Wednesday, August 26, 2015

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.

சென்னை: மக்களை வாட்டி வதைக்கும் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை இப்போது 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. கடுமையான வறட்சி காரணமாக கர்நாடகம் மற்றும் மராட்டியத்தில் பெரிய வெங்காயத்தின் விளைச்சல் குறைந்து விட்டது தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் வெங்காயத்தின் விலை உயர்வைப் பயன்படுத்திக் கொள்வதற்காக சிலர் வெங்காயத்தை பெருமளவில் பதுக்கி வைத்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதாக தெரியவில்லை. அதேபோல் அதிரடி ஆய்வு மேற்கொண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை வெளிக்கொண்டு வருவதற்கு தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உறங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல், பருப்பு விலையை கட்டுப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இவற்றின் விலை உயர்வுக்கும் போதிய விளைச்சலின்மை மற்றும் பதுக்கல் தான் முக்கியக் காரணம் ஆகும்.

ஆன்லைன் வணிகத்தை பயன்படுத்தி வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை பதுக்கி வைத்து செயற்கையாக ஏற்படுத்தப்படும் தட்டுப்பாட்டை தடுக்க மாநில அரசால் முடியும். ஆனால், ஏனோ பதுக்கல் காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு தயாராக இல்லை. வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது, அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்வது தான் பொது வழங்கல் திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், இவ்விஷயத்தில் தமிழகத்தின் பொதுவழங்கல் துறை முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டது. காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்வதற்காகத் தான் பண்ணை பசுமைக் கடைகள் திறக்கப்பட்டன. அங்கு வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படும் போதிலும், அது பெயருக்காக மிகக்குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை; வெளிச்சந்தையில் எந்தவித சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

தமிழகஅரசின் இத்தகைய போக்கால் வெங்காயம் பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் போய்விடும்.

எனவே, வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்வதன் மூலமும், பதுக்கலைத் தடுப்பதன் மூலமும் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பிளிப்கார்ட், இணையத்தில் ஷாப்பிங் செய்யும் போது, நண்பர்களுடன் சாட்டிங் மூலம் கலந்துரையாடி பொருட்களை வாங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது

மின்வணிக நிறுவனமான பிளிப்கார்ட்,  இணையத்தில் ஷாப்பிங் செய்யும் போது, நண்பர்களுடன் சாட்டிங் மூலம் கலந்துரையாடி பொருட்களை வாங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பிளிப்கார்ட் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி மூலம், வாங்க இருக்கும் பொருட்கள் தொடர்பான ஆலோசனையையும் பெறலாம்.

ஸ்மார்ட்போன் மூலம் ஷாப்பிங் செய்வது அதிகரித்து வரும் நிலையில்,  முன்னணி மின்வணிக நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் தனது செயலி வடிவில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பிளிப்கார்ட் தனது செயலியில், பிங் எனும் பெயரில் புதிய சாட்டிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மேசிஜிங் சேவை போன்ற இந்த வசதி மூலம், வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் செயலியில் ஷாப்பிங் செய்யும்போது, நண்பர்களை தொடர்பு கொண்டு சாட் செய்யலாம்.
பிளிப்கார்ட் செயலியின் ஓரத்தில் இந்த பிங் சாட் ஐகான் வசதியை காணலாம். அதை இயக்கினால் போன் தொடர்பில் உள்ள நண்பர்களுடன் சாட் செய்ய முடியும். வாங்க நினைக்கும் பொருட்களின் புகைப்படம் அல்லது பட்டியலை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். ஷாப்பிங் பக்கத்தையும் அப்படியே அனுப்பு வைத்து ஆலோசனை கேட்கலாம். இருவரும் இணைந்தும் கூட ஷாப்பிங் செய்யலாம். இமோஜிகளையும் அனுப்பி வைக்கலாம்.
இணைய அல்லது மொபைல் ஷாப்பிங் வசதியானதாகவும், பிரபலமானதாகவும் இருந்தாலும், இது தனிமையான அனுபவமாகவே அமைகிறது. நேரில் ஷாப்பிங் செய்வது போல நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் குழுவாக சென்று ஷாப்பிங் செய்வது போன்ற அனுபவத்தை மின் வணிகத்தில் பெற முடிவதில்லை.

இதை ஈடு செய்யும் வகையில், செயலி மூலம் நண்பர்களுடன் கலந்துரையாடியபடி ஷாப்பிங் செய்யக்கூடிய வ்சதியை பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாட் வசதி, அழைப்பின் பேரில் கிடைக்கிறது. அதாவது யாரிடமிருந்தாவது இந்த சேவையை பயன்படுத்த அழைப்பு வந்த பிறகுதான் இதை பயன்படுத்த முடியும். விரும்பினால் பிளிப்கார்ட் செயலியில் இதற்கான அழைப்பை கோரும் வசதியும் இருக்கிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் இந்த வசதி செயல்படுகிறது. 

- சைபர் சிம்மன்

தடைகளை தாண்டிய இளங்கோவனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு!

பிரதமர் மோடி - முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து 
தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்தார்.  அதிமுக தொண்டர்கள் இளங்கோவனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.
இளங்கோவன் மீது கைது நடவடிக்கை பாயும் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளங்கோவனுக்கு எதிராக போராட வேண்டாமென்று கோரிக்கை விடுத்து, அதிமுகவினரின் போராட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைத்தார். 

இதையடுத்து டெல்லியில் இருந்து இளங்கோவன் இன்று காலை சென்னை திரும்பினார். வரம்பு மீறி பேசியுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்து குறித்து விமான நிலையத்தில் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சிறுவர்களுக்கு எல்லாம் நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்றார். பின்னர் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனுக்கு  அவர் வருகை தந்தார். 

இளங்கோவன்  சத்தியமூர்த்தி பவன் வருவதையடுத்து காலை முதலே அங்கு பரபரப்பு நிலவியது. காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர். சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்த இளங்கோவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண் தொண்டர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். 

Tuesday, August 25, 2015

பிஞ்சுகள் மீது வன்முறை By எஸ். ஸ்ரீதுரை



கேட்கச் சகிக்காத ஓசையும், பார்க்கச் சகிக்காத காட்சியும் எது என்று யாராவது கேட்டால் இப்படி பதில் சொல்லலாம் - குழந்தையின் பிஞ்சு மேனியில் விழுகின்ற அடிச் சப்தமும், அதைத் தொடர்ந்து அந்தக் குழந்தை மலங்க மலங்க விழித்து அழத் தொடங்கும் காட்சியும் என்று.
மக்களில் பலருடைய கோபதாபங்களுக்கும் வடிகால்களாக இருப்பவை குழந்தைகள்தான் என்றால், அது மிகைக் கூற்றாகாது.
சாப்பாடு சரியில்லாதது, எதிர்பாராத நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவது, பிடிக்க வேண்டிய பேருந்தையோ, ரயில் வண்டியையோ தவற விடுவது, பிடித்த தொலைக்காட்சித் தொடரைப் பார்க்க முடியாமல் போவது என்று காரணம் எதுவானாலும் சரி, திட்டுகளையும், அடிகளையும் வாங்குவது அவரவர் வீட்டுக் குழந்தைகள்தான் என்றாகி விட்டது.
ஒரு தனியார் மருத்துவமனையில் கண்ட காட்சி இது. குறும்புத்தனத்துடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு மூன்று வயதுக் குழந்தை மருத்துவர் அறைக்கு வெளியே விடப்பட்டிருந்த காலணிக்குள் தனது கால்களை ஆர்வத்துடன் நுழைத்துப் பார்த்தது.
அடுத்த நொடி, குழந்தையின் முதுகில் அதன் தந்தை ஓர் அறை விட, வலி தாங்காமல் அந்தக் குழந்தை அழுது துடிக்க, சுற்றி இருந்த அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அடுத்தவர் காலணியை அணிந்து கொள்வது சரியில்லை என்று சொல்லிக் கொடுக்கக்கூடப் பொறுமையில்லாத தகப்பனின் ஆத்திரம் அந்தக் குழந்தையின் முதுகைப் பழுக்க வைத்து விட்டது.
மருத்துவமனைதான் என்றில்லை, பேருந்து, ரயில் பயணம், திருக்கோயில்களின் கூட்ட நெரிசல், ரேஷன் கடை அலைக்கழிப்புகள், உறவு வீட்டு நிகழ்வுகள் போன்ற பல சந்தர்ப்பங்களிலும் பெற்றோர்களின் மனக் குமுறல்களுக்கான வடிகால்களாக அமைவது குழந்தைகள்தான்.
பெற்றோர்கள் எதிர்பார்ப்புக்கேற்ப படிக்க வேண்டும், நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும், விளையாடாமல் இருக்க வேண்டும், சொல்லும் வேலைகளைச் செய்ய வேண்டும், இவற்றைச் செய்யத் தவறினால் அடி உதைகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இன்றும் பல குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் இருக்கத்தான் செய்கின்றன.
டெஸ்டுல தொண்ணூறு மார்க்குக்கு குறைந்தால் பயலே பின்னி எடுத்துடுவேன் என்று மீசை முறுக்கும் தகப்பன்களையும், என் பெண்ணை இன்னும் கொஞ்ச நேரம் டியூஷன்ல உக்கார வெச்சுக் கையை ஒடிங்க டீச்சர் என்று கான்வென்ட் ஆசிரியையிடம் கோரிக்கை வைக்கும் தாய்மார்களையும் தெருவுக்குத் தெரு பார்க்கத்தான் செய்கிறோம்.
இப்படிப்பட்ட பெற்றோர்களுக்காகவே சில காலம் கடந்த சொலவடைகள் தங்கள் உயிரைத் தக்கவைத்துக் கொண்டு நடமாடுகின்றன.
"அடியாத மாடு படியாது, அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்' என்பனவற்றைக் கூறியே குழந்தைகளின் மீதான பெற்றோரின் வன்முறைக்கு இங்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது.
மதிப்பெண் என்ற ஒற்றை மந்திரச் சொல்லை வெற்றி கொள்வதற்காக நமது கல்விச் சாலைகளில் வதைபடும் சிறுவர்களின் நிலை சொல்லி முடியாதது.
மாணவர்களை உடல்ரீதியாகத் தண்டிக்கக் கூடாது என்ற வழிகாட்டுதல்கள் பல இருந்தாலும், அவர்கள் தத்தமது ஆசிரியப் பெருமக்களால் தண்டிக்கப்படுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன.
கல்விக் கட்டணத்தைச் செலுத்த இயலாத பெற்றோர்களுடைய இயலாமைக்கு அவர்களின் குழந்தைகளை உடல், மனரீதியாகத் தண்டிக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் இன்று வரை எந்தச் சட்ட, திட்டங்களுக்கும் அடங்குவதாகத் தெரியவில்லை.
அதிகச் செல்லம் கொடுப்பதால் பிடிவாத குணம், அடங்க மறுக்கும் தன்மை கொண்ட குழந்தைகள் ஒருபுறம் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களைச் சமாளிப்பது என்பது பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு பெரும் பிரச்னைதான்.
அதுபோன்ற குழந்தைகளைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்தக் குழந்தைகளையும் அடித்தும், அடக்கியும்தான் வளர்க்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.
"செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்' என்பது திருவள்ளுவரின் அறிவுரையாகும். பெற்றவர்களாயினும் சரி, ஆசிரியர்கள் உள்பட மற்றவர்களாயினும் சரி தத்தமது கோபதாபங்களைத் தங்களைவிட வலியவர்களிடம் காட்ட முடியாதபோது, தங்களை ஒருபோதும் எதிர்க்க முடியாத குழந்தைகளிடம் காட்டுவது எந்தவிதத்தில் சரியாக இருக்க முடியும்.
தங்களை யார் அடித்தாலும் சிறிது நேரத்தில் அதை மறந்துவிட்டு, அடித்தவர்களிடமே மீண்டும் வந்து அவர்கள் காலைக் கட்டிகொண்டு சிரிக்கும் குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற முகங்களை ஒருமுறை நினைத்துப் பார்த்தால், மீண்டும் ஒருமுறை அவர்களை அடிக்கக் கை நீளுமா, மனம்தான் வருமா?
அது மட்டுமன்று, அடி உதைகளுக்குப் பழகிப் போகும் குழந்தைகள் மனதில் நாளடைவில் பயம் விட்டுப் போகும். அடிதானே, வாங்கி விட்டுப் போவோம் என்ற மனோநிலைக்கு அவை வந்துவிடும் சாத்தியம் உண்டு. அவர்களே பிற்காலத்தில் வன்முறையாளர்களாய் மாறுகின்ற அபாயத்துக்கும் சாத்தியம் இருக்கிறது.
நமது சமுதாயத்தில் ஏற்கெனவே வன்முறையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை போதாதா, நாம் வேறு புதிய புதிய வன்முறையாளர்களை உற்பத்தி செய்வானேன்?.
எந்த நியாயமான காரணமானாலும் சரி, குழந்தைகளின் மேல் பெற்றோர்கள் வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம். எந்தப் பிரச்னைக்கும் வன்முறை என்பது தீர்வாகாது.
அதிலும், குழந்தைகளின் மீதான வன்முறை என்பது ஒரு தீர்வு அன்று, அதுவே ஒரு சமுதாயப் பிரச்னையாகும்.

Saturday, August 22, 2015

சினிமா எடுத்துப் பார் 22- எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல்!



ஏவி.எம் எடுக்கத் திட்டமிட்ட அந்த பிரம்மாண்டமான படம் ‘அன்பே வா’. அந்தப் படத்தில் நடித்த பிரபல கதாநாயகர் என்றும் புரட்சி தலைவராக திகழும் எம்.ஜி.ஆர் அவர்கள். திரை உலகம் மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் புகழோங்கி முதலமைச் சராக அரசாண்டவர். திரைப்படங்களில் கதையிலும், காட்சியிலும், பாடல்களிலும் மக்களுக்கு நல்ல கருத்துகளை சொன் னவர். பிறருக்கு உதவிகளைச் செய்து மனித நேயத்தோடு வாழ்ந்து காட்டியவர்.

இப்படி படங்களில் நடித்ததோடு வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர். அதனால் மக்களுக்கு குறிப்பாக பெண் களுக்கு அவர் மீது அன்பும், பாசமும் ஏற்பட்டது. உண்மையாக வாழ்ந்து மக் களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர். அவர் நம்மை விட்டுச் சென்று பல ஆண்டு கள் ஆனாலும், அவர் பெயரைச் சொல் லித்தான் இன்னும் ஓட்டுக் கேட்கிறார் கள். ஏவி.எம் நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்க ஒப்பந்தமானது எல்லோ ருக்கும் மிக மகிழ்ச்சியைத் தந்தது.

எம்.ஜிஆரின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் திரு லோகசந்தர். ‘அன்பே வா’ திரைக் கதையை எம்.ஜி.ஆரை மனதில் வைத்து திருலோகசந்தர் எழுதியிருந்தார். திரைத் துறைக்குப் பெருமை சேர்த்த பல படங் களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் இந்தப் படத்தின் வசனகர்த்தா. கதையை எம்.ஜி.ஆரிடம் சொல்வதற்காக அவரு டைய ராமாவரம் தோட்டத்துக்கு ஏவி.எம். சரவணன் சார் தலைமையில் இயக்குநர் திருலோகசந்தரோடு புறப்பட்டோம்.

எங்களைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலில் சாப்பிட்டுட்டு வாங்க பேசலாம்’’ என்றார். அது அவரின் விருந் தோம்பல். உணவு உபசரிப்புக்குப் பிறகு, திருலோகசந்தர் திரைக்கதையைக் கூற எம்.ஜி.ஆர் அவர்கள் ஆர்வமாகக் கேட்டார். ‘‘இதுவரை நான் நடித்து வந்த பார்முலாவுக்குள் இந்தக் கதையை அடக்க முடியாது. வித்தியாசமாக இருக் கிறது. மாறுபட்ட கதைக் களம்.

என்னை யூத்ஃபுல் கதாபாத்திரமாக உருவாக்கி இருக்கிறீர்கள். இது வழக்கமான எம்.ஜி.ஆர் படம் அல்ல; இயக்குநர் திருலோகசந்தர் படம்’’ பெருமையோடு சொன்ன எம்.ஜி.ஆர், ’’படத்தை திரு லோகசந்தர் இயக்கும் விதத்தில்தான் இந்தப் படத்தின் வெற்றி அமையும். ஏவி.எம்மின் ‘அன்பே வா’படத்தில் நடிப் பதைப் பெருமையாக கருதுகிறேன்’’ என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டார்.

படத்தின் ஒருங்கிணைப்பு வேலை களை ஏவி.எம்.சரவணன் சார் கவனித்துக்கொண்டார். சரவணன் சார் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் நடிக்கும் படப்பிடிப்புகளுக்குப் போய் எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசுவது அவர் பழக்கம். சரவணன் சாரை அவரது வீட்டில் சரவன் என்றே அழைப்பார்கள். எம்.ஜி.ஆரும் சரவன் என்றே அழைப் பார். ‘அன்பே வா’ படத்தில் நடிக்க வந்ததும் சரவணன் சாரை எம்.ஜி.ஆர் செல்லமாக ‘முதலாளி’ என்றழைக்க ஆரம்பித்தார்.

