கப்படும்.

மின்னஞ்சல்: vanigaveedhi@thehindutamil.co.in

மருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா?


மருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா?

மா.திருநாவுக்கரசு

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நிச்சயம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நல்ல, சிறந்த ஆரம்பம். இந்த சந்தர்ப்பத்தை ஆக்கப்பூர்வமாக எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும்.


இந்த வருடம் உடனடியாகப் படித்து நுழைவுத் தேர்வு எழுத முடியுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி, நியாயமானதும்கூட.

அதேநேரம், நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உடனடியாக இந்த ஆண்டு செய்ய வேண்டியவை என்ன?

1 . நமது மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களையும் நமக்கே ஒதுக்க வேண்டும்.

2. நமது மாநிலத்திற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் 15 சதவீதத்தை தனியார் கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு வழங்கிவிட வேண்டும்.

3. மீதமுள்ள 85 சதவீதத்தை ஒரே நுழைவுத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்.

4. தமிழக பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நுழைவுத்தேர்வு நடத்தப்படவேண்டும்.

5. இடஒதுக்கீடு, மற்ற ஒதுக்கீடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும் .

6. கவுன்சலிங் முறையில், ஒற்றை சாளரம் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படவேண்டும்.

7. தர வரிசையில் ஒதுக்கீடு செய்யும்போது அரசு மற்றும் தனியார் கல்லூரி ஆகிய அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே தரவரிசையை வெளியிட வேண்டும். அதன்படியே மாணவர்கள் சேர விரும்புவார்கள்.

8. தனியார் கல்லூரி கட்டணம் கட்டுப்படியானவர்கள், கட்டணம் செலுத்த விரும்புவர்கள் அங்கே சேரலாம். வேண்டாம் என்பவர்கள் அரசுக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்.

9. அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி, தனியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்திலும் தற்போதுள்ள இட எண்ணிக்கையையே பராமரிக்கலாம்.

10. இந்த முறைகள் கடைப்பிடிக்கப்பட்டால், வெளிப்படைத் தன்மை நிலை நாட்டப்படும். இந்த அடிப்படைகளில் நுழைவுத்தேர்வை ஏற்கலாம்.

அடுத்து வரும் ஆண்டுகளில் செய்ய வேண்டியவை:

1. அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும்.

2. மிக முக்கியமாக தேர்வைத் தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும்.

3. அனைத்து வட்டங்களிலும் நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.

4. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் அவ்வப்போது ஏற்படும் எண்ணிக்கை மாற்றத்துக்கு ஏற்ப, அந்த மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். இம்முறையில் நமது மாநிலத்தின் உரிமை பாதுகாக்கப்படும்.

5. இப்படி செய்தால் சமூக நீதி பாதுகாக்கப்படுவது உறுதியாகும்

நுழைவுத் தேர்வினால் ஏற்படும் நன்மைகள் என்ன?.

1. வெளிப்படைத் தன்மை மாணவர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும்

2. இப்படிச் செய்தால் தேசிய அளவில் நாம் இழந்த பெருமையை மீட்கலாம்.

3. இந்திய அளவில் தமிழக மாணவர்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிச்சயமாகக் கூற முடியும்

4. தமிழக மாணவர்களைக் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை.

5. பள்ளிகளில் மதிப்பெண்கள் பெறுவதற்காக மாணவர்கள் காலம்காலமாக சிரமப்படுகிறார்கள். நுழைவுத் தேர்வால் அது தவிர்க்கப்படும்.

6. சரி பாதி மாணவர்கள் குறைந்தது ஆறிலிருந்து பத்து நுழைவுத் தேர்வுகளை எழுதுகிறார்கள். அந்த சிரமம் நிச்சயமாக தவிர்க்கப்படும்.

7. அவற்றுக்காகப் பெற்றோர்கள் படும் அவஸ்தையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

8. சில கல்லூரிகள் பிரபலமானது எப்படி? நுழைவுத் தேர்வை வைத்தே இந்தக் கல்லூரிகள் இன்றும் பிரபலமடைகின்றன. அதுவும் தவிர்க்கப்படும்.

9. அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் நுழைவுத் தேர்வு சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும்.

10. நுழைவுத் தேர்வால் மாணவர்கள் மத்தியில் நிச்சயத்தன்மையும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படும்.

கட்டுரையாளர், மன நல மருத்துவர்

தொடர்புக்கு: mananalamclinic@gmail.com

NEET 2016: SC asks for MCI’s response on holding state-wise exams for medical admission


New Delhi, May 3: Supreme Court on Tuesday sought response of Medical Council of India(MCI) to respond to state Governments’ plea to hold separate exams this year. MCI will submit its reply on Thursday. The Supreme Court was hearing petitions by some states and private medical colleges seeking permission to continue with separate tests for admissions in the MBBS and BDS courses.
The apex court on Monday had appointed to set up a three-member panel to oversee the working of the Medical Council of India (MCI).The panel will be head by former chief justice of India R M Lodha, in regard to the National Eligibility Entrance Test (NEET).
As per Supreme Court’s decision, the first round of NEET was held on May 1. Over six lakh students appeared for it and not those not applied for AIPMT will be given opportunity to appear in the second round on July 24. The combined result will be declared on August 17 and the admission process will be declared by September 30. (ALSO READ: Over six lakh students appear for NEET-I)
Various states, including the associations of private medical colleges were aggrieved by the top court’s Friday order reiterating that admission to undergraduate medical courses will be only through National Eligibility Entrance Test (NEET) to be conducted by the Central Board of School Education (CBSE). The first phase of NEET was conducted on Sunday. (ALSO READ- NEET 2016: MCI and CBSE to conduct 1st phase on May 1 after SC approves NEET schedule for admission to MBBS, BDS)
Those who have not applied for AIPMT will be given opportunity to appear in round two on July 24. The combined result will be declared on August 17, in order to complete the admission process by September 30 – the deadline set by the apex court in its previous orders.
Modified Date: May 3, 2016 3:00 PM

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

DINAKARAN 

பதிவு செய்த நேரம்: 2016-05-03 14:43:32
டெல்லி : மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களின் மனுக்கள் மீது பதிலளிக்க மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. AIMPT தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பது இல்லை என்றும் 25000 மாணவர்கள் மட்டும் விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் நுழைவுத் தேர்வுக்கு சிபிஎஸ்இ மாணவர்களே அதிகம் விண்ணப்பிப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.

Monday, May 2, 2016

பொது நுழைவுத் தேர்வு மறுபரிசீலனை தேவை

THE HINDU TAMIL
மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது அரசியல் சாசனத்துக்கு மாறானது என்றும் கிராமப்புறத்து மாணவர்களைவிட, நகரத்து மாணவர்கள் சலுகையடைவார்கள் என்றும் கூறி 2013-ல் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பு ‘அவசரகதியாக’ வழங்கப்பட்டுவிட்டதாக கடந்த ஏப்ரல் 28 அன்று உயர் நீதிமன்றமே திரும்பப்பெற்றுள்ளது. அதன்விளைவாக, ஞாயிறு அன்று தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது. பொது நுழைவுத் தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு வேண்டும் என்று கோரித் தமிழகம் தாக்கல் செய்த மனுவை வியாழன் அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆந்திரம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களும், கர்நாடகா மருத்துவக் கல்லூரிகள் சங்கம், சி.எம்.சி. வேலூர் ஆகியவையும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

டாக்டர் அனந்தகிருஷ்ணன் கமிட்டியின் அறிக்கையை ஏற்று, ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் 2007-ல் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கான சட்டம் இயற்றப்பட்டதுடன், குடியரசுத் தலைவரின் அனுமதியும் கிடைத்தது. தமிழகத்தின் இந்தச் சட்டம் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளது. அப்போது முதல் தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது அடிப்படையில், மாநில அரசு தனக்குள்ள உரிமைகளின் பேரில் எடுத்துக்கொண்ட நடவடிக்கை.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர ஆண்டுதோறும் ஏறத்தாழ 35 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் எம்பிபிஎஸ் படிப்புக்கான 2,655 இடங்கள் இருக்கின்றன. இதில் 398 இடங்கள் (15%) அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சென்றுவிடும். எஞ்சிய 2,257 இடங்கள், தமிழக அரசின் ஒதுக்கீட்டுக்குக் கிடைக்கும்.

