Monday, November 2, 2015

இன்னும் ஓர் மைல் கல்!


Dinamani

By ஆசிரியர்

First Published : 01 November 2015 01:43 AM IST


நமது "தினமணி' நாளிதழின் பத்தாவது பதிப்பாக, நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களுக்கான நாகப்பட்டினம் பதிப்பு இன்று முதல் வெளிவருகிறது. "தினமணி' நாளிதழின் நீண்ட நெடும் பயணத்தில் இது மற்றுமோர் மைல் கல்.

நமது 10-ஆவது பதிப்பு தொடங்கப்படும்போது, 82 ஆண்டுகளுக்கு முன்பு மகாகவி பாரதியாரின் 13-வது நினைவு நாளில் "தினமணி' தொடங்கப்பட்டது பற்றி நினைக்கத் தோன்றுகிறது. சுருக்கமாக, மனதில் நிற்கும் விதத்தில் புதிதாக வெளியாக இருக்கும் தேசிய நாளிதழுக்கு நல்லதொரு பெயரைத் தேர்ந்தெடுக்க பத்து ரூபாய் பரிசு என்று 1934-இல் அறிவிக்கப்பட்டது. "தினமணி' என்கிற பெயரை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ். அட்சயலிங்கமும், தியாகராய நகரைச் சேர்ந்த எஸ்.சுவாமிநாதனும் எழுதி அனுப்பி இருந்தனர். பரிசு இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. "தினமணி' என்றால் அது கதிரவனைக் குறிக்கும். அந்தப் பெயர் புதுமையாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருந்தது.

செப்டம்பர் 11, 1934-ஆம் ஆண்டு அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் தனது முதல் பக்கத்திலேயே "ஏழை துயர் தீர்க்க, எல்லோரும் களித்திருக்க, எவருக்கும் அஞ்சாத தினமணி' என்கிற வாசகத்தைப் பொறித்த வண்ணம் "தினமணி' நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.

"இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழர்' என்று பெருமையுடன் கூறிக் கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது, தன்னை இந்தியன் என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் அனைவரும்தான்' என்று சந்தேகத்துக்கிடமின்றி முதல் நாள் தலையங்கம் விளக்கி இருந்தது.

சுதந்திரப் போராட்டக் காலத்தின் உச்ச கட்டத்தில் விடுதலைப் போராளிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும், மக்கள் சக்தியை ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் திரட்டும் ஆயுதமாக "தினமணி' விளங்கியது.

"தினமணி'யின் முதல் பதிப்பு சென்னையில் 1934-ம் ஆண்டு உதயமானது. அதன்பிறகு 1951-ல் மதுரை பதிப்பும், 1990-ல் கோவை பதிப்பும் உருவானது. அதன்பின்னர், 2003-ல் திருச்சியிலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் திருநெல்வேலி, வேலூர் ஆகிய ஊர்களிலும் பதிப்புகளைத் தொடங்கிய தினமணி தனது ஏழாவது பதிப்பை அதியமான் பூமியான தருமபுரியில் 2010-ஆம் ஆண்டிலும், தலைநகர் தில்லியில் 2011-ஆம் ஆண்டிலும், விழுப்புரத்தில் 2013-ஆம் ஆண்டிலும் பதிப்புகளைத் தொடங்கி இப்போது உங்கள் "தினமணி' நாளிதழின் நாகைப் பதிப்பு இன்று மலர்ந்திருக்கிறது.

நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதிகளுக்கென்று ஒரு தனிப் பதிப்பு தேவைதானா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஏனைய நாளிதழ்கள் எதுவுமே நாகை, திருவாரூர் பகுதிகளிலிருந்து வெளிவராத நிலையில், "தினமணி' நாளிதழ் இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கியது ஏன் என்று சிலர் கேட்கக் கூடும். அதற்குக் காரணம் இருக்கிறது.

தமிழகத்திலுள்ள எந்த அச்சு, ஒளி ஊடகங்களை எடுத்துக் கொண்டாலும், ஓர் ஆண்டின் 365 நாள்களில் குறைந்தது 300 நாள்களாவது நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதிகள் தொடர்பான ஏதாவது ஒரு செய்தி இல்லாமல் வெளி வருவதே இல்லை. அது காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பிரச்னையாக இருக்கலாம் அல்லது நாகை மீனவர்கள் பிரச்னையாக இருக்கலாம். ஆனால் நாகை, திருவாரூர் மாவட்டம் செய்தியில் அடிபடாமல் இருப்பதே இல்லை.

இப்படிப் பிரச்னைகள் தொடர்ந்து இருக்கும் பகுதியிலிருந்து ஒரு நாளிதழ் வெளிவரும்போது, அந்தப் பிரச்னைகளை மாநில, தேசிய அளவில் உரக்க ஒலிக்கச் செய்ய முடியும் என்பதும், அதன்மூலம் தீர்வுக்கு வழிகோல முடியும் என்பதும் எங்கள் நம்பிக்கை. குறிப்பாக, தலைநகர் தில்லியிலிருந்து வெளிவரும் ஒரே நாளிதழ் என்கிற பெருமைக்குரிய தினமணியால் மட்டுமே அது சாத்தியம் என்பதை உலகறியும்.

நாகையில் பதிப்புத் தொடங்கும்போது "தினமணி' முன்வைக்க விரும்பும் இன்னொரு கோரிக்கை, நாகை மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்தைத் தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்பது. மயிலாடுதுறையைச் சேர்ந்த மக்கள் மாவட்டத்தின் தலைநகரான நாகைக்கு வருவதற்கு யூனியன் பிரதேசமான காரைக்கால் வழியாகவோ, திருவாரூர் மாவட்டம் வழியாகவோதான் வந்தாக வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு மேல் பயணிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, காரைக்கால் வழியாக வாகனங்களில் வரும் பயணிகள் புதுச்சேரி அரசுக்கு நுழைவு வரி செலுத்தும் கட்டாயமும் உண்டு.

2004-ஆம் ஆண்டில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட இருந்த நிலையில், சுனாமி ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் ஆகியவை மாவட்டங்களாகச் செயல்பட முடியுமானால், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி வட்டங்களையும், 286 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ள மயிலாடுதுறை வருவாய்க் கோட்டம் ஏன் தனி மாவட்டமாகச் செயல்படக் கூடாது என்கிற கேள்வியை "தினமணி' உரக்க எழுப்பி, அந்தப் பகுதி மக்களின் உணர்வைப் பிரதிபலிக்க விரும்புகிறது.

"தினமணி' நாளிதழின் நிறுவன ஆசிரியரான டி.எஸ். சொக்கலிங்கமும், நீண்ட நாள் ஆசிரியராக இருந்த பெரியவர் ஏ.என். சிவராமனும் இட்டுத் தந்திருக்கும் அடித்தளத்தில் தொடர்ந்து நடைபோடும் உங்கள் "தினமணி' தனது பத்தாவது பதிப்புடன் வீறு நடை போடத் தயாராகிறது.

இப்போதும், ஒவ்வொரு நாளும் "இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்கிற எண்ணத்துடனும், ஓர் ஆவணப் பதிவைத் தமிழ்கூறும் நல்லுலகத்தின் முன் வைக்கிறோம் என்கிற உணர்வுடனும்தான், "தினமணி' நாளிதழ் தினந்தோறும் உருவாக்கப்படுகிறது.

இதில் வியப்படைய ஒன்றுமில்லை. 1934-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் நாள் "அறிமுகம்' என்கிற முதல் தலையங்கத்தில் எங்களது நிறுவன ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் எதையெல்லாம் "தினமணி' நாளிதழின் குறிக்கோளாகக் குறிப்பிட்டிருந்தாரோ, அந்த லட்சிய வேட்கையும், அர்ப்பணிப்பு உணர்வும் இன்று வரை தொடர்கிறது, அவ்வளவே!

"எல்லா வியாதிகளிலும் மனோ வியாதியே மிகக் கொடியது. நமது மக்கள் மனதில் அடிமைத்தனம் குடி கொண்டிருக்கிறது. நமது பெரியாரிடத்தும், சிறியாரிடத்தும் அடிமைப்புத்தி அகன்றபாடில்லை. அதை அடியோடு ஒழித்து, தமிழ் மக்களை மானிகளாகச் செய்வதற்கு "தினமணி' ஓயாது பாடுபடும் என்றும், "சுதந்திர சூரியனைக் காண விரும்பிய தெய்வீகப் பித்தரான சுப்பிரமணிய பாரதியாரின் வருஷாந்திர தினத்தன்று அவருடைய சுதந்திரத் தாகத்தையும், சமத்துவக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் பரப்பும் நோக்கத்துடன் பிறந்திருக்கும் "தினமணி'யைத் தமிழ் மக்கள் முன்வந்து வரவேற்பார்கள் என்பது நமது பரிபூரண நம்பிக்கை என்றும் எங்களது நிறுவன ஆசிரியர் தனது முதல் நாள் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கும் அதே காரணங்களை முன்னிறுத்தி, இப்போதும் "தினமணி'யின் பயணம் தொடர்கிறது. அந்தப் பயணத்தில் "தினமணி'யின் நாகைப் பதிப்பு மற்றுமொரு மைல் கல்.

தமிழுணர்வு, தேசியக் கண்ணோட்டம், சமத்துவச் சிந்தனை, ஆன்மிக எழுச்சி என்று தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் "தினமணி', நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் வாழ் மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் பிரதிபலிக்கவும், அவர்களது நல்வாழ்வுக்கு உறுதுணையாக நிற்கவும் இன்று முதல் இந்தப் பதிப்பை வெளிக்கொணர்கிறது.

பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும், இந்தியாவில் மக்களாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்துவதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் எங்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வாசகர்களுக்கும், முகவர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றி.

தமிழால் இணைவோம்! தமிழுக்காக இணைவோம்!!

குடிகளும் கோடிகளும்

Dinamani



By ஆர்.எஸ். நாராயணன்

First Published : 02 November 2015 01:39 AM IST


"பாரத சமுதாயம் வாழ்கவே
வாழ்க வாழ்க பாரத சமுதாயம்
வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்க
முழுமைக்கும் பொதுஉடமை
ஒப்பில்லாத சமுதாயம் உலகத்திற்கு
ஒரு புதுமை...'
- சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு மாஸ்கோவில் நிகழ்ந்த போல்ஷ்விக் புரட்சியின் பின்னணியை நினைவில் நிறுத்தி பாரதியார் பேசிய பொதுஉடமை இன்று நகைப்பிற்குரியதாகிவிட்டது. ரஷியாவும் சீனாவும் இன்று தனிஉடமை ராஜ்ஜியங்களாகிவிட்ட போது பாரத சமுதாயம் எம்மாத்திரம்? முப்பது கோடி ஜனங்கள் இன்று 126 கோடியாகிவிட்டனர்.
"மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனி உண்டோ?' உண்டு. உண்டு. உண்டு.
சென்ற வாரம் எனக்குப் பழக்கமான ஒரு விவசாயி என்னிடம் வந்தார். "மழையை நம்பி தக்காளி பயிரிட்டேன். கருகிவிட்டது. வறட்சி தாங்கி வளர்ந்த வாடாமல்லி விலையில்லாமல் வாடிவிட்டது. வாங்கிய கடனை அடைக்க மாட்டை விற்றேன். பாலுக்கும் விலை இல்லை. மாட்டுக்கும் விலை இல்லை... மாடு விற்ற காசில் மக்காச் சோளம் போட்டுள்ளேன்... அரிசி வாங்கப் பணம் இல்லை. இட்லிக் கடையிலும் கடன்... ஐயா பெரிய மனது பண்ணி அவசரத்திற்கு ஆயிரம் ரூபாய் தாருங்கள். மக்காச்சோளம் அறுத்ததும் தருகிறேன்...' என்று கடன் கேட்டார். எனக்கு வள்ளுவர் கவனத்திற்கு வந்தார்.
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்!'
126 கோடி இந்திய மக்களில் சுமார் 3 கோடி மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பான வேலை உள்ளது. சுமார் 60 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியிருந்தாலும், கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து விவசாயம் செய்கிறார்கள். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வழியில்லாமல் தூக்கில் தொங்கத் தயங்குவதில்லை.
இனி பணம் இல்லாதவரைப் பற்றிப் பேசாமல் செல்வந்தர்களைப் பற்றிப் பேசலாமே! சுமார் 60 சதவீத இந்தியர்கள் வறுமைக் கோட்டில் வாழ்ந்தாலும், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து செல்வதாக கிரெடிட் சூசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு, மேலும் 24,000 கோடீஸ்வரர்களை இந்தியா உருவாக்கிவிட்டது. இரண்டு லட்சம் கோடீஸ்வரர் இலக்கை இந்தியா எட்டிவிட்ட நிலையில் இந்த உயர்வு சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனேசியா நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
126 கோடி இந்தியர்களில் 0.4 சதவீதம் மக்களின் வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலருக்கு மேல். ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் மட்டுமே இந் நாட்டு மன்னர்கள். "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்று பாடிய பாரதியின் வாக்கு பொய்த்துப் போனது. ஓட்டுரிமையுள்ள குடிமக்கள் ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை பெற்றுக் கொண்டு பிரஜா உரிமையை மறந்து ஊழலுக்கு விலை போனதால் ஜனநாயகம் பணநாயகமானது.
அடுத்த கேள்வி, இந்தியாவில் யார் யாரெல்லாம் கோடீஸ்வரர்கள்? அவர்களின் தொழில்கள் எவை என்று கவனித்தால் அரசியல், பங்குச்சந்தை, ஹவாலா, கள்ளக்கடத்தல், கனரகத் தொழில், மென்தகடு, செல்லிடப்பேசி, உலாபேசி 2ஜி, 3ஜி, 4ஜி என்று பல இருப்பினும், பல்லடுக்கு மாளிகை - ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், பங்குரிமை / பங்குத் தரகர்கள் முக்கியமானவர்கள். தேர்தல் ஆணையம் தரும் தகவல்களின்படி எம்.எல்.ஏ., எம்.பி. வேட்பாளர்களில் 90 சதவீதம் ரியல் எஸ்டேட், பங்குத்தரகு / பங்குதாரர்களாக உள்ளனர்.
இன்று எம்.எல்.ஏ. / எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமானால் அந்த வேட்பாளர் கோடீஸ்வரனாக இருக்க வேண்டும். கோடியே முதல் முக்கியத் தகுதியாக இருக்கிறது. இது அனைத்துக் கட்சிகளுமே பொதுவாக மேற்கொண்டிருக்கும் நடைமுறை.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தொண்டு நிறுவனம் "இந் நாட்டு மன்னர்கள்' தொடர்பாக வெளியிட்ட புள்ளி விவரத்தில் தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 50 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்கிறது.
தில்லியில் மக்களுக்காகவே நாங்கள் என்று மார்தட்டிப் பேசி போட்டியிட்டு வென்ற அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வேட்பாளர்களில் 33 பேர் கோடீஸ்வரர்கள். அவ்வாறே பா.ஜ.க., காங்கிரஸிலும் கோடீஸ்வரர்களே பெரும்பான்மையாகப் போட்டியிட்டனர்.
இந்திய அரசியலில் எல்லாக் கட்சியினரும் கோடீஸ்வரர்களையே களத்தில் இறக்கும் காரணம், கோடீஸ்வரர்களின் வெற்றியை 26 சதவீதம் உறுதி செய்யலாம். லட்சாதிபதிகளின் வெற்றிக்கு உறுதி ஏழு சதவீதமே.
இதைவிடத் திடுக்கிட வைக்கும் ஒரு புள்ளிவிவரம், ஒரு எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் அவர் போட்டியிட விரும்பினால் ஐந்தாண்டு இடைவெளியில் அவர் சொத்தைப் பன்மடங்கு பெருக்கியிருந்தால் மறுபடியும் சீட் கிடைக்க வழி உண்டு.
உதாரணமாக, தில்லி பிஜ்வாசன் தொகுதியில் 2008-இல் சத்பிரகாஷ் ராணா போட்டியிட்டபோது அவரிடம் ரூ.6.38 கோடி சொத்து இருந்தது. 2013-இல் நின்றபோது அவர் சொத்து ரூ.105.51 கோடி. ஐந்தாண்டு இடைவெளியில் தன் சொத்தை 16 மடங்கு உயர்த்தி சாதனை புரிந்துள்ளார்.
கோடிகளைப் பற்றி பேசும்போது மற்றொரு வகையான புள்ளிவிவரத்தையும் பொருத்திப் பார்க்க வேண்டும். தேர்தல் ஆணையம் தரும் தகவல் அடிப்படையில் - 543 மக்களவைத் தொகுதிகள், 2,700 மாநில சட்டப்பேரவைத் தொகுதிகள், 40 பெரிய அரசியல் கட்சிகள், 22 தேசிய மொழிக் கூட்டம் - செய்யும் செலவுகள் அடிப்படையில் இந்திய ஜனநாயகத்தின் அடக்கவிலை சுமார் ரூ.2,50,000 கோடி.
ஆகவே, அரசியல் என்பதும் ஒரு வகையான பங்குச் சந்தை சூதாட்டமே. ரூ.50 கோடி மதிப்புள்ள ஒரு பதவிக்கு இரண்டு கோடி செலவழிப்பதில் என்ன தவறு? வாக்குச்சீட்டின் விலை ரூ.500 அல்லது ரூ.1,000 என்று கொண்டாலும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வறுமைக்கோட்டில் வாழும் 60 சதவீத இந்தியர்களுக்கு இரண்டு நாள் கூலி, பிரியாணி, முட்டை, சாப்பாடு கிடைக்கிறதே. படித்த நகரவாசிகளுக்கும், கிராமத்து மேல்தட்டு மக்களுக்கும் பணம் பட்டுவாடா இல்லை.
இந்தியப் பொருளாதாரத்தில் பற்றாக்குறை பட்ஜெட் என்பது நாட்டின் நியதி ஆகிவிட்டது. இந்தியா விடுதலையான பிறகு புகழ்பெற்ற பொருளியல் மேதைகளான சிந்தாமணி தேஷ்முக், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, நேருவுக்குப் பின் சி. சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன் போன்றோர் பதவி வகித்த காலகட்டத்தில் பற்றாக்குறை கட்டுப்பாட்டில் இருந்தது.
ஒரு காலகட்டத்தில் ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, ராஜாஜி, கே.எம். முன்ஷி, காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்ற அப்பழுக்கற்றத் தலைவர்கள் இந்தியாவை ஆண்டபோது சிறு சிறு ஊழல் புகார்கள் எழுந்ததுண்டு.
அரசு அதிகாரிகள் ஊழல் செய்தனர். நேரு காலத்து அமைச்சர்கள் ஊழல் என்றால் ஓட்டம் பிடிப்பார்கள். அன்று அரசியல் வியாபாரமில்லை. கக்கனைப் போல் ஒருவர் அமைச்சராக முடிந்தது. இன்று அப்படி இல்லை. ரியல் எஸ்டேட், பங்குகள், தனியார் பொறியியல் கல்லூரி என்று கோடியை அடையாளப்படுத்தும் தொழில் வேண்டும். சரி, பற்றாக்குறை பட்ஜெட்டுக்கு வருவோம்.
பற்றாக்குறை பட்ஜெட்டின் பன்முக வளர்ச்சிக்கு மன்மோகன் சிங் நிதியமைச்சராயிருந்தபோது வித்திட்டார். பின்னர், ப.சிதம்பரம் விருட்சமாக அதை வளர்த்தார். சிதம்பரம் சென்றார். அருண் ஜேட்லி வந்தார். எத்தனை ஜேட்லி வந்தாலும் இந்த நிலையைக் குறைப்பதோ, மாற்றுவதோ எளிதல்ல.
ஒரு சாதாரண மனிதனுக்குப் பற்றாக்குறை பட்ஜெட் என்ற தத்துவம் புரியாது. பற்றாக்குறை என்றால் அப்படியே விட்டுவிடுவதல்ல. பற்றாக்குறையை ஈடுசெய்ய வரம்பு மீறும் வழியில் ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்கும்.
அரசு கஜானாக்களுக்கு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வந்துவிடும். இப்படி நோட்டுகள் அச்சடித்து வழங்கினால் பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயரும். விலைவாசி உயரும்போது வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுவர். சரி சரி.
இப்படி அச்சடித்த நோட்டுகள் எங்கே போயிற்று? பல கோடி ரூபாய் செலவு செய்து எம்.பி., எம்.எல்.ஏ. ஆனவர்கள் எவ்வளவு கோடி சம்பாதித்தார்கள்? இதற்கெல்லாம் விடை வேண்டினால் ஆடிட்டர் ஜெனரல் விடை தருவார்.
2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ச ஊழல், ஆகாச ஊழல் என்று அவருக்குத் தெரிந்தவற்றைக் கூறலாம். தெரியாத கணக்குகள் எவ்வளவோ?
இந்தியாவில் மாபெரும் பதவிகளை வகித்த மாண்புமிகு அமைச்சர்களும், மாபெரும் அரசு செயலாளர்களும், தத்தம் கோடீஸ்வரர் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ள லட்சம் லட்சமாகக் கையூட்டுகளைப் பெற்று வளர்ச்சிக்கான ஒப்பந்தங்களுக்குக் கையொப்பம் இட்டு, ஒப்பந்தப் போர்வையில் வளர்ந்த தொழில் மன்னர்கள், ரியல் எஸ்டேட் மன்னர்கள், பங்குத்தரகு மன்னர்கள் ஆகியோரையும் அரவணைத்து இரண்டு லட்சம் கோடீஸ்வரர்களை உருவாக்கினார்கள்.
இரண்டு லட்சம் கோடீஸ்வரர்களால் இது கோடி நாடு. ஆனால், இந்தியா என்று குடிமக்கள் நாடாக மாறும்?

