Monday, January 23, 2017

இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை - லாரன்ஸ் விளக்கம்

Actor Lawrence
'இளைஞர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை' என போராட்டக்களத்தில் இருந்த நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை மெரினாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், "கடந்த ஒரு வாரம் இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். போராட்டம் இளைஞர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தவரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. போராட்டக் களத்துக்குள் வேறு சிலர் புகுந்தனர். அவர்களால்தான் பிரச்னை ஏற்பட்டது.

இளைஞர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை. அவசரச் சட்ட நகலை முன்பே காட்டியிருந்தால் கலைந்திருப்போம். அவசரச் சட்ட நகலை கேட்டுள்ளோம். அவசரச் சட்ட நகலை காட்டியபின், அரசு விடுத்த கோரிக்கைப்படி மூன்று மாதம்வரை போராட்டத்தை தள்ளி வைப்போம். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டுவராவிடின் மீண்டும் போராடுவோம். மாணவர்களை தாக்கியது வருத்தமளிக்கிறது" என்றார்.

போராட்டக் குழுவினர் யார் சொன்னால் கேட்பார்கள்? போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை


மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர், யார் சொன்னால் கேட்பார்கள் என்பதில் போலீஸார் தீவிர கவனம் செலுத்திவருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா முதல் குமரி வரை போராட்டம் நடந்தது. அமைதியாகவும், அறவழியில், தலைமையே இல்லாமல் நடந்த போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுக்கு இந்த போராட்டம் கடும் நெருக்கடியை கொடுத்தது. இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இந்த சட்டத்தை போராட்டக்குழுவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தினர்.

குடியரசு தின விழா நிகழ்ச்சி ஆண்டுதோறும் சென்னை மெரினாவில் நடத்தப்படும். இந்த முறை ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக அந்த விழாவிற்கான ஏற்பாடுகள், ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இதற்கிடையில் தேசிய இறையான்மைக்கு எதிராகவும் போராட்டக்குழுவிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் போராட்டக் களத்திலிருந்து வீடு திரும்பினர்.

இதுவே போராட்டக்குழுவை கட்டுப்படுத்த சரியான தருணம் என்று போலீஸ் கருதியது. இதுதொடர்பாக ஆட்சியாளர்களுடன் ஐ.பி.எஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் போராட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி பேச்சுவார்த்தையில் தமிழக போலீஸார் ஈடுபட்டனர்.

மெரினாவை பொறுத்தவரைக்கும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு திரண்டதால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படக்கூடாது என்பதில் போலீஸார் அதிக கவனம் செலுத்தினர். இதனால் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்குழுவினர் கலைந்து செல்லவில்லை. இதனால் மெரினாவுக்கு வரும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சென்னையில் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் மெரினாவில் போராட்டக்குழுவின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்த சமயத்தில் போலீஸாருக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே நடந்த மோதலில் லத்திசார்ஜ் நடத்தப்பட்டது. இருப்பினும் போராட்டக்குழுவினர் கடற்கரையில் கூடினர். அதற்கு மேல் போலீஸாரால் போராட்டக்குழுவினரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த சமயத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நடிகர் ராகவா லாரன்ஸிடம் போலீஸ் உயரதிகாரி பேசினார். ஏற்கெனவே போராட்டக்களத்துக்கு செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என்ற போலீஸாரிடம் கேட்ட ராகவா லாரன்ஸ், மெரினாவுக்குள் அனுமதிக்கப்பட்டார். அங்கு சென்ற அவர், நம்முடைய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்து விட்டது. இதனால் போராட்டத்தை கைவிடுமாறு பேசினார். ஆனால் அவரது பேச்சை கேட்க ஒரு பகுதியினர் மெரினாவிலிருந்து கிளம்பினர். ஆனால் மற்றொரு தரப்பினர் அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்பின் இயக்குநர் கௌதமன், போராட்டக்களத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். இவர்கள் போராட்டக்குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.