இந்தப் பின்னணியில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கும், தேசியத் தகுதி காண் மற்றும் நுழைவுத் தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது மாணவர்களிடம் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும். இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம்.

பல்வேறு மொழிகள், பாடத்திட்டங்கள், பல்வேறு கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில், பொதுப்பள்ளி முறை இல்லாத ஒரு சூழலில், மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி இடங்களுக்கும் அகில இந்திய அளவில் தகுதிகாண் - நுழைவுத் தேர்வைத் திணிப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல. இந்திய மருத்துவம் படிக்க சம்ஸ்கிருதம் கட்டாயம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. நுழைவுத் தேர்வுகளே இல்லாத காலமும் இருந்தது. அத்தகைய நிலையைத் தாண்டி முன்னேறிச் செல்வதற்காகச் செய்யப்படும் எந்தவொரு நடவடிக்கையும் அனைத்துப் பிரிவு மக்களும் மருத்துவப் படிப்பில் நுழைவதைத் தடுத்துவிடாத அளவுக்கு அக்கறையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

இந்திய அரசியல் சாசனம் வெளிப்படுத்துகிற ஜனநாயகத்தின் ஆன்மாவே சமூக நீதிதான். அப்படிப்பட்ட சூழலில், சமநிலையில் இல்லாத மாணவர்களுக்கு இடையே ஒரே விதமான போட்டியை வைப்பது சரியல்ல. சமூக நீதிக்கு எதிரான எதுவும் ஜனநாயகத்தை முடக்குவதாகவே முடியும். கடைக்கோடி இந்தியனுக்கு எது பயனுள்ளது என்பதைக் கூர்மையான முறையில் மனதில்கொண்டே தனது அடுத்த காலடிகளை இந்திய ஜனநாயகம் எடுத்துவைக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு முதல் கட்ட நுழைவுத் தேர்வை 8 சதவீதம் மாணவர்கள் எழுதவில்லை


தமிழகத்தில் நடந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை 8 சதவீதம் மாணவர்கள் எழுதவில்லை என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நேற்று நடந்தது. நாடுமுழுவதும் 52 நகரங் களில் 1,040 மையங்களில் நடைபெற்ற தேர்வை சுமார் 6.60 லட்சம் மாணவர் கள் எழுதினர். தமிழகத்தில் சென்னை யில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை யில் 39 மையங்களில் நடந்த தேர்வை எழுத சுமார் 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 2-ம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடக்கிறது. தேர்வு முடிவுகள் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப் பட உள்ளது. இதுபற்றி தமிழகத்தில் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் கேட்ட போது, “நாடு முழுவதும் எவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. தமிழகத்தில் மட்டும் தேர்வுக்கு விண்ணப்பித்த சுமார் 26 ஆயிரம் மாணவர்களில் 8 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை” என்றனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “நாடுமுழுவதும் பல்வேறு விதமான கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன. இந்த நேரத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சிபிஎஸ்இ கல்வி முறையில் நுழைவுத் தேர்வு நடத்தப் படுவதால், கிராமப்புற மாணவர் களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாகிவிடும்.

இந்த நுழைவுத் தேர்வால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்களை வடமாநில மாணவர்கள் பிடித்துவிடுவார்கள். அதனால் நாடு முழுவதும் ஒரே மாதிரி யான கல்வி முறையை கொண்டு வந்த பிறகு, நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும். தற்போது உள்ள முறையில் பிளஸ் 2 கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. புதிய நுழைவுத் தேர்வால் பிளஸ்2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. நுழைவுத் தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்” என்றனர்.

கேரளாவில் பாழடைந்து வரும் எம்ஜிஆர் வீடு

எம்ஜிஆரின் புகழ்பாடி, அவரின் பிரபலத்தை அதிமுக இன்றும் பயன்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் எம்ஜிஆர் சிறு வயதில் வசித்த வீடு, போதிய பராமரிப்பு இன்றி பாழடைந்து வருகிறது.
இலங்கையின் கண்டியி லிருந்து எம்ஜிஆர் குடும்பத்தினர் கேரளத்துக்கு வந்தபோது, அவரது தாயின் பரம்பரை வீடான இங்குதான் குடிபுகுந்தனர். இந்த சிறிய ஓட்டு வீட்டில்தான் எம்ஜிஆர் தனது சிறு வயதைக் கழித்தார். பிற்காலத்தில் தமிழக முதல்வராக இருந்தபோதும் அவ்வப்போது தனது பழைய வீட்டை அடிக்கடி பார்க்க வருவார் எம்ஜிஆர்.
பாலக்காட்டிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த வடவன்னூர் கிராமம்.
இந்த வீடு எம்ஜிஆரின் தாய் சத்தியபாமாவின் உறவினர்கள் வசம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவர்கள்தான் வசித்து வந்தனர். பின்னர் அக்குடும்பத் தினர் பாலக்காடு சென்றுவிட்டனர்.
இந்த வீட்டை அங்கன்வாடிக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். எம்ஜிஆரின் 
Inline image 1
பழைய புகைப்படம் தவிர, தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இந்த வீட்டின் சுவரில் மாட்டப்பட்டி ருக்கின்றன. தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அளித்த அதிமுக காலண்டரும் மாட்டப் பட்டுள்ளது.
“இந்த வீடு பராமரிப்பில்லாத தால் பாழடைந்து வருகிறது. தமிழகத்திலிருந்து அதிமுக பிரமுகர்கள் அவ்வப்போது இங்கு வந்து பார்த்தாலும், இது புறக் கணிக்கப்படும் நிலையில்தான் உள்ளது. இது தனியாருக்குச் சொந்தமானது என்பதால், கேரள அரசும் எம்ஜிஆரின் நினைவிடமாக மாற்றுவதில் தயக்கம் காட்டு கிறது” என அங்கவான்வாடி மையத்தின் பகுதி நேர ஆசிரியை எம்.புஷ்பலதா கூறுகிறார்.
“எம்ஜிஆரின் தந்தை மருதூர் கோபாலமேனன், இங்கு அருகி லுள்ள நல்லெப்பிளி கிராமத்தைச் சேர்ந்தவர். கண்டியில் பணி ஓய்வு பெற்ற பிறகு, இங்கு வடவன்னூ ருக்கு வந்துவிட்டார். இங்குதான் சில காலம் வாழ்ந்தனர். அவரின் இறப்புக்குப் பிறகு, எம்ஜிஆரை யும், அவரது அண்ணன் சக்கர பாணியையும் அவர்களின் தாய் கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று விட்டார். கும்பகோணத் தில் வாழ்ந்தபோதுதான், இரு சகோதரர்களும் திரைத்துறையில் நுழைந்தனர்” என சித்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.மயில்சாமி தெரிவித்துள்ளார்.

