Wednesday, February 13, 2019


மெட்ரோ ரயில்: புதனும் தொடரும் இலவசப் பயணம்


By DIN | Published on : 12th February 2019 08:48 PM 




சென்னை: மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் (பிப்.13) இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


ஏஜி.டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட்டது. இதன் மூலமாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டம் நிறைவடைந்தது.

இதையடுத்து, மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் திங்கள்கிழமை இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், சைதாப்பேட்டை - சின்னமலை இடையே உயர் அழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதால் அந்தப் பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனால் மெட்ரோ ரயிலில் ஆர்வத்துடன் பயணிக்க வந்த பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இதைத் தொடர்ந்து நான்கரை மணிநேரத்துக்குப் பிறகு உயர்நிலை மின்கம்பியில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டது.

இந்த நிலையில், மெட்ரோ ரயிலில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் (பிப்.12) பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மிகவும் மகிழ்ந்த மக்கள் அதிக அளவில் மெட்ரோவில் பயணம் செய்தனர்.

இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் (பிப்.13) இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.
மைதாவில் தயாராகும் உணவுப் பொருட்களை சாப்பிடலாமா? நிஜம் எது? கட்டுக்கதை எது? 


By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. | Published on : 12th February 2019 06:00 PM 




பரோட்டா, சோளாபூரி, நாண், தந்தூரி ரொட்டி, பட்டூரா, பாதுஷா, கேக், பிரெட், பீட்ஸா, பர்கர், பப்ஸ், சமோசாக்கள், பாவ், சிலவகை கலர் கலர் அப்பளங்கள், சந்திரகலா, சூர்யகலா, சோனே ஹல்வா (கார்ன் ஃப்ளார்) மேலும் பல இனிப்பு வகைகள் அனைத்துமே மைதாவில் தான் தயாராகின்றன. இன்றைய தேதிக்கு வட இந்தியர்களைக் காட்டிலும் தென்னிந்தியர்கள் மைதா அதிகம் சாப்பிடுகிறார்கள் என்றொரு வதந்தி உலவுகிறது. காரணம் பரோட்டா. சரி அந்த பரோட்டா தயாரிக்கத் தேவையான மைதா எதிலிருந்து தயாராகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?


மைதா, கோதுமையில் இருந்து தயாராகிறது என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் அது ஜவ்வரிசி, சேமியா போல மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாராகிறது என்றும் நம்புகிறார்கள். நம்மூர் மைதா பெரும்பாலும் கோதுமையின் உட்புற ஸ்டார்ச்சில் இருந்து தான் தயாராகிறது என்று நம்பலாம். கோதுமையில் இருந்து தயாரானாலும் கோதுமையின் நற்குணங்கள் ஏதும் இதற்கில்லை. ஏனெனில் கோதுமையில் நார்ச்சத்து, விட்டமின்கள், புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், அமினோ ஆசிடுகள் என்று உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் அனைத்தும் கலந்து இருக்கும்.




ஆனால் மைதாவில் அவை அனைத்தும் கோதுமை மாவாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பின் எஞ்சும் ஸ்டார்ச் போன்ற வெள்ளை வஸ்து மட்டுமே மிஞ்சுவதால் இதில் 100% ஸ்டார்ச் தவிர வேறு எந்த சத்தும் இருப்பதில்லை.

மைதாவில் கலந்திருப்பதாகக் கருதப்படும் ரசாயனங்கள்...



பென்ஸாயில் ஃபெராக்ஸைட்:

மைதாவுக்கு அதன் தூய வெள்ளைநிறம் பெறப்படுவதற்காக அதில் பென்ஸாயில் பெராக்ஸைடு எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் பொதுவாக ஹேர்டை, ஃபீனால், ப்ளீச்சிங் பெளடர் முகப்பரு க்ரீம் போன்றவற்றுக்கான தயாரிப்பில் கலக்கப்படும் மூலப்பொருட்களில் ஒன்று. இதை உட்கொண்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் என்கிறார்கள். இந்த ரசாயனம் அவற்றில் மூலப்பொருளாகச் சேர்க்கப்படக் காரணம் க்ரீம்கள், லிக்விட்கள் மற்றும் பெளடர்களை பிளீச் செய்து அவற்றை வெண்மையாக்கவே.

