Tuesday, August 14, 2018

சத்யம்' திரையரங்க குழுமம் வாங்குகிறது பி.வி.ஆர்.,

Added : ஆக 13, 2018 23:55

சென்னை: சென்னை, 'சத்யம்' திரையரங்க குழுமத்தை, பி.வி.ஆர்., சினிமாஸ் நிறுவனம், 850 கோடி ரூபாய்க்கு, ரொக்கம் மற்றும் பங்கு ஒதுக்கீடு வாயிலாக கையகப்படுத்த உள்ளது.வெங்கடகிரி ராஜா என்பவரால், 1974 ஏப்ரலில், சத்யம் திரையரங்கம் திறக்கப்பட்டது. முதல் படமாக, ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் நடித்த, 'நமக்ஹராம்' திரையிடப்பட்டது. அடுத்து, 'சாந்தம், ஸ்ரீ, சுபம்' என்ற சிறிய திரைஅரங்குகளை திறந்து, சென்னையின் முதல், 'மல்டிபிளக்ஸ் தியேட்டர்' என்ற பெருமையை பெற்றது.இந்நிலையில், 1980ல், சத்யம் திரையரங்கம், ரெட்டி குடும்பத்திற்கு கைமாறியது. தற்போது, கிரண் ரெட்டி, ஸ்வரூப் ரெட்டி ஆகியோர் தலைமையிலான, எஸ்.பி.ஐ., சினிமாஸ் குழுமத்தின் கீழ், 'எஸ்2, எஸ்கேப், பலேசா' உள்ளிட்ட பெயர்களில், 68 திரையரங்குகளுடன், சத்யம் சினிமாஸ் செயல்பட்டு வருகிறது.குர்கானைச் சேர்ந்த, அஜய் பிஜிலி தலைமையிலான, பி.வி.ஆர்., சினிமாஸ், 51 நகரங்களில், 628 திரையரங்குகளை நடத்தி வருகிறது. சத்யம் சினிமாஸ் குழுமத்தை, 850 கோடி ரூபாய்க்கு வாங்குவதன் வாயிலாக, பி.வி.ஆர்., தென்னிந்தியாவில் மேலும் வலுவாக காலுான்றும். மேலும், 2020க்குள், ஆயிரம் திரையரங்குகளை இயக்கவும், பி.வி.ஆர்., திட்டமிட்டுள்ளதுஇந்நிலையில், 'சத்யம் சினிமாஸ் கைமாறினாலும், அதன் தனிச்சுவை உடைய, 'பாப்கார்ன்' விற்பனை தொடர வேண்டும்' என, சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டாலினுக்கு பயம்: அழகிரி ஆவேசம்   dinamalar 14.08.2018


சென்னை,:''தி.மு.க.,வில், என்னை மீண்டும் சேர்த்தால், நான் வலிமையான தலைவராகி விடுவேன் என்ற பயம், ஸ்டாலினுக்கு உள்ளது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி கூறினார். சென்னையில்,நேற்று ஆங்கில, 'டிவி' சேனலுக்கு, அழகிரி அளித்த பேட்டி:



உங்கள் ஆதங்கம் தான் என்ன?

எனக்கு பல ஆதங்கங்கள் இருக்கின்றன; அந்த ஆதங்கங்களை எல்லாம், ஆறு மாதத்தில், தொண்டர்கள் நிறைவேற்றுவர்.

மீண்டும், தி.மு.க.,வில் இணைந்து செயல்பட விரும்புகிறீர்களா?

என்னை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில், அவர்கள் இல்லை.

கட்சியில் சேருவது தொடர் பாக, நீங்கள் பேச்சு நடத்தியுள்ளீர்களா?

நான் எந்த பேச்சும் நடத்தவில்லை. 'செய்தி தொடர்பாளர்கள் யாரும், 'டிவி'க்களில், என்னை பற்றி பேட்டி அளிக்கக் கூடாது' என, ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம்; பின், எப்படி என்னைக் கட்சியில் சேர்ப்பர்?

கருணாநிதி மரணம் அடைந்துள்ள நிலையில், உங்களை புறக்கணிப்பது, சரியான முடிவா?

இதுபற்றி, அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான், ஏற்கனவே கூறியுள்ளேன். இன்னும், ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. இப்போதே பலரும், ரஜினியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். லோக்சபா தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்தால், கட்சி சின்னாபின்னமாகி விடும்.

அவர்கள் பேச்சு நடத்த வந்தால், நீங்கள் பேசத் தயாரா?

