Thursday, December 10, 2015

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை வெள்ளம் வேட்டையாடியது எப்படி? வி.தேவதாசன் / கி.கணேஷ் / கோ.கார்த்திக் / இரா.நாகராஜன்

Return to frontpage

கடந்த மே, ஜூன் மாதங்களிலிருந்து நவம்பர் முதல் வாரம் வரையும் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்த சென்னை மாநகர மக்களை, நவம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து வெள்ளத்தில் தத்தளிக்க வைத்திருக்கிறது வடகிழக்கு பருவ மழை. வழக்கமாக வெள்ளத்தால் சூழப்படும் வேளச்சேரி, முடிச்சூர் போன்ற புறநகர் பகுதிகள் தவிர, தேனாம்பேட்டை, தியாகராய நகர், மேற்கு மாம்பலம் எனச் சென்னையின் மையப் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. அண்ணா சாலையில் போக்குவரத்தைத் தடை செய்யும் அளவுக்கு வெள்ளத்தின் தீவிரத்தைச் சென்னை மக்கள் அப்போதுதான் பார்த்தார்கள். தரைத் தளத்தில் உள்ள வீடுகள் மட்டுமின்றி, முதல்தளம், இரண்டாம் தளத்தில் உள்ள வீடுகளில் கூட வெள்ளம் நுழைந்து, ஏராளமான மக்களை மொட்டை மாடிக்கும் வீதிகளுக்கும் விரட்டியடித்தது.

இவ்வளவு பேரழிவை ஏற்படுத்தும் அளவுக்கு வெள்ளம் மிகுதியானது எப்படி சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாகத் திகழும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளில் திறந்து விடப்பட்ட உபரி நீர் மட்டுமே பேரழிவுக்குக் காரணமா, அடையாறு, கூவம் ஆறுகளுக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வந்தது என்பன போன்ற பல கேள்விகள் இப்போது மக்களிடம் எழுகிறது. இந்தக் கேள்விகளுக்கு விடை காணச் சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட் டங்களின் நீர் நிலைகள், நில அமைவுகள் பற்றி அறிந்து கொள்வதும் மிக அவசியமாகும். இந்த 3 மாவட்டங்களில் சிறியதும், பெரியதுமாக மொத்தம் சுமார் 3 ஆயிரத்து 700 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் 912 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 1,083 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் குடிநீர் ஆதாரம் மற்றும் பாசனத்துக்குத் தண்ணீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக மதுராந்தகம், தென்னேரி, உத்திரமேரூர் ஏரி மற்றும் கொளவாய் ஏரிகள் உள்ளன.

காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தாமல் ஏரி, காஞ்சி நகரப் பகுதியில் செல்லும் வேகவதி ஆறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பெரிய ஏரி செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் ஏரியாக உள்ளது.

மாவட்டத்தின் மையப்பகுதியில் செல்லும் பாலாறு நதி காஞ்சிபுரம், வாலா ஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாகக் கல்பாக்கம் அடுத்த வாய லூர் கிராமத்தில் கடலில் கலக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய வட்டங்களில் உள்ள ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர், தென்னேரியில் கலந்து அங்கிருந்து செங்கல்பட்டு நகரையொட்டி செல்லும் நீஞ்சல் மடுவு கால்வாயில் பயணித்துப் பழவேலி கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது.

திருப்போரூர் வட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் ஒரு பகுதி ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர் கொளவாய் ஏரிக்குச் சென்று, புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள கலங்கல் வழியாக நீஞ்சல் மடுவில் கலக்கிறது. பெருங்களத்தூர், நந்திவரம், மண்ணிவாக்கம், ஆதனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏரிகளின் உபரி நீர் மணிமங்கலம் வழியாக அடையாற்றில் கலக்கிறது.

உத்திரமேரூர் ஏரியின் உபரி நீர் இரண்டு பகுதியாக வெளியேறுகிறது. இதில் ஒரு பகுதி தண்ணீர் சங்கிலி தொடராக அப்பகுதியில் உள்ள கிராம ஏரிகளை அடைந்து கரிக்கிலி, வெள்ளப்புத்தூர், கட்டியாம்பந்தல், வேடந்தாங்கல் ஏரிகளை நிரப்பி கிளியாறு மூலம் மதுராந்தகம் ஏரியை அடைகிறது.

மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அனைத்தும் மீண்டும் கிளியாற்றில் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் தண்ணீர், கடப்பேரி, விழுதமங்கலம் உள்ளிட்ட 9 கிராமங்களுக்கு நடுவே பயணித்து ஈசூர் கிராமத்தில் பாலாற்றில் கலந்து கடலுக்குச் செல்கிறது.

இவை தவிரத் திருப்போரூர் வட்டத்தில் உள்ள 17 ஏரிகள், சென்னை புறநகர் பகுதிகளாகக் கருதப்படும் கேளம்பாக்கம், தையூர், கோவளம் வழியாகப் பக்கிங்காம் கால்வாயில் கலக்கின்றன. தற்போதைய தொடர் மழையில் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கரைகள் பலவீனம் காரணமாக 75 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுத் தண்ணீர் வெளியேறி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கீழ் 587 ஏரிகள், ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 649 ஏரிகள் என 1,236 ஏரிகள் உள்ளன.

மாவட்டப் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள ஏரிகளில் 337 ஏரிகள் கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ளன. ஆரணி ஆற்றின் வடிநில உப கோட்டத்தின் கீழ் 250 ஏரிகள் உள்ளன. சென்னைக்குக் குடிநீர் தரும் பூண்டி, சோழவரம், புழல் ஆகிய 3 ஏரிகள் தவிர மற்ற ஏரிகள், மழைக்காலத்தில் சங்கிலி தொடர் ஏரிகளாக நிரம்பி உபரி நீர் கூவம், கொசஸ்தலை, ஆரணி, நந்தியாறு நதிகள் மூலம் எண்ணூர், நேப்பியர் பாலம், பட்டினப்பாக்கம், முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் கடலில் கலக்கின்றன.

சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது எப்படி?

தீபாவளி பண்டிகையின்போதே கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் பிறகு நவம்பர் 13-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 326 மிமீ மழை பதிவானது. மீண்டும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் 15-ம் தேதி மட்டும் 230 மிமீ முதல் 370 மிமீ வரை மழை பதிவானது. அப்போதே இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரி நீரை வெளியேற்றின.

இந்தச் சூழலில் நவம்பர் 30 முதல் மூன்று நாட்கள் விடாது கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக டிசம்பர் 1-ம் தேதி பலத்த மழை கொட்டியது. அன்றைய தினம் தாம்பரத்தில் 494 மிமீ, செம்பரம்பாக்கத்தில் 470 மிமீ மழை பதிவானது.

பெரிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய ஏரி களிலிருந்து உபரி நீர் திறந்து விடப் பட்டது. குறிப்பாகச் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 29 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட்டது. எனினும் துல்லியமான கணக்கீடுகள் இல்லாவிட்டாலும் கூட அடையாற்றில் வினாடிக்கு 90 ஆயிரம் முதல் 1 லட்சம் கன அடி வரை வெள்ள நீர் சென்றதாகக் கூறப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகபட்சம் 29 ஆயிரம் கனஅடி மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் அடையாற்றில் 90 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் சென்றது எப்படி என்பதுதான் முக்கியமானது.

மாகாணியம் மலையம்பட்டு பகுதியில் தொடங்கும் அடையாறு காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் 42.5 கிமீ தூரம் பயணித்து வங்கக் கடலில் கலக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட உபரி நீர் உடனடியாக அடையாற்றில் சேர்ந்து விடும்.

இது தவிர வண்டலூர், ஊரப்பாக்கம், இரும்புலியூர், ஆதனூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம், நாட்டரசன்பட்டு, ஒரத்தூர், கண்ணந்தாங்கல், மாம்பாக்கம், வெங் காடு, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், பூந்தண்டலம், பழந்தண்டலம், சீக்கராயபுரம், சோமங்கலம், அமரமேடு, குன்றத்தூர் ஏரி, கோவூர் ஏரி, மாங்காடு, பெரியபணிச்சேரி எனப் பல ஏரிகளின் உபரி நீர் அடையாற்றுக்குதான் வந்தாக வேண்டும். காட்டாங்கொளத்தூர் ஏரி, பொத்தேரியில் உள்ள காவனூர் ஏரி ஆகியவற்றின் உபரி நீர் வெளியேறவும் அடையாறுதான் வழி.

மேலும் பாப்பான்கால்வாய், மண்ணிவாக்கம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், ராமாபுரம் கால்வாய், திருமுடிவாக்கம் இணைப்புக் கால்வாய், ஊரப்பாக்கம் இணைப்புக் கால்வாய், ஒரத்தூர் ஓடை ஆகிய கால்வாய்களும் அடையாறுக்குத்தான் நீரைக் கொண்டு வருகின்றன.

இவ்வாறு கடந்த 1-ம் தேதி பெய்த மழையின்போது ஆதனூர் ஏரி, மணிமங்கலம் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றின் உபரி நீர் திருநீர்மலை பகுதியில் ஒன்று சேர்ந்தபோது அடையாற்றில் மிகப்பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணமாக அமைந்தது.