கடற்கரை ஓரத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவது போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அந்த போரட்டக்குழுவினரை எப்படி அங்கிருந்து அகற்றுவது என்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் உடனடியாக ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் குறித்து சேகரித்து அதற்குப்பிறகு களத்தில் இறங்கலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டது. அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. இன்று மாலைக்குள் போராட்டக்குழுவினரை மெரினாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இதனால் காலதாமதமில்லாமல் போராட்டக்குழுவினரை வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த சமயத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் போலீஸாருக்கு வேண்டப்பட்டவர்களை களமிறக்கி அதன்மூலம் இந்த போராட்டத்துக்குத் தீர்வு காணலாம். இல்லையென்றால் அரசிடமிருந்து அதிகாரத்தை பெற்று போராட்டக்குழுவினரை அகற்ற வேண்டும் என்று ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஆட்சியாளர்களிடம் சொன்னபோது எந்தக்காரணத்தைக் கொண்டும் இத்தகைய முடிவுகளை போலீஸார் எடுக்கக்கூடாது என்று ஆட்சியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் அதிகாரிகள் அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே 6 நாட்களாக மெரினா போராட்டக்களத்திலேயே 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார், எப்போது இயல்பு நிலைமை திரும்பும் என்று எதிர்பார்த்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள் உயரதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, " போராட்டக்குழுவினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களது பேச்சுவார்த்தைக்கு வெற்றி கிடைத்து வருகிறது. விரைவில் மீதமுள்ளவர்களையும் மெரினாவிலிருந்து இன்று அகற்றி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

- எஸ்.மகேஷ்

யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கை! முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி


இரண்டு மணி நேரம் மட்டும் அவகாசங்கள் கொடுங்கள் என்று போராட்டக்கார்கள் கேட்டும், அவர்கள் மீது தடியடி நடத்தி கலைக்க காவல்துறைக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மெரினா கடற்கரையிலும், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் மக்கள் போராட்டத்தை அதிமுக அரசு முறையாக கையாளத் தவறி விட்டது. மாணவர்கள், இளைஞர்கள், கைக் குழந்தைகளுடன் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கும் தமிழுணர்வு ரிதீயான போராட்டங்களை காவல்துறை மூலம் மட்டுமே தீர்த்து வைத்துவிட முடியும் என்று அதிமுக அரசு நினைப்பது முற்றிலும் தவறானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான போராட்டத்தை திரும்பப் பெற வைப்பதை விட்டு விட்டு, காவல்துறை மூலம் இந்தப் பணியை செய்ய வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. இது முழுக்க முழுக்க ஜனநாயக விரோத போக்கு மட்டுமல்ல- சர்வாதிகார மனப்பான்மை கொண்ட அணுகுமுறை.



ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன் இளைஞர்களை சந்தித்துப் பேச வேண்டுகோள் விடுத்தேன். பிறகு முதலமைச்சர் டெல்லிக்கு பிரதமரை சந்திக்கச் சென்ற போது “மாணவர்கள், இளைஞர்கள் பிரநிதிநிதிகளை அழைத்துச் செல்லுங்கள்” என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு கூட உடனடியாக மெரினா கடற்கரை சென்று போராடும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவசரச் சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த முடியும் என்றும், நிரந்தர தீர்வுக்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

ஆனால் இந்த வழிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் "நானே ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைக்கிறேன்" என்று மதுரைக்கு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றதும், தன் அமைச்சரவை சகாக்களை எல்லாம் ஆங்காங்கே உள்ள மாவட்டங்களில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கூட செய்யாமல் ஜல்லிக்கட்டை அவசர கோலத்தில் நடத்தி வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்ததும் இன்று மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் தொடருவதற்கு காரணமாகி விட்டது. அதை விட “காவல்துறையை பயன்படுத்தியே போராட்டத்தை கலைப்பேன். போராடும் மாணவர்களை சந்திக்கவே மாட்டேன்” என்று ஒரு முதலமைச்சர் செயல்படுவதை ஜனநாயக நாட்டில் யாராலும் ஏற்றுக் கொள்ள இயலாது. முதலமைச்சர் இப்படி அடம்பிடித்தது அறப்போரில் ஈடுபட்டு அமைதி வழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்களின் தமிழ் பாரம்பர்யம் மற்றும் பண்பாடு காப்பாற்றும் போராட்டத்தை அவமதிப்பதாக அமைந்து விட்டது.