126 கோடி இந்திய மக்களில் சுமார் 3 கோடி மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பான வேலை உள்ளது. சுமார் 60% மக்கள் விவசாயத்தை நம்பியிருந்தாலும், கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து விவசாயம் செய்கிறார்கள்.

சோதனை அல்ல வாய்ப்பு!


Dinamani

By ஆசிரியர்

First Published : 02 November 2015 01:37 AM IST


மக்களின் மருத்துவ நலன் கருதி சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டாம் என்றும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அண்மையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பில் தெரிவித்திருக்கும் கருத்து புதியதல்ல. இதே கருத்தை 1988-ஆம் ஆண்டும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. தற்போதைய வழக்கில், ஆந்திரம், தெலங்கானா ஆகியன குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுள்ளதால், அந்த மாநிலங்களின் நடைமுறையில் தலையிட இயலாது என்று கூறியுள்ள நீதிமன்றம், தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவப் படிப்புக்கு இடஒதுக்கீடு அமலில் உள்ளதால் அதுகுறித்த விசாரணையை வரும் நவம்பர் 4-ஆம் தேதி எடுத்துக் கொள்ளவிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு வெளியான நாள் முதல், தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் "சிறப்பு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும்' என்று தமிழக அரசுக்கு அழுத்தம் தந்து வருகின்றனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதேபோன்றதொரு வழக்கில் முன்பு தீர்ப்பு வழங்கியபோது, மருத்துவம் போன்ற உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை அளிக்க வேண்டிய உயர் கல்வியில் திறமைதான் மதிக்கப்பட வேண்டும், இடஒதுக்கீடு போன்ற சலுகைகளில் அடிப்படையில் உயர் மருத்துவக் கல்வியில் மருத்துவர்கள் சேர்க்கப்படுவது நன்மை அளிக்காது என்று தெரிவித்திருந்தனர்.
உச்சநீதிமன்றம் ஏன் சிறப்பு மருத்துவத்தில் திறமை மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது என்பதை எந்தப் பாமரனும் புரிந்துகொள்ள முடியும். மிகவும் சிறப்பு மருத்துவர்களாக இருப்பவர்கள் தனித்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சைகளையும், நுட்பமான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்க வேண்டியவர்கள். இருதயம், நரம்பியல், சிறுநீரகம், இரைப்பை, வயிறு, புற்றுநோய் என துறை சார்ந்த நிபுணத்துவம் பெறுவதற்காகவே சிறப்பு மருத்துவப் படிப்பு தேவையாக இருக்கிறது. இந்நிலையில், இத்தகைய உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும் படிப்பில் இடஒதுக்கீடு தேவையில்லை என்பதையும், வெறும் வாக்கு வங்கி, ஜாதி அரசியலுக்காக இந்த விவகாரத்தை அரசியல்வாதிகள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதையும் எவரும் புரிந்துகொள்ள முடியும்.
இடஒதுக்கீடு வேண்டும் என்று குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் அனைவருமே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும்போது, எவர் திறமையானவரோ, யார் சிறந்த மருத்துவர் என்று மற்றவர்கள் பரிந்துரைக்கிறார்களோ அவர்களையே சாதி வேறுபாடு பார்க்காமல் தேர்வு செய்கின்றனர். அல்லது வெளிநாடு சென்று, பெருஞ்செலவு செய்து, அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள். அவரவர் உயிர் என்றால் மட்டும் திறமை அவசியமாகிறது. பொதுமக்களின் தேவை என்று வரும்போது வாக்கு வங்கி, ஜாதி அரசியல்தான் முன்னுரிமை பெறுகிறது.
இன்றைய மருத்துவ உலகின் மிகப்பெரும் அவலம், திறமையுள்ள மருத்துவர்கள் பெரும்பாலும் வெளிநாடு சென்றுவிடுகின்றனர். தங்களது குடும்பச் சூழ்நிலை காரணமாகவோ தேசப்பற்று காரணமாகவோ இந்தியாவில் பணியாற்றும் சிலரை தனியார் மருத்துவமனைகள்தான் பயன்படுத்திக் கொள்கின்றன. அவர்களை அரசு மருத்துவமனைகள் போதிய ஊதியம் அளித்து பயன்படுத்திக் கொள்வது இல்லை.
இதனால் அரசு மருத்துவமனைகளும், அவற்றுக்கு அரசு ஒதுக்கும் பணமும் வீணாகிப் போவதுடன், சிறந்த மருத்துவர்கள், சாதனை மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் நடுத்தர மக்களின் நம்பிக்கையை அரசு மருத்துவமனைகள் இழக்க நேரிடுகிறது. அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கு மட்டுமே என்பதாகவும், அதனால் ஏனோ, தானோ என்று சிகிச்சை அளிக்கலாம் என்பதாகவும் நிலைமை மாறிவிடுகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் இடஒதுக்கீட்டு முறையில் சேரும் தாழ்த்தப்பட்ட மாணவர்களில் 99% பேர் அதிக வருவாய் பெறும் அரசு ஊழியர் குடும்பப் பின்னணி கொண்டவர்களே. கிரீமி லேயர் முறை அமலில் இல்லாததால் முன்னேறியவர்களே இந்த இடஒதுக்கீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு, மற்ற தாழ்த்தப்பட்ட பின்தங்கிய மாணவர்களுக்குத் தடைக்கல்லாக இருக்கிறார்கள். இந்நிலையில், முதுநிலை மருத்துவத்திலும் (எம்.டி.) இடஒதுக்கீடு, சிறப்பு மருத்துவத்திலும் இடஒதுக்கீடு வழங்காவிடில், சமூகநீதி பாதிக்கப்படும் என்ற வாதம் பொருந்தாது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15% எம்.பி.பி.எஸ். இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. சிறப்பு மருத்துவப் படிப்புக்கு தமிழ்நாட்டில் 189 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடம் வழங்கப்படுவதில்லை. இருப்பினும், இடஒதுக்கீடு முறை அமலில் இருக்கிறது.
தமிழக அரசு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்குவதாக இருந்தால் இந்த 189 இடங்களுக்கு மட்டும் முழுக்க முழுக்கத் திறமை அடிப்படையில் மருத்துவர்களைச் சேர்ப்பதுடன், இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவும், மருத்துவக் கல்லூரிகளில் விரிவுரையாற்றவும் வேண்டும் என்பதை உறுதிமொழியாகப் பெற வேண்டும்.
தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் போதுமான எண்ணிக்கையில் சிறப்பு மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் தொடர்வதில் உள்ள சிக்கல்களுக்கு இது ஒரு தீர்வாக அமையும். மேலும், அரசு மருத்துவமனை திறமை அடிப்படையில் வந்த மருத்துவர்களால் நிரம்பும். உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பை தமிழக அரசு சாதகமாக மாற்றிக் கொள்ள நல்லதொரு வாய்ப்பு காத்திருக்கிறது.

போலி கல்விச் சான்றிதழ் விவகாரம்: டிஸ்மிஸ் செய்யப்பட்ட 13 ஓட்டுநர்கள் உயர் அதிகாரிகளின் உறவினர்கள்: விசாரணையில் தகவல் ....சுப.ஜனநாயகச்செல்வம்

Return to frontpage

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலத்தில் 1991 முதல் 2002-ம் ஆண்டு வரை, எட்டாம் வகுப்பு போலி கல்விச் சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த ஓட்டுநர்கள் 13 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அப்போது பணிபுரிந்த உயர் அதிகாரிகளின் உறவினர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழகத்தின் காரைக்குடி மண் டலத்தில் சிவகங்கை, ராமநாத புரம் ஆகிய இரு மாவட்டங்கள் அடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவ கங்கை, தேவகோட்டை, திருப்பத் தூர், தேவகோட்டை பழுது பார்க் கும் மையம் ஆகிய 5 கிளைகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட் டத்தில் ராமநாதபுரம் நகர், புறநகர், கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமேசுவரம், மதுரை உத்தங்குடி என மொத்தம் 12 கிளைகள் உள்ளன.

இங்கு, 1991, 1992, 1994-ம் ஆண்டில் தலா ஒருவர், 1993-ல் 5 பேர், 1997-ல் 2 பேர், 1998-ல் 3 பேர், 2001, 2002-ல் தலா ஒருவர் என மொத்தம் 15 பேர் ஓட்டுநர் பணிக்கு நியமிக்கப்பட்டனர். உண்மைத் தன்மை அறியும் சோத னையில் இவர்களது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான கல்விச் சான்றிதழ் போலி எனத் தெரியவந்தது.

இவர்களில் பலர் அப்போது பணியாற்றிய உயர் அதிகாரிகளின் உறவினர்கள் என்பதால், போலிச் சான்றிதழ் எனத் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது, 15 பேரில் இரண்டு பேர் இறந்துவிட்டனர். இவர்கள் மீது கடந்த 2005-ம் ஆண்டு குற்றச்சாட்டு குறிப்பாணை உறுதியானதால் மீதம் உள்ள 13 பேரை அதிகாரிகள் கடந்த வாரம் டிஸ்மிஸ் செய்துள்ளனர்.

இதுகுறித்து காரைக்குடி மண்டல போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் `தி இந்து’விடம் கூறியதாவது:

தொழிலாளரின் பயிற்சிக் காலமான 240 நாட்களுக்குள் ளாகவே சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிந்து நீக்கியிருக்க வேண்டும். அப்போது நியமனம் பெற்றவர்களில் பலர் காரைக்குடி மண்டல உயர் அதிகாரிகளின் உறவினர்கள்.

எனவே, போலி கல்விச் சான்றிதழ் எனத் தெரிந்தும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.

சில நேர்மையான அதிகாரி கள் தற்போது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசின் விதிமுறைகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்ட அந்த உயர் அதிகாரிகள் தற்போது சென்னை போன்ற இடங்களில் உயர் பதவியில் உள்ளனர். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் ஓய்வு பெற்றிருந்தால் ஓய்வூதியத்தை நிறுத்த அரசு நடவடிக்கை வேண்டும் என்றனர்.

போலிக் கல்விச் சான்றிதழ் வழங்கிய 13 ஓட்டுநர்கள் டிஸ் மிஸ் ஆன விவகாரத்தில் தொடர் புடைய அதிகாரிகள் தற்போது கலக்கம் அடைந்துள்ளனர்.

பெண் எனும் பகடைக்காய்: ஆதலினால் லெகிங்ஸ் அணிவீர் பா.ஜீவசுந்தரி

Return to frontpage

சமீபத்தில் ஒரு முதியோர் இல்லத்துக்கு விசிட் செய்தபோது, அங்கிருந்த வயதான பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அணிந்திருந்த உடை நைட்டிதான். இப்போது நைட்டி இல்லாத வீடுகளே கிடையாது இல்லையா! சின்னக் குழந்தைகளில் ஆரம்பித்து வயது முதிர்ந்தவர்கள்வரை அணிந்து கொள்ளும் ‘தேசிய உடை’ என்ற பெருமையை நைட்டிக்குக் கொடுத்துவிடலாம்.