அதே நேரத்தில் முழு அண்டா தண்ணீரைத் திடீரெனக் கவிழ்த்தது போலச் சென்னை மாநகர எல்லைக்குள்ளும் பெரும் மழை பெய்து கொண்டிருந்தது. மாநகர எல்லையில் பெருகிய வெள்ள நீர் முழுவதும் அடையாற்றிலும், கூவத்திலும்தான் வடிந்தன. ஆக, செம்பரம்பாக்கத்துக்கு கிழக்கே குன்றத்தூர், அனகாபுத்தூர், மதனந்தபுரம், பொழிச்சலூர், விமான நிலையம், ராணுவப் பகுதி, மணப்பாக்கம், கே.கே.நகரை ஒட்டிய பகுதிகள், ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, நந்தனம், கோட்டூர்புரம், அடையார் எனக் கிழக்கு நோக்கிச் செல்லச் செல்லத் தண்ணீரின் அளவும் பெருகவே, வினாடிக்குச் சுமார் 90 ஆயிரம் முதல் 1 லட்சம் கன அடி வரை அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டது.

இன்னொருபுறம் சென்னை பெருநகரத்தில் சிஎம்டிஏ வரையறை எல்லைக்குள் மட்டுமே சிறியதும், பெரியதுமாக 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. அவற்றில் தொடர் கனமழை காரணமாகப் பல்லாவரம், பீர்க்கன்கரணை, இரும்புலியூர், பெரும்பாக்கம், கடப்பேரி, மடிப்பாக்கம் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, குரோம்பேட்டை வீரராகவா ஏரி, ராஜகீழ்ப்பாக்கம், கோவிலம்பாக்கம், நாராயணபுரம் எனச் 27 ஏரிகள் நிரம்பி உடைப்பு எடுத்தது. இதனால் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கேளம்பாக்கம் என சென்னையின் தென்பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடானது.

கூவம், கொசஸ்தலை ஆறுகள்

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் ஏரியில் தொடங்கும் கூவம் ஆறு திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் 72 கிமீ பயணித்து, சென்னை-நேப்பியர் பாலம் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. தற்போதைய பெருமழையின்போது திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 45 ஏரிகள் நிரம்பி அவற்றின் உபரி நீர் கூவம் நதியில் பெருகியது. இதனால் கூவம் நதி செல்லும் வானகரம், நெற்குன்றம், பாடிக்குப்பம், என்எஸ்கே நகர், செனாய் நகர், சேத்துப்பட்டு, எழும்பூர் உள்ளிட்ட இடங்களை ஒட்டிய சென்னை மாநகரப் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. கடந்த 1-ம் தேதி மட்டும் கூவம் நதியில் வினாடிக்குச் சுமார் 25 ஆயிரம் கன அடி நீர் சென்றதாகத் தகவல்.

ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் பகுதியில் உருவாகி, வேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கம் ஏரி வழியாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் நுழைந்து எண்ணூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கும் கொசஸ்தலைஆற்றின் நீளம் சுமார் 136 கிமீ. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்டலம் ஏரி, ஞாயிறு ஏரி, சடையங்குப்பம் ஏரி உள்ளிட்ட 213 ஏரிகளின் உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றிலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக நவம்பர் 16 முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை மட்டும் 19 டிஎம்சி நீர் கொசஸ்தலை ஆற்றின் வழியே வங்காள விரிகுடாவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் அதிகபட்சமாக நவம்பர் 24-ம் தேதி வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடி மழை நீர், கடலில் கலந்துள்ளது.

அதேபோல் ஆந்திர மாநிலம், நகரி மலையடிவாரத்தில் உருவாகும் ஆரணி ஆறு திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் மட்டும் சுமார் 131 கிமீ பயணித்துப் பழவேற்காடு பகுதியில் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செழியம்பேடு ஆழ் ஏரி, எளாவூர் காட்டேரி உள்ளிட்ட 211 ஏரிகளின் உபரி நீர் கலக்கிறது.

ஆக ஒரே நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதாலும், அதே நேரத்தில் வரலாறு காணாத அளவுக்கு ஒரே சமயத்தில் கொட்டித் தீர்த்த கனமழையாலுமே இந்த 3 மாவட்டங்களிலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மேலும் எண்ணிலடங்கா நீர்நிலைகளை ஆக்கிரமித்தது, மழை நீர் வடிகால்களாகத் திகழும் பெரிய ஆறுகள், சிறிய கால்வாய்கள் தூர்வாராதது போன்றவைதான் வெள்ளப் பாதிப்புகளுக்குப் பிரதானக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

தற்போதைய மழை வெள்ளம் நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. அதனை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவது நமது கைகளில்தான் இருக்கிறது. அதைப் பொறுத்தே, எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பது தீர்மானிக்கப்படும்.

பேரிடர் கால வெள்ளத் தடுப்பு சாத்தியமே

பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் ஆர்.தங்கையா

சென்னை மாநகரைப் பொருத்தமட்டில் பெரும்பாலான பகுதிகள் சராசரி கடல் மட்டத்திலிருந்து 10 முதல் 30 அடி உயரத்தில் உள்ளன. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லச் செல்லச் சரிவாக இருந்தால் மழை நீர் வேகமாகக் கடலுக்குச் சென்று விடும். ஆனால் சென்னை மாநகரின் நில அமைவு என்பது மிகப் பெரும்பாலான பகுதிகளில் சரிவாக இல்லாமல் ஒரே தளமாக உள்ளது. இதன் காரணமாக நிலத்துக்கு வந்து சேரும் மழை நீர் கடலுக்குச் சென்று சேருவதற்குப் பிற பகுதிகளை விடச் சற்றுக் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளும்.

இந்தச் சூழலில் கடந்த நவம்பர் 30, டிசம்பர் 1-ம் தேதிகளில் மழை கனமழையாகிக் கனமழை மிகத் மிக தீவிரக் கனமழையாக மாறியதால் ஒட்டுமொத்தச் சென்னை மாநகரமே ஒரு பெரிய குளம் போல் மாறியது. அதே நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியதால் வழிந்த உபரி நீர் அடையாறு, கூவம் நதிகள் வழியே சென்னைக்குள் புகுந்தது.

இது தவிர இங்குள்ள மண் வகை இன்னொரு முக்கிய காரணம். இங்கு வடசென்னை மணல் சார்ந்த பகுதியாகவும், மத்தியச் சென்னை களிமண் பூமியாகவும், தென்சென்னை பாறைப் பகுதியாகவும் உள்ளது. மணற்பாங்கான வடசென்னை பகுதியில் மழை நீர் வேகமாகத் தரைக்குள் உறிஞ்சப்படும். ஆனால் களிமண் மற்றும் பாறை நிலங்களில் மழை நீர் மிக மிக மெதுவாகவே உறிஞ்சப்படும். இதனாலேயே இந்த மண் வகைகள் சார்ந்த மத்தியச் சென்னை, தென்சென்னை பகுதிகளில் கனமழை பெய்யும்போது பெருமளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இயற்கையிலேயே உருவான இத்தகைய நில அமைவு தவிர, கட்டிடங்கள் கட்டுவதற்காக நீர்நிலைகளை அழித்த நம் மனிதர்களின் செயற்கையான செயல்பாடுகள்தான் பேரழிவு ஏற்பட முக்கியக் காரணம். தனி மனிதன் மட்டுமின்றி, நீர்நிலைகளைக் காப்பாற்ற வேண்டிய மத்திய, மாநில அரசுகளே அந்த நீர்நிலைகளை அழித்ததுதான் பெரும் சோகம். நம்மூரில் உள்ள வள்ளுவர் கோட்டம், நேரு உள்விளையாட்டு அரங்கம், கோயம்பேடு சந்தை போன்ற பிரதான இடங்கள் கூட நீர்நிலைகளை அழித்து உருவான இடங்கள்தான்.

எனினும், இப்போது கூட இத்தகைய இயற்கை பேரிடர்களை எளிதாக எதிர்கொள்ளலாம். அதற்கான அறிவியல் தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. உதாரணமாக ஏரிகளின் உபரி நீர் நுழையும் நகரின் மேற்கு புறத்தில் சிறிய தடுப்புகளை உருவாக்கலாம். அங்கிருந்து குழாய்களைப் பதித்துக் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெள்ள நீரை நகருக்கு வெளியே கொண்டு சென்று கடலில் கலக்கச் செய்யலாம்.

தேவை நீர்வழிச் சாலை

‘நவாட் டெக்’ அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஏ.சி.காமராஜ்

வறட்சி, வெள்ளம் இரண்டையுமே சமாளிக்க முடியும். அதற்கான தீர்வுதான் நீர்வழிச் சாலைத் திட்டம். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள நதிகளை மட்டுமின்றி, நாட்டின் பெரும்பாலான நதிகளைப் பிணைக்கலாம்.

சமதளத்தில் அமையக் கூடிய இந்த நீர்வழிச் சாலை மூலம் ஓரிடத்தில் வெள்ளம் ஏற்பட்டால், வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்னொரு பகுதியோடு வெள்ள நீரை உடனே பகிர்ந்து கொள்ள முடியும். இந்தத் திட்டத்தை ஆந்திரத்தில் செயல்படுத்த அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மிகத் தீவிரமாக உள்ளார். தெலங்கானா மாநிலமும் நீர்வழிச் சாலை அமைக்க ஆர்வமாக உள்ளது.

தமிழ்நாட்டிலும் இந்தத் திட்டம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்கெனவே விவாதித்துள்ளோம். ‘நவீன நீர்வழிச் சாலைகள் மூலம் அனைத்து ஆறுகளையும் இணைப்போம்’ என்று 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆகவே, இனியும் தாமதம் செய்யாமல் தமிழ்நாட்டில் நீர்வழிச் சாலைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

பொக்கிஷமாக பாதுகாத்த பொருட்களும் குப்பைக்கு வந்த அவலம் மனம் கலங்கும் சென்னை நகர மக்கள்

logo

சென்னை,

சென்னையில் மழைவெள்ளம் தேங்கிய வீடுகளில் தண்ணீர் வடிந்து வருகிறது. வீதிகளில் பொருட்கள் குவிந்து வருகிறது. பொக்கிஷமாக பாதுகாத்த பொருட்களும் குப்பைக்கு போய் உள்ளன.

