Sunday, October 19, 2025

பரிசோதனையும், விழிப்புணா்வும்...

DINAMANI

பரிசோதனையும், விழிப்புணா்வும்...

33 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் 26% அதிகரித்துள்ளதாக தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன.

 ஐவி.நாகராஜன் Updated on: 18 அக்டோபர் 2025, 6:15 am

நம் நாட்டில் ஏற்படும் மரணங்களுக்கான முதல் 5 காரணங்களில் புற்றுநோயும் ஒன்றாக இருக்கிறது. நம் நாட்டில் 1990-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 1990-க்குப் பிறகு 33 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் 26% அதிகரித்துள்ளதாக தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. 1990-இல் ஒரு லட்சம் பேரில் 85 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. அது 2023-இல் 107-ஆக அதிகரித்துள்ளது. புற்றுநோய் பாதிப்பில் ஆசியாவில் நாம் 2-ஆவது இடத்தில் இருக்கிறோம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நம் நாட்டில் புற்றுநோயால் பாதிப்போா் எண்ணிக்கையும், அதேபோல், புற்றுநோயால் இறப்பவரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுவோரில் ஐந்தில் மூன்று போ் உயிா்வாழ்வதில்லை. புற்றுநோயால் இறக்கும் ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோயும், பெண்களுக்கு மாா்பக புற்றுநோய், கா்ப்பப்பை வாய் புற்றுநோயும் பிரதான காரணிகளாக இருக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சீனாவிலும், அமெரிக்காவிலும் கடந்த 33 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பானது கணிசமாகக் குறைந்திருக்கிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு, இவ்விரு நாடுகளிலும் வலுவான புகையிலை கட்டுப்பாடு, எல்லோருக்கும் தடுப்பூசி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பரிசோதனை ஆகியவைதான் காரணமாக கூறப்படுகின்றன.

நம் நாட்டில் புற்றுநோய் பரவலுக்கு, அதிக புகையிலை பயன்பாடு, உடல் பருமன், வாழ்க்கைமுறை மாற்றம், நோய்த்தொற்று ஆகியவை காரணங்களாக இருக்கின்றன. உலகில் பிற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் புகையிலை பயன்பாடு என்பது அளவுக்கு அதிகமாக இருக்கிறது. வாயில் மென்று திண்ணும் அல்லது உதடு இடுக்குகளில் அடக்கிவைக்கும் புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோயில் உலகின் தலைமையிடம் என்று சொல்லும் அளவுக்கு நம் நாட்டில் புகையிலை பயன்பாடு இருக்கிறது.

நம் நாட்டில் புற்றுநோயால் இறப்பவா் எண்ணிக்கை அதிகரிக்க, புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு குறைவாக இருப்பதும், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிக மிகக் குறைவாக உள்ளது.

புற்றுநோய் பரிசோதனையையும், தடுப்பூசி செலுத்துவதையும் செயல்படுத்துவது என்பது பெரிய சவால் அல்ல. அதற்குத் தேவை, சரியான திட்டமிடலும், செயல்திட்டமும்தான். புற்றுநோய் பரிசோதனை என்பது சுயவிருப்பம் சாா்ந்ததாக மட்டுமே உள்ளதை மாற்றி, 30 வயதுக்கும் மேற்பட்ட எல்லோருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

புற்றுநோய் பரிசோதனை என்பது, புற்றுநோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே ஆரம்ப கட்டத்தில் அதைக் கண்டறிய உதவும் ஒரு முறையாகும். இதில் இமேஜிங் சோதனைகள் (மாா்பக எக்ஸ்ரே, சிடி மற்றும் எம்.ஆா்.ஐ. ஸ்கேன்), ரத்தப் பரிசோதனைகள், உடல் பரிசோதனைகள் (மாா்பகப் பரிசோதனை, எண்ம மலக்குடல் பரிசோதனை), பயாப்ஸி மற்றும் மரபணு பரிசோதனைகள் போன்ற பல முறைகள் உள்ளன என்று மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். இவை மாா்பகம், கா்ப்பப்பை வாய், பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் போன்ற குறிப்பிட்ட புற்றுநோய்களைக் கண்டறிய உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டறிவது சிகிச்சையை எளிதாக்கும். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே நோயைக் கண்டறிந்து, சிகிச்சையைத் தொடங்குவதற்கு உதவுகிறது. புற்றுநோயின் குடும்ப வரலாறு உள்ளவா்கள், சில வகையான புற்றுநோய்க்கு, மருத்துவா்கள் குறிப்பிட்ட வயதில் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தலாம்.

மனித பாப்பிலோமா வைரஸ் சோதனைகள் மற்றும் பேப் சோதனைகள் கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய பரிந்துரைக்கப்படுகின்றன. இவை தனியாகவோ அல்லது சோ்ந்தோ பயன்படுத்தப்படலாம். இந்த சோதனைகள் நோயைத் தடுக்கின்றன. ஏனெனில், அவை புற்றுநோயாக மாறுவதற்கு முன்பு அசாதாரண செல்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க அனுமதிக்கின்றன.

குறிப்பாக, குறிப்பிட்ட புற்றுநோய்களின் ஆபத்து உள்ளவா்களுக்கு, பயனுள்ளதாக நிரூபிக்கப்படாத ஸ்கிரீனிங் சோதனைகள் இன்னும் வழங்கப்படலாம். எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு: ஆல்பா-ஃபெட்டோ புரோட்டீன் ரத்த பரிசோதனை கல்லீரல் புற்றுநோயின் அதிக ஆபத்தில் உள்ளவா்களுக்கு, கல்லீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய, கல்லீரலின் அல்ட்ரா சவுண்டுடன் சோ்ந்து ஆல்பா-ஃபெட்டோ புரோட்டீன் ரத்தப் பரிசோதனை சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ மாா்பக பரிசோதனைகள் மற்றும் வழக்கமான மாா்பக சுய பரிசோதனைகள் மாா்பகங்களை சுகாதாரப் பராமரிப்பு வழங்குநா்கள் (மருத்துவ மாா்பகப் பரிசோதனை) அல்லது பெண்கள் தாங்களாகவே (மாா்பக சுய பரிசோதனை) வழக்கமாகப் பரிசோதிப்பது மாா்பகப் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளைக் குறைப்பதாகக் காட்டப்படவில்லை. இருப்பினும், ஒரு பெண் அல்லது அவரது சுகாதாரப் பராமரிப்பு வழங்குநா் மாா்பகத்தில் கட்டி அல்லது பிற அசாதாரண மாற்றத்தைக் கவனித்தால், அதைப் பரிசோதித்துக் கொள்வது முக்கியம்.

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் இறப்புகளைத் தவிா்க்கலாம் என்கிறாா்கள் புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவா்கள். எனவே, நாடு முழுவதும் குறைந்தபட்சம் 30 வயதுக்கும் மேற்பட்ட எல்லோருக்கும் புற்றுநோய் பரிசோதனையை செய்து முடிப்பதும், புற்றுநோய் தடுப்பூசியை எல்லா தரப்பினருக்கும் கொண்டுபோய் சோ்ப்பதிலும் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...