Friday, July 15, 2016

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டதா?


நான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி?

இமெயில் பயனாளிகள் பலரும் கேட்கக்கூடிய கேள்விதான் இது. இந்தக் கேள்விக்கான தேவையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். மிகவும் முக்கியமான மெயிலை அனுப்பும் நிலையில் அது வாசிக்கப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டலாம். அந்த மெயிலுக்கான பதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இவ்வாறு ஆர்வம் ஏற்படலாம்.

பொதுவாகவே, ஒருவர் படிக்க வேண்டும் என்பதற்காகத்தானே மெனக்கெட்டு மெயில் அனுப்புகிறார். எனவே அது வாசிக்கப்பட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பானதே!

இமெயில் பயனாளிகளில் எத்தனை பேருக்கு இந்தக் கேள்வி எழுகிறது? எப்போது எழுகிறது என்பவை சுவாரஸ்யமான துணைக் கேள்விகள்! இப்போது, இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறியும் வழி இருக்கிறதா? வழி உண்டு. ஆனால் அது உங்கள் இமெயில் சேவையில் இல்லை. தனியே நாட வேண்டும். அதாவது இந்த வசதியை அளிப்பதற்கு என்றே தனியே இணையதளங்கள் இருக்கின்றன.

இத்தகைய சேவைகளைப் பட்டியலிட்டு அவை செயல்படும் விதம் பற்றி விளக்குவதற்கு முன் அடிப்படையான சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறியும் வசதி 'இமெயில் கண்காணிப்பு' என்றே குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் ‘இமெயில் டிராக்கிங்' என்று சொல்லப்படுகிறது. கண்காணிப்பு என்றவுடன் ஒற்று அறிவது அல்லது உளவு பார்ப்பதுடன் ஒப்பிட முடியாது என்றாலும் கூட, இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறிவதற்கான வழிகள் அனைத்தும் ஒருவிதத்தில் கண்காணிப்பு என்று சொல்லக்கூடிய உத்தியையே பின்பற்றுகின்றன. அதனால்தான் இந்தப் பதில் சிக்கலானதாகவும் அமைகிறது.

வழக்கமாக யார் இமெயில் அனுப்பி வைத்தாலும் சரி, பெறுபவர் அதை உடனடியாகப் படித்துப் பார்க்கலாம் அல்லது தாமதமாகப் படிக்கலாம். இல்லை படிக்காமலே 'டெலிட்' செய்துவிடலாம். இது அவரது விருப்பம், உரிமை. அனுப்புகிறவர் இமெயில் பெறும்போதும் இது பொருந்தும்.

பொதுவான இமெயில் அமைப்பில், மெயில் வாசிக்கப்பட்டதா என்பதை உணரும் வழி இல்லை. ‘அவுட்லுக்' போன்ற இமெயில் சேவையில், இதை உறுதி செய்து கொள்வதற்காக, பெறப்பட்டது என்பதைத் தெரிவிக்கும் வசதி இருக்கிறது. ஆனால் அந்த மெயில் படிக்கப்பட்டதா என்பதை அறிய முடியாது.

இந்த இடத்தில்தான் இமெயில் டிராக்கிங் சேவைகள் வருகின்றன. பனானாடேக், பூமாரங், காண்டாக்ட் மன்கி மற்றும் இன்னும் பிற பல சேவைகள் இந்த வசதியை அளிக்கின்றன. குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு மூலம் இந்த வசதியை அளிக்கும் சேவைகளும் இருக்கின்றன.

இந்தச் சேவைகளைப் பயன்படுத்தும் போது அவை ஒருவர் அனுப்பும் இமெயிலில் சின்னதாக ஒரு ஒளிப்படக் குறியீட்டை இடம்பெறச் செய்கின்றன. கண்ணுக்குத் தெரியாத புள்ளியாகக்கூட அது இருக்கலாம். அதில் இருக்கும் எச்.டி.எம்.எல். குறியீடு மூலம் மெயில் பிரிக்கப்பட்டதும், சர்வருக்குத் தகவல் தெரிவிக்கப்படும். இந்தத் தகவல் பயனாளிக்கும் தெரிவிக்கப்படும்.

இதே முறையில் இமெயிலில் அனுப்பும் இணைப்புகள் கிளிக் செய்யப்பட்டனவா என்பதை அறியவும் தனியே ஒரு குறியீடு இணைக்கப்படுகிறது. இந்தச் சேவைகளின் மூலம் இமெயில் எப்போது பிரிக்கப்பட்டது என்பதையும், அதன் இணைப்புகள் கிளிக் செய்யப்பட்டனவா என்பதையும் அறியலாம்.

பொதுவாக மார்க்கெட்டிங் நோக்கில் இமெயில்களைக் கூட்டம், கூட்டமாக அனுப்பி வைப்பவர்கள் தங்கள் முயற்சியின் பலனை அறிய இந்தச் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். தனி நபர்களும்கூட இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். இவற்றில் இலவசச் சேவைகளும் இருக்கின்றன, கட்டணச் சேவைகளும் இருக்கின்றன.

ஆனால் இவையெல்லாம் நூறு சதவீதம் உத்திரவாதமானது என்று சொல்வதற்கில்லை. டிராக்கிங் சேவைகள் அதிகபட்சமாக இமெயில் திறக்கப்பட்ட தகவலைத் தெரிவிக்கின்றன. ஆனால் அது வாசிக்கப்பட்டதன் அடையாளமாக அமையுமா என்பது கேள்விக்குறிதான். மெயில் பெற்றவர் மட்டும்தான் அதை உறுதி செய்ய முடியும்.

இது இமெயில் பயன்படுத்தப்படும் விதத்தின் பக்கவிளைவாக உண்டான பிரச்சினை. இமெயில் அடிப்படையில் இலவசமாக இருப்பதால், அதைத் தகவல் தொடர்புக்காக மட்டும் அல்லாமல், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நோக்கிலும் பயன்படுத்திவருகின்றனர். காசா, பணமா, ஒரு இமெயில்தானே என வர்த்தக நிறுவனங்கள் கூட்டமாக மெயில்களை அனுப்பிவைக்கின்றன.

இவை தவிர மோசடி மெயில்கள், வில்லங்க மெயில்கள், மால்வேர் வாகன மெயில்கள் எனப் பல ரகங்கள் இருக்கின்றன. இவை எல்லாமுமாகச் சேர்ந்து ‘ஸ்பேம்' எனப்படும் குப்பை மெயில்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

இத்தகைய குப்பை மெயில்களில் இருந்து பயனாளிகளுக்குப் பாதுகாப்பு தேவைப்படவே செய்கிறது. இதன் விளைவாகவே மெயில்களைப் படித்துவிட்டோம் எனத் தெரிவிக்கும் வசதி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவை உண்மையான அக்கறையோடு தங்கள் மெயிலுக்கான எதிர்வினையைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

இதற்கான மூன்றாம் தரப்பு தீர்வாகவே மெயில் டிராக்கிங் சேவைகள் அமைகின்றன. ஆனால் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. இது போன்ற சேவைகள் மூலம் மெயில் பிரிக்கப்ப‌ட்ட நேரத்தை அறிவதோடு, அவை பிரிக்கப்பட்ட இடத்தைக்கூட அறியலாம். இது தனியுரிமை மீறலுக்கு வழிவகுக்கலாம்.

மேலும் இணைய விஷமிகள் இதைத் தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே இமெயில் டிராக்கிங் சேவையைப் பயன்படுத்தும் எண்ணம் இருந்தால், அதை மெயில் அனுப்பும்போது தெரிவித்துவிடுவது சிறந்த இணைய அறமாக இருக்கும். அதிலும் வர்த்தக நிறுவனத்தில் இருந்துகொண்டு இதைச் செய்யும் நிலையில் நிச்சயம் இது தொடர்பான நிறுவனக் கொள்கையை அறிந்திருப்பது நல்லது.

பயனாளிகள் நோக்கில் பார்த்தால், தமது இன்பாக்ஸ் தேடி வரும் இமெயிலுக்குள் இப்படி ஒரு வசதி இருப்பதும் அதை அறியாமல் இருப்பதும் திடுக்கிட வைக்கலாம்.

ஆனால் நல்லவேளையாக இதைத் தடுக்கும் வசதியும் உள்ளது. ஜிமெயில் உள்ளிட்ட பெரும்பாலான மெயில் சேவைகளில் செட்டிங் பகுதிக்குச் சென்று , ஒளிப்படம் போன்றவை இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவை தானாகத் திறக்கப் படாமல், ஒளிப்பட இணைப்பைத் திறக்கலாமா என அனுமதி கேட்டு அதன் பிறகே செயல்படும் வகையில் அமைத்துக்கொள்ளலாம்.

ஜெகத்ரட்சகனின் வீடு, மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: வரி ஏய்ப்பு புகாரில் நடவடிக்கை; முக்கிய ஆவணங்கள் சிக்கின


திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவரது வீடு, மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தொழிலதிபரும், கல்வி யாளருமான இவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து வருமானவரித் துறை அதிகாரிகள் ஜெகத்ரட்சகனின் அடையாறு வீடு, மகாலிங்கபுரம் வீடு, குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீடு மற்றும் அலுவல கங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அடையாறில் உள்ள வீட்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெகத்ரட்சகன் வீட்டில் இருந்தார்.

கிழக்கு தாம்பரம் சேலையூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி கள், குரோம்பேட்டையில் உள்ள கல்லூரிகள், வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் உள்ள கல்லூரிகள் ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது. தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல், நிர்வாக அலுவலகங்கள், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரி ஊசுட்டேரியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லும் ஊழியர்களையும் அவர்களது வாகனங்களையும் தீவிர சோத னைக்குப் பிறகே வெளியே அனுப்பினர். புதுச்சேரியில் உள்ள ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான நட்சத்திர விடுதி, வழுதாவூரில் உள்ள அவரது வீடு, தொழில் நிறுவனங்களிலும் வருமானவரித் துறை சோதனை நடந்தது.

உதகை - கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சிகரம் அருகே உள்ள அவரது ஹோட்டலிலும் சோதனை நடந்தது.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி என 40 இடங்களில் 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். தனித்தனி குழுவாக பிரிந்து சென்ற அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் காலை 6 மணி அளவில் சோதனையை தொடங்கினர். இரவு வரை நீடித்தது. சோதனையின்போது ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆவணங் களை வைத்து சம்பந்தப் பட்டவர்களிடம் அதிகாரிகள் விசா ரணை நடத்தினர். இந்த சோதனை குறித்து எந்த தகவல்களையும் கூற முடியாது என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

15 கோடி பறிமுதல்

சோதனையில் சுமார் ரூ. 200 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது. முதல்கட்டமாக கணக்கில் வராத ரூ. 15 கோடியை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.

8 பேர் உயிரை காப்பாற்றிய டாபர்மேன்... 4 நாகங்களுடன் சண்டையிட்டு உயிரிழந்தது!



ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தில்  சேப்கபூர் கிராமத்தை சேர்ந்தவர் திபாகர் ரய்தா, இவர் தனது  வீட்டில் டாபர் மேன் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். அவரது வீட்டை பொறுப்புடன் பாதுகாத்து வந்துள்ளது அந்த டாபர்மேன். 

கடந்த திங்கட்கிழமை அருகிலிருந்த காட்டுப்பகுதியில் இருந்து 4 நாகப்பாம்புகள் திபாகர் ரய்தாவின் வீட்டிற்குள் புகுந்துள்ளன. இதனைக்  கண்ட அவரின் வளர்ப்பு நாய், அந்த 4 பாம்புகளுடன் கடுமையாக  சண்டையிட்டிருக்கிறது. 

முடிவில் 4 நாகப் பாம்புகளையும் அந்த நாய் கடித்துக் கொன்றது. அதே நேரத்தில், நான்கு நாகங்களும் நாயைக் கொத்தியதில் அதன் உடலில் பாம்புகளின் கொடிய விஷம் பரவியது. இதனால் மயங்கிய நிலையில் கீழே விழுந்த டாபர்மேன் உயிரழந்தது. வீட்டருகே தனது செல்லநாயும் பாம்புகளும் இறந்து கிடப்பதைக்  கண்டு திபாகர் ராய்தா அதிர்ச்சியடைந்தார். பின்னர் நிலைமையை ஊகித்து கொண்ட திபாகரும், அவரின் குடும்பத்தினரும் கண்ணீர் சிந்தினர். 

திபாகர் வீட்டில் மொத்தம் 8 பேர் இருந்துள்ளனர். வீட்டிற்குள் பாம்புகள் புகுந்திருந்தால் கண்டிப்பாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். இதனை தெரிந்து கொண்ட அந்த ஐந்தறிவு ஜீவன், 4 பாம்புகளையும் தீரத்துடன் எதிர்த்து போராடி தனது உயிரையும் மாய்த்து கொண்டுள்ளது. நாயின் நன்றியையும், விசுவாசத்தையும் அறிந்த அந்த பகுதி மக்கள் ஏராளமானோர், திரண்டு வந்து மலர்கள் தூவி, தக்க மரியாதையுடன் அந்த டாபர்மேனை அடக்கம் செய்துள்ளனர்.

இந்தியாவில் எந்த ரக போனில் இனி வாட்ஸ் ஆப் இயங்காது?



இந்தியாவில் சில ஸ்மார்ட் போன் ரகங்களில் வாட்ஸ் ஆப் சேவை இந்த ஆண்டு இறுதியில் இருந்து ரத்து செய்யப்படுகிறது.