புரட்டிப்போட்ட மழை வெள்ளம்

சென்னை நகரை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் மெல்ல, மெல்ல வடிந்து வருகிறது. சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம், கிண்டி, அசோக்நகர், கே.கே.நகர், தியாகராயநகர், மேற்கு மாம்பலம் உள்பட பல பகுதிகளில் குடியிருப்புகளுக்கு புகுந்த மழை வெள்ளநீர் நேற்று வடிந்தது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தபோது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள்-நண்பர்கள் இல்லத்துக்கு சென்றவர்களும், வீட்டின் மேல்தளத்தில் தஞ்சமடைந்தவர்களும் தற்போது தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

குப்பை இல்லாமல் எப்போதும் வீட்டை தூய்மையாக வைத்திருந்த இல்லத்தரசிகள் மழை வெள்ளத்தால் தங்கள் வீடு அலங்கோலமாக மாறி உள்ளதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

சிறுக, சிறுக சேமித்து ஆசை ஆசையாய் வாங்கிய வீட்டு உபயோகப்பொருட்கள் மழை வெள்ளத்தால் சின்னா பின்னாமாகி போனதை பார்த்து பலரும் மனம் கலங்கி உள்ளனர்.

மலைபோல் பொருட்கள்

12 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் சூழ்ந்த சென்னை மேற்கு மாம்பலம் சவுத் கே.ஆர்.கோவில் தெருவில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் சேதமடைந்து பயனற்றுப்போன மெத்தைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

திருமண புகைப்பட ஆல்பம், மூதாதையர்கள் புகைப்படங்கள், நெருங்கிய நண்பர்கள் வழங்கிய நினைவு பரிசுகள், பள்ளி-கல்லூரி படிப்பின்போது வாங்கிய கேடயங்கள், கோப்பைகள் போன்ற காலம், காலமாக பொக்கிஷமாக பாதுகாத்து வந்த பொருட்களும் குப்பைகளில் கிடப்பதை காண முடிகிறது.

அரிசி, பருப்பு போன்ற சமையல் பொருட்களும் வீணாகி, ஒவ்வொரு வீட்டின் முன்பும் குப்பை மேடு போன்று காட்சி அளிக்கிறது.

மக்கள் குமுறல்

இதுகுறித்து மேற்கு மாம்பலம் சவுத் கே.ஆர்.கோவில் தெருவை சேர்ந்த பகுதிவாசிகள் மனகுமுறலுடன் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் மழை வெள்ள நீரை அகற்ற யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எந்த ஒரு அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை. குப்பைகளை அகற்றும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன’ என்றனர்.

ரெயில்களில் பயன்படுத்த படுக்கை விரிப்பை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி 4 ரெயில் நிலையங்களில் நேரிலும் பெறலாம்



புதுடெல்லி


தற்போது, ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளில் மட்டுமே பயணிகளுக்கு படுக்கை விரிப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் பயணிகள் நலனுக்காக, படுக்கை விரிப்புகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை ரெயில்வே துறை இம்மாதம் அறிமுகம் செய்கிறது.

2 படுக்கை விரிப்புகள், ஒரு தலையணைக்கு ரூ.140 செலுத்த வேண்டும். ஒரு போர்வைக்கு ரூ.110 செலுத்த வேண்டும். மேற்கண்ட அனைத்தையும் பெற ரூ.250 செலுத்த வேண்டும். இவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று விடலாம்.

ஆன்லைனில் மட்டுமின்றி, முதல்கட்டமாக 4 ரெயில் நிலையங்களில் நேரிலும் படுக்கை விரிப்பு, தலையணை மற்றும் போர்வையை பெறலாம். புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதின், சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், மும்பை சென்டிரல் ஆகிய ரெயில் நிலையங்களில் உள்ள இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி) உணவகங்களில் இவற்றைப் பெறலாம். இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, மேலும் பல ரெயில் நிலையங்களுக்கு இவ்வசதி விரிவுபடுத்தப்படும்.

சென்னை விமான நிலையத்தில் ரேடார் பழுது காரணமாக விமான சேவை பாதிப்பு

daily thanthi

ஆலந்தூர்

சென்னை விமான நிலையத்தில் ரேடார் பழுது காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. 3 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.

ரேடார் பழுது

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் 1–ந் தேதி முதல் 5–ந் தேதி வரை விமான நிலையம் மூடப்பட்டது. 6–ந் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது.

விமான நிலையத்தில் புகுந்த வெள்ளத்தால் விமானங்களை இயக்க பயன்படுத்தப்படும் 3 ரேடார் கருவிகளில் 2 கருவிகள் பழுதடைந்தன. அவற்றை சரி செய்து கடந்த 6–ந் தேதி முதல் விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது 346 விமான சேவையில் 300 விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

விமான சேவை பாதிப்பு

இந்த நிலையில் நேற்று காலை ரேடார் கருவிகளில் மீண்டும் பழுது ஏற்பட்டது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது. மேலும் காலையில் மழை பெய்துகொண்டு இருந்ததால் மும்பையில் இருந்து 128 பயணிகளுடன் வந்த விமானமும், கொல்கத்தாவில் இருந்து 142 பயணிகளுடன் வந்த விமானமும், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல் வானத்தில் வட்டமிட்டன. பின்னர் 3 விமானங்களும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

இதேபோல் டெல்லி, மும்பை, ஐதராபாத், மதுரை, கொச்சி உள்பட பல நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த மேலும் 10 விமானங்களும் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமிட்டன. மழை நின்றதும், ரேடார் கருவி பழுது சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டது. இதையடுத்து வானில் வட்டமிட்ட விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரை இறங்கின.

பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட 3 விமானங்களும் சென்னைக்கு வந்து சேர்ந்தன. இதனால் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

வெள்ள நிவாரண நிதி வழங்க கணக்கெடுக்கும் பணி தீவிரம் 3 ஆயிரம் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று தகவல்களை சேகரிக்கின்றனர்



மாற்றம் செய்த நாள்:
வியாழன் , டிசம்பர் 10,2015, 4:45 AM IST
பதிவு செய்த நாள்:
வியாழன் , டிசம்பர் 10,2015, 12:48 AM IST
சென்னை,

சென்னையில் மழையால் ஏற்பட்ட சேதங்களை கண்டறிந்து உதவிகள் வழங்குவதற்கு வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.

இந்த பணியில் 3 ஆயிரம் ஊழியர்கள் வீடு, வீடாக சென்று தகவல்களை சேகரித்தனர்.

வெள்ள நிவாரணகணக்கெடுக்கும் பணி


வடகிழக்கு பருவமழையினால், சென்னை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை கண்டறிந்து உரிய நிவாரண உதவிகளை வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் வெள்ள நிவாரண கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தொல்லியல் துறை ஆணையர் டி.கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் மைதிலி கே.ராஜேந்திரன் ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் முன்னிலையில், வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கும் அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

3 ஆயிரம் அலுவலர்கள்


நேற்று முதல் இந்த அலுவலர்கள் சென்னை முழுவதும் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினார்கள். இந்த பணியில் மொத்தம் 21 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரம் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று தகவல்களை சேகரிக்கின்றனர்.

இந்த அலுவலர்களை கண்காணிக்க 21 மாவட்ட வருவாய் அலுவலர்களும், 21 துணை கலெக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 10 வட்டங்களில் இந்த கணக்கெடுக்கும் பணிகளை அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.

கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் சென்னையில் 10 வட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாள்தோறும் தங்களுடைய பகுதிகளில் சென்று தகவல்களை சேகரித்து வருவதற்காக 85 வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குடும்ப அட்டை, வங்கி கணக்கு...


கணக்கெடுக்கும் குழுவினர் வரும்போது, பொதுமக்கள் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். மழையினால் குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் சேதமடைந்திருந்தாலோ அல்லது மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருந்தாலோ அந்த தகவலை மட்டும் கணக்கெடுக்கும் குழுவினரிடம் தெரிவித்தால் போதும்.

வங்கி சேமிப்பு கணக்கு இல்லாதவர்களுக்கு தனியாக சேமிப்பு கணக்கு தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், கணக்கெடுப்பு பணியின் போது வீடுகள் பூட்டப்பட்டிருந்தால், கணக்கெடுக்கும் அலுவலர் அந்த வீட்டினை ‘மறு கணக்கீடு’ என்று குறிப்பிடுவார்கள்.

பின்னர், அந்த வீடுகளுக்கு மீண்டும் கணக்கெடுக்க வருவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்த அறிக்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் சமர்ப்பிக்கின்றனர்.

கணக்கெடுக்க வரும் அலுவலர்கள் கேட்கும் தகவல்கள் 


* வார்டு, பகுதி, தெரு பெயர்

* குடும்ப தலைவர், குடும்ப தலைவி பெயர்

* முகவரி

* குடும்ப அட்டை எண்

* வங்கி கணக்கு எண் இருந்தால், வங்கி பெயர், கிளை பெயர், கணக்கு எண்

* குடிசை வீடா அல்லது கட்டிட வீடா?

* குடிசை வீடாக இருந்தால் முழுமையாகவா அல்லது பகுதியாக பாதிப்பா?

* கட்டிட வீடாக இருந்தால் முழுமையாகவா அல்லது பகுதியாக பாதிப்பா?

* இடிபாடுகள் இல்லையென்றால், பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி முழுமையாகவா அல்லது பகுதியாக பாதிப்பா?