அதே பயன்பாட்டுக்காகத் தான் மைதாவிலும் அது கலக்கப்படுகிறது. கோதுமையில் இருந்து மைதா பிரித்தெடுக்கப்படுகையில் கோதுமையின் வெளிர் மஞ்சள் நிறம் எஞ்சும். அந்த நிறத்தைப் போக்கி சுத்தமான வெண்மை நிறம் பெறவே இந்த பென்சாயில் ஃபெராக்ஸைடு மைதாவில் கலக்கப்படுகிறது. உடல்நலனைப் பொருத்தவரை இது மிக மோசமான பலன்களையே அளிக்கும். தோல் அலர்ஜி, உலர்ந்து போதல், தோல் உறிதல் போன்ற பிரச்னைகளுக்கு எல்லாம் மூலகாரணமாக இருப்பது இந்த பென்ஸாயில் ஃபெராக்ஸைட் தான். யோசித்துப் பாருங்கள், இந்த பென்ஸாயில் ஃபெராக்ஸைட் மைதா வாயிலாக நம் குடலுக்குள் செல்லும் போது என்ன ஆகுமென்று? துணிகளை வெளுக்கச் செய்வது போல அது குடலை வெளுக்கச் செய்து விடும். அப்புறம் பரோட்டா, பரோட்டாவாகச் சால்னாக்களில் குளிப்பாட்டி விழுங்கி விட்டு குடலில் கொப்புளம் வரச்செய்து புண்ணாக்கிக் கொள்ள வேண்டியது தான்.

அலாக்ஸன்:

பென்ஸாயில் ஃபெராக்ஸைட் தவிர அலாக்ஸன் என்றொரு ரசாயனமும் மைதாவில் கலந்திருப்பதாகக் கருதப்படுகிறது. மைதாவை வெண்மை நிறமாக்க அதை ப்ளீச் செய்யும் போது அதிலிருந்து குளோரின் டை ஆக்ஸைடு வெளிப்படுகிறது. இந்த குளோரின் டை ஆக்ஸைடு மைதாவில் இருக்கும் ஸ்டார்ச்சுடன் வினை புரிந்து அலாக்ஸனாக மாறுகிறது. இந்த அலாக்ஸனும் மைதாவை வெள்ளை நிறமாக்க உதவக்கூடிய ஒருவகை ரசாயனமே. இது பென்ஸாயில் ஃபெராக்ஸைடை விட மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. ஒருவேளை இது கற்பிதமான பயமாகக் கூட இருக்கலாம். மைதாவில் அலாக்ஸான் கலக்கப்படுவது 100% நிரூபிக்கப்படவில்லை. ஏனெனில் வளர்ந்த நாடுகளில் அது தடை செய்யப்பட்ட ரசாயனங்களில் ஒன்று. கணையச் செல்களில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது இந்த அலாக்ஸன்.

மோனோ சோடியம் குளூட்டமேட்:

மைதா என்பது கோதுமையிலிருந்து பெறப்படும் சக்கை என்றும் முன்பே கண்டோம். அந்தச் சக்கையில் என்ன சுவை இருந்து விடப்போகிறது. எனவே மைதாவில் சுவை கூட்ட அதனுடன் கலக்கப்படும் ரசாயனமே மோனோ சோடியம் குளூட்டமேட். உணவியல் வல்லுனர்களால் சுருக்கமாக MSG என்று குறிப்பிடப்படக் கூடிய இந்த ரசாயனத்திற்கு மனித மூளைத்திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வல்லமை உண்டு.