ஜனவரி 17-ம் தேதியிலிருந்து மெரினாவில் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களும், இளைஞர்களும் மேலும் இரண்டு மணி நேரம் மட்டும் அவகாசங்கள் கொடுங்கள் என்று கேட்டும், அவர்களை தடியடி நடத்தியும், வலுக்கட்டாயமாகவும் கலைக்க காவல்துறைக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டது ஏன். யாரை திருப்திப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எடுக்க உத்தரவிட்டார். கடல் நீரில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள் என்று முன்னெச்சரிக்கை உணர்வு கூட மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கு வராமல் போனது ஏன். இப்படி ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலைக்க நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் அரசு நிர்வாகத்துக்கும், காவல்துறை நிர்வாகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல் இருப்பது கவலையளிக்கிறது.

கடற்கரையோரத்தில் நடைபெறும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் இந்த நாட்டின் எதிர்காலங்களாக திகழும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிர் மிக முக்கியம் என்பதை மனதில் வைத்து காவல்துறையும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்த நிலையிலாவது முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக மெரினா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களையும், இளைஞர்களையும் நேரில் சந்தித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்கிக் கூறி ஜல்லிக்கட்டு இனி எக்காலத்திலும் தடை பட விடமாட்டோம் என்ற உறுதியை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்' என்றுக்கூறியுள்ளார்.

2 மணி நேரம் பொறுமையாக இருந்திருந்தால்..! காவல்துறையை சாடும் ராமதாஸ்


கடந்த 6 நாட்களாக அமைதி காத்த காவல்துறையினர் அடுத்த இரண்டு மணி நேரம் பொறுமையை கடைபிடித்திருந்தால் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும் என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும், மக்களும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு காவல்துறை ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்காகவும், தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்துக்கு எதிரான தாக்குதலை முறியடிப்பதற்காகவும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரலாற்றில் பதிவான அறவழிப் போராட்டம் வலிகளுடன் முடித்து வைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது; வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கோரி கடந்த 16-ம் தேதி மதுரை அலங்காநல்லூரிலும், அதைத் தொடர்ந்து மெரினாவிலும் தொடங்கிய அறவழிப் போராட்டங்கள் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றன. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். மக்கள் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை நடுங்க வைத்ததன் பயனாகத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கைகூடாத அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன்மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறப்போராட்டம் புதிய வரலாறு படைத்தது. எந்த ஒரு போராட்டமும் வெற்றியுடன் நிறைவடைவது தான் மகிழ்ச்சியானதாகவும், சிறப்பானதாகவும் அமையும். தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தின் செல்லும் தன்மை குறித்த ஐயம் காரணமாக மாணவர்களும், மக்களும் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்தனர். மற்றொருபுறம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை தங்களின் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளத் துடித்த கும்பல்கள், மாணவர்களின் போராட்டத்தை தங்களுக்கானதாக மாற்ற நினைத்து, அவமானப்பட்டவர்கள், மாணவர்கள் போராட்டம் வெற்றி பெறுவதை சகித்துக் கொள்ள முடியாமல் அதை சீரழிக்க நினைத்தவர்கள் என பலரும் உள்நுழைந்து போராட்டத்தை திசை திருப்பும் செயல்களில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் மாணவர்களின் போராட்டத்தை காவல்துறை மிகவும் பக்குவமாக கையாண்டிருக்க வேண்டும்.


போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடனும், போராட்டக் குழுவினருடனும் காவல்துறையினர் பேச்சு நடத்தி, உண்மை நிலையை அவர்களுக்கு எடுத்துக் கூறி கலைந்து செல்ல வைத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறிவிட்டது. சென்னை மெரினாவிலிருந்து போராட்டக்காரர்கள் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் இன்று காலை அறிவிப்பு வெளியிட்ட போது, 2 மணி நேரம் அவகாசம் தாருங்கள்... அதற்குள் கலைந்து செல்கிறோம் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். கடந்த 6 நாட்களாக அமைதி காத்த காவல்துறையினர் அடுத்த இரண்டு மணி நேரம் பொறுமையை கடைபிடித்திருந்தால் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும்.
ஆனால், காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் நிலைமையை மிகவும் மோசமாக்கி விட்டனர். மாணவர்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்குடன் போராட்டத்தில் ஊடுருவிய வன்முறை கும்பலைச் சேர்ந்த சிலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு தப்பிவிட்ட நிலையில் அப்பாவி மாணவர்கள்தான் காவல்துறை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். மாணவர்கள் மட்டுமின்றி, மெரினா கடற்கரை பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