பால் பாக்கெட்டோ, பச்சை மிளகாயோ ஏதோ ஒன்றை அவசரத் தேவைக்கு வாங்க சங்கோஜமில்லாமல் நைட்டி அணிந்தே கடைக்குப் போகும் பெண்கள் இன்று சர்வ சாதாரணம். சங்கோஜிகளாக இருக்கும் சிலர் ஒரு டவலை நைட்டியின் மீது குறுக்காக அணிந்துகொள்கிறார்கள். அதற்கு மேல் சங்கோஜம் கிடையாது.

இந்த நைட்டி உடை குறித்து அனைத்து வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் சொன்னது: “இரவில் மட்டுமல்ல, பகலிலும் வீட்டில் இருக்கும்போது நைட்டிதான் அணிகிறோம். உடலை இறுக்கிப் பிடிக்காமல் தளர்வாக இருக்கும் அந்த உடை எங்களுக்கு வசதியாக இருக்கிறது. வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் இடைஞ்சல் இல்லாமல் இருக்கிறது”.

இது அவர்களே, அவர்கள் அணிந்துகொள்ளும் உடை பற்றி, அனுபவபூர்வமாக வெளிப்படுத்திய பொதுக் கருத்து.

அடுத்து, லெகிங்ஸ் பற்றிய பேச்சு எழுந்தது. இது இளம் பெண்களை வெகுவாகக் கவர்ந்த உடை. இன்று இளம் பெண்கள் விரும்பி அணியும் உடை. புதிய விஷயங்களை சமூகத்துக்குக் கொண்டு வந்து சேர்ப்பது இளைய தலைமுறைதானே. இந்த நைட்டியையும் மூத்த தலைமுறை மற்றும் அன்றைய கலாச்சாரக் காவலர்களின் எதிர்ப்பையும் மீறி கொண்டுவந்து இன்று உலகமே அணியும் ஆடையாக மாற்றியவர்களும் அன்றைய இளம் தலைமுறையினர்தானே. இன்று லெகிங்ஸை நமக்கு அறிமுகப்படுத்தி யிருக்கிறார்கள். ஏனாம்? இதோ அவர்கள் சொல்கிறார்கள்:

“லெகிங்ஸ், நைட்டி மாதிரி தளர்வான உடை அல்ல. உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைதான். ஆனால், வசதியாக இருக்கிறது. பேருந்து, ரயில் பயணங்களின்போது ஓடிப்போய் வண்டியைப் பிடிப்பது எளிது. நிறைய கலர்களில் கிடைக்கிறது. எல்லா கலர்களிலும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். விலை மிகக் குறைவு. டாப்ஸ் மட்டும் தனியாக வாங்கினால் போதும். வித விதமான மேட்சிங்கில் அணியலாம். முக்கியமாக, மாதவிடாய்க் காலங்களில் மிக மிகப் பாதுகாப்பாக உணர வைக்கும்”

இப்போது பேன்ட் ஆண்களின் உடை மட்டுமல்ல; பெண்களும் பேன்ட், ஜீன்ஸ், முக்கால் பேன்ட், அரைக்கால் பேன்ட் எல்லாவற்றையும் விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டார்கள். முக்கால் பேன்ட் டீன் ஏஜ் பெண்களின் பெரு விருப்பம். காஷுவலாக வீட்டிலும் அவுட்டிங்கிலும் அணிந்துகொண்டு சுதந்திரமாகப் போய் வருகிறார்கள்.

புடவை- எவர்கிரீன் உடை. ஆயிரம் வசதிக் குறைவுகள் இருந்தாலும் அனைவரும் ஆராதிக்கும் உடை. நகரம், கிராமம், பட்டி தொட்டி, இளசு, கிழடு எந்த வேறுபாடும் பார்க்காமல் எல்லோரிடமும் போய் ஒட்டிக்கொள்ளும் பாரம்பரியம் மிக்கது. காட்டன், பட்டு எதுவானாலும் பரவாயில்லை. பெண்களைவிட, ஆண்களுக்கு மிகவும் பிடித்த, அவர்களை மிகவும் கவர்ந்த உடை என்பது மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட்.

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோமா?

ஒரு கவிஞர், அதிலும் ‘ஆண் கவிஞர்’ நைட்டியைப் பற்றித் தன் கவிதை ஒன்றில் இப்படி வர்ணிக்கிறார்:

‘சிலிண்டருக்கு மாட்டிய உறை போன்றது’.

அது அவர் பார்வை. அதைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், ‘இங்கு பெண்கள் எல்லோரும் சிலிண்டர்களா?’ என்பதை மட்டும் சிறு கேள்வியாகக் கேட்டு வைப்போம். அத்துடன் அழுத்தம் மிகுந்தால் சிலிண்டர் வெடித்துச் சிதறும் என்பதையும் ஒரு எச்சரிக்கையாகச் சொல்லி வைப்போம்.

மிகுந்த சர்ச்சையைக் கிளப்பிய உடை என்றால், அது இந்தப் பாழாய்ப் போன லெகிங்ஸ்தான். நான் சின்ன வயதில் பார்த்த ராஜா ராணி கதையுள்ள சினிமாக்களில் எல்லாம் எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., காந்தாராவ் போன்ற பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் இறுக்கமான லெகிங்ஸ் அணிந்து, மேலே கவுன் போட்டுக்கொண்டு பாய்ந்து பாய்ந்து கத்திச்சண்டை போடுவார்கள். ராஜ, விஜயலலிதா, ஜெயலலிதா போன்ற ஹீரோயின்களும் ஸ்கின் கலரில் இதைப் போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடுவார்கள். அந்த உடை என்பது ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுவான உடை என்று அப்போது நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

அதன் பெயர் லெகிங்ஸ் என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. வளர்ந்து பெரிய பெண்ணானதும் நானும் இப்படி உடை உடுத்தி அழகு பார்ப்பேன் என்றெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். என்ன செய்வது? கெரகம், நம் ஆசையெல்லாம் நிறைவேறுமா? லெகிங்ஸ் சந்தைக்கு வர இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது. சின்ன வயது ஆசையை திருப்தியாக இப்போதுதான் நிறைவேற்றிக் கொண்டேன்.

ஆனால், பாருங்கள்... அநியாயத்துக்கு ஓரவஞ்சனையாகப் பெண்களுக்கு மட்டுமேயான உடையாக அதை இந்த நாகரிகக் கோமாளிகள் மாற்றிவிட்டார்கள். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆண்களும் இதை அணிந்துகொள்ளச் சட்டம் இயற்ற வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைக்கிறேன்.

பெண்கள் இந்த உடை தங்களுக்கு வசதியானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்ததைப் போல ஆண்களும் அணிந்து பார்த்தால்தான் அதன் அருமை அவர்களுக்குத் தெரியும் என்பதால் இதைப் பரிந்துரைக்கிறேன். அடுத்த வாரம் வரவிருக்கும் தீபாவளிக்கு லெகிங்ஸ் வாங்குவீர்; அணிந்து மகிழ்வீர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். இங்கு பாரதியையும் கொஞ்சம் துணைக்கு அழைக்கிறேன்.

ஆதலினால் லெகிங்ஸ் அணிவீர் ஆடவரே.

கொசுறு

‘பிரதி தின் டைம்’ என்ற அஸ்ஸாமிய செய்தி சானல், சில மாதங்களுக்கு முன், குரங்கு ஒன்று பேன்ட் அணிந்திருந்த படத்தைக் காண்பித்து, ‘இப்போதெல்லாம் குரங்குகள் பேன்ட் அணிகின்றன. குவாஹாட்டியில் உள்ள இளம் பெண்கள் ‘ஷார்ட்ஸ்’ அணிகிறார்கள் என்ற செய்தியை ஒளிபரப்பியது. இது குறித்து பாலின உரிமை ஆய்வாளர் மீனாட்சி பரூவா, ‘தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதோடு, போலீஸைவிட மீடியாக்களுக்குப் பெண்கள் அதிகம் பயப்பட வேண்டியுள்ளது’ என கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்காக சானலின் செய்தி ஆசிரியரும் பின்னர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

சென்னை உயர் நீதிமன்ற இணையதளம் நவீன வடிவில் புதுப்பொலிவு பெறுகிறது: பார்வையற்றோரும் ஒலி வடிவில் தகவல்களை அறியலாம் ....... டி.செல்வகுமார்



சென்னை உயர் நீதிமன்ற இணைய தளம் பல்வேறு புதிய தகவல்களுடன் புதுப்பொலிவு பெறுகிறது. பார்வையற்றோரும் ஒலி வடிவில் தகவல்களை பெறும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்வதில் இருந்து தீர்ப்பு பெறும் வரை ஒவ்வொரு நடைமுறைக்கும் விதி முறைகள் உள்ளன. இதுகுறித்த அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய இணையதளத்தை புதிதாக வடிவமைக்கும்படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உத்தரவிட்டார்.

அதன்படி, உயர் நீதிமன்ற இணையதளத்தை பல்வேறு அம்சங்களுடன் புத்தக வடிவில் மறுவடிவமைப்பு செய்ய 6 மாதங் களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. இதையடுத்து தேசிய தகவல் மையத்திடம் விவாதிக்கப்பட்டது. அந்த மையம், இணைய தளத்தின் சில மாதிரிகளை அளித்தது. அவற்றை நீதிபதி ராம சுப்பிரமணியன் தலைமையிலான கம்ப்யூட்டர் குழு பார்வையிட்டது. இணையதளத்தின் மாதிரிகளில் இருந்து ஒன்றை கம்ப்யூட்டர் குழு தேர்வு செய்தது. அதற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தை புதுப்பிப்பதற்கான மென் பொருள் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கு வதற்கு ஆரம்பகட்ட தொகையை தேசிய தகவல் மையத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, உயர் நீதிமன்ற இணையதளம் புதிய தொழில்நுட்பத்தில் வடி வமைக்கப்படுகிறது. இதில், நீதித்துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பார்வையற் றோரும் ஒலி வடிவில் தகவல் களை தெரிந்துகொள்ள முடியும்.

மக்களுக்கு பொதுவாக எழும் சந்தேகங்கள் (எப்.ஏ.க்யூ), வழக்கு தாக்கல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள் ளிட்ட அம்சங்கள் புதிதாக சேர்க் கப்படுகின்றன. இதன்மூலம், மனு தாக்கல் செய்யும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இதுகுறித்து உயர் நீதிமன்ற உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்ற இணையதளம் புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்படுகிறது. இதில், உயர் நீதிமன்ற வளாகத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் பழமையான, பராம்பரியமிக்க கட்டிடங்கள் பிரமாண்டமாக இடம்பெறுகின்றன.

பொதுவான சந்தேகங்கள் (எப்.ஏ.க்யூ.) உள்ளிட்ட புதிய விஷயங்கள் இணையதளத்தில் சேர்க்கப்படுவதால், அதுதொடர் பான தகவல்கள் திரட்டப் படுகின்றன. ஊழியர்கள் பற் றாக்குறையால் இப்பணி தாமதமாகிறது. புதிய நீதிபதி களின் சொத்து விவரம், சட்டக் கமிஷனின் சுற்றறிக்கை, பொது மக்களுக்கு பயனுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள் ளிட்டவற்றை தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்ற பிறகுதான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். இதுவும் தாமதத்துக்கு ஒரு காரணம். இன்னும் 3 மாதங்களில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தை 100 சதவீத தகவல்களுடன் புதிய வடிவமைப்பில் பார்க்கலாம்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

MBBS seats denied can’t be given: Supreme Court Manish Raj,TNN | Nov 2, 2015, 01.40 AM IST

CHENNAI: What happens to students if their admission is cancelled by a college even though they were not at fault? They can be awarded compensation, but not granted admission because of "lapse of time," said the Supreme Court, agreeing with an earlier verdict of the Madras high court. It also upheld the award of 3 lakh as compensation to two students, who, despite being in the merit list of a private medical college, were denied admission.

In March 2013, Nihaal Ahamed and Gayathri submitted applications for admission in MBBS course to Tamil Nadu Private Professional Colleges Association affiliated to Tamil Nadu Dr MGR Medical University. They preferred Velammal Medical College Hospital and Research Institute. After the results were announced on September 23, 2013, they went to the college the next day. As they were directed to come after three days, the students complained against the college to the admission monitoring committee which in turn asked the college to submit its reply.

The college then drafted letters dated September 24, 2013—which were posted only on September 29, 2013—asking the students to appear for counselling on September 26, 2013. After receiving the letters, the students immediately approached the college only to be refused admission on the ground that they failed to appear on the stipulated day. The students then moved the Madras high court (Madurai bench). A single judge order said though the students were not eligible for admission, the college had to pay them a compensation of 3 lakh each. After another round of litigation, a division bench set aside the court's earlier order to award compensation.

Ahamed and Gayathri then filed an appeal in the Supreme Court challenging the denial of admission. Counsel for the students said the college had "malafide intention" and resorted to sending "ante-dated letters" to "wriggle out of the complaint" filed by the students. Denying this, counsel for the college said the letters were sent only after orally instructing the students to appear on the stipulated date.

The bench, however, set aside the division bench's verdict rejecting payment of compensation and directed the college to pay the compensation within eight weeks.

Sunday, November 1, 2015

Published: October 31, 2015 07:45 IST Updated: October 31, 2015 07:47 IST கடத்தப்பட்ட மருத்துவ மாணவரை குழிதோண்டி புதைக்க முயற்சி? - ஆர்.எஸ்.மங்கலத்தில் நடந்த போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Return to frontpage

சென்னை தாம்பரம் வெங்கடேசன் தெருவைச் சேர்ந்த டாக்டர் தம்பதி ரியாஸ், வஹிதாவின் மகன் அஜ்மல் அஸ்லாம்(20). இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 27-ம் தேதி கல்லூரிக்கு சென்ற அஜ்மல் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அவர் கடத்தப் பட்டதாக 28-ம் தேதி காலை அவரது தாயாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் ரூ.50 லட்சம் தந்தால் உங்கள் மகனை விட்டு விடுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வஹிதா, குரோம்பேட்டை போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் அஜ்மல் அஸ்லாம் அவரது தந்தைக்கு போன் செய்து, தான் கடத்தப்பட்டு ராமநாதபுரத்தில் இருப்பதாகவும், காரை அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார்.

அதையடுத்து அவரது பெற்றோர், போலீஸார் 2 கார்களில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் புறப்பட்டு வந்தனர். நேற்று காலை அஸ்லாம் தங்கியிருந்த வீட்டிலிருந்து அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் வெளியான தகவல்கள்:

கடந்த 27-ம் தேதி அவரது நண்பர்கள் 4 பேர் (ஹாலிக், பாரூக், அசார், விக்னேஸ்வரன்) அழைத்துச் சென்று ஒரு அறையில் வைத்து குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதன்பிறகு அவருக்கு நினைவு இல்லை. பின்னர் ஹாலிக்கை தவிர மற்ற 3 நண்பர்கள் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு தோப்புக்குள் அழைத்துச் சென்று காருக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டிய அவர்கள், அஸ்லாமை புதைக்க அதே தோப்பில் 6 அடி குழி தோண்டி யுள்ளனர். அஸ்லாமின் பெற்றோர் பணம் தரவில்லை என்றால் அவரை கொன்று புதைக்க அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட செய்தி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானதால் அஸ்லாமை விடுவித்துள்ளனர்.

பின்னர் அவருடைய நண்பர் ஹாலிக் நேற்று முன்தினம் மதியம் காரில் அழைத்து சென்று, ரூ.500 கொடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். அஸ்லாம் அங்கிருந்த ஒருவரின் செல்போன் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு அஸ்லாம் தந்தையின் நண்பர் தகவலறிந்து அவரை மீட்டு அவரது வீட்டில் வைத்திருந்தார். அதன் பிறகு அவரது பெற்றோரும் போலீஸாரும் நேரில் வந்து அஸ்லாமை அழைத்துச் சென்றனர்.