* குடும்ப அட்டை எண் இல்லை என்றால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை எண் குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு இருந்தால், குடும்ப அட்டை வைத்து எந்த கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்களோ? அந்த கடை பெயரையும், வங்கி கணக்கு வைத்துள்ள வங்கி பெயர் மற்றும் முகவரியையும் தெரிவிக்க வேண்டும்.

கூடங்குளம் தாமதம் ஏன்?

daily thanthi



தமிழ்நாடு மிகவேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறது. தொழில் வளர்ச்சியில் உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் முனைவோர் எல்லாம் விரும்பி முதலீடு செய்ய ஓடோடிவரும் மாநிலமாகத் திகழ்வதால்தான், இந்தியாவின் டெட்ராயிட் என்று அழைக்கப்படுகிறது. எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படை என்பது மின்சார உற்பத்தியில்தான் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா வசதிகளையும் கொண்ட தமிழ்நாட்டில், ஆண்டுக்கு ஆண்டு மின்சாரத்தின் தேவை மட்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மின்சாரத்தேவையை பூர்த்திசெய்ய நீர்மின்சாரம் அதாவது புனல் மின்சார உற்பத்தி வாய்ப்பை ஏற்கனவே முழுமையாக பயன்படுத்திவிட்டோம். அனல் மின்சாரம் அதாவது நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான மின்சார நிலையங்கள் அமைக்கும் வாய்ப்பும் அதிகபட்சமாக பயன்படுத்தப்பட்டுவிட்டது. இது சுற்றுப்புற சூழ்நிலையைக்கெடுக்கிறது, மாசுபடுத்துகிறது என்ற குறைபாடு உலகம் முழுவதும் இருக்கிறது. நிலக்கரி தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. வெளிமாநிலங்களில் இருந்துதான் விலைக்கு வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தியாவுக்கே வெளிநாடுகளில் இருந்துதான் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக மட்டும் 500 கோடி டாலர் அரசின் அன்னிய செலாவணி செலவாகிறது என்ற குறை இருக்கிறது.

இந்த நிலையில், ஆபத்பாந்தவனாக அணுமின் நிலையத்தையே அனைவரும் கருதுகிறார்கள். நம் நாட்டில் அபரிமிதமாகக் கிடைக்கும் தோரீயத்தை பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிக்க முடியும் என்பதால், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் முதலில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணுஉலை அமைக்கவும், தொடர்ந்து மற்றொரு ஆயிரம் மெகாவாட் அணுமின்சாரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அணுமின்சாரம் மிகவும் ஆபத்தானது, அதிக செலவு என்பதோடு மட்டுமல்லாமல், சிறிய கசிவு ஏற்பட்டாலும், கொத்து கொத்தாக உயிரிழப்பு ஏற்படும், கடல்வளம் பாதித்துவிடும் என்று பல எதிர்ப்புகள், போராட்டங்கள் நடந்தாலும், அப்துல்கலாம் போன்றவர்கள் அப்படியெல்லாம் நடக்காது என்று சொன்ன உறுதிமொழிகள், அரசாங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், மக்களுக்கு சற்று நம்பிக்கையைக் கொடுத்து, அதன்பலனாக ரூ.18 ஆயிரம் கோடி செலவிலான இந்த திட்டத்தை அரசாங்கம் தொடங்கியது. முதல் யூனிட்டுக்கான கட்டிட பணிகள் 2002–ம் ஆண்டு மார்ச் மாதம் 31–ந் தேதி தொடங்கியது. 12 ஆண்டு களுக்குப்பிறகு 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31–ந் தேதி உற்பத்தி தொடங்கியது. இந்த ஆயிரம் மெகாவாட்டில் தமிழ்நாட்டுக்கு 563 மெகாவாட்தான் கிடைக்கும் என்றாலும் சரி பரவாயில்லை என்று மக்கள் நினைத்தனர். தொடங்கிய நாளில் இருந்தே சிறு சிறு கோளாறுகள் ஏற்பட்டன. ஆனாலும், மக்கள் தொடக்கத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்று மனதைத் தேற்றிக்கொண்டனர். ஆனால், தொடங்கி 5 மாதத்திலேயே பராமரிப்புக்காக என்று சொல்லி ஜூன் மாதத்தில் மூடிவிட்டார்கள். 90 நாட்களில் அதாவது செப்டம்பர் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கிவிடுவோம் என்று உறுதிஅளிக்கப்பட்டது. ஆனால், 6 மாதங்கள் ஆகியும் இன்னும் உற்பத்தியைத் தொடங்கவில்லை.

இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா அக்டோபர் மாதம் 7–ந் தேதியே உடனடியாக உற்பத்தியைத் தொடங்கவேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். முழுக்க முழுக்க ரஷ்ய நாட்டு இயந்திரங்கள், எரிபொருளும் அங்கு இருந்துதான் வரும் சூழ்நிலையில், தொடக்கத்திலேயே இப்படி கோளாறு என்றால் காலப்போக்கில் என்ன ஆகுமோ?, 2–வது யூனிட் எப்போது தொடங்குமோ? என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துள்ளது. மத்திய அரசாங்க அணுசக்தித்துறை உடனடியாக இன்னும் தாமதம் இல்லாமல் முதல் யூனிட்டில் உற்பத்தியைத் தொடங்கிவிட்டு, 2–வது யூனிட் எப்போது முதல் செயல்படும் என்ற உறுதியான தகவலைத் தெரிவிக்கவேண்டும்.

Monday, December 7, 2015

சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு ந.வினோத் குமார்

Return to frontpage

வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது செல்வா ஆதீஸ்வரி தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்துக்குப் பின்புறம் உள்ள கோபு சாலையில் வரிசையாக இருக்கின்றன குடிசை வீடுகள். அதில் இரண்டு ஆட்கள் நின்று பேசும் அளவுக்கான உயரத்தில் மூன்று பேர் அமர்ந்து பேசும் அகலத்தில் ஒரு குடிசை வீடு.

"இது வீடில்லைங்க. எங்க இஸ்திரி கடை. எங்க வீடு தண்ணீல போய்டிச்சி. இப்ப இங்கதான் நாங்க இருக்கோம்" என்கிறார் செல்வா.

"பூனைங்க எல்லாம் உங்களுதா..?"

"ஆமாங்க. நாங்களே வளக்குறோம். இதுங்க நம்ம கொழந்தைங்க மாதிரி" ஆதீஸ்வரி.

"உங்களுக்குக் குழந்தைங்க இருக்கா..?"

"நாலு பேருங்க..." ஆதீஸ்வரி.

"சரி... நீங்களே வீடில்லாம கஷ்டப்படுறீங்க. இப்ப பூனைங்க எல்லாம் தேவையா?" என்று செயற்கைத்தனமாய் கேட்டேன்.

"என்ன பண்றதுங்க... வாயில்லா ஜீவனுங்க. இதுங்களுக்கு சாப்பாடு கொடுக்கறதால மனசுல ஒரு சந்தோஷங்க" செல்வா.

பேரிடர் சார்ந்த களப் பணியாற்றுவோரின் பார்வையில் படுகின்ற பல்லாயிரக்கணக்கான நி(நெ)கிழ்வுகளுள் இது ஒற்றைத் துளி.

இன்னும் எத்தனை முறை மழை வந்தாலும் சென்னை ஏன் அழியாது என்பதற்கு வேறு காரணம் வேண்டுமா?

இயற்கைப் பேரிடர்களும் பெண்களின் துயரங்களும்..............ஆதி வள்ளியப்பன்

Return to frontpage

கடந்த வார ஆரம்பத்தில் சென்னையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கிண்டலாக இப்படிச் சொன்னார் - சென்னை மக்கள் இப்போதெல்லாம் பைப்பில் தண்ணீர் வந்தால்கூட பயந்துதான்போகிறார்கள் என்று. அவர் அப்படிச் சொன்னதற்கு முன்பாக அடைமழை சென்னையில் இரண்டு முறை தலைகாட்டிவிட்டுச் சென்றிருந்தது. ஆனால், அந்தக் கிண்டலை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு மிரட்டியிருக்கிறது டிசம்பர் முதல் வாரம் பெய்த மழை.

மழையின் நாதம் இனிமையான கிங்கிணிச் சத்தங்களுடன் ஒப்பிடுவதெல்லாம் சென்னைவாசிகளுக்கு இப்போது எரிச்சலையே ஏற்படுத்துகிறது. மழையின் தூறல் ஒலி ஆரம்பித்தவுடன் அவர்களுடைய மனதில் பற்றிக்கொள்ளும் பதற்றம், நேரம் ஆக ஆக மழையின் சத்தம் வலுப்பதைப் போலவே வலுத்து முடிவில்லாமல் நீள்கிறது.

அடைமழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில் பொதுவாகவே எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள் என்றபோதும், அதிகம் பாதிக்கப்படுபவர்கள் வழக்கம் போலவே பெண்களும் குழந்தைகளும்தான். காரணம், ஒவ்வொரு பெண்ணும் தன்னைவிடவும் தன் குழந்தை, குடும்பம், அதன் உறுப்பினர்களை தார்மீகமாக தூக்கிச் சுமப்பதும், பாதுகாத்துவருவதுமே.

சென்னையை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் அடைமழை-வெள்ளம் மட்டுமின்றி, உலகில் நிகழும் பெரும்பாலான இயற்கைச் சீற்றங்களில் கடுமையாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. காலம்காலமாகப் பெண்களுக்கு சமஉரிமைகள் மறுக்கப்பட்டுவந்துள்ளன. இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களிலும் அது கடுமையாக எதிரொலிக்கிறது. நம்மூரில் பெரும்பாலான குடும்பங்களுக்கு பொருளாதாரத் தூணாக இருந்து காப்பாற்றுகிறவர் ஆண் என்ற நம்பிக்கை உள்ளது.

நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி பெண்கள் பரவலாக வேலைக்குச் செல்கிறார்கள். அது மேல்தட்டு வர்க்கம், நடுத்தர வர்க்கம், அடித்தட்டு வர்க்கம் என எதுவென்றாலும் சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்று வீட்டு வேலையை முடித்துவிட்டு, வெளி வேலைக்குச் செல்கிறார்கள். அப்போதுதான் குடும்ப பாரத்தை சமாளிக்க முடியும் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

அப்படியே வெளி வேலைக்குச் செல்லாத இல்லத்தரசிகள், பணத்தைக் கொண்டுவரவில்லையே தவிர, வீட்டு வேலைகள், குடும்ப வேலைகள் என்று அவர்கள் ஈடுபடும் வேலையைக் கணக்கிட்டால், அவற்றுக்குக் கொடுக்கத் தேவைப்படும் சம்பளம் குறிப்பிடத்தக்க அளவு இருக்கும்.

அது மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்துக்குத் தேவையான நல்ல தண்ணீர் முதல், காய்கறி, தானியங்கள், சமையல் போன்ற பல்வேறு விஷயங்களுக்குத் தேவையான வளங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி வருவது, எடுத்து வருவது பெண்களின் வேலையாக இருக்கிறது.

வரலாற்றுரீதியில் தங்கள் குழந்தைகளையும் குடும்பங்களையும் உடல்ரீதியிலும், உணர்வுரீதியிலும் எப்படி வளர்க்கப் பாடுபட்டோர்களோ, அதேபோலவே இன்றைக்கும் பெண்கள் பாடுபடுகிறார்கள். வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது நமக்கு நல்ல தண்ணீர் கிடைக்காததை,

மாநகராட்சிக் குழாய்களில் தண்ணீர் வராததை வெறும் மாநகராட்சிப் பிரச்சினையாகவே பார்க்கிறோம். ஆனால், மற்ற நாட்களில் அடி பம்பிலோ, லாரியிலோ தண்ணீரைப் பிடித்து வீட்டுக்கு எடுத்து வரும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களுடையதாகவே இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

அதேபோல உணவு, பால், சமைப்பதற்கான விறகு சேகரிப்பு, அடுப்பு போன்றவற்றை இன்றைக்கும் பெண்களே பெருமளவு கையாள்கிறார்கள். வெள்ள நேரத்தில் வீட்டுக்குள்ளும் வெளியிலும் தண்ணீர் புகுந்துவிட்டதை ஒரு நகரமைப்புப் பிரச்சினையாகப் பார்க்கிறோம்.

இயற்கைச் சீற்றங்கள் அனைத்தும் பெண்களின் வேலைகளைக் கடுமையாக்குகின்றன, மோசமடையச் செய்கின்றன என்பதையும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், வீட்டுக்கு வரும் பால் முதல் உணவுப் பொருட்கள்வரை அனைத்தையும் நிர்வகிப்பவள் பெண்தான்.

அதேபோல இயற்கைச் சீற்றங்கள் குறித்த உடனடித் தகவல்கள் பெரும்பாலும் ஆண்களுக்கே தெரிந்திருக்கின்றன. தற்போதைய வெள்ளத்திலும்கூட வாட்ஸ்ஆப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பெருமளவு ஆண்களின் பங்கேற்பையே பார்க்க முடிந்தது.

அது மட்டுமல்லாமல், அடுத்து என்ன செய்வது என்று ஒரு அம்மா யோசித்துக்கொண்டிருக்கும்போது, சில ஆண்கள் ஸ்மார்ட் போனை நோண்டிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. எனவே, சரியான நேரத்தில், சரியான தகவல்கள் முழுமையாகப் பெண்களைச் சென்றடைவதில்லை.இதன் காரணமாகவும், பொதுவாகவே முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்களிடமே இருப்பதாலும், இயற்கைச் சீற்றங்களின்போது பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறார்கள்.

தற்போதைய வெள்ளத்திலும்கூட இந்த நிலையை நன்றாகப் பார்க்க முடிகிறது. அதிலும் தனித் தாய்மார்களின் பிரச்சினையை வார்த்தைகளில் எளிதாக வடிக்க முடியாதது. உயிர் போகும் நெருக்கடிகளில்கூட எதை முதலில் காப்பாற்றுவது என்பது போன்ற எல்லா முக்கிய முடிவுகளையும் தனியொரு பெண்ணாகவே ஒவ்வொருவரும் சிந்தித்து எடுக்க வேண்டும்.

உலகிலுள்ள ஏழைகளில் பெரும்பாலானவர்கள் பெண்கள், அவர்கள் இன்னும் மோசமாக பாதிக்கப்படுவார்கள். இந்த நிலை சென்னைக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்ட கடலூர், மற்ற ஊர்களில் உள்ள ஏழை, எளிய குடும்பத்தினர், குறிப்பாகப் பெண்களே அதிக பாதிப்பை தங்கள் முதுகில் சுமந்திருக்கிறார்கள்.

உலக இயற்கைச் சீற்றங்களும் இதையே உணர்த்துகின்றன. அமெரிக்காவில் நிகழ்ந்த கத்ரீனா புயலில் ஏழைப் பெண்கள் மேலும் ஏழையானார்கள். இந்தோனேசியாவின் பண்டா அசே பகுதியில் நிகழ்ந்த ஆழிப் பேரலையின்போது பலியான இறப்பில் 55 முதல் 70 சதவீதம் பேர் பெண்கள். இது மிகப் பெரிய முரண்பாடு.

தண்ணீர், உணவு உட்பட இயற்கை வளத்தை நேரடியாகச் சேகரிப்பவர்கள், நிர்வகிப்பவர்கள் பெண்களே. ஆனால், இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுபவர்களும் அவர்களே. இது எவ்வளவு பெரிய முரண்பாடு. அத்தியாவசியத் தேவைகளைச் சிறப்பாக நிர்வகிக்கும் பெண்களால், இயற்கைச் சீற்றங்களைச் சரியாகக் கணித்து, சரியான முடிவுகளை எடுப்பதில் பெருமளவு உதவ முடியும்.

இயற்கை வளத்தைக் காலம்காலமாகப் பேணி வளர்த்துப் பெருக்கி, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஊட்டமாக வளர உழைத்த பெண்களால் இயற்கைச் சீற்ற இடர்ப்பாடுகளைச் சீரமைப்பதில் சிறப்பாக செயலாற்ற முடியும்.

அது மட்டுமல்லாமல் காலம்காலமாக இயற்கை வளங்களை நிர்வகித்துவந்த பெண்களால், இயற்கைச் சீற்றம் போன்ற நெருக்கடியான நேரத்திலும் சிறப்பாகச் செயல்பட முடியும். ஒரே நிபந்தனை ஆணுக்குக் கிடைக்கும் எல்லாச் சுதந்திரமும் பெண்களுக்கும் இது சார்ந்து கிடைக்க வேண்டும் என்பதுதான்.

மாற வேண்டும் மனோபாவம்

Dinamani


By நா. குருசாமி

First Published : 05 December 2015 02:00 AM IST


பூகம்பம், நிலச்சரிவு, ஆழிப்பேரலை, மழை வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழும் போதும், அதன் பிறகு மேற்கொள்ளப்படும் மீட்பு, நிவாரணப் பணிகளின் போதும் மனதை நெகிழச் செய்யும் சம்பவங்களுடன், பாதிக்கப்பட்ட மக்களின் கோபதாபங்களும், எதிர்மறையான கருத்துகளும் வெளிப்படும். சென்னை மாநகரமும், அதன் புறநகர்ப் பகுதிகளும் தற்போது எதிர்கொண்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளின் போதும் இத்தகைய நேர்மறையான, எதிர்மறையான போக்குகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழக தீயணைப்புத் துறையினர், போலீஸார், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் முப்படையினர் முழுவீச்சில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சேவை அமைப்புகளும் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் மனம்திறந்து பாராட்ட வேண்டும்.
வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள் உள்ளிட்டோர் மீட்கப்பட்டு, உரிய நிவாரணம் கிடைத்திட உதவியவர்கள் தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள், அவர்களது புகார்கள்தான் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, இந்த வெள்ளப் பாதிப்பை பயன்படுத்தி இயன்றவரை பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்படும் வியாபாரிகள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் வெந்த புண்ணில் வேல் கொண்டு பாய்ச்சுவது போல உள்ளன.
பொதுவாக, எந்தவொரு பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்போது, அதன்
விலை உயரத்தான் செய்யும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதற்காக, இயற்கைப் பேரிடரின் விளைவுகளை எதிர்கொண்டுள்ள மக்களிடமிருந்து பிடுங்கிய வரை லாபம் என்ற போக்குடன் செயல்படுவது மனிதாபிமானமற்றது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
குடிநீர், பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை, அவற்றின் நிர்ணய விலையைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக விற்பதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. முக்கியப் பண்டிகைகளின் போது பயணிகளின் கூட்டம் அதிகமிருந்தால், வழக்கத்தைவிட மிக அதிகக் கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களைப் போல, வியாபாரிகளும், வர்த்தகர்களும், ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்களும் செயல்படுவது சரியல்ல.
பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவாவிடினும், அவர்களது மனவேதனையை மேலும் அதிகரிக்கும் விதத்தில் செயல்படாமல் இருப்பதே பேருதவியாக இருக்கும் என்பதை இத்தகையோர் உணர வேண்டும்.
இத்தகைய வியாபாரிகள், ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதுபோல சில தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த 18 நோயாளிகள் செயற்கைச் சுவாசக் கருவிகள் செயலிழந்ததால் இறந்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகும். மின்சாரம் தடைபட்டு, ஜெனரேட்டரையும் தொடர்ந்து இயக்க முடியாத சூழல் ஏற்பட்டவுடனேயே அந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றியிருந்தால் அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.
பணம் சம்பாதிப்பதை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படும் இதுபோன்ற தனியார் மருத்துவமனையின் இத்தகைய அலட்சியப் போக்கை வெறுமனே கண்டிப்பதோடு நின்றுவிடாமல், அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின் விநியோகம் தொடர்ந்து மூன்று நாள்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மின் தடை காரணமாக செல்லிடப்பேசி கோபுரங்கள் செயலிழந்துவிட்டதால், உதவிக்கு மற்றவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் பரிதவித்து வருகின்றனர். செல்லிடப்பேசி கோபுரங்களை ஜெனரேட்டர் மூலம் இயக்குவதற்கு டீசல் தேவை. ஆனால், எரிபொருள் சேவை வழங்கும்
மத்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சென்னையில் உள்ள தங்களது விநியோகஸ்தர்களுக்கு தேவையான அளவு பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய எண்ணெய் நிறுவனங்களின் இத்தகையப் போக்கும் கண்டிக்கத்தக்கதாகும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் பணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்தப் பணியில் அரசுடன் கைகோத்து செயல்பட முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் இன்னல்களைக் கொடுக்காமல் இருந்தாலே போதும் என்பதை மனதில் கொண்டு, வியாபாரிகளும், ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும்.
இந்த உலகில் நாம் சேர்க்கும் பணமும், பொருளும் நாம் மறையும் போது நம்முடன் வராது. எனவே, எப்படியாவது அதிகளவில் பணம் சேர்க்க வேண்டும் என நினைப்போர், தங்களது இந்த மனோபாவத்தை மாற்றிக் கொண்டால், அது அவர்களுக்கும், பிற மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

