Saturday, August 11, 2018

படித்தவன் பாவம் செய்தால்...

By ப. இசக்கி | Published on : 11th August 2018 01:35 AM |
 
இன்று நாட்டில் நடக்கும் பெரும்பாலான ஊழல்களிலும், முறைகேடுகளிலும் மெத்தப் படித்த கல்விமான்களின் பங்கு அதிகரித்து வருவது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாது அவமானமாகவும் இருக்கிறது.

ஆட்சியில் ஊழல், நிர்வாகத்தில் ஊழல் என்றிருந்த நிலை மாறி, தற்போது கடவுளைக் கண்டு வழிபடும் கோயில்களில் ஊழல், கல்லாமையை நீக்கும் கல்விக் கூடங்களில் ஊழல் என, நாட்டு மக்கள் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு எல்லாத் துறைகளிலும் ஊழல் ஊடுருவியிருப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

1948-இல், அப்போது இங்கிலாந்துக்கான இந்தியத் தூதராக இருந்த வி.கே. கிருஷ்ணமேனன் வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து நம் நாட்டு ராணுவத்துக்கு 200 ஜீப்புகளை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தம் வழக்கமான நடைமுறைகளை மீறியது என்றும், அதில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் ஊழலாக குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ண மேனன் படித்தவர்தான்.

அதனைத் தொடர்ந்து, 1950-களில் முந்த்ரா' ஊழல், 1980-களில் போபர்ஸ்' ஊழல், இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்த 2ஜி ஊழல், நிலக்கரி வயல் ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் என பரபரப்பாக பேசப்பட்ட எல்லா ஊழல்களும் பல ஆயிரம் கோடி ரூபாய் தொடங்கி சில லட்சம் கோடி ரூபாய் வரையிலான ஊழல்களாகும்.
இந்த ஊழல்கள் எல்லாவற்றிலும் முதன்மையாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டாலும், அவர்களுடன் ஒரு சில அதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டதுண்டு. எனினும், பெரும்பாலான அதிகாரிகள் நேர்மையாகவும், அரசின் சட்ட திட்டங்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டுமென ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறுபவர்களாகவும் இருந்தனர். சில அதிகாரிகள், ஆட்சியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் தாமாகவே அவர்களிடமிருந்து விலகிக் கொண்டதுமுண்டு.

ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. ஊழலுக்கு ஒத்துழைக்கக் கூடியவராக மட்டுமல்லாது, ஊழலுக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரிகளை ஆட்சியாளர்கள் தேடிக் கண்டுபிடித்து தங்களுக்கு கீழே பணி அமர்த்திக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஆலோசனைகளை சொல்லி ஆட்சியாளர்களின் மனதில் இடம்பிடித்து பதவியைத் தக்கவைத்துக் கொண்டு கொடிகட்டிப் பறக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கைதான் அதிகம். இவர்கள் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து தங்கள் வாழ்வையும் வளப்படுத்திக் கொள்கின்றனர்.

நாடு முழுவதும், கடந்த 2017 ஜூன் வரையில் சுமார் 6,400 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய அரசு ஊழியர்கள் 16,875 பேர். தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் 18,780 பேர். அரசியல்வாதிகள் 115 பேர். இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட உயர்பதவி வகிக்கும் அதிகாரிகள் மீது மட்டும் 339 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இவர்கள் எல்லோரும் படித்தவர்கள்தானே?
தமிழ்நாட்டிலும் அரசியல்வாதிகளைப் போலவே அரசு அதிகாரிகளும் ஊழல்களில் திளைப்பது அதிகரித்து வருகிறது. தலைமைச் செயலர் முதல் காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் வரை ஊழல் புகார்களுக்கு இலக்காகி வருகின்றனர்.

இப்போது ஊழல்வாதிகள் கோயில்களையும் விட்டுவைக்கவில்லை. கோயில் சிலைகள் திருட்டு, சுவாமி சிலைகள் செய்ததில் முறைகேடு, கோயில் நிதியில் ஊழல் என அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முறைகேடுகள் ஓர் ஆரம்பம்தான். இன்னும் ஆழமாக விசாரித்தால் பெரும் பூதம் கிளம்பும்' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். முறைகேடு புகார்களுக்கு ஆளாகி இருப்பவர்கள் எல்லோரும் படித்தவர்கள்தான்.