இந்த கடத்தலில் ஹாலிக் மூளையாக செயல்பட்டுள்ளார். ஏற்கெனவே ஒருமுறை அஸ்லாம் ராமநாதபுரம் தோப்புக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

கடத்தலை தெளிவுபடுத்தாத போலீஸ்

அஸ்லாம் கடத்தப்பட்டாரா அல்லது அது வெறும் நாடகமா என புரியாத நிலையில், போலீஸாரும் தங்களது விசாரணை பற்றிய தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதனால் அஸ்லாம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையிலும் பத்திரிகையாளர்கள் உண்மையான தகவல்களை போலீஸிடம் இருந்து பெற முடியாமல் தவித்தனர். கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஒரு மாணவர் தரப்பில் தரப்பட்ட அழுத்தம் காரணமாகவே போலீஸ் நடவடிக்கையில் தொய்வு இருந்ததாகவும், குழப்பம் நிலவியதாகவும் சொல்லப்படுகிறது.

‘வாட்ஸ் அப்’ நண்பர்கள் உதவியால் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது சவுதியில் இறந்த தொழிலாளி உடல்

Return to frontpage

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள துக்காச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(52). கடந்த 23 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள நஜாரம் மாகாணத்தில் முகமது அல் சுகூர் என்பவரின் பண்ணையில் தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி மாரடைப்பால் பாஸ்கரன் இறந்து விட்டதாக தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரனின் மனைவி அமுதா(45), மகன் கார்த்திகேயன்(26), மகள் பூங்கோதை(24) உள்ளிட்டோர், அவரது முதலாளியை தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.

அப்போது, “பாஸ்கரனின் உடலை அனுப்புவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. அதனால், சவுதியிலேயே அடக்கம் செய்துவிடுகிறோம். அதற்குப் பதிலாக ரூ.7 லட்சம் பணம் தருகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புக்கொள்ளாத பாஸ்கரன் குடும்பத்தினர், “பணம் தேவையில்லை, உடலை அனுப்பி வையுங்கள். நாங்கள் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

எனினும் உடலை அனுப்பாததால், அவரது உடலை மீட்க குடும்பத்தினர் கடந்த 5 மாதங்களாக போராடி வந்தனர். இதுகுறித்து கடந்த மாதம் ‘தி இந்து’வில் செய்தி வெளியானது.

இதுகுறித்து தகவலறிந்த, தமிழ்நாடு சமூக சேவை சர்வதேச கழகப் பொதுச் செயலாளரான பட்டுக்கோட்டை ஏ.பிரபாகரன், சவுதியில் உள்ள நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ‘வாட்ஸ் அப் நண்பர்கள் குழு’ உறுப்பினர்கள் அப்துல் காதர், முருகன் ஆகியோர் மூலம் தீவிர முயற்சி எடுத்து, பாஸ்கரனின் உடல் சென்னை கொண்டுவரப்படும் என்று கடந்த வாரம் தெரிவித்தார்.

அதன்படி, பாஸ்கரனின் உடல் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, பாஸ்கரனின் மகன் கார்த்திகேயன், பட்டுக்கோட்டை பிரபாகரன், அமைப்பின் சென்னை மாவட்ட நிர்வாகி கிஷோர் ஆகியோர் உடலைப் பெற்று, ரயில் மூலம் நேற்று கும்பகோணத்துக்குக் கொண்டு வந்தனர்.

பின்னர், சொந்த ஊரில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, பாஸ்கரனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவ.16 முதல் மத்திய படை பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

Return to frontpage

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவம்பர் 16-ம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான தொகையை தமிழக அரசு ஒரு வாரத்தில் டெபாசிட் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முதல் அமர்வு நீதிமன்றத்துக்குள் அவரது எதிரில் அமர்ந்து சில வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்தது. சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) போன்ற சிறப்பு அமைப்பிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘‘உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகியவை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மத்திய பாதுகாப்பு படை தேவையில்லை. தமிழக காவல் துறை பாதுகாப்பே போதும்’’ என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. ‘‘இதை மீறி மத்திய பாதுகாப்பு படையை அமர்த்தினால் பிரச்சினை ஏற்படக்கூடும்’’ என்று மத்திய அரசு தெரிவித்தது.

‘‘உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போலீஸார் இடையே பரஸ்பரம் நம்பிக்கை இல்லாததால், சிறிது காலமாவது உயர் நீதிமன்ற பாதுகாப்பை நிபுணத்துவம் பெற்ற சுதந்திரமான அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு தெரிவித்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு முன்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகினர். மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜேந்திர சதுர்வேதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

‘காவல், பொது அமைதி என்பது மாநில அரசு விவகாரம். மாநில அரசு கோரினால் மட்டுமே மத்திய படையை அனுப்ப வேண்டும். மத்திய படைகளை நியமித்தால் அனைவரது கைப்பைகள், சூட்கேஸ்கள் சோதிக்கப்படும். இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். மத்திய படையினருக்கு உள்ளூர் மொழி தெரியாததால் பதற்றம் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமாகும். அவர்களுக்கும் மாநில போலீஸாருக்கும் அதிகார வரம்பு தொடர்பான பிரச்சினைகளும் எழும். 2009-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், நுழைவுவாயில்களில் ஏற்கெனவே கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்’ என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு தேவைப்பட்டால், 650 காவலர்கள் தேவை. அவர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.32.73 கோடி செலவாகும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் என்றால் ரூ.16.60 கோடி தேவை. மத்திய படை பாதுகாப்பு தேவை என்றால், இத்தொகையை டெபாசிட் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

நீதிமன்ற பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்குவது வேதனை அளிக்கிறது. இது ஈகோ பிரச்சினை அல்ல. உயர் நீதிமன்றப் பாதுகாப்பு முக்கியம் என்ற அடிப்படையில் ஆராயவேண்டும். உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மத்திய படைதான் பாதுகாப்பு வழங்குகிறது. இது வழக்கமானதுதான்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 2 வெடிகுண்டு புரளி சம்பவங்கள் நடந்தன. சில வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற அறைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்துக்குள் பதாகைகளை எடுத்து வருபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

நீதிமன்ற வராண்டாவில் குழுவாக நின்று கோஷமிடுவது, நீதிமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவது போன்றவை ஆரோக்கியமானது அல்ல. இவற்றை கருத்தில் கொண்டுதான் மத்திய பாதுகாப்பு படை தேவை என்கிறோம்.

எனவே, சிஐஎஸ்எப் படையை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கான தொகையை மத்திய அரசிடம் தமிழக அரசு இன்னும் 7 நாட்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். அதன்பிறகு, உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் படையினரை பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி விடுமுறைக்குப் பிறகு நவம்பர் 16-ம் தேதி உயர் நீதிமன்றம் திறக்கப்படும்போது இங்கு புதிய பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டதும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி தெரிவித்தார்.
Keywords: சென்னை உயர் நீதிமன்றம், நவ.16 முதல் மத்திய படை பாதுகாப்பு, உச்ச நீதிமன்றம், தமிழக அரசு மேல்முறையீடு

விகல்ப்: ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு புது திட்டம் .... பிடிஐ

Return to frontpage

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளுக்காக, விகல்ப் என்ற புதிய திட்டத்தை ரயில்வே துறை ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், முன்பதிவு செய்த ரயிலில் டிக்கெட் உறுதி ஆகவில்லை என்றால், அதே மார்க்கத்தில் ஓடும் அடுத்த ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்படும்.

இந்த மாற்று ரயில் திட்டத்தை நவம்பர் 1-ஆம் தேதி முதல் டெல்லி - லக்னோ மற்றும் டெல்லி - ஜம்மு வழித்தட்டத்தில் ஓடும் ரயில்கள் முன்பதிவில் சோதனை செய்யவுள்ளனர்.

தற்போதைக்கு விகல்ப் திட்டத்தை, இணையம் மூலம் அடுத்த 6 மாதங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இது மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் இரண்டு ரயில்களுக்கும், இரண்டு வழித்தடங்களில் மட்டுமே செல்லுபடியாகும் என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இணையம் மூலம் டிக்கெட் பதிவு செய்யும்போது, விகல்ப் என்ற தேர்வையும் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதே பாதையில் ஓடும் அடுத்த ரயிலில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும். இதன்மூலம் காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பும், பதிவு செய்யாமல் காலியாக இருக்கும் டிக்கெட்டுகளும் நிரப்பப்பட்டு இரண்டு விதங்களில் ரயில்வே துறையின் நோக்கம் நிறைவேறுகிறது.

விகல்ப் தேர்வை தேர்ந்தெடுத்தவர்களுக்கு, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் குறித்த எஸ்.எம்.எஸ் செய்தியும் வரும். மேலும் இதற்கு கூடுதல் கட்டணம் இல்லை. கட்டணங்களில் மாறுதல் இருந்தால் அதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது. மாற்று ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணியின் பெயர், முதல் ரயிலின் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெறாது. மாற்று ரயிலில் பயணம் செய்பவர்கள் என்ற புதிய பட்டியல் தயார் செய்யப்படும்.

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு எப்போதுமே அதிக மவுசு இருக்கும் நிலையில், குறிப்பாக பண்டிகை சமயங்களில் தேவை அதிகரித்து வருவதால் இந்த திட்டம் பயந்தரக்கூடும் என்ற் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் சோதனையில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மற்ற வழித்தடங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
Keywords: ரயில் டிக்கெட் முன்பதிவு, ஐஆர்சிடிசி, ரயில் டிக்கெட் பட்டியல், காத்திருப்போர் பட்டியல், ரயில்வே துறை திட்டம், விகல்ப், மாற்று ரயில் ஏற்பாடு

Friday, October 30, 2015

ஆம்புலன்சுக்கு வழிவிடுங்கள்

logo

சாலையில் போக்குவரத்து நெரிசலிலும், சுழல்விளக்கு எரிய ஒரு ஆம்புலன்சு வந்தால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நோயாளிதான் மனதுக்கு தெரியும். அத்தனை வண்டிகளும் ஒதுங்கி, அந்த ஆம்புலன்சுக்கு வழிவிடவேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இது சட்டபூர்வமான விதி என்று சொல்வதைவிட, மனிதாபிமான அடிப்படையில் உயிரைக்காப்பாற்ற செய்யப்படும் கருணை செயல் என்பதே பொருத்தமானதாகும். பொதுவாக, ஏதாவது விபத்து ஏற்பட்டு ஒருவரோ, பலரோ காயம் பட்டுக்கிடந்தால், உடனடியாக 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்சு அங்குசென்று அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றால், நிச்சயமாக உயிர்பிழைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான், இந்த 10 நிமிடங்கள் பிளாட்டினம் நிமிடங்கள் என்று அழைக்கப்படுகிறது. முதல் ஒருமணி நேரம் தங்க நேரம் என்று கருதப்படுகிறது.

ஆக, எந்த ஒரு நோயாளியாக இருந்தாலும், அவரை பிளாட்டினம் நேரத்துக்குள் அதிகபட்சம் தங்க நேரத்துக்குள் அவர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் இடத்தில் இருந்து, மருத்துவமனைக்கு கொண்டுசென்று உரிய சிகிச்சை அளித்தால் எமனிடம் இருந்து தப்பிவிடலாம். அந்த வகையில், உயிரைக்காப்பாற்ற முக்கியபங்கு வகிப்பது ஆம்புலன்சுதான். நோயாளி இருக்கும் இடத்துக்கும், அங்கிருந்து மருத்துவமனைக்கும் மின்னல் வேகத்தில் சென்றாகவேண்டும். அதற்குரிய வழியை விடவேண்டியது சமுதாயத்தின் கடமையாகும். ஆம்புலன்சு என்பது விபத்தில் சிக்கியவர்களை மட்டுமல்லாமல், திடீரென்று பிரசவம், மாரடைப்பு போன்ற நோய்களால் அவதிப்பட்டு சீரியசாக இருப்பவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வாகனமாகும்.

தமிழ்நாட்டில் 2008–ம் ஆண்டுக்கு முன்பு ஆம்புலன்சு என்பது கிராமப்புறங்களிலும், ஏழைகளுக்கும் எட்டாக்கனியாக இருந்தது. ஆனால், 2008–ம் ஆண்டு 108 ஆம்புலன்சு சேவை தொடங்கப்பட்டவுடன், பரம ஏழைகள் வீட்டில் யாராவது சுகமில்லாமல் இருந்தால்கூட உடனடியாக 108–க்கு போன் செய்து அரசு மருத்துவமனையில் சேர்த்துவிடலாம் என்றும், சாலையில் ஏதாவது விபத்து நடந்தால் அந்த வழியாக செல்பவர்கள் 108–க்கு தகவல் தெரிவித்து அந்த உயிரைக்காப்பாற்ற உதவும் எண்ணமும் மக்களிடம் வந்துவிட்டது. 108 சேவை தொடங்கப்பட்டு கடந்த வாரம்வரை தமிழ்நாட்டில் 11 லட்சத்து 41 ஆயிரத்து 492 பேர்கள் ஆம்புலன்சு மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். நிச்சயமாக இதில் பெரும்பாலானோர் உயிர்பிழைத்திருப்பார்கள், 108–ஐ மனதில் நிறுத்தி நன்றி சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ஆனால், சமீபகாலங்களாக ஆம்புலன்சுக்கு சிலர் வழிவிடாமல், ஆம்புலன்சு அபயக்குரல் எழுப்பும் நிலையும், சிறிதும் இரக்கமில்லாமல் ஆம்புலன்சு பின்னால் சென்றால் சீக்கிரம் சென்றுவிடலாம் என்று அதன் பின்னால் செல்லும் வாகனங்களையும் பார்த்தால் நெஞ்சம் கொதிக்கிறது. இந்த அலட்சியப்போக்கு பல உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கிறது. இந்த ஆண்டு கடந்த ஆகஸ்டு மாதம் வரையில் மட்டும் சாலை விபத்துகளில் 10 ஆயிரத்து 583 பேர்கள் உயிரிழந்துள்ளனர். ஆம்புலன்சுக்கு வழிவிடும் உணர்வை வளர்க்க தேவையான விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் ஆம்புலன்சுகளை ஓவர்டேக் செய்பவர்கள் மற்றும் ஆம்புலன்சுகளுக்கு வழிவிடாதவர்களின் லைசன்சுகளை ரத்து செய்வதற்கான உத்தரவுகளை போக்குவரத்து மற்றும் காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி ஒரு உத்தரவை தமிழ்நாட்டிலும் பிறப்பிக்கவேண்டும். 108 ஆம்புலன்சு ஊழியர்களும் இந்த சேவை தங்களுக்கு கிடைத்த தெய்வீக கடமையாக நினைக்கவேண்டும். ஆம்புலன்சில் அனைத்து உயிர்காக்கும் வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள ஊழியர்களுக்கு உயர் பயிற்சி அளிக்கவேண்டும்.

Thursday, October 29, 2015

மவுனம் காக்கும் ஜெயலலிதாவும் அதிமுக தேர்தல் வியூகமும் ............... தீபா ஹெச்.ராமகிருஷ்ணன்

Return to frontpage

'வரவிருக்கும் 2016 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் பன்முனைப் போட்டி ஏற்பட்டால் அது எங்களுக்கே சாதகமாக அமையும்' எனக் கூறுகின்றனர் அதிமுக மூத்த தலைவர்கள் சிலர்.

ஒரு பக்கம் ஸ்டாலினின் 'நமக்கு நாமே - விடியல் மீட்புப் பயணம்', 'விஜயகாந்த்தின் மக்களுக்காக மக்கள் பணி' மறுபக்கம் அன்புமணியின் 'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' பிரச்சாரம், இன்னொருபுறம் தமிழகத்தில் தங்கள் கட்சியை வலுப்படுத்தும் பாஜகவின் வியூகம், இவையெல்லாம் போதாது என மக்கள் நல கூட்டு இயக்கம் வலுவான மாற்று சக்தியாக அமையும் என்ற வைகோவின் நம்பிக்கை... இப்படி தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது ஆனால், அதிமுகவோ நிதானமான மவுனத்தை கடைபிடிக்கப்படுகிறது.

பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள இந்த நிதானம், மவுனம் குறித்து அதிமுகவின் ஒரு சில தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

"எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. எதிர்க்கட்சிகள் வலுவானதாக இல்லாததால் வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வெற்றி காணும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு வெற்றி பெற்றுத்தர அரசின் சாதனைகள் மட்டுமே போதும்" எனக் கூறுகின்றனர்.