இந்தியாவில் 95 சதவீத ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சில மொபைல் போன்களில் வாட்ஸ் ஆப் வசதி ரத்து செய்யப்படும் என கடந்த மார்ச் மாதத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்திருந்தது.
னைத்து பிளாக்பெரி, பிளாக்பெரி 10 ரக போன்கள், நோக்கியா எஸ் 40, நோக்கியா சிம்பியன் எஸ் 60, ஆண்ட்ராயிட் 2..1 ஆண்ட்ராய்ட் 2.2 ரக போன்கள், வின்டோஸ் போன் 7.1, ஐபோன் .-3ஜிஎஸ், ஐஓஎஸ் 6 ரக போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வகை ஸ்மார்ட் போன்களில் பாதுகாப்பு வசதிகள் குறைபாடு இருப்பதாக வாட்ஸ்ஆப் சேவை ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

'ஆங்கிலத்தில் பேசத் தெரியாதது அவமானமா?' -மாணவியின் மரணம் சொல்லும் பாடம்

vikatan.com

கல்லூரியில் ஆங்கிலத்தில் பேச முடியாத காரணத்திற்காக, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் பி.காம் மாணவி ஒருவர். " ஆங்கில மோகத்தின் உச்சகட்ட அவலம் இது. தாய்மொழியில் படித்தால் அவமானம் எனக் கற்பிக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" எனக் கவலையோடு பேசுகின்றனர் கல்வியாளர்கள்.

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார் மாணவி ராஜலட்சுமி. மிகுந்த வறுமைச் சூழலுக்கு இடையில் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்தார். முழுக்க தமிழ் வழிக் கல்வியில் படித்தவருக்கு, கல்லூரியின் ஆங்கிலச் சூழல் ஒத்துவரவில்லை. சக மாணவ, மாணவிகளிடையே சரளமான ஆங்கிலத்தில் பேச முடியாமல் வேதனைப்பட்டு வந்திருக்கிறார். நேற்று ராஜலட்சுமியின் தாய் சுசீலா வேலைக்குச் சென்றதும், வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் மாணவி.

தற்கொலைக்கான காரணமாக மாணவி குறிப்பிட்டுள்ள ஒற்றைக் காரணம், ' ஆங்கிலத்தில் பேச முடியாததால் அவமானமாக இருக்கிறது' என்பதுதான். " மாணவியின் மரணம் மிகுந்த வேதனையைத் தருகிறது. தாய்மொழியில் படிக்கும் பொறியாளர்கள் இருந்தால்தான், நமது மாநிலத்தை வளர்த்தெடுக்க முயற்சி செய்வார்கள். சொந்த மொழியில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள்தான், நமது மக்களின் நலன் குறித்து சிந்திப்பார்கள். இங்கு உருவாக்கப்படும் மாணவர்களின் நோக்கமெல்லாம் வெளிநாட்டை நோக்கித்தான் இருக்கிறது. வணிகமயமான கல்விச் சூழலில் ஆங்கிலத்தையே உயர்த்திப் பிடிக்கிறார்கள்" என வேதனையோடு பேச தொடங்கினார் திண்டிவனத்தில் தாய்த் தமிழ் பள்ளியை நடத்தி வரும் பேராசிரியர்.பிரபா கல்விமணி.

அவர் நம்மிடம், " இந்தி மொழி திணிப்புக்கு எதிராக, ' உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' எனச் சொல்லி உயிர்த் தியாகம் செய்தவர்கள் ஏராளம். அந்தத் தியாகத்தின் பலனாக ஆட்சிக்கு வந்தவர்கள், தாய்மொழியை வளர்த்தெடுப்பதற்கு எந்த அக்கறையையும் காட்டாததின் விளைவைத்தான், மாணவியின் மரணம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இது முழுக்க முழுக்க நமது கல்விமுறையில் ஏற்பட்ட குளறுபடி. வெளிநாடுகளில் பத்து லட்சம் மக்கள் இருக்கக் கூடிய மாநிலங்களில் உயர்கல்வி படிப்பு முழுவதையும் தங்கள் மொழியிலேயே கற்றுக் கொள்கிறார்கள். அதன்மூலம் எண்ணற்ற கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்துகிறார்கள். பத்து கோடி மக்கள் பேசக் கூடிய தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தை நோக்கி ஓட வைக்கிறார்கள்.

கற்றுக் கொள்வேன்' எனக் கூறும் சமூகத்தை உருவாக்க வேண்டும். கடந்த தி.மு.க ஆட்சியில் பொறியியில் படிப்பில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட மூன்று படிப்புகளை தமிழில் கொண்டு வந்தார்கள். எங்கள் தாய்த் தமிழ்ப் பள்ளியில் படித்த அகிலா என்ற மாணவி, தாய்மொழியில் பொறியியல் படித்து வருகிறார். சிறந்த மதிப்பெண்களை வாங்கியிருக்கிறார். இந்த மாணவர்களுக்கு தமிழ்வழிப் பொறியியல் படிப்புகளைக் கொடுத்தவர்கள், அதற்கென சரியான புத்தகங்களைக்கூட அச்சிடவில்லை. இலவச தொலைக்காட்சிக்கும் மிக்ஸிக்கும் பணத்தை செலவிடுபவர்கள், தாய்மொழிக் கல்விக்கான புத்தகங்களை அச்சிடக்கூட பணத்தை ஒதுக்குவதில்லை.

தற்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதிலும், ' ஐந்தாம் வகுப்பு வரையில் மாநில அரசு விரும்பினால், தாய்மொழியில் கல்வி கற்க வைக்கலாம். ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்விதான்' என்கின்றனர். இது மிகவும் வேதனையானது. மல்டி நேஷனல் கம்பெனிகளுக்குத் தேவையான ஆட்களைத் தயார் செய்வதற்கான திட்டம் இது. நமது நாட்டில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் முறையே தவறானது. ஒரு குழந்தைக்கு மொழியை அறிமுகப்படுத்தும்போது, முதலில் கேட்பது, பிறகு பேசுவது, அடுத்து எழுதுவது என மூன்று படிநிலைகளில்தான் ஒரு மொழி புரிய வைக்கப்படுகிறது. இங்கு எடுத்த உடனேயே, ஆங்கிலத்தில் எழுதுவதைத்தான் முதலில் செய்கிறார்கள். அடிப்படையே தவறாக இருக்கிறது. ஆங்கிலத்தில் படித்தால் பெருமை என நினைக்கும் மெத்தப் படித்த மேதாவிகள் இருப்பதால்தான், தற்கொலையை நோக்கி மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். அரசின் பார்வையில் மாற்றம் வர வேண்டும்" என ஆதங்கப்பட்டார் பிரபா கல்விமணி.

ஆ.விஜயானந்த்

சுவாதி கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம்: ராம்குமார் அளித்துள்ள வாக்குமூலம் பதிவு


ரயில் நிலையத்துக்கு சென்று நடித்துக் காட்டுகிறார்

‘சுவாதியை நான்தான் கொலை செய்தேன்’ என்று ராம்குமார் அளித் துள்ள தெளிவான வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று நடிக்க வைத்து வீடியோவில் பதிவு செய்யவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) கடந்த மாதம் 24-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் செங் கோட்டை அடுத்த டி.மீனாட் சிபுரத்தை சேர்ந்த ராம் குமார் (24) கடந்த 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். போலீஸார் பிடிக்க முயன்றபோது பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு அவர் தற் கொலைக்கு முயன்ற தாக கூறப்படு கிறது. போலீஸார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.

அவரை 3 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, 13-ம் தேதி மாலை முதல் ராம்குமாரிடம் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரா சென்றது ஏன்?

சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை கொலை செய்ய வேறு யாராவது உதவி செய்தார்களா? என்பது போன்ற பல கேள்வி களை ராம்குமாரி டம் போலீ ஸார் கேட்டுள்ளனர். சுவாதி கொலைக்கு முன்பு, 20, 21-ம் தேதி களில் ராம்குமார் ஆந்திர மாநிலம் சென்று வந்துள் ளார். அங்கு சென்று வந்தது ஏன்? கொலை செய் யச் சொல்லி வேறு யாரும் தூண்டி னார்களா? என்றும் ராம்குமாரிடம் போலீஸார் கேட்டுள்ளனர்.

‘நான்தான் கொன்றேன்’

விசாரணைக்குப் பிறகு, ‘கொலையை நான்தான் செய்தேன்’ என்று ராம்குமார் ஒப்புக்கொண்ட தாகவும், அவரது வாக்குமூலத்தில் அது தெளிவாக இருப்பதாகவும் போலீஸார் தெரி வித்துள்ளனர். ராம்குமார் வாக்கு மூலம் கொடுக் கும்போது அதை ரிக்கார்டு செய்து வைத்திருக்கி றோம். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் அவரே கொடுத்த வாக்குமூலம் அது என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

ரகசிய இடத்தில்தான் ராம்குமா ரிடம் விசாரணை நடந்தது. நேரில் நடித் துக் காட்டுவதற்காக நுங்கம்பாக்கம் காவல் நிலை யத்துக்கு அவரை போலீஸார் நேற்று காலை அழைத்து வந்தனர். மேஜை முன்பாக இருந்த சேரில் அவரை உட்கார வைத்து, உதவி ஆணையர் தேவராஜ் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

சுவாதி கொலை நடந்த நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்துக்கு ராம் குமாரை நேரில் அழைத்துச் சென்று, கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டுவதற்கான ஏற்பாடு கள் தீவிரமாக நடந்தன. ஆனால் செய்தியாளர்கள் அதிக அளவில் கூடியதால், அந்த திட் டத்தை போலீஸார் ஒத்திப்போட் டனர்.

நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று நடித்துக் காட்டச்சொல்லி விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய் துள்ளனர். அதை போலீஸார் வீடியோ எடுத்து, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள். அவர் தங்கி யிருந்த மேன்ஷனுக்கும் அழைத் துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்கிடையில், சுவாதி பற்றிய பல தகவல்கள் அவரது நண்பர் பிலால் மாலிக்குக்கு தெரிவதால், அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்குமார் கூறும் தகவல்களை பிலால் மாலிக்கிடம் கேட்டு, அதுபற்றி சுவாதி அவரிடம் ஏதாவது கூறி யிருக்கிறாரா என்று போலீஸார் விசாரிக் கின்றனர். போலீஸாருக்கு உதவும் வகையில் பிலால் மாலிக் கும் நேற்று காலை முதல் மாலை வரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலேயே இருந்தார்.

போலீஸ் காவல் முடிகிறது

ராம்குமாருக்கு வழங்கப்பட்ட 3 நாள் போலீஸ் காவல் இன்று டன் முடிகிறது. இன்று மாலை 5 மணி அல் லது அதற்கு முன்பாக எழும்பூர் நீதி மன்றத்தில் ராம்கு மாரை போலீஸார் ஆஜர்படுத்து வர். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக் கப்படுவார்.

புதுக்கோட்டையில் 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அடுத்த கல்வியாண்டு முதல் செயல்படும்: தமிழக அரசு தகவல்

THE HINDU

புதுக்கோட்டையில் 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங் கப்பட உள்ள புதிய அரசு மருத் துவக் கல்லூரி அடுத்த கல்வி யாண்டு முதல் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அனைத்து மக்க ளும், குறிப்பாக ஏழை எளிய மக்கள், தரமான மருத்துவ சேவை பெற வேண்டும் என்ற அடிப்ப டையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு முன்னோடி சுகாதாரத் திட்டங்க ளை செயல்படுத்தி வருகிறது.

மக்கள் உடல் நலன் காக்கும் வகையிலான நல்வாழ்வுத் திட்டங்களை திறம்பட செயல்ப டுத்தத் தேவையான மருத்துவர் கள் இருப்பது அவசியமாகும். எனவேதான், அரசு ஆண்டுதோ றும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சிவகங் கை, திருவண்ணாமலை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் ஆகிய இடங் களில் 3 மருத்துவக் கல்லூரி கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர்க்கப்ப டுகின்றனர். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 410 மருத் துவ பட்டப்படிப்பு இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலில் அனுமதி பெறப்பட்டு மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்க்கப்படு கின்றனர்.

இந்த ஆண்டு, கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 மாணவர் கள் சேர்க்கையுடன் மருத்துவப் படிப்பை தொடங்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு மாண வர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 810 மருத் துவ பட்டப்படிப்பு இடங் கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கரூர் மற்றும் புதுக்கோட்டை யில் தலா 150 மருத்துவ மாணவர் கள் சேர்க்கையுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங் கப்பட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இந்த 2 இடங்களி லும் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக் கவும் தலா ரூ.229 கோடியே 46 லட்சம் நிர்வாக ஒப்புதலும், நிதி ஒப்பளிப்பும் வழங்கப் பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி 2017 - 2018-ம் கல்வியாண்டு முதல் 150 மாண வர்கள் சேர்க்கை யுடன் தொடங்க கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற் கான ஆயத் தப் பணிகளை மேற் கொள்ள ஒரு சிறப்பு அலுவலர் மற்றும் முதல்வர் நியமனம் செய்யப்பட் டுள்ளார்.

கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத் துவக் கல்லூரி மருத்துவமனை யில் தேவையான பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர் கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள் என 808 புதிய பணியிடங்கள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுவ தால் அரசுக்கு தொடர் செலவின மாக ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.39 கோடியே 68 லட்சம் செலவாகும்.