இவை தவிர குளோரின் டை ஆக்ஸைட், பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்போனேட், சுண்ணாம்பு போன்ற மேலும் பல ரசாயனங்கள் மைதாவின் நிறம், சுவை, மற்றும் கெட்டுப்போகாத தன்மை பெறுவதற்காக அதனுடன் கலக்கப்படுகிறது. இயற்கையில் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களிலும் கூட இந்த ரசாயனங்கள் இல்லாமலில்லை. ஆனால், மிகக்குறைந்த அளவே இருக்கும். அதே மைதாவை எடுத்துக் கொண்டால் அதன் சதவிகிதம் அதிகம். எனவே மிக மோசமான ஆரோக்யக்கேடுக்கு 100% உத்தரவாதமுண்டு.

மைதாவுக்கு வெளிநாடுகளில் வேறு பெயருண்டு. ஆல் பர்பஸ் ஃப்லோர் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியக்கூடும். அது சாட்ஷாத் நம்மூர் மைதாவே தான்.

மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை அதிகளவில் உண்டால் என்ன ஆகும்?

மைதா உணவுப் பொருட்களை அதிகம் உண்பதால் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். அதன் காரணமாக ஒபிசிட்டி, ஹை பிளட் ப்ரஸ்ஸர், மனக்கொந்தளிப்பு போன்ற பிரச்னைகள் உண்டாக வாய்ப்பு அதிகம்.

மைதா உயிருக்கு எமனா?! நிஜம் எது? கட்டுக்கதை எது?

இல்லை.. ஒரேயடியாக அப்படிச் சொல்லி விட முடியாது. ஏனெனில் மைதா கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலங்களில் உழைக்கும் வர்க்கத்தினரின் அதாவது நேரம் காலம் கருதாது உழைத்தே தீர வேண்டிய நிர்பந்தம் விதிக்கப்பட்டவர்களுக்கும் கொத்தடிமைகளுக்கும் பசிப்பிணி தீர்க்கும் உணவுப் பொருட்களை உருவாக்க பேருதவியாக இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு இருக்கவே இருக்கிறது பீட்ஸா. முதன்முதலில் இத்தாலியில் பீட்ஸா உருவான கதையை அறிய முற்பட்டீர்கள் என்றால் மைதா அலைஸ் ஆல் பர்பஸ் ஃப்லாரின் அருமை புரிய வரும்.

இதைத்தான் நம்மூர் உழைப்பாளி வர்க்கத்தினர் மிக எளிதாக..

‘ரெண்டு பரோட்டவப் பிச்சுப் போட்டு சால்னால பாத்தி கட்டி சாப்பிட்டுட்டு படுத்தா போதும் நடுவுல பசியில வயிறு காந்தாம காலைல வரைக்கும் நிம்மதியா தூங்கலாம்’ என்று ரசித்துச் சொல்வார்கள்.

அர்த்தம் வெகு சிம்பிளானது. பரோட்டா பசி தாங்கும்.

ஆனால், அதையே நாற்காலியைக் குத்தகை எடுத்த மூளை உழைப்பாளிகள் ருசிக்காக தொடர்ந்து சாப்பிட்டு வந்தோமென்றால் விளைவுகள் விபரீதமாகத் தான் அமைந்து விடும். அதனால் ஜாக்கிரதை!

அறுசுவை தளத்தில் மைதா உணவு குறித்த கேள்விக்கு ஒருவர் பதில் சொல்லி இருந்தார்...

எந்த உணவில் தான் இன்றைக்கு ரசாயனக் கலப்பு இல்லாமல் இருக்கிறது. வேண்டுமானால் பரோட்டா சாப்பிடும் அல்லது மைதாவில் செய்த வேறு எந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதாக இருந்தாலும் சரி மைதா உணவு வகைகளைக் ருசிக்காகவும், ஆசைக்காகவும் கொஞ்சமாகவும் காய்கறி குருமா அல்லது சாலட் வகைகளை அதிகமாகவும் சாப்பிட்டு வைத்தோமென்றால் மைதா உணவுகளால் ரத்தத்தில் ஜிவ்வென்று ஏறக்கூடிய சர்க்கரையின் அளவை கொஞ்சமே கொஞ்சம் சமப்படுத்த முடியும் என்று;

ஆனால், அதெல்லாம் சும்மா வெற்றுச் சமாதானம். நீரழிவு நோய் இருப்பவர்கள் மைதா பரோட்டா மற்றும் மைதாவில் தயாரிக்கப்படும் அத்தனை உணவுகளையும் தவிர்த்து விடுதலே நலம்.