அதெல்லாம், அந்த நேரத்தில் தான் முடிவெடுக்க முடியும். கண்டிப்பாக, காலம் பதில் சொல்லும். அவர்களை எல்லாம், கருணாநிதியே தண்டிப்பார். கருணாநிதியின் ஆத்மா, அவர்களைச் சும்மா விடாது.

கட்சியில், உங்களை சேர்க்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

எனக்கென்ன தெரியும்? எனக்குப் புகழ் இருக்கிறது; கட்சித் தொண்டர்கள், என்னை விரும்புகின் றனர். அதனால், அவர்களுக்குப் பயம் இருக்கிறது. நான் வந்தால், வலிமையான தலைவராகி விடுவேன் என்ற, எண்ணமாக இருக்கலாம்.

குடும்ப உறுப்பினர்களிடம் பேசி சரி செய்யலாமே?

குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும், இதில் அக்கறை இல்லை. நான் கட்சிக்குள் வருவது பற்றி, யாரும் பேசியதில்லை.

தற்போதைய சூழ்நிலையில், தி.மு.க., சரியாக செயல்படுகிறது என, நினைக்கிறீர்கள்.

சரியாகச் செயல்பட்டால், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், 'டிபாசிட்' பறி


போகுமா; தொடர்ந்து, தேர்தல் தோல்விகளை சந்திக்கின்றனர். 'கட்சிக்காரன் பணம் வாங்கி விட்டான்' என, துரைமுருகன் பேசுகிறார். கட்சிக்காரன், தலைவருக்காக எவ்வளவு உழைத்திருப்பான்! அண்ணாதுரை காலத்திலிருந்து உழைத்து வருகிறான். இந்த பேச்சை, அவன் எப்படி எடுத்துக் கொள்வான். இதெல்லாம் தான் என் ஆதங்கம்.பணம் கொடுத்தால், பதவி கொடுக்கின்றனர். முன்பு, ஒரு செயலர் இருந் தால், ஒரு துணைச் செயலர் இருப்பர். தற்போது, 10, 15 பேர் இருக்கின்றனர்.இவ்வாறு அழகிரி கூறினார்.

இன்று தி.மு.க., செயற்குழு

தி.மு.க., செயற்குழு கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது.சென்னை, அறிவாலயத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கவுள்ள, இந்தக் கூட்டத்திற்கு செயல் தலைவர், ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் என, 750 பேர் பங்கேற்க உள்ளனர்.முதலில், கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், நிர்வாகிகள் பேசுவர். அடுத்த தலைவராக ஸ்டாலினை, பொதுக்குழுவில் தேர்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. முக்கியமாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, கட்சியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்தும், அவரால் எழுந்துள்ள சர்ச்சை பற்றியும் விவாதிக்கப்படும் என, தெரிகிறது.- நமது நிருபர் -

அழகிரி,போர்க்கொடி,D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்


தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, திடீர் போர்க்கொடி துாக்கி உள்ளார். தி.மு.க.,வில், தனக்கே செல்வாக்கு என, செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, சவால் விட்டுள்ளார். விரைவில், ஆதரவாளர்களுடன் ஆலோசித்து, அதிரடி முடிவெடுக்கப் போவதாகவும், மிரட்டல் விடுத்துள்ளார். கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, கட்சியின் செயற்குழு, இன்று கூடும் நிலையில், தடலாடி நடவடிக்களை, அழகிரி துவக்கியுள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக, கருணாநிதி, 7ம் தேதி, மரணம் அடைந்தார். அவரது உடல், சென்னை, மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிட வளாகத்தில், அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் சமாதிக்கு, நேற்று அழகிரி, தன் மனைவி காந்தி, மகள் கயல்விழி, மகன் தயாநிதி மற்றும் சென்னை மாவட்ட ஆதரவாளர்களுடன் சென்றார். சமாதியில் மலர் துாவி, தந்தையை வணங்கினார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: என் தந்தையிடம், ஆதங்கத்தை கொட்டினேன். என்ன ஆதங்கம் என்பது, இப்போது உங்களுக்குத் தெரியாது. கருணாநிதியின் உண்மையான, விசுவாசமுள்ள உடன்பிறப்புகள், என் பக்கம் தான் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விசுவாசிகளும், என் பக்கம் இருக்கின்றனர். அவர்கள், என்னை ஆதரிக்கின்றனர். எனவே, இதற்கு காலம், பின்னால் பதில் சொல்லும். இவ்வாறு அழகிரி கூறினார்.