Sunday, May 1, 2016

18 மாதங்களில் 108 கிலோ அதிரடி எடை குறைப்பு: குண்டு அம்பானி ஸ்லிம் ஆன கதை


சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒரே பேச்சாக இருந்தது அம்பானியைப் பற்றித்தான். அதுதான் அம்பானியைப் பத்தி, அடிக்கொருதரம் பேசிக்கொண்டிருக்கிறார்களே, இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? பதினெட்டு மாதங்களுக்கு முன்பு இரட்டைநாடியைவிடவும் பெரிதாக மகாகுண்டாகக் காட்சியளித்த முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, திடீரென ஸ்லிம்மாக நடந்துவந்தால், எப்படி ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்?

21 வயது அனந்த், 40 வயதுக்கார குண்டு ஆள்போல உடல் பருமன் பிரச்சினையுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் வலம்வந்து கொண்டிருந்தபோது இதே சமூக வலைதளம் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது வெறும் 18 மாதங்களில் 108 கிலோ உடல் எடையைக் குறைத்து ‘சிக்‘ ஆகிவிட்டார். உடல் பருமனை எப்படிக் குறைப்பது என்று தீவிர யோசனையில் இருப்பவர்கள், அஞ்சுபவர்களுக்கு மத்தியில் அனந்த் அம்பானியின் எடைக் குறைப்பு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம் என்ன?

எப்படி நிகழ்ந்தது இந்த மாயா ஜாலம்? துரித உணவு, சமச்சீரற்ற உணவு, நொறுக்கு தீனி, உடற்பயிற்சியின்மை போன்ற பல அம்சங்கள் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. ஏதோ ஒரு நோய்க்குத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள்கூட உடல் பருமன் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதும் உண்டு. சிறு வயதிலேயே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அனந்த், அதற்காக நீண்ட காலமாக மருந்துகள் எடுத்துக்கொண்டார். அவரது உடல் பருமனுக்கு மருந்துகள் ஏற்படுத்திய பக்கவிளைவுதான் காரணம் என்று கூறுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க எடைக் குறைப்பு நிபுணர்கள் பலரைப் பார்த்தும் அனந்த் அம்பானியிடம் எந்த மாற்றமும் இல்லை. இறுதியில் செயற்கை, அதிரடி எடைக் குறைப்பு முறைகளின் பின்னால் ஓடுவதை விட்டு இயற்கை வழியில் உடல் எடையைக் குறைக்க முடிவு செய்தார் அனந்த். இப்போது அவர் நினைத்ததைச் செய்து காட்டியிருக்கிறார். அனந்த் அம்பானி உடல் எடையைக் குறைத்தது எப்படி?, என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்தினார்?:

நடையோ நடை

உடல் எடையைக் குறைக்க முடிவு செய்ததும் அனந்த் அம்பானி செய்த முதல் காரியம் நடைப்பயிற்சி. தினமும் 21 கிலோமீட்டர் தூரம் நடந்திருக்கிறார். பொதுவாக இந்தத் தூரத்தை மெதுவாக நடந்து கடந்தாலே மூன்றரை மணி நேரம் ஆகும். ஆனால், குண்டான உடலை வைத்துக்கொண்டு இந்தத் தூரத்துக்கு அவர் நடந்திருக்கிறார். 21 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி என்பது அரை மாரத்தானுக்கு சமம்.

யோகா

உடலைச் சீராகப் பராமரிக்க உலகெங்கும் யோகா பின்பற்றப்படுகிறது. உடல் எடைக் குறைப்புக்கு அனந்த் அம்பானி, இதைப் பயன்படுத்திக் கொண்டார். டயட், உடற்பயிற்சியை மேற்கொண்டாலும், யோகா மூலம் மனம் ஒருநிலைப்படுத்தப்படும். அவருடைய கவனமும் குறிக்கோளும் ஒன்றை நோக்கி இருக்க உதவும். அதை உணர்ந்து, உடற்பயிற்சியுடன் தினமும் யோகா பயிற்சி யையும் மேற்கொண்டுவந்தார் அனந்த்.

டயட்

உடல் எடைக் குறைப்புக்குக் கார்போஹைட்ரேட் குறைவான உணவை உட்கொண்டதோடு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவை அனந்த் முற்றிலும் தவிர்த்தார். துரித உணவு, அரிசி உணவு, சர்க்கரை அதிகமாகக் கலந்த உணவு, குளிர்பானங்களுக்கு விடை கொடுத்துள்ளார். அதேசமயம் புரதச்சத்து நிறைந்த உணவையும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவையும் உண்டுள்ளார். நார்ச்சத்துமிக்க பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொண்டுள்ளார்.

வெயிட் டிரெய்னிங்

வெயிட் டிரெய்னிங் உலக அளவில் தற்போது பிரபலமாகிவருகிறது. குறிப்பாக, உடல் எடையைக் குறைப்பவர்கள் இதையும் பின்பற்றுகிறார்கள். இந்தப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் தசைகள் வலிமையடையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.

ஃபங்ஷனல் டிரெய்னிங்

ஃபங்ஷனல் பயிற்சி என்பது ஒட்டுமொத்த உடலையும் பயன்படுத்தித் தொடர்ச்சியாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சி. முறையான பயிற்சியாளர் ஒருவருடைய மேற்பார்வையில் இதைச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியையும் அனந்த் செய்திருக்கிறார்.

இப்படியாகத் தீவிர முயற்சியுடன் மாதத்துக்கு ஆறு கிலோ வீதம் உடல் எடையைக் குறைத்துவந்துள்ளார் அனந்த் அம்பானி. உடல் எடையை வேகமாகக் குறைக்க நினைத்தால் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. ஆகவே, அனந்த் அம்பானி சரியான வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து, இயற்கை வழியைப் பின்பற்றியதால் உடல் எடையைப் பிரச்சினையில்லாமல் குறைக்க முடிந்திருக்கிறது.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை!

உலகச் சுகாதார நாள்: நீரிழிவை வெல்வோம்

கொஞ்சம் அசந்தால் பார்வை பறிபோகும்









உலகச் சுகாதார நாள்: நீரிழிவை வெல்வோம்

‘உங்களுக்கு சுகர் இருக்கா?’ உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவரிடம் சென்றால், மருத்துவர் முதலில் கேட்கும் கேள்வி பெரும்பாலும் இதுவாகத்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு நீரிழிவு நோய் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், அதனுடனேயே மகிழ்ச்சியாக வாழலாம்.

அப்படி இல்லாமல், கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறும்போது நீரிழிவு நம்மைப் பாடாய்ப்படுத்திவிடும். அதன் பக்கவிளைவுகளைத் தவிர்க்க முடியாது. மூளை, நரம்பு மண்டலம், கால்கள், இதயம், சிறுநீரகம், கண்கள் போன்றவை பாதிக்கப்படலாம். அதனால் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம்.

ஏன் பக்க விளைவு?

நீரிழிவு நோய் இருப்பது தெரியாமல், அதனால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் நீரிழிவு நோய் இருப்பது தெரிந்தே பாதிப்புக்கு உள்ளாகுபவர்களை என்ன செய்வது? இவர்கள் நீரிழிவு நோய்க்கு ஒரு சில மாதங்களுக்கு மாத்திரையைச் சாப்பிட்டு இருப்பார்கள். பிறகு வாயைக் கட்டுப்படுத்த முடியவில்லை, வயிற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை, நேரத்துக்கு மாத்திரையை ஒழுங்காகச் சாப்பிட முடியவில்லை, என் வேலை சூழ்நிலை அப்படி என்று மருந்துகளைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, பின்னர்ப் பக்கவிளைவுகளால் துன்பப்படுவார்கள்.