சின்னத்தம்பி சொல்லும் செய்தி!
By ஆசிரியர் | Published on : 12th February 2019 01:36 AM

தமிழக விவசாயிகள் சங்கத்தின் வெறுப்பையும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேரன்பையும் பெற்றிருக்கிறது சின்னத்தம்பி என்கிற 25 வயது ஆண் யானை. இந்த யானையைப் பழக்கப்படுத்தி கும்கி யானையாக்க முடியாது என்று யானைகள் குறித்த அறிஞர் அஜய் தேசாய் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக வனத் துறை அதிகாரிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாகவே, சின்னத்தம்பி என்கிற இந்த யானை கோவை மாவட்டம் ஆனைகட்டி, மாங்கரை பகுதிகளில் நடமாடி வருகிறது. ஆரம்பத்தில் பெரியதம்பி என்று ஊர் மக்களால் பெயரிடப்பட்ட யானையுடன், சின்னத்தம்பி வனப் பகுதியிலிருந்து ஊருக்குள் வருவதும், இரண்டு யானைகளுமாகப் பயிர்களைச் சேதப்படுத்துவதும் வழக்கமாகி விட்டிருந்தது. ஒருபுறம் பயிர்களைச் சேதப்படுத்தி விவசாயிகளின் வெறுப்புக்கு உள்ளானாலும், இன்னொருபுறம் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களின் அன்பையும், ஆதரவையும் இந்த யானைகள் பெற்றுக்கொண்டன என்பதுதான் வியப்புக்குரிய திருப்பம்.
இரண்டு யானைகளும் ஆனைகட்டி சாலைப் பகுதியில் சுற்றிவரும்போது, பொதுமக்கள் அவற்றுக்கு வாழைப் பழம் உள்ளிட்ட பொருள்களை வழங்குவது வழக்கமானது. 

பெரிய தம்பியும், சின்னத்தம்பியும் அந்தப் பகுதி மக்கள் யாரையும் துன்புறுத்தியதே இல்லை. சாலை வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பது வரை சாதுவான மிருகங்களாகவே காட்சியளித்தன. ஆனால், பயிர்களை நாசம் செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்ததுதான், விவசாயிகள் இந்த அளவுக்கு வெறுப்பும் கோபமும் அடைந்திருப்பதற்குக் காரணம்.
 
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், பெரியதம்பி யானை இறந்துவிட்டது. சின்னத்தம்பிக்குப் புதிய துணையாக விநாயகன் என்கிற யானை அமைந்தது. பெண் யானை ஒன்றுடனும் குட்டிகளுடனும்கூட சின்னத்தம்பியை ஊர் மக்கள் ஒரு சில முறை பார்த்திருக்கிறார்கள். வனத் துறையினரால் விநாயகன் யானை பிடிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் கொண்டுவிடப்பட்டது. சின்னத்தம்பியை வனத்துக்குள் அனுப்பும் முயற்சி வெற்றி பெறவில்லை.
இப்போது சின்னத்தம்பியின் நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதை கும்கியாக பழக்கப்படுத்த முடியாது என்று அஜய் தேசாய் கூறியிருக்கும் நிலையில், சின்னத்தம்பியை என்ன செய்வது என்கிற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது வனத் துறை. வனத் துறையினர் மீண்டும் விரட்டிவிட்டால், காட்டில் திரியும் ஏனைய யானைகளையும் அழைத்துக் கொண்டு அது மீண்டும் ஊருக்குள் நுழையாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்கிறார்கள், பயிர் நாசத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள்.