இது வேகத் தடை மட்டுமே!

Dinamani



By ஆசிரியர்

First Published : 07 December 2015 01:21 AM IST


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்வதில் மத்திய அரசுக்கே அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சென்னையைக் கிழித்துப்போட்ட பேய்மழையில் மூழ்கிப்போனது. இந்தச் செய்தி பலரால் படிக்கப்படாமலும், பார்க்கப்படாமலும் கடந்து போய்விட்டது. கட்செவி அஞ்சல், முகநூல் ஆகியவற்றிலும்கூட ஏற்றம்பெற்ற பதிவுகள் மிகச் சிலவே. சமூக ஊடகங்களும் வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தன.
÷இந்தத் தீர்ப்பு குறித்து சில அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்த எதிர்வினைகளுக்கு யாரும் முக்கியத்துவம் தர இயலவில்லை. மக்கள் கவனம் முழுதும் சென்னையின் வெள்ளத்தையே நோக்கி இருந்தன. வெள்ளத்தால் ஒளி ஊடகங்கள் செயல்பட இயலாத நிலைமை. செயல்பட்ட ஊடகங்களுக்கும் மழை வெள்ளத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டிய கட்டாயம். ஆகவே, 7 பேர் தண்டனை குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சில விநாடிகளில் வாசிக்கப்பட்டு முடிந்துபோனது.
÷இருப்பினும், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பானது, சட்டச் சிக்கல் மீதான விளக்கமே என்பதையும், இவர்களது விடுதலையை முற்றிலுமாகத் தடுத்துவிடும் எதுவும் அத்தீர்ப்பில் இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இது நிச்சயமாக, தமிழக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல. இத்தீர்ப்பு, இந்த 7 பேரையும் விடுதலை செய்யும் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட வேகத் தடை மட்டுமே.
÷சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால் தொடுக்கப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம், சி.பி.ஐ.யை தன் பொறுப்பில் வைத்திருக்கும் மத்திய அரசுக்கே உள்ளது என்றும், ஆகவே, தொடர்புடைய அரசு முடிவு செய்ய வேண்டும் என்கின்றபோது, இந்த வழக்கில் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம். அத்தகைய நிலையில் மாநில அரசு இந்தக் கைதிகளை விடுவிக்கும்போது, "மத்திய அரசுடன் ஆலோசனை செய்து' என்று சொல்லப்படும் வார்த்தைக்கு "மத்திய அரசின் அனுமதியுடன்' என்று பொருள் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
÷இதன்படி, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தமிழக அரசு விடுவித்தது தவறு அல்ல. மத்திய அரசுப் புலனாய்வு நிறுவனங்கள் தொடர்புடைய வழக்கில் தண்டனை பெற்றவர்கள் என்பதால், மத்திய அரசிடம் அனுமதி பெற்று விடுவித்திருக்க வேண்டும் என்பதைத்தான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
÷ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருடைய கருணை மனுக்களை பரிசீலிப்பதில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் மேலதிகமான காலதாமதத்தைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இவர்களது தண்டனையை ஆயுள் சிறைத்தண்டனையாக குறைக்கலாம் என்று கூறியது. இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை ஆயுள் தண்டனைக் கைதிகளாகக் கருதி விடுவிக்க வேண்டும் என்று தமிழ் ஈழ ஆதரவு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
÷தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனடியாக, தண்டனை குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமன்றி, ஏற்கெனவே ஆயுள் கைதிகளாக உள்ள நளினி உள்ளிட்ட 4 பேரையும் சேர்த்து 7 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அன்றைய தினம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்ததாலும், இது ராஜீவ் காந்தி விவகாரம் என்பதாலும், இந்த விடுதலை ஜெயலலிதாவின் பிறந்தநாள் (பிப்ரவரி 24-ஆம் தேதி) வெற்றிக் கொண்டாட்டமாக மாறிவிடும் என்ற அரசியல் காரணங்களாலும் உடனடியாக தடை உத்தரவு பெற்றது அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு. இந்த விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியபோதிலும், அது வெறும் தகவலாகவே கருதப்பட்டது. அனுமதி கோரியதாகக் கருதப்படவில்லை.
÷ஆகவே, தமிழக அரசு, தற்போது உச்சநீதிமன்றம் காட்டியுள்ள வழிகாட்டுதலின் படி, ஆலோசனையாக இல்லாமல் அனுமதி கோரிக் கடிதம் எழுதலாம். இதை மறுக்கக் கூடிய அல்லது ராஜீவ் காந்தி விவகாரம் என்பதால் தயக்கம் காட்டக்கூடிய அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. ஆகவே, உடனடியாக அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அனுமதி அளிக்காவிட்டால், அதற்கான விமர்சனங்களை ஏற்க வேண்டியது மத்திய அரசுதானே தவிர, மாநில அரசோ, ஜெயலலிதாவோ அல்ல.
÷இரண்டாவதாக, குற்றவாளிக்குத் தன்னிச்சையாக தண்டனையைக் குறைக்க குற்றவியல் சட்டம் வழிவகுக்கவில்லை என்றும், குற்றவாளி அளிக்கும் மனுவைப் பரிசீலித்து அதன் மீது நீதிபதி விசாரித்து திருப்தி அடைந்த பிறகே அவரது தண்டனையைக் குறைக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
÷ஆகவே, இந்த 7 பேரும் மீண்டும் தங்கள் விடுதலை குறித்து மனு கொடுக்கவும், ஏற்கெனவே நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதைப்போல 14 ஆண்டுகள் சிறையில் கழித்த தங்களை விடுதலை செய்யக் கோரவும் இத்தீர்ப்பு இடமளிக்கிறது.
÷குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப, 14 ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகும் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கச் செய்வதை சிறப்பு நேர்வாகக் கருதலாம் என்கிற கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தால், இவர்களது தண்டனையை சிறப்பு நேர்வாகக் கருதி, சிறையில் நீடிக்க விடுவதா அல்லது விடுவிப்பதா என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்த தமிழக அரசு கோரலாம்.
÷விடுதலை விவகாரம் இத்தோடு முடியவில்லை!

2 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை: புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை

Dinamani

By சென்னை,

First Published : 07 December 2015 02:40 AM IST





தென் மேற்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே சில நாள்களுக்கு முன் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை கன்னியாகுமரி கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த இரு நிலைகளால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் 2 நாள்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால், ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்ட மக்களை அச்சம் அடையச் செய்துள்ளது.
மழை எச்சரிக்கை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைமை இயக்குநர் எஸ்.பாகுலேயன் தம்பி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த சில நாள்களுக்கு முன் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஞாயிற்றுக்கிழமை வலுவிழந்து, கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு: இரு நிலைகள் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில், பலத்த, மிக பலத்த மழையும் பெய்யும். சென்னையில் இருந்து வேதாரண்யம் வரையிலான கடலோர மாவட்டங்களில், 60 மி.மீ. முதல் 120 மி.மீ. வரை மழை பெய்யும் வாய்ப்புண்டு. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும்.
சென்னை மாநகரில் விட்டு விட்டு மழை பெய்யும். ஒரு சில நேரங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை இருக்கும்.
பலத்த காற்று எச்சரிக்கை: கடலோரப் பகுதியில், வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றார் பாகுலேயன் தம்பி.
அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம்: இதற்கிடையே, சென்னையில் கடந்த 3 நாள்களாக மழை சற்று ஓய்ந்திருந்ததால் சனிக்கிழமை (டிச. 5) முதல் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. பால், பெட்ரோல், டீசல், உள்ளிட்ட அத்தியாவசப் பொருள்கள் தட்டுப்பாடு குறைந்து விநியோகம் சீரடைந்து வருகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையிலும் செயல்பட்டன. 50 சதவீதம் ஏ.டி.எம்.கள் செயல்பட்டன. பால், தயிர் விநியோகம் ஓரளவு சீரடைந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை 70 சதவீதத்துக்கு மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்களில் செயல்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்த மக்களுக்கு நூற்றுக்கணக்கான தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றன. ஆனாலும், இந்த நிவாரணப் பொருள்களை முறையாக வழங்குவதற்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.
படிப்படியாக மின் விநியோகம்: வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை நகரில் மின் விநியோகம் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள மணலி, எம்.கே.பி. நகர், சிட்கோ நகர், முடிச்சூர், அனகாபுத்தூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், மேற்கு மாம்பலம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மின் விநியோகம் வழங்கப்படவில்லை.
மீண்டும் ரயில், விமான சேவை: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் திங்கள்கிழமை (டிச. 7) முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுபோல் கடந்த டிசம்பர் 2 முதல் மூடப்பட்டிருந்த சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது. புறநகர் மின் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் மோசமாக இருந்தாலும் பேருந்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மீண்டும் மழை பெய்த தொடங்கியதால் மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் 2 நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அமைச்சர்கள், அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை, போலீஸார், ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
14 லட்சம் பேர் பத்திரமாக மீட்பு
சென்னை, புறநகர் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து 14 லட்சத்து 32 ஆயிரத்து 924 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டோர் 14,32,924.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள படகுகள் 600.
நிவாரண மையங்கள் 5,554.
விநியோகிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் 85,98,280.
நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் 24,220.
முகாம்களில் பயன்பெற்றவர்கள் 20,17,244.
கால்நடை மருத்துவ முகாம்கள் 1,536.
சிகிச்சை பெற்ற கால்நடைகள் 1,55,007.
முகாம்களில்விநியோகிக்கப்பட்ட பால்பவுடர் 453 மெட்ரிக் டன்
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வெள்ளப் பாதிப்பு, பலத்த மழை ஆகிய காரணங்களால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6-ஆம் தேதிக்குப் பிறகு தொடர் மழையால், நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, நவம்பர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் மட்டும் பள்ளிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: புதுச்சேரி, காரைக்காலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இரு மாவட்டங்களிலும் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

Sunday, December 6, 2015

நெட் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்து!

நெட் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்து!

ற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ  விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "li-fi" ஆகும்.

இதன் சிறப்பு,  ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வேகத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஆல்பம், அதிக டெஃபனிஷன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணிமைக்கும் நொடியில் டவுன்லோடு செய்யலாம். இந்த வேகத்ற்கு காரணம் இந்த டெக்னாலஜியில் LED லைட்டுகளை பயன்படுத்தப்படுவதே. இதற்காக கண்ணால் காணக்கூடிய ஒளி யை தகவல் தொடர்புக்காக பயன்படுத்துகிறது. இந்த நெட்வர்க் மிகவும் பாதுகாப்பானதும் கூட.

இதனை மிகவும் சிறிய சிப் பில் வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இப்போதுள்ள டெக்னாலஜியில் இது மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடின்பர்க் யுனிவர்சிட்டி பேராசிரியர் 'ஹரால்டு ஹாஸ்' ன் வழிகாட்டுதலி்ல் அமைக்கப்பட்ட குழு இந்த சாதனையை படைத்துள்ளது. தரைத்தளத்திற்கு இணையாக  இந்த ஒளி பரவுகிறது. அதனால்   நெட்வொர்க்கின் திறனை இது அதிகப்படுத்துகிறது. ஆனால் இதில் பயன்படுத்தப்படும் ஒளி அலைகள் சுவர்களில் ஊடுருவ இயலாது என்பது இதன் ஒரு  குறை.
இது குறித்து பேராசிரியர் ஹாஸ் கூறுகையி்ல், " இதன் எளிய உள்கட்டமைப்பு இதனை பரவலாக பயன்படுத்தப்படும்படி வழிவகை செய்கிறது. இனி வரும் காலங்களில் ஒளி விளக்குகளால் மட்டுமல்லாமல், இந்த LI-FI மூலம் உலகம் பசுமையாக மின்னப்போகிறது" என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தற்போதைய வேகமான உலகம்,  இன்னும் அதிவிரைவான உலகமாக மாறப்போகிறது என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

-ப.பிரதீபா
(மாணவப் பத்திரிகையாளர்)

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: வடமாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! vikatan news

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று(ஞாயிறு) அதிகாலை முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. 
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு  மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. 

காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. புதுச்சேரி, காரைக்கால், கடலூர்  கடலோர மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. 

குமரிக்கடல் பகுதியில் நிலைக் கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வுநிலையுடன், தென்மேற்கு வங்க கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்றும் உருவாகி உள்ளது. இதனால் சென்னையில் இருந்து வேதாரண்யம் வரையில் வட கடலோர மாவட்டங்களில் கனமழையும், மிக கனமழையும் பெய்யும். தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும். 

சென்னையைப் பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் விட்டு, விட்டு மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெள்ளத்தில் தப்பாத எம்.ஜி.ஆர் இல்லம்; வேதனையில் ரசிகர்கள்


சென்னை; முன்னாள் முதல்வர், அமரர் எம்.ஜி.ஆர் வாழ்ந்து மறைந்த வீடு வெள்ளத்தில் சிக்கி, அவர் சேகரித்து வைத்திருந்த பரிசுப் பொருட்கள் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தகவல் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் தண்ணீரில் மூழ்கி மக்கள் தத்தளிப்பில் உள்ளனர். இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியிருக்கிறது. கனமழையால் பாதிக்காதவர் எவருமில்லை என்ற அளவில் மழையின் பாதிப்பு தமிழகத்தை ஆட்டிப் படைத்திருக்கிறது. சென்னையில் பெய்த பேய் மழை காரணமாக இன்னும் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. 

இந்நிலையில் சென்னை ராமாவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர் இல்லமும் மழை நீரால் சூழப்பட்டது. முன்பகுதியில் எம்.ஜி.ஆரின் உறவினர்களும் பின்புறம் உள்ள கட்டிடத்தில் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளியும் இயங்கிவருகிறது.

மழை நீர் சூழ்ந்ததால் காது கேளாத பள்ளியில் படித்து வரும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் 2–வது மாடியில் தஞ்சம் அடைந்திருந்தனர். கடந்த சில தினங்களாக தத்தளித்த அவர்களை மீனவர்கள் குழு படகுடன் சென்று மீட்டது.

இந்நிலையில் நேற்று அங்கு வெள்ளம் நீர் வடிய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டில் வசித்து வந்த எம்.ஜி.ஆரின் உறவினர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மீண்டும் இல்லம் திரும்பினர். இதையடுத்து உடனடியாக எம்.ஜி.ஆர். இல்லத்தை சுத்தப்படுத்தும் பணியும் தொடங்கியது.
அப்போது தரைதளத்தில் எம்.ஜி.ஆர். தம் காலத்தில் பயன்படுத்திய கிராமபோன், பரிசுப்பொருட்கள், எம்.ஜி.ஆர். தொடர்பான ஆவணங்கள், எம்.ஜி.ஆர்.–ஜானகி அம்மாள் பயன்படுத்திய பொருட்கள் பல சேதமடைந்தும் பல பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் வீட்டின் முன்பகுதியும் பெரும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் எம்.ஜி.ஆர் அபிமானிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வெள்ளத்தில் மூழ்கியது இது முதன்முறையல்ல. கடந்த 82 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் அவரது தோட்டம் மூழ்கியது. 

அப்போது எம்.ஜி.ஆரும் அவரது மனைவி ஜானகி அம்மையாரும் மவுண்ட்ரோட்டில் உள்ள பிரபல ஹோட்டலில் தற்காலிகமாக சிலநாட்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசுக்கு சில ஆலோசனைகள்...