புதுக்கோட்டையில் தொடங் கப் பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதற்கட்டமாக பேராசிரியர்கள், இணைப் பேராசி ரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் மருத்துவம் சாராத பணியாளர் கள் என 161 புதிய பணியி டங்களை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த கூடுதல் பணியிடங்கள் காரணமாக, அர சுக்கு தொடர் செலவினமாக ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.8 கோடியே 87 லட்சம் செலவாகும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தலைவர்

காமராஜர்: மக்கள் தலைவர்

    சாரி
    கே.கே.மகேஷ்
    சிவசு
    வெ.சந்திரமோகன்
    நீதிராஜன்
    வடிவமைப்பு: ம.ரீகன்



ஞானத் தந்தைக்கு மரியாதை!

பெருந்தலைவர் காமராஜர் மறைந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாளுக்கு நாள் அவருடைய கீர்த்தி உயருகிறதே அன்றி குறையவில்லை. தமிழகம் இன்றைக்கு எவற்றையெல்லாம் பெருமையாகக் கொண்டாடுகிறதோ அவற்றில் பெரும்பாலானவற்றுக்குத் தன்னுடைய வெறும் 9 ஆண்டுகள் (1954-1963) ஆட்சிக் காலகட்டத்தில் விதை போட்டவர்.
காமராஜரைப் பற்றிப் பேசும்போதெல்லாம், அவருடைய எளிமையை, நேர்மையை, தொலைநோக்குப் பார்வை கொண்ட செயல்பாடுகளைக் கொண்டாடிப் பேசுவதும், அவரை இன்றைய அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு, ஏக்கப் பெருமூச்சை வெளிப்படுத்துவதும் நம்முடைய இயல்பு. அரசியலில் மட்டும் அல்ல; ஒவ்வொரு துறையிலும் காமராஜர்கள் இன்றைக்குத் தேவைப்படுகிறார்கள். காந்தியம் உருவாக்கிய தமிழகத்தின் மகத்தான ஆளுமைகளில் ஒருவரான காமராஜரிடம் நாம் வியந்து பேசும் பண்புகள் நாடு மட்டும் கோரும் பண்புகள் அல்ல; ஒவ்வொரு வீடும் கோருபவை.
காமராஜர் ஆட்சிக்குப் பிந்தைய இந்த அரை நூற்றாண்டில், ஏன் இன்னொரு காமராஜரை நம்மால் உருவாக்க முடியவில்லை என்ற கேள்விக்கான பதில் நம்முடைய மதிப்பீடுகளின், விழுமியங்களின் வீழ்ச்சியில் இருக்கிறது. வரலாற்றை மறக்கும் சமூகம் வரலாற்றைத் தனதாக்க முடியாது. இதை 'தி இந்து' உணர்ந்திருக்கிறது. கூடவே, இளைய தலைமுறையினரிடம் நம் வரலாற்றையும் வரலாற்று நாயகர்களின் சாதனைகளையும் தொடர்ந்து பேச வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறது. தொடர்ந்து வரலாறு பேசுவோம்! புதிய வரலாறுகளை உருவாக்குவோம்!

காமாட்சி ராஜா!

இன்றைய விருதுநகருக்கு அன்றைய பெயர் விருதுபட்டி. 1903 ஜூலை 15-ல் பிறந்தார் காமராஜர். அப்பா குமாரசாமி, தேங்காய் வியாபாரி. அம்மா சிவகாமி. இவர்களுடைய குலதெய்வத்தின் பெயர் காமாட்சியம்மன். அதனால், பிள்ளைக்குக் காமாட்சி என்று பெயர் வைத்தார்கள். சிவகாமியோ பிள்ளையை எப்போதும் செல்லமாக 'ராஜா' என்றே அழைத்தார். காமாட்சியும் ராஜாவும் கலக்க 'காமராஜர்' ஆகிவிட்டார். காமராஜருக்கு ஒரு தங்கை உண்டு. நாகம்மாள். காமராஜருக்குத் தன் தங்கை மீது கொள்ளைப் பாசம்!

அழைத்தது தேசம்!

விருதுபட்டியில் திண்ணைப் பள்ளி நடத்தியவர் வேலாயுதம் வாத்தியார். அவரிடம்தான் காமராஜர் முதலில் படித்தார். பிறகு, ஏனாதி நாயனார் வித்யாசாலை. பிறகு சத்திரிய வித்யாசாலை. படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டக் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்துவிட்டார் காமராஜர். விளைவாக, படிப்பை ஆறாம் வகுப்போடு நிறுத்திவிட்டு, மாமன் துணிக்கடைக்கு வேலைக்கு அனுப்பினார்கள். அங்கும் காமராஜரின் கவனம் அரசியலை நோக்கியே போனது. பக்கத்தில் எங்கு கூட்டம் நடந்தாலும் போய் விடுவார். காமராஜரின் இன்னொரு மாமன் திருவனந்தபுரத்தில் மரக் கடை வைத்திருந்தார். அங்கே அனுப்பினார்கள். ஆனால், அங்கேயும் காந்தியின் காங்கிரஸ் காமராஜரைத் துரத்தியது.

சுயம்பு!

காமராஜரைப் 'படிக்காதவர்' என்று சொல்லிவிட முடியாது. கல்விக் கூடங்களுக்கு வெளியே தன்னை வளர்த்துக்கொண்ட சுயம்பு அவர். பத்திரிகைகள், புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார். சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றார். கேரளத்தில் இருந்த கொஞ்ச காலத்தில் மலையாளத்தைக் கற்றுக்கொண்டுவிட்டார். தெலுங்கும் தெரியும். இந்தியும் பேசுவார். நாடாளுமன்றத்தில் அவர் ஒரு முறை ஆங்கிலத்தில் உரையாற்றியதை 'மாசற்ற ஆங்கிலம்' என்று புகழ்ந்து எழுதியது 'தி இந்து' ஆங்கில நாளிதழ். ஆனாலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் மாநாடுகளில் பேசும்போது தலைவர் பேசுவது என்னவோ தமிழில்தான். கையெழுத்தும் தமிழில்தான்!

காந்தி தரிசனம்!

காந்தி 1921-ல் மதுரைக்கு வந்தபோது அவரைப் பார்த்தார் காமராஜர். காந்தியே தனது வழிகாட்டி என்று முடிவெடுத்தார். காமராஜரிடம் வெளிப்பட்ட சுயமரியாதை, எளிமை, நேர்மை இப்படிக் கொண்டாடத் தக்க பல பண்புகளுக்கு உந்துசக்தி காந்தி. பின்னாளில் நேருவையும் தனது மனதில் உயர்ந்த பீடத்தில் வைத்திருந்தார் காமராஜர். இளம் வயதிலேயே அவருக்குள் இருந்த ஊக்கம் மிக்க தலைவனை அடையாளம் கண்டவர் சத்தியமூர்த்தி. தன்னுடைய தலைவராக சத்தியமூர்த்தியையே வரித்துக்கொண்டார் காமராஜர்.

படைக்கு முந்து!

போராட்டங்களுக்கு அஞ்சாத மனிதர் காமராஜர். கேரளத்தின் வைக்கத்தில் 1923-ல் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் நடந்தபோது, பிற்காலத் தமிழகத்தைச் செதுக்கிய இரு தலைகள் அதில் பங்கேற்றன. ஒருவர் பெரியார்; இன்னொருவர் காமராஜர்! சிறைக்கும் அஞ்சியதில்லை. தன் வாழ்வில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் காமராஜர். போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் காமராஜரின் பூர்விகச் சொத்துகளைச் செல்லரித்தன. தேசத்துக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை திருமணம் செய்துகொள்ளவதில்லை என்று நண்பர்களுடன் சபதம் எடுத்துக்கொண்டவர், கடைசி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. காமராஜர் அகராதியில் தியாகம் இல்லாத பொது வாழ்வுக்கு எந்த அர்த்தமும் இல்லை!

பூசல்களிடையே பூத்த பூ!

ஆங்கிலேயர் கால இந்தியாவில் நடத்தப்பட்ட தேர்தல்களை ஆரம்பத்தில் காங்கிரஸ் புறக்கணித்தது. பிறகு, தேர்தலில் பங்கேற்பது என்று முடிவெடுத்தது. 1934-ல் நடந்த தேர்தலில் வெற்றிகளைக் குவித்தது தமிழ்நாடு காங்கிரஸ். 1936-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சத்தியமூர்த்தி தலைவர் ஆனார். காமராஜர் பொதுச்செயலர் ஆனார். 1937-ல் சென்னை மாகாண சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தது. விருதுநகரை உள்ளடக்கிய சாத்தூர் தொகுதியில் போட்டியின்றி காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் ஏற்பட்ட அதிகாரச் சண்டை தீவிரமானது. ராஜாஜியை எதிர்கொள்ள காமராஜர்தான் பொருத்தம் என்று முடிவு செய்தார் சத்தியமூர்த்தி. 1940-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தமிழகத் தலைவர் ஆனார் காமராஜர்.

மக்களின் முதல்வர்!

தமிழக காங்கிரஸில் சத்தியமூர்த்தி, ராஜாஜி என்று இரு மையங்கள் இருந்தன. முதல்வராக ஆட்சியை ராஜாஜி வைத்திருந்தாலும், கட்சியைத் தன் வசம் வைத்திருந்தார் சத்தியமூர்த்தியின் சீடரான காமராஜர். ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை அறிவித்தபோது கடும் எதிர்ப்பு உருவானது. காலையில் பள்ளியில் படிப்பு: மாலையில் அவரவர் குலத்தொழிலை மேற்கொள்வது எனும் முறை இது. எதிர்ப்பை எதிர்கொள்ள பதவி விலகும் முடிவெடுத்தார் ராஜாஜி. இக்கட்டான இந்தச் சூழல்தான் காமராஜரை முதல்வர் இருக்கையை நோக்கி நகர்த்தியது. முதல்வரான உடனேயே குலக்கல்வி முறையை ஒழித்தார்.

சீர்திருத்த முதல்வன்!

சமூக நீதி இல்லாமல் இந்தியாவில் முன்னேற்றம் சாத்தியம் இல்லை என்பதை முழுமையாக உணர்ந்தவர் காமராஜர். அரசியல் சாசனத்தில் அவர் முன்முயற்சியால் செய்யப்பட்ட முதல் திருத்தம் இதற்குச் சிறந்த உதாரணம். "கல்லூரியில் எங்களுக்கு இடம் கிடைக்காததற்குக் காரணம் இடஒதுக்கீடு முறை. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" என்று ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சீனிவாசன், செண்பகம் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுவில் இருந்த அல்லாடி கிருஷ்ணமூர்த்தி ஐயரே அவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். சென்னை உயர் நீதிமன்றமும் இடஒதுக்கீட்டுக்குத் தடை விதித்துவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் போனது தமிழக அரசு. அங்கும் கதவு அடைக்கப்பட்டது. இதையடுத்து, அரசியல் சாசனத்தைத் திருத்த வேண்டும் என்று முழங்கினார் பெரியார். பிரதமர் நேருவிடம் பேசினார் காமராஜர். முதல் முறையாக அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. இன்றும் இடஒதுக்கீட்டு முறையைக் காக்கும் அரணாக அது நீடிக்கிறது.

கல்விப் புரட்சி!

காமராஜரின் சாதனைகளிலேயே மகத்தானது, தமிழக வரலாற்றிலேயே கல்வித் துறையில் அதிகபட்ச வளர்ச்சியைக் கொடுத்தவர் அவர் என்பது. அனைவருக்குமான இலவச கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். 1957-1962 இடைப்பட்ட காலகட்டத்தில் 13,000-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தார். மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ஆக உயர்ந்தது. இந்தச் சாதனையைப் போற்றும் வகையிலேயே 2008 முதல் கல்வி வளர்ச்சி தினமாக காமராஜரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்.

முடியாது.. அது அகராதியில் கிடையாது!

அரசு அதிகாரிகளை காமராஜர் கையாளும் விதம் சுவாரஸ்யமானது. விவசாயம், வளர்ச்சித் திட்டம் என்று எதுவாகயிருந்தாலும் "இதைச் செய்ய முடியாது" என்று எந்த அதிகாரியும் அவரிடம் சொல்ல முடியாது. "முடியாதுன்னு சொல்ல நீ எதுக்குன்னேன்?'' என்பார். அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால், சாதிக்க வேண்டும்; சாக்குபோக்கு சொல்லக் கூடாது!

கல்விப் பசியாற்றியவர்!

காமராஜர் கொண்டுவந்த புரட்சித் திட்டமான மதிய உணவுத் திட்டம்கூட இப்படியான தடைகளைத் தாண்டியே வந்தது. பள்ளிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்கவும், இடைநிற்றலைக் குறைக்கவும் திட்டமிட்டு 1956-57-ல் இத்திட்டத்தைக் கொண்டுவந்தார். அன்றைக்கெல்லாம் இப்படியான திட்டத்தைக் கொண்டுவரும் அளவுக்கு அரசாங்க கஜானாவில் பணம் கிடையாது. ஆனாலும் மக்களின் ஆதரவோடு இந்த மகத்தான திட்டத்தைத் தொடங்கினார். விவசாயிகள் தங்கள் விளைச்சலில் ஒரு பங்கை இத்திட்டத்துக்குத் தந்தனர். ஊர் கூடி தேர் இழுத்த திட்டம் இது.

ஆவடி சோஷலிஸம்!