‘அன்பே வா’ படத்துக்குத் தொடக்க விழா செப்டம்பர் மாதத்தில் நடந்தது. சரவணன் சார் படத்தை பொங்கல் பண்டிகை அன்று வெளியிட வேண்டும் என ஆசைப்பட்டார். இதை இயக்குநர் திருலோகசந்தரிடம் கூறியதும், ‘‘கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் முழு ஸ்கிரிப்டாக தயாராக இருக்கிறது. அத னால் படப்பிடிப்பை விரைவாக முடிக் கலாம்’’ என்று நம்பிக்கைக் கொடுத்தார். சரவணன் சார் தன் விருப்பத்தை அப்புச்சியிடம் சொன்னதும் அவருக்கும் ஆர்வம் அதிகமானது. ‘‘ஆனால் எம்.ஜி.ஆர் கால்ஷீட்டை எப்படி நமக்கு மொத்தமாக ஒதுக்கித் தருவார்?’’ என்று கேட்டார். சரவணன் சார், ‘‘எம்.ஜி.ஆர் அவர்களிடமே கேட்டுப் பார்த்துவிடுகிறேன்’’ என்று கூறினார்.

என்னிடம் ராமாவரம் தோட்டத்துக்கு போன் போட்டு, எம்.ஜி.ஆர் அவர் களிடம் ‘தான் அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் எப்போது வரலாம்' என்றும் கேட்கச் சொன்னார் சரவணன் சார். நான் கேட்டேன். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘கால்ஷீட் தேதி விஷயங்கள் என்றால் நீங்கள் மட்டும் வாங்க. வேறு முக்கியமான விஷயம் என்றால் முதலாளியைக் கூட்டிட்டு வாங்க’’ என்றார். தோட்டத்துக்குப் புறப் பட்டோம். சரவணன் சார், எம்.ஜி.ஆரிடம் ‘‘ஒரு முக்கியமான விஷயம். நீங்கள்தான் முடிவு சொல்ல வேண்டும். அது முடிந் தால் சந்தோஷம். உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் வருத்தப்பட மாட்டோம்’’ என்றார்.

‘‘பில்டப் எதுக்கு முதலாளி. என்ன விஷயம்னு சொல்லுங்க’’ என்றார் எம்.ஜி.ஆர்.

‘‘அன்பே வா படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம்னு ஒரு ஆசை.’’

‘‘அப்படி ஒரு ஆசையா? சத்யா மூவிஸ்ல சாணக்கியா இயக்கத்தில் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் வேலைகள் நடந்துட்டிருக்கு. அதைப் பொங்கலுக்கு வெளியிடலாம்னு திட்டமிட்டிருக்காங்க’’ என்று சொல்லிவிட்டு, ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அழைத்து சரவணன் சாருடைய விருப்பத்தைக் கூறினார். ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் செட்டியார் மீதும், சரவணன் சார் மீதும் தனி பிரியம் கொண்டவர். அதனால் அவருடைய படத்தை தள்ளி வைத்துக்கொள்ள சம் மதித்தார். சரவணன் சார் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு நன்றி கூறினார்.

சரவணன் சார் என்னிடம் ‘‘முத்துராமன் மொத்தமா எவ்வளவு நாட்கள் கால்ஷீட் தேவைப்படும்னு சொல்லுங்க?’’ என்றார். நான் ‘’70 முதல் 80 நாட்கள் தேவைப்படும்’’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி அதெல்லாம் விடுங்க. உங்க ஆசைப்படி ‘அன்பே வா’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்’’ என்றார். அப்படி சொன்னதோடு மட்டுமின்றி விரைந்து படத்தை முடிக்க பேருதவியாக இருந்தார். எங்கள் பணிகளையும் வேகப்படுத்தினார். இரவு, பகலாக வேலை பார்த்து படத்தின் நிர்வாக இயக்குநராகவே எம்.ஜி.ஆர். மாறிவிட்டார். பட வேலைகளில் அப்படி ஓர் ஈடுபாட்டுடன் உழைத்தார்.

‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, அசோகன், நாகேஷ், மனோரமா டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, இப்படி ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே பணிபுரிந்தது. ஏவி.எம் ஸ்டுடியோவில் எல்லா அரங்குகளிலும் பெரிய பெரிய செட்டுகள் போடப்பட்டன. அவுட்டோர் ஷூட்டிங் ஊட்டி, சிம்லா என முடிவானது. ஆகமொத்தத்தில் ‘அன்பே வா’ படத்தின் படப்பிடிப்பு நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் சினிமாவில் ஒரு தனி வரலாறு.

- இன்னும் படம் பார்ப்போம்...

ஆங்கிலம் அறிவோமே - 71: ராக்கெட்டும், பாக்கெட்டும்

ஒருவர் போகிற போக்கில் “ராக்கெட்டுக்கும், பாக்கெட்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கூறுங்கள்’’ என்று கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? எனக்கும் அதே உணர்வுதான் முதலில் எழுந்தது. பிறகு இதிலும் முக்கிய விஷயம் இருப்பதை உணர முடிந்தது.

Racket, Rocket இடையே வித்தியாசம் உண்டு - எழுத்துகளிலும், அர்த்தங்களிலும்.

அதேபோல் Packet, Pocket இடையேகூட வேறுபாடு உண்டு.

டென்னிஸ் ராக்கெட் என்று நாம் குறிப்பிடும்போது அது Racket. இந்த வார்த்தைக்கு இன்னொரு பொருளும் உண்டு. எக்கச்சக்கமான ஒலியை எழுப்புவதை Racket என்போம். அதாவது நமக்குப் பிடிக்காத ஒலி. The traffic made a terrible racket in the street.

சட்ட மீறல்களை ஒரு குழுவாகச் செய்யும்போது அதையும் racket என்பதுண்டு. The latest weight reducing racket, Emu farm racket என்பதுபோல.

சிலர் Racquet என்ற வார்த்தையையும் Racket என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். Racket கொண்டு ஆடப்படும் விளையாட்டைக் குறிக்கவும் இந்தச் சொல் பயன்படுகிறது.

Rocket என்பது விண்கலம் தொடர்பானது. அது உயர எழும்பும் பொருள். விண்கலம் ஏவும் இடமான தும்பாவிலும் எழும்பும். தீபாவளியின்போது பட்டாசு வடிவிலும் எழும்பும். விலைவாசி rocket வேகத்தில் எழுவதை நாம் எவ்வளவு முறை பார்த்திருப்போம்!

இப்போது பாக்கெட்டுக்கு வருவோம்.

Packet என்றால் ஒரு பொட்டலம் என்று வைத்துக் கொள்ளலாம். A packet of sweets.

நாம் சட்டைப் பாக்கெட் என்று குறிப்பிடுவது pocket. அதாவது சிறிய பொருள்களை வைத்துக் கொள்வதற் காக உடைகளில் தைக்கப்படுபவை.

சில சமயம் பொதுவான ஒன்றிலிருந்து விலகி நிற்கும் சின்னச் சின்ன ‘அறைகளைக்’ குறிக்கவும் pocket என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது உண்டு. Pockets of resistance. A pocket of poverty in the affluent city.

சாதக பாதகம்

பயிற்சி வகுப்பு ஒன்றில் ‘எதைச் செய்வதற்கு முன்னாலும் அதன் pros and cons என்னவென்று யோசித்துவிட்டுச் செய்ய வேண்டும்.’ என்றேன்.

“ஏன் poetry-ஐ நினைக்கக்கூடாது?’’ என்று ஒருவர் முணுமுணுத்தது கேட்டது. நல்லவேளை காதில் விழுந்தது.

நான் குறிப்பிட்டது அந்த prose அல்ல. இது pros. இதற்கு சாதகங்கள் என்று அர்த்தம். Cons என்றால் பாதகங்கள். ஒரு செயலின் சாதக பாதகங்களை ஆராய்ந்த பிறகு அதைச் செய்ய வேண்டும் என்பதுதான் நான் கூறிய ஆங்கில வாக்கியத்தின் பொருள்.

I wanted to weigh up the pros and cons before accepting the job.

லத்தீன் மொழியில் pro என்றால் ஆதரவாக. Contra என்றால் எதிராக. Contra என்பதுதான் con ஆகிவிட்டது. அந்த மொழியில் pro et contra என்பார்கள். அதாவது for and against எனலாம்.

அருவி

ஒரு வாசக நண்பர் “Cascade, cataract ஆகிய இரண்டுமே அருவியைக் குறிக்கும் சொற்கள்தானே?’’ என்கிறார்.

ஆமாம். ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. Cascade என்பது மிக மெல்லிய அருவி என்று சொல்லலாம். பல தீம் பார்க்குகளில் காணப்படலாம். பாறைகளின் மீது படர்ந்து வரும் அருவி. Cataract என்பது சக்தி மிகுந்த அருவி. கொஞ்சம் பயங்கரமானது, ஆபத்தானது என்றும் சொல்லலாம்.

அருவியில் வேறு சில வகைகளும் உண்டு. Chute எனப்படும் அருவியில் அது சரியும் வழி மிகவும் குறுகலானது. இதன் காரணமாக மிகமிக அதிக வேகத்தோடு அந்தக் குறைவான பகுதியில் அருவி நீர் வெளிப்படும். Frozen Waterfalls என்றால் பனிக்கட்டியாக மாறிவிட்ட அருவி என்று அர்த்தம். இதன்மீது ஏறுவதைக்கூட ஒரு சாகசமாக எண்ணுபவர்கள் உண்டு.

இது தொடர்பான Catadupa என்ற வார்த்தை கூட சுவாரசியமானதுதான். இது பிரம்மாண்டமான அருவிக்கு (பெரும்பாலும் நைல் நதி தொடர்பான அருவிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது) அருகில் வசிக்கும் மக்களைக் குறிக்கிறது. தொடர்ந்து அருவியின் பலத்த ஓசையைக் கேட்டுக் கொண்டிருப்பதால் இவர்கள் பெரும்பாலும் கேட்கும் திறனை இழந்துவிட்டிருப்பார்களாம்.

வருமா,வராதா?

“He did not go” என்பது சரியா? அல்லது “He did not went” என்பது சரியா?”என்று கேட்ட நண்பரிடம் முதல் வாக்கியம்தான் சரியானது என்றேன். அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. Did என்பது past tense. எனவே went என்பதுதானே வர வேண்டும் என்றார்.

இது போன்ற தவறுகளை சில வாசகர்களின் அஞ்சல்களிலும் (Why you did not replied?) காண முடிகிறது. எனவே, இந்தச் சந்தேகம் குறித்து கொஞ்சம் விளக்கமாகவே பார்த்து விடுவோம்.

Auxiliary verb குறித்து இந்தப் பகுதியில் முன்பு குறிப்பிட்டிருக் கிறேன். என்றாலும் அது குறித்து ஒரு சுருக்கமான revision இப்போது நலம் பயக்கும்.

VERB-களில் பலவும் main verbs என்ற பிரிவில் அடங்கிவிடும். stand, runs, forgot, allow என்பவை சில உதாரணங்கள்.

auxliary verb என்பது tense, voice போன்றவற்றைச் சுட்டிக்காட்டி வாக்கியத்தை இலக்கணப்படி அமைக்க உதவுபவை. இவற்றை helping verbs என்றும் கூறுவார்கள். இவை பெரும்பாலும் main verb-உடன் காணப்படுகின்றன. auxliary verbs க்கு சில எடுத்துக்காட்டுகள் - am, has, do, may, are, was, have, does, will, could, is, did.

இந்த இரண்டு வகை VERBS-ஐ கண்டுபிடிக்க குறுக்குவழி ஒன்றும் தோன்றுகிறது.

ஒரு verb அருகிலேயே NOT என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடிந்தால் அது auxiliary verb. இல்லையேல் main verb.

Cannot வரும். Write not வராது. Do not வரும். See not வராது. (கவிதைகளில் எப்படி வேண்டு மானாலும் வரலாம், அதை விடுங்கள்).

பலவித இலக்கணச் சிக்கல்களை நீக்கிவிட்டு எளிமையாகச் சொல்வ தென்றால் Did என்ற auxiliary verb-ஐத் தொடர்வது infinitive ஆகத்தான் இருக்கும். Past tense verb அல்ல.

(go, come, read, write, stand, take, give, run போன்ற அடிப்படையான verbs ஆக நாம் கருதுபவற்றை infinitive என்பார்கள். இவற்றை present tense verb என்று நாம் கருதுவது வழக்கம்).

அதாவது did என்ற வார்த்தையைத் தொடர்ந்து come, go, write, stand போன்றவைதான் வரும். இந்த ஒரே வாக்கியத்தை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டாலும் போதும்.

எனவே Did he go?-தான். Did he went? அல்ல. He did not go-தான். He did not went அல்ல.

He did not write-தான். He did not wrote அல்ல.

I went to the house but did not enter.

எதிரொலி: Due to வின் பயன்பாடு

Due to வை phrase preposition மாதிரிப் பயன்படுத்தக்கூடாது. Due to என்பது predicative adjective. இதை is, was, are, were போன்ற ‘to be’ verb-க்கு பின்னால்தான் பயன்படுத்த வேண்டும்.

Due to rain the match was postponed என்றோ The match was postponed, due to the rain என்றோ சொல்லக்கூடாது. due to க்குப் பதிலாக Owing to பயன்படுத்த வேண்டும். Owing to the rain the match was postponed என்று சொல்ல வேண்டும்.

To be verb-க்குப் பின்னால் due to- வை பயன்படுத்த வேண்டும். Collapse ஐ பயன்படுத்த விரும்பினால் Noun-ஆக பயன்படுத்தி his collapse and death was due to heart attack என்று சொல்ல வேண்டும்.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்

Owing to, Due to ஆகிய இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றே. Part of speechம் ஒன்றே. (Ref: Oxford dictionary).

ரத்தம் என்று நான் எழுதினால் ‘இரத்தம்’ என்று எழுதாதது பெரும்பிழை என்று ஒருவர் காட்டலாம்தான். ஒரு குறிப்பிட்ட நோக்கில் பார்க்கும்போது ‘ரத்தம்’ தவறுதான். சில மொழிப் பயன்பாடுகள் காலப்போக்கில் மாற்றங்கள் கண்டு நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அப்படித்தான் due to பயன்பாடும். Because of என்பது போலவே அது மிகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Keywords: ஆங்கில அறிவு, ஆங்கில இலக்கணம், மொழி அறிவு, ஆங்கிலம் அறிவோமே

சென்னை 376: இளமை மாறா நகரம்


சென்னையில் இளமைக்குப் பஞ்சமே இல்லை. இந்த நகரத்துக்கு வயது 376 ஆண்டுகள் என்று சொன்னால் யாரும் நம்புவார்களா என்பதே சந்தேகம்தான். ஏனெனில் நாளாக நாளாக நகரம் இளமையாகிக்கொண்டேவருகிறது. சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் எப்போதும் ஒரு துடிப்பையும் துள்ளலையும் உணரலாம். இருபத்தி நான்கு மணிநேரமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டே இருக்கும் இந்த நகரம். இளையவர்களை வாரியணைத்துக்கொள்ளும் நகரமாகவே உள்ளது. அன்று அது பாரதியை அரவணைத்திருக்கிறது; இன்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை வளர்த்தெடுத்திருக்கிறது.

எல்லாப் பெரிய நகரங்களையும் போலவே சென்னையில் இளமையின் கொண்டாட்டத்துக்கான இடங்கள் அதிகம். கொண்டாட்டம் போதுமா? செலவுக்குத் தேவையான வருமானத்தை ஈட்டவும் இங்கே வழிகள் உள்ளன. தினந்தோறும் ரயில்களிலும் பேருந்துகளிலும் வந்திறங்கும் எத்தனையோ பேருக்கு சென்னை தாயுள்ளத்துடன் இடமளிக்கிறது. கனவுகளைச் சுமந்து்வரும் அத்தனை இளைஞர்களுக்கும் ஏதாவது ஒரு வாழ்க்கையை அது தொடர்ந்து அளித்துவருகிறது. அதனால்தான் இந்தப் பெருநகரம் தொடர்ந்து வளர்ந்துகொண்டேயிருக்கிறது.

இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க பெருநகரின் மத்தியில் ஸ்பென்சர் பிளாஸா, ஐநாக்ஸ், எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்கை வாக் போன்ற ஷாப்பிங் மால்கள் காணப்படுகின்றன. நகரில் மட்டுமல்ல புறநகர்ப் பகுதிகளிலும் மாயாஜல், ஃபீனிக்ஸ் போன்ற ஷாப்பிங் மால்கள் இளைஞர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

வார நாட்களில் கடுமையாக உழைக்கும் இந்த இளைஞர்கள் வீக் எண்ட்களில் மால்களையும் தீம் பார்க்குகளையும் சுற்றிவருகிறார்கள். திரைப்படம், நாடகம், விளையாட்டு என இவர்கள் கொண்டாட்டத்துக்கான வழிகள் அநேகம். வெறும் கான்கிரீட் கட்டிடங்களில் என்ன உள்ளது, இயற்கையான இடத்துக்கு ஈடு இணையேது எனக் கேட்பவர்களுக்காகவே நீண்டு கிடக்கிறது சென்னை மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைகள். இவை போதாதென்று சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் பூங்காங்கள் இளைஞர்களுக்கு ஆசுவாசம் தருவதற்காகத் திறந்து கிடக்கின்றன.