சிலர், ‘உணவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன், வாக்கிங் போகிறேன். இதுவே போதும்’ என்று அவர்களாகவே முடிவு செய்து மாத்திரையை நிறுத்திவிடுவார்கள். இன்னும் சிலர் ‘அந்த மருந்தைச் சாப்பிட்டால் சரியாகும் - இதைச் சாப்பிட்டால் உடனே சர்க்கரை குறையும்’என்று யார்யாரோ சொல்வதைக் கேட்டு, கண்ட கண்ட மருந்தை இவர்கள் போக்குக்குச் சாப்பிடுவார்கள். இப்படி முறையான சிகிச்சையைத் தவிர்ப்பவர்கள் அனைவரும், சில காலம் கழித்துப் பக்கவிளைவுகளால் துன்பப்படுவார்கள். இது பலருக்கும் பார்வைப் பாதிப்பு போன்ற பிரச்சினைகளாக நீள்கிறது.

விழித்திரை பாதிப்பு

நீரிழிவு நோயால் கண்புரை, கண் நீர்அழுத்த உயர்வு, நீரிழிவு நோய் விழித்திரைப் பாதிப்பு முதலியன ஏற்படலாம். பார்வை நரம்புகளும் பாதிக்கப்படலாம். இதில் நீரிழிவு நோய் விழித்திரைப் பாதிப்பைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

நீரிழிவு நோய் உள்ள அனைவருக்குமே ‘நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு’ ஏற்பட வாய்ப்புண்டு. நீரிழிவு நோயின் கால அளவை பொறுத்துக் கண்ணில் பாதிப்பு ஏற்படுகிறது. கண்ணின் விழித்திரை நல்ல நிலையில் இருந்தால்தான், அதில் விழும் உருவங்கள் தெளிவாகத் தெரியும். ஆனால் விழித்திரைப் பாதிப்பில், விழித்திரைக்கான ரத்தக் குழாய்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டு விழித்திரை பாதிக்கப்படுவதால் பார்வை குறைவு ஏற்படுகிறது. இதில் வருத்தமான செய்தி என்னவென்றால், இவ்வாறு ஏற்பட்ட பார்வையிழப்பை மீட்கவே முடியாது. சில நேரம் விழித்திரை மற்றும் பின் கண்ரசத்தில் புதிய ரத்தக் குழாய்கள் உருவாகலாம். இந்தப் புதிய ரத்தக் குழாய்களில் சில நேரம் ஏற்படும் சுருக்கத்தால் விழித்திரை அதன் அடுக்கிலிருந்து பிரிந்தும் (Retinal Detachment) பார்வையிழப்பு ஏற்படலாம்.

லேசர் மருத்துவம்

நீரிழிவு நோய் விழித்திரைப் பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதை முற்றிலும் குணப்படுத்த முடியாது. லேசர் மருத்துவத்தின் மூலம் விழித்திரை ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட கசிவைச் சரிசெய்து, கூடுதல் பாதிப்பு ஏற்படாமல் பார்வையைப் பாதுகாக்கலாம். ஆனால், ஏற்கெனவே இழந்த பார்வையை மீட்க முடியாது. பாதிப்பின் தன்மையைப் பொறுத்துச் சிலருக்கு விட்ரெக்டமி என்ற அறுவைசிகிச்சையைச் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்தி, கண்களையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்துவருவதன் மூலம் பாதிப்பு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

வருமுன் காப்பது

35 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரச்சினை இல்லாவிட்டாலும்கூட ஆண்டுக்கு ஒருமுறையாவது நீரிழிவு நோய் இருக்கிறதா என்று ஆய்வு செய்துகொள்வது நல்லது. இந்த வயதில் கண்ணில் அரிப்பு, கண்ணில் தொற்று, கண்கட்டி, கண்ணில் நீர் கசிவு, பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஏற்பட்டாலும், நீரிழிவு நோய் இருக்கிறதா என்று ஆய்வு செய்துகொள்வது நல்லது.

நீரிழிவு நோய்க்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவம் செய்துகொள்வது சற்றுக் கடினமான ஒன்றுதான். அன்றாட பணிகளுக்கு இடையில் அடிக்கடி சலிப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனால் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதன்மூலம் பக்கவிளைவுகள் இன்றி நலமாய் வாழலாம் - பார்வையையும் பாதுகாக்கலாம் எனும்போது ஏன் அலட்சியமாய் இருக்க வேண்டும்?

கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

தொடர்புக்கு: veera.opt@gmail.com

மோர் இன்றி அமையாது உலகு


கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. இயற்கையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க வணிகப் பானங்களால் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வேனிற் காலத்தில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதோடு பல ஆரோக்கியப் பலன்களையும் தருகிறது.

குறுந்தொகையில்...

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து மகிழ்வித்ததாகக் குறிப்பிடுகிறது. மோரானது பானமாக மட்டுமன்றி, பண்டைய காலம் முதல் சமையலிலும் முக்கிய இடம்பெற்று உடலைச் சீராக்கியுள்ளது. நமது வாழ்வோடு பயணித்த மோரின் சிறப்புகளைப் பார்ப்போம்:

செரிமானப் பாதை சீராக

உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் காரணங்கள் பல. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வேனிற் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு - குடல் சார்ந்த உபாதைகளை மோர் சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்ந்த தாளித்த மோர், பல குடும்பங்களில் இன்றும் இடம்பெறும் அற்புதச் செரிமானப் பானம்.

மருந்தாகும் மோர்

கலோரிகள் நிறைந்த செயற்கை பானங்களுக்கு நடுவில், கலோரிகள் குறைந்த மோரானது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து. மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்திவருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும். கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது. தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், நோய் விரைவில் குணமடையும். வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறும்.

திரிதோஷ சமனி

“மோருண வளிமுதன் மூன்றையுமடக்கி” எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மோரானது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தும் என்று குறிப்பிடுகிறது. உடலில் உண்டாகும் வீக்கம், ரத்தக் குறைவு, பேதி, பசியின்மை, தாகம், உடல் வெப்பம் போன்றவற்றுக்குப் பசுவின் மோர் சிறந்தது. கறிவேப்பிலைப் பொடியை மோரில் கலந்து பருக, பசி அதிகரிப்பதோடு ரத்தச் சிவப்பணுக் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

நீர் சுருக்கி, மோர் பெருக்கி

கிருமிகளை அழிக்க, நீரை நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்தும், மோரின் குணங்களை முழுமையாகப் பெற, மோருடன் அதிக நீர் சேர்த்து, நீர் மோராகவும் அருந்த வேண்டும் எனும் அறிவியலை `நீர்சுருக்கி மோர்பெருக்கி’ என்று அன்றே ஓலையில் செதுக்கினார் தேரையர். மோரின் புளிப்புத் தன்மை நீங்கும் அளவுக்கு நீர் சேர்த்துப் பருகுவதால், புளிப்பு சுவை அதிகரிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்படாது என்பதே சித்தர்களின் சிந்தனை.

அனுபானம்

மோரின் சிறப்பை அறிந்தே, பல சித்த மருந்துகளைத் தயாரிக்க மோர் பயன்படுத்தப்படுகிறது. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சில மருந்துகளின் அனுபானமாகவும் (Vehicle) மோர் பயன்படுகிறது. உடலுக்கு எவ்விதமான தீங்கையும் உண்டாக்காத காரணத்தால் மோரானது பத்தியத்தின்போதுகூடப் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளுள் ஒன்று. மூலம் மற்றும் கருப்பை நோய்களுக்கு, கற்றாழைக் கூழை மோரோடு கலந்து குடிப்பது மிகச் சிறந்தது.