பின், நிருபர்களின் கேள்விகளுக்கு, அழகிரி அளித்த பதில்:

உங்கள் ஆதங்கம் கட்சி தொடர்பானதா; குடும்பம் தொடர்பானதா?
கட்சி தொடர்பானது தான்.
தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பீர்களா?
நான், இப்போது தி.மு.க.,வில் இல்லை. செயற்குழு பற்றி, என்னிடம் கேட்காதீர்கள்; எனக்குத் தெரியாது.
நீங்கள் மீண்டும், தி.மு.க.,வில் இணைய வாய்ப்புள்ளதா?
அதுபற்றி, எனக்குத் தெரியாது. என் ஆதங்கத்தை, தலைவரிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அழகிரி கூறினார்.

ஒதுங்கிய ஸ்டாலின் :

கருணாநிதி நினைவிடத்தில்



அஞ்சலி செலுத்தியதும், கோபாலபுரம் வீட்டிற்கு அழகிரி சென்றார். அப்போது அங்கு, ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து விட்டு, வெளியே புறப்பட்டார். அந்த நேரத்தில், அழகிரி வீட்டுக்குள் நுழைவதை பார்த்த ஸ்டாலின், அவருக்கு வழி விட்டு ஒதுங்கினார். இருவரும் சந்திக்கும் வாய்ப்பு இருந்தும், ஸ்டாலின் ஒதுங்கி கொண்டார். அழகிரி உள்ளே சென்றதும், அங்கிருந்து, ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அழகிரி, விறுவிறு என, உள்ளே சென்று, தன் தாயார் தயாளுவை சந்தித்து பேசினார்.

ஆலோசிப்பேன் :

இதன்பின், நமது நாளிதழுக்கு, தொலைபேசியில், அழகிரி அளித்த பேட்டி:

கருணாநிதியின் சமாதியில், நீங்கள், கட்சி தொடர்பான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்; அடுத்த கட்டமாக, உங்கள் நடவடிக்கை என்ன?
இப்போது, எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள, என் ஆதரவாளர்களையும், கருணாநிதியின் விசுவாசிகளையும் அழைத்து பேசி, முடிவு எடுப்பேன்.

ஆதரவாளர்களை, சென்னையில் சந்திப்பீர்களா அல்லது மதுரையில் சந்திப்பீர்களா?

மதுரைக்கு செல்லவில்லை. கருணாநிதி மறைவு தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. அதில், நான் பங்கேற்க இருப்பதால், சென்னையில் தான் இருப்பேன். இவ்வாறு அழகிரி கூறினார்.
அழகிரியின் போர்க்கொடி குறித்து,


ஸ்டாலின் ஆதரவாளரான, சென்னை மேற்கு மாவட்ட செயலர், ஜெ.அன்பழகன் கூறியதாவது: கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அழகிரி. அது, கருணாநிதி எடுத்த முடிவு. கட்சி கட்டுக்கோப்பாக உள்ளது. அவர் பின்னால், யாரும் செல்ல மாட்டார்கள். அழகிரியின் கருத்துக்கு, பதில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை. தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், ஸ்டாலின் விரிவான பதிலை தருவார். இவ்வாறு அவர் கூறினார்.

குடும்ப பஞ்சாயத்தில் நடந்தது என்ன?

இதுபற்றி, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: இரு தினங்களுக்கு முன், சென்னை, கோபாலபுரம் வீட்டில், அழகிரியை கட்சியில் சேர்ப்பது தொடர்பான பஞ்சாயத்து நடந்தது. அதில், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அழகிரி, தமிழரசு, செல்வி, செல்வம், அமிர்தம் உள்ளிட்டோரும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் பங்கேற்றனர்.

அப்போது, மூத்த நிர்வாகி ஒருவர், 'கருணாநிதியின் பிள்ளைகளான, அழகிரி, ஸ்டாலின், கனிமொழியை, தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், ஸ்டாலின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் போன்றவர்களின் தலையீட்டை, கட்சியினர் ரசிக்கவில்லை. எனவே, அவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்' என்றார்.

'பொருளாளர் பதவியை, துரைமுருகனுக்கும், துணை பொதுச்செயலர் பதவியை, கனிமொழிக்கும் வழங்கலாம். ஆனால், அழகிரிக்கு, எக்காரணம் கொண்டும், கட்சியில் பதவி கிடையாது; அவரை

சேர்க்கவும் வாய்ப்பு இல்லை' என, ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார்.