ஆனால், அரசியல் நோக்கர்கள் பார்வை வேறாக உள்ளது. "கடந்த காலங்களை திரும்பிப் பார்க்கும்போது தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக நிச்சயமாக கூட்டணி அமைக்கும் என்றே சொல்ல வேண்டும். 1996 தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாலர் ஜெயலலிதா தேர்தலுக்கு முன்னதாக வலுவான கூட்டணியை உருவாக்குவதில் திறம்பட செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாகவே 2001, 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்கு வங்கியை அதிமுகவுக்கு சாதகமாக அவரால் திருப்ப முடிந்தது" என்கின்றனர் அவர்கள்.

இப்போதைக்கு, ஆளுங்கட்சியின் ஒரு பகுதி தலைவர்கள், தமிழகத்தில் பன்முனைப் போட்டி ஏற்பட்டால் அது தங்களுக்கே சாதகமாக அமையும் என நம்புகின்றனர். அதேவேளையில், தேர்தல் நெருங்கும் தருவாயில் எதிர்க்கட்சிகள் வலுப்பெறலாம் என்பதையும் அவர்கள் மறுக்கவில்லை என்பதே உண்மை.

அதிமுகவுக்கு நிலவும் சாதகமான சூழல் குறித்து மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆக் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்-ன் இணை பேராசிரியர் சி.லக்‌ஷ்மணன் கூறும்போது, "எதிர்க்கட்சிகள் வலுவான அணியாக திரளவில்லை. அவர்களது எதிர்ப்புக் குரல் ஒன்றுபட்டு ஒலிக்கவில்லை. இது அதிமுகவுக்கு சாதகமே. ஆனால், திமுக தனது உட்கட்சிப் பூசல்களை சீர் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டினால், அது அதிமுகவுக்கு பெரும் சவாலாக அமையும்.

அண்மையில் நடைபெற்ற கவுரவக் கொலைகள் தொடர்பாக அரசு மவுனம் காத்து வருவது தலித்துகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற அரசின் சில சறுக்கல்களில் எதிர்க்கட்சிகள் ஆதாயம் தேடலாம்" என்றார்.

இதை முற்றிலுமாக மறுத்த அதிமுக மூத்த தலைவர் ஒருவர், "எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டாலும்கூட அதிமுகவே தனிப் பெரும்பான்மை உள்ள கட்சியாக வெற்றி பெறும். காரணம், முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்கள். அரசு அமல்படுத்தியுள்ள நலத்திட்டங்களால் மக்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த 2014 மக்களவை தேர்தலில் கட்சிக்குக் கிடைத்த 40% வாக்குகள் மேலும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இதுதவிர அரசு அறிவித்துள்ள விலையில்லா பொருட்கள் திட்டம் பெரும் பலமாக அமையும். அண்மையில், உருவாகியுள்ள மக்கள் நல கூட்டியக்கத்தால் எங்களுக்கு ஆதரவாக வாக்குகள் பிரியும்" என்றார்.

விவசாயிகள், தொழிலாளர்கள் அதிருப்தி:

அதிமுக வட்டாரம் 2016 தேர்தல் வெற்றி தங்கள் வசம் என்று கூறினாலும், பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுகையில், "விவசாயிகள். விவசாயி தொழிலாளர்கள், சிறு, குறுந் தொழிலாளர்கள் மத்தியில் ஆளும் கட்சி மீது அதிருப்தியே நிலவுகிறது.

காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினை தீர்க்கப்படாததாலும்; வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான விலை நிர்ணய கோரிக்கைகளை இன்னும் நிறைவேற்றப்படாததாலும் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்குவது குறைக்கப்பட்டது விவசாய தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டதால் தொழிற்சாலை ஊழியர்கள் பலரும் அதிருப்தியிலேயே இருக்கின்றனர்" என்றார்.

ஆனால், இதை மறுக்கும் அதிமுக ராஜ்யசபா எம்.பி. ரபி பெர்ணாட், "அதிமுக மக்கள் அபிமானத்தைப் பெற்றுள்ளது. இலவச திட்டங்களால் மட்டுமே உருவானது அல்ல அந்த அபிமானம். எனவே, எங்களுக்கு வெற்றி நிச்சயம்" என நம்பிக்கை தெரிவித்தார்.

பெயர் வெளியிட விரும்பாத, அதிமுகவை கூர்ந்து கவனித்து வரும் அரசியல் நோக்கர் ஒருவர் கூறும்போது, "அதிமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது. எனவே, மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது பெற்ற வெற்றியைப் போல் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்" என்றார்.

ஆனால் தேர்தல் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற ரிஸ்க் எடுக்க ஜெயலலிதா துணிந்து நிற்க மாட்டார் என்றே தெரிகிறது. 2001-ல் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி உதவியுடன்; 2011-ல் தேமுதிக, இடது சாரிகள் கூட்டணி உதவியுடனும் ஆட்சியைக் கைப்பாற்றினார் என்பதை மறுக்க முடியாது.

2004 மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும், மதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தி திமுகவை மைனாரிட்டி அரசு என்ற நிலைக்குத் தள்ளினார் ஜெயலலிதா.

இத்தகைய சூழலில் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "நடைபெறும் அரசியல் மாற்றங்களை எல்லாம் தீவிரமாக அலசி ஆராய்ந்த பிறகு கட்சியின் நன்மைக்கு ஏற்றவாறு முதல்வர் ஜெயலலிதா நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார். திமுக என்னதான மெனக்கிட்டு மெகா கூட்டணி அமைக்க அடித்தளம் இட்டாலும், அதை முறியடிக்கும் திட்டங்களை அவர் ஏற்கெனவே நிச்சயம் வகுத்து வைத்திருப்பார்" என்றார்.

தமிழில்: பாரதி ஆனந்த்

மகாமக விழாவுக்காக புதிய இணையதளம் தொடக்கம்..dinamani


By தஞ்சாவூர்,

First Published : 29 October 2015 12:21 AM IST


கும்பகோணத்தில் மகாமகம் விழா தொடர்பான புதிய இணையதளத்தை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத் திருவிழா 2016 ஆம் ஆண்டு பிப். 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்காக தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மகாமக விழா தொடர்பான புதிய இணையதளத் தொடக்க விழா கும்பகோணம் நகராட்சி படேல் மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், புதிய இணையதளத்தை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் பேசியது:
மகாமக விழாவின் முக்கிய தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காகப் புதிய இணைதளத்தைத் தொடங்குவது எனத் தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கும்பகோணத்தில் உள்ள தங்குமிடம், கோயில்களின் தல வரலாறு போன்ற தகவல்களுடன் www.onlinethanjavur.com/mahamaham என்ற பெயரில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் மகாமக விழாவின் சிறப்புகள், பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள், பணிகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இணையதளத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

தூய்மை உணவே முதல் தேவை!

Dinamani

By நெல்லை சு. முத்து

First Published : 29 October 2015 01:24 AM IST


"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற நிலை மாறிவிட்டது. இன்று "கலப்பட' உண்டி கொடுத்தோர் உயிர் பறித்தோரே என்று புது இலக்கியம் எழுதவேண்டி வரும். காரணம், இன்றைக்கு ஒவ்வா உணவினால் வரும் நோய்கள் பற்றிய அக்கறை அதிகரித்து வருகின்றது.
அதிலும், சமீபத்தில் "லிஸ்டிரியா மோனோ சைட்டோஜென்கள்' எனும் நுண்கிருமித் தாக்கத்தினால் பரவும் நோய்கள் படுபிரபலம். "லிஸ்டிரியாசிஸ்' என்கிறார்கள். வேறு ஒன்றுமில்லை. இது ஒருவகை ஹிஸ்டிரியா மாதிரி, மனநோய். குறிப்பாக, இறைச்சி மற்றும் பால் பொருள்களினால் பரவும் ரகம். இது காய்ச்சல், உடல்வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு என்று முன்னும் பின்னும் ஓட ஓட விரட்டும்.
அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், மழலைகள், நோயெதிர்ப்புத் திறன் குன்றிய நோஞ்சான்கள் என்றும் ஆள் பார்த்துத் தாக்கும் நுண்கிருமி.
ஒரே கலப்பட உணவை, ஒரே முறையில் தயாரித்து, ஒரே பந்தியில் அல்லது ஒரே தட்டில் இட்டுப் பரிமாறிச் சாப்பிட்டாலும் இத்தகைய நோய், சிலரைத்தான் குறிவைத்துத் தாக்குமாம். கர்ப்பிணிகள் என்றால் "கன்னிக்குட'த்தில் மிதக்கும் இந்த பாக்டீரியா மண்ணிலும் மனித இரத்தத்திலும் "ஹாய்யாக' வசிக்கும்.
பாலாடைக் கட்டி, சுட்ட மாமிசம் என அதி வெப்ப உணவும், அதிகுளிர் பதனப் பெட்டியும் இவற்றின் சுகவாச ஸ்தலங்கள். அதனால் பொதுவாக, உணவுகளைக் குளிர்பதனப் பெட்டிகளில் பனி உறைநிலை அளவுக்கேனும் பாதுகாக்க வேண்டும் என்கிறோம்.
இன்னொரு கலப்பு நோய், "டோக்சோபிளாஸ்மோசிஸ்'. இதற்கு "டோக்சோபிளாஸ்மா கொண்டாயி' என்ற முகிழ் உயிரி ஒட்டுண்ணியே காரணம். அரைவேக்காட்டு இறைச்சிக் கொழுப்பும், விலங்குகளின் மலம், சிறுநீர்க் கழிவுகளுமே இந்த ஒட்டுண்ணிக்கு வாடகை இல்லாத குடியிருப்புகள்.
பொதுவாக, வெப்ப நகர்ப்புறங்களிலும், ஈரப்பதம் மிக்க சேரிகளிலும் இவற்றின் இனப்பெருக்கம் அதிகம். இந்த நோய் சுண்டெலிகளை எளிதில் தாக்கும். அவற்றைத் தின்னும் பூனைகள் மலத்தின் வழி இந்த ஒட்டுண்ணி மனித உடம்புக்குள் ஏற்றுமதி ஆகும்.
மனித உடலில் முட்டைகளாகி வாழ்நாள் முழுவதும் உடம்புக்குள் பதுங்கியே இருக்கும். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், இந்நோயாளி, தனக்கு இத்தகைய சுகக்கேடு உண்டு என்றே உணர்வதும் கிடையாது. ஊழலுக்குள் மூழ்கி இருப்பதால், உணராமலே வாழும் அரசியல்வாதிகள் போல.
பலரும் தங்களுக்கு புளுக்காய்ச்சல் என்று நினைத்துக்கொண்டு கண்ணில் கண்ட மாத்திரைகளைத் தாங்களே வாங்கிச் சாப்பிடுவார்களாம். குருதிநீரில் "ஐ.ஜி.ஜி.' எனப்படும் "இம்மியுனோ குளோபுலின்-ஜி' என்ற புரதத்தினை ஆராய்ந்தால் நோய் கண்டு அறியலாம்.
ஆனால், நோயின் உக்கிரம் மூளையைப் பாதிக்கும்போதுதான் பித்துப் பிடித்தது தெரியவரும். பாதிப் பேர் தாங்கள் பேசுவது என்னவென்று புரியாமல் மேடையில் உளறுவார்கள். விழித்திரை அழற்சியால் கண்கள் கூசும். உங்கள் கண்ணில் நீர் வடிந்து கொண்டே இருக்கும். அப்புறம் என்ன, பார்வை மங்கும்.
வழக்கம்போல, கர்ப்பிணிகளுக்கான அபாயம் வேறுமாதிரி. இந்நோய் தாக்கினால் கருவில் வளரும் சிசுவைப் பாதிக்கும். பிள்ளை பிறந்து பல மாதங்களுக்குப் பின்னர் கூட கண்பார்வைக் கோளாறு வரலாம். வலிப்பு உண்டாகலாம். புத்தி மந்தம் ஆகலாம்.
ஆக, இந்தக் "கலாம்' வேறு மாதிரி. (பாருங்கள் அமெரிக்காவில் ஒரு கிருமிக்கு "கலாம்' பெயரை வைத்து மானத்தை வாங்குகிறார்கள்? நிலாத் தரையில் நம் நாட்டுச் சந்திரயானின் "மிப்' மோதுகலன் விழுந்த இடத்திற்கு அல்லவா "கலாம்' பெயரை வைத்து இருக்க வேண்டும்?)
இத்தகைய நச்சு ஒட்டுண்ணியில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமா? உணவை 74 பாகைக்கேனும் சூடாக்கி உண்ணுங்கள். விண்வெளியின் "கிரையோஜெனிக்' பொறிகலன் அளவுக்கு பனி உறைநிலைக்கும் கீழ் உணவைப் பத்திரப்படுத்தவும், பழங்களைத் தோல் உரித்துச் சாப்பிடவும். ஆடு, மாடுகள் மாதிரி அப்படியே தோலோடு விழுங்காதீர்கள்.÷
"இருட்டுக் கடை அல்வா' மகிமை அறிவோம். ஆனால், இருட்டுக் கடைகளாகப் பாதையோரம் வைத்திருக்கும் "தாபா' (இந்தச் சொல்லினைப் புரட்டிப் படியுங்கள் "பாதை' ஆகும்!) மேஜைகளில், வெட்டிக் கிடைப்பதை "வெட்டி' விழுங்குவானேன்?
செக்கச்சிவந்த காதல் பெண்களைப் பிச்சுப் பிச்சுத் தின்னவா என்று சிலர் பாடல் எழுதினாலும் எழுதினார்கள். நம்மூர் இளைஞர்கள் சிலர், செக்கச்செவேல் என்றிருக்கும் சிகப்பான மாமிசத் துண்டுகளையே காதலிக்கிறார்கள். அவற்றைப் பொரித்து எடுக்க இருட்டுக்கடைகளில் கொதிநிலை அதிகமான பன்றிக் கொழுப்பு கையாளப்படுகின்றது. நாடாப் புழுக்களின் கோடை வாசஸ்தலம் அது.
வீட்டுச் சமையல் அறையில் அன்பு அன்னை அல்லது மனைவி (ஆண்களும் சமைக்கலாம், தப்பு இல்லை.) சமைத்த உணவில் எறும்பு கண்டால் கொதிக்கிறோம். ஆனால், கொதிக்கும் வாணலியில் குதூகலிக்கும் பன்றிக்கொழுப்பில் செய்த உணவை விரும்பி உண்ணுவதோ?
உடலில் அதுவும் சிறுகுடலில் ஒட்டினாலும், கத்திரியால் வெட்டினாலும் தலைசாயாத இந்த நாடாப் புழுக்களின் முட்டைகள் நரகத்தில் கொதிக்கும் கொப்பரையிலும் உயிர்வாழக் கூடியவை. பிறகென்ன, உண்டவர் மண்டையிலும் மூளைக்குப் பக்கத்தில் "பிளாட்' போட்டுக் குடியேறும். கண்கள் சிவக்கும். முகம் வலிப்பில் ஒரு பக்கம் கோணல் ஆகும். நாளாவட்டத்தில் பைத்தியம் உத்தரவாதம்.
கலப்பட உணவால் நோய்கள் ஒருபக்கம். நல்ல உணவிலும் ஊட்டச்சத்துக் குறை பலவீனம் இன்னொரு பக்கம். அதிலும் உலகத்தில் ஏழில் ஒருவருக்கு இத்தகைய நுண்ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ளதாம். குறிப்பாக, இந்தியாவில் மூன்று குழந்தைகளில் ஒருவர் இத்தகைய சவலைப் பிள்ளைதானாம்.
குறிப்பாக இரும்புச் சத்து, துத்தநாகம், "வைட்டமின் ஏ மற்றும் அயோடின் ஆகிய சத்துக் குறைபாட்டினர் உலகில் பாதிக்குமேல் இருக்கிறார்களாமே. பிறந்த ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இரும்புச் சத்துக் குறை உடைய குழந்தைகள் ஐந்துக்கு நாலு பேர் என்றால் வேறு என்ன சொல்ல?
ஒரு கிலோ பாசிப் பருப்பில் ஏறத்தாழ 160 மில்லி கிராம் துத்தநாகம் உள்ளது. அதனால் தானிய உணவு நன்று.
ஏ வைட்டமின் குறைபாட்டினால் மழலைப் பிஞ்சுகளில் மூவரில் இரண்டு பேர் சிகிச்சை பெற வேண்டி இருக்கிறதாம். சிகப்பான உணவே சிறந்தது என்று உணவியல் விஞ்ஞானிகளும் பரிந்துரைக்கின்றனர்.
கண் நலம் பேணவும், புற்றுநோய் வராமல் காக்கவும் காரோட்டினாய்டுகள் இயற்கைச் சத்து உதவும். இது ஏ வைட்டமின்களின் தாய். கண், சுவாச மண்டலம், சிறுநீர்ப் பாதை, சிறுகுடல் எங்கும் முறையான பாதுகாப்புப் படலம் பூசுவது இந்த வைட்டமினின் தொண்டு. பொதுவாக, இளஞ்சிகப்பு, மஞ்சள் நிறக் காய்கனிகளில் இந்தச் சத்து அடங்கி இருக்கிறது.
இவற்றில் 700}க்கும் மேற்பட்ட திசு வேதிமங்கள் உள்ளன. அவற்றில் வெறும் 24 சத்துகள் மட்டுமே நம் அன்றாட உணவில் இடம்பெறுகின்றன. காரட், தக்காளி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கீரை வகைகள், புதினா போன்ற காய்கறிகள் உடலுக்கு நல்லது.
எப்படியோ, தொழிற்சாலைகளில் லைக்கோப்பீன், பீட்டா - காரோட்டீன், காந்தாக்சந்தைன், சீயாக்சந்தைன், அஸ்டாக்சந்தைன் ஆகிய ஐந்து காரோட்டினாய்டுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதிலும் ஏ வைட்டமின் அளவு மீறினாலும் சில சிரமங்கள் எழும். உடம்பில் தோல் உலரும். தலை அரிப்பு எடுக்கும். தலைமுடி உதிரும். கல்லீரல் பாதிக்கும். பசி எடுக்காது. குமட்டல் வரும்.
அயோடின் குறைவால் முன்கழுத்துக் கழலை நோயாளிகள் இந்தியாவில் 85 சதவீத மாவட்டங்களில் வசிக்கிறார்கள். வீடு கட்டி வாழ வேண்டும். விவசாயத்தையும், காப்பாற்றிப் போற்ற வேண்டும். இயற்கையை மட்டுமே நம்பினால், நவீன மக்கள் பெருக்க உலகினில் வளர்ந்துவரும் இந்த அதீத சூறைநோய்களுக்கு ஈடுகட்ட முடியாது. இதற்காகதான் நுண்ஊட்டச் சத்துகளையும் வலியுறுத்துகிறோம்.
பேய் முக நாய்களையும், ஆனை உயரப் பூனைகளையும் சமூக அந்தஸ்து கருதி வளர்ப்பவர்களுக்கும் ஒரு சொல். வேலைக்கு போகும் முன் நீங்கள் குளிக்கிறீர்களோ இல்லையோ, செல்லப் பிராணிகளை குளிப்பாட்டுங்கள். இல்லையென்றால் சம்பாதித்த பணம், கால்நடை மருத்துவச் செலவுக்கே போதாது. வருமானத்தில் பாதியை நாய் மேனியில் உலா போகும் நாடாக் கிருமி ஒட்டுண்ணிகளை ஒழிப்பதற்காகச் செலவிட வேண்டி வரும்.
சீனாவில் தயாரித்து மலிவான விலையில் பெட்டிக் கடைகளில் விற்பனை ஆகும் 'அஞ்சு ரூபா' பிஸ்கெட்டுகளிடம் கவனம் தேவை. செல்லப் பிராணிகளின் 'நாய் பிஸ்கோத்துகளை' செல்லக் குழந்தைகள் திருடிச் சுவைத்தால் சின்ன வயதிலேயே சிறுநீரகக் கற்கள் உபாதை வருகிறதாம். அயல்நாட்டில் சமீபத்திய உணவியலாளர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இத்தனைக்கும் மத்தியில் அழற்சி அல்லது ஒவ்வாமை என்ற நோய் சர்வ சாதாரணம். மூக்குச்சளி பிடித்து விட்டதோ, மூக்கினுள் "ஃபுளுட்டிக்காசோன் புரொப்பயனேட்', "ட்ரை அம்சினோலோன்', "மொமெட்டாசோன்', "பியுதிசோனாய்டு' என்று சொட்டு மருந்துகள் இருக்கவே இருக்கின்றன.
தூசியும், கரப்பான் பூச்சியும் உண்டாக்கும் அதே அழற்சியை நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகளும் இலவசமாக உங்களுக்கு வழங்கக் கூடும். எச்சரிக்கை. வயதான பிராணிகளின் மாமிசத்தையும் விற்றுப் பணம் பண்ணுகிறார்களாம் சில கடைக்காரர்கள். கன்றுக்குட்டி இறைச்சி என்று கதைக்கிறார்களாமே.
போகட்டும். ஒரு வழியாக, வாய் வழியாக, இத்தனை அழுக்கும் உள்ளே செலுத்துகிறோம்.
முதலில் அளவான தூய்மை உணவு. பின்னர்தான் வளமான தூய்மை இந்தியா.

கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
தூசியும், கரப்பான் பூச்சியும் உண்டாக்கும் அதே அழற்சியை நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகளும் இலவசமாக உங்களுக்கு வழங்கக் கூடும், எச்சரிக்கை.

வெடி ஏற்படுத்தும் விபரீதம்!

Dinamani

By ஆசிரியர்

First Published : 29 October 2015 01:22 AM IST


தமிழ்நாட்டில் சீனப் பட்டாசுகளை விற்பனை செய்தால், அந்தக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு அனுமதி வழங்கும் தீயணைப்புத் துறையிடம், ஒவ்வொருவரும் தாங்கள் சீனப் பட்டாசுகளை விற்கவில்லை என்ற உறுதிமொழிப் படிவத்தை அளிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புடன் நிற்காமல், பல ஊர்களில் பட்டாசுக் கடைகளில் திடீர் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய திடீர் சோதனைகள் தொடர்ந்து தீபாவளி வரை நடத்தப்படுமேயானால், சீனப் பட்டாசுகள் விற்பனையைப் பெருமளவு குறைத்துவிட முடியும். ஆனால், இது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியமாகும். மற்ற மாநிலங்களில் இதே போன்ற கண்டிப்பும், கறாரான நடவடிக்கையும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
தமிழகத்தையொட்டிய ஆந்திரம், கர்நாடகம், கேரள எல்லைப் பகுதிகளில் பட்டாசுக் கடை நடத்துவதும், தமிழக மக்கள் இங்கு பட்டாசுகள் வாங்குவதும் மிகப்பெரும் வணிகமாக இருந்துவருகிறது. தமிழக அரசின் கடும் நடவடிக்கைகள் இத்தகைய எல்லை தாண்டிய கடைகளில் சாத்தியமில்லை. மக்களை அங்கே போய் வாங்காதீர்கள் என்று தடுக்கவும் முடியாது.
சீனப் பட்டாசுகள் இந்தியாவுக்குள் கடத்தப்பட்டு வருவதை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்தே சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை தலையிட்டு, சீனப் பட்டாசுகள் விற்பனைக்கு 2014 அக்டோபரில் தடை விதித்தது. ஆனால், அது வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் இல்லை. இதன் விளைவாக, மொத்த உற்பத்தியில் 35% சிவகாசி பட்டாசுகள், கடந்த தீபாவளியின் போது விற்பனையின்றித் தேங்கின.
ஆண்டுக்கு ரூபாய் ஐந்தாயிரம் கோடி அளவுக்கு விற்பனையாகும் சிவகாசியின் பட்டாசுகளில், 70% இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இவற்றில் மொத்தம் 35% விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தது என்றால், சென்ற ஆண்டு இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு எத்தகையது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்த ஆண்டிலும் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து சீனப் பட்டாசு குறித்த எச்சரிக்கையை அரசுக்குத் தெரிவித்து வந்த போதிலும், அகில இந்திய அளவில் குறிப்பிடும்படியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சீனப் பட்டாசுகள் அரசு அனுமதியுடன் இறக்குமதி செய்யப்படுவதில்லை. இவை இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகின்றன. ஆகவேதான், இவை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஜூன் மாதம், மும்பை துறைமுகத்தில் வந்து இறங்கிய 15 சரக்குப் பெட்டகங்களைச் சோதித்துப் பார்த்ததில் ரூ.17 கோடி மதிப்புள்ள சீனப் பட்டாசுகள் இருப்பதைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். இந்த சரக்குப் பெட்டகங்களில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள சீனக் கண்ணாடிக் குவளைகள் இருப்பதாகக் கணக்குக் காட்டப்பட்டிருந்தாலும், அதன் உள்ளே இருந்தவை பட்டாசுகள். இதுபோன்று பல துறைமுகங்கள் வழியாக, பல வகையிலும் சீனப் பட்டாசுகள் உள்ளே நுழைந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்தியா முழுவதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, இந்த முறைகேடான விற்பனையைத் தடுக்க முடியும்.
சீனப் பட்டாசுகள் மிகக் குறைந்த கூலியில் தயாரிக்கப்படுவதாலும், எந்தவிதமான அரசுக் கட்டுப்பாடும் இல்லாமல் தயாரிக்கப்படுவதாலும், அவற்றைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய இயலுகிறது என்று சிவகாசிப் பட்டாசுத் தயாரிப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். விலை சற்றுக் குறைவு என்பது உண்மையே. என்றாலும், மக்களை சீனப் பட்டாசை வாங்க வைத்ததில் சிவகாசிப் பட்டாசுத் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு இருக்கிறது.
பட்டாசு பாக்கெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச விலையைக் காட்டிலும் குறைந்த விலையில்தான் உள்ளூர்க் கடைகளில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்ச கழிவு (கமிஷன்) தருவதாகக் காட்டுவதற்கும், சில்லறை விற்பனையாளர்கள் கூடுதல் லாபம் அடைந்துகொள்ளவும் கையாளப்படும் உத்தி இது. இவ்வாறான விற்பனை நுகர்வோரிடம் நம்பகமின்மையை ஏற்படுத்துகிறது. ஆகவே, அவர்கள் இந்தியத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பற்றிய எண்ணமே இல்லாமல், சீனப் பட்டாசுக்கு மாறுகிறார்கள்.
ஒரு பொருளின் அதிகபட்ச விலைக்கும், கடைக்காரர்கள் கொடுக்கும் விலைக்கும் மிகப்பெரும் இடைவெளி ஏற்படும்போது, அந்தப் பொருளைத் தயாரிப்போர் மீதான நம்பகத்தன்மை குறைகிறது. நாம் கொடுக்கும் பணத்தின் பெரும்பகுதி கமிஷனாக அல்லது தனிநபர் லாபமாகப் போகிறது என்கிறபோது, நுகர்வோர் அந்தப் பொருளை வாங்குவதைக் குறைக்க அல்லது தவிர்க்க முனைகிறார்கள். நியாயமான விலை நிர்ணயம் மட்டுமே இந்தியர்கள் அனைவரையும் சிவகாசி தயாரிப்புகளை மட்டுமே வாங்கிடச் செய்யும்.
தடை செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைடு மருந்து சீனப் பட்டாசுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வெளிப்படும் புகை அதிக நச்சுத்தன்மை கொண்டது. உடல் நலனுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் கேடு விளைவிக்கும். ஆகவே, இது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
நிகழாண்டில் சிவகாசி பட்டாசுகள் தேக்கமடையாமல், குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக்குள் சீனப் பட்டாசு இல்லாமல் இருக்க, தமிழக அரசு தொடர்ந்து அதிரடி வெடிச் சோதனைகளை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். எல்லா மாநிலங்களும் தமிழகத்தை பின்பற்ற வேண்டும்.

Wednesday, October 28, 2015

Varsity goes extra mile to appoint 'champion' for transgender issues TNN | Oct 28, 2015, 03.38 AM IST

PUNE: The Savitribai Phule Pune University (SPPU) will take the lead and appoint a second gender champion to concentrate on issues faced by transgenders and to sensitise students regarding the third gender population.

The SPPU will also have one gender champion to look after male and female gender bias, as directed by the Union ministry of human resource development.

All educational institutions in the country have been directed to appoint gender champions by November 6.

There is no mention of the third gender in the ministry's guidelines, though. The Supreme Court, in April 2014, had directed the Union government to include the third gender as a socially and economically backward group in all schemes.

SPPU vice-chancellor W N Gade said the university would take the first step to include a separate champion for transgenders. "Awareness about the third gender is low and even the Supreme Court has instructed all educational institutes to integrate them into the educational system. Hence, we will appoint a champion for the third gender. This post can be occupied by a boy, girl or a transgender student, but whoever gets it will perform all the duties mentioned in the ministry's guidelines," said Gade.

He said colleges affiliated to the university would also be asked to appoint a second champion, who would specifically spread awareness about transgenders -one of the most vulnerable groups.

On July 28 this year, the Union ministries of women and child development and human resource development had launched the initiative to appoint gender champions in every educational institute.

"The broad mandate of gender champions is to provide an integrated and interdisciplinary approach to understanding the social and cultural constructs of gender that shape the experiences of women and men in society. The aim is to make young boys and girls gender sensitive and create positive social norms that value the girls and their rights," the guidelines said.

According to Gade, 120 colleges affiliated to SPPU have already implemented the guidelines. "We have sent reminders to the rest. We will also send them a fresh circular, asking them to create a post for the third gender champion," he said.

Parikshit Shete, the project manager of non-government organisation Samapathik Trust, said the move to include a separate gender champion is good, but the awareness has to start in schools. "If the university has taken up the cause of spreading awareness, it is a great move, because today's students are tomorrow's adults. But I think the awareness should start from school itself. I myself was made fun of, teased and taunted at school because I was different from other boys. When I complained to the teacher, she told me to cure myself and then cure the world. This attitude has to change. There are many transgenders studying in colleges, but they are scared to come out and tell this to their parents and friends. Merely adding a column in application forms, voter ID and Aadhaar cards is not enough. A lesbian/ gay/ bisexual/ transgender person should feel free to fill the column too. And the education sector can play a big role in this," he said.

According to the guidelines, gender champions can be boys and girls above 16 years of age enrolled in educational institutions. The champions will be selected by the head of the institute for a term of one year, which can be extended for another year based on their performance.

Students oppose UGC plan for campus safety Vinayashree Jagadeesh,TNN | Oct 28, 2015, 01.58 AM IST

CHENNAI: Fortifying campuses with barbed wire, installing police booths in colleges and frisking students are some recent UGC safety guidelines that have raised eyebrows and sparked protests across the country. Students and academicians have now come together to condemn the rules, which were proposed early this year to increase campus safety.

Prof Vijaykumar of Madhurai Kamraj University said the rules are unnecessary. "Colleges are supposed to welcome students and not be restrictive," he said. "Students should be able to walk in and out of college without any hassle." Colleges say the rules are not only harsh but also difficult to implement. "These are measures that cannot be undertaken suddenly. There are several other issues on campuses that need focus," said a college official, who did not want to be named.

An online signature petition, which began in September, demanding UGC withdraw 'UGC Guidelines on Safety of Students On and Off Campuses for Higher Educational Institutions' has 2,500 supporters.

"We want our campuses to be open spaces," said Sucheta De, president of All India Students' Association. "A university where every movement of adult students is monitored and reported to their parents is not an 'oasis of safety and security' but a jail."

She said the guidelines instead may turn out to be a useful tool for forces that conduct moral policing, 'cleanse cultural pollution', impose bans and attack freedom of expression.

"How can UGC violate our right to privacy by telling university authorities to spy on students' personal lives and political activism?" the association questioned.

Mary E John, who co-chaired the UGC task force that came up with the 'saksham' report for safety of women and "gender sensitisation" after the December 16 gang rape in Delhi, said the guidelines contradicted the report. "Students are being treated as potential criminals. Since when can any authority go to such lengths for safety measures," she asked.

UGC, which has suggested a re-think on the police station aspect, has maintained that said the guidelines are "suggestive and not mandatory". However, academicians pointed out that suggestive measures are enforcing the idea of a 'policing mentality'.

Kavita Krishnan, secretary, All India Progressive Women's Association, said the guidelines were draconian and absurd. "Police should have no place on campuses since they can intimidate students who raise their voices in dissent or hold protests against the government. We would like to remind UGC that 'risk avoidance' can easily turn into victim blaming and moral policing," she said.

