Friday, August 28, 2015

விண்ணைத்தாண்டும் வெங்காய விலை

பொதுவாக சமையல் அறையில் வெங்காயத்தை உரிக்கும்போதுதான் இல்லத்தரசிகளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆனால், இப்போது வெங்காயத்தின் விலை விண்ணைத்தொட்டதோடு மட்டுமல்லாமல், விண்ணைத்தாண்டியும் செல்வதால் இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்லாமல், குடும்ப தலைவர்களுக்கும் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடுகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்பு இருந்த விலையைவிட, நான்கு மடங்கு விலை உயர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் கூட சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலையும், பெரிய வெங்காயத்தின் விலையும் தினமும் உயர்ந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெங்காய விலை உயரும்போதெல்லாம், நிச்சயமாக நிரந்தர தீர்வுவேண்டும் என்றும், அந்த இலக்கை நோக்கி திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் பெரிதாக பேசப்படும். ஆனால், நிலைமை சரியானவுடன் இந்த உறுதிமொழிகள் எல்லாம் காற்றிலே கலந்த கீதங்களாகிவிடும்.

இவ்வளவுக்கும் வெங்காயத்தாலேயே மத்தியிலும், டெல்லியிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட வரலாறுகள் எல்லோருக்கும் தெரியும். 1980–ல் நாடு முழுவதும் அபரிமிதமான வெங்காய விலை உயர்வால், மத்தியில் ஜனதா அரசாங்கம் கீழே இறக்கப்படுவதற்கும், 1998–ல் டெல்லியில் பா.ஜ.க. அரசாங்கம் தோல்வியை சந்தித்து, ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கும் வெங்காயம்தான் காரணம். இவ்வளவுக்கும் உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் வெங்காயம் அதிக விளைச்சலை காண்கிறது. இந்தியாவில் அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், மராட்டிய மாநிலத்தில்தான் அதிகபட்சமாக ஆண்டுக்கு 46 லட்சத்து 60 ஆயிரம் டன் விளைகிறது. இந்த 11 மாநிலங்களில், தமிழ்நாட்டில்தான் வெங்காய விளைச்சல் குறைவு. பெரும்பாலும் சின்ன வெங்காயமே சாகுபடி செய்யப்படும் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 4 லட்சத்து 29 ஆயிரத்து 720 டன்கள்தான் விளைகிறது. இவ்வளவுக்கும் வெங்காயம் ஒரு குறுகியகால சாகுபடி பயிர் ஆகும். எல்லா இடங்களிலும் தாராளமாக சாகுபடி செய்யமுடியும். இந்த ஆண்டு வெங்காய தட்டுப்பாட்டுக்கு சில இடங்களில் சீசன் இல்லாத நேரங்களில் பெய்த பெரு மழையையும், சில இடங்களில் மழை தட்டுப்பாட்டையும் காரணமாக கூறுகிறார்கள்.

தற்போது வெங்காய ஏற்றுமதியை தடுப்பதற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ரூ.425–ல் இருந்து, ரூ.700 ஆக உயர்த்தியிருக்கும் மத்திய அரசாங்கம், இறக்குமதியில் இன்னும் அதிக கவனம் செலுத்தவேண்டும். உடனடியாக லட்சக்கணக்கான டன்கள் வெங்காய தேவை இருக்கும் நிலையில், 10 ஆயிரம் டன் இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்விடப்பட்டு, இன்னும் முடிவாகவில்லை. அரசு உடனடியாக தானோ, அல்லது தனியார் மூலமாகவோ, பாகிஸ்தான், சீனா, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் தடுக்க வெங்காய சாகுபடி பரப்பை உயர்த்தவும், சிறு விவசாயிகள் வெங்காயத்தை சேமித்து வைக்க குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன கிட்டங்கி வசதிகளை ஏற்படுத்தவும், மத்திய–மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வெங்காயத்தை பதுக்கி வைத்தால் கொள்ளை லாபம் அடிக்கலாம் என்ற உணர்வில் இப்போதும் பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கி, அந்த வெங்காயத்தை எல்லாம் வெளியே விற்பனைக்கு கொண்டுவரவேண்டும். பொதுவினியோக கடைகள் மூலம் மாநில அரசுகளே வெங்காயத்தை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Court

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Cour...