வெயில் காலங்களில்

வேனிற் காலம் எனும் ரதத்தை அழகாக இழுத்துச் செல்லும் சாரதி மோர். வெயில் காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், நீர் சுருக்கு போன்ற உபாதைகள் வராமல் தடுக்க மோர் குடிப்பது அவசியம். மோர் அருந்துவதால் குடற்புண், கண்ணெரிச்சல், கைகால் எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளை மோரில் கலந்து குடிப்பதைத் தவிர்த்து, மண் பானைகளில் குளிரூட்டப்பட்ட மோரைப் பயன்படுத்தலாம். மோரின் குளுமையோடு பானையின் குளுமையும் சேர்வதால் வெப்பத்தைக் குறைக்கும் அற்புதமான பானமாகும். அலுவலகத்துக்குச் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோர், புட்டிகளில் நீருக்குப் பதிலாக நீர்மோரையே தாகம் தணிக்க எடுத்துச் செல்லலாம். மாலை வேளைகளில் டீ, காபிக்குப் பதிலாகச் சீரக மோரைப் பருகலாம். வெயில் காலங்களில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்வதில் மோருக்கு முக்கியப் பங்குண்டு. தாகத்தை நிவர்த்தி செய்து, சிறுநீர் பெருக்கியாக மோர் செயல்படுகிறது.

நஞ்சகற்றி

மது, புகையிலையால் உடலில் சேர்ந்திருக்கும் நஞ்சை வெளியேற்ற, தினமும் புதினா கலந்த மோர் குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உடலில் சேர்ந்த கழிவைச் சிறுநீரின் மூலம் வெளியேற்றும் குணம் மோருக்கு உண்டு. சில வகை உணவுப் பொருட் களுக்கு, மோரானது நஞ்சு முறிவுப் பொருளாகவும் பயன்படுகிறது.

மோருடன் வரவேற்போம்

ஆங்காங்கே `மோர்ப் பந்தல்கள்’ அமைத்து மக்களின் நலம் காத்த வரலாற்று குறிப்புகள் நம்மிடம் ஏராளம் உண்டு. பல ஆயிரம் வருடங்களாக வெயில் காலத்தை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட விருந்தோம்பல் முறை மோர்ப் பந்தல்கள். ஆனால் இன்றைக்கு மோர்ப் பந்தல்கள் குறைந்து, செயற்கை குளிர்பானங்களின் விற்பனை அதிகமாகிவிட்டது. இனிமேலும் விழித்துக்கொள்ளாவிட்டால், நம் ஆரோக்கியமும் பாரம்பரியமும் முற்றிலும் தொலைந்து போகலாம்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

SC refuses to budge, NEET-1 today

NEW DELHI: The first phase of the single entrance test NEET for admissions to MBBS and BDS courses across the country will be held on Sunday as the Supreme Court on Saturday refused to accord an urgent hearing of a plea seeking modification of its earlier order.



A three-judge bench headed by Chief Justice T S Thakurdid not allow the plea seeking urgent hearing for modification of the April 28 order passed by another bench with regard to the National Eligibility Entrance Test (NEET).

"Nothing will happen in the meantime. Matter had been heard by the bench and it is over for now. Please allow the examination to be conducted," the bench, also comprising Justices A K Sikri and R Banumathi said.

The observation came when lawyers, representing some students, said that the order on NEET needed to be modified as students who had prepared for the state-level entrance exams will find it difficult to prepare for the NEET in such a short span of time. 
The apex court, for the time being, refused to entertain the plea and asked the lawyers concerned to file an application which would be heard by the regular bench, hearing the case. The SC had yesterday said that the entrance test for admission to MBBS and BDS courses for the academic year 2016-17 will be held as per the schedule through the twophased common entrance test NEET on May 1 and July 24.


Centre had yesterday approached the apex court for modification of its April 28 order and had sought that state governments and private colleges be allowed to hold separate entrance examinations for MBBS and BDS courses for 2016-17 saying there was a lot of confusion arising out of it.
The SC had in its order cleared the decks for the holding of NEET in two phases for the academic year 2016-17 in which around 6.5 lakh candidates are likely to appear.


It had approved the schedule put beforefor treating All India Pre-Medical Test fixed for May 1 as NEET-1. It had said those who had not applied for AIPMT will be given the opportunity to appear in NEET-II on July 24 and the combined result would be declared on August 17.

அதிரடி யு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்க அரசு திட்டம் நிகர்நிலை பல்கலைகளுக்கு கட்டுப்பாடு தளர வா ய்ப்பு

புதுடில்லி: நிகர்நிலை பல்கலைகள் தொடர்பான சில விவகாரங்களை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு சரியாகக் கையாளவில்லை என, மத்திய அரசு கருதுகிறது; எனவே,
அதன் அதிகாரங்களை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் உள்ள, 'பிட்ஸ்' எனப்படும், பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையம், மும்பை, நார்ஸி மாஞ்சி மேலாண்மை கல்வி மையம், டாடா அடிப்படை ஆராய்ச்சி கல்வி மையம் உள்ளிட்ட புகழ்பெற்ற சில கல்வி நிறுவனங்களுடன், அவற்றின் விரிவாக்கத் திட்டங்களுக்கு எதிராக, யு.ஜி.சி., உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இவற்றை எதிர்த்து, இக்கல்வி நிறுவனங்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன.

யு.ஜி.சி., கடிதம்

கடந்த ஆண்டு, நவம்பரில், கல்வி மைய வளாகத்துக்கு வெளியே செயல்படும், மையங்களை மூடிவிடுமாறு, 10 கல்வி நிறுவனங்களுக்கு, யு.ஜி.சி., கடிதம் எழுதியது. இந்த நிறுவனங்கள், விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை எனக் கூறி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கடிதங்கள் எழுதியுள்ளன. யு.ஜி.சி.,யின் உத்தரவுக்கு எதிராக, பிட்ஸ் கல்வி மையம், கோர்ட்டில், இடைக்கால தடையுத்தரவு பெற்றுள்ளது.மத்திய அரசின் நிர்வாக உத்தரவு மூலம், நிகர்நிலை பல்கலையை உருவாக்குவதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும், 123 நிகர்நிலை பல்கலைகள் உள்ளன. நிகர்நிலை பல்கலைகள் விஷயத்தில், யு.ஜி.சி., அத்துமீறி நடப்பதாக,
மத்திய அரசு கருதுகிறது. இது பற்றி, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'யு.ஜி.சி., பிறப்பித்த உத்தரவுகளால், அதிகளவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த குழப்பங்களை சரிசெய்ய வேண்டிய தருணம் வந்து விட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நம்புகிறது' என, தெரிவித்தார். மற்றொரு மூத்த அதிகாரி கூறியதாவது:நிகர்நிலை பல்கலைகள் மீதான புகார்கள் வெகுவாகக் குறைந்து வருகின்றன. 2014ல், 268 புகார்கள் கூறப்பட்டன. 2015ல், புகார்களின் எண்ணிக்கை, 112 ஆகக் குறைந்துள்ளது. சமீபத்தில், உயர்கல்வித்
துறை செயலர், யு.ஜி.சி., நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில்,
விவாதிக்கப்பட்ட பிரச்னை குறித்து ஆராய, சிறப்புக்குழு அமைக்கப்பட்டுஉள்ளது. அக்குழு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும். நிகர்நிலை பல்கலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆராயப்பட வேண்டும். கல்வித் துறையில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும்,
சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சிறப்பான கல்வி அளிக்கும் நிறுவனங்களை பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டும். யு.ஜி.சி.,க்குள்ள அதிகாரங்களை, என்.ஏ.ஏ.சி., எனப்படும், தேசிய மதிப்பீடு மற்றும் தர அங்கீகார கவுன்சில், மறுபரிசீலனை செய்யலாம். கல்வி
நிறுவனங்களின் தரத்தை, வெகு காலமாக ஆராய்ந்து, அவற்றுக்கு தரச்சான்றுகளை, என்.ஏ.ஏ.சி., வழங்கி வருகிறது.

