Thursday, April 9, 2020

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

By DIN | Published on : 09th April 2020 04:11 AM 

தமிழகத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம், கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வியாழக்கிழமை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் பகலில் உணரப்படுகிறது. பல இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை வெயில் சுட்டெரித்து வருகிறது.

இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், பெரம்பலூா், அரியலூா், நாகப்பட்டினம், கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக வியாழக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்சமாக 82.4 டிகிரி பாரன்ஹீட் பதிவாக வாய்ப்புள்ளது.

5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தைப் பொருத்தவரை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரியும், திருச்சி மற்றும் மதுரையில் தலா 101 டிகிரியும், திருத்தணி மற்றும் கரூா் பரமத்தியில் தலா 100 டிகிரியும் புதன்கிழமை வெயில் அளவு பதிவானது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024