சென்னை, ஆவடிக்கு அழியாப் புகழைத் தந்தவர் காமராஜர். அவர் முதல்வராக இருந்தபோது காங்கிரஸ் தேசிய மாநாட்டை அங்கே 1955-ல் நடத்தினார். சோஷலிஸம்தான் காங்கிரஸின் சமூகக் கொள்கை என்பதை உரக்கச் சொல்லிய மாநாடு அது. மாநாட்டை நடத்தியதோடு மட்டும் அல்லாமல், சோஷலிஸத்துக்கான முன்னுதாரண மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகத்தை வளர்த்தெடுத்தார். தமிழகத்திலுள்ள பெரும்பாலான தொழிற்பேட்டைகள், பொதுத்துறை நிறுவனங்கள் காமராஜர் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவையே. இன்றைக்குத் தெற்காசிய அளவில் பிரம்மாண்டமானதாகக் கருதப்படும் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கான விதை ஆவடி மாநாட்டின் தொடர்ச்சி.

மின்னிய பொற்காலம்!

தமிழகத்தின் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட காமராஜர், தொழில் சூழலுக்கு மின் உற்பத்தி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியவர். பெரியார் நீர் மின்னுற்பத்தித் திட்டம், குந்தா நீர் மின்னுற்பத்தித் திட்டம் எல்லாம் அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டவை. இன்றைக்கு தேசிய அளவில் கொண்டாடப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டமும் காமராஜரின் பொற்கால ஆட்சியின் விளைவேயாகும். மின்னுற்பத்தியில் சென்னை மாகாணத்துக்கு மூன்றாவது இடம் பெற்றுத் தந்ததும் அவரது சாதனைகளுள் ஒன்று!

விவசாயிகளின் ஒளிவிளக்கு!

ஒரு நல்ல ஆட்சியாளர் முதலில் விவசாயிகளைத்தானே கொண்டாடுவார்? காமராஜர் ஆட்சிக்கு வந்த உடனே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1962-ல்
நில உச்சவரம்புச் சட்டத்தைக் கொண்டுவந்தார். 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும் மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்க வழிவகுக்கப்பட்டது. நீர்வளத்தைப் பெருக்க மணிமுத்தாறு திட்டம், கீழ்பவானி திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், அமராவதி திட்டம், ஆரணியாறு திட்டம், வைகை திட்டம், காவிரி கழிமுக வடிகால் திட்டம், புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்தார். தமிழகத்தின் பெரும்பாலான நதிநீர்த் திட்டங்கள் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை.

தமிழ்த் தொண்டர்!

தமிழில் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தவர் காமராஜர். அவரது ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி வெளியிடப்பட்டது. தமிழ் ஆட்சி மொழிச் சட்டம், தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், 'தமிழ்ப் பாடநூல் வெளியீட்டுக் கழகம்' என்று தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். 'மெட்ராஸ் ஸ்டேட்'டைத் தமிழில் தமிழ்நாடு என்று மாற்றி எழுத 1962-ல் அவரது ஆட்சியில் மசோதா கொண்டுவரப்பட்டது. அது தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை என்றாலும், 1969-ல் அண்ணா ஆட்சியில் பெயர் மாற்றம் நிறைவேற அதுவும் ஒரு முக்கியக் காரணி எனலாம்.

பஞ்சாயத்து ஆட்சி!

கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார். ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அதிகாரங்களும் நிதி ஆதாரமும் உட்கட்டுமான வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன.

மக்களில் ஒருவர்!

காமராஜர் ஒன்பது ஆண்டு காலம் முதல்வராக இருந்தார். அதற்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் எப்போதும் அவருக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளியே இருந்ததில்லை. மக்களால் எளிதில் அணுகக் கூடிய தலைவராகவே இறுதிவரை இருந்தார். முக்கியமாக, அரசு அதிகாரத்தின் பல்வேறு மட்டங்கள் தனக்கும் மக்களுக்கும் தடையாக இருந்துவிடக் கூடாது என்று உறுதியுடன் இருந்தார்.

கே.பிளான்!

'மூத்த தலைவர்கள் அரசுப் பொறுப்புகளிலிருந்து விலகி கட்சிப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இளைய தலைவர்களை அரசுப் பதவிகளில் அமர்த்த வேண்டும்' என்பது காமராஜர் முன்வைத்த திட்டம். காங்கிரஸ் இயக்கத்தை மேலும் பலமடங்கு பலப்படுத்துவதற்காக இதைக் கொண்டுவந்தார். அவரது பெயரிலேயே 'கே.பிளான்' என்று நாடு முழுவதும் இத்திட்டம் பேசப்பட்டது.
தானே ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதால் முதல்வர் பதவியை துறப்பதற்கு காமராஜர் தயாரானார். ஆனால், அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்த பெரியார் இதைக் கடுமையாக எதிர்த்தார். இது ஒரு அரசியல் தற்கொலையாக அமையும் என்று எச்சரித்தார். எனினும், தனது முடிவில் உறுதியாக இருந்த காமராஜர் பதவி விலகியதுடன், பக்தவத்சலத்தைப் பதவியில் அமர்த்தினார். இறுதியில் பெரியார் சொன்னதுபோலவே நடந்தது. காமராஜரோடு சேர்ந்து தமிழகத்தில் காங்கிரஸும் அதோடு சரிந்தது.

கிங் மேக்கர்!

நேருவின் மறைவுக்குப் பின்னர் பிரதமர் பதவிக்கான போட்டி எழுந்தது. லால் பகதூர் சாஸ்திரி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்ன ணியில் காமராஜரின் பங்கு அளப்பரியது. அடுத்த 20 மாதங்க
ளில் சாஸ்திரி மரணம் நிகழ மீண்டும் பிரதமருக்கான போட்டி தொடங்கியது. கடந்த முறை போலவே மொரார்ஜி தேசாய் இம்முறையும் நேரடியாகக் களத்தில் நின்றார். பிரதமர் பதவியில் காமராஜரே அமர வேண்டும் என்ற குரல்களும் ஒலித்த காலகட்டத்தில் இந்த முடிவுகளை எடுத்தார் காமராஜர். இந்திய அரசியலில் 'கிங் மேக்கர்' எனும் வார்த்தைக்கு அழுத்தமான அர்த்தம் கொடுத்தவர் காமராஜர்தான்!

எதிரிக்கட்சி அல்ல!

காங்கிரஸைத் தமிழ்நாட்டை விட்டு ஒழித்துக்கட்டுவேன் என்று சபதம் போட்டவர் பெரியார். அவரே பின்னாளில், "இன்றைய காமராஜர் ஆட்சியில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்திராதது" என்று தள்ளாத வயதிலும் ஊர் ஊராக காமராஜர் ஆட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார். அரசியல்ரீதியாக காமராஜருக்குக் கடும் சவாலாக இருந்த திமுக நிறுவனர் அண்ணா தனிப்பட்ட வகையில் காமராஜரைக் கொண்டாடினார். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தத்துடனும் நெருங்கிய நட்பு காமராஜருக்கு இருந்தது. எதிர் தரப்பாக இருந்தாலும், எதிரி மனப்பான்மை காட்டாத காமராஜரின் அரசியல் பண்பு அது.

ஏன் காமராஜர் நமக்குத் தேவை?

மனிதன் என்பவன் பணம் காய்ச்சி மரம் அல்ல. ஒட்டுமொத்த சமூகத்துக்காகவும் தன்னாலான பங்களிப்பை நிறைவேற்ற எத்தனிக்கும் ஒரு சமூக ஊழியன். இன்றைக்குத் தமிழ்ச் சமூகம் அனுபவிக்கும் ஒவ்வொரு சந்தோஷத்துக்கும் பின்னும் காமராஜரைப் போன்ற எண்ணற்ற ஆளுமைகளின் தியாகம் இருக்கிறது. ஒரு சமூகத்தை உயிரோட்டத்தோடு அடுத்த தளத்தை நோக்கி நகர்த்துவது இந்தத் தியாகம்தான். இந்தத் தியாகத்தைப் போற்றுவதன் மூலம் உண்மையில் நமக்கு நாமே எரிபொருள் ஊற்றிக்கொள்கிறோம். உந்துசக்தி பெறுகிறோம்.

காமராஜரைத் தரிசிக்க!

காமராஜரைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள விரும்புபவர்கள் சென்னையிலுள்ள அவரது நினைவில்லத்துக்குச் செல்லலாம். விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த வீடும், கன்னியா
குமரியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபமும் பார்க்க வேண்டிய இடங்கள். இங்கெல்லாம் காமராஜர் பயன்படுத்திய பொருட்களும், ஏராளமான புகைப்படங்களும் அவரது உன்னத வாழ்வின் சாட்சியங்களாக இருக்கின்றன. ஆ.கோபண்ணா எழுதிய 'காமராஜ் ஒரு சகாப்தம்' புத்தகம் காமராஜர் வாழ்க்கை தொடர்பான அரிய ஆவணம்!

Thursday, July 14, 2016

'காமராஜர் உருவத்தில் இனிப்புக் கொழுக்கட்டை!' -மலைக்க வைத்த 'இட்லி' இனியவன்



vikatan.com

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவத்தில் முழுக் கொழுக்கட்டையை தயார் செய்து வருகிறார் சமையல் கலை வல்லுநர் இனியவன். " நாளை காலை காமராஜர் வாழ்ந்த வீட்டில், அவரது உருவத்திலான இனிப்புக் கொழுக்கட்டையை பொதுமக்கள் பார்க்கலாம்" என்கிறார் நெகிழ்ச்சியோடு.

கோவையைப் பூர்வீகமாகக் கொண்டவர் 'மல்லிப் பூ' இட்லி இனியவன். மிகுந்த வறுமைக்கு இடையில் சென்னை வந்தவருக்கு இட்லி வியாபாரமே கை தூக்கிவிட்டது. பிரபலமானவர்களின் திருமணக் கூடங்களில் இனியவனின் இட்லிக்கு என தனி இடம் உண்டு. காலத்திற்கேற்றார் போல, சாக்லெட் இட்லி, பீட்ரூட் இட்லி, புதினா இட்லி, இளநீர் இட்லி,சிறுதானிய இட்லிகள் என விதவிதமான பதார்த்தங்களை அறிமுகப்படுத்தினார்.

100 கிலோ எடையிலான இட்லி, அப்துல் கலாம் உருவத்தில் இட்லி, அன்னை தெரசா உருவத்தில் இட்லி என இட்லியை வைத்தே ஏராளமான கண்காட்சிகளை நடத்தியவர். இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளன.

இந்நிலையில், காமராஜரின் 114-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவத்தில் இனிப்புக் கொழுக்கட்டையைத் தயார் செய்யும் வேலையில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார் இனியவன். நாளை காலை 9 மணியளவில் திருமலைப் பிள்ளை தெருவில் உள்ள காமராஜர் வாழ்ந்த வீட்டில், பொதுமக்கள் பார்வைக்கு கொழுக்கட்டையை வைக்க இருக்கிறார்.

.இனியவனிடம் பேசினோம்.  " காமராஜரின் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி நாளாக அரசு கொண்டாடுகிறது. நமது வாழ்வில் ஏதோ ஒருநாள் என்று கடந்த போகக் கூடியதல்ல அவரது பிறந்தநாள்.தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்த நேர்மையான ஆட்சியாளர் அவர். நான் எட்டாம் வகுப்பு வரையில் படித்திருக்கிறேன். அதற்குக் காரணமே, காமராஜர் போட்ட சத்துணவுதான். இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறேன். கடந்த சில மாதங்களாகவே, அவரது பிறந்தநாளையொட்டி ஏதாவது செய்ய வேண்டும் என மனதிற்குள் எண்ண ஓட்டம் இருந்து கொண்டே இருந்தது. இட்லி வடிவத்தில் அவரைக் கொண்டு வருவதைவிடவும், கொழுக்கட்டை உருவில் கொண்டு வருவது என முடிவு செய்தோம். சுமார் 60 கிலோ எடையில் அவரது உருவத்தை இனிப்பு கொழுக்கட்டையில் கொண்டு வருவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கடந்த பத்து நாட்களாக அவரது உருவத்தை எப்படிக் கொண்டு வருவது என பலவிதமான முயற்சிகளில் இறங்கினோம். நேற்றுதான் முழுமையான வடிவத்தை எட்டினோம். இன்று இரவுக்குள் முழு கொழுக்கட்டையும் தயாராகிவிடும். தவிர, பொதுமக்கள் உண்பதற்காக 114 கிலோ எடையில் ராட்சத இனிப்புக் கொழுக்கட்டை ஒன்றையும் தயார் செய்து வருகிறோம். இந்த கொழுக்கட்டை நாளை காலை 9 மணியளவில், காமராஜர் வாழ்ந்த வீட்டில் வெட்டப்பட்டு, பொதுமக்களுக்கு உணவாக வழங்கப்படும்.
அவரது உருவத்தினால் ஆன கொழுக்கட்டையை, கலங்கரை விளக்கம் அருகில் உள்ள கடலில் மீன்களுக்கு உணவாகப் படைக்க இருக்கிறோம். கல்விக் கண் திறந்த காமராஜருக்கு எங்களால் முடிந்த சிறிய அளவிலான முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம்" என்றார் மகிழ்ச்சியோடு.

காமராஜருக்கு சிறப்புச் செய்யும் 'இட்லி' இனியவனின் இனிப்புக் கொழுக்கட்டை தித்திப்பாய் பரவட்டும்!

-ஆ.விஜயானந்த்

ஒரு பெண்ணுக்கு கால் டாக்ஸி பயணம் கொடுத்த வேதனை!



அடிப்படை வசதி முதல் நவீன வாழ்வின் ஆடம்பரங்கள் வரை குவிந்திருக்கும் நகரங்கள், இன்னும் பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்பதை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சம்பவங்கள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. விலாசனி ரமணி , எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர். அவர் கடந்த ஞாயிறு இரவு திருவான்மியூரிலிருந்து வளசரவாக்கம் செல்ல, ஓலா கால் டாக்சியை புக் செய்துள்ளார். அது 15 கி.மீ தூர பயணம்தான். வாகன நெரிசல் அதிகமாக இருந்தால் கூட ஒரு மணி நேரத்தில் போய்விடலாம். அனால், அந்த பயணம் அவருக்கு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. காரணம்...? ஓட்டுநரின் மோசமான நடவடிக்கை.