சினிமாவில் சேர வேண்டுமா? கவலை இல்லை. ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டுமா? அதற்கும் இங்கே இடமுண்டு. சாப்ட்வேர் துறையில் முன்னேறவும் வழி உண்டு, விளையாட்டு வீரர்களுக்கும் உரிய களம் உண்டு. நேரம் போவது தெரியாமல் வாசித்துக்கொண்டே இருக்கும் இளைஞர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமரா நூலகம் போன்ற எத்தனையோ நூலகங்கள் அவர்கள் வரவை எதிர்பார்த்து நிற்கின்றன.

உணவுப் பிரியரா, உடையில் ஆர்வமா, கலையில் விருப்பமா, விளையாட்டுத் துறையில் ஈடுபாடா - எது உங்களுக்குப் பிடிக்குமோ அதைச் செய்துகொள்ள இந்த நகரத்தில் வாய்ப்பிருக்கிறது. தன்னை நம்பி வந்த யாரையும் இந்த நகரம் கைவிட்டதே இல்லை. அதனால்தான் கல்லூரியில் படிக்கவும் படித்த பின்னர் வேலைக்காகவும் இங்கே இளைஞர்கள் குவிந்துகொண்டே இருக்கிறார்கள். பாரம்பரியப் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் அனுதினமும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதே இந்தப் பெருநகரின் தனித்துவம். அதனாலேயே இது என்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறது.

சென்னை எனும் கலைடாஸ்கோப்

அறிமுகமாகாத‌வரை பெருநகரங்கள் நமக்கு ‘பீட்சா’. பிறகு அவை ஆயா சுட்ட தோசைதான்! ‘மெட்ராஸுக்குப் போற. பார்த்துப்பா, அங்க பிக்பாக்கெட்காரங்க ஜாஸ்தி’ என்பதுதான் எனக்கு வழங்கப்பட்ட முதல் அட்வைஸ். உலகத்துக்கு வேண்டுமானால், அது சென்னை. உள்ளத்தில் இன்னும் மெட்ராஸ்தான்!

முதல்முறை சென்னை வந்தபோது 8 வயது. சுற்றுலாவாகச் சென்னை வந்தோம். இரவு நேரத்தில் அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘தொலைஞ்சு போயிருவோமோ’ என்ற பயத்துடன் மெரினா கடற்கரையைப் பார்த்தது, இன்னும் மனதில் அலையடிக்கிறது.

அதன் பிறகு சுமார் 15 வருடங்கள் கழித்துப் பணி நிமித்தம் வந்தபோது சென்னை வரவேற்றறது. சுனாமிக்குப் பிறகான மெரினாவைப் பார்க்கும்போது கொஞ்சம் பயம்தான். ஆயினும், கைகள் கோத்துக் கதையளந்தபடி செல்லும் காதலர்களைப் பார்த்தால், ‘கடல் இனிது’ எனச் சொல்லத் தோன்றுகிறது.

‘இதயம்’, ‘பூவே உனக்காக’, ‘காதல் தேசம்’ போன்ற பல படங்கள்தான் சென்னையை மனத்தில் சித்திரமாக வரைந்துவைத்ததன. ‘அண்ணா சாலையில் எட்டு வண்ண வானவில்’லை நடிகர் காந்த் மட்டுமா பார்த்தார்?

சினிமாவில் இடம்பெறும் சென்னைக்கும், நிஜத்தில் உள்ள சென்னைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. என்றாலும், இப்போதும், எம்.எம்.சி.யைக் கடக்கும்போது, முரளி கையில் டைரியுடன் உலவிக்கொண்டிருப்பது போலவும், எல்.ஐ.சி.கட்டிடத்தின் மீது சூப்பர் ஸ்டார், காரை ஓட்டிக் கொண்டிருப்பது போலவும் தெரியும். அவ்வளவு வெள்ளந்தியான என்னை, பரங்கிமலை ஜோதி தியேட்டருக்கு வழி சொல்லும் அளவுக்குச் சென்னை வளர்த்தது!

‘ஸ்பென்சர் பிளாசா’வில் இருந்த ‘லேண்ட்மார்க்’ புத்தகக் கடைதான் வாசிப்புக்குத் தீனி போட்டது. நுங்கம்பாக்கம் சாலையில் இருந்த அதன் இன்னொரு கிளை மூடப்பட்டது, சென்னை வரலாற்றில் ஒரு சோகம். வரலாறாய் நிற்கும் இன்னொரு புத்தகக் கடை ‘ஹிக்கின்பாதம்ஸ்’!

சென்னையின் அடையாளங்களாக ஒருபுறம் கட்டிடங்கள் இருக்கின்றன என்றால், இன்னொரு புறம் அதன் மனிதர்கள். ஒண்டுக் குடித்தனம் ஒன்றில் வசித்திருந்தபோது, ‘நைட் 7 மணிக்கு மேல துணி துவைக்காதீங்க’ என்று கன்டிஷன் போட்ட வீட்டுக்காரர், மேன்ஷன்களில் பசியைப் போக்கிக்கொள்வதற்கு இரண்டு பட்டர் பிஸ்கட்டும், ஒரு டீயும் மட்டுமே குடித்து வந்த பக்கத்து அறை நண்பர்கள், இன்னும், இன்னும்... நட்பு, காதல், வேலை, துரோகம், வணிகம், மருத்துவம், கல்வி எனப் பலவற்றுக்கும் ‘ஸ்கோப்’ உள்ள‌ கலைடாஸ்கோப் சென்னை!

நோக்கியா கம்பெனி மீண்டும் திறக்கப்படுகிறது தமிழக அரசுடன் மத்திய அரசின் குழு பேச்சுவார்த்தை

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா கம்பெனியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பூர்வாங்கப் பணிகளில் மத்திய அரசின் பணிக்குழு இறங்கியுள்ளது.

அதிவிரைவு பணிக்குழு

இந்தியாவில் செல்போன் மற்றும் அதன் உதிரிபாக உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான அதிவிரைவு பணிக் குழுவை மத்திய அரசின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை அமைத்துள்ளது.

இந்த பணிக்குழுவின் தலைவராக இந்திய செல்லுலார் சங்கத்தின் (ஐ.சி.ஏ.) தலைவர் பங்கஜ் மொகிந்த்ரோ நியமிக்கப்பட்டுள்ளார். நோக்கியா, லாவா, சோனி, மைக்ரோசாப்ட், மைக்ரோமாக்ஸ் உள்பட பல்வேறு செல்போன் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இலக்கு நிர்ணயம்

கடந்த ஆண்டு டிசம்பரில் தனது செயல்பாட்டை இந்தப் பணிக்குழு தொடங்கியது. மாநிலங்களின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளை சந்தித்து இந்தக் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

2019-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் செல்போன் உற்பத்தியை 500 மில்லியனாக உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தக் குழு செயலாற்றி வருகிறது. அதாவது உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த செல்போன் உற்பத்தியில் இந்தியா 25 சதவீத இடத்தை பிடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூர்வாங்கப் பணி

இது செல்போன் உற்பத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கூடுதலாக 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் பணிக்குழு, தற்போது தமிழகத்தில் நிலவும் சாதக சூழ்நிலைகளை பயன்படுத்த முன்வந்துள்ளது.

செல்போன் உற்பத்தியில் நோக்கியா முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பூர்வாங்கப் பணியில் இந்தப் பணிக்குழு இயங்கி வருகிறது.

அமைச்சர், அதிகாரிகளுடன் சந்திப்பு

இதுதொடர்பாக அமைச்சர் தங்கமணி, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர், தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் ஆகியோரை நேற்று தலைமைச்செயலகத்தில் பங்கஜ் மொகிந்த்ரோ, பணிக்குழுவின் துணைத் தலைவர் ஜோஷ் பல்கர் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

அரசிடம் கோரிக்கை

அதன் பின்னர் பங்கஜ் மொகிந்த்ரோ அளித்த பேட்டி வருமாறு:

நோக்கியா கம்பெனி மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இதற்கு தமிழக அரசு என்னென்ன செய்ய முடியும்? என்பதையும், அதை ஒரு தொகுப்பாக அளிக்க வேண்டும் என்பதையும் தமிழக அரசிடம் கேட்டுள்ளோம்.

இதுதொடர்பாக தமிழக அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் நோக்கியா நிறுவனத்தை தற்போது கொண்டுவர நாங்கள் விரும்பவில்லை.

நம்பிக்கை

இதில் மத்திய அரசும் தமிழக அரசும் கூறும் விஷயங்களை முன்வைத்து, அதன் பின்னரே நோக்கியா நிறுவனத்தை பேச்சுக்கு அழைக்க விரும்புகிறோம். இதில் நல்ல முடிவு கிடைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

நோக்கியாவை மீண்டும் செயல்படச் செய்வதற்கான பூர்வாங்க பணிகளை தொடக்கியிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பென்ஷன் திட்டத்துக்கு ஏன் வரவேற்பு இல்லை?

கடந்த மே மாதம் 9–ந்தேதி மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி முன்னிலையிலேயே, பிரதமர் நரேந்திர மோடி 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஜன் சுரக்ஷாவின் 3 புதிய திட்டங்கள் என்று இந்த திட்டங்கள் பெருமையாக பேசப்பட்டன. ‘‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா’’ என்ற ஆண்டு பிரிமியம் வெறும் 12 ரூபாயில் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு, ஆண்டு பிரிமியம் 360 ரூபாயில், 18 முதல் 50 வயதுள்ளவர்களுக்கான
2 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு ஆகிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதேநாளில் 18 வயது முதல் 40 வயதுள்ள அனைத்து சேமிப்பு வங்கி கணக்குதாரர் களுக்கும் மாதாந்திர ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மாதாமாதம் 42 ரூபாய் முதல் 1,454 ரூபாய்வரை முதலீடு செய்வதன் மூலம், 60 வயது முதல் மாதம் ஆயிரம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய் என பென்ஷன் பெறும் திட்டம் இது.

இந்த 3 திட்டங்களில் விபத்து காப்பீடு திட்டத்துக்கும், ஆயுள் காப்பீடு திட்டத்துக்கும் பொதுமக்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. வேறு திட்டங்களில் சேர்ந்து இருப்பவர்கள்கூட இந்த திட்டங்களில் பிரிமியம் தொகை மிகக்குறைவு, மேலும் வங்கிக்கணக்குகளில் இருந்து நேரடியாக பிரிமியம் தொகை சென்றுவிடும் என்பதால் ஆர்வத்தோடு சேர்ந்தனர். கடந்த மாதம் எடுத்த கணக்குப்படி விபத்து காப்பீடு திட்டத்தில் 7 கோடியே
84 லட்சம் பேர்களும், ஆயுள் காப்பீடு திட்டத்தில் 2 கோடியே 70 லட்சம் பேர்களும் சேர்ந்திருந்தனர். ஆனால், பரபரப்பாக பேசப்பட்ட பென்ஷன் திட்டத்தில் 4 லட்சத்து 69 ஆயிரம் பேர்கள் மட்டுமே சேர்ந்து இருந்தனர். இன்சூரன்சு திட்டங்களில் சேரும் ஆர்வம் பென்ஷன் திட்டத்தில் சேர மக்களிடையே இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

இந்த பென்ஷன் திட்டத்தின் மிக முக்கிய நோக்கமே, எந்த வகையிலும் பென்ஷன் பெறாத, அமைப்பு சாரா பணிகளில் வேலைபார்ப்பவர்கள் உள்பட ஏழை–எளிய மக்கள் 60 வயதுக்குமேல் தங்கள் முதிய வயதில் யார் கையையும் எதிர்பார்க்காமல் வாழ்வாதாரம் பெறவேண்டும் என்பதுதான். இந்த திட்டத்தின்படி பிரிமியம் கட்டியவருக்கு 60 வயதுக்குமேல் அவர் உயிரோடு இருக்கும்வரை மாத பென்ஷன் கிடைக்கும். அவர் மறைந்தவுடன் அவரது நாமினிக்கு கிடைக்கும். அவரும் மறைந்தபிறகு அவரது வாரிசுக்கு கட்டிய தொகை முழுமையாக கிடைக்கும். இவ்வளவு இருந்தும் மக்கள் விரும்பாததற்கு காரணம், இப்போதுள்ள பணவீக்கத்தில் 60 வயதுக்குமேல் பெறும் தொகையின் பண மதிப்புதான். எடுத்துக்காட்டாக, இப்போது 18 வயதுள்ள ஒருவர் 60 வயதுவரை மாதாமாதம் பணம் கட்டி, 60 வயதில் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் பெறும்போது, இப்போதுள்ள 5 ஆயிரம் ரூபாயின் மதிப்பு அப்போது 644 ரூபாயாகத்தான் இருக்கும், அதை வைத்து எப்படி வாழ்க்கை நடத்தமுடியும் என்ற பேச்சு இருக்கிறது. மேலும் முழுத்தொகை பெறுகிற காலத்தில் அது வருமானவரிக்கு உட்பட்டது என்பதும் இந்த திட்டத்தின் மீது ஆர்வத்தைக் குறைத்துவிடுகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் நிச்சயமாக நல்லதுதான். ஆனால், அதன் பலன் 60 வயதுக்குமேல் முழுமையாக கிடைக்கும் வகையில், அரசுடைய பங்களிப்பை இன்னும் உயர்த்தி கூடுதல் பென்ஷன் கிடைத்தால்தான் நல்லது.

Friday, August 21, 2015

வீர பாண்டிய கட்டபொம்மன்’ திரையில் உருவான வரலாறு! - பாகம் 2



Author: - பா. தீனதயாளன்

First Published: Aug 21, 2015 10:00 AM
Last Updated: Aug 21, 2015 10:36 AM

கு.மா.பாலசுப்ரமணியம் பாடல்கள் எழுத, ஜி.ராமநாதன் இசையில் அத்தனையும் சூப்பர் ஹிட். சிவாஜியின் ஜோடியாக முதலும் கடைசியுமாக எஸ்.வரலட்சுமி


கு.மா.பாலசுப்ரமணியம் பாடல்கள் எழுத, ஜி.ராமநாதன் இசையில் அத்தனையும் சூப்பர் ஹிட். சிவாஜியின் ஜோடியாக முதலும் கடைசியுமாக எஸ்.வரலட்சுமி நடித்தார். சொந்தக்குரலில் அவர் பாடிய ‘சிங்காரக் கண்ணே...’ இன்றைக்கும் தேன் வார்க்கும்.

சக்தி கிருஷ்ணசாமியின் புகழ்பெற்ற கட்டபொம்மன் வசனம், கொலம்பியா ரெக்கார்டுகளில் ஆறு செட்களாக வெளியாகி பரபரப்பாக விற்பனை ஆனது.

*

கட்டபொம்மனை நம் கண் முன் நிறுத்திய வி.சி.கணேசனின் மனக்கூட்டிலிருந்து பாய்ந்து வரும் வார்த்தை அருவி உங்களுக்காக -

‘கம்பளத்தார் கூத்தில் கட்டபொம்மனைப் பார்த்துவிட்டு, என்றாவது ஒருநாள் கட்டபொம்மனாக நடிப்போம் என்ற நம்பிக்கையில், நான் அநாதை என்று சொல்லிக்கொண்டு நாடகக் கம்பெனியில் போய்ச் சேர்ந்தேன். ஆகவே, கட்டபொம்மனை நான் இறந்தாலும் மறக்கமாட்டேன்.

கட்டபொம்மன் நாடக, திரைப்பட நினைவுகளெல்லாம் என் மனத்தில் பசுமரத்து ஆணிபோல் பதிந்துள்ளது. ஒருமுறை மூதறிஞர் ராஜாஜி, கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்துவிட்டு, இடைவேளையின்போது மயங்கிக் கீழே விழுந்துவிட்டார்.

நான் உடனே அவர் அருகே ஓடிச்சென்று, என்னவென்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஒன்றுமில்லை, கவலைப்படாதே! ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி கொண்டு வா’ என்றார். கொடுத்தேன், குடித்தார். ‘நாடகத்தை நடத்துங்கோ’ என்றார். கட்டபொம்மனை முழுவதுமாகப் பார்த்து ரசித்துவிட்டு,

‘சிவாஜி, கட்டபொம்மனாக நன்றாக நடிக்கிறான். நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துகளை இந்த நாடகம் மூலம் எடுத்துக் கூறுகின்றான். இதையெல்லாம் ஜீரணிப்பதற்கு உங்களுக்குத் திராணி இருக்கிறதா...?’ என்றார். அதை என்னால் மறக்கவே முடியாது.