கோயில்கள் மட்டுமல்லாது, கல்வித்துறையிலும் குறிப்பாக உயர்கல்வி நிலையங்களான பல்கலைக்கழகங்களின் ஊழல் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. பல்கலைக்கழகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான ஊழல் நடந்துள்ளதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த 2006 முதல் துணைவேந்தர் பதவி என்பது கல்வி, அனுபவம், திறமைக்கு அல்லாது அரசியல், சாதி மற்றும் பண பலம் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒன்றாகி விட்டது.

தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் இருபதுக்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பட்டியலிடப்படுகின்றன. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அண்ணா பல்கலைக்கழகம் ஐந்தாகப் பிரிக்கப்பட்டது. கோவையில் முன்பு இயங்கி வந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஆர். ராதாகிருஷ்ணன் ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற முதல் துணைவேந்தர் இவர். மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஏழு பேர் மீது ஊழல் தடுப்புப் போலீஸார் வழக்கு பதிவு செய்தோ அல்லது முறைகேடுகள் தொடர்பாகவோ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ளனர்.
ஒரு துணைவேந்தர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்தபோது சுமார் ரூ. 20 கோடிக்கு சொத்து ஆவணங்களும், நான்கு கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

துணைவேந்தர்கள் மீதான முறைகேடுகள் அனைத்தும் பேராசிரியர் பணி நியமனங்கள், தளவாடச் சாமான் கொள்முதல், உறுப்பு கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தல் போன்றவற்றில் நிகழ்ந்தவைகள் ஆகும். இப்போது, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் பெரும் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புகார்களுக்கு ஆளான அனைவருமே படித்தவர்கள்தான்.

நாட்டில் ஊழலை ஒழிக்க 1988-இல் ஊழல் தடுப்புச் சட்டம்' இயற்றப்பட்டது என்றாலும், அதற்கு முன்பே முறைகேடுகளில் ஈடுபடுவோரைத் தண்டிக்க இந்திய குற்றவியல் சட்டமானது 1860 முதல் நடைமுறையில் உள்ளது.
எனினும், ஊழலை ஒழிக்க முடியவில்லை. எனவே, ஊழலை ஒழிக்க, லஞ்சம் பெறுவோரை மட்டுமல்லாது கொடுப்போரையும் தண்டிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாவது படித்தவர்கள் செய்யும் பாவம் ஒழியுமா என்று பார்க்கலாம்.
திருப்பதிக்கு தமிழகத்தில் 6 டன் பூமாலை

Added : ஆக 11, 2018 00:49

திருச்செங்கோடு:திருப்பதிக்கு, 6 டன் பூக்களை, மாலைகளாக தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

ஆந்திரா மாநிலம், திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், வரும், 15ல் கும்பாபிஷேகம் நடக்கஉள்ளது.இதற்காக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயண நித்திய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில், 6 டன் பூக்களை, மாலைகளாக தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இது குறித்து, டிரஸ்ட் நிர்வாகிகள் கூறியதாவது:ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், ஏகாதசி உள்ளிட்ட விழாக்களுக்கு திருச்செங்கோட்டில் இருந்து மலர்களை மாலைகளாக தொடுத்து அனுப்பி வருகிறோம்.கும்பாபிஷேகத்துக்கு, சம்பங்கி, முல்லை, ரோஜா, தாமரை உள்ளிட்ட, 6 டன் பூக்களை பயன்படுத்தியுள்ளோம். மேலும், பூஜைக்கு தேவையான பொருட்களும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. 500க்கும் மேற்பட்ட பெண்கள், பூக்களை மாலைகளாக தொடுத்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
லாலுவின், 'ஜாமின்' நீட்டிப்பு