அன்று என்ன நடந்தது?


திருவான்மியூரிலிருந்து புறப்பட்ட அந்த ஓலா வாகனம், வேகமாக சென்று இருக்கிறது. விலாசனி ஓட்டுநரிடம், “அவசரம் ஏதுமில்லை... மெதுவாகவே செல்லவும்...” என்றுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத அந்த ஓட்டுநர், வாகனத்தை வேகமாக செலுத்தி உள்ளார். மீண்டும் விலாசனி, “உங்கள் வேகம் எனக்கு அச்சமூட்டுவதாக உள்ளது... தயவு செய்து மெதுவாக செல்லுங்கள்...” என்று சொல்ல, அந்த ஓட்டுநர் கோபமாக, “மெதுவாகவெல்லாம் செல்ல முடியாது. குறிப்பிட்ட நேரத்திற்குள், நாங்கள் கணிசமான எண்ணிக்கையிலான பயணங்களை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு அசெளகரியமாக இருந்தால், இறங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்லியுள்ளார் கோபத்துடன்.




அச்சமடைந்த விலாசனி அண்ணா பல்கலைகழகம் அருகே வாகனத்திலிருந்து இறங்கி, ஆட்டோவில் செல்ல முயற்சித்துள்ளார்.

அதன்பின் நடந்தவற்றை விவரிக்கிறார் விலாசனி, “நான் வாகனத்திலிருந்து இறங்கிய பின்பும், அங்கேயேதான் ஓலா ஓட்டுநர் நின்று என்னை முறைத்துக் கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல், நான் மேற்கொண்ட பயணத்திற்காக, நான் பணம் தர வேண்டுமென்றும் நிர்பந்தித்தார். ஆனால், நான் பணம் கொடுக்க மறுத்துவிட்டேன். அவர்தான் என்னை நான் செல்ல வேண்டிய இடத்தில் விடாமல், வாகனத்திலிருந்து இறங்க சொன்னார். நான் ஏன் பணம் தர வேண்டும்...? ஆனால், அதற்கு அந்த ஓட்டுநர் என் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று மிரட்டினார்." என திகிலுடன் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

காவல் துறையினரின் மெத்தனம்:

பின் இந்த சம்பவம் குறித்து ராமாபுரம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் விலாசனி. அவர்கள் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்க சொல்லி உள்ளார்கள். ஆனால், அங்கும் அவரின் புகார் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அங்கு இருந்த காவலர்கள், “இந்த சம்பவம் நடந்தது கிண்டியில், அது எங்கள் அதிகார வரம்பிற்குள் வராது. நீங்கள் கிண்டி காவல் நிலையத்தில் சென்று புகார் அளியுங்கள்...” என்று அலைக்கழித்துள்ளார்கள். இந்தச் சம்பவம் நடந்த போது இரவு பத்து மணி.

ஏற்கெனவே, அச்சத்தில் இருந்த விலாசனியை இந்த சம்பவம் மேலும் மன உளைச்சலில் ஆழ்த்தி உள்ளது. தனியாக கிண்டி செல்ல மறுத்த அவர், குறைந்தபட்சம் தன்னை வளசரவாக்கத்திற்கு செல்வதற்காக பாதுகாப்பாக வாருங்கள் என்று காவலர்களிடம் கேட்டுள்ளார். அதன் பின், ஒரு காவலர் துணையாக அனுப்பப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விலாசனி, “சம்பவம் நடந்தது கிண்டி பகுதியில். அந்த ஓலா வாகன ஓட்டுநர் அந்தப் பகுதியில் இருக்க வாய்ப்புகள் அதிகம். நான் ஏற்கெனவே, அச்சமடைந்த சூழ்நிலையில் இரவு பத்து மணிக்கு மேல், என்னைத் தனியாக நந்தம்பாக்கத்திலிருந்து கிண்டி சென்று புகார் அளியுங்கள் என்று சொல்வது, எத்தகைய அறிவுடைய செயல் என்று எனக்கு தெரியவில்லை...” என்றார் வருத்தமாக.

சமூக ஊடகம் பணிய வைத்தது:

அந்த இரவில் நடந்த சம்பவங்களை சமூக ஊடகத்தில் எழுதினார் விலாசினி. அந்தப் பதிவை பல்லாயிரம் பேர் பகிர்ந்துள்ளார்கள். அதன்பின்னர்தான் இந்த பிரச்னை பொது வெளிக்கு வந்தது. விலாசனி தன் வருங்கால கணவரின் கைபேசியிலிருந்து ஓலா டேக்சியை புக் செய்ததால், அவர் மின்னஞ்சலில் இருந்தே ஓலா நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளார். அதன் பின், ஓலா நிறுவனம் விலாசனியை தொடர்பு கொண்டு, நிச்சயம் அந்த ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளது. காவல் துறையும், புகாரைப் பெற மறுத்த காவலர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

இது தொடர்பாக ஓலா நிறுவனம் என்ன சொல்கிறது?:

இது குறித்து ஓலா நிறுவனத்திடம் விளக்கம் பெற முயற்சி செய்தோம். நம்மிடம் பேசிய வாடிக்கையாளர் சேவை ஊழியர், “இந்த பிரச்னையை அதற்கான துறையிடம் எடுத்துச் செல்வதாக” கூறினார். நம்மிடம் இது குறித்து ஒரு மின்னஞ்சலும் அனுப்பச் சொன்னார். அனுப்பிவிட்டு, பதிலுக்காக காத்திருக்கிறோம்.

2010 ம் ஆண்டு துவங்கப்பட்டது ஓலா நிறுவனம். இப்போது நூறு நகரங்களில் தன் சேவையை வழங்கி வருகிறது. அதனிடம் 2,50,000 வாகனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்தனை திறன்மிகு ஓட்டுநர்கள் அவர்களிடம் இருக்கிறார்களா...? சமீபத்தில் ஓலா நிறுவனம் 700 மில்லியன் ரூபாயும், உபேர் நிறுவனம் 1,000 மில்லியன் ரூபாயும் முதலீடாக திரட்டியது.

'கல்விக் கடனுக்கு ரிலையன்ஸ்... ரிலையன்ஸ் கடனுக்கு?!' -நாடாளுமன்றத்தை உலுக்கப் போகும் ஜூலை 18

vikatan

இந்திய வங்கிகளில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 8.5 லட்சம் கோடி ரூபாய் விவகாரம் பெருத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ' வருகிற 18-ம் தேதியில் இருந்து தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், பா.ஜ.க அரசுக்குப் பெரும் தலைவலியாக இந்த விவகாரம் அமையும்' என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், " இந்திய வங்கிகளில் இருந்து பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 8.5 லட்சம் கோடி ரூபாயில், 5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் பட்டியலில் சேர்ந்துவிட்டன. இந்தப் பணத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதால், அவற்றை இந்தியாவுக்குக் கொண்டு வருவது சாத்தியமில்லை என சி.ஏ.ஜி சசிகாந்த் சர்மா கூறியிருக்கிறார்.

இவ்வளவு பெரிய தொகையையும் வசூலிப்பது மிகக் கடினம். இதனால் இந்தியப் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தளவுக்குப் பணம் வழங்கியது எதற்காக?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

யெச்சூரியின் கேள்விகள், நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில், " 'கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் சேர்ப்பேன்' என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார் மோடி. அதற்கான முயற்சிகளில் இறங்காமல், காங்கிரஸ் அரசைப் போலவே, பெரு நிறுவனங்களுக்கு இந்திய மக்களின் பணத்தில் இருந்து கணக்கு வழக்கில்லாமல் வாரியிறைக்கப்பட்டது சரிதானா" எனக் கேள்வி எழுப்புகின்றன இடதுசாரிக் கட்சிகள்.

மேலும் பெருநிறுவனங்கள் வாங்கிய கடன் விவரங்களும் வெளியுலகின் பார்வைக்கு வந்தன. அதில், ' கடந்த மார்ச் மாத இறுதி நிலவரப்படி, அதானி குழுமம் ரூ. 96,031 கோடி, எஸ்ஸார் குழுமம் 1.01 ட்ரில்லியன் ரூபாய், ஜி.எம்.ஆர் குழுமம் ரூ.47,976 கோடி, ஜி.வி.கே. குழுமம் 33,933 கோடி, ஜே.பி குழுமம் ரூ.75,163 கோடி, ஜே.எஸ்.டபிள்யூ ரூ. 58,171 கோடி, லான்கோ குழுமம் ரூ.47,102 கோடி, ரிலையன்ஸ் 1.25 ட்ரில்லியன் ரூபாய், வேதாந்தா குழுமம் 1.03 ட்ரில்லியன் ரூபாய், வீடியோகான் குழுமம் 45,405 கோடி ரூபாய் என மொத்தம் ரூ.7 லட்சம் கோடிகளைக் கடனாகப் பெற்றுள்ளன. மொத்தத் தொகையில் 5.60 லட்சம் கோடி ரூபாய் பணம் வாராக்கடன் பட்டியலில் இணைக்கப்பட்டுவிட்டன' என்கின்றனர் வங்கி அதிகாரிகள். இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரையில் எந்தப் பதிலும் இல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நம்மிடம், " இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது குறித்து, மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். அதானிக்கும் ரிலையன்ஸ் குழுமத்திற்கும், வங்கிப் பணத்தை வாரியிறைப்பதன் மூலம், அரசுக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என மத்திய அரசு நம்புகிறது. இந்த நிறுவனங்களின் சொத்துக்களுக்கு இணையாக, வங்கிகளில் இருந்து கடன் பெற்றுள்ளனர். இவர்களிடம் இருந்து வசூலிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அத்தனையும் நம் மக்களின் வரிப்பணம்.

தற்போது மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளன வங்கி நிர்வாகங்கள். மாணவர்களை மிரட்டி கல்விக் கடன் வசூலிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது ரிலையன்ஸ். மாணவர்களிடம் கடனை வசூலிக்கிறார்கள் சரி. ரிலையன்ஸ் வாங்கிய கடனை யார் வந்து வசூலிக்கப் போகிறார்கள்? சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 டாலராக குறைந்தாலும், பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைக்கு மேல் சலுகை வழங்குவது எதற்காக?.
இந்திய வங்கிகளில் இருந்து வாரியிறைக்கப்பட்ட பணத்திற்கு, நாடாளுமன்றத்தில் மோடி அரசு பதில் சொல்லும் வரையில் எதிர்க்கட்சிகள் ஓயப் போவதில்லை" என்றார் கொந்தளிப்போடு.

ரயிலில் கூவிக் கூவி குழந்தையை விற்க முயன்ற கொடுமை


VIKATAN 

ரயிலில் கூவிக் கூவி குழந்தையை விற்க முயன்ற கொடுமை! -போலீஸ் விசாரணையில் 2 பெண்கள்

கோவை: ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரயிலில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கூவிக் கூவி விற்க முயன்ற இரண்டு பெண்களை பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோட்டில் இருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் பயணிகள் ரயிலில், இரண்டு பெண்கள் கைக்குழந்தையுடன் பயணித்துள்ளனர். அப்போது, சக பயணிகளிடம் யாருக்காவது குழந்தை வேண்டுமா என அவர்கள் கேட்டு குழந்தையை விற்க முயன்றுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த பயணிகள், குழந்தை உதவி மையத்துக்கு இது பற்றி புகார் அளித்திருக்கின்றனர்.

பயணிகளின் புகாரின் அடிப்படையில், கோவை ரயில் நிலையத்தில் வைத்து, குழந்தையை விற்க முயன்ற இரண்டு பெண்களையும் குழந்தையுடன் கோவை ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்து இருக்கின்றனர். ரயில்வே போலீசாரின் விசாரணையில், பிடிபட்டவர்கள் ஈரோடு, வாடிப்பட்டியைச் சேர்ந்த ராணி என்பதும், சேலத்தைச் சேர்ந்த சாந்தி என்பதும் தெரியவந்திருக்கிறது.

ராணி திருச்சூரில் வேலை பார்த்து வந்துள்ளார். சாந்தியின் மகள் ஷாலினிக்கு குழந்தை இல்லாததால், ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுக்கவோ, விலைக்கு வாங்கவோ அவர் முயற்சித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த சம்சீலா என்பவருக்கு கடந்த 8-ம் தேதி பிறந்த பெண் குழந்தையை விலைக்கு அவர்கள் வாங்கியதாகவும் விசாரணையில் இருவரும் தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும், இதில் சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் பின்பற்றப்படாததால், சிக்கல் வரும் என கருதி மீண்டும் அந்த குழந்தையை சம்ஷீலாவிடம் ஒப்படைக்க முடிவு செய்து அவர்கள் திருச்சூருக்கு குழந்தையை கொண்டு சென்றதாகவும், அப்போது ரயிலில் செல்லும்போது குழந்தையை யாருக்காவது விற்றுவிடலாம் என முயன்றபோது சிக்கிக் கொண்டதாகவும் போலீசாரின் விசாரணையில் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சம்சீலாவிடம் இருந்து இடைத்தரகர் மம்மூட்டிகாகா என்பவர் மூலம் குழந்தை வாங்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. மேலும், மீட்கப்பட்ட குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போலீசார், குழந்தையின் பெற்றோரான திருச்சூரைச் சேர்ந்த சம்ஷீலாவை வரவழைத்து அவர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

ரயிலில் குழந்தையை கூவிக் கூவி பெண்களே விற்க முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-ச.ஜெ.ரவி

தனிமையில் இருக்கும்போது ஸ்மார்ட்போனைத் தொடாமல் உங்களால் எத்தனை நேரம் இருக்க முடியும்?