உடனே, அழகிரி ஆவேசமாக பேசியதாவது: தி.மு.க., தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தமல்ல. உதயநிதி பணம் விவகாரம் எல்லாம், என்னிடம் இருக்கிறது. கட்சி என்பது, லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு சொந்தமானது. தவறு செய்கிற மாவட்ட செயலர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை. பணம் வாங்கி விட்டு, கட்சி பதவிகளை, மாவட்ட செயலர்கள் விற்பனை செய்துள்ளனர்.

கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த, மாவட்ட செயலர்களின் பொருளாதார வசதியையும், தற்போதைய மா.செ.,க்களின் பண வசதியையும் பார்த்தால் தெரியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு, அப்பாவி நகர, ஒன்றிய செயலர்கள் மீது, நடவடிக்கை எடுப்பது நியாயமா?இவ்வாறு அவர் பேசியதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.

கலைஞர் தி.மு.க., உதயமாகுமா?

அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது: கருணாநிதியை போல, அழகிரியும் ஒரு போராளி தான். அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி, ஸ்டாலின் எந்த முடிவும் எடுக்கவில்லை. கருணாநிதியின் விசுவாசிகளை ஒருங்கிணைப்போம். ஸ்டாலின் தலைமை மீது நம்பிக்கை இல்லாத, அதிருப்தியாளர்களை் அரவணைப்போம். லோக்சபா தேர்தலுக்கு முன், அழகிரியின் தலைமையில், 'கலைஞர் தி.மு.க.,' உதயமாகலாம். ரஜினி கட்சியுடன் கூட்டணி வைத்து, நாங்கள் வெற்றி பெற்றால், கட்சி தானாக, அழகிரியின் கையில் வந்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

'அழகிரி வேண்டாம்!'

தி.மு.க., செயற்குழுவில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்தும், கருணாநிதிக்காக அடுத்தடுத்து நடத்த உள்ள, இரங்கல் கூட்டங்கள் குறித்தும் ஆலோசிப்பதற்கு, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனை, செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்க்கும் விஷயம் குறித்து விவாதித்துள்ளார். அதற்கு அன்பழகன், 'எந்த நெருக்கடி, யாரிடம் இருந்து வந்தாலும் சரி; குடும்பத்துக்குள் நெருக்கடி வந்தாலும் சரி; எக்காரணம் கொண்டும், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டாம்' என, கூறியதாக, அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -
பக்தர்கள் வெள்ளத்தில் ஆண்டாள் தேரோட்டம்

Added : ஆக 14, 2018 06:05

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.ஆக.5ல் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி இரவு 2:00 மணியளவில் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, 3:30 மணிக்கு திருத்தேருக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு பாலாஜிபட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார்.காலை 7:20 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டது. கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை இழுத்தனர். நான்கு ரதவீதிகளையும் சுற்றி, காலை 9:46 மணியளவில் தேர் நிலை வந்தடைந்தது.விழாவில் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, டி.ஐ.ஜி. பிரதீப்குமார், தக்கார் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை அதிகாரிகள் ஜெகநாதன், ஹரிஹரன், நாகராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். எஸ்.பி., ராஜராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழாத்துளிகள்* ஆண்டாள் தேரோட்ட வரலாற்றில் முதல்முறையாக புறப்பட்ட 2 மணி நேரத்தில் தேர்நிலை வந்தடைந்தது.* கருணாநிதியின் மறைவிற்கு 7 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டிருந்ததால், அரசு பிரமுகர்கள் துவக்கி வைக்காத தேரோட்டமாக நேற்று அமைந்தது.* காலை 7:20 க்கு தேரோட்டம் அறிவிக்கபட்ட நிலையில் அதிகாலை முதலே பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து தேர் இழுத்தனர்.
பல்கலை அதிகாரிகளிடம் விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு அனுமதி

Added : ஆக 14, 2018 03:27

சென்னை: அண்ணா பல்கலை விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில், அதிகாரிகளிடம் நேரடி விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக, முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, விடை திருத்த மைய பொறுப்பாளர்கள் சிவகுமார், விஜயகுமார் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பேராசிரி யர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்த, பல்கலை மற்றும் உயர்கல்வி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.இதன்படி, பேராசிரியர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி, விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளனர். பேராசிரியர்கள் தரப்பில் முன் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளதால், முதலில் விசாரணை நடத்தவும், விசாரணை முடியும் போது, நீதிமன்ற வழக்கின் நிலையை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தாம்பரம் - செங்கோட்டை இடையே தினமும் அந்தியோதயா ரயில் அறிமுகம் : புதிய ரயில் கால அட்டவணையில் அறிவிப்பு

