Wednesday, August 26, 2015

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.

சென்னை: மக்களை வாட்டி வதைக்கும் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை இப்போது 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. கடுமையான வறட்சி காரணமாக கர்நாடகம் மற்றும் மராட்டியத்தில் பெரிய வெங்காயத்தின் விளைச்சல் குறைந்து விட்டது தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் வெங்காயத்தின் விலை உயர்வைப் பயன்படுத்திக் கொள்வதற்காக சிலர் வெங்காயத்தை பெருமளவில் பதுக்கி வைத்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதாக தெரியவில்லை. அதேபோல் அதிரடி ஆய்வு மேற்கொண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை வெளிக்கொண்டு வருவதற்கு தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உறங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல், பருப்பு விலையை கட்டுப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இவற்றின் விலை உயர்வுக்கும் போதிய விளைச்சலின்மை மற்றும் பதுக்கல் தான் முக்கியக் காரணம் ஆகும்.

ஆன்லைன் வணிகத்தை பயன்படுத்தி வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை பதுக்கி வைத்து செயற்கையாக ஏற்படுத்தப்படும் தட்டுப்பாட்டை தடுக்க மாநில அரசால் முடியும். ஆனால், ஏனோ பதுக்கல் காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு தயாராக இல்லை. வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது, அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்வது தான் பொது வழங்கல் திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், இவ்விஷயத்தில் தமிழகத்தின் பொதுவழங்கல் துறை முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டது. காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்வதற்காகத் தான் பண்ணை பசுமைக் கடைகள் திறக்கப்பட்டன. அங்கு வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படும் போதிலும், அது பெயருக்காக மிகக்குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை; வெளிச்சந்தையில் எந்தவித சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

தமிழகஅரசின் இத்தகைய போக்கால் வெங்காயம் பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் போய்விடும்.

எனவே, வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்வதன் மூலமும், பதுக்கலைத் தடுப்பதன் மூலமும் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Court

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Cour...