வீரபாண்டிய கட்டபொம்மன் கதையில் வெள்ளையத்தேவன் என்றொரு ரோல் உள்ளது. அதில் முதலில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பதாக இருந்தது.

கட்டபொம்மன் தெலுங்கன்; மருது சகோதரர்கள் தமிழர்கள் என்று பேதம் காட்டி, ‘சிவகெங்கைச் சீமை’ படம் ஆரம்பமானதாக அப்போது பேசிக்கொண்டார்கள். ஆகவே, கட்டபொம்பனில் நடிக்க முடியாது என்று எஸ்.எஸ்.ஆர். கூறிவிட்டார்.

உடனே நான் ஒரு யோசனை செய்தேன். நடிகை சாவித்ரி அப்போது நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவர்களிடம் சென்று,

‘ஜெமினி கணேசனை இந்தப் படத்தில் நடிக்க என்னுடன் அனுப்பு. ஒரு அண்ணனுக்கு தங்கை ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றால், இதுபோன்ற நேரத்தில்தான் செய்ய வேண்டும்’ என்று சொன்னேன்.

சாவித்ரி எனக்குத் தங்கைபோல். தங்கமான மனசு! அப்போது பேறுகால நேரமாக இருந்தாலும்கூட, அதைப் பெரிதாகக் கருதாமல், தன் கணவன் ஜெமினி கணேசனை என்னுடன் அனுப்பிவைத்தார்கள்.

1959, மே 16-ல் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெளியானது. நான் ஏழு வயதில் கண்ட கட்டபொம்மன் கனவு, என்னுடைய முப்பது வயதில் பூர்த்தியானது.



கட்டபொம்மனை ஆசிய-ஆப்பிரிக்க திரைப்பட விருதுக்காக இந்திய அரசு தேர்வு செய்தது. அதிலும், சில முக்கியமான ஆட்கள் நுழைந்து, ‘போட்டியில் கட்டபொம்மன் கலந்துகொள்ளக்கூடாது’ என்று தடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். வேறு ஒரு படத்தையும் நகல் எடுத்து அனுப்பினார்கள். ஆனால், கட்டபொம்மன் மட்டுமே தகுதி உடையது என்று அதனையே அனுப்பிவைக்குமாறு சர்க்கார் கூறிவிட்டது.

அந்த விழாவுக்காக நான், பி.ஆர்.பந்துலு, பத்மினி ஆகியோர் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்குச் சென்றோம். கட்டபொம்மன் திரையிடப்பட்டது.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்கு பெஸ்ட் ஹீரோ, பெஸ்ட் மியூசிக் டைரக்டர், பெஸ்ட் டான்ஸர், பெஸ்ட் ஸ்டோரி அவார்டுகள் கிடைத்தன.

என்னை மேடைக்கு அழைத்தார்கள். எழுந்து சென்றேன். படத்தில் கட்டபொம்மனைப் பார்த்து, நான் ஆறடி அல்லது ஏழடி இருப்பேன் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் நான் ஐந்தடிதான் இருந்தேன்.

நான் மேடைக்குப் போனவுடன் எல்லோரும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் தொடர்ந்து கை தட்டினார்கள். எனக்கு அப்போது திடீரென்று மயக்கமே வந்துவிட்டது. கீழே விழ இருந்தேன். பக்கத்தில் நின்ற பத்மினி என்னைப் பிடித்துக்கொண்டார்.

அதிகக் குளிராக இருந்ததால், குளொஸ் கோட் அணிந்திருந்தேன். அதையும் மீறி பக்கெட்டிலிருந்து தண்ணீர் ஊற்றுவதுபோல் உடம்பெல்லாம் வியர்த்து வழிந்தது.

அவ்வளவு இன்ப அதிர்ச்சி! அத்தனை பெரிய பெருமை கிடைக்குமென்று நான் ஒரு போதும் நினைத்தது கிடையாது. எவ்வளவு ஆர்ட்டிஸ்டுகள் இருக்கிறார்கள். அவர்களில் எனக்கு பெஸ்ட் ஆர்ட்டிஸ்ட் அவார்ட் கிடைத்ததென்பது ஆண்டவன் அருளல்லவா? இப்பெருமை எல்லாம் என் குருவைத்தான் சேரும்.

விருது வழங்கும் விழாவில், எகிப்து அதிபர் நாசர் கலந்துகொள்ளவில்லை. சிரியா போயிருந்தார். விழா முடிந்ததும், நாசர் அவர்களின் வீட்டுக்குப் போனேன். நாசரின் மனைவியைச் சந்தித்தேன்.

‘அவர் கையால் விருது கொடுப்பதற்கு அவகாசம் இல்லை. நாசர் அவசர அவசரமாக சிரியா போய்விட்டார். அதிபரின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார் அம்மையார்.

‘மன்னிப்பு எதற்கு அம்மா. இந்தியாவுக்கு மிஸ்டர் நாசர் வந்தாரென்றால், என்னுடைய விருந்தாளியாகக் கொஞ்ச நேரமாவது இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதை மட்டும் அவரிடம் கூறி நிறைவேற்றி வையுங்கள்’ என்றேன்.

இறைவன் செயலால், எகிப்து அதிபர் நாசர் இந்தியாவுக்கு வந்தார். உடனே நான் நேருஜிக்குக் கடிதம் எழுதினேன். ‘மிஸ்டர் நாசர் சென்னை வரும்போது சிறிது நேரம் என்னுடனும், என் குடும்பத்துடனும் விருந்தாளியாகக் கலந்துகொள்ள வேண்டும்’ என்று வேண்டினேன்.

சென்னையில் சில்ரன் தியேட்டர் (கலைவாணர் அரங்கம்) முழுவதும் அழகாக அலங்காரம் செய்தோம். மகாத்மா காந்தியின் ஃபோட்டோக்களை ஒட்டினோம். ஒரு ஃபர்லாங் தூரம் ரெட் கார்பெட் போட்டோம். மூன்றரை லட்ச ரூபாய் செலவில் வெள்ளியில் ஒரு ஷீல்டை உருவாக்கினோம்.

சிதம்பரம் நடராஜர் சிலைக்கு இருபுறமும் எகிப்து நாட்டு பிரமிட் வடிவமும், தஞ்சாவூர் கோபுரத்தின் எழில் உருவமும், அவற்றின் இரு பக்கத்திலும் ஒரு யானை மற்றும் ஒட்டகச் சிற்பமும் வைத்தோம். ஆங்கிலத்தில் திருக்குறள் மற்றும் டெல்லியில் இருந்து ஒரு மவுல்வியை வரவழைத்து, அவர் எழுதித் தந்த அரபு மொழி வாசகங்களும் பொறிக்கப்பட்ட தங்கத் தகட்டையும் ஷீல்டில் பதித்து, நாசருக்குப் பரிசாக வழங்கினேன்.

அரசு அதிகாரிகள் இரண்டு மணி நேரம் ஒதுக்கி, நாசரை என்னுடன் விருந்தினராக அனுப்பிவைத்தனர். ஆனால் நாசர், என்னுடன் மூன்றரை மணி நேரம் இருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மனை கவுரவித்ததற்காக என் சார்பிலும், நம் நாட்டின் சார்பிலும் அவருக்கு நன்றியைத் தெரிவித்தோம்.’

*

ஆசிய-ஆப்பிரிக்கப் படவிழாவுக்கு, பந்துலு தலைமையேற்று தன் சொந்த செலவில் நடிகர் திலகம் - பத்மினி ஆகியோரை அழைத்துச் சென்றார். பரிசு பெற்றுத் திரும்பிய சிவாஜி கணேசனுக்கு, 1960, மார்ச் 12-ல் சென்னை விமான நிலையத்தில் மாபெரும் கோலாகல வரவேற்பை வழங்கியது கலை உலகம்.

வெளிநாட்டில் விருது பெற்றுத் திரும்பிய முதல் தமிழ்ப்படமான கட்டபொம்மனுக்கு, நமது டெல்லி சர்க்கார் வழங்கியது வெறும் நற்சான்றிதழ் பத்திரம்! அந்த ஆண்டுக்கான வெள்ளிப் பதக்கம், சிவாஜி கணேசனின் ‘பாகப்பிரிவினை’ படத்துக்குக் கிடைத்தது.

கயத்தாறில் கணேசன்!

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பகுதி கயத்தாறு. அங்கு, 1971 ஜூலையில், எங்கிருந்து பார்த்தாலும் தெரியுமாறு, மிக உயர்ந்த ஒரு பீடத்தில், கட்டபொம்மனுக்கு மிகப் பிரம்மாண்ட சிலை ஒன்றை அமைத்தார் நடிகர் திலகம். அதற்காக, தன் சொந்தப் பணத்தில் அங்கு 47 சென்ட் நிலம் வாங்கினார்.

சிலைத் திறப்பு விழா, நீலம் சஞ்சீவ ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கட்டபொம்மனின் சிலையை காமராஜர் திறந்துவைத்தார். எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். போன்று ஓரிருவர் தவிர, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகும் கயத்தாறில் கூடி, கட்டபொம்மனின் பெருமை பேசியது.

1999, அக்டோபர் 16-ல், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதன் 200-வது ஆண்டு நினைவு புகழாஞ்சலி விழா, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் கட்டபொம்மன் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. கட்டபொம்மன் தபால் தலை வெளிவரக் காரணமாக இருந்த வை.கோ. அதனைப் பெற்றுக்கொண்டார்.

அவ்விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் சிவாஜி கணேசன். அவர் பேசியதிலிருந்து -

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற மாபெரும் வீரன் தூக்கிலிடப்பட்ட இடம், தற்போது எனது சொத்தாகும். அந்த நிலத்தை என் நண்பராகிய கலைஞரிடம் கொடுக்கிறேன். அவர், தமிழக அரசு மூலம் அதைச் செம்மைப்படுத்தி, அதில் வருடந்தோறும் விழா நடத்த வேண்டும் என்று பணிவாகக் கேட்கிறேன்’.



தமிழக முதல்வர், தன் உரையில் -

‘இங்கே நம்முடைய செவாலியர் சிவாஜி விடுத்த வேண்டுகோளை, அருமைச் சகோதரரின் அன்புக் கட்டளையாக ஏற்றுக்கொண்டு, இன்றைக்கு இந்த விழாவை அரசின் சார்பில் நடத்திக்கொண்டிருக்கிறோம். கயத்தாறிலே சிவாஜியால் வைக்கப்பட்ட கட்டபொம்மன் சிலை இருக்கின்ற அந்த இடத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதியை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறேன் என்று தந்தார். பெற்றுக்கொண்டேன்.

வறண்டு காட்சி தருகின்ற அந்த இடத்தில் சிவாஜி எழுப்பியிருக்கின்ற, அந்த நீண்டு உயர்ந்த கம்பத்தின் உச்சியில் அமைந்திருக்கின்ற கட்டபொம்மன் சிலைக்கு மேலும் அழகு ஊட்டுகின்ற வகையில், அவர் தந்துள்ள அந்த இடத்தில், ஒரு அழகான பூஞ்சோலை அமைக்கப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்’.

*

பத்மினி பிக்சர்ஸின் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ உள்ளிட்ட அநேக படைப்புகளின் நெகடிவ் உரிமையைக்கூட பந்துலு தன் வசம் வைத்திருக்கவில்லை. பிரம்மாண்டத் தயாரிப்புகளுக்கு ஆகும் செலவினங்களுக்காக, அவற்றையும் சேர்த்தே விற்றுவிட்டார். கட்டபொம்மனின் ஒரிஜினல் நெகடிவ் சேதமாகிப் போனது.

பின்னர், பூனா திரைப்படக் கல்லூரியின் ஆவணக் காப்பகத்தில் இருந்த கட்டபொம்மனின் ஹிந்தி டப்பிங் பிரின்ட்டில் இருந்து (ஒலி நீக்கிய) டூப் நெகடிவ் போட்டு, இங்கிருந்த தமிழ்ப் படத்தின் நெகடிவ்வில் இருந்து ஒலி சேர்த்தார்கள்.

நாடகமாகவும் சினிமாவாகவும் கட்டபொம்மனை மக்கள் முன் சிவாஜி கணேசன் கொண்டுசெல்லாமல் இருந்திருந்தால், கட்டபொம்முவுக்கு இத்தகைய உலக வெளிச்சம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். மக்களால் நிறைய விடுதலை வீரர்கள் மறக்கப்பட்டதுபோல், கட்டபொம்முவும் காலாவதி ஆகியிருக்கக்கூடும்.

இரு வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்து மறைந்த கட்டபொம்மனையும் கணேசனையும் பிரிக்க இயலாதபடி, காலம் அவர்களை ஒரு சேரக் கட்டிப் போட்டுவிட்டது. இருவரின் புகழும் ஒரு கொடியில் இரு மலர்களாக என்றும் இணைந்தே வாசம் வீசும்!

ஒன்று நிஜம்! மற்றது நிழல். நிழலால் நிஜம், கலைக் கரூவூலம் ஆனது.

*

1984, ஆகஸ்டு 15-ல், மறு வெளியீட்டில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பல ஊர்களில் வெற்றிகரமாக 50 நாள்களைக் கடந்து ஓடியது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு, கட்டபொம்மனுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளித்தது. பல கோடி மக்கள், மிக மலிவான கட்டணத்தில் கண்டுகளிக்க வழி அமைத்தது.

ஒரு வேண்டுகோள்: மாவீரன் அழகு முத்துக்கோன், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், ம.பொ.சி. என, எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தலைநகர் சென்னையில் சிலை அமைந்துள்ளது. ஆனால், முதல் சுதந்தர முழக்கம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்குச் சிலை இல்லாதது வியப்பைத் தருகிறது; ஏமாற்றம் அளிக்கிறது.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில், பட்டொளி வீசிப் பறக்கும் நமது தேசியக் கொடியின் நிழலில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைத்தல் பொருத்தம். ஒவ்வோர் ஆண்டும் சுதந்தர தின விழாவில், கட்டபொம்மனுக்கு முதல் மாலை அணிவித்து விழாவைத் தொடங்குதல் சிறப்பாகும்.

மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள், இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரையில் உருவான வரலாறு! - பாகம் 1


‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரையில் உருவான வரலாறு! - பாகம் 1


Author: - பா. தீனதயாளன்

First Published: Aug 20, 2015 10:00 AM
Last Updated: Aug 20, 2015 11:13 AM

விழுப்புரம் சின்னையா கணேசனின் நடிப்பாற்றல் இந்திய எல்லைகளையும் கடந்து எகிப்தில் எதிரொலித்தது.


வீரபாண்டிய கட்டபொம்மன் படம், 1959-ம் ஆண்டு பி. ஆர். பந்துலுவின் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்து வெளிவந்து பெரும் வெற்றிபெற்றது. இந்தத் திரைப்படத்துக்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.

தற்போது, வீரபாண்டிய கட்டபொம்மன் படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் வருகிற 21-ம் தேதி வெளிவரவுள்ளது. அதை முன்னிட்டு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் திரையில் உருவான வரலாறு பற்றி எழுத்தாளர் பா. தீனதயாளன் இங்கே விவரிக்கிறார்.

***

விழுப்புரம் சின்னையா கணேசனின் நடிப்பாற்றல் இந்திய எல்லைகளையும் கடந்து எகிப்தில் எதிரொலித்தது.

கட்டபொம்முவின் சுதந்தர தாகம், விடுதலை உணர்வை மட்டுமல்லாது, ஆசியாவிலேயே மிகச்சிறந்த நடிகர் என்கிற கவுரவத்தை வி.சி. கணேசன் பெறவும் விதை ஊன்றியது.

அதோடு நின்றதா. அவருக்கு மத்திய சர்க்காரின் பத்மஸ்ரீ, பத்மபூஷண், தமிழ்த்திரை உலகில் முதல் தாதா சாஹிப் பால்கே விருது, பிரெஞ்சு அரசின் மிக உயரிய செவாலியே போன்ற பரிசுகளையும் பெற்றுத் தந்தது.

தென்னக பயாஸ்கோப் வரலாற்றில், எண்ணற்ற விதங்களில், வெற்றிகரமாகப் பிள்ளையார் சுழி போட்டவை நடிகர் திலகத்தின் படங்கள். அவற்றில் மிக முக்கியமானது, தமிழகத்தின் முதல் சரித்திரப் படைப்பான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.

அதுமட்டுமல்ல, மூவேந்தர்களில் (எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன்) இரண்டு கணேசன்களுக்கும் அதுவே முதல் வண்ணச்சித்திரம்! தமிழில் இரண்டாவது கலர் ஃபிலிம். லண்டனில் வண்ணப் பிரதி எடுக்கப்பட்ட முதல் தென்னிந்திய சினிமா. ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் டாக்கி. ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா...’ என்று ஜெமினி கணேசனுக்கு, பி.பி.ஸ்ரீனிவாஸ் முதன்முதலில் பின்னணி பாடியதும் கட்டபொம்மனில் ஒலித்தது.