Added : ஆக 11, 2018 00:01

ராஞ்சி:மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஜாமினை, 20ம் தேதி வரை நீட்டித்து, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 1990ல், ஒருங்கிணைந்த பீஹார் மாநிலத்தில், கால்நடை தீவன கொள்முதலுக்காக, மாவட்ட கருவூலங்களில் முறைகேடாக பணம் பெற்று ஊழல் செய்ததாக, ஆர்.ஜே.டி., தலைவரும், அப்போதைய முதல்வருமான, லாலு பிரசாத் யாதவ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்குகளை, பீஹாரில் இருந்து பிரிந்த ஜார்க்கண்ட் மாநில சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. லாலு மீதான நான்கு வழக்குகளில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, ராஞ்சியில் உள்ள, பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.லாலுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவ சிகிச்சை பெற, அவரது வழக்கறிஞர்கள் ஜாமின் கேட்டு, ராஞ்சி உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, மே, 11ல், ஆறு வார ஜாமின் வழங்கப்பட்டது. பின், ஆக., 14 வரை, ஜாமின் நீட்டிக்கப்பட்டது.தற்போது, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள, தனியார் மருத்துவமனையில், லாலு சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது ஜாமினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கும்படி, லாலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த, ராஞ்சி உயர் நீதிமன்ற நீதிபதி, அப்ரேஷ் குமார் சிங், லாலுவின் ஜாமினை 20ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
'2ஜி' வழக்கு விசாரணை ராஜாவுக்கு அவகாசம்

Added : ஆக 11, 2018 00:00

புதுடில்லி:'2ஜி' ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., - எம்.பி., கனிமொழி உள்ளிட்ட, 17 பேரும் அவகாசம் கோரியதையடுத்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மத்தியில், காங்., தலைமையில் இருந்த, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தார்.அப்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டது.இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறையினர், தனித் தனியாக விசாரணை நடத்தினர்.
இதன் விசாரணை, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. ஏழு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்குகளில், கடந்தாண்டு டிசம்பரில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.இதில், ராஜா, கனிமொழி உட்பட, 17 பேரையும் விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அமலாக்கத் துறைதொடர்ந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, தி.மு.க.,வின் மறைந்த தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு உட்பட, 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.இந்த தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., சார்பில், மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தில், நீதிபதி நஜ்மி வாஜிரி முன்னிலையில் நடந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய, கனிமொழி, ராஜா உட்பட, ௧௭ பேரும் அவகாசம் கோரினர். இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை, அக்., 9க்கு ஒத்தி வைத்தார்.
முன்னோர் ஆசி பெற இன்று தான் நல்லநாள்

Added : ஆக 11, 2018 05:18



ஆடிஅமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவது குறித்து காஞ்சிப்பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் மகத்துவம் புரியும்.

மனிதராகப் பிறந்த அனைவரும் தங்களுடைய முன்னோருக்கு நன்றி தெரிவிப்பது அவசியம். முன்னோர்களை திருவள்ளுவர், 'தென்புலத்தார்' எனக் குறிப்பிடுகிறார். இவர்களை வழிபடுவது நம் கடமை என்கிறது திருக்குறள். பிதுர்களான தாய், தந்தையர், மூதாதையர் ஆகியோருக்குரிய கடமையை நாம் செய்தாக வேண்டும். 'மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ' என்று வேத மாதாவும் பெற்றோரை வழிபட நமக்கு வழிகாட்டுகிறாள். அவ்வைப்பாட்டியும், 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று வேத சாரத்தை பிழிந்து கொடுத்திருக்கிறார்.

வாழும் காலத்தில் பெற்றோரை பணிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்கள் செய்த உதவிக்கு ஈடாக நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணரவும் வேண்டும். அவர்களின் காலம் முடிந்த பிறகு செய்யும் 'பித்ரு காரியம்' செய்வதில் தான் அனேகம் பேருக்கு சந்தேகம் எழுகிறது. இதில் இடம் பெறும் எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே தான் இருக்கின்றன.