பரிசீலனை


யு.ஜி.சி., ஆய்வுக்கான நிபுணர்களை தேர்வு செய்யும் நடைமுறை பற்றி தெரிவிக்கப்படவில்லை. எனவே, யு.ஜி.சி.,யின் நடவடிக்கைகளில் தவறு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அது, தவறான தகவல்களை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, யு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்கும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு மூத்த அரசு அதிகாரி கூறினார்.


அரசு நடவடிக்கை


நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிகர்நிலை பல்கலைகளின் நிதிக் குழுக்களில், யு.ஜி.சி.,யின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவோரின் பெயர்களை அளிக்குமாறு, ஏற்கனவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கேட்டுள்ளது. நிகர்நிலை பல்கலைகளின் மேலாண்மை குழுக்களுக்கு, யு.ஜி.சி.,யின் பிரதிநிதிகளை அனுப்பும்போதும், அதேபோன்ற முறையை

Advertisement

பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்மிருதி இரானி உறுதி

நாடு முழுவதும் உள்ள, 300க்கும் மேற்பட்ட பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்,
யு.ஜி.சி.,யின் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்
துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், கடந்த மார்ச்சில் புகார் தெரிவித்துள்ளன. அவற்றிற்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் ஸ்மிருதி இரானி
உறுதியளித்துள்ளார்.இது குறித்து, இந்திய கல்வி மேம்பாட்டு சமூகம் என்ற அமைப்பின் தலைவர், ஹரிவன்ஷ் சதுர்வேதி கூறுகையில், ''யு.ஜி.சி., போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகள், தனியார் கல்வி நிறுவனங்கள் சிறப்பான வகையில் செயலாற்ற
உதவுபவையாக இருக்க வேண்டும். பல்கலையுடன் இணைப்பு பெற்ற கல்லுாரிகள் சிறப்பான வகையில் செயல்பட்டால், அவற்றிற்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்,'' என, தெரிவித்தார்.

விதிமுறை என்ன?


கடந்த, 2010ல் உருவாக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ், நிகர்நிலை பல்கலைகளின் செயல்பாட்டை, யு.ஜி.சி., எப்போது வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம்; பல்கலைகளில் அளிக்கப்
படும் வசதி வாய்ப்புகளை, மதிப்பீடு செய்யலாம். நிபுணர் குழுக்கள் அளித்த பரிந்துரைகளை, நிகர்நிலை பல்கலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை, யு.ஜி.சி., உறுதி செய்யலாம்.

மருத்துவ நுழைவுத் தேர்வும், பறிபோகும் மாநில உரிமைகளும்! Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/medical-entrance-exam-state-s-rights-252527.html

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத் தேர்வுதான் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 28 ம் தேதியன்று தீர்ப்பளித்து விட்டது. இந்தாண்டு முதலே இது நடைமுறைக்கும் வருகிறது. இதன்படி மே 1 ம் தேதியும், ஜூலை 24 தேதியும் தேர்வுகள் நடக்க வேண்டும். நுழைவுத் தேர்வை கேட்ட மாநிலங்களில் மே 1 ம் தேதியும், தேர்வு வேண்டாம் என்று கூறிய மாநிலங்களின் வசதிக்காக ஜூலை 24 ம் தேதியும் தேர்வு நடக்கிறது. மருத்துவக் கல்வியின் தரம் மிகவும் குறைந்து விட்டதென்று கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த போதுதான் இந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஏற்கனவே 2013 ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த நுழைவுத் தேர்வு சட்டப்படி செல்லாதென்று கூறி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்தாண்டு ஏப்ரலில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த உத்திரவை திரும்பப் பெற்றுக் கொண்டு நுழைவுத் தேர்வுக்கு அனுமதி வழங்கியது. தற்போது மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) சிபிஎஸ்ஈ ஆகியவையும், மற்றும் பல மாநிலங்களும் நுழைவுத் தேர்வை ஆதரித்தன. தமிழகம், கேரளம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் நுழைவுத் தேர்வை எதிர்த்தன. ஆனால் எதிர்ப்புகள் புறந்தள்ளப்பட்டு தற்போது இந்தியா முழுமைக்கும் எந்த மருத்துவக் கல்லூரியில் சேருவதாக இருந்தாலும், அதாவது மாநில அரசுகள், மத்திய அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ராணுவம் நடத்தும் எந்த மருத்துவக் கல்லூரியில் சேர்வதானாலும் இந்த நுழைவுத் தேர்வுதான் ஒரே தேர்வாகும். இதனால் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த 90 விதமான தேர்வுகள் செல்லாதவையாகின்றன. இந்த உத்திரவால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழகம்தான். காரணம் 2006 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு தொழிற்கல்வி சேர்க்கை முறைப்படுத்துதல் சட்டத்தின்படி தமிழகத்தில் 2007 ம் ஆண்டு முதல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான சேர்க்கை ப்ளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் நடக்கிறது. இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதால், நேற்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்தை கட்டுப்படுத்தாது என்று திமுக வும், சில சட்ட நிபுணர்களும் கூறுகின்றனர். ஆனால் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதற்குமான தீர்ப்பு என்பதால் தமிழகம் இதிலிருந்து தப்ப முடியாதென்று வேறு சிலர் வாதிடுகின்றனர். இதனிடையே தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் வெள்ளிக் கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்தாண்டு தங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளன. மே 1 ம் தேதி தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமையில் அப்பட்டமாக தலையிடுவதாகும் என்று கூறுகிறார் சமூக சமுத்துவத்துக்கான மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜி.ரவீந்திரநாத். "இது மாநில உரிமைகளில் தலையிடுவதாகும். மத்திய அரசு கட்டுப் பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளட்டும். கல்வியும், சுகாதாரமும் பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்கள். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள சட்டத்திற்கு மாற்றாக வந்துள்ள இந்த தீர்ப்பு அப்பட்டமாக மாநில உரிமைகளில் தலையிடுவது மட்டுமல்ல, இது நிச்சயமாக அதீதமான நீதி மன்ற தலையீடு (judicial over reach). அதே சமயம் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை வெறும் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் நடைபெற முடியாது. நுழைவுத் தேர்வுகள் அவசியம்தான். அது மாநில அரசால் நடத்தப் பட வேண்டும்,'' என்கிறார் ரவீந்திரநாத். தமிழ் நாட்டில் மே மாதம் அமையவிருக்கும் புதிய அரசுக்கு எடுத்த எடுப்பிலேயே பெரியதோர் தலைவலி காத்திருப்பது கண்கூடாகவே தெரிகின்றது. இதனிடையே 12 ஐந்தாவது திட்டத்துக்கான சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் கொள்கை வகுப்பிற்காக உருவாக்கப் பட்டிருக்கும் 31 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு இந்திய மருத்துவ கவுன்சிலில் (என்சிஐ) நிலவும் பூதாகரமான ஊழல்தான் இந்தியாவில் மருத்துவ சேவைகளும், மருத்துவ கல்வியும் படு மோசமாக இருப்பதற்கு காரணமென்று சமீபத்தில் தெரிவித்துள்ளது. 1. மருத்துவ கல்லூரிகளுக்கான அனுமதி மற்றும் ஆய்வில் (inspection) பெரிய தொகை கை மாறுகிறது. 2. நாட்டில் ஆண்டுதோறும் போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் 3. 70 கோடி மக்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கு (specialist care) வாய்ப்பு இல்லை. 4. 80 சதவிகித சிறப்பு மருத்துவர்கள் நகர்ப்புறங்களில்தான் உள்ளனர். 5. மருத்துவ துறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்காக ஜூலை 2014 ல் என்டிஏ அரசு நியமித்த பேராசிரியம் ரன்ஜித் ராய் சவுத்திரி கமிட்டியின் அறிக்கை உடனே அமல் படுத்தப் பட வேண்டும். 6. எம்சிஐ க்கு மாற்றாக தேசீய மருத்துவ ஆணையகம் (National Medical Commission) ஒன்று ஏற்படத்தப் பட வேண்டும், ஆனால் எந்தளவுக்கு இந்தப் பரிந்துரைகள் செயற்படுத்தப் படும் என்று தெரியவில்லை. அரசியல் வாதிகள் அடிக்கும் கொள்ளையின் முக்கியமான வடிகாலாக இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் சீர்திருத்தங்கள் அவ்வளவு சுலபமல்லதான். இந்த பின்புலத்தில் பார்த்தால் நேற்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பெரியதாக எந்த மாற்றமும் வரப் போவதில்லை என்பதே எளிய உண்மை!