ராஜராஜ சோழன் போன்றோ, அவரது மகன் ராஜேந்திர சோழன் மாதிரியோ, வாழும்போதே வரலாறாகி, உலகப் புகழ் பெற்றத் தமிழ்ச் சக்கரவர்த்தி அல்ல கட்டபொம்மு. கம்பள நாயக்கர்களின் பரம்பரையில் வந்தவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்.

விடுதலைப் போரில், தமிழ் மண்ணிலிருந்து ஓங்கி ஒலித்த முதல் முழக்கம் கட்டபொம்முவுடையது. குறு நில மன்னர் என்றுகூடச் சொல்ல முடியாது. வெள்ளையனுக்குக் கப்பம் கட்டாமல், பாஞ்சாலங்குறிச்சியைத் தன்னிச்சையாக ஆள நினைத்த மிகச் சிறிய பாளையக்காரர்.

மொழி பேதமற்ற சென்னை ராஜதானியில், வீதிதோறும் நடைபெற்றது கட்டபொம்மு தெருக்கூத்து. திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் அதைப் பார்த்த ஒரு சிறுவன், மெய்சிலிர்த்து சில நொடிகளில் அரிதாரம் பூசும் ஆர்வம் கொண்டான்.

‘பிஞ்சு மூளை - அதில் எழுந்த அந்த எண்ணம், அப்படியே என்னை அடிமையாக்கிக் கொண்டது. வெறிபிடித்த குரங்குக்கு ஒரு புண்ணும் உண்டாகிவிட்டால் என்ன கதியாகுமோ, அதேபோல் நான் பார்த்த கட்டபொம்மன் தெருக்கூத்து, என்னை கலைத் தொழிலுக்கே இழுத்து வந்துவிட்டது’ - சிவாஜி கணேசன்.



கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன், கட்டபொம்மு குறித்து, அவதூறாகப் பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். ரா.வே.யின் உதவியோடு டி.கே.எஸ். சகோதரர்கள் ‘முதல் முழக்கம்!’ என்ற பெயரில் கட்டபொம்முவின் கதையை நாடகமாக நடத்தினர். மிகக் குறுகிய காலம், சில ஊர்களில் மட்டும் முதல் முழக்கம் கேட்டது.

எஸ்.எஸ்.வாசன், ஆனந்தவிகடனில் கட்டபொம்மன் வாழ்க்கைத் தொடரை எழுதி வந்தார். ஜெமினியில் கட்டபொம்மனை சினிமாவாகத் தயாரிக்க ஆலோசனைகள் நடந்தன. அத்தகைய சூழ்நிலையில், சிவாஜி நாடக மன்றம் உதயமானது. அவர்களது முதல் படைப்பு, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.

‘கோவில்பட்டியில் நாடகம் ஒன்றை நடத்திவிட்டு, நானும் எனது ஆசான் சக்தி கிருஷ்ணசாமியும், கட்டபொம்மன் தூக்கில் தொங்கிய கயத்தாறு வழியாக திருநெல்வேலிக்கு காரில் போய்க்கொண்டிருந்தோம்.

ஆசானிடம் எனது வெகு நாளைய ஆசையைக் கூறி, கட்டபொம்மன் சரித்திரத்தை ஒரு சிறந்த நாடகமாக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்தினேன். ஒரு மாதத்தில் அவர் எழுதி முடித்ததும் உற்சாகமாக வாசித்தேன்.

நாடக அமைப்பு புதுமையாகவும், எழுத்து தரமாகவும் இருந்தது. எனது நீண்டகாலத் துடிப்புக்கு இரட்டிப்பு ஊக்கம் ஏற்பட்டது. நாடகம் உருவாக ஐம்பதாயிரம் செலவானது’ - நடிகர் திலகம்.

ம.பொ.சி.க்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படைப்பாக்கத்தில் மிக உன்னதப் பங்கு உண்டு. கட்டபொம்மன் நாடக அரங்கேற்றம், தமிழ் அறிஞர் மு.வரதராசனார் தலைமையில், 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி, புதன்கிழமை, சேலம் பொருட்காட்சியில் நடைபெற்றது.

எடுத்த எடுப்பிலேயே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, 1961 வரையில் நூறு முறைகளுக்கு மேல் நடைபெற்றது. அதன் மொத்த வசூல், கிட்டத்தட்ட 32 லட்சங்கள். அந்தத் தொகை, தமிழ்நாட்டின் கல்விப் பணிக்காக, ஏராளமான ஆரம்பப் பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் நடிகர் திலகத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

மூவேந்தர்களில் முதல் மரியாதைக்குரிய நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன், சுமார் இரண்டு டஜன் சினிமாக்களில், பல்வேறு புத்தம் புது மாறுபட்ட வேடங்களை இரவு பகலாக ஏற்று நடித்த நேரம் அது. தொடர்ந்து, கட்டபொம்மனாகவும் மேடையில் முரசு கொட்டித் தன்னை மிகவும் வருத்திக்கொண்டார்.

‘கட்டபொம்மன் நாடக வெறியினால் என் உடல் நிலையைக்கூடச் சரியாகக் கவனிக்காமல் நடித்து வந்தேன். வசனம் பேசிக்கொண்டிருக்கும்போதே சில சமயம் வாயில் இருந்து ரத்தம் குபுக் குபுக்கென வந்துகொண்டே இருக்கும். அதையும் பொருட்படுத்தாமல் நடித்துக்கொண்டே இருப்பேன். மூக்கிலும் வாயிலும் ரத்தம் கொட்டுவதைக் கண்டு, ஜனங்கள் ஐயோ ஐயோ என்று பதறுவார்கள்.

‘கட்டபொம்மனாக என்னுள் இருந்து வரும் சத்தமானது, அடி வயிற்றிலிருந்து வருகிறதா? இல்லை இதயத்திலிருந்து வருகிறதா என்று எனக்கே தெரியாது. சில சமயம், நாடகம் முடிந்தவுடன்கூட ரத்தம் கக்குவேன்’

நாடகத்துக்கு ஆனந்த விகடன் அளித்த விமரிசனம்:

‘வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்துக்கு சிவாஜி கணேசன் ஒருவரே பொருத்தமானவர் என நினைக்கும்படியாக அமைந்துவிட்டது அவர் நடையும், பேச்சும், எடுப்பான தோற்றமும். அவர் வாயால் ‘வீரவேல்! வெற்றிவேல்!’ என்று முழக்கம் செய்யும்போது, நாடகத்தைப் பார்க்கும் அத்தனை தமிழ் மக்களும் வீராவேசம் கொள்கின்றனர். நாடகம் முழுவதும் சிவாஜி கணேசனின் நடிப்பே உயிராக விளங்குகிறது.

கட்டபொம்முவுக்கு சிலை எங்கே, சிலை எங்கே என்று எல்லோரும் கேட்கும் இந்நாளில், சிலையை ஓரிடத்தில்தான் நாட்டலாம்; இதோ நான் கட்டபொம்மனை எல்லோருடைய சிந்தையிலும் நாட்டுகிறேன் என சிவாஜி கணேசன் எழுந்து விட்டார். ’

நடிகர் திலகத்தையும் கட்டபொம்மனையும் ஒரு சேர விண்ணில் உயர்த்தியது, ஆனந்த விகடன் விமரிசனம்.

*

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பூதுகூரு என்கிற சிற்றூரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணய்யா பந்துலு. சுருக்கமாக பி.ஆர்.பந்துலு. சென்னை, தம்பு செட்டித் தெருவில் ஆர்ய பாடசாலாவில் பயின்றவர்.

அங்கு, மகாகவி பாரதியாரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பந்துலுவுக்கு. பின்னாளில், தேசபக்தியூட்டும் சினிமாக்களை எடுக்க அவை தூண்டின. பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றியவர். நாடக ஆசை துரத்த, பிரம்பையும் சாக்பீஸையும் தூர வீசிவிட்டு, ஒப்பனை உலகுக்குள் நுழைந்தார்.

சென்னை சவுந்தர்ய மஹால். ‘சம்சார நவுகா’ நாடகம். அதில், தினந்தோறும் பி.ஆர்.பந்துலுவின் நடிப்பைப் பார்த்து பித்துப் பிடித்து நின்றார் ஓர் இளைஞர். அவரது மனசெல்லாம் மேடையிலேயே லயித்தது. சம்சார நவுகாவுக்கு நிரந்தர ரசிகராக மாறினார். அந்த இளைஞர், வி.சி.கணேசன்!

திண்டுக்கல்லில் சக்தி கிருஷ்ணசாமியின் ‘தோழன்’ நாடகம். டி.ஆர்.மகாலிங்கத்துக்கு அப்போது மவுசு அதிகம். அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டால், வசூல் குவியும் என்கிற சூழல். அவரை நாடகம் பார்க்க அழைத்தார் சக்தி கிருஷ்ணசாமி. மகாலிங்கம் மறுத்துவிட்டார்.

டி.ஆர்.மகாலிங்கத்தின் நாடகப் பொறுப்பாளர் மற்றும் காரியதரிசியாக இருந்தவர் பி.ஆர்.பந்துலு. பந்துலுவை அன்போடு அண்ணா என்பார் அம்பி என்கிற மகாலிங்கம். பந்துலு கிழித்த கோட்டைத் தாண்டாதவர். பந்துலு அவரை அரும்பாடுபட்டு வற்புறுத்தி, திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்றார்.

தோழனில் நடித்த வி.சி.கணேசனின் நடிப்பு, நடை, வசன உச்சரிப்பின் பேராற்றலைக் கண்டு மெய் மறந்தார்கள் இருவரும். பந்துலு எடுத்துக்கொடுக்க, வி.சி.கணேசனின் திறமையை மகாலிங்கம் மெச்சிப் பேசினார்.

சம்சார நவுகா கன்னடத்தில் படமானபோது, மிகச் சுலபமாக சினிமாவுக்குள் முத்திரை பதித்தார் பந்துலு. நீண்டகால அவஸ்தைகளுக்குப் பின், ‘பராசக்தி’யில் எடுத்த எடுப்பிலேயே கணேசனும் உச்சிக்குச் சென்றார். இருவரும் சினிமாவில் புகழ் பெற்றதும், தமிழில் கணேசனுக்காகவே பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் உருவானது. அங்கு உருவான பல படங்களின் கன்னட மூலங்களில் பந்துலு நாயகன். கணேசன், பந்துலுவை பி.ஆர்.பி. என்பார். பந்துலு, சிவாஜியை பிரதர் என்று அழைப்பார்.

‘தோழன் நாடகத்தில் கணேசனின் நடிப்பைப் பார்த்தது முதல், அவரையே என் சொந்தப் பட ஹீரோவாக தொடர்ந்து நடிக்கவைக்க முடிவு செய்துவிட்டேன். பத்மினி பிக்சர்ஸின் முதல் படைப்பு, ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’. ராகினிக்கும் அதுவே முதல் படம்.

ஏவி.எம்.மின் ‘வாழ்க்கை’யால் டி.ஆர்.ராமச்சந்திரனுக்குப் பெரும் புகழ் இருந்ததால், சிவாஜியைவிட அவருக்கு அதிகச் சம்பளம் கொடுத்தேன்.

நான் எவ்வளவு கொடுத்தாலும் கணேசன் திருப்தியாக ஏற்றுக்கொள்வார். இவ்வளவு தந்தாக வேண்டும் என அவர் என்னிடம் ஒருபோது கண்டித்துக் கேட்டதே கிடையாது.

‘தங்கமலை ரகசியம்’ படத்தின் பாதியிலேயே ப.நீலகண்டன் விலக, வேறு வழியின்றி அதில் நான் ஏராளமான பயத்தோடு முக்கால் பங்கு சினிமா டைரக்டர் ஆனேன்’ - பி.ஆர்.பந்துலு.

தோழன் நாடகம் ஏற்படுத்திய வலுவான அன்பு அஸ்திவாரத்தின் நல்விளைவே, செலுலாய்டில் கட்டபொம்மன் பதியக் காரணம்.

அநேக பிரம்மாண்டங்களுடன் வீரபாண்டிய கட்டபொம்மனை, பந்துலு படமாக்க வேண்டும் என்பது சிவாஜி கணேசனின் தீராத ஏக்கம். ராஜா அண்ணாமலை மன்றத்தில் கட்டபொம்மன் நாடகம் பார்க்க, பந்துலுவை சிறப்பு விருந்தினராக சிவாஜி அழைத்தார். தன் துணைவன் சிங்கமுத்துவோடு கட்டபொம்மனைப் பார்த்து மிரண்டார் பந்துலு.



நிஜ கட்டபொம்மனாகவே நடிகர் திலகம் கூடு விட்டு கூடு பாய்ந்திருந்ததைக் கண்டு, பரவசத்தின் உச்சிக்குச் சென்றார் பந்துலு.

மறுநாளே,


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்

பத்மினி பிக்சர்ஸ்

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’

கேவா கலர்




என்கிற முழுப்பக்க விளம்பரம் தினசரிகளில் வெளியானது. தமிழ்த் திரை உலகம் பரபரப்பில் வாயைப் பிளந்தது.

***

உடனடியாக, 1957 நவம்பர் 10-ம் தேதி, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ துவக்க விழா!

வெள்ளையனை விரட்டி அடித்ததிலும், தமிழக அரசியலிலும், திரைப்படத் தயாரிப்பிலும், பதிப்பகத் துறையிலும் பிரபலமானவர் சின்ன அண்ணாமலை. பி.ஆர்.பந்துலுவையும் ம.பொ.சி.யையும் தோழமை கொள்ளவைத்த பெருமை அவருக்கே உண்டு.

‘இந்தப் படம் உருவாக என்னைத் தூண்டியவர் நீங்கள்! இப்போது உங்கள் கரங்களால் குத்து விளக்கேற்ற வேண்டும். வாருங்கள்’ என்று சின்ன அண்ணாமலைக்கு பூரிப்போடு மாலை அணிவித்து வரவேற்றார் பந்துலு.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன், மிக்க பெருந்தன்மையோடு பந்துலுவை பாராட்டிப் பேசினார். ‘நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்; அவர் எடுத்துக்கொண்டிருக்கிறார்’.

கோல்டன் ஸ்டுடியோவில், ‘வெற்றி வடிவேலனே...’ என்ற பாடல் காட்சி முதன்முதலாகப் படமாக்கப்பட்டது.

பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஏ டூ இஸட் - சிங்கமுத்து. இயக்கத்தில், பந்துலுவின் முதல் சகா. சிங்கமுத்துவைக் கலந்து பேசாமல், பந்துலு கணப்பொழுதும் பணியாற்றியது கிடையாது.

எம்.ஜி.ஆரே ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களது தொழில் நெருக்கம் இருந்தது. தன்னிடம் வந்துவிடுமாறு எம்.ஜி.ஆர். அழைத்தும், பந்துலுவின் மீது கொண்ட மாறாத பாசத்தின் காரணமாக, பந்துலுவின் நிழலாகக் கடைசி நொடி வரை வாழ்ந்தவர் சிங்கமுத்து. பந்துலுவின் ஒவ்வொரு நகர்விலும் சிங்கமுத்துவின் தீர்மானமும், வியர்வையும், கடின உழைப்பும் உயிராகக் கலந்திருக்கும்.

கட்டபொம்மன் குறித்த சிங்கமுத்துவின் பரவசமூட்டும் அனுபவங்கள் -

‘கட்டபொம்மனில் முதல் வசனக் காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தோம்.

ஏ.கருணாநிதி, ‘வெள்ளைக்காரர்களிடம் எட்டப்பன் நம்மைக் காட்டிக்கொடுக்கிறான்’ என்பது மாதிரியாக டயலாக் சொல்வார்.

அதற்கு சிவாஜி, ‘அமுதமும் விஷமும் ஒரே இடத்தில்தான் விளைகிறது. கட்டபொம்மனும் எட்டப்பனும் ஒரே மண்ணில்தான் பிறந்தார்கள்’ என்று வசனம் பேசிவிட்டு, போர்... போர்... என முழக்கமிடுவார்.

நடிகர் திலகத்தை ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’, ‘முதல் தேதி’, ‘சபாஷ் மீனா’, ’தங்கமலை ரகசியம்’ போன்று பல படங்களில் பார்த்துக் கூடவே இருந்து பழகியவன் நான். அதுவரையில் நான் பார்த்த சிவாஜி வேறு.

கணேசன் உணர்ச்சிகரமாக வசனம் பேசி போர் முழக்கமிட்டபோது நான் ஆடிப்போய்விட்டேன். ஏ.கருணாநிதி, பிரளயம் வந்ததுபோல் உணர்ந்தார். செட்டில் பரிபூரண அமைதி. நிஜமாகவே போர் முரசு கொட்டி, கோல்டன் ஸ்டுடியோவுக்குள்ளேயே சண்டை துவங்கிவிட்டது போன்ற பிரமை.

அப்படிக்கூட ஒரு மனிதரால் நடிக்கமுடியுமா...!’

*

பரணி ஸ்டுடியோவில் கட்டபொம்மனின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. சிவாஜி தூக்கிலிடப்படும் காட்சி. அப்போதும் கம்பீரமாக கணேசன் நடந்துவந்ததைக் கண்டு, துணை நடிகர்கள் வாய் விட்டு அழுதார்கள்.