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் 2016-இல் 98 யானைகளும், 2017-இல் 124 யானைகளும், 2018-இல் 84 யானைகளும் கொல்லப்பட்டிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான போராட்டத்தில் 307 யானைகள், 126 மனிதர்கள் என உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம், யானைகளின் வாழ்வாதாரமான வனங்கள் அழிக்கப்படுவதும், அவற்றின் வழித்தடங்கள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படுவதும்தான்.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வுப்படி, ஆசிய யானைகளின் எண்ணிக்கை 41,410 முதல் 52,345 வரை என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 60% ஆசிய யானைகள் காணப்படுகின்றன. 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தென்னிந்தியாவில்தான் மிக அதிகமாக யானைகள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் 11,960, வடகிழக்கு இந்தியாவில் 10,139, மத்திய கிழக்குப் பகுதியில் 3, 128, வட இந்தியாவில் 2,085 யானைகள் இருப்பதாக அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

தென்னிந்தியாவில் யானை வழித்தடங்களின் எண்ணிக்கை குறைவு. தமிழகத்தில் உள்ள மொத்த வழித்தடங்கள் 17 மட்டுமே. வட மாநிலங்களில் 150 சதுர கி.மீ.க்கு ஒரு வழித்தடம் காணப்படுவதாலும், எல்லா வழித்தடங்களும் விளைநிலங்கள் வழியாக இருப்பதாலும், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதல்கள் தினசரி நிகழ்வாகவே மாறியிருக்கின்றன. தமிழகத்தின் நிலைமை அந்த அளவுக்கு மோசமில்லை என்றுதான் கூறவேண்டும்.
தென்னிந்தியாவில்தான் மிகச் சிறந்த யானை சரணாலயங்கள் உள்ளன. பந்திப்பூர், நாகர்ஹோலே, முதுமலை, வயநாடு, பிலிகிரி ரங்கசுவாமி கோவில், காவேரி, பிரம்மகிரி உள்ளிட்ட யானை சரணாலயங்களில் யானைகளுக்கான எல்லாவித உணவும் கிடைக்கிறது. யானைகள் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கும் இயல்புடையவை. தங்களது உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அவை பயணிக்கும் வழித்தடங்கள் அடைக்கப்படும்போதும், ஆக்கிரமிக்கப்படும்போதும்தான் மனிதர்களுடன் மோதலில் ஈடுபடுகின்றன.

கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில் 77 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்; 61 பேர் காயமடைந்திருக்கிறார்கள்; 2,421 முறை விவசாய நிலங்களில் யானைகள் நுழைந்து குறைந்தது 261 முறை பயிர்கள் நாசமடைந்துள்ளன.

யானைகளின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வனப் பகுதிகள் அழிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தாத வரை, காடுகளிலிருந்து யானைகள் ஊருக்குள் வருவதும், பயிர்களை நாசம் செய்வதும் அதிகரிக்குமே தவிர குறையாது. இதுதான் சின்னத்தம்பி நமக்கு உணர்த்தும் பாடம்!
குட்டு!

கோர்ட்டை அவமதித்த சி.பி.ஐ., அதிகாரிக்கு..
நீதிமன்ற அறையின் மூலையில் அமர உத்தரவு

புதுடில்லி: விசாரணை அதிகாரியை இடமாற்றம் செய்ததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இழைத்ததாக கூறி, சி.பி.ஐ.,யின் முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு, உச்ச நீதிமன்றம், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், ஒரு நாள் முழுவதும், நீதிமன்ற அறையின் மூலையில் அமரும்படியும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பீஹார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களை விசாரித்த அதிகாரி, ஏ.கே.சர்மாவை, சி.பி.ஐ., இடைக்கால இயக்குன ராக நியமிக்கப்பட்டிருந்த, நாகேஸ்வர ராவ், இடமாற்றம் செய்தார்.