மே 1 - அஜித் குமார் 44-வது பிறந்ததினம்


மே 1 - அஜித் குமார் 44-வது பிறந்ததினம்

செலவிலான விளம்பரங்களுடன் வெளியாகும் பல படங்கள் விளம்பரச் செலவைக்கூட வசூலிப்பதில்லை. ஆனால், அஜித் படம் என்றால் விளம்பரம் குறைவாகத்தான் இருக்கும்; வசூலோ கோடிகளை அள்ளும். காரணம் அஜித் மட்டுமே!

பெரும் எப்போது அஜித் கால்ஷீட் தேதிகள் கிடைக்கும் என்று பல தயாரிப்பாளர்கள் ஏங்கிவருகிறார்கள். காரணம் அவர் நடிக்கும் படங்களின் வசூல். ஒரு படம் ஒப்புக்கொண்டால் அதில் அஜித் காட்டும் ஈடுபாடு மிகவும் அலாதியானது. ‘வேதாளம்' படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பின்போது காலில் அடிப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியபோது, படப்பிடிப்பை முழுக்க முடித்துவிட்டுதான் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது ‘வேதாளம்' படத்தின் அணியுடன் மீண்டும் இணையவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

இணையத்தில் ஆதிக்கம்

சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தும் ரசிகர் கூட்டங்களில் அஜித் ரசிகர்கள் அதிகம். அஜித் படத்தைப் பற்றி ஒரு செய்தி வெளியிட்டால் கண்டிப்பாக அது முதன்மை பெறும். காரணம், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு. அவருடைய திருமண நாள், மகள் - மகன் பிறந்த நாள் என எதுவாக இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்வார்கள். தனது மகனுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அந்த அலுவலகம் வந்த நாளில், இணையத்தை அஜித் மகன் புகைப்படங்களே ஆட்கொண்டன.

சர்ச்சைகளும் அஜித்தும்

அஜித்தை ரசிகர்கள் பெரும்பாலும் திரையில் மட்டுமே காண முடியும். தனது படத்தின் இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே அஜித் தலைகாட்டுவதில்லை என்பது ரசிகர்களின் தீராத ஆவலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதுவே அவருடைய படங்களின் பெரிய வசூலுக்கு ஒரு காரணம் என்று விநியோகஸ்தர் ஒருவர் சொல்கிறார். அஜித்தைப் பற்றித் தவறாகவோ கிண்டலாகவோ யாராவது பேசினாலோ எழுதினாலோ மொத்த ரசிகர்களும் ஒன்றிணைந்து திட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

பொதுவாகத் திரையுலகில் எல்லாத் தரப்பிலும் நல்ல பெயர் எடுத்திருக்கும் அஜித், சில சமயம் சர்ச்சைகளிலும் மாட்டிக்கொள்கிறார் எனலாம். சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலின்போது, போட்டியிட்ட இரண்டு அணியினரும் அவரைச் சந்திக்க வேண்டும் என்றபோது அஜித் யாரையும் சந்திக்கவில்லை. காரணம், தனக்கு ஒரு பிரச்சினை என்று வந்தபோது நடிகர் சங்கத்தினர் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை என்ற வருத்தம்தான் என்கிறார்கள். நட்சத்திர கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட விஷயங்களுக்காகப் பேசியபோதுகூட அஜித் யாரையும் சந்திக்க விரும்பவில்லையாம். கிரிக்கெட் போட்டிக்கான அழைப்பிதழைக்கூட அவர் வீட்டின் காவலாளியிடம்தான் கொடுக்க முடிந்ததாகக் கூறுகிறார்கள்.

தன்னைச் சுற்றி எழும் சர்ச்சைகளில் அஜித் பொதுவாகக் கருத்து தெரிவிப்பதில்லை. அதே சமயம், சர்ச்சைகளுக்குத் தூபம் போட்டு வளர்க்கும் விதத்தில் எதையும் செய்வதும் இல்லை. கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்தில் ஒலித்த அஜித் பாடலை விஷால் நிறுத்தினார் என்ற சர்ச்சை எழுந்தபோது அவரிடம் போய் அதைச் சொல்லியிருக்கிறார்கள். “நீங்கள் அங்கிருந்தீர்களா, இல்லையென்றால் அங்கிருந்தவர்கள் சொன்னார்களா?” என்று கேட்டிருக்கிறார் அஜித். “இல்லை… செய்தி வெளியாகி யிருக்கிறது” என்ற கூற “Leave it” என்று சொல்லிவிட்டாராம் அஜித்.

“பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா'வில் அஜித் பேசியது சர்ச்சையான பிறகுதான் அவர் நிறைய மாறிவிட்டார் என்கிறார்கள். ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருக்க ஆரம்பித்தவுடன் அவரது புகழ் மேலும் உயர்ந்து வருகிறது” என்று அஜித்தின் நண்பர்கள் சொல்கிறார்கள்.

மவுனமே ஆயுதமா?

கடின உழைப்பு, ரசிகர்களின் மகத்தான ஆதரவு என அவரைச் சுற்றி பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் சமீபத்திய சர்ச்சைகளுக்கு மவுனமே பதில் என்பது சரியானதில்லை என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது. நடிகர் சங்கத் தேர்தல், நடிகர் சங்கக் கடன் ஆகிய விஷயங்களில் ஒரு நடிகராக அஜித் மவுனத்தை மட்டுமே தனது பங்களிப்பாகத் தருவது சரியல்ல என்று பலர் கருதுகிறார்கள்.

அஜித்தின் திரைப்படங்கள் குறித்தும் ஒரு விமர்சனம் உள்ளது. பெருந்திரளான ரசிகர்களும் பெரும் வசூலுக்கான உத்தரவாதமும் கொண்ட அஜித் வித்தியாசமான முயற்சி எதிலும் ஈடுபடுவதில்லை. நடிக்கத் தொடங்கியபோது வித்தியாசமான பாத்திரங்களின் மீதும் நுட்பமான நடிப்பின் மீதும் அவருக்கு இருந்த ஆர்வம் இப்போது காணாமல் போய்விட்டது. வசூல் நாயகனாக மட்டும் இருந்தால் போதும் என்று அவர் நினைக்கிறாரா? இந்தித் திரையுலகில் மாபெரும் சூப்பர் ஸ்டார்கள்கூட அவ்வப்போது வித்தியாசமான, அர்த்தமுள்ள முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அவை வெற்றியும் பெறுகின்றன. அதுபோன்ற முயற்சிகளில் அஜித் ஏன் ஈடுபடுவதில்லை என்னும் கேள்வியும் எழுகிறது.

எப்படியிருப்பினும் அஜித்தின் கலையாத மவுனம், திரையுலகில் தனித்த, நிகழ்காலப் பண்பாளர்களில் ஒருவராக அடையாளம் காட்டுவதை அவரது போட்டியாளர்கள் கூட ஒப்புக்கொள்கிறார்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித்!

அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ப்ளஸ், மைனஸ் என்ன என்பதைப் பட்டியலிட்டுங்கள் என 'தி இந்து' தமிழ் இணையத்தில் கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு வாசகர்கள் தங்களுடைய பதில்களைக் குவித்திருந்தார்கள். அவற்றில் தேர்ந்தெடுத்த சில..

ரமேஷ்குமார்:

பலம்: தனித்தன்மை - மற்ற சக நடிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட பார்வை, முன்மாதிரி - சினிமா ஒரு தொழில் என்பதை உணர்ந்த , உணர வைத்த மனிதர், பெப்சி பிரச்சினையில் தொழிலாளர் பக்கம் நின்று தோள்கொடுக்கும் தன்மை, தைரியம் - முதல்வர் முன் நின்று தனது பார்வையையும் வேண்டுகோளையும் வைத்தவர், அழகானவர், ஆனால் அழகை மட்டும் நம்பிச் செயல்படாதவர் (salt & pepper look), தோல்விகளில் துவளாதவர், மிகப் பெரிய ரசிகர் வட்டம் கொண்டவர்.

பலவீனம்: நடனம் மற்றும் உடல்வாகு - முதுகுத் தண்டுவடம் ஆபரேஷன் ஒரு காரணம். எளிதில் தொடர்புகொள்ள முடியாத நிலை, ஹீரோயிஸம் சார்ந்த கதைகளில் மட்டும் நடிப்பது. புது முயற்சி இல்லாமை.

தினேஷ்:

ப்ளஸ் - நல்ல மனிதர், பிறருக்கு உதவி செய்து அதை ரசித்து பார்க்கும் குணம், ஸ்டைல் & மாஸ், படத்தில் வரும் சிறப்பு வாய்ந்த வசனங்கள்.

மைனஸ்: சமீபத்திய மவுனம், ஃபிட்னெஸ்.

கோவர்தனன்:

ப்ளஸ்: தமிழ் சினிமா நடிகர்களில் தன் சுயலாபத்துக்காக ரசிகர்களைப் பணயம் வைக்காதவர். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றி இயக்குநர்களாக்கியவர். தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றவர். தன் கீழே பணிபுரிபவரையும் தனக்குச் சரிநிகராக நடத்துபவர். ஆதாரம் இல்லாமல் எதையும் நம்பாதவர். யாரையும் எதிரியாக எண்ணாதவர். உதவும் உள்ளம்.

மைனஸ்: இது வேண்டுகோள். வளரும் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் விழியில் உங்களைப் பார்க்க ஆசை அல்லது ஆர்வம்.

புதிய இந்தியன்:

ப்ளஸ்: தன்னுடைய உண்மையான தோற்றத்தில் நடிப்பது, பந்தா இல்லாதது.

மைனஸ்: சில முக்கிய நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது.

சந்தோஷ்:

ப்ளஸ்: மிகப் பெரிய நடிகராக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தன்னடக்கத்துடன் இருப்பது, ரசிகர்ளைத் தங்களின் குடும்பத்தை கவனிக்கச் சொன்னது, யாருக்கும் தெரியாமல் உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்வது

மைனஸ்: தன்னைப் பற்றி வரும் தவறான தகவலுக்கு மறுப்புத் தெரிவிக்காமல் இருப்பது, ரசிகர்களின் தவறான போக்கைக் கண்டிக்காமல் இருப்பது (நல்லது செய்ய சொல்லிருக்கிறார்; ஆனால் எல்லை மீறும்போது கண்டித்தது இல்லை), எல்லாவற்றையும் விட்டு விலகியே இருப்பது.

உலகச் சுகாதார நாள்: நீரிழிவை வெல்வோம்

Saturday, April 30, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? 29 - பயன்தரும் ஆரம்பம்

டாக்டர் ஆ. காட்சன்

இணைய அடிமைத்தன பிரச்சினையில் ஒருவேளை ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷன் அல்லது செயலியில் அதிக நேரத்தை விரயம் செய்தால், அதை ஸ்மார்ட்ஃபோனிலிருந்து நீக்கிவிடுவது நல்லது. மொபைல் ஃபோனில் அலர்ட் அல்லது செய்திகள் வந்துள்ளதை உணர்த்தும் சத்தத்தை நிறுத்தலாம். தேவையற்ற புக் மார்க் மற்றும் தேடுதல் வரலாற்றை (bookmarks and history) நீக்கிவிடலாம். மொத்தத்தில் கணினியை ரீஸ்டார்ட் செய்வதுபோலச் சமூக வலைதளங்களை பார்க்கும் நேரத்தைத் தலைகீழாக மாற்றுவது, பழக்கத் தோஷத்தில் நேரம் விரயமாவதைத் தடுக்க உதவும். உதாரணமாக, இரவில் நேரம்போவது தெரியாமல் பயன்படுத்துபவர்கள் பகலில் அவசியத் தேவைகளுக்குச் சிறிது நேரத்தைத் திருப்பலாம்.

மருந்து தேவைப்படலாம்

தற்போது மனநோய் வெளிப்பாடுகளும்கூட இணையத்தை அதிகமாகப் பயன்படுத்தும் முறையில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்படும்போது, இணைய அடிமைத்தனத்துக்கும் உட்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மன எழுச்சி நோயால் (Mania) பாதிக்கப்படும் இளைஞர்கள் இணையத்தை அதிகம் பயன்படுத்துவது, ஆபாச வலைதளங்களை அதிகம் பார்ப்பது, செல்ஃபோன் கொடுக்காவிட்டால் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது போன்ற அறிகுறிகளுடன் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள், இணையதளத்துக்கும் அடிமையாகவும் வாய்ப்புண்டு. இப்படி மன நோயின் பாதிப்புகளோடு இருக்கும் வளர்இளம் பருவத்தினர் மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது இணைய அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

ஐந்தில் வளையாதது

l சிறு குழந்தைகளை அமைதிப்படுத்தவும் தொந்தரவு இல்லாமல் இருக்கச் செய்யவும் மொபைல் ஃபோன்களை கொடுத்துப் பழக்குவதுதான் இணைய அடிமைத்தனப் பிரச்சினையின் ஆரம்பம். தொட்டில் பழக்கம் கடைசிவரை மாறாமல் போக வாய்ப்பு அதிகம்.

l இணைய விளையாட்டுகளுக்குக் குழந்தைகள் எளிதில் அடிமையாக வாய்ப்புள்ளதால், அவற்றை மொபைல் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

l இணையம், ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்த அனுமதிக்கும் வயதை முடிந்தவரை காலம் தாழ்த்துவது நல்லது. கட்டாயம் தேவைப்படும் நேரத்தில் பெற்றோரின் கண்காணிப்பில் குறைந்த நேரம் பயன்படுத்த அனுமதிக்கலாம்.

l பள்ளி, கல்லூரிகளில் கணினி குறித்த பாடங்களோடு அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தையும் இணைய அடிமைத்தனத்தின் பின்விளைவுகளையும் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.

l வீட்டில் இருக்கும்போது சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும் நேரத்தை வரையறை செய்யவேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடனும், கல்லூரிகளில் இருக்கும்போதும் சமூக வலைதளப் பயன்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

l தேவைப்படும் நேரத்தைத் தவிர மற்ற நேரத்தில் இணையத் தொடர்பை அணைத்து வைப்பது நல்லது. இதனால் அடிக்கடி சோதித்துப் பார்க்கும் எண்ணச் சுழற்சி குறையும்.

(அடுத்த வாரம்: இருதுருவ மனநிலை)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: godson psychiatrist@gmail.com

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...