சென்னை மெரினா கடற்கரை போன்று அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களிலும் மக்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. அலங்காநல்லூரில் காவல்துறை தடியடியில் பலர் காயமடைந்துள்ளனர். காவல்துறை ஒடுக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. காவல்துறை தாக்குதலை கண்டிக்கும் வகையில் மாணவர்களில் ஒரு பிரிவினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போதைய சூழலில் கடலில் போராட்டம் நடத்துவது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதால் மாணவர்கள் வெளியேற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும், மக்களும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு காவல்துறை ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பதற்றத்தை தணித்து அமைதியும், இயல்பு வாழ்க்கையும் திரும்புவதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களே... தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள் !' - கொந்தளிப்பு அடங்காத மெரினா



ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் கூடிய கூட்டத்தை ஆயுதங்களின் துணையோடு அப்புறப்படுத்தத் தொடங்கிவிட்டது காவல்துறை. 'மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகரிக்கும் சூழலில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்காக வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளது தமிழக அரசு' எனக் கொந்தளிக்கின்றனர் மாணவர்கள்.

தமிழக சட்டசபை இன்று கூடியுள்ளது. ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு சட்ட வடிவம் கொடுக்கும் வேலையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. 'நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரையில் அகல மாட்டோம்' என மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். 'மெரினாவை சுத்தப்படுத்தினால்தான், குடியரசு தினத்தை நடத்த முடியும்' என்பதால், நேற்று நள்ளிரவு முதல் கூட்டத்தைக் கலைக்கும் பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ' போலீஸாரின் நடவடிக்கை பெரும் கலவரத்தில் முடியலாம்' என அரசியல் கட்சித் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

"மாணவர்களிடம் பேசுவதற்கான முயற்சியை எடுத்தோம் என காவல்துறை அதிகாரிகள் சொல்கின்றனர். போராட்டக் களத்தில் இருப்பவர்கள், வாட்ஸ்அப் மூலம்தான் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்கின்றனர். ஒரு தலைவர் இல்லாத கூட்டத்தில், யாரிடம் சென்று இவர்கள் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த கூட்டத்துக்கும் கேட்கும்விதமாக, மைக் வைத்துப் பேசியிருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் ஜனநாயகரீதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இதைப் புரிந்து கொண்டு அரசியல் கட்சிகள் ஒதுங்கியுள்ளன. இதுவரையில், நல்லமுறையில் செயல்பட்டுக் கொண்டிருந்த நேற்று முதல் தேச விரோதி என முத்திரை குத்துவதை, திட்டமிட்ட சதியாகத்தான் பார்க்கிறோம். இது பா.ஜ.க அரசின் தோல்வி என்று சொல்வதற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் மறுக்கிறார்" எனக் கொதிப்புடன் பேசினார் சி.பி.எம் கட்சியின் சிந்தன். தொடர்ந்து நம்மிடம் பேசியவர், " மத்திய அரசுதான் சட்டம் போட வேண்டும். அதைச் செய்யவில்லை. அவசரச் சட்டத்தில் உள்ளவற்றை வெளியில் சொல்லுங்கள் என்கிறோம். அதைச் செய்யவில்லை. அரசாணையை மட்டும் காட்டுகிறார்கள். நேற்று நான்கு பேர் கொடுத்த பேட்டியிலும், என்னென்ன விதிகள் திருத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லவில்லை. 'ஜனாதிபதியின் பார்வைக்குச் செல்லும்' என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இதன்மூலம், ஜனாதிபதி கையெழுத்துப் போடவில்லை என்பது தெளிவாகிறது. இவ்வளவு கொந்தளிப்புக்கு மத்தியில் குடியரசு தினவிழாவைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?



