Thursday, August 27, 2015

கற்பழிப்பு முயற்சியில் பெண் டாக்டர் கொல்லப்பட்டார் போலீசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

சென்னையில் நடந்த பெண் டாக்டர் கொலை வழக்கில் போலீசார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர்.கற்பழிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கணவர் சந்தேகம்

சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்த டாக்டர் சத்யா கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.கடந்த 20-ந் தேதி அன்று இந்த படுகொலைச்சம்பவம் நடந்தது.சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலை,கும்மாளம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அறையில் டாக்டர் சத்யா தங்கி இருந்தார்.அவர் தங்கி இருந்த அறையில் இந்த படுகொலைச்சம்பவம் நடந்தது.

இந்த படுகொலை வழக்கில் கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.டாக்டர் சத்யா கொலை செய்யப்பட்ட அறைக்கு பக்கத்து அறையில் தங்கி இருந்த என்ஜினீயர் அரிந்தம் தேப்நாத்(வயது 22) இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அரிந்தம் தேப்நாத் திரிபுரா மாநிலம் அகர்தலாவைச் சேர்ந்தவர்.டாக்டர் சத்யாவை கொலை செய்து விட்டு,அவரது செல்போனை,என்ஜினீயர் அரிந்தம் தேப்நாத் எடுத்துச் சென்று விட்டார்.செல்போனுக்காக கொலை நடந்தது போன்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால் டாக்டர் சத்யாவின் கணவர் டாக்டர் ஜேசு, செல்போனுக்காக கொலை நடந்தது என்று சொல்வதை நம்ப முடியவில்லை என்றும்,கொலைக்கு வேறு பின்னணி இருக்க வேண்டும் என்றும்,பின்னணியில் இருப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்றும்,பரபரப்பு பேட்டி கொடுத்தார்.இது தொடர்பான புகார் மனு ஒன்றையும்,சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு அனுப்பி வைத்தார்.

உயர் அதிகாரி பதில்

டாக்டர் சத்யாவின் கணவர் எழுப்பி உள்ள சந்தேகங்களுக்கு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று பதில் அளித்தார்.அத்தோடு டாக்டர் சத்யாவின் கொலை வழக்கில் வெளி வராத அதிர்ச்சி தகவல் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.அவர் கூறியதாவது:-

டாக்டர் சத்யாவின் கணவர் புகாராக தெரிவித்துள்ள சந்தேகங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.இந்த வழக்கில் வேறு பின்னணி நபர்கள் யாரும் இல்லை.என்ஜினீயர் அரிந்தம்தேப்நாத் தான் கொலையாளி.அதற்கான முழு ஆதாரங்கள் விசாரணையில் கிடைத்துள்ளது.

கொள்ளை அடிக்கப்பட்ட டாக்டர் சத்யாவின் செல்போனை,என்ஜினீயர் அரிந்தம்தேப்நாத்,மதுரவாயல் செல்போன் கடையில் விற்றுள்ளார்.செல்போனை விற்கும் போது,அரிந்தம் தேப்நாத்தை,செல்போன் கடைக்காரர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

செல்போனில் படம் எடுக்கப்பட்ட தேதி,நேரம் எல்லாம் செல்போனில் பதிவாகி உள்ளது.கொலை நடந்த 20-ந் தேதி அன்று பகல் 12.30 மணிக்கு செல்போன் படம் எடுக்கப்பட்டுள்ளது.அதாவது அன்றைய தினம் காலையில் சத்யா கொலை செய்யப்படுகிறார்.செல்போன் பகலில் விற்கப்படுகிறது.விற்றவர் கொலையாளி அரிந்தம் தேப்நாத். விற்கப்பட்ட செல்போன் மீட்கப்பட்டுள்ளது.இது முக்கிய தடயம்.

சாவி சிக்கியது

அடுத்து டாக்டர் சத்யாவை கொலை செய்து விட்டு,என்ஜினீயர் அரிந்தம்தேப்நாத் அறைக்கதவை வெளியில் பூட்டி விட்டு செல்கிறார்.அந்த சாவியை அரிந்தம்தேப்நாத்திடம் இருந்து கைப்பற்றி உள்ளோம்.