தமிழின் முதல் கலர் படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் பணியாற்றிய கேமராமேன் சுப்பாராவ். பந்துலுவின் பால்ய நண்பர். தோழமையோடு, அவரையே கட்டபொம்மனுக்கும் அழைத்துவந்தார் பந்துலு.

பந்துலு எப்போதும் தன்னுடைய படத்தின் ரிலீஸ் தேதியை முன்னமே அறிவித்துவிடுவார். கட்டபொம்மனுக்கும் அப்படியே நடந்தது. ஆனால், இந்தியாவில் கலர் ஃபிலிம் ஸ்டாக் இல்லை என்றார்கள். பந்துலு உடனே தனது பங்குதாரரான சித்ரா கிருஷ்ணசாமியை லண்டனுக்கு அனுப்பி, கட்டபொம்மனுக்கு பிரிண்ட் போட்டு, சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டார்.

‘முழு நீள கேவா கலரில் தயாரித்து, டெக்னிக் கலராக ஆக்கப்பட்டிருக்கிறது’ என்ற வாசகத்தை, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பட ரிலீஸ் விளம்பரங்களில் காணலாம்.

மேக் அப் ரூமிலேயே முழு கேரக்டராக வெளிப்பட்டு, செட்டுக்கு போகும் உன்னதமான கலைஞன், சிவாஜி. சிவாஜியோடு இதிகாச, வரலாற்றுப் படங்களின் சகாப்தம் முற்றுப் பெற்றது என்றே சொல்லலாம்.

பி.ஆர்.பந்துலு, நேருக்கு நேர் நின்று பார்த்து மெய் சிலிர்த்த அனுபவம் இதோ -

கட்டபொம்மு குதிரை மீது ஏறி, வெள்ளையர்களை எதிர்த்து சமர் புரியும் தன் வீரர்களுக்கு உற்சாகமளித்து, உடன் போரிடும் காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தோம்.

ஒரு வெள்ளைக் குதிரை மீது நடிகர் திலகம் உட்கார்ந்திருந்தார். காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, உண்மையிலேயே சில வெடிகளை வெடிக்கச் செய்ய இருந்தோம். எனவே, ‘சண்டை நடக்கும் மையமான இடத்துக்குப் போய்விடாதீர்கள். ரொம்ப ஆபத்து அது’ என்று அவரிடம் கூறினோம்.

என்ன காரணமோ தெரியவில்லை. சிவாஜி ஏறிவந்த குதிரை, நிஜமாகவே நாலு கால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார் கணேசன். அந்தச் சமயத்தில், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும்தான் தாமதம், குதிரை தலை கால் புரியாமல், நாங்கள் எங்கு போக வேண்டாம் என்று எச்சரித்திருந்தோமோ அங்கேயே சிவாஜியைக் கொண்டு நிறுத்திவிட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவாஜி சிக்கிக்கொண்டாரே என்று என் மனம் பட்ட வேதனையைச் சொல்லி முடியாது. எங்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. குதிரையிலிருந்து அவர் உருண்டு விழுந்துவிட்டார் என்றே நினைத்தோம். நானும் மற்றவர்களும் கணேசன் இருந்த இடத்தை நோக்கி ஓடினோம்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, கை கால்கள் எல்லாம் ரத்தம் வழிய வழிய, ‘ஷாட் நன்றாக வந்ததா’ என்று கேட்டார் நடிகர் திலகம்.

‘இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் காட்சி; என் ஒருவனால் ஷாட் வீணாகக்கூடாது; மறுபடியும் எடுப்பதென்றால் எவ்வளவு சிரமம்?’ என்றார்.’

கோட்டைகளும் மிகப்பெரிய மாளிகைகளும் நிறைந்த ஜெய்ப்பூரில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ஷூட்டிங் நடந்தது. ஹோட்டலாக மாறிவிட்ட ஜெய்ப்பூர் சமஸ்தான ‘ராம்வாக்’ மாளிகையில், பொதுமக்களுக்குக் கட்டபொம்மன் பேட்டி அளிப்பதையும், ஜாக்ஸன் துரையைப் பார்க்கக் கிளம்புவதையும் படமாக்கினார்கள்.

கட்டபொம்மன் படத்துக்கு லண்டன் - பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டில் விசேஷக் காட்சி நடைபெற்றது. அதில் அப்போதைய இந்தியத் தூதர் விஜயலட்சுமி பண்டிட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

*

ஆனந்த விகடன் (மே 24, 1959) தனது விமரிசனத்தில், கட்டபொம்மனுக்கு வரலாறு காணாத பாராட்டை வாரி வழங்கியது. கத்திரி வெப்பத்தைத் தணிக்கும் பன்னீர்த் தெளிப்பு அதன் ஒவ்வொரு பத்தியிலும்.

‘மாணிக்கம் - என்னிக்கி கட்டபொம்மன் படமாக வரும் என்று காத்திருந்தேன் அண்ணே. முதல் முழக்கம் செய்த தமிழ் மகனுடைய படம். தமிழிலே முதல் சரித்திரப் படம். முதல் காட்சியிலேயே அதை நான் பார்க்காம இருப்பேனா? அதிலும் சிவாஜி நடிப்பு இருக்கே...

முனுசாமி - ஒண்ணும் சொல்லாதே தம்பி!

மாணிக்கம் - ஏன் அண்ணே?

முனுசாமி - அவர் நடிப்பைப் பற்றி இனி யாரும் புகழ வேண்டிய அவசியம் கிடையாது. அவரே ஒரு தனிப்பிறவி தம்பி.

மாணிக்கம் - அண்ணே, இந்தப் படத்தில் இரண்டு மூணு இடங்களைப் பத்தி சொல்லாம இருக்க முடியாது! உள்ளத்தை உருக்குது. கண்ணீரைப் பெருக்குது. வீர உணர்ச்சி பொங்கி ஆவேசம் வருது. கட்டபொம்மன் பிறந்த நாட்டிலே நாமும் பிறந்திருக்கிறோம்னு பெருமை உண்டாகுது.

கட்டபொம்மன் பார்த்தவர்கள் நெஞ்சை விட்டு நீங்காத படம். சிவாஜி கணேசன் அப்படி நடிச்சிருக்காரு. இது தமிழனுக்கே பெருமை தரும் படம்.’

சென்னையில் ரோந்து பணிக்கு 135 மாருதி ஜிப்சி களம் இறங்கியது!

சென்னை: சென்னை பெருநகர காவல்துறையினரின் ரோந்து பணிக்கு 8 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட  135 புதிய மாருதி ஜிப்சி  வாகனங்களை, முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். 
 
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம்  ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கியப் பணிகளை காவல் துறை ஆற்றி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையினர் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாக ஆற்றும் வகையில், புதிய காவல் நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

சென்னை மாநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக 225 இன்னோவா மற்றும் பொலிரோ ரோந்து வாகனங்களையும், 403 இருசக்கர ரோந்து வாகனங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே வழங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகரின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறையினர் ரோந்து பணிகளை மேற்கொள்ள குறுகிய சக்கர அமைப்பு கொண்ட 135 வாகனங்கள் வழங்கப்படும் முதலமைச்சர் சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையினரின் ரோந்துப் பணிக்கு 8 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 135 புதிய மாருதி ஜிப்சி வாகனங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இப்புதிய மாருதி ஜிப்சி ரோந்து வாகனங்களில் நவீன மின்னணு அறிவிப்பு பலகைகள், தொலைத் தொடர்பு கருவிகள் மற்றும் இதர நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

135 மாருதி ஜிப்சி ரோந்து வாகனங்களுடன் சேர்த்து சென்னை பெருநகர காவல்துறையில் தற்போது 360 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும், 403 இருசக்கர ரோந்து வாகனங்களும் செயல்பாட்டில் உள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.

Thursday, August 20, 2015

ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்களும் ராணுவ கேன்டீனில் பொருட்கள் வாங்க அனுமதி: தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பேர் பயனடைவர்

பாதுகாப்புத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்களும் ராணுவ கேன்டீன்களில் (சிஎஸ்டி) பொருட்களை வாங்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் பயனடைவர்.

பாதுகாப்புத் துறையில் பணி புரியும் வீரர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தாங்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களை சந் தையை விலையை விட குறைந்த விலையில் வழங்குவதற்காக 1948-ம் ஆண்டு ‘சிஎஸ்டி கேன் டீன்’ (CSD-Canteen Stores Department) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. சாதாரண சோப் முதல் ஆடம்பரமான கார் வரையிலான 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் 34 இடங்களில் கிடங்குகள் (டெப்போ) உள்ளன.

இந்த கேன்டீனில் பாதுகாப்பு படை வீரர்கள் தவிர பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் சிவில் ஊழியர்களும், பொருட்களை வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்த கேன்டீனில் பொருட்களை வாங்க ‘ஸ்மார்ட் கார்டு’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பணியில் இருப்ப வர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.5,000-ம் வரை மதிப்பிலான பொருட்களை மட்டுமே வாங்க முடியும். மேலும், பாதுகாப்புத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்களுக்கு பொருட்களை வாங்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் அவர்களுக்கு ராணுவ கேன்டீனில் பொருட்களை வாங்கி அனுமதி அளித்து மத்திய பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, ராணுவ தளவாட தொழிற்சாலை மற்றும் அதன் சார்பு நிறுவனங்களின் ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.கஜபதி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பாதுகாப்புத் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கு குறைந்த விலையில் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் முதல் அனைத்து பொருட்களும் சந்தை விலையை விட சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை குறைத்து ராணுவ கேன்டீனில் விற்கப்படுகின்றன. இதனால், இங்கு விற்கப்படும் பொருட்களுக்கு எப்போதும் கிராக்கி உள்ளது. ‘ஸ்மார்ட் கார்டு’ கொண்டு வந்த பிறகு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ராணுவ கேன்டீனில் பொருட்களை வழங்க அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து, நாங்கள் பாது காப்புத் துறை அமைச்சகத்துக்கு பலமுறை கோரிக்கை மனுக்களை அனுப்பினோம். எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்தோம்.

இதையடுத்து, எங்கள் கோரிக் கையை பரிசீலித்த பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடந்த மாதம் 31-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்களுக்கும் ராணுவ கேன்டீனில் பொருட்களை வாங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் சிவில் ஊழியர்கள் 50 ஆயிரம் பேர் பயனடைவர். நாடு முழுவதும் 15 லட்சம் பேர் பயனடைவர் என்றார்.

Indiana Zones - Denied copy sheet, students inflict cuts on themselves

Indiana Zones - Denied copy sheet, students inflict cuts on themselves

Ankit Yadav

Bareilly
TNN

In a bizarre incident, a group of students pursuing paramedical course from a local college boycotted examinations alleging that the institute officials “were not providing them cheating material unlike in past years“. A batch of students not only refused to write their exam, but also inflicted cuts on themselves in protest. One of them even tried to hang himself in desperation.

After the 60-odd students from Keshlata Institute of Paramedical Sciences created the ruckus at their examination centre in Rohilkhand Medical College (RMC), college authorities called police to pacify the angry bunch.

According to police, college authorities asked the agitating students to leave the RMC premises and told them that their exam stood cancelled. However, they returned to their college and continued their protests. As a few of them inflicted cuts on themselves and one even tried to hang himself on the campus, police were called to control the situation. The examination was rescheduled and had to be conduct ed in the late-night hours.

One of the students, who did not wish to be named, said, “Last year, too, students were facilitated with cheating material inside the examhall. We were de manding the same. Staff members rarely taught us and notes downloaded from the internet were distributed among us. Teachers did not even bother to complete our syllabus.“

For the full report, log on to http:www.timesofindia.com

UGC directive on distance edu units triggers debate

The University Grants Commission's (UGC) order asking universities to shut down distance education centres outside their respective states has set off a debate. While some have accepted its decision, others dispute the notice stating that the norms have not been accepted by Tamil Nadu government. The varsities in TN which may be affected by the order include Madurai Kamaraj University , Tamil Nadu Open University and Bharathidasan University .

Last week, UGC issued a notice stating that it has received complaints on state universities running distance education centres outside their state of origin.The UGC said that all universities should close down their distance education centres that are outside their territorial jurisdiction. A senior official in the UGC told TOI, “There are four state universities in Tamil Nadu that we have found to have been running such centres. We expect them to close these centres and stop admissions into any of the courses offered by the university through these courses for 2015-16.“

The UGC in its letter to the registrar of Bharathidasan University , Trichy (copy is with TOI), pointed out that the university is operating 21 study centres outside the state and 10 centres abroad which is against UGC guidelines.

“The Madurai Kamaraj University has stopped issuing applications for courses in its centres outside the state,“ said the director of distance education, J Balan.

However, Alagappa University , Karaikudi officials seem to differ in opinion. “Unless the UGC norms is adopted by the state government there is no need to follow it. Our degrees are valid as the distance education bureau of the UGC approved the courses for the 2015-16 academic year,“ said registrar, V Manickavasagam.

Academics seem to agree with Alagappa University's opinion. “The Centre talks about allowing foreign universities to establish centres in India. But it wants to prevent state universities from functioning outside the state,“ said an academician K Pandian.

எம்.ஜி.ஆர் எனும் காளையை அடக்கிய தேவர்!



அது எம்.ஜி.ஆர் சூப்பர் ஸ்டாராக உச்சத்தில் இருந்த நேரம். விலங்குகளையும் முக்கிய கதாபாத்திரமாக வைத்து படங்களைத் தயாரித்து வந்த சாண்டோ சின்னப்பா தேவர் தனது ‘தண்டபாணி பிலிம்ஸ்’ என்ற பட நிறுவனத்தை ‘தேவர் பிலிம்ஸ்’ என்ற தன் சொந்தப்பெயரில் ‘தாய்க்கு பின் தாரம்’ படத்தை முதன்முதலாகத் தயாரித்துக் கொண்டிருந்தார்.

பண்ணையார் பாலைய்யாவின் காளையை ஜல்லிக்கட்டில் அடக்கி பானுமதியை கரம்பற்றுவது போன்ற காட்சி. எம்.ஜி.ஆர் காளையை அடக்குவது போன்ற 50 ஷாட்டுகள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்படாமல் பாக்கியிருந்தது. படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் மோதும் காளைக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் தேவர். காளைக்கு பயிற்சி முடிந்ததும் ஜல்லிக்கட்டுக் காட்சியில் நடித்துத் தருவதாக எம்.ஜி.ஆர் கூறியிருந்தார்.

ஆனால் எம்.ஜி.ஆரை வைத்து உங்களால் ஜல்லிக்கட்டு காட்சியை எடுக்க முடியாது என்று எச்சரிக்கை செய்தார் அந்தப் படத்தின் இன்னொரு பங்குதாரராக இருந்த தயாரிப்பாளர். தேவர் "அண்ணே யாரு உங்க படத்துல ஹீரோ?" "எம்.ஜி.ஆர்." "நல்ல ஆளுண்ணே நீங்க. மொத மொதலாப் படம் எடுக்கறீங்க. ஒழுங்கா வேல நடக்க வேணாமா?" "ஏம்ப்பா, எம்.ஜி.ஆர். உனக்கென்ன கெடுதல் செஞ்சார்?" - கோபத்தோடு சின்னப்பா தேவர் கேட்டார். சக தயாரிப்பாளர் அசரவே இல்லை. "அண்ணே நான் சொல்றேன்னு தப்பா எண்ணாதீங்க. நீங்க எம்.ஜி.ஆர். காளையை அடக்குற மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படறீங்க. இன்னும் எம்.ஜி.ஆரை நீங்க சரியாப் புரிஞ்சிக்கிடவே இல்ல. அவர் வரவே மாட்டார்." தேவர் பேசாமலிருந்தார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான நட்பைப் பற்றித் தெரியாத அந்த சக தயாரிப்பாளர், "வரேங்க’" என்றபடி காரில் ஏறினார்.

எம்.ஜி.ஆர். மீதான குற்றச்சாட்டுகள் நெருப்பாகப் பரவியிருந்தன. எல்லோருமே குறை கூறினர். தயாரிப்பாளர்களோடு ஒத்துழைப்பது குறைவு. எம்.ஜி.ஆர். தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அவரால் படங்கள் வெளிவருவது தாமதமாகிறது. அதற்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். ஒழுங்காக பக்தியோடு தொழில் செய்தவர், நாத்திகவாதிகளுடன் சேர்ந்து நாசமாகி விட்டார் என்பது போன்ற செய்திகள் எம்.ஜி.ஆரின் இமேஜைப் பாதித்தன. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் 'அல்லா மீது ஆணையாக' என்ற வசனத்தைப் பேச மறுத்தார். அதை ‘அம்மா மீது ஆணையாக’ என்று மாற்றித் தரும்படி வசனகர்த்தா ஏ.எல். நாராயணனை வலியுறுத்தினார்.