ஸ்மார்ட்போனுக்கு நீங்கள் அடிமையா?


தனிமையில் இருக்கும்போது ஸ்மார்ட்போனைத் தொடாமல் உங்களால் எத்தனை நேரம் இருக்க முடியும்? இதற்கான பதில் நொடிகளில் இருந்தால் உங்கள் ஊகம் சரியென வைத்துக்கொள்ளலாம். நிமிடங்கள் எனில் நீங்களும்கூட உங்கள் ஸ்மார்ட்போன் பழக்கம் பற்றி சரியாக அறிந்திருக்கவில்லை என முடிவுக்கு வர வேண்டும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்பான ஆய்வு இந்த எண்ணத்தைத்தான் ஏற்படுத்துகிறது. வைரஸ் தடுப்பு சேவை நிறுவனமான காஸ்பெர்ஸ்கி லேப் சார்பில் வர்ஸ்பர்க் மற்றும் நாட்டிங்கம் டிரெண்ட் பல்கலைக்கழகங்கள் இந்த ஆய்வை நடத்தின.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் 44 நொடிகள்கூடத் தங்கள் போனில் கைவைக்காமல் இருக்க முடியவில்லை. பெண்களைப் பொறுத்தவரை 57 நொடிகள்வரை போனைத் தொடாமல் இருக்க முடிந்திருக்கிறது. ஆண்களோ 21 நொடிகள் மட்டுமே போன் பக்கம் கையைக் கொண்டு செல்ல முடியாமல் இருந்திருக்கின்றனர்.

ஆனால், உங்கள் எத்தனை நேரம் போனைத் தொடாமல் இருக்க முடியும் எனக் கேட்கப்பட்டதற்குப் பலரும் 2 முதல் 3 நிமிடங்கள் எனப் பதிலளித்துள்ளனர். புதிய செய்திகள் மற்றும் தகவல்களைத் தவறவிட்டு விடுவோம் என்ற பதற்றம் காரணமாக அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கும் வழக்கம் பலருக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது.

கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை

கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி: கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை

ஐ.ஏ.என்.எஸ்.

நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கால் எலும்பு முறிந்துள்ளது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் மாடிப்படியில் இருந்து கீழே தவறி விழுந்ததில் அவரது கால் எலும்பு முறிந்தது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

லண்டனில் நடைபெறவுள்ள இந்திய திரைத் திருவிழாவில் கமல்ஹாசன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டத்தால் அவர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

சபாஷ் நாயுடு படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அண்மையில்தான் அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பினார். ஹைதராபாத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

சென்னை ஐஐடி மாணவி உட்பட 2 பெண்கள் தற்கொலை: போலீஸார் தீவிர விசாரணை



சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்றிரவு 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் கணேசன். இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள பேராசிரியர்கள் குடியிருப்பில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை அளித்தும் அவரை குணப்படுத்த முடியவில்லை. அதனால் கணேசனும் அவரது மனைவி விஜயலட்சுமியும் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளனர். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் நடந்துள்ளது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த விஜயலட்சுமி (வயது 47) நேற்றிரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கோட்டூர்புரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தற்கொலை

இதற்கிடையே ஐஐடி வளாகத்தில் உள்ள சபர்மதி மாணவியர் விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீஸார், விடுதியில் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த அறையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டுபிடித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் மகேஸ்வரி என்பதும், அவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், விடுதியில் உள்ள மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறும்போது, “ஆராய்ச்சி மாணவி தற்கொலை செய்து கொண்டது உண்மைதான். இது துரதிருஷ்டவசமானது. அதேபோல் பேராசிரியர் ஒருவரின் மனைவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என்றார்.

இது தொடர்பாக ஐஐடி நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஐஐடி ஆராய்ச்சி மாணவியின் மரணம் துரதிருஷ்டவசமானது. இது பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை


மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 7 பேருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 7 பேருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

ஆயுள் தண்டனை பெற்றுள்ள 7 பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2008ல் நடந்த இந்த கொலை சம்பவத்தில் விஜயன் மனைவி சுதாவின் தங்கை பானு, தமிழக காவல்துறையை சேர்ந்த காவலர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், கார்த்தி, தினேஷ்குமார், சாலமன், வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயசந்திரன் பிறப்பித்துள்ள இன்றைய தீர்ப்பில், நூற்றுக்கணக்கான சாட்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர்கள் குற்றவாளிகள் என்பது தெளிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதியன்று சென்னை கோட்டூர்புரம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டார்.

அந்த தாக்குதலில் விஜயன் மரணமுற்றத்தை அடுத்து, சென்னை கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர்அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகே துரிதப்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன், தனது மூன்றாவது மனைவியான வி.என் ஜானகியின் சகோதரரின் குழந்தைகளான லதா, கீதா, சுதா, பானு ஆகிய நால்வரையும் வளர்ப்பு குழந்தைகளாக வளர்த்தார்.

இவர்களில் சுதாவின் கணவர் கே. விஜயகுமார் என்ற விஜயன். இவர் 2008ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி சென்னை நந்தனத்தில் சிலரால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கை காவல்துறையின் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) விசாரித்துவந்தது.

இந்த வழக்கில் சுதாவின் சொந்தத் தங்கையான பானு என்பவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர்களது தம்பியான திலீபன் நடத்திய பள்ளிக்கூடத்தை யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக பானுவுக்கும் திலீபனுக்கும் பிரச்சனைகள் இருந்தன.

இதில் திலீபனுக்கு ஆதரவாக விஜயன் இருந்ததால், அவரை கொல்ல பானு திட்டமிட்டார் என்றும் போலீஸ் கான்ஸ்டபிளான கருணா என்பவரது உதவியோடு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் சிபிசிஐடி கூறியது.

இதற்காக நான்கு லட்ச ரூபாய் கருணாவுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் நான்கு பேரை கூலிக்கு அமர்த்தினார்.

விஜயன் காரில் வரும்போது அந்தக் கார் மீது மற்றொரு வாகனத்தை மோதச் செய்து, அவரை காரை விட்டு வெளியேறச் செய்து இரும்பு பைப்பால் அடித்து கொன்றனர் என சிபிசிஐடி குற்றம்சாட்டியது.

இந்த வழக்கில் பானு, கருணா, பானுவின் தோழி புவனா உள்பட 8 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இதில் புவனா வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். மீதமிருக்கும் ஏழு பேர் மீது வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் 79 சாட்சிகள் சாட்சியமளித்தனர்.

மிரட்டிய 'ஓலா' ஓட்டுநர்....எஸ்.பூர்வஜா

'கழுத்தை அறுத்து விடுவேன்'- சென்னையில் பெண் பயணியை மிரட்டிய 'ஓலா' ஓட்டுநர்


சென்னை இன்னும் பாதுகாப்பான நகரமாகவே இருக்கிறதா என்ற கேள்வியை தினமும் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் வலுவாக்கிக் கொண்டே இருக்கின்றன. இந்தச் சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையைச் சேர்ந்த பதிப்பாளர் விலாசினி ரமணிக்கு நேர்ந்த சம்பவம் பெண்கள் பாதுகாப்பு மீதான அச்ச உணர்வை அதிகரிக்கும் வகையில் இருக்கிறது.

நடந்தது என்ன?

சென்னை திருவான்மியூரில் இருந்து வளசரவாக்கத்துக்கு கடந்த ஞாயிறு இரவு ஓலா கேப் ஒன்றில் பயணித்திருக்கிறார் விலாசினி. ஓட்டுநர் காரை அதிவேகமாக இயக்கவே இரண்டு முறை விலாசினி அவரிடம் மித வேகத்தில் செல்லுமாறு கோரியுள்ளார். ஆனாலும் அதற்கு செவி சாய்க்காமல் அதி வேகத்திலேயே அவர் செல்ல மீண்டும் கோரிக்கை வைத்திருக்கிறார் விலாசினி. ஆனால், இந்த முறை பதில் கடுமையாக இருந்திருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் இத்தனை ரைட் போக வேண்டியுள்ளது. பிடிக்கவில்லை என்றால் காரில் இருந்து இறங்கவும் என ஒருமையில் திட்டியிருக்கிறார்.

திகைத்துப் போன விலாசினி காரில் இருந்து இறங்கிவிட்டார். அண்ணா பல்கலைக்கழகம் அருகே அவர் நின்றிருக்க அந்த கார் ஓட்டுநரும் அங்கேயே நின்றிருக்கிறார். சிறிது நேரத்தில் அவ்வழியாக ஒரு ஆட்டோ வர அதில் விலாசினி ஏற முற்பட்டபோது அந்த கார் டிரைவர் அருகில் வந்து ஆபாசமாக திட்டியதோடு கையை முறுக்கிக் கொண்டு கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டியிருக்கிறார். அவசர அவசரமாக ஆட்டோவில் ஏறிச் சென்ற விலாசினி வழியில் எங்காவது போலீஸ் ரோந்து வாகனம் இருக்கிறதா எனத் தேடிக் கொண்டே சென்றிருக்கிறார். ஆனால், ஒரு ரோந்து வாகனம்கூட கண்ணில் படவில்லை.

கடைசியாக ராமபுரத்தில் ஒரு அவுட்போஸ்ட்டில் சில போலீஸாரைப் பாரத்துள்ளார். அவர்களிடம் நடந்ததைக் கூற அவர்கள் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சொல்லியுள்ளனர். ஆனால், நந்தம்பாக்கத்திலோ இது எங்கள் சரகத்துக்கு உட்பட்டதல்ல நீங்கள் கிண்டி காவல் நிலையத்துக்கே செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். மீண்டும் கிண்டி செல்ல விலாசினி தயங்கவே ஒரு போலீஸ்காரருடன் வளசரவாக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விலாசினி எழுப்பும் கேள்வி:

இரவு 10 மணிக்கு மேல் எனக்கு ஆபத்து இருக்கிறது என நான் கூறியும் என்னை ஏன் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் அலைக்கழித்தார்கள். எனது புகாரை போலீஸார் உடனடியாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டாமா? ஏற்கெனவே அந்த ஓட்டுநர் என்னை பின் தொடரலாம் என்ற அச்சத்தில் இருந்த என்னை நந்தம்பாக்கம் செல்லுங்கள்.. கிண்டி செல்லுங்கள் என ஏன் கூற வேண்டும்?

இவ்வாறாக விலாசினி ரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக வலைதளத்தில் ஆதரவு:

நடந்தவற்றையெல்லாம் விரிவாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியிருக்கிறார் விலாசினி. அந்த நிலைத்தகவல் அதிகமாக பகிரப்பட்டது. கமெண்ட் பகுதியில் பலரும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஓலா தெரிவித்த 'வருத்தம்'

ஓலா நிறுவனத்துக்கு விலாசினியின் நண்பர் புகார் அளிக்க அதன் அடிப்படையில் ஓலா அலுவலகத்தில் இருந்து ஒரு பிரதிநிதி விலாசினியை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர்கள் தெரிவித்த 'வருத்தம்' பெயரளவில் மட்டுமே இருந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த ஓட்டுநர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு, "அந்த ஓட்டுநரை ஒருவார காலத்துக்கு நன்நடத்தை வகுப்புக்கு அனுப்புவோம். பின்னர் அவர் மீண்டும் கார் ஓட்டுவார்" எனத் தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண்ணை இழிவாகப் பேசி கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய நபருக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டாமா என்பதே விலாசினியின் வாதம்.

காவல்துறை உறுதி:

இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் புகாரை உடனடியாக போலீஸ் பதிவு செய்யாதது குறித்து விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், புகார் அளிக்க வருபவர்களை அங்குமிங்கும் அழைக்கழிப்பது தடுக்கப்படும். புகார் பதிவு குறித்து போதிய அறிவுரை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tuesday, July 12, 2016

THE HINDU TAMIL

தமிழகத்தில் அடுத்தகட்டமாக 1,000 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு முடிவு: வட்டாட்சியர்கள் தலைமையில் ஆய்வு தொடங்கியது


படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத் தப்படும் என்ற முதல்வரின் அறிவிப் பின்படி தமிழகத்தில் அடுத்தகட்டமாக 1,000 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப் படுகின்றன. அதற்கான ஆய்வுப்பணியை வட்டாட்சியர்கள் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஓராண்டாக வலுத்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலின்போது, இது முக்கிய பிரச்சினையாக பேசப்பட்டது. பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக, மக்கள் நலக் கூட்டணி, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்தன. அதிமுகவோ, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில், தேர்த லில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தது. முதல்வராக 6-வது முறை பொறுப் பேற்ற ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றும் வண்ணம், முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப் படும் என்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் காலை 10 மணிக்கு பதிலாக 12 மணியாக மாற்றப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்புகள் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக 1,000 டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவு செய்துள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆய்வு களில் தமிழகத்தின் அனைத்து வட்டாட்சி யர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் அடுத்த கட்டமாக 1,000 டாஸ் மாக் கடைகளை மூட வேண்டும் என்று முடி வெடுக்கப்பட்டுள்ளது. மூடவேண்டிய கடை களை கணக்கெடுக்கும் பணிகளை வட்டாட்சியர்கள் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவின்பேரில் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட வட்டாட் சியர், நில அளவையர், ஆட்சியர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு வட்டத் திலும் உள்ள அனைத்து கடைகளுக்கும் செல்லும் இந்தக் குழுவினர், டாஸ்மாக் கடை எந்த இடத்தில் உள்ளது, அந்தக் கடையின் அருகே வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளதா என்று ஆய்வு செய்கின்றனர். அருகில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம் ஆகியன இருந்தால், அவற்றுக்கும் டாஸ்மாக் கடைக்கும் எவ்வளவு தூரம் என்பதை அளந்து கொள்கின்றனர்.