மக்களை வேதனையில் வைத்துவிட்டு, விழாவைக் கொண்டாடி என்ன பயன்? மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டால், மக்களோடு நின்று மாநில அரசு போராடும். ஆனால், இங்கே மக்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் என்பதோடு, மாநில உரிமைக்கான கோரிக்கையும்கூட. என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டத்தில் உள்ளவர்கள் பதறுகிறார்கள். மாணவர்களை பாதுகாக்க வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் போலீஸார் கைகளில் அடிபடும்போது, தேசிய கீதம் பாடுகிறார்கள், வந்தே மாதரம் எனக் கோஷம் எழுப்புகிறார்கள். தேசிய கீதம் பாடினால், போலீஸார் அடிக்க மாட்டார்கள் என வாட்ஸ்அப்பில் வந்ததை அவர்கள் நம்புகிறார்கள். அத்தனை பேரும் தேசிய கீதம் பாடுகிறார்கள். இவர்களா தேச விரோதிகள்? தேசத்தை மதித்துத்தான் நின்று கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிராகப் பேசினாலே, தேச விரோதிகள் ஆகிவிடுவார்கள். 'அராஜகத்தால் வீழ்த்தலாம்' என அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. முதல்வர் செய்யத் தவறியதை ஒப்புக் கொள்ள வேண்டும். 'உங்களுக்காக நான் போராடுகிறேன். எங்கள் மீது அவநம்பிக்கை வேண்டாம்' என பொதுமக்களிடம் வந்து நேரிடையாகப் பேசுவதில் முதல்வருக்கு என்ன தயக்கம்?" என்றார் ஆதங்கத்துடன்.

" உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு ஜல்லிக்கட்டு தீர்ப்புக்காக ஒரு வாரம் அவகாசம் கேட்டதில் இருந்தே துரோகத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக மக்கள் விரும்பும் வகையில், ஆறு கோரிக்கைகளுக்குத் தீர்வு அளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; மிருகவதை சட்டத்தின் காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும்; 1960-ம் ஆண்டின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தகுந்த சட்டத் திருத்தம் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டினை தமிழர்களின் பாரம்பர்ய பண்பாட்டு விளையாட்டு என அங்கீகாரம் வழங்கி, மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்; மேற்படி சட்டமானது உச்ச நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வராமல் இருக்க, அரசியலைமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்; மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்தால், பீட்டாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்; மேற்கண்ட எங்களுடைய கோரிக்கைளை நிறைவேற்ற மத்திய அரசுக்குத் தமிழகஅரசு வலியுறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரையில் எங்களை ஒடுக்க நினைக்கும் அரசின் முயற்சிகள் நிறைவேறாது" எனக் கொந்தளிக்கிறார் கல்லூரி மாணவர் ஒருவர்.

ஒரு கிராமத்திற்குள் முதல்வரையே அனுமதிக்காத சூழலை நேற்று பார்த்தோம். இன்று காலை முதல் மெரினாவில் தடியடி நீடித்துக் கொண்டே இருக்கிறது. சட்டசபைக் காட்சிகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவகாசம் தராமல் அத்துமீறிய போலீஸ்...! 

#Marina


ஜல்லிக்கட்டுத் தடை செய்யப்பட்டிருப்பதற்கு எதிரான மக்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வந்ததை அடுத்து, மத்திய அரசு இவ்விவகாரத்தில் கைவிரித்தது, இந்தநிலையில், தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது. இருந்தும் அவசரச் சட்டம் தற்காலிகமானதுதான் என்றும், நிரந்தரச் சட்டத்தை அரசு உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களும், மக்களும் தமிழகம் தழுவிய அளவில் தொடர்ந்து போராட்டத்தை நிகழ்த்தி வந்தனர். சென்னை மெரினாவில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரையில் கூடியதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக இன்று தொடங்கியுள்ள தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் எடுக்கப்படும் முடிவினை அடுத்து மாணவர்கள் மதியத்துக்கு மேல் கலைந்து செல்வதாக இருந்தது.