முன்னோர்கள் மறுபிறவி எடுத்து விட்டதாக சொல்கிறார்கள். அப்படியிருக்க இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் தோன்றலாம். சாஸ்திரம் விதித்த சட்டப்படி கொடுக்கும் தர்ப்பணத்தை முன்னோரிடம் சேர்ப்பது பிதுர்தேவதைகளின் பொறுப்பு. சிராத்தம் என்பதற்கே 'சிரத்தையோடு செய்வது' என்பது பொருள். முன்னோர் மீது நன்றியுணர்வும், சாஸ்திரத்தின் மீது அக்கறையும் கொண்டு தர்ப்பணம் செய்தால் அவர்களின் நல்லாசியால் நம் வாழ்வு செழிக்கும்......
தமிழகத்தில் கனமழை நீடிக்கும்

Added : ஆக 11, 2018 04:09

சென்னை:'தென் மாநிலங்களில், வரும், 15ம் தேதி வரை கனமழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பருவழை வரும் 15ம் தேதி வரை தென் மாநிலங்களில் நீடிக்கும், படிப்படியாக, வட மாநிலங்களுக்கும் பரவும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின், மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றிய பகுதிகளில், இன்று கனமழை பெய்யும். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மாலை அல்லது இரவு நேரங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கோட்டை, வால்பாறையில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.

செங்கல்பட்டு, சின்ன கல்லார், பெரியார், 3; ஜெயங்கொண்டம், மரக்காணம், சென்னை அண்ணா பல்கலை, தேவகோட்டை, குளச்சல், தென்காசி, செங்குன்றம், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
டிஜி லாக்கர்' ஆவணங்களை ஏற்பதில் போலீசுக்கு சிக்கல்

Added : ஆக 11, 2018 01:00

சென்னை:'ஒரிஜினல் லைசென் சுக்கு பதிலாக, டிஜிட்டல் வடிவில் காட்டும், 'டிஜி லாக்கர்' முறைக்கு மாறுவதில் சட்ட சிக்கல் உள்ளது' என, போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், சாலை விபத்துகள் அதிகரித்த நிலையில், அவற்றை கட்டுப்படுத்தும்படி, மத்திய சாலை பாதுகாப்பு ஆணையமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டன.இதையடுத்து, தமிழக அரசு, டிரைவிங் லைசென்ஸ், வாகன உரிமைக்கான, ஆர்.சி., புத்தகம் உள்ளிட்ட அசல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என, உத்தரவிட்டது.

'இதனால், சாலை விபத்துகள் மட்டுமின்றி, வாகன திருட்டுகள், குற்றச்செயலில் ஈடுபடுவோர் திருட்டு வாகனங்களை பயன்படுத்துவது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது போன்ற நடைமுறை சிக்கல்களையும் களைய முடியும்' என, போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வு, 'ஒரிஜினல் டிரைவில் லைசென்சை வைத்திருப்பதில் என்ன பிரச்னை உள்ளது; அதை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்' என, தீர்ப்பளித்தது.

இதனால், ஒரிஜினல் உரிமமின்றி வாகனம் ஓட்டுவோர், 500 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாத் சிறை தண்டனை பெறும் நிலை ஏற்பட்டது.இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், 'லைெசன்ஸ், ஆர்.சி.புத்தகம் உள்ளிட்ட போக்குவரத்து தொடர்பான ஆவணங்களை, இனி, மத்திய அரசின் செயலியான, டிஜி லாக்கர் என்னும், மொபைல் ஆப் வழியாக காண்பித்தால், ஏற்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதுகுறித்து, தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒரிஜினல் லைசென்ஸ் உத்தரவை எதிர்த்து, டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடுத்த போது, தமிழக போக்குவரத்து துறை சார்பில், எதிர் வாக்குமூலமாக பல ஆவணங்களை அளித்துள்ளது. இதை வைத்துதான், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது, 'டிஜிலாக்கர்' செயலியில், அசல் ஆவணங்களை ஏற்பதில் சட்ட சிக்கல் உள்ளது. மேலும், மத்திய அரசு, டிஜிட்டல் ஆவணம் குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மாறாக, ஆலோசனை மட்டுமே வழங்கி உள்ளது. இதுகுறித்து, பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

NEWS TODAY 27.06.2026