நடவடிக்கை:

'அவரை இடமாற்றம் செய்யக்கூடாது' என, உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை மீறி, இந்த நடவடிக்கையை, ராவ் எடுத்தார். அவரது நடவடிக்கைக்கு ஆதரவாக, சி.பி.ஐ., சட்ட ஆலோசகர், பாஸுரன் கருத்து தெரிவித்திருந்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

சி.பி.ஐ., இயக்குனர் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், ''இந்த வழக்கில், நாகேஸ்வர ராவ், பாஸுரன் ஆகியோர், நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளனர்; அதை ஏற்க வேண்டும்,'' என்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் மூலையில் உள்ள இருக்கையில், ஒரு நாள் முழுவதும் அமரும்படி, நாகேஸ்வர ராவுக்கும், பாஸுரனுக்கும் உத்தரவிட்டனர். மேலும், 'நாகேஸ்வர ராவ், பாஸுரன் ஆகியோர், தலா, 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என்றும், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

பின், நீதிபதிகள் கூறியதாவது: நாகேஸ்வர ராவ் செய்தது, அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு செயல். ஏ.கே.சர்மாவை மாற்றுவதற்கான உத்தரவை, ஒரு நாள் கழித்து பிறப்பித்திருந்தால், வானம் இடிந்து, தரையில் விழுந்து விடுமா...

தண்டனை:

இந்த நீதிமன்றத்துக்கு என, கண்ணியம் உள்ளது; அது, காக்கப்பட வேண்டும். நாகேஸ்வர ராவ் செய்த குற்றத்துக்காக, அவரை, 30 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்க முடியும். ஆனால், நாங்கள் அதை விரும்பவில்லை. தவறை உணர வேண்டும் என்பதற்காக, இந்த தண்டனை தரப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

நீதிபதிகளின் உத்தரவை அடுத்து, நீதிமன்ற அறையின் மூலையில் இருந்த இருக்கைகளில், நாகேஸ்வர ராவும், பாஸுரனும் அமர்ந்தனர். ஒரு நாள் முழுவதும் அந்த அறையில்,

பல்வேறு வழக்குகளின் விசாரணைகள் நடந்தன. மாலையில் விசாரணைகள் முடியும் வரை, அங்கேயே அமர்ந்திருந்த அவர்கள், தண்டனை நேரம் முடிந்த பின், சோர்ந்த முகத்துடன் அங்கிருந்து வெளியேறினர்.

பொது நலன் மனு; ஐகோர்ட்டில் தள்ளுபடி:

சி.பி.ஐ., இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா இடையே, கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட மோதலை அடுத்து, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, இடைக்கால இயக்குனராக, நாகேஸ்வர ராவை நியமித்தது. பணியில் சேர்ந்ததும், சி.பி.ஐ., அதிகாரிகள் பலரை, நாகேஸ்வர ராவ் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். தற்போது, சி.பி.ஐ.,க்கு, முழு நேர இயக்குனராக, ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குனராக இருந்தபோது பிறப்பித்த இடமாற்ற உத்தரவுகளின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை தெரிவிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், உசேன் முயீன் பரூக் என்பவர், பொது நலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், 'இந்த மனுவில் பொது நலன் எதுவும் கிடையாது. இடமாற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தை அணுகலாம்' எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.

அண்ணா பல்கலை ஆராய்ச்சி நிதியில் மோசடி? : விசாரணை நடத்த துணைவேந்தர் சுரப்பா உத்தரவு

Added : பிப் 13, 2019 00:43


சென்னை, அண்ணா பல்கலை கழக துணைவேந்தராக, சுரப்பா பதவி ஏற்றது முதல், பல அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். பல முறைகேடுகளை கண்டுபிடித்து, பல்கலை கழக ஊழியர்கள் பலர் மீது, அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியிலும், மோசடி நடந்ததாக வந்த புகார்களை தொடர்ந்து, அது குறித்து விசாரிக்கவும், சுரப்பா உத்தரவிட்டுள்ளார். 