Added : ஆக 14, 2018 03:23

சென்னை: தாம்பரம் - செங்கோட்டை இடையே, தினசரி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை, தெற்கு ரயில்வே அறிமுகம் செய்கிறது. புதிய ரயில் கால அட்டவணையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே, 2018 - 19க்கான புதிய ரயில்வே கால அட்டவணையை, இன்று இணையதளத்தில் வெளியிடுகிறது.

 இதன் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்களை, செய்திக்குறிப்பாக நேற்றிரவு வெளியிட்டது. அதன் விபரம்:சென்னை, சென்ட்ரலில் இருந்து புறப்படும், 14 ரயில்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்ட்ரல் வரும், 23 ரயில்களின் நேரம், ஐந்து முதல், 15 நிமிடங்கள் வரை மாற்றப்பட்டுள்ளது.எழும்பூரில் இருந்து புறப்படும், 14 ரயில்களின் நேரம், ஐந்து முதல், 30 நிமிடங்கள் வரையும், வெளியூர்களில் இருந்து எழும்பூர் வரும், 18 ரயில்களின் நேரம், ஐந்து முதல், 25 நிமிடங்கள் வரையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

.பகல் நேர புதிய ரயில்  தாம்பரம் - செங்கோட்டை இடையே, தினசரி அந்தியோதயா ரயில், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி வழியாக பகல் நேரத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து, காலை, 7:00க்கு புறப்பட்டு, இரவு, 10:30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் செங்கோட்டையில் இருந்து, காலை, 6:00க்கு புறப்பட்டு, இரவு, 10:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ரயில் போக்குவரத்து துவக்கம் மற்றும் வழியில் உள்ள நிறுத்தங்கள் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும்எக்ஸ்பிரஸ்கள் நீட்டிப்பு இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள், இரண்டு பயணியர் ரயில்கள், முக்கிய நகரங்கள் இடையே, நாளை முதல் நீட்டிக்கப்பட்டுள்ளன. கவுஹாத்தி - சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ், திப்ரூகர் - சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள், தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன கடலுார் - விருத்தாசலம் பயணியர் ரயில், திருப்பாதிரிபுலியூர் வரையும், நாகூர் - திருச்சி பயணியர் ரயில், காரைக்கால் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளனவேகம்

அதிகரிப்பு தாம்பரம் - நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் உட்பட, 18 ரயில்களின் வேகம், ஐந்து நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் முன்னதாக சென்றடையும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது மும்பை சி.எஸ்.டி., - நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ், 45 நிமிடங்களும்; நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., இடையே, வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படும், சி.எஸ்.டி., எக்ஸ்பிரஸ், 30 நிமிடங்களும் முன்னதாக சென்றடையும் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும், நிஜாமுதீன் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், 25 நிமிடங்கள் முன்னதாக செல்லும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - காச்சிக்குடா எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள், 15 நிமிடங்கள் முன்னதாக சென்றடையும்

கன்னியாகுமரி - ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - ஆலப்புழை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், மும்பை சி.எஸ்.டி. - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், கொல்லம் - விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் வேகமும், பயண நேரம், 10 நிமிடம் குறையும் வகையில் அதிகரிக்கப்பட்டு உள்ளது மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் சிலம்பு, திருச்செந்துார், நெல்லை மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவைக்கு இயக்கப்படும் சதாப்தி ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு ள்ளது.

சித்தா, ஆயுர்வேதம் படிக்க இன்று விண்ணப்பம்

Added : ஆக 13, 2018 23:31

சென்னை: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பம் வினியோகம் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள, ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, 396 இடங்கள் உள்ளன. தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 916 இடங்கள் உள்ளன.இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங், 'நீட்' தேர்வு அடிப்படையில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது.இதற்கான விண்ணப்ப வினியோகம், சென்னை - அரும்பாக்கம், நெல்லை - பாளையங்கோட்டை, மதுரை - திருமங்கலம், நாகர்கோவில் - கோட்டார் அரசு மருத்துவ கல்லுாரிகளில், இன்று துவங்குகிறது. செப்., 5, மாலை, 3:00 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 5 மாலை, 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

NEWS TODAY 28.06.2026