இன்னொரு முக்கிய சந்தேகத்தை டாக்டர் ஜேசு கிளப்பி உள்ளார்.டாக்டர் சத்யாவின் கழுத்து கச்சிதமாக ரத்த நரம்பை பார்த்து அறுக்கப்பட்டுள்ளது.இது கைதேர்ந்த டாக்டர் ஒருவர் சொல்லிக்கொடுத்துதான் செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஒருவர் கொலைக்கு பின்னணியில் இருக்க வேண்டும் என்பது அவரது வாதம்.

அவர் தெரிவித்த சந்தேகம்,டாக்டர் சத்யா மெரிட் அடிப்படையில் மேற்படிப்புக்கு தேர்வாகி உள்ளார்.மேற்படிப்பு சீட்டு ரூ.2 கோடி வரை விற்கப்படுகிறது.எனவே பணத்துக்கு ஆசைப்பட்டு டாக்டர் சத்யா கொலை செய்யப்பட்டுள்ளார்.அவர் கொலை செய்யப்பட்டு விட்டதால்,அவரது மேற்படிப்பு இடம் காலியாகி விட்டது.

அந்த இடத்தில் ரூ.2 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு இன்னொரு நபரை நியமிக்க இந்த கொலை நடந்திருக்க வேண்டும்,என்பது டாக்டர் ஜேசுவின் குற்றச்சாட்டு.

மேற்படிப்பில் சேர்வதற்கான காலக்கெடு கடந்த ஜூன் மாதத்தோடு முடிவடைந்து விட்டது.இனிமேல் டாக்டர் சத்யாவின் காலி இடத்தில் வேறு யாரையும் நியமிக்க முடியாது.எனவே அந்த பின்னணியில் இந்த கொலை நடக்கவில்லை.

கழுத்தில் 4 இடங்களில் குத்து

மேலும் ரத்தம் ஓடும் நரம்பை பார்த்து சத்யாவின் கழுத்தில் கத்திக்குத்து விழுந்துள்ளது என்று,டாக்டர் ஜேசு கூறியுள்ளதும் தவறு.சத்யாவின் கழுத்தில்

தாறுமாறாக 4 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது.ரத்த நரம்பை குறிபார்த்து குத்தவில்லை.

முழுக்க,முழுக்க இந்த வழக்கில் என்ஜினீயர் அரிந்தம்தேப்நாத் ஒருவர்தான் குற்றவாளி.கொலை செல்போனுக்காக நடந்தது என்று சொல்வதை நம்ப முடியவில்லை,என்று டாக்டர் ஜேசு சொல்லி இருக்கிறார்.

அது உண்மைதான்.செல்போனுக்காக மட்டும் கொலை நடக்க வில்லை. டாக்டர் சத்யா ஒரு ஒழுக்கமான நல்ல பெண்மணி என்பதால்,சில தகவல்களை நாங்கள் வெளியிட வில்லை.தற்போது அதை வெளியிட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.

கற்பழிக்க முயற்சி

என்ஜினீயர் அரிந்தம் தேப்நாத் பெண்சுகத்துக்காக அலைகிறார்.மேலும் அவருக்கு பணத்தேவையும் உள்ளது.தனது சுகத்துக்கும்,பணத்தேவைக்கும் டாக்டர் சத்யாவை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுகிறார்.

அதற்காக சத்யாவுக்கு வலை விரிக்கிறார்.அவர் விரித்த விலையில் சத்யா விழவில்லை.சத்யாவிடம் பணம் கறக்கலாம் என்று ரூ.2 ஆயிரம் கேட்கிறார்.சத்யா பணம் கொடுக்கவில்லை.

இதனால் அடுத்த கட்டமாக தனியாக அறையில் இருக்கும் சத்யாவிடம் வலுக்கட்டாயமாக சுகத்தை அனுபவிக்க திட்டமிடுகிறார்.அதிலும் தோல்வி.இதனால் அநியாயமாக சத்யா கொலை செய்யப்படுகிறார்.சத்யாவின் தனிமை,கொலையாளியின் காம வெறி இவை சேர்ந்து ஒரு உயிரை பறித்து விட்டது.

காவலில் எடுத்து விசாரணை

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் உண்மை.இதை கொலையாளி வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.கொலையாளியை மேலும் சில நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம்.

அப்போது இந்த கொலைக்கு மேலும் சில ஆதாரங்களை திரட்ட இருக்கிறோம்.அடுத்த கட்டமாக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.குற்றவாளிக்கு கோர்ட்டில் உரிய தண்டனை பெற்று தரப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Court

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Cour...