தமிழக கவர்னராக, பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்றதும், தமிழக பல்கலை கழகங்களை சீர்திருத்த முடிவு செய்தார். தகுதியான நபர்களை, பல்கலை கழக துணை வேந்தர்களாக தேர்வு செய்ய துவங்கினார்.
ஒரு காலத்தில், புகழ் பெற்று விளங்கிய, சென்னை அண்ணா பல்கலை கழகம், 15 ஆண்டுகளாக, மிக மோசமான நிலைக்கு சென்றது. காரணம், பல்கலை கழக துணை வேந்தர்கள் பலர், அரசியல், பண பல செல்வாக்குடன் நியமிக்கப்பட்டனர். அவர்களால் ஏற்பட்ட அவப்பெயரை போக்கவும், பல்கலை கழகத்தின் தரத்தை உயர்த்தவும், துணை வேந்தராக சுரப்பா நியமிக்கப்பட்டார். 

அவர் பதவி ஏற்றது முதல், பல அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பணம் வாங்கி, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியது உட்பட, பல முறைகேடுகள், ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. பல பேராசிரியர்கள் மீது, நடவடிக்கை பாய்ந்துள்ளது. அந்த வகையில், ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில், முறைகேடு நடந்த மோசடியும் அம்பலமாகியுள்ளது. 

இது குறித்து கூறப்படுவதாவது: 

'அண்ணா பல்கலை கழகத்தில், ஆளில்லா வான்வெளி வாகனம் வடிவமைக்கும் திட்டத்திற்காக, 20 கோடி ரூபாய் வழங்கப்படும்' என, 2015ல், சட்டசபையில், 110 விதியின் கீழ், அப்போதைய முதல்வர், ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, நிதியும் ஒதுக்கப்பட்டது. 

அந்த நிதியில், அண்ணா பல்கலை வான்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில், பல வகையான, ஆளில்லா விமானங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து இடையூறுகளை கண்காணிக்கவும், காவல் துறையால் பயன்-படுத்தப்படுகின்றன. வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக, வருவாய் துறையாலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக வாங்கப்பட்ட பல உபகரணங்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தாங்களாகவே கண்டுபிடித்ததாக கூறியுள்ளது குறித்து, துணை வேந்தருக்கு அடுக்கடுக்கான புகார்கள் சென்றன. 'வேர்ல்ட் ரிக்கார்ட் நோவோ ஜெனரேட்டர்' என்ற ஆளில்லா விமானத்தை, அண்ணா பல்கலையின், எம்.ஐ.டி., மாணவர்கள் கண்டு பிடித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால், அந்த ஆளில்லா விமானம், சீனாவில் தயாரானது. ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. இது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்கலை கழகத்திற்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக காவல்துறைக்கு போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், பெரும் கூட்டம் கூடும் இடங்களில் மக்களை கண்காணிக்கவும், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா குட்டி விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ட்ரோன்களையும் பொருத்த, 3 லட்சம் ரூபாய் தான் செலவாகும் என, கூறப்படுகிறது. ஆனால், 30 லட்சம் ரூபாய் அளவிற்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த உபகரணங்கள் பற்றிய விலை உட்பட, முழு விபரங்கள் இணையதளங்களில் உள்ளன. 

இணைய தளங்களில் புகுந்து, இந்த உபகரணங்கள் பற்றிய விபரங்களை எடுத்து, ஆதாரத்துடன், புகார்களை கவர்னர் அலுவலகத்திற்கும், துணை வேந்தருக்கும், எம்.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்கள் அனுப்பினர். மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் படித்து பெருமை சேர்த்த அண்ணா பல்கலை கழகத்தின், எம்.ஐ.டி., வளாகத்திற்கு களங்கம் ஏற்படாமல் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, அவர்கள் புகார்களில் கூறியிருந்தனர்.
இது குறித்து, முழு விசாரணை நடத்த துணைவேந்தர், சுரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையின் முடிவில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, தெரிகிறது.
- நமது நிருபர் -