2015-ம் ஆண்டு தொடங்கி ஜல்லிக்கட்டுக் காளைகளுக்காக குரல் கொடுத்து வந்த ஹிப் ஹாப் ஆதி நேற்று திடீரென இந்த போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். மேலும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டம் வேறு திசையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், பிரதமர் மோடிக்கு எதிராக மக்களும், மாணவர்களும் குரல் எழுப்பி வருகிறார்கள் என்றும் அவர் தனது முகநூல் பதிவில் புகார் கூறி இருந்தார். இவ்வளவு மக்கள் கூடியிருந்த நிலையிலும் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்து விட்டது, அதை மோடிதான் கூறினார். அவருக்கு எதிராகத்தான் குரல் கொடுக்க முடியும். நீங்கள் விலகிக்கொண்டாலும், இதுமக்கள் போராட்டம் நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம் என்று சென்னை கடற்கரை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த மக்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் கடற்கரை சாலையான காமராஜர் சாலை மற்றும் மதுரை தமுக்கம் மைதானம், அலங்காநல்லூர், கோவை, நாகர்கோவில் என தமிழகம் எங்கிலும் போராட்டம் நடந்த முக்கியப் பகுதிகளில் பலலாயிரக்கணக்கில் போலீசார் லத்தி, தண்ணீர் போன்ற ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டனர்.



மக்கள் கோரிக்கையை ஏற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர்கள் எந்நேரமும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டது. கூட்டத்தில் கர்ப்பிணிகளும் குழந்தைகளும், ஊனமுற்றோரும் இருந்தனர் அவர்களை எப்படி போலீஸ் அப்புறப்படுத்தும் என்கிற பதற்றமான சூழல் நிலவி வந்தது.

அதிகாலை 4 மணியளவில் மக்கள் கூட்டத்திடம் பேசிய போலீஸ் அதிகாரிகள், போராட்டத்தை மக்கள் அமைதியாக நடத்தியதற்கு நன்றி என்றும், அதுபோலவே அனைவரும் அங்கிருந்து அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் மக்கள் கடுகளவும் அங்கிருந்து அசையாததை அடுத்து அவர்களை தனித்தனியாக அங்கிருந்து அப்புறப்படுத்தத் தொடங்கியது. பெண்கள் மற்றும் நிறைமாத கர்ப்பிணிகளை அவசரமாக தூக்கி அப்புறப்படுத்தியது. ஆனாலும் மக்கள் தொடர்ந்து அங்கிருந்து நகர்ந்து வெவ்வேறு இடங்களுக்கு சென்று கூட்டமாக அமர்ந்து கொண்டனர். சிலர் கடல் பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கிருந்தபடியே கருப்பு கொடி ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள். சரி பாதி மக்கள் கடற்கரையிலிருந்து போலீசாரால் வெளியேற்றப்பட்ட நிலையில், எஞ்சியுள்ளவர்கள் அங்கிருந்தபடியே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

சென்னை மட்டுமில்லாமல் கோவை வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து போராட்டக்காரர்கள், போலீசார் திட்டமிட்டே தங்களை கைது செய்கிறார்கள் என குரல் கொடுத்து வருகிறார்கள். சட்டமன்ற கூட்டத்துக்கு பிறகு, தாங்களே எப்படியும் வெளியேறிவிடுவோம் என்று இளைஞர்கள் கூறிய நிலையில் அவர்கள் மீது தற்போது இந்த திடீர் தாக்குதல் ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. குடியரசு தினவிழா வரும் ஜனவரி 26 அன்று நடக்கவிருக்கும் நிலையில், அதற்கான திட்டமிடல் காரணமாகத்தான் மக்கள் அப்புறப்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.



ஆனால், மக்கள் அறவழியில் எழுப்பும் கேள்விகளை விட, அதே மக்களுக்காகவே நிகழ்த்தப்படும் விழா ஏற்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததா என்கிற கேள்வி எழுகிறது. மாணவர்களும், இந்த அவசர சட்டத்தை முன்னரே கொண்டு வந்திருதால் நாங்கள் போராட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. தற்போது அவசர சட்டம்தான் நிரந்தர சட்டம் என்று கூறுவது மக்களை அப்புறப்படுத்துவதற்கான வேலை. மிருகவதை தடுப்பு சட்டத்தில் நிரந்தர மாற்றத்தை உடனடியாகக் கொண்டு வரும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறி வருகிறார்கள். மக்களே மதியம் கலைந்து விடுவோம் என்று கூறிய நிலையில், போலீஸின் இந்த அவசர நடவடிக்கை ஏன்? விடியற்காலையில் இந்த திடீர் தாக்குதல் எதற்கு? அரசும் காவல்துறையும் பதில் கூறக் கடமைப்பட்டிருக்கிறது.