இதுமட்டுமன்றி, அதிகம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் டாஸ் மாக் கடைகளின் பட்டியலையும் காவல் துறை ஒத்துழைப்போடு கேட்டுப் பெறவுள்ளனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியருக்கு வட்டாட்சி யர்கள் ஆய்வறிக்கை அனுப்புவார்கள். அவை டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கு அனுப் பப்படும். அந்த அறிக்கை யின்படி, அடுத்தகட்ட மாக சுமார் 1,000 டாஸ்மாக் கடைகள் வரை மூடப்படும். இந்த கடைகள் அதிகபட்சம் 2 மாதங்களுக்குள் மூடப்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கெனவே மூடப்பட்ட 500 மதுக்கடைகள், வருவாயை கணக்கில் கொண்டு, மக்களின் விருப்பத்தைக் கேட்காமல் மூடப்பட்டதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது அதிகாரிகள் நேரடியாக கடைகளுக்குச் சென்று ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் 6,800 ஆக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை, தற்போது 6,300 ஆக குறைந்துள்ளது. மேலும், 1,000 கடைகள் மூடப்பட்டால், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 5,300 ஆக குறையும்.

சிறைக் கதவை உடைத்துக் கொண்டு வெளியேறி மாரடைப்பு ஏற்பட்ட காவலரின் உயிரைக் காப்பாற்றிய கைதிகள்

THE HINDU TAMIL

அமெரிக்காவில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள், கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மாரடைப்பு ஏற்பட்ட சிறைக் காவலரின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.

டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறையில் கைவிலங்கிடப்பட்ட 8 கைதிகள் அடைக்கப்பட்டிருந் தனர். அங்கு பணியில் ஈடுபட்டி ருந்த ஒரே ஒரு காவலர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நிலைகுலைந்துள்ளார்.

இதைப் பார்த்த கைதிகள் உதவி கோரி சத்தம் போட்டனர். ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லை. இதனிடையே, கைதி களில் ஒருவர் கதவை உடைத்தார். இதையடுத்து 8 கைதிகளும் வெளியே வந்து நிலைகுலைந்த காவலரை பரிசோதித்தபோது அவருக்கு நாடித் துடிப்பு இல்லாததை உணர்ந்தனர்.

பின்னர் கைதிகள் உதவி கோரி கதவைத் தட்டியவாறு மீண்டும் கூச்சல் போட்டனர். இந்த அலறல் சத்தத்தைக் கேட்ட அதிகாரிகள் அங்கு ஓடி வந்து, கைதிகளை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவசர மருத்துவ சேவைப் பிரிவை அழைத்தனர்.

இதனிடையே, மூச்சடைத்துப் போன பாதுகாவலரின் உயிரைக் காப்பாற்ற முதலுதவி செய்தனர். அதற்குள் விரைந்து வந்த மருத்துவர்கள் அதிர்வுக் கரு வியைக் கொண்டு அவருக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இதைய டுத்து காவலரின் இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது.

சிறைக் கைதிகள் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து உதவியதால் காவலரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது என்று கேப்டன் மார்க் அர்னெட் தெரிவித்துள்ளார். ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக கைதி கள் கதவை உடைத்துக் கொண்டு வெளியேறினர். இந்த சம்பவத் துக்குப் பிறகு அந்த சிறையின் கதவுகள் உடைக்க முடியாதபடி பலப்படுத்தப்பட்டன.

குறள் இனிது: மறந்து போனால்... நற்பெயரும் போகும்!

THE HINDU TAMIL

பொச்சாப்பு எனும் வார்த்தைக்குப் பொருள் சொல்லுங்க பார்ப்போம். தமிழ் வார்த்தைதான். என்ன, இப்ப அதிகம் உபயோகப்படுத்துவது இல்லை.கவலைப்படாதீங்க. நான் கேட்ட பலபேருக்கும் இது தெரியலை!

அது என்னன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னால், procrastination எனும் ஆங்கில வார்த்தைக்காவது பொருள் சொல்லுங்களேன். இதுவும் சிலருக்குக் கடினமாக இருக்குதோ?

இது வேறு ஒன்றும் இல்லைங்க. எந்த வேலையைக் கொடுத்தாலும் உடனே செய்யாமல் அப்புறம் பார்த்துக்கலாம் என்று தள்ளிப்போடுவது.

என்னுடன் சிலகாலத்துக்கு முன்பு ஒரு நண்பர் வங்கியில் அதிகாரியாகப் பணி செய்து வந்தார். நமது வழக்கப்படி அவரை குமார் என அழைப்போம்.

குமாரின் பிரச்சினை என்னவென்றால் எந்த வேலையைக் கொடுத்தாலும் உடனே சுறுசுறுப்பாகத் தொடங்க மாட்டார்.

நல்ல பெரிய வாடிக்கையாளர்கள் 50 பேரைத் தேர்வு செய்து வைப்புநிதி கேட்டுக் கடிதம் எழுதுவோம், அதில் 10 பேரை நேரிலும் சந்திப்போம் என முடிவு செய்து இவரிடம் பணியை ஒப்படைத்தால் வரும் சனிக்கிழமை ஆரம்பிப்போம் என்பார்.

சனிக்கிழமை அன்று குமார் காணாமல் போய்விடுவார். கண்டுபிடித்துக் கேட்டால் அவருக்கு எல்லாவற்றையும் முதலிலிருந்து சொல்லி ஞாபகப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

`ஒரு எளிய வேலை கடினமாகத் தெரிய வேண்டுமானால் அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வாருங்கள்' என்றார் ஒலின் மில்லர்!

குமாரை நம்பி எதிலும் இறங்கி விட முடியாது. காலை 6.30 மணிக்கு விமான நிலையம் போய் மேலதிகாரியை அழைத்து வாப்பா என்றால் சரி என்பார். ஆனால் முன்னதாகவே சென்று காத்துக் கொண்டிருக்க மாட்டார். போகிறேன் என்று சொன்னோமே, தவறாமல் ஞாபகப்படுத்தத் தேவையில்லாமல் போய் விட வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி இருக்காது.

இவர் நேரத்துக்கு போகாமல், பின்னர் எங்கள் மேல் கோபத்தைக் காட்டியது தனிக்கதை! 'நீங்கள் தாமதிக்கலாம், நேரம் தாமதிக்காதே' என்று பெஞ்சமின் பிராங்க்ளின் சொன்னது எவ்வளவு உண்மை!

குமாருக்கு அறிவோ ஆற்றலோ குறைவல்ல. ஆனால் பணியில் முனைப்பு (seriousness) கிடையாது. இதனால் அவரிடம் படிப்பும் பலவருட அனுபவமும் இருந்தும் யாரும் எந்த வேலையையும் நம்பிக் கொடுக்க மாட்டார்கள்.

எந்த ஒரு பணியாளருக்கும், ஏன் எந்த ஒரு மனிதருக்கும் தேவை கடமை தவறாமை. அத்துடன் காரியத்தைத் தள்ளிப் போடாத குணம். அவர் செய்கிறேன் என்று சொல்லிவிட்டார் என்றால் செய்துவிடுவார் என்று எண்ணும்படியான நம்பகத்தன்மை.

மனிதவள அறிஞர்களைக் கேட்டால் ‘மறதி என்று ஒன்றும் இல்லை. கவனக்குறைவைத் தான் அப்படிச் சொல்லிச் சிலர் சமாளிக்கிறார்கள்' என்கிறார்கள்.

தினமும் பிச்சை எடுத்துச் சாப்பிடுபவனுக்கு மந்த புத்தி வந்துவிடும். அதைப் போலவே கடமையை மறப்பவர்களுக்கு, தாம் மேற்கொண்ட பணியை முனைப்புடன் செய்யாமல் தள்ளிப் போடும் பொச்சாப்புக் குணம் உடையவர்களுக்குப் பெயர் கெட்டுப் போகும் என்கிறார் வள்ளுவர்.

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்பக்கொன்று ஆங்கு (குறள் 532)

somaiah.veerappan@gmail.com

Wednesday, July 6, 2016

போலீஸ் தரப்பில் பெரிய பெரிய ஓட்டை

போலீஸ் தரப்பில் பெரிய பெரிய ஓட்டை... ராம்குமார்தான் குற்றவாளி என்பதை எப்படி நம்புவது? By: Sutha Published: Wednesday, July 6, 2016, 11:35 [IST]

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/how-come-police-decide-ramkumar-is-the-killer-asks-his-advocate-257490.html

சென்னை: சுவாதியைப் படு கொலை செய்தது ராம்குமார்தான் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க போலீஸ் தரப்பு பெரும்பாடு பட வேண்டி வரும் என்று தெரிகிறது. காரணம், அத்தனை ஓட்டைகள் உள்ளன. சாதாரண மனிதர்களுக்கே ஏராளமான சந்தேகங்கள், கேள்விகள் கிளம்பி வருகின்றன என்றால் கோர்ட்டில் எப்படியெல்லாம் கேட்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. ஆனால் இதையெல்லாம் காவல்துறை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதிலும் குழப்பமே நிலவுகிறது. ராம்குமார் கைது முதல் அவரை சிறையில் அடைத்தது வரை ஏகப்பட்ட குழப்பங்கள் காணப்படுகின்றன. இதை அவரது வக்கீலே எழுப்பியும் உள்ளார். அவர் கேட்கும் பல கேள்விகளுக்கு விடை இல்லை.


யாரைக் காப்பாற்ற முயற்சி? நிச்சயமாக ராம்குமார் இந்தக் கொலையைச் செய்யவில்லை. அவசர கதியில் அவரைப் பிடித்து வழக்கில் கோர்த்து விட்டுள்ளனர் என்று சொல்கிறார் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி. யாரையோ காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் அவர் அடித்துச் சொல்கிறார்.

யாரைக் காப்பாற்ற முயற்சி? நிச்சயமாக ராம்குமார் இந்தக் கொலையைச் செய்யவில்லை. அவசர கதியில் அவரைப் பிடித்து வழக்கில் கோர்த்து விட்டுள்ளனர் என்று சொல்கிறார் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி. யாரையோ காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் அவர் அடித்துச் சொல்கிறார்.

தனது நண்பர்கள்தான் போட்டு விடு என்று கூறியதாகவும், அதன்படியே கொலை செய்ததாகவும் ராம்குமார் கூறியுள்ளதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால் யார் அந்த நண்பர்கள் என்பது குறித்து போலீஸ் தரப்பில் விசாரணையே நடத்தப்படவில்லை. அந்த நண்பர்களின் பெயர் என்ன என்பதையும் போலீஸார் தெரிவிக்கவில்லை.

உண்மையில் ராம்குமாரை சிலர் கருவியாக பயன்படுத்தியுள்ளனர். அவர்களுக்காகவே ராம்குமாரை பலிகடாவாக்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற ஒரு தரப்பு முயற்சிப்பதாகவே தெரிகிறது. இது போலீஸாருக்கும் தெரியும் என்றே தோன்றுகிறது என்றும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கேட்கிறார்.


ராம்குமாரைக் கைது செய்யச் சென்றபோது தற்கொலைக்கு அவர் முயன்றதாக போலீஸ் கூறுகிறது. உண்மையில் ராம்குமாருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் இருந்திருந்தால் அதை அவர் எப்போதே செய்திருக்கலாமே.. போலீஸார் வந்து பிடிக்கும் வரை ஏன் அவர் காத்திருக்க வேண்டும். இதுவும் இடிக்கிறது.


போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனே பகிரங்கமாக ராம்குமார்தான் குற்றவாளி என்று ஊடகங்களைக் கூப்பிட்டுக் கூறுகிறார். வழக்கு விசாரணை முடியாமல், தீர்ப்பு வராத நிலையில் எப்படி அந்த முடிவுக்கு அவர் வந்தார். அப்படிச் சொல்லச் சொல்லியது யார்.


போலீஸ் தரப்பில் குற்றவாளி குறித்த படங்கள் தொடர்பாக பல குழப்பங்கள் உள்ளன. போலீஸ் வெளியிட்ட படங்களிலேயே முரண்பாடுகள் காணப்பட்டன. அதை விட முக்கியமாக அந்த நபரும், கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரும் ஒருவர்தான் என்று தடயவியல் துறை இதுவரை அறிக்கை தரவில்லை என்பது முக்கியமானது.


சுவாதியின் பெற்றோர் அமானுஷ்யமான அமைதி காக்கின்றனர். அவர்களை பேச விடாமல் சிலர் தடுப்பதாக தெரிகிறது. அது ஏன். அவர்களைப் பேச விடாமல் தடுப்பது எது என்று பல குழப்பங்கள் இந்த வழக்கில் உள்ளன. இதற்கெல்லாம் போலீஸ் தரப்பில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கூறுகிறார் கிருஷ்ணமூர்த்தி.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/how-come-police-decide-ramkumar-is-the-killer-asks-his-advocate-257490.html#slide203064

பார்வை

பார்வை: வினுப்பிரியாக்கள் பிழைத்திருப்பதே குற்றமா?