தாசில்தார் பாலியல் தொல்லை : மாற்றுத்திறன் பெண் போராட்டம்

Added : பிப் 12, 2019 21:49 |

திருநெல்வேலி: பாலியல் தொந்தரவு அளித்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுத்து, தனக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி பெண் கூறினார்.திருநெல்வேலி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, பேரிடர் மேலாண்மை பிரிவில், தற்காலிக ஊழியராக இருந்தவர் சரண்யா, 32. மாற்றுத்திறனாளியான இவருக்கு, அங்கு தாசில்தாராக உள்ள திருப்பதி, 57, என்பவர், பாலியல் தொந்தரவு அளித்ததாக சர்ச்சை எழுந்தது.விசாரித்த மாவட்ட நிர்வாகம், தாசில்தார் மீது புகார் கூறிய சரண்யாவை, நான்கு மாதங்களுக்கு முன், பணிநீக்கம் செய்தது. தொடர்ந்து, சரண்யா, தாசில்தார் குறித்து, கலெக்டர் ஷில்பாவிடம் புகார் தெரிவித்தார். அதன்பின்னும், தாசில்தார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து சரண்யா, நேற்று, நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க நிர்வாகிகள் ஆதரவுடன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.சரண்யா கூறுகையில், ''பாலியல் தொந்தரவு தந்த தாசில்தார், திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.''கலெக்டர் அறிவுரைப்படி, போலீசில் புகார் அளித்தேன். ஆனால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். அதுவரை என் போராட்டம் தொடரும்,'' என்றார்.

அண்ணாமலை பல்கலையில் நியமனங்களை ரத்து கோரி மனு : ரத்து செய்யக்கோரி கவர்னருக்கு புகார் மனு


Added : பிப் 12, 2019 23:43

'அண்ணாமலை பல்கலையில், 13 ஆயிரம் பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டது குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, கல்லுாரி ஆசிரியர்கள் அமைப்பு புகார் மனு அனுப்பியுள்ளது.சிதம்பரத்தில் உள்ள, அண்ணாமலை பல்கலையை, ஐந்தாண்டுகளுக்கு முன் அரசே ஏற்றது. இங்கு கூடுதலாக இருந்த, 370 பேராசிரியர்கள், மூன்றாண்டுகளுக்கு முன், அரசு கலை கல்லுாரிகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட்டனர்.அவர்களின் மூன்றாண்டு பதவி காலம் முடியும் நிலையில், மீண்டும், மூன்றாண்டுகளுக்கு மாற்று பணியை நீட்டித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, முதுநிலை மற்றும், பிஎச்.டி., முடித்த பட்டதாரிகள் அமைப்பான, 'நெட், செட்' சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த அமைப்பின் தலைவர், தங்கமுனியாண்டி மற்றும் பொது செயலர், நாகராஜன் ஆகியோர், கவர்னருக்கு அனுப்பியுள்ள புகார் மனு:பல்கலை மானிய குழு மற்றும், தமிழக உயர்கல்வி துறை விதிகளின்படி, பேராசிரியர் பணிக்கு, ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் தகுதி பெற்றுள்ளனர். நெட், செட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும், ஆராய்ச்சி படிப்பான, பிஎச்.டி., முடித்தும், ஏராளமானோர் வேலைக்கு காத்திருக்கின்றனர். இவர்களில் பலர், அரசு கலை கல்லுாரிகளில், கவுரவ விரிவுரையாளர்களாக, மிக குறைந்த சம்பளத்தில், பணியாற்றுகின்றனர்.இந்நிலையில், அண்ணாமலை பல்கலையில், விதிகளை மீறியும், தகுதி பார்க்காமலும் நியமிக்கப்பட்ட பேராசிரியர்களை, தமிழக உயர்கல்வி துறை, அரசு கல்லுாரிகளுக்கு மாற்றுகிறது. இந்த நடவடிக்கை, உயர்கல்வி தரத்தை கடுமையாக பாதிக்கும். மேலும், விதிகளை மீறி, 13 ஆயிரம் பேர், அண்ணாமலை பல்கலையில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து, அரசு விசாரணை நடத்தாமல் உள்ளது. எனவே, அரசு கலை கல்லுாரிகளில், அண்ணாமலை பல்கலை பேராசிரியர்களுக்கு பணி வழங்குவதை, உடனே ரத்து செய்ய வேண்டும். விதிமீறிய நியமனங்கள் குறித்து, விசாரணை நடத்தி, 13 ஆயிரம் நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

NEWS TODAY 10.06.2026