முதலாளி டி.ஆர்.எஸ், "டயலாக் என்ன இருக்கோ, அதையே பேசு ராமச்சந்திரா" என்று உத்தரவே போட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். ஷூட்டிங்குக்கு தொடர்ந்து போகவில்லை. அவர் இல்லாமலேயே ஒரு சண்டைக் காட்சியையும் பாட்டு சீனையும் எடுத்து டி.ஆர்.எஸ். படத்தை முடித்தார். எம்.ஜி.ஆர். மீண்டும் சேலம் சென்றார். "ராமச்சந்திரா படத்தை ஒரு தடவை பார்த்துட்டுப் போ" என்று வழியனுப்பினார் டி.ஆர்.எஸ். கரடிமுத்து என்கிற நகைச்சுவை நடிகர், எம்.ஜி.ஆருக்கு பதிலாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். அதிசயித்தபடி வெளியே வந்தார். அவருக்கே அசலையும் பதிலியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

குற்றச்சாட்டுகள் எதையும் தேவர் பொருட்படுத்தவில்லை. எம்.ஜி.ஆரை நம்பினார். 1956 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ஆண்டாக இருந்தது. அதனாலேயே தாய்க்குப் பின் தாரம் படத்தையும் மிகுந்த அக்கறையோடு தயாரித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்காகவே சண்டைக் காட்சிகள் அதிகம் புகுத்தப்பட்டன. ஷூட்டிங் முடிய ஒரு ஷெட்யூல் மட்டுமே பாக்கி. தேவர் உற்சாக நடை போட்டார். மருதமலை முருகன் அருளால் படம் நல்லபடியாகவே தயாராகி விட்டது

. காளைச் சண்டையை காமிராவில் பிடித்து விட்டால் வியாபாரம் முடிந்த மாதிரி. எம்.ஜி.ஆரிடம் பேசினார் தேவர். "அண்ணே! உங்க தேதிக்கு காத்துக்கிட்டு இருக்கேன். வாகினில செட் தயார். வந்து பார்க்கறீங்களா? பெரிய மைதானம். போதுமா சொல்லுங்க. வர்ற தை அமாவசை அன்னிக்கு வேலையை ஆரம்பிச்சாப் பரவாயில்லயா?" "காளைக்கு நல்லா ட்ரெயினிங் கொடுத்தாச்சா?" - எம்.ஜி.ஆர். கேட்டார். "நீங்க அச்சப்படற மாதிரி விட்டுடுவேனா?" "பயமா, எனக்கா?" "இல்லண்ணே ஒரு பேச்சுக்கு…" தேவருக்குச் சட்டென்று மனத்துக்குள் சிநேகித நூல் அறுவது போலிருந்தது. எம்.ஜி.ஆரின் உரையாடலும் நடவடிக்கையும் தட்டிக் கழிப்பதாகத் தெரிகிறதே. ஒழுங்காக முடித்துக்கொடுக்க மாட்டாரா? எல்லோரும் சொன்னதெல்லாம் அனுபவித்து அவஸ்தையுற்று வெளியிட்ட சத்திய வார்த்தைகள்தானா? என் எம்.ஜி.ஆர். இல்லையா இவர்? தேவர், எம்.ஜி.ஆரை ஏறிட்டு நோக்கினார். மகிழ்ச்சி போனது. எனக்கு பதில் சொல்லிட்டுப் போ என்கிற பிடிவாதமும் மிரட்டலும்

கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தன. "அண்ணே…" "என் கால்ஷீட்டை இப்பப் பெரியவருதான் பார்க்குறாரு. நீங்க சக்ரபாணி அண்ணனைக் கேளுங்க" - எம்.ஜி.ஆர். சொன்னார். "தாய்க்குப் பின் தாரத்துல சக்ரபாணி கிடையாதே. நான் எதுக்கு அவருகிட்டப் பேசணும்." - தேவர் சூடானார். "புரிஞ்சுக்குங்க அண்ணே. எல்லா முதலாளிகளும் அண்ணன்கிட்டதான் பேசறாங்க. எனக்கு அவரு சொன்னா ஓகே. ஒரே குடும்பமா வாழறோம். பெரியவங்க வார்த்தையை மீற விரும்பல."

தேவர் அமைதியாக வெளியேறி விட்டார். தேவர் பிலிம்ஸின் முதல் தயாரிப்பான தாய்க்குப் பின் தாரமே தேவருக்குச் சுளையாக முப்பதாயிரம் ரூபாயை லாபப் பங்காக அளித்தது. சொந்த சினிமா முயற்சி வெற்றி பெறாவிட்டால் தேவர் பிறந்த ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது பேனரில் தாய்க்குப் பின் தாரம் அள்ளிய வசூலை வேறு எந்தப் படமும் பெறவில்லை. எம்.ஜி.ஆர். தேவரைச் சந்தித்தார். தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினார். "அடுத்த ரிலீஸ் எப்ப அண்ணே?" என்றார் ஜாலியாக. "பார்க்கலாம்’"தேவர் சுருக்கமாக முடித்துக் கொண்டார். "மனசுல எதையும் வெச்சுக்காதீங்கண்ணே. நீங்களே என்னைப் புரிஞ்சுக்கலண்ணா வேறு யார் கிட்டப் போய் நிக்குறது?" எம்.ஜி.ஆர். இறங்கி வந்தார். தேவர் பிடி கொடுக்கவில்லை.

தாய்க்குப் பின் தாரம் தெலுங்கும் பேசியது. எம்.ஜி.ஆர். வீறுகொண்டு எழுந்தார். "யாரைக் கேட்டுப் படத்தை டப் செய்தீர்கள். எனக்கு எப்படி இன்னொருவன் குரல் கொடுக்கலாம்?" விளக்கங்கள் கேட்டு வக்கீல் நோட்டீஸ் பறந்தது தேவர் பிலிம்ஸுக்கு. அலறியடித்துக் கொண்டு வாகினியில் நின்றார் தேவர். அதன் அதிபர்களில் ஒருவரான சக்ரபாணி சிநேகமாகச் சிரித்தார். தேவர் வசமிருந்த வழக்கறிஞரின் ஓலையை வாங்கி வாசித்துப் பார்த்தார். நாகிரெட்டி ஓடி வந்தார். அவரும் படித்துப் பார்த்து விட்டு கலகலப்பானார். சக்ரபாணி, எம்.ஜி.ஆருக்குத் தக்கபடி பதிலடி கொடுத்தார். "காளையை நீங்கள் நிஜமாகவே அடக்கவில்லை. உங்களது டூப்தான் மோதி வெற்றி பெற்றார். ஆனால் அதற்கும் சேர்த்து ஊதியம் பெற்றுக் கொண்டீர்கள். உண்மையில் அக்கறையோடு நீங்களே மாட்டை வென்றிருந்தால் இன்னும் எங்களுக்கு வசூல் அதிகரித்திருக்கும். அதற்கான நஷ்டத்தை உங்களிடம் இருந்தே பெற விரும்புகிறோம்." தமிழ்சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.ஜி.ஆர்.அடங்கிப் போய்விட்டார். அந்தக் காளையை அடக்கியவர் சாண்டோ சின்னப்பா தேவர்.

Wednesday, August 19, 2015

Now, dental council inspections on video




Move comes after complaints pour in of inappropriate conduct by expert team

When a dental college applies for permission, the Dental Council of India (DCI) sends an expert team to study various parameters including infrastructure and faculty members and files a report. The report will be the basis for the executive council to grant permission. However now, all inspection teams need to ensure that the proceedings are videographed and this will be the basis for the executive council to give its nod for both new colleges as well as an enhanced intake. With the council receiving a number of complaints over the expert team's conduct, videography has been made mandatory. The new rules have been incorporated in the latest DCI amendments, according to DCI's officiating secretary Col (retired) Dr S K Ojha.


The amendments also bring in a host of tough measures for inspection. "The inspection should be strictly confidential and the whole inspection should necessarily be videographed and also viewed by the executive council members. The council inspectors/visitors must sign an undertaking with regard to legal/criminal action against him/her if found indulging in any kind of corrupt practices. If any false affidavit is submitted by any faculty, action would be initiated for cancellation of his/her registration and legal/criminal action may also be initiated. The dental colleges should normally be given one opportunity for compliance in respect of their deficiencies. Doctors from defence services, those who are active teachers, should also be appointed as council's inspectors," the amendments mentioned.

The amendments were long due especially after the Comptroller and Auditor General Report of 2012 had opened up a can of worms on the DCI's functioning. The report had said that the DCI was required to undertake periodical inspections of colleges to ensure continued maintenance of minimum standards of dental education. However, the DCI had not put in place any system to identify the dental institutions which were due for such periodic inspections and thus couldn't conduct them in time.

Tuesday, August 18, 2015

கண்டசாலா” என்றழைக்கப்படும் கண்டசாலா வெங்கடேஸ்வரராவ்



வந்தாரை வாழ வைக்கும் நம் தமிழகம் திறமை பெற்றவர்கள் எங்கிருந்தாலும், எந்தத்துறையில் இருந்தாலும் தேடிப்பிடித்து அவர்களைப் புகழேணியின் உச்சிக்குக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு சரியான ஓர் எடுத்துக்காட்டு “கண்டசாலா” என்றழைக்கப்படும் கண்டசாலா வெங்கடேஸ்வரராவ் ஆகும்.

நம் தமிழ் மாநிலத்தின் அண்டை மாநிலமாகிய ஆந்திரப் பிரதேசத்தின் திரைப்படப் பின்னணி வரலாற்றில் கொடிகட்டிப் பறந்த கண்டசாலா அவர்கள் 1973 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப்படங்களில் பின்னணி பாடி ரசிகப்பெருமக்களை வெகுவாக ஈர்த்திருக்கிறார்.
ஆந்திரா மாநிலத்திலுள்ள குடிவாடா மாவட்டத்தில் அமைந்திருக்கும் சௌட்டா பள்ளி என்ற சிற்றூரில் வறுமை மிக்க பிராமணக் குடும்பம் ஒன்றில் 04.12.1922 அன்று பிறந்தார்.

சிறு வயதிலேயே தமது தந்தை சூரய்யா அவர்களை இழந்த கண்டசாலாவுக்கு அவரது தாய்மாமா ரய்யாளி பிச்சி ராமய்யாவின் ஆதரவு கிடைத்தது. தந்தை உயிருடன் இருக்கும் போதே “தரங்கங்கள்“ என்று சொல்லக்கூடிய ஒரு வகை இசையமைப்பில் நடனம் ஆடியும் ஹரிகதா காலட்சேபங்களில் அவருடன் பங்கேற்றும், இருக்கிறார். பிற்காலத்தில் தான் ஒரு இசைக் கலைஞனாக ஆகியே தீர வேண்டும் என்ற வெறி இவரின் ஆழ் மனத்தில் பதிந்து விட்டிருந்தபடியால் யாருக்கும் தெரியாமல் பத்ரயானி சீதாராம சாஸ்திரியிடம் இசை கற்றுக் கொண்டது போக, மேலும் தடங்கல்கள் பலவற்றைக் கடந்து விஜயநகரம் சென்று இசைக்கலையில் தேர்ந்து “சங்கீத வித்வான்“ பட்டத்தைப் பெற்றார்.

1942-ல் “வெள்ளையனே வெளியேறு“ (Q U IT IN D IA M O V E M E N T) என்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கண்டசாலா அவர்கள் ஈடுபட்டு 18 மாதகாலம் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். சிறையிலிருந்து வெளியேறிய பின் சீனியர் சமுத்ராலா ராகவாச்சார்யாவின் நட்பு கிடைத்ததால் திரைப்படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பைப் பெற எண்ணினார். புகழ்பெற்ற இசைத்தட்டு நிறுவனமாகிய ஹெச்.எம்.வி. (H.. M .V ) முதலில் இவரை நிராகரித்து விட்டது. ஆனாலும் இவர் மனம் கோணாமல் அகில இந்திய வானொலியில் பாடும் வாய்ப்பைப் பெற்றார். பிறகு அதே ஹெச்.எம்.வி. நிறுவனம், பெக்கட்டி சிவராம் அவர்களைக் கொண்டு கண்டசாலாவுக்குத் தனிப் பாடல்கள் பாடும் வாய்ப்பை பெற்றார்.

பிரதீபா பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்து சீதாராம ஜனனம் படத்தில் "கோரஸ்" குழுவில் பாடியது மட்டுமின்றி அப்படத்தில் ஒரு சிறு பாத்திரம் ஏற்று நடித்தார். (பிரபல கதாநாயகன் ஏ, நாகேஸ்வரராவ் நடித்த படம்) இவர் தனியாகப் பின்னணி பாடிய முதல் பாடல் “சொர்க்க சீமா“ வாகும். இப்படத்திற்கு சித்தூர் வி. நாகய்யா இசையமைத்திருந்தார். நாகய்யா அவர்கள் ஒரு தலைசிறந்த பன்முகம் கொண்ட குணச்சித்திர நடிகரும் கூட.
கண்டசாலா அவர்கள் சுமார் நூறு படங்களுக்கும் மேலாக இசையமைத்திருக்கிறார். தெலுங்கு திரைப்பட கதாநாயகர்கள் எல்லோருக்கும் பின்னணி பாடிய பெருமையை பெற்றவர் இவர் ஒருவரே. தனிப்பாடல்கள் பாடியதில் புகழ்பெற்ற இவர் தெய்வபக்தி மிகுந்த பாடல்களையும் பாடி மேலும் புகழ் அடைந்திருக்கிறார். கண்டசாலாவை போற்றும் வகையில் அவர் அமெரிக்கா சென்ற சமயம் தங்கத்தினாலான இசைத்தட்டு (G o ld e n D isc) ஒன்று அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டதை அமெரிக்காவில் உள்ள கோயில் ஒன்றிற்கு தானமாக வழங்கிவிட்டார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கு இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தியது மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் சபையில் பாடும் அரிய வாய்ப்பினையும் கண்டசாலா பெற்றிருக்கிறார்.
கண்டசாலா அவர்கள் 25 ஆண்டுகாலம் திரைஇசை உலகத்திற்கு சேவை செய்த்தற்காக ஆந்திர மாநிலம் இவரை கௌரவித்திருக்கிறது. 1974-ல் கண்டசாலா அவர்கள் தான் இறப்பதற்கு முன் பாடிய “பகவத்கீதை” இவரை அழியாப்புகழுக்கு உயர்த்திச் சென்றுள்ளது எனலாம். இதுவே அவர் ரசிகப் பெருமக்களுக்கு அளித்த இசைப் பொக்கிஷம் என்றும் கூறலாம்.

இந்திய அரசு கண்டசாலா அவர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசின் உயரிய விருதான “பத்மஸ்ரீ“ பட்டத்தை அளித்துள்ளது. திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக கண்டசாலா அவர்கள் கௌரவிக்கப்பட்டார். தெலுங்குத் திரைப்பட இசை உலகில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த இவர் இந்திப் பட உலகில் பிரசித்தி பெற்ற பாடகர் முகம்மது ரஃபி யோடு ஒப்பிடப்பட்டவர். கனத்த சாரீரம் உடையவராயிருந்தும், தன் கவர்ச்சிக் குரலால் யாவரையும் கவர்ந்தவராகக் கருதப்பட்டார். தெலுங்கு திரைப்படக் கதாநாயகனாகப் புகழ் பெற்ற ஏ. நாகேஸ்வரராவ் அவர்கள் நடித்த தேவதாஸ் படத்தின் பாடல்கள் (தெலுங்கிலும், தமிழிலும்) இவரால் பாடப்பட்டு இன்று வரை மக்களால் சாகாவரம் பெற்று கேட்கப்பட்டு வருகின்றது. அவர் பாடிய சில சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்களில் சிலவற்றை கீழே காணலாம்.