Pull out your umbrellas, rainfall likely to intensify...TOI

CHENNAI: It's time to take those raincoats and umbrellas out of the closet, for the weatherman has predicted that rain, which started as a drizzle in the city on Tuesday, will intensify.

India Meteorological Department has forecast favourable conditions for the beginning of northeast monsoon over Tamil Nadu and the southern peninsular from Wednesday.

While it was generally cloudy across Chennai on Tuesday, some parts received patchy rain. The temperature (maximum at 33C and minimum at 25C on Tuesday), is expected to drop further over the next three days, the Met office said.

Regional Meteorological Centre (RMC), Chennai, has predicted "mainly or generally cloudy sky with the possibility of rain or thunderstorm for the next three days" in the city. Following that, an increase in the intensity of rainfall has been forecast till November 2. "Isolated heavy rains are expected generally across coastal Tamil Nadu from Wednesday," an RMC official said.

Chief meteorologist of Skymet weather forecasting agency Mahesh Palawat said a low pressure area that has developed over Sri Lanka and south Tamil Nadu makes for favourable conditions for the onset of the northeast monsoon.

"From Wednesday, many places will start getting rainfall," he said.

"For the commencement of the northeast monsoon, winds should be from the northeasterly direction over the Bay of Bengal and weather systems like low pressure areas or depression should form to increase rainfall. The conditions now are favourable," he added.

There has been a delay of more than a week for the onset of the northeast monsoon on which Chennai has pinned its hopes t avert a water crisis. The city faces a deficit of 46% in rainfall in October. Its reservoirs are at a deficit level of 90% and water levels are decreasing rapidly. Tamil Nadu recorded deficit rainfall for three successive years till 2014.

The weatherman says rain could be surplus this time in many parts of the state.

Meterologists said rain or thundershower, which would occur at most places over coastal Tamil Nadu in the next three days would increase in the days subsequent to that.

Chennai, Thanjavur and Nagapattinam are likely to get sufficient rain. Interior parts of the state will receive moderate to heavy rainfall, but the intensity would be lower than in coastal regions.

"During monsoon, there would be rainfall for three or four days followed by a lull during which there will be light or patchy rain. Again there would be heavy rain," a meteorologist said.

இப்படியும் பார்க்கலாம்: பிரச்சினை வேணுமா, வேண்டாமா? .......ஷங்கர்பாபு

Return to frontpage



என் குடும்பத்தில் நடந்த உரையாடல்: “தம்பீ...” ---- “என்னவாம்?”

“தம்பி, நேத்திக்கு நான் பேச வந்தப்ப, இன்னிக்குக் காலைல ஃப்ரீயா இருப்பேன்னீங்க...அதான்,பேச வந்தேன்...” ---- “சொல்லுங்க...”

“ எட்டு மாசம் ஆச்சு...” ---- “அதுக்கு என்னவாம்?”

இதில் பணிவான குரலுக்குச் சொந்தக்காரர் என் தாத்தா. அவர் வாடகை கேட்கும் பாணி இது. பணப் பிரச்சினை காரணமாக பாதி வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தார். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் உகந்த நல்ல பையன் ஒருவன் அளித்த அட்வான்ஸால் தற்காலிகமாகப் பணப் பிரச்னை தீர்ந்தது.

அப்புறம்தான் தெரிந்தது ஏற்கெனவே அவன் குடியிருந்த வீட்டைக் காலிசெய்த அன்று அந்த வீட்டார் ஆடு வெட்டி நேர்த்திக்கடனைச் செலுத்தியிருக்கிறார்கள் என்பது. தாத்தாவுக்கு அவனை எப்படி வீட்டைக் காலிசெய்ய வைப்பது என்ற பிரச்சினை தொடங்கியது.

எல்லோருக்கும் இப்படி ஏதாவது நேர்கிறது. வேலை இல்லாதவருக்கு வேலை கிடைத்தபோது, மகளுக்கோ-மகனுக்கோ திருமணம் ஆனபோது, கஷ்டப்பட்டு ஒரு வீட்டைக் கட்டியபோது... அத்துடன் அந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாக மகிழ்ச்சி அடைகிறோம். விரைவிலேயே உங்கள் சந்தோஷம் துக்கமாக மாறுகிறது.

ஏன் ? வேலையில் கசப்பு அடைகிறோம்; செல்லமாய் வளர்த்த மகள் கல்யாண உறவில் ஏமாற்றம் அடையும்போது வருந்துகிறோம்; கட்டிய வீட்டில் கடன் புகும்போது கலங்குகிறோம்.

ஆனால், நாம் பிரச்சினைகளைத் தீர்த்து விட்டதாக அவசரப்பட்டு நினைத்துக்கொள்கிறோம். பிற்பாடு அந்தப் பிரச்சினை வேறு வடிவத்தில் நம்மிடம் கை குலுக்கும்போது அதிர்ச்சி அடைகிறோம்.

நியாயப்படி நீங்கள் எதை பிரச்சினை என்று நினைத்தீர்களோ, அந்தப் பிரச்சினைக்கு நீங்கள் தீர்வு கண்டுவிட்டீர்கள் எனக் கருதினால் அதன்பிறகு அந்தப் பிரச்சினையினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கவே கூடாது.

பின் என்னதான் நடக்கிறது? நாம் எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதில்லை. இடம் மாற்றி வைக்கிறோம்; ஒளித்து வைக்கிறோம்; அதன் வடிவத்தை மாற்றி வைக்கிறோம்.

வேலையின்மை என்னும் பிரச்சினைதான் வேலையில் கசப்பாக மாறி இருக்கிறது. உங்கள் பெண்ணின் எதிர்காலம் பற்றிய பொறுப்புகளை இன்னொருவருக்கு மாற்றிவிட்டீர்கள். அந்தக் கணக்கின் தலைப்பு (Head of account) தான் மாறி உள்ளதே தவிர, மகள் மீதான உங்கள் அக்கறை இல்லாமல் போய்விடவில்லை. அது அந்த அக்கவுண்ட் ஷீட்டிலேயேதான் வேறு இடத்தில் உள்ளது. சொந்த வீடு இல்லை என்ற பிரச்சினைதான் புதிய வீட்டில் கடன் சுமையாக புகுந்துள்ளது.

இவை மட்டுமல்ல உலகில் எந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் அப்படித்தான். ஒரு பிரச்சினையை நீங்கள் எடுத்துக் கொண்டு அதைப் பகுத்துக் கொண்டே போனீர்கள் என்றால் அதன் மாறு வேடங்களை உணர்வீர்கள். எந்தப் பிரச்சினைக்குமே நிரந்தரத் தீர்வு சாத்தியமே இல்லை.

அப்படியானால் பிரச்சினைகள் தீராதா? கண்டிப்பாகத் தீராது.அதை ஒழித்துவிட்டதாய் நினைக்கவே நினைக்காதீர்கள்.பிரச்சினைகளின்போது நாம் செய்வதெல்லாம் பிரச்சினைகளுக்கு வேறு ஒப்பனைகள் போடும் வேலைதான். அதன் மூலம் பிரச்சினைகள் தீர்ந்த ‘மாதிரி’ உணர்வைப் பெறத்தான் இவ்வளவு முயற்சிகளும் பாடுகளும்.

இது புரியாமல் அவசரப்பட்டு பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று நினைப்பதால்தான் பின்னால் புலம்புகிறோம். சாம்பலிலிருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல அது வேறு விதத்தில் முளைத்து நிற்பதை ஏற்க முடியாமல் இன்னும் டென்ஷன் ஆகிறோம்.

பிரச்சினைகள் ஏற்படுவது என்பது நமக்குப் பசிப்பது போல. ஒருவேளை உணவு சாப்பிட்டால் போதும். ஆயுளுக்கும் பசிக்காது என்று யாரும் நினைப்பதில்லை. பிரச்சினைகளை மட்டும் ஏன் இனி வராது என்று நினைக்க வேண்டும்? பிற்பாடு அது வரும் போது ஏன் துவள வேண்டும்?

நியூட்டன் பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லியிருந்தால் இப்படித்தான் சொல்லியிருப்பார். “பிரச்சினைகளை ஆக்கவும் அழிக்கவும் முடியாது. ஆனால் பிரச்சினைகளை மற்றொரு வகைப் பிரச்சினைகளாக மாற்றி வைக்க முடியும். இதுவே பிரச்சினை அழிவின்மை விதி ..”

அலுவலகத் தோழி சொல்லுவாள். “இருபது ஃபைல்களை வச்சுக்கிட்டு வேலையை ஓட்டிக்கிட்டு இருக்கேன்...” உண்மையில் அதே போல்தான் எல்லோரும் மொத்தமே நான்கைந்து பிரச்சினைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

மசாலா தோசை, மைசூர் மசால், ஸ்பெஷல் மசால், ஆனியன், நெய் தோசை, மட்டன் தோசை என ஒரே மாவு மாறுவது போல், ஒரே பிரச்சினைதான் ‘ஒன்றே என்னின் ஒன்றே யாம், பல என்று உரைக்கின் பலவே யாம்’ என்று மாறுகிறது. அதை உணராது நாம் பிரச்சினைகளால் சூழப்பட்டிருப்பதுபோல் மயக்கம் கொள்கிறோம்.

பிரச்சினைகள் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. அது புதிய சட்டைகளை அணிந்து வருகிறது.

இங்கிலாந்தில் “மன்னர் இறந்து விட்டார்; மன்னர் வாழ்க” என்பார்கள். இறந்தவர் எப்படி வாழ முடியும் என்று குழம்ப வேண்டாம். ஒரு மன்னர் இறந்தவுடன் அடுத்த மன்னர் பதவிக்கு உடனடியாக வந்துவிடுவார். இதைக் குறிக்க “ஹென்றிகளும், ஜார்ஜ்களும் வருவார்கள் போவார்கள்...மணிமகுடம் மட்டும் என்றும் நிலைத்திருக்கும்” என்று சொல்வது பிரச்சினைகளுக்கும் பொருந்தும்.

பிரச்சினை முடிந்துவிட்டது; பிரச்சினை தயாராக இருக்கிறது!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

ரூ.749-க்கு நாடு முழுவதும் விமானப் பயணம்: ஸ்பைஸ்ஜெட் தீபாவளி சலுகை ...............பிடிஐ



ரூ.749-க்கு இந்தியா முழுவதும் விமான பயணம் செய்ய கட்டண சலுகையை விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. சுமார் 3 லட்சத்திற்கும் மேலான இருக்கைகளை இந்த சலுகைக்காக ஒதுக்கியுள்ளது.

அக்டோபர் 27 முதல் 29 வரை மூன்று நாட்களில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகை விலையில் 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை பயணம் செய்து கொள்ளலாம். மேலும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறியுள்ளது.

உள்நாட்டில் பயணம் செய்வதற்கு அடிப்படை கட்டணமாக 749 ரூபாயும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு அடிப்படை கட்டணமாக 3,999 ரூபாயும் கட்டண சலுகையாக அறிவித்துள்ளது.

இந்தக் சலுகை கட்டணங்கள் என்பது வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் உள்ளடக்கியது கிடையாது.

மேலும், மொபைல் செயலி மூலம் பதிவு செய்பவர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணக் கட்டணத்தில் 3 சதவீதம் வரை கூடுதலாக சலுகை வழங்கவுள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் கூறியுள்ளது.

இது குறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்த கவர்ச்சிகரமான சலுகை மூலம் உலக முழுவதும் இருந்து வாடிக்கையாளர்களை கவர முடியும். மேலும் தற்போதுள்ள சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளார்கள் அடுத்த வருடம் பயணம் செய்வதற்கு முன்கூட்டியே தங்கள் பயணங்களை எளிதாக திட்டமிட்டு கொள்ளமுடியும்'' என்றார்.

மனசு போல வாழ்க்கை 31: பாராட்டு எனும் மூலதனம் ....டாக்டர். ஆர். கார்த்திகேயன்



நல்ல வார்த்தைகளுக்கு நாம் எல்லோரும் ஏங்குகிறோம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, உங்களுக்கு வந்து சேரும் ஒரு சின்னப் பாராட்டுக் கூட உங்களை ஒரு நொடியாவது சிறு ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

‘முதல் மரியாதை’ படத்தில் “ பா.. ரா.. ட்ட, மடியில் வச்சு தா..லாட்ட, எனக்கொரு தாய்மடி கிடைக்குமா.. ?” என்று நடிகர் சிவாஜி பாடும்போது உங்கள் கண்களும் கலங்கியிருந்தால் நீங்களும் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் காத்திருக்கிறீர்கள் என்று பொருள்.

தொடுதலும் உணவே

சிசு வளர்வது சுவாசத்தாலும் உணவாலும் மட்டுமா? தாயின் ஸ்பரிசம் தரும் வெப்பத்தினால் தான் அது வளர்கிறது. உளவியல் ஆய்வாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பத் திரும்பச் சொல்லும் செய்தி இதுதான். உணவை விட ஆதரவும் பாராட்டும்தான் தொடர்ந்து பிள்ளையை வளர்க்கிறது. தாயிடமிருந்து தனிமைப்படுத்தப்படும் விலங்கினங்களின் குட்டிகள் தொடுதல் இல்லாதபோது குறைந்த ஆயுட்காலத்தில் இறந்து போகின்றன.

மொழியறிவு வளரும் வரை வார்த்தைகள் தரும் நம்பிக்கையும் பாராட்டும் தொடுதல் மூலமாகவே முழுமையாக நிகழ்கிறது. பிறகு வார்த்தைகள் அதைச் செய்ய வேண்டும். ஆனால் வளர்ந்த பின்னாலும் கூட ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத செய்தியை ஒரு தொடுதல் சொல்லிவிடும் என்பதுதான் உண்மை.

தொடுதலுக்கு இசைந்து வெளிவரும் வார்த்தைகள் பிடிப்புடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மடியில் போட்டு முதுகை நீவிக்கொடுக்கும் தாய் பாதுகாப்பு உணர்வைத் தருகிறாள். விரல் பிடித்து அழைத்துச் செல்லும் அப்பா பாதி ஆசிரியர் ஆகிறார். தட்டிக்கொடுத்துக் கதை சொல்லும் பாட்டி கற்பனையை வளர்க்கிறாள். தோளில் கை போட்டு ரகசியம் பேசும் சகோதரன் உலகைச் சொல்லிக்கொடுக்கிறான். வாரி அணைக்கும் காதலி ஆசையை அள்ளித் தெளிக்கிறாள். முதுகில் ஏறும் பிள்ளை உங்கள் பொறுப்பை உணர்த்துகிறான். உடல் மொழி சொல்லாததை வாய் மொழி சொல்வது கடினம்.

பேச்சுகளின் பெருக்கம்

நாம் வளர்கையில் தொடுமொழி குறைந்து வாய் மொழி ஆதிக்கம் பெருகுகிறது. வார்த்தைகள் மூலம் தான் பெரும்பாலான செய்திகள் செல்கின்றன. அதனால் வார்த்தைகள் பெரும் முக்கியத்துவம் பெற்று விட்டன.

உறவுகள் இயந்திரத்தனமாக இயங்குகையில் தேவைகள் கருதி மட்டுமே வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. நேரம் தான் செல்வம் என்று இயங்குகின்ற உலகில் பொருள் ஈட்ட வழியில்லாத வார்த்தைகள் குறைந்து போகின்றன. பிரச்சினை என்றால் பேசுகிறோம். காரியம் என்றால் பேசுகிறோம். பரஸ்பர அன்புக்கும் நட்புக்கும் அபிமானத்துக்கும் பேசும் பேச்சுகள் குறைந்துவருகின்றன.

இதனால் மனதார ஒருவரைப் பாராட்டுவது என்பதே அரிதான செயலாகிறது. ஒருவர் பாராட்டினாலே ‘இவர் எதற்காக இப்படிப் பாராட்டுகிறார்? இவருக்கு என்ன வேண்டும்?” என்று சந்தேகப்படுகிறோம்!

எதையும் எதிர்பார்க்காமல் ஒருவரை மனதாரப் பாராட்டுதல் என்பது பாராட்டுபவரின் மன வளத்தைக் காட்டுகிறது. அது ஒரு பரிமாண வளர்ச்சி. அதனால் தான் பலருக்கு மனதாரப் பாராட்டும் மன விசாலம் இருப்பதில்லை.

ஆனால் நாம் அனைவரும் பாராட்டுக்கு ஏங்குகிறோம். எங்கிருந்து பாராட்டு வரும்? கொடுத்தால்தானே திரும்பப்பெற?