போலீஸ் மெரினா போராட்டக் குழுவைக் கலைத்தது இப்படித்தான்! #SpotReport

VIKATAN 

இன்று காலை சரியாக 4 மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் குழுமி இருந்த விவேகானந்தர் இல்லம் அருகே வந்து இறங்கினர். அதே நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய வாலாஜா சாலை, பாரதியார் சாலை, அன்னி பெசன்ட் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து அங்கேயும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

விவேகானந்தர் இல்லம் அருகே குழுமியிருந்தவர்களிடம் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். அவர், “ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிவிட்டது. உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இன்று அதற்கான சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட இருக்கிறது. நீங்கள் கலைந்து செல்லலாம்” என்று சொல்லிவிட்டு அதுகுறித்த சில ஆவணங்களை இளைஞர்களிடம் கொடுத்தார். ஆனாலும் அங்கிருந்த இளைஞர்கள் கலைந்து செல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.

இந்நிலையில் 6.30 மணியளவில் அங்கே தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த மைக்செட் வேனில் ஏறி நின்ற பாலகிருஷ்ணன் மைக் பிடித்து பேச ஆரம்பித்தார், “நாங்கள் பொறுப்பான துறையில் இருந்து கொண்டு, உங்களிடம் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்துள்ளோம். அதை நீங்கள் நம்ப வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றம் கூட்டத்தொடர் இல்லாதபோது அவசரச் சட்டம்தான் கொண்டு வரப்படும். அது பின்னர் சட்டமன்றத்தில் வைத்து நிரந்தரம் ஆக்கப்படும். இதுதான் நடைமுறை. மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை. நீங்களாகவே கலைந்து செல்லுங்கள்” என்றார்.





அதன்பிறகு இளைஞர்கள், “சட்டசபையில் முதல்வரின் அறிவிப்பைப் பார்த்த பிறகு கலைந்து செல்கிறோம்” என்றனர். போலீஸார் இதைக் கேட்பதாக இல்லை. “உடனே கலைந்து செல்லுங்கள்” என்று மீண்டும் எச்சரித்தனர். இளைஞர்கள், “கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. உடனடியாக கலைந்து செல்ல முடியாது. அவகாசம் தாருங்கள்” என்றனர். முதலில் 8 மணி நேரம் அவகாசம் கேட்டவர்கள், போலீஸாரின் விடாப்பிடி எச்சரிக்கைக்குப் பிறகு, “2 மணி நேரமாவது அவகாசம் தாருங்கள்... நாங்கள் கலைந்து சென்று விடுகிறோம்” என்றார்கள். ஆனால், “போலீஸார் அவகாசம் தர முடியாது” என்றனர்.

உடனே இளைஞர்களைச் சுற்றி வளைத்த போலீஸ் படை கூட்டத்துக்குள் புகுந்து இளைஞர்களை இழுத்து, வெளியே விட்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.





இளைஞர்கள், “நாங்கள்தான் கலைந்து சென்றுவிடுகிறோம் என்கிறோமே... கொஞ்சம் அவகாசம் தானே கேட்கிறோம்... அதைத் தர உங்களைத் தடுப்பது எது...? 2 மணிநேரத்தில் நாங்களே கலைந்து சென்றுவிடுகிறோம்” என்றார்கள்.

போலீஸார் இதை கேட்கத் தயாராக இல்லை. இளைஞர்களை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இதை அறிந்து வெளியே சென்ற இளைஞர்களும், கடற்கரையை நோக்கி வர ஆரம்பித்தனர். அவர்களைத் தடுக்கும் போது, திருவல்லிகேணியில் போலீஸார் தடியடி நடத்தத் துவங்கினர்.
போலீசாரின் இந்த அணுகுமுறையால் கோபமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடற்கரை பக்கம் ஓடி. அதன் ஓரமாக ஒன்று சேர்ந்து மனிதச் சங்கிலி அமைத்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கோஷமிட்டப்படி நிற்கிறார்கள்.

“நாங்கள் இரண்டு மணி நேரம்தான் அவகாசம் கேட்டோம். அந்த நேரத்துக்குள் நாங்களே கலைந்து சென்று இருப்போம்... அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் எங்கள் மீது ஏன் இந்த வன்முறை” என்று கொந்தளித்தபடி கடலில் கைகோர்த்து நிற்கிறார்கள்.

NEWS TODAY 10.06.2026