1. அமைதியில்லாதென் மனமே பாதாளபைரவி
2. சந்தோஷம் தரும் சவாரி போவோம் தேவதாஸ்
3. துணிந்தபின் மனமே துயரங் கொள்ளாதே தேவதாஸ்
4. கனவிதுதான் நிஜமிதுதான் தேவதாஸ்
5. உறவுமில்லை பகையுமில்லை தேவதாஸ்
6. உலகே மாயம் வாழ்வே மாயம் தேவதாஸ்
7. ஆஹா இன்பநிலாவினிலே மாயாபஜார்
8. ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா மஞ்சள் மகிமை
9. சுயநலம் பெரிதா பொது நலம் பெரிதா பொது நலம் பெரிதா யார் பையன்?
10. உல்லாச உலகம் உனக்கே சொந்தம் அலிபாபவும்40 திருடர்களும்.
11. ஓ! தேவதாஸ் ஓ! பார்வதி தேவதாஸ் (டூயட் பாட்டு)
12. குண்டு போட்ட ரிவால்வார் படார் மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே (சோலோ)
13. தேசுலாவதே தேன் மலராலே மணாளனே மங்கையின் பாக்கியம் டூயட் பாட்டு
14. முத்துக்கு முத்தாக அன்புச் சகோதரர்கள் (சோலோ)
15. என்ன தான் உன் பிரேமையோ பாதாள பைரவி (டூயட் பாட்டு)
16. காதலே தெய்வீகக் காதலே பாதாள பைரவி (டூயட் பாட்டு)
17. ஓஹோ வெண்ணிலாவே பிரேமபாசம் (டூயட் பாட்டு)
18. வான் மீதிலே இன்பத்தேன் வந்து பாயுதே சண்டி ராணி(டூயட் பாட்டு)
19. மதன மனோகர….. ராஜசேகரா மோடி செய்யலாகுமா அனார்கலி (டூயட் பாட்டு)
20. கனிந்த….காதல்யுவ அனார்கலி அனார்கலி
21. நீதானா என்னை அழைத்தது மாயாபஜார் (டூயட் பாட்டு)
22. ஆஹா இன்பநிலாவினிலே மாயாபஜார் (டூயட் பாட்டு)

பிரபல (பன்மொழி) திரைப்படத் தயாரிப்பாளர்களான பி. நாகிரெட்டி, சக்ரபாணி ஆகியோர் தயாரித்து கே.வி. ரெட்டி இயக்கிய பாதாள பைரவி என்ற திரைப்படம் இவரைப் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. கண்டசாலா அவர்கள் லவகுசா திரைப்படத்திற்கு இசையமைத்ததே ஒரு தனிக்கதை. இதில் சுவையான விஷயம் என்னவென்றால் முதன் முதலில் லவகுசா திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கு ஒப்புக் கொண்டவர் இசையமைப்பாளர் "பெண்டியாலா" நாகேஸ்வரராவ் ஆவார். அவர் லவகுசா திரைப்படத்திற்காக கேட்ட சம்பளத் தொகை மிக அதிகமாக இருக்கவே அந்த வாய்ப்பை லவகுசா திரைப்பட தயாரிப்பாளர்கள் கண்டசாலாவுக்கு வழங்கினார்கள். லவகுசாவின் பாடல்கள் பிரபலமான பிறகு அவ்வெற்றியைப்பற்றிக் கேள்விப் பட்ட பெண்டியாலா மிகவும் பெருந்தன்மையுடன் கண்டசாவுக்கு தான் நிகரல்ல என்று ஒப்புக் கொண்டு கூறியது மட்டுமின்றி அப்படத்தின் பாடல்களில் "தெய்வீகத்தன்மை" உணரப்பட்டதாக பெருந்தன்மையுடன் கூறினார். திரைப்படங்களுக்கு இசையமைத்தது மட்டுமில்லாமல் பகவத்கீதை, புஷ்ப விலபம், குண்ட்டி குமாரி, கோகோஷா மற்றும் திருவேங்கடமுடையானைப் பற்றிய நிறைய தெய்வபக்திப் பாடல்களுக்கு இசையமைத்தும் தேசபக்திப் பாடல்கள், இந்தியவிடுதலை இயக்கத்திற்கான பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கண்டசாலாவைப் போற்றும் வகையில் அவர் பிறந்த நாளான்று அவர் தபால் தலையை மத்திய அரசு மூலம் 11-02-2003 அன்று வெளியிட்டது. இசைப்போட்டிகள் அவர் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு நடத்தப்பட்டு அதன் மூலம் இசைக்கலைஞர்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் நான்காம் தேதி முதல் பிப்ரவரி பதினொன்றாம் தேதி வரை ஆந்திராவில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் தொலைக்காட்சியும் இந்த இரு நாட்களுக்கு அவர் பாடிய பாடல்களை மட்டும் ஒலிபரப்பியும், ஒளிபரப்பியும் வந்தன. சமீபத்தில் ஆந்திரா வானொலி நிலையம் அவர் பாடிய பாடல்கள் ஒலிபரப்புவதை நிறுத்தி வைத்திருக்கிறது, இது ஏனோ தெரியவில்லை! திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கண்டசாலாவின் பெருமையை உலக மக்கள் யாவரும் அறியும் வண்ணம் அவரின் வெண்கலச்சிலை ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள ரவிந்திரபாரதி என்ற இடத்தில் தனது 25 வயது திரைஇசைஉலகப் பிரவேசத்தைச் குறிக்கும் வகையில் நிறுவியுள்ளார் என்பது விசேஷமாக குறிப்பிட வேண்டிய ஒன்று.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இவரைக் கௌரவித்து “ஆஸ்தான வித்வானாக” ஆக்கியது.

தான் ஒரு சிறந்த பாடகராக இருந்தாலும் தனக்குப் பிடித்த பாடகர்களாக பிரபைல கர்நாடக இசைக் கலைஞர்கள் எம். பாலமுரளிகிருஷ்ணா, கே.ஜே. யேசுதாஸ் ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கிறார். இளைய தலைமுறைப் பின்னணிப் பாடகர்களை ஆதரித்தது மட்டுமில்லாமல் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மேலும் ஊக்குவித்திருக்கிறார்..
கண்டசாலா அவர்கள் தமது 52-ம் வயதில் 11-02-1974 அன்று காலமானார். அன்னாரது பூதவுடல் ஒரு பெரிய லாரியில் ஏற்றப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர் குரல் வளத்திற்கு மயங்கிய ரசிகப் பெரு மக்களின் கூட்டம் அலை மோதியதால் இந்த ஏற்பாடு. அவர் வாழ்ந்த தியாகராயநகர் பகுதியில் அமைந்திருக்கும் வடக்கு உஸ்மான் சாலையிலிருந்து திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் எண்ணிக்கை மயானம் வரைக்கும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சென்று அஞ்சலி செலுத்தியதைக் கருத்தில் கொண்டால் “தோன்றிற் புகழோடு தோன்றுக“ என்று வள்ளுவப் பெருமானின் குறளுக்கேற்ப வாழ்ந்து மறைந்து ஒரு தனி சரித்திரம் படைத்தார் என்று கண்டசாலாவக் கூறலாம்.

குறிப்பு இசைத்தட்டு வடிவில் “தங்கத்தட்டு“ (Golden Disc) பரிசாகப் பெறுபவர்களுக்கு “ராயல்டி“ தொகை உரிய முறையில் தரப்படுவது வழக்கம். கண்டசாலா அவர்கள் அத்தகைய பெருமையைப் பெற்றவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

SRI RAVI GHANTA SALA
S/O GHANTA SALA VENKATESWARA RAO
PARVATHI “CEEBROS” 1st FLOOR,
NO. 18 1st POES ROAD,
TEYNAMPET 1ST STREET,
CHENNAI – 600 018.
MOBILE – 9840 157 090
PH-044 24310708
044 24310709
http://profiles.lakshmansruthi.com/interview.php?uid=227

நடிப்பைத் துறந்த படைப்பாளி!

‘காரைக்கால் அம்மையார்’ படப்பிடிப்பில் சிவகுமார், ஸ்ரீவித்யா, ஏ.வி.எம். ராஜன் ஆகியோருக்கு காட்சியை விளக்குகிறார் ஏ.பி.என்.

நடிப்பைத் துறந்த படைப்பாளி!

நடிகர் திலகத்தின் திரைப் பயணத்தின் மைல்கல்லாக அமைந்த படங்கள் பல. அவற்றில் நவராத்திரி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் மூன்றையும் அவரது ரசிகமணிகள் தலையில் தூக்கி வைத்துச் சீராட்டியிருக்கிறார்கள். இந்தப் படங்களின் கர்த்தா ஏ. பி. நாகராஜன். தமிழ் நாடகம் தந்த நல்முத்து இவர். புராணத்தை மட்டுமே வைத்துக் காலம் தள்ளிக்கொண்டிருந்த தமிழ் நாடகத்துக்குள் சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்திப் புது ரத்தம் பாய்ச்சியவர்கள் டி.கே.எஸ் சகோதரர்கள்.

இவர்களது மதுரை பால சண்முகானந்த சபா நாடகக் குழுவில் பயிற்சி பெற்று உருவானவர்தான் ஏ.பி. என். அன்று இளம் சிறுவர்களுக்கு நாடகப் பயிற்சி அளித்து அவர்களைப் பெண் வேடங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதுபோன்ற நாடக சபாக்களில் சுட்டுப்போட்டாலும் பெண் பிள்ளைகளைச் சேர்க்க மாட்டார்கள். மதுரை பால சண்முகானந்த சபா பின்னாளில் டி. கே. எஸ் நாடக சபா என்று பெயர் மாறியபோது அதில் பத்து வயதுச் சிறுவனாகச் சேர்த்துவிடப்பட்டார் ஏ. பி. நாகராஜன். அவரைச் சேர்த்துவிட்டவர் அவருடைய பாட்டி மாணிக்கத்தம்மாள்.

கொங்குச் சீமையின் தமிழ் விளக்கு

ஈரோடு மாவட்டத்தில் அக்கம்மாபேட்டை என்ற சிற்றூரில் பிறந்தவர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அவர் பாட்டியின் அரவணைப்பில் வளர்த்தார். பாட்டி சிறந்த கதைசொல்லியாக இருந்தார். கதையின் இடையிடையே பாடியும் காட்டுவார். இப்படிப் பாட்டி சொன்ன இதிகாசக் கதைகளைக் கேட்டு வளர்ந்த நாகராஜன் பாட்டி பாடிக்காட்டிய பாடல்களைக் கிளிப்பிள்ளை போலத் திரும்பிப் பாடலானார்.

அவரது திறனறிந்தே டி.கே.எஸ். நாடகக்குழுவில் சேர்த்துவிட்டார் பாட்டி. தனது பதினைந்தாவது வயது முதல் ஸ்திரி பார்ட்டுகளில் நடிக்க ஆரம்பித்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் புகழ்பெற்ற சமூக நாடகமாக விளங்கியது ‘குமாஸ்தாவின் பெண். அதில் கதாநாயகியாக நடித்த நாகராஜனுக்கு மற்ற சபாக்களில் ஸ்திரி பார்ட் போட அழைப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் தனது இருபதாவது வயதில் பெண் வேடங்களில் நடிக்க விருப்பமின்றிச் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். அங்கே நாகராஜனுக்கு நண்பர்களாகக் கிடைத்தவர்கள் சிவாஜி கணேசனும், காக்கா ராதாகிருஷ்ணனும். ஏற்று நடிக்கும் தனது கதாபாத்திரங்களுக்கான வசனத்தைக் கதைக்குத் தக்க, தாமே திருத்தி மாற்றி எழுதிக்கொண்டார். இதனால் நாடகாசிரியர்களுடன் நாகராஜனுக்குக் கடும் கருத்துப் பிணக்கு ஏற்பட்டது. சில வருடங்களுக்குப் பின்னர் சக்தி நாடக சபாவிலிருந்தும் வெளியேறித் தனது 25வது வயதில் பழனி கதிரவன் நாடக சபா என்ற தனி சபாவைத் தொடங்கினார்.

ஏ.பி. என்னின் ‘நால்வர்’ நாடகம் புகழ்பெறத் தொடங்கியது. இந்த நாடகத்தை சங்கீத பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தது. இதற்காக நாடகக் கதையில் சிறுசிறு மாற்றங்கள் செய்து திரைக்கதை வசனம் எழுதினார் நாகராஜன். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் கே.வி. மகாதேவன் இசையில் தஞ்சை ராமைய்யா தாஸ் பாடல்கள் எழுதிய இந்தப் படத்தில், கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

படம் வெற்றிபெற்றது. கதாநாயகனாகச் சிறந்த நடிப்பைக் கொடுத்தது மட்டுமல்ல, நல்ல வசனமும் எழுதியதற்காகப் பாராட்டப்பட்டார். அடுத்து வந்த ஆண்டுகளில் பெண்ணரசி (1955), நல்லதங்காள் (1955) ஆகிய படங்களில் கதாநாயகனாகத் தொடர்ந்ததோடு தான் நடிக்கும் படங்களுக்குத் தொடர்ந்து அழுத்தமாகவும் ஈர்க்கும் விதமாகவும் வசனம் எழுத ஆரம்பித்தார் ஏ.பி. நாகராஜன். இதனால் அவருக்குத் திரைக்கதை வசனம் எழுத வாய்ப்புகள் குவிந்தன. இயக்குநர் கே. சோமுவின் படக்குழுவில் எழுத்தாளராக நிரந்தரமாக இடம் பிடித்தார். நடிப்பைத் துறந்து படைப்பை கைகொண்டார்.

வார்த்தை வேந்தர்

நாடக வசனங்களின் சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் ஆக்கிரமித்திருந்த காலகட்டம் அது. நாடக வசனங்களின் சாயலே திரைப்பட வசனங்களிலும் தாக்கம் செலுத்தியபோது கொங்கு வட்டார வழக்கில் ‘மக்களைப் பெற்ற மகராசி’(1957) படத்துக்கு வசனம் எழுதி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ஏ.பி.என். ‘டவுன்பஸ்’, ‘நான் பெற்ற செல்வம்’ஆகிய படங்களின் வெற்றியில் அவரது வசனங்கள் முக்கிய இடத்தை எடுத்துக் கொண்டன. அடுத்த ஆண்டே கே.சோமு இயக்கத்தில் ராமராவ் ராமனாகவும் சிவாஜி பரதனாகவும் நடித்த ‘சம்பூர்ண ராமாயணம்’(1958) படத்துக்கும் வசனம் எழுதினார் நாகராஜன்.

இந்தப் படத்தைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி பரதன் பேசும் வசனங்களைக் கவனித்து “பரதனின் பாசத்தை மிகவும் ரசித்தேன்” என்று பாராட்டினார். இதனால் ஏ.பி. நாகராஜனின் புகழ் பரவியது. ராஜாஜி பரதனைப் பாராட்டினார் என்றால் அந்தப் படத்தில் ராவணனை இசைக்கலைஞனாகப் பெருமைப்படுத்தி எழுதியதை ம.பொ.சி பாராட்டினார். மா.பொ.சியின் வழிகாட்டலில் அவரது தமிழரசுக் கழகத்தில் இணைந்து அரசியலிலும் ஈடுபாடு காட்டினார்.

புதுமைகளின் காதலர்

சம்பூர்ண ராமாயணம் படத்தில் ராவணன் வேடத்தைப் பத்து தலையுடன் அரக்கன்போலச் சித்தரிக்க வேண்டாம் என்று இயக்குநர் சோமுவுக்கு எடுத்துக் கூறிய ஏ.பி. நாகராஜன், புராணக் கதைகளைப் படமாக்கினாலும், வரலாற்று, சமூகக் கதைகளைப் படமாக்கினாலும் அவற்றில் தொழில்நுட்பப் புதுமைகளையும் நிகழ்காலத்தின் நடப்புகளை வசனத்திலும் புகுத்தத் தவறவில்லை. சிவாஜி – சாவித்திரி நடிப்பில் உருவான ‘ வடிவுக்கு வளைகாப்பு’(1962) படத்தின் மூலம் இயக்கத்தில் கால் பதித்தார் ஏ.பி. என். அதன்பிறகு சிவாஜியுடன் அவர் இணைந்து பணிபுரிந்த பல படங்கள் தமிழ்சினிமாவுக்கு முக்கியப் படங்களாக அமைந்தன.

சிவாஜியின் 100-வது படமாகிய ‘நவராத்திரி’யில் (1964) அவருக்கு ஒன்பது மாறுபட்ட வேடங்களை உருவாக்கினார். அந்தக் காவியத்தைக் கண்டு தமிழ்த் திரையுலகமும் தமிழ்மக்கள் மட்டும் வியக்கவில்லை. அப்படத்தைக் கண்ட ஐரோப்பிய நடிகர்கள் நடிகர் திலகத்தை அமெரிக்காவுக்கு அழைத்தனர். அடுத்த ஆண்டே அவரது இயக்கத்தில் 1965-ல் ‘திருவிளையாடல்’ வெளியானது. சிவன், பார்வதி, முருகன், விநாயகர், நாரதர், அவ்வையார், நக்கீரர் என அனைத்துக் கதாபாத்திரங்களும் பேசிய சுத்தமான எளிய செந்தமிழ், தமிழ் மக்களின் நாவில் அரைநூற்றாண்டு காலம் நடனமாடியது. சிவபெருமானுடன் வறிய புலவன் தருமியின் வாக்குவாதம் தமிழகமெங்கும் நகைச்சுவை ரசவாதம் செய்தது.

திருவிளையாடலைத் தொடர்ந்து, சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமலை தென்குமரி, அகத்தியர், காரைக்கால் அம்மையார் உள்படப் பல புராணப் படங்களை மிக உயர்ந்த உரையாடல் தமிழில் எடுத்தார் ஏ.பி.நாகராஜன். இவரது சாதனை மகுடத்தில் ‘தில்லானா மோகனாம்பாள், தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ‘ராஜராஜசோழன்’ஆகியவை உண்டு . இந்தியாவுக்கு வெளியே விருதுபெற்ற முதல் தமிழ்த் திரைப்படத்தை எடுத்தவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

நடிகர் திலகம் சிவாஜியை வைத்துப் பல படங்களை இயக்கிய இவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம், ‘நவரத்தினம்’. அதுவே அவரது கடைசிப் படம். 1977-ல் நாகராஜன் மறைந்து விட்டாலும் அவரது திரைத் தமிழ், தமிழ்த் திரை இருக்கும் வரை மறையப்போவதில்லை.

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...