நல்ல சாப்பாடு என்றால் வார்த்தை பேசாமல் மிச்சம் வைக்காமல் சாப்பிடுபவரில் எத்தனை பேர் மனதாரச் சமைத்தவரை பாராட்டுகின்றனர்? சரியில்லை என்றால் திட்டித் தீர்க்க யோசிப்பதில்லை.

“ஒரு நாளில் எத்தனை பேரிடம் பாராட்டு வாங்குகிறோமோ அவ்வளவு நல்ல சேவையைச் செய்கிறோம்!” என்பது சேவை நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குச் சொல்லித் தரும் பாடம். இதை நான் சற்றுத் திருப்பிப்போட்டுச் சொல்வேன். “ஒரு நாளில் எத்தனை பேரைப் பாராட்டுகிறீர்களோ அவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று பொருள்.”

பாராட்டுவதற்காக பாராட்டு

பாராட்டுவதற்குப் பாராட்டப்படும் பொருளோ மனிதரோ அருகதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பாராட்டுபவரின் அருகதைதான் முக்கியம்.

நம் வாழ்க்கையை மெலிதாகத் தொட்டுச் செல்லும் மனிதர்கள் செய்யும் சிறு காரியங்களைப் பாராட்டுங்கள். அவர்கள் நாள் அன்று நிச்சயம் சிறப்பாக இருக்கும். உங்களுடன் வாழும் மனிதர்களின் நல்ல பண்புகளை, நல்ல செயல்களைப் பாராட்டுங்கள். அது அவர்களின் வாழ்க்கையையே சிறப்பானதாக மாற்றும்.

வீட்டுக்குள் தேவைக்கு அதிகமான பாராட்டு அவசியமா என்று வாதாடுவார்கள். அது வீண் வாதம். பாராட்டுகள் அதிகமானால் பாதகமில்லை. குறைவானால் தான் பாதகம். முடியாதவரிடம் முடியும் என்று சொல்லிச் சற்று அதிகப்படியாகப் பாராட்டினால் பிழையில்லை. ஆனால் முடியும் என்பவரையும் பாராட்டாமல் விடும் பொழுது பலர் தங்கள் திறமைகளின் மேல் நம்பிக்கை வைக்கத் தவறுகிறார்கள்.

பெரும் குடும்பத்தில் வாழும் சூழலில்கூடப் பெரிய பாராட்டுகள் அவசியப்படவில்லை. நல்ல வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருக்கும். இன்று மூன்று பேராய், நான்கு பேராய் சிறுத்துள்ள குடும்பங்களில் வாய் மொழியே குறைந்துவருகிறது. அவசர யுகத்தில் பாராட்டுக்கு ஏது நேரம்?

ஒரு நாள் முயற்சி செய்யுங்கள். ஒரு பத்துப் பேரை இன்று மனதார, பிரதி பலன் எதிர்பார்க்காமல் அவர்கள் நல்ல செயல்களுக்குப் பாராட்டுங்கள். சங்கிலித் தொடர்ச்சியாக நல்ல நிகழ்வுகளை நடத்துவீர்கள்.

ஒருவரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றிவிட்டால் அவரிடம் பாராட்டத்தக்கவல்ல பண்புகளைத் தேட ஆரம்பிப்பீர்கள். அது நல்ல உறவுக்கான வீரிய விதைகளைத் தூவும்.

பாராட்ட நினைத்தும் பிறகு செய்யலாம் என்று ஒத்திப் போடுபவர்கள் பலர் இருப்பார்கள். பாராட்டை இன்றே செய்யுங்கள். உறவுகளில் குறைகள் சொல்வதைத் தள்ளிப்போடுங்கள்.

உங்களைத் தொட்டுச் செல்லும் உறவுகளில்; மனிதர்களில் யாரையெல்லாம் பாராட்டலாம் என்று பட்டியல் போடுங்கள். இன்றே செயல்படுத்துங்கள்.

பாராட்டு ஒரு மூலதனம். அது பன்மடங்கு பெருகி உங்களிடம் திரும்ப வந்து சேரும் என்பது உறுதி.



தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

Tuesday, October 27, 2015

தீர்வு இதுவல்ல!


Dinamani

தீர்வு இதுவல்ல!


By ஆசிரியர்

First Published : 27 October 2015 01:26 AM IST


மத்திய அரசில் குரூப்-டி, குரூப்-சி, குரூப்-பி பணியிடங்களுக்கான நியமனங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதலாக நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து (மன் கீ பாத்) வானொலி உரையில் தெரிவித்துள்ளார்.
÷இது ஏற்கெனவே அவர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்ததுதான். அதைத்தான் தற்போது மீண்டும் உறுதிப்படுத்தி எப்போது அமலுக்கு வரும் என்பதை அறிவித்திருக்கிறார்.
÷நேர்முகத் தேர்வு நடத்துவதால் ஊழல் நடக்கிறது. வேலை வாங்கித் தருவதாக ஏழை மக்களிடம் லஞ்சம் பெறப்படுகிறது. சில நேரங்களில் லஞ்சம் கொடுத்தும் வேலை கிடைக்காமல் ஏழைகள் ஏமாந்து போகிறார்கள் என்பதுதான் இந்த முடிவுக்கான காரணம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுவது உண்மைதான் என்றாலும், நேர்முகத் தேர்வை ரத்து செய்வது என்பது ஊழல் ஒழிப்புக்கு ஒரு தீர்வாக இருக்காது.
÷மத்திய அரசுப் பணிகளில் சுமார் 36 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 95% பேர் குரூப்-பி, சி, டி வகைகளில் சேர்ந்தவர்கள். அதாவது "நான்-கெசட்டெட்' ஆஃபீஸர்ஸ் அனைவரும் இந்த வகைக்குள் வந்துவிடுகின்றனர். இந்தப் பணியிடங்களில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் ஓய்வு பெறுவதும், புதிய நியமனங்கள் நடைபெறுவதும் வாடிக்கையான வழக்கம்.
÷தற்போது பிரதமர் அறிவித்துள்ளதைப்போல, இந்தப் பணியிடங்களுக்கு நேர்காணல் இல்லாமல் வெறும் விண்ணப்பம் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் தரும் பதிவுமூப்புப் பட்டியல் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டால், உரிய ஆற்றல் இல்லாதவர்கள் தேர்வாகும் வாய்ப்பு மிகவும் அதிகரித்து அரசு நிர்வாகத்தின் செயல்பாடு மேலும் பாதிக்கும்.
÷பிரதமர் குறிப்பிடுவது போல இந்த நடைமுறையால் ஊழல் அகன்றுவிடும் என்பதும் உறுதியில்லை. தகுதித் தேர்வு வினாத்தாள் வெளியாதல், விடைத்தாள் மாற்றி வைத்தல் போன்ற ஊழல்கள் நடக்கும் இன்றைய சூழலில், விண்ணப்பத்தைக் கையாளுவோருக்கும், வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்களுக்கும் பணம் கொடுத்துத் தங்கள் பெயரை முன்னுரிமை கிடைக்கச் செய்வது கடினம் ஒன்றும் அல்ல. ஆகவே, இதன்மூலம் ஊழலை ஒழித்துவிட இயலாது.
÷ஹரியாணா அரசு செய்திருப்பதைப்போல, நேர்காணலுக்கு மதிப்பெண் இல்லாதபடி செய்தல் அல்லது அந்த மதிப்பெண் மிகக் குறைந்த அளவே இருக்கும்படி செய்யலாமே தவிர, நேர்காணலே கூடாது என்று சொல்வது அரசுப் பணியில் தகுதியற்றவர்களும் போலிகளும் உள்ளே புகுந்து, அரசு இயந்திரத்தை நாசப்படுத்திவிட வழிவகுக்கும்.
÷சாதாரண கடைநிலை ஊழியர்களான, அலுவலக ஏவலர்கள் (ப்யூன்), துப்புரவுத் தொழிலாளர்கள் (ஸ்வீப்பர்) போன்ற பணிகளுக்கு அந்தந்த அலுவலக உயர்அலுவலர்களே பணி நியமனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும்கூட, அவர்கள் அந்த நியமனத்தைக்கூட, ஒரு முறை நேரில் பார்த்த பிறகுதான் முடிவு எடுக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட வயது இளமையாக இருந்தாலும், நடைமுறையில் அவர்கள் உடல்வலிமையுடன் இருக்கிறார்களா, இந்த வேலையை அவர்களால் செய்ய முடியுமா, பேச்சும், உடல்மொழியும் அடுத்தவரின் உணர்வைப் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறதா என அறிந்து கொள்வதற்காகத்தான் அந்த வாய்ப்பை நேர்காணல் வழங்குகிறது. ஊழியரின் பொதுஅறிவைச் சோதிப்பதற்காக மட்டுமே அல்ல நேர்காணல்.
÷ஒரு பணிக்கு குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதி மட்டுமே போதும் அல்லது தகுதித் தேர்வில் அவர் வெற்றி பெற்றிருந்தாலே போதுமானது; அவரை அப்படியே பணிக்கு வந்து சேரச் செய்யலாம் என்றால், போலிகள் உள்ளே புகுவதில் வெற்றி பெறுவார்கள். இப்போது உடல்தகுதிச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிச் சான்றிதழ்கள் உள்ளிட்டவைக் கூட லஞ்சம் கொடுத்தால் கிடைத்துவிடும் என்பதுதான் உண்மை நிலை. அதனால் குறைந்தபட்சம் நேர்காணலுக்கு மதிப்பெண் ஏதும் இல்லாமலேகூட ஒரு முறை அவர்களது திறமையைச் சோதிக்கும் நடைமுறை கட்டாயம் தேவை.
÷நேர்காணல் குழு உறுப்பினர்கள் ஊழல் செய்கிறார்கள் என்றால், நேர்காணல் குழுவை ஒரு நாள் முன்னதாக, பல்வேறு அரசுத் துறை, பொதுத் துறை சார்ந்த அதிகாரிகளைக் கொண்டு திடீரென அமைத்து, நேர்காணல் நடத்தினால் இடைத்தரகர்களின் செயல்பாட்டை முடக்க முடியும். பள்ளித் தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணியின்போது அவற்றுக்கு மாற்று எண்கள் கொடுத்து, எந்த ஊர், எந்தப் பள்ளி, எந்த மாணவன் என்று தெரியாதபடி விடைத்தாள் திருத்தச் செய்வதுபோல, நேர்காணல் நடத்தும் குழுவையும் திடீரென்று நியமித்து ஊழலை ஓரளவு தவிர்க்கலாம்.
÷நேர்காணல் குழு ஊழல் செய்கிறது, அவர்களை வைத்து இடைத்தரகர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள், மக்கள் ஏமாறுகிறார்கள் என்பதற்காக நேர்காணல் இல்லாமல் செய்வதன் மூலம் திறமை இல்லாதவர்கள் அரசுப் பணியில் நியமிக்கப்படும் அபாயம் அதிகரிக்கும்.
÷ மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற "வியாபம்' பணியிட நியமன, மருத்துவக் கல்லூரி அனுமதி ஊழல் எதிரொலிதான் பிரதமரின் இந்த அறிவிப்புக்கு காரணம் என்று தோன்றுகிறது. ஊழலை ஒழிப்பதில் அவருக்கு இருக்கும் முனைப்பை பாராட்டும் அதேவேளையில், அதற்கு அவர் கையாள நினைக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்யும் முடிவு சரியானதல்ல என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
÷நேர்காணல் இல்லாமல் செய்வதால், ஊழல் குறையும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால், அரசு இயந்திரத்தின் செயல்திறன் குறைந்துபோகும் என்பது சர்வ நிச்சயம்.

திருவாரூர் ஆழித் தேர் வெள்ளோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் By திருவாரூர், First Published : 27 October 2015 12:14 AM IST

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தியாகராஜர் கோயில் ஆழித் தேர் வெள்ளோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவாரூர் நகரில் நடைபெறும் விழாக்களில் தொன்மையும், பெருமையும் வாய்ந்த விழா என்றால் அது ஆழித் தேரோட்ட விழாவே. ஐந்தடுக்கு கட்டுமானங்களை கொண்ட தோó பீடத்தில் 96 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு சுமார் 350 டன் எடையில் தோó கம்பீரமாக அசைந்து வருவதைப் பார்க்க பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தாóகள் வருவார்கள்.
கடந்த 16.7.2010 அன்று நடைபெற்ற ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு தேர் புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டு, 2.8.2010 முதல் தேர் பிரிக்கும் பணி தொடங்கி சில மாதங்களில் நிறைவடைந்தது. பின்னர், புதுத்தேர் கட்டும் பணி சுமார் ஓராண்டுக்கு பிறகு தொடங்கி சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இதையடுத்து, தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை திங்கள்கிழமை ஆழித் தேர், சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்ட விழா நடத்த தீர்மானித்தது.
அதன்படி, திங்கள்கிழமை ஆழித்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி,பிரவேச பலி, ம்ருத்சஹ்கிரஹணம், மாலை 5 மணிக்கு அங்குரார்ப்பணம், ரஷ்பந்தனம், 6 மணிக்கு முதல்கால யாகம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.
தேர் வெள்ளோட்டம்: திங்கள்கிழமை காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகம், 9 மணிக்கு பூர்ணஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு ஆழித்தேர் பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து, காலை 9.20 மணியளவில் சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. பின்னர் 9.30 மணிக்கு ஆழித்தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது, பக்தர்கள் "ஆரூரா, தியாகேசா' என பக்தி கோஷம் எழுப்பினர். பிரமாண்ட தோற்றத்துடன் ஆழித்தேர் ஆடி அசைந்து வந்தக் காட்சி பிரமிக்க வைத்தது. தேருக்கு முன்னால் சிவபக்தர்கள் தேவாரப் பாடல்கள் பாடிச் சென்றனர். இசை வாத்தியங்கள் முழங்க ஆழித் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
தேரடியிலிருந்து தியாகராஜர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. பாதுகாப்பு பணியில் காவல் துறை, தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். சுப்ரமணியர் தேர் நான்கு வீதிகளையும் 5 மணி 45 நிமிடங்கள் சுற்றி விட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் தேரடிக்கு வந்து சேர்ந்தது. இதேபோல், ஆழித்தேர் நான்கு வீதிகளிலும் ஏழரை மணி நேரம் சுற்றிவிட்டு, மாலை 5 மணிக்கு தேரடி நிலைக்கு வந்தடைந்தது. தேர்களை தள்ளும் பணியில் 3 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
தேரோட்ட தேதி அறிவிப்பு எப்போது?
தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்றது.
அதற்கு பிறகு பழையத் தேர் பிரிக்கப்பட்டு, தற்போது ரூ. 2.18 கோடியில் புதியத் தேர் வடிவமைக்கப்பட்டு, திங்கள்கிழமை ஆழித்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
இதனால், பல ஆண்டுகளாக ஆடி அசைந்தாடும் திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை காண முடியாத ஏக்கத்தில் இருந்த பக்தர்களுக்கு விரைவில் ஆழித்தேரோட்டத்தை காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளோட்டம் விடப்பட்டுள்ள நிலையில், தேரோட்டம் நடைபெறும் தேதி இதுவரை தொடர்புடைய துறை அறிவிக்காததால், அந்த அறிவிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் பக்தர்கள்.
ரூ. 45 லட்சத்தில் உருவான சுப்பிரமணியர் தேர்
திருவாரூர் தியாகராஜர் கோயில் சுப்பிரமணியர் தேர் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு சார்பில் ரூ. 45 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் 18 அடி. ஆழித்தேரை போல் ஐந்து அடுக்குகளை கொண்ட இத்தேரின் முதல் அடுக்கில் 99 சிற்பங்கள், இரண்டாம் அடுக்கில் 95 சிற்பங்கள், மூன்றாம் அடுக்கில் 105 சிற்பங்கள் என மொத்தம் 299 சிற்பங்கள் உள்ளன.
மூன்றடுக்குக்கு மேல் தேவாசனம், சிம்மாசனம் உள்ளது. தேரைச் சுற்றிலும் 126 பித்தளை மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
2000-க்கும் மேற்பட்ட கன அடி இலுப்பை மரங்கள், இரண்டு டன் அளவுக்கு இரும்பு பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.



NEWS TODAY 20.09.2024