Monday, August 17, 2015

பூரண மது விலக்கு என்பது கானல்நீர் கனவு!

தமிழ்நாட்டில் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகள் டாஸ்மாக் கடைகளின் முன் ஆர்ப்பாட்டம் செய்து, அதன் மூலம் மது விலக்கு கொள்கையைத் திரும்பவும் அமல்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். அது அவ்வளவு சுலபமல்ல.
மூதறிஞர் ராஜாஜி 1937-இல் அன்றைய சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தபோது சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முதன்முதலாக மது விலக்கை அமல்படுத்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதன்மூலம் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை சரி செய்ய விற்பனை வரியைக் கொண்டு வந்தார். விற்பனை வரி இன்றளவிலும் அமல்படுத்தப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானதும், அன்றைய மெட்ராஸ் ராஜதானி முழுமைக்குமாக அதை விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்தினார். 1971 வரை இந்தக் கொள்கை அமலில் இருந்தது. அதன் பிறகு, தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சியினர் அவ்வப்போது இந்தக் கொள்கையை மாற்றி அதற்கான காரணங்களையும் சொல்லி வந்தனர்.
குறிப்பாக, மது விலக்கு கொள்கையைத் தளர்த்த வேண்டாம் என்று மூதறிஞர் ராஜாஜி மன்றாடியும், மூடிய மது விற்பனை கடைகளை 1971-இல் அன்றைய அரசு திறந்தது. அதன்மூலம் அரசுக்குக் கிடைத்த பணம்தான் முக்கியமாகக் கருதப்பட்டது. அந்தப் பணத்தை ராஜாஜி "கறை படிந்த பணம்' என்று கூறினார். அதே அரசு சில வருடங்களில் திரும்பவும் மது விலக்குக் கொள்கையை அமல்படுத்த சட்டத் திருத்தம் கொண்டு வந்தது என்பது வரலாறு.
பல்வேறு நிறுவனங்கள் செய்த ஆய்வின் முடிவுகள் பூரண மது விலக்குக்கு எதிராக இருக்கின்றன. உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் பூரண மது விலக்கு தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் மது விலக்கு 1920 முதல் 1933 வரை 13 ஆண்டுகள் அமலில் இருந்தது.
அதன் விளைவாக அமெரிக்காவில் ஊழல் மலிந்து, திருட்டுச் சந்தையில் மது விற்கும் மாஃபியா கூட்டங்கள் உருவானதால் குற்றங்கள் பெருகி, உரிமம் இல்லாத துப்பாக்கிகள் எங்கும் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. தாதாக்களின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்தது.
பின்னாளில் அமெரிக்க அதிபரான ஜான் கென்னடியின் தந்தையான ஜோசப் கென்னடி கோடீஸ்வரரானது, திருட்டுச் சந்தையில் மது விற்றதால்தான் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.
அமெரிக்காவில் இந்தக் காலகட்டத்தில் உருவான பெரிய தாதா "அல் கபோன்' தனி ராஜ்யமே நடத்திக் கொண்டிருந்தார். அவர் இறந்தபோது அவரது சடலத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் சவ ஊர்வலத்தில் உயர்நிலை போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோருடன் அமெரிக்காவில் மேல்நிலைகளில் உள்ள தொழிலதிபர்களும் கலந்து கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் அந்த "தாதா' எந்த அளவுக்கு செல்வாக்குடன் வாழ்ந்தார். அந்த அதிகாரிகளும், நீதிபதிகளும் அந்த தாதாவுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இந்தியாவைப் பொருத்தவரையில், மது விலக்குக் கொள்கையைப் பரிசீலித்து அதுபற்றிய பரிந்துரைகளை முன்வைக்கப் பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு தேக்சந்த் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு தன்னுடைய அறிக்கையில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால், அதேசமயத்தில் பூரண மது விலக்கின் விளைவாக ஏற்படும் தீமைகளையும் சுட்டிக் காட்டியது. பெரும் அளவில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல், அதன் தொடர்பாக ஏற்படும் லஞ்ச ஊழல்கள் ஆகியவற்றையும் கோடிட்டு காட்டியுள்ளது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆயினும், அங்கேயும் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழில் நடக்கத்தான் செய்கிறது என்றும் அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தமிழ்நாட்டில் 40 விழுக்காடு கிராம இளைஞர்கள் மதுப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர் என்று தெரிவிக்கிறது. இதனால், அவர்களின் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டு அதன் விளைவாகப் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கெல்லாம் தீர்வு, பூரண மது விலக்கா என்பதுதான் கேள்வி? கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் இந்தியக் காவல் துறைப் பணியாற்றிய அனுபவம், குறிப்பாக மது விலக்கை அமல்படுத்தும் பிரிவில் பணியாற்றிய அனுபவம், இன்னும் குறிப்பாக ஆயத்தீர்வைப் பிரிவில் பணியாற்றிய அனுபவம் ஆகியவற்றைப் பின்னணியில் கொண்டு நான் கூற விரும்புவதெல்லாம் பூரண மது விலக்கு அமலில் இருந்தபோது, அதன் விளைவாக இங்கு ஒன்று அங்கு ஒன்று என்று இல்லாத வகையில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது என்பது ஒரு தொழிலாகத் தமிழ்நாட்டில் பல இடங்களில் நடந்து கொண்டிருந்தது.