கொலை செய்வதைவிடக் கொடூரமானது அமைதிகாப்பது. ஒரு பெண்ணைப் படுகொலை செய்வதற்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை அவளை அவளே படுகொலை செய்துகொள்ளத் தூண்டுவது. அப்படித் தூண்டப்பட்டுத் தன்னையே மாய்த்துக்கொண்டிருக்கிறார் சேலம் வினுப்பிரியா. முகநூலில் பதிவிட்டிருந்த வினுப்பிரியாவின் புகைப்படத்தை யாரோ ஒருவர் மார்ஃபிங் செய்து அநாகரிகமாக வெளியிட, அவமானம் தாங்காமல் தன்னைத் தானே கொலை செய்துகொண்டார் வினுப்பிரியா.

வினுப்பிரியாவின் மரணத்துக்கு அவரது புகைப்படத்தை அநாகரிகமாக வெளியிட்ட நபர் மட்டும்தான் காரணமா? அதுபோன்ற படங்களைத் தேடித்தேடிப் பார்க்கிறவர்களுக்கும், பகிர்கிறவர்களுக்கும் இதில் பங்கு இல்லையா? இப்படி அவமானத்துக்குள்ளாகும் பெண்ணைத் தரக்குறைவாகப் பார்க்கும் சமூகம் இதில் சம்பந்தப்படவில்லையா? பொதுவெளியில் பகிரப்படும் தகவல்களால் ஏற்படுகிற நெருக்கடிகளைச் சமாளிக்கும் மனோதிடத்தை நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தந்திருக்கிறோமா?

இதுபோன்ற சம்பவங்களின்போது குடும்பம் பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறதா? முதலில் பெற்றோருக்குப் போதிய விழிப்புணர்வு இருக்கிறதா? பாதிக்கப்படும் பெண்ணைக் குறித்து இந்தச் சமூகம் முன்வைக்கும் சித்திரம் நாகரிகமானதா? அந்தப் பெண் மீது வீசப்படும் அவதூறுகளும் பழிச்சொற்களும் அவளுடைய நட்பு வட்டத்தையும் உறவு வட்டத்தையும் சிதைக்காதா? மக்களிடையே சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு இருக்கிறதா? சைபர் குற்றப் பிரிவில் தரப்படும் புகார்களுக்கு விரைந்து தீர்வு காணப்படுகிறதா? வினுப்பிரியாவின் மரணம் இப்படிப் பல்வேறு கேள்விகளை விட்டுச் சென்றிருக்கிறது.

வெளிப்படும் வக்கிரம்

உலகமயமாக்கலும், தொழில்நுட்ப வளர்ச்சியும் நல்லது கெட்டது அனைத்தையும் நம் உள்ளங்கைக்குள்ளேயே கொண்டுவந்துவிடுகின்றன. அவற்றில் வக்கிரம் நிறைந்த குப்பைகள் அதிகம். விவசாயம் பொய்த்துப்போன கிராமங்களில்கூட இன்று ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி செழிப்புடன் இருக்கிறது. இணையப் பயன்பாடு அதிகரித்த பின் இணையவழி நடக்கும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது.

ஒவ்வொரு குற்றத்திலும் ஒரு பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவளது எதிர்காலம் சிதைக்கப்படுகிறது. அவளது வாழ்வு மரணத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. பெண்ணின் உடல் புனிதமானதாகவும் பெண்ணின் செயல்கள் அனைத்தும் நம் பண்பாட்டின், பாரம்பரியத்தின் அடையாளமாகவும் பிரகடனப்படுத்தப்படுகிற சமூகத்தில் அந்த உடலை வைத்தே ஒரு பெண்ணைச் சாய்ப்பது ஆணுக்கு எளிதாகிறது. அவளது நடத்தை சார்ந்த குற்றச்சாட்டை வைத்தாலே போதும்,

அவள் முடங்கிப்போக. அப்படியும் முடங்கவில்லையெனில் இருக்கவே இருக்கின்றன அநாகரிகச் செயல்பாடுகள். வெட்டு, கொலை, அமிலவீச்சு ஆகியவற்றைவிட ஒரு பெண்ணின் அந்தரங்கத்தைக் கடைவிரிப்பது ஆண்களுக்கு மிக எளிதாக இருக்கிறது. நம் சமூகச் சூழலில் அது பெண்களுக்கு மரணத்தைவிடக் கொடுமையான தண்டனையாகவும் அமைகிறது.

இணைந்து போராட வேண்டும்

“நம் சமூக அமைப்பில் இருக்கிற குறைபாடு இது” என்கிறார் இளந்தமிழகம் அமைப்பைச் சேர்ந்த பரிமளா. “பஸ்ஸில் ஒருவன் தன்னை உரசினால், அதை வெளியே சொல்லக்கூடத் தயங்குகிற பெண்கள் அதிகம். காரணம் பெண்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள்.

பெண்களுக்கு நம் சமூகத்தில் எந்த உரிமையும் இல்லை. படிக்கும் படிப்பு, அணியும் உடை, வாழ்க்கைத்துணை என்று சகலமும் அடுத்தவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவனை வேண்டாம் என்று நிராகரிக்கக்கூட ஒரு பெண்ணுக்கு நம் சமூகத்தில் உரிமையில்லை” என்று சொல்லும் பரிமளா, பெண்ணின் மீது திணிக்கப்படும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் சமூகக் கட்டுகளையும் எதிர்த்துப் பெண்கள் கேள்வி கேட்க வேண்டும் என்கிறார்.

“இது யாரோ ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் இது நேரலாம். பெண்ணின் அங்கம் கொஞ்சம் வெளிப்பட்டாலே அவளது ஒழுக்கம் கெட்டுவிட்டது என்று சமூகம் வகுத்துவைத்திருக்கிறது. இதற்கு எதிராகப் பெண்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். தவறு செய்கிறவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்” என்கிறார் அவர்.

தற்கொலை தீர்வல்ல

தற்காலிகப் பிரச்சினைக்காக மரணம் என்னும் நிரந்தர முடிவை நோக்கிச் செல்வது தவறு என்று சுட்டிக்காட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவ நிபுணர் லக்ஷ்மி விஜயகுமார். சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனரான இவர், ஒரு பெண் தன் மீது வைக்கும் நம்பிக்கையே தற்கொலை எண்ணத்தைத் தடுக்கும் என்கிறார்.

“ஒவ்வொரு பெண்ணும் தன் மீது மரியாதையும் நம்பிக்கையும் வைக்கணும். நாம் செய்யாத தவறுக்காக, நாம் ஏன் சாக வேண்டும் என்ற தெளிவு வேண்டும். வாழ்வில் எந்தச் சிக்கலும் இல்லாதபோது துணிச்சலுடன் இருப்பதைவிட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும்போதுதான் துணிச்சலுடன் இருக்க வேண்டும்.

வெளியே சொல்ல முடியாத பிரச்சினையாக இருந்தால் நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம். பிறகு பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பகிர்ந்துகொள்கிறபோது பிரச்சினை பாதியாகிவிடும்” என்று சொல்லும் லக்ஷ்மி விஜயகுமார், இது போன்ற குற்றங்கள் அதிகரிக்க ஊடகங்களும் முக்கியக் காரணம் என்கிறார்.

“எந்தத் திரைப்படமாக இருந்தாலும் அதில் பெண் என்பவள், ஆண் அனுபவிக்க வேண்டிய ஒரு பண்டமாகவே காட்சிப்படுத்தப்படுகிறாள். பெண்ணின் விருப்பு, வெறுப்புக்கு அங்கே இடமில்லை. ஒருவனை வேண்டாம் என்று மறுக்கும் உரிமையும் அவளுக்கு இல்லை. ஆரம்பத்தில் மறுக்கிற பெண்ணையும் எப்படியாவது மசியவைப்பதுதான் ஆண்மை என்று கேவலமாகச் சித்தரிக்கப்படுகிறது. இதைப் பார்த்து வளர்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்தச் சிந்தனைதானே இருக்கும்? அனைவருக்கும் சமூகப் பொறுப்பு வேண்டும்” என்று சொல்கிறார் அவர்.

எப்படி வளர்க்கிறோம் பிள்ளைகளை?

சமீபகாலமாக இள வயதுத் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சொல்லும் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன், “பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோபலத்துடன் குழந்தைகளை வளர்க்கிறோமா?” என்று கேட்கிறார்.

“படிப்பு, மதிப்பெண் எல்லாமே இரண்டாம்பட்சம்தான். சிக்கல்களை, பிரச்சினைகளை எதிர்கொள்கிற பக்கு வத்தைச் சொல்லித் தருவதுதான் முக்கியம். ஃபேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி தங்கள் படங்களை மாற்றுகிறவர்களும் எத்தனை லைக்ஸ் விழுந்திருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருப்பவர்களும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். தன் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இப்படிச் சமூக ஊடகங்களின் அங்கீகாரத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்” என்று சொல்லும் பிருந்தா ஜெயராமன், ஒரு பிரச்சினை வெடிக்கும்போது அந்த நேரத்தில் குரல்கொடுத்துவிட்டு அடங்கிப் போவதைவிட அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்வரை களத்தில் நிற்க வேண்டும் என்கிறார்.

“புகார் கொடுத்ததுமே விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம். ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பும் கடமையும் அவசியம். சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் அவற்றின் முடிவு குறித்து காவல்துறை சமூகப் பொறுப்புடன் தானே முன்வந்து அறிவித்தால் பொதுமக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்” என்கிறார் பிருந்தா ஜெயராமன்.

வினுப்பிரியாவின் தற்கொலை மட்டுமல்ல, சுவாதியின் படுகொலை, ராயப்பேட்டையைச் சேர்ந்த மூன்று பெண்களின் கொலை என்று சமூகத்தில் நடக்கிற கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிற பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் ஆர்வமாக இருக்கிறோமா? குறைந்தபட்சம் நம் கண்ணெதிரில் நடக்கிற குற்றத்தையாவது தட்டிக் கேட்டிருக்கிறோமா? ஒரு பெண்ணைப் பற்றிய அவதூறு செய்தி வந்ததும் அதை அடுத்தவருக்கு ஃபார்வேர்ட் செய்யாமல் இருந்திருக்கிறோமா?

குற்றத்தைத் தடுக்க முடியவில்லை என்றால் அதை காவல்துறைக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோமா? பெண்களை சக மனுஷியாக, உயிரும் உணர்வும் கொண்ட ஒரு பிறவியாக நினைக்கவாவது முயற்சித்திருக்கிறோமா? நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்குப் பெண்களை மதிக்கச் சொல்லித் தந்திருக்கிறோமா? இவற்றுக்கான பதில்களில்தான் வினுப்பிரியாக்கள் பிழைத்திருப்பதும் அடங்கியிருக்கிறது.

வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்: காவல்துறை அறிவுறுத்தல்கள்

சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று இரவு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்து வாகனத்தில் வீடு திரும்பிய நந்தினி, நஜ்ஜு ஆகியோரிடம் இருந்து பணப்பையை கொள்ளையன் பறிக்க முயன்றான். இதில், வாகனத்தில் இருந்து விழுந்த நந்தினி உயிரிழந்தார். சாலையில் சென்ற முதியவர் ஒருவரும் உயிரிழந்தார்.

ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள், தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களை நிறுவியுள்ள வங்கிகள், பணம் எடுத்துச் செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்குகிறது. வங்கிக்கு உள்ளே வருபவர்கள், வெளியில் நிற்பவர்களை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே, ஹெல்மெட், தொப்பி அணிந்து வரவேண்டாம். பணம் எடுக்கும்போது, மற்றவர்கள் கவனிக்காத வகையில் ரகசிய எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று வங்கிகள் அறிவுறுத்துகின்றன.

இதுதொடர்பாக காவல்துறையும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதுபற்றிய விவரம்:

* வங்கி, ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதை சிலர் நோட்டமிடலாம். அதிக தொகை எடுக்கும்போது, அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும் வகையில் எண்ணுவது, அடுக்குவது கூடாது. வங்கி அல்லது ஏடிஎம் மையத்துக்குள்ளேயே எண்ணி முடித்து, பையில் வைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும். வெளியே வந்து எண்ணுவது, சரிபார்ப்பது கூடாது.

* வங்கியில் இருந்து வெளியே வரும்போது யாராவது பின்தொடர்கின்றனரா என்று கண்காணிக்க வேண்டும். பின்தொடர்வதாக சந்தேகித்தால் காவல் துறையினரை அணுகலாம்.

* சந்தேகிக்கும் நபர்கள் வங்கி அல்லது ஏடிஎம் மையங்களுக்கு வெளியே நிற்பதாக அறிந்தால், அந்த மையங்களில் இருக்கும் காவல்துறை தொடர்பு எண்ணில் தகவல் அளிக்கலாம்.

* சில நேரம், நீங்கள் பணத்தை எடுத்துச் செல்லும்போதோ, வாகனத்தில் ஏறும்போதோ, உங்கள் சட்டையில் அசிங்கம் பட்டிருப்பதாக யாராவது கூறலாம். ரூபாய் நோட்டுகள் கீழே கிடப்பதாக கூறலாம். அவர்கள் உங்கள் கவனத்தை திசைதிருப்பி, பணப்பையை பறித்துச் செல்ல வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கை தேவை.

* பணத்தை கைப்பையில் போட்டு கையில் தொங்கவிட்டு செல்வது, வாகனத்தின் முன்பக்க பையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும்.

* இரவு நேரத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில், பாதுகாவலர் இல்லாத ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதை பெரும்பாலும் தவிர்க்கலாம்.

NEWS TODAY 25.09.2024