அதன் விளைவாக எங்கும் எதிலும் ஊழல் என்ற நிலை ஏற்பட்டது. மதுவுக்கு அடிமையான பல இளைஞர்கள் குளோரல் ஹைட்ரேட், மீத்தேன் போன்ற விஷப் பொருள்களைக் கள்ளச் சாராயத்தில் கலந்து அருந்திவிட்டுக் கொத்துக்கொத்தாக இறந்தனர். இதனால், கிராமப் பொருளாதாரம் சீரழிந்து நின்றது.
இது மட்டுமல்ல, ஒரு புதிய வகையான தொழிலதிபர்கள் கள்ளச் சாராயத்தின் மூலமாகப் பணபலம் பெற்று உருவாகவும் செய்தனர்.
அமெரிக்காவில் உருவான "அல் கபோன்' மாதிரி இந்தச் சாராய அதிபர்களின் செல்வாக்கு, நாணயமற்ற அதிகாரிகள், அரசியல்வாதிகள் வரை வியாபித்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் ஒரு சதவீதம்தான் வெற்றி பெற்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கள்ளச் சாராய அதிபர்கள் நீதித் துறையையும் தங்களது பண பலத்தாலும், புஜ பலத்தாலும் வலையில் வீழ்த்தி அதன் மூலம் வெளியே வந்து சுதந்திரமாக பவனி வந்தனர். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பேதமில்லாமல் அரசியல்வாதிகள், மேலிருந்து அடிமட்டம் வரையிலான அரசு ஊழியர்கள், ஏன், பத்திரிகையாளர்கள் என்று எல்லோரையுமே விலைக்கு வாங்கி, தனி ராஜாங்கமே நடத்தி வந்தனர்.
இப் பின்னணியில் நம்முள் எழும் கேள்வி என்னவெனில், இந்தச் சம்பவங்களினால் நாம் சாராயக் கடைகளைத் திறந்துவிடலாமா என்பதுதான். அதற்கு என் பதில் "தயவு செய்து மதுக் கடைகளைத் திறந்துவிடாதீர்கள் என்பதுதான். ஆயினும், நமது கொள்கையை பூரண மது விலக்கு என்ற நிலையிலிருந்து மாற்றி, கட்டுப்படுத்தப்பட்ட வரம்புக்கு உள்பட்ட கொள்கையாக்குவது என்பதும், அதற்கு ஏற்றார்போலச் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
மது வகைகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது என்ற நிலையை உருவாக்க முதலில் டாஸ்மாக் கடைகளையும், தனியார் கடைகளையும் மூடுவது. பொது இடங்களில் மது அருந்துவதைக் கடுமையான சட்டத்தின் மூலம் தடுப்பது. மது அருந்த அதிகமான பர்மிட் கட்டணம் விதித்து, மது அருந்துவதைக் குறைப்பது. பெரிய அளவில் நட்சத்திர விடுதிகளில் மது அருந்த அனுமதி வழங்கினால் அதற்கு அதிகமான கேளிக்கை வரி, ஆயத்தீர்வை விதித்து அங்கு வந்து மது அருந்தும் வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
கள்ளச் சாராயத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் திரும்பத் திரும்ப இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்களை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து அவர்கள் ஒரு வருடமாவது சிறைத் தண்டனை அனுபவிக்க சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, காவல் துறை கள்ளச் சாராய லாபியின் கைக்கூலியாக மாறிவிடாமல் இருக்க, நேர்மையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முழு அதிகாரமும், ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பும் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மேற்கூறிய நடவடிக்கைகளை எடுத்தால் நாம் பெருமளவில் மது உற்பத்தி, விற்பனை, மது அருந்துபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். அதைவிடுத்து ஏதோ மந்திரக்கோலை அசைத்து மதுக் கடைகளை மூடலாம் என்று நினைத்து ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
உடனடியாக பூரண மது விலக்கு என்பது சாத்தியமற்றது. ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் மதுவை ஆறாக ஓட விட்டுவிட்டு, உடனடியாக மது அருந்துபவர்களை மது அருந்தக் கூடாது என்று சொன்னால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாகவே இருக்கும். பூரண மது விலக்கு என்று சொல்லிக் கொத்துக் கொத்தாக மக்கள் கள்ளச் சாராயம் குடித்துச் செத்து மடிவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
மது அருந்துபவர்கள் செத்து மடியட்டுமே என்று மதுவின் மீதான கோபத்தாலும், சமுதாயத்தின் மீதான அக்கறையாலும் சொல்லலாமே தவிர, கண் முன்னால் இளைஞர்கள் மரணமடைவதைப் பார்த்துக் கொண்டா இருக்க முடியும்?

கட்டுரையாளர்:
தமிழக முன்னாள் டி.ஜி.பி.
மது வகைகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது என்ற நிலையை உருவாக்க முதலில் டாஸ்மாக் கடைகளையும், தனியார் கடைகளையும் மூடுவது. பொது இடங்களில் மது அருந்துவதைக் கடுமையான சட்டத்தின் மூலம் தடுப்பது. மது அருந்த அதிகமான பர்மிட் கட்டணம் விதிப்பது.

No comments:

Post a Comment

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Court

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Cour...