..Dinamani


By ஆசிரியர்

First Published : 03 December 2015 01:56 AM IST


இரண்டு, மூன்று நாள்களில் மழை ஓயும் என்றாலும் செயலிழந்த சென்னை மீண்டும் செயல்படவும் இயல்புநிலைக்குத் திரும்பவும் பல மாதங்கள் ஆகும். திரும்பிய பக்கங்களில் எல்லாம் தண்ணீர். ஆனால், குடிக்கத்தான் நீர் இல்லை என்பதுதான் யதார்த்த நிலைமை. மீட்புப் பணிகளைக் காட்டிலும் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்தல்.
முகாம்களுக்கு வராமல் வெளியே இருக்கும் சென்னை மக்கள் சொல்லொணா சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். மீட்புப் படையினர் படகுடன் வீடு தேடி வந்து மீட்டுச் சென்றபோதிலும், குழந்தைகள், பெண்களை மட்டும் அனுப்பிவிட்டு ஆண்களும் பெரியவர்களும் இன்னமும் வெள்ளம் சூழ்ந்த வீடுகளைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெள்ளம் புகுந்த வீடுகளில் கிடைத்தது லாபம் என்று திருடர்கள் புகுந்து விடுகிறார்கள். அந்த அச்சத்தாலேயே இன்னமும் முற்றிலுமாக வெளியேறாமல் இருக்கும் குடும்பங்கள் ஏராளம். இவர்களது வீட்டில் அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பில் உணவு சமைக்கப் போதுமான பொருள்கள் உள்ளன. ஆனால், சமைப்பதற்கான தண்ணீர்தான் இல்லை.
மழை வெள்ளம் தெருவெல்லாம் ஆறாய்ப் பெருகி ஓடும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் மின் இணைப்பைத் துண்டித்து விட்டிருக்கிறது. அதனால், மோட்டார் வேலை செய்யாத நிலையில், தண்ணீர் இல்லாமல் குடும்பங்கள் அவதிப்படுகின்றன.
சென்னை மக்களுக்கு மிக இன்றியமையாத் தேவை பாதுகாக்கப்பட்ட குடிநீர். இதைக் குடிநீர் வாரியம் மட்டுமே வழங்கிட முடியாது. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் இந்தப் பேரிடர் காலத்தில் உதவிக்கரம் நீட்ட வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்க முன்வர வேண்டும். ஒரு குடும்பத்துக்கு இத்தனை லிட்டர் என அளந்து கொடுத்தாலும் வரவேற்புக்குரியதே.
ஊர் முழுவதும் வெள்ளமும் சாக்கடையும் கலந்து கிடக்கின்றன. ஆழ்துளைக் கிணறுகளின் நீர்கூடத் தூய்மையானதாக இல்லை. இந்நிலையில், குடிநீர் விநியோகம்தான் சென்னை மாநகராட்சியின் முன்பாக உள்ள மிகக்கடினமான சவால். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாமல் போனால், தொற்று நோய்களும், விஷ ஜுரமும் பரவும் வாய்ப்பு ஏராளம். அந்த நிலைமையை எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாகிவிடும்.
இதுபோன்ற அடைமழை, புயல், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தொடர்ந்து, விஷக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவது வழக்கம். அரசு நிர்வாகம் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடிப் பாதுகாப்பும், நிவாரணமும் வழங்குவதில் கவனம் செலுத்தும் அதேவேளையில், மக்கள் நல்வாழ்வுத் துறை, சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே முடுக்கிவிடுதல் அவசியம்.
அனைத்துக் குடிநீர்க் குழாய்களையும் சரிபார்த்து, சாக்கடை கலக்கவில்லை என்பதை உறுதி செய்து, குடிநீர் விநியோகத்தை சீராக்கும்வரை, லாரிகள் மூலம் குடிநீரை விநியோகிப்பதே பாதுகாப்பானது. இதற்குப் போதுமான லாரிகள் சென்னை மாநகராட்சியில் கிடையாது. ஆனால் வெள்ளம் பாதிக்காத தமிழகத்தின் பல்வேறு நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள குடிநீர் லாரிகளை சில மாதங்களுக்கு சென்னைக்கு அனுப்பிவைக்கும்படி செய்தால், இந்தப் பிரச்னைக்கு எளிய தீர்வாக அமையும். அரசுக்கு பொருள்செலவும் பெரிதாக இருக்காது.
மழைவெள்ளம் மண்ணுக்குள் இறங்காமல் தேங்கி நிற்கிறது. ஒரு நூற்றாண்டு காலம் சரியான மழையில்லாமல், விவசாயம் இல்லாமல் இறுகிப்போன மண்ணில் வெள்ளநீர் உடனடியாக இறங்கவில்லை என்றாலும், மெல்ல மெல்ல ஊறிச்செல்லும். முன்பு திடமான கட்டாந்தரை என்று கருதப்பட்ட நிலம், இந்த வெள்ளம் மண்ணுக்குள் இறங்கியபிறகு அவ்வாறாக இருக்காது. அடிமண் இளகும்போது அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆட்டம் காணவும், நிலைகுலையவும் வாய்ப்புள்ளது. ஆகவே பொறியாளர் குழுவினர் பரிசோதிக்கவும், இந்தப் பகுதியில் மண் ஆய்வு நடத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீருக்கு அடுத்தபடியான சவால் சாலைகள். சென்னை மாநகரச் சாலைகள் அனைத்துமே இந்த மழையிலும் வெள்ளநீரிலும் பெயர்ந்துகொண்டுவிட்டன. சாலைகளை முழுமையாக மாற்றியமைத்தாக வேண்டும். தார்ச் சாலைகளுக்கு எதிரி மழைநீர்தான். ஆகவே, இன்று இயற்கை தந்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, சென்னையில் பிளாஸ்டிக் கலந்த தார்ச் சாலைகளை அமைக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ளலாம்.
அரசியல்வாதிகள் அகற்ற மறுத்த ஆக்கிரமிப்புகளை இயற்கை தானே அகற்றியிருக்கிறது. வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் தொடராதபடி பார்த்துக்கொள்வதுதான் சென்னை மாநகராட்சி செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமை. இவர்களுக்கு மாற்று வாழிடங்கள் அளிக்காமல், அதே இடத்தில் மீண்டும் பாதுகாப்பாக வீடு கட்டித்தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வாக்குவங்கி அரசியல் நடத்தக்கூடும். தேர்தல் நெருக்கத்தில் இத்தகைய அரசியலுக்கு இப்போது அடிபணிந்தால், மீண்டும் பாதிக்கப்படப்போவது இதே சென்னை, இதே மக்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்தான். அதே நேரத்தில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அனுதாபம் காட்ட வேண்டியதில்லை.
அரசின் உடனடிக் கடமை குடிநீர் வழங்குதலும், சாலையைச் செப்பனிடுவதும்தான்.

பெருமழையல்ல, பேரிடர்!

Dinamani

By ஆசிரியர்

First Published : 04 December 2015 01:36 AM IST


மழைச் சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பிறகு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.940 கோடியைத் தொடர்ந்து உடனடியாக மேலும் ரூ.1,000 கோடி நிவாரண நிதி தமிழக அரசுக்கு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தமிழக அரசு முன்பு கோரியிருந்த ரூ.8,481 கோடி என்பதே கூடப் போதுமானதாக இருக்காது என்பதால், இதை உடனடி நிவாரண உதவியாகத்தான் கருத முடியும்.
சென்ற வாரம் சென்னையில் அடைமழை கொட்டித் தீர்த்தபோது, அந்த மாமழை ஏற்படுத்திய சேத மதிப்பு ரூ.8,481 கோடி என்று கணக்கிடப்பட்டது. உடனடியாக ரூ,2,000 கோடி மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்தவுடன் ரூ.940 கோடியைப் பிரதமர் வழங்கினார். தற்போது கடந்த மூன்று நாள்களில், சென்னை மாநகர் மீதான பெருமழையின் பழிதீர்ப்புப் படலத்தின் இரண்டாம் தாக்குதலில், சேதத்தின் மதிப்பு இரண்டு மடங்குக்கும் மேலாகிவிட்டது.
மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழு வந்து, தனது ஆய்வுகளை முடித்துக்கொண்டு திரும்பிய பிறகு நேர்ந்த இரண்டாவது தாக்குதலில் நேர்ந்த சேதங்களும் பாதிப்புகளும் அந்த ஆய்வுக் குழுவின் கணக்கில் இருக்காது என்பது உறுதி. பேய்மழையின் இரண்டாவது தாக்குதலையும் மதிப்பீடு செய்து, தற்போது மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கை மீண்டும் திருத்தப்பட வேண்டியது அவசியம்.
நூற்றாண்டுப் பெருமழையின் முதல் தாக்குதலின்போது சில ரயில்கள் மட்டுமே ரத்தாகின. விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. வெளியூர் பேருந்துகள் அனைத்தும் இயங்கின. ஆனால், பெருமழையின் இரண்டாம் தாக்குதலில் ஐந்து நாள்களுக்கு விமான நிலையத்தை மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் தாம்பரம், செங்கல்பட்டு பகுதியிலான புறநகர் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இன்னமும்கூட ரயில் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
மழை பலி எண்ணிக்கை 269-ஆக உயர்ந்தது. 40% செல்லிடப்பேசி சேவைகள் செயலிழந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மீட்புப் பணியில் இறக்கிவிடப்பட்டனர். இவ்வளவு ஆன பின்னரும், சென்னை பெருமழையைப் பேரிடர் துயரமாக அறிவிக்காமல் இருக்கிறார்களே, ஏன்? இதிலும் கூடவா ஓரவஞ்சனை?
2013-ஆம் ஆண்டு உத்தரகண்டில் பெருமழை வெள்ளத்தால் கேதார்நாத் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்கியது. பிறகு, ரூ.7,346 கோடியை வழங்கியது. அந்தச் சேதம் கங்கைக் கரையோரம் மட்டுமே. உயிரிழப்பும் கட்டுமானங்களும் மட்டுமே சேதமடைந்தன. ஆனால், சென்னை மாநகரம் மட்டுமல்ல, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் இந்தப் பெருமழையால் மிகப்பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
உத்தரகண்ட் பாதிக்கப்பட்டபோது, பொதுத் துறையின் நவரத்ன நிறுவனங்கள் ஓடிவந்து உதவின. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறுவனமும் பல கோடியை உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்தன. நிலக்கரிக் கழகம் மட்டுமே ரூ.125 கோடியை வழங்கியது. இது நீங்கலாக, பல்வேறு அமைப்புகளும் (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் உள்பட) தனியாக நிதி வசூலித்து வழங்கின.
உத்தரகண்ட் வெள்ளத்தின்போது அனைத்து மாநிலங்களும் உடனடியாக நிதி வழங்கின. தமிழகத்தின் தலைநகர் சிதைந்து கிடக்கும் நிலையில், கர்நாடகமும், பிகாரும் தலா ரூபாய் ஐந்து கோடி வழங்க முன்வந்திருப்பது ஆறுதலாக இருக்கிறது. மற்ற மாநிலங்கள் ஏன் இன்னும் உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லை என்று தெரியவில்லை. உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடுத்த நாளே தமிழக அரசு ரூபாய் ஐந்து கோடி அறிவித்தது. ஆனால், இன்று தமிழ்நாட்டுக்கு உதவிட இன்னமும் ஏன் வட மாநிலங்கள் தாமதிக்கின்றன? இது தாமதமா, தயக்கமா?
சென்னையின் துயரத்தை ஆங்கிலக் காட்சி ஊடகங்களும், வட இந்திய ஊடகங்களும் சரியாகக் கொண்டு சேர்க்கவில்லை என்றே கருதத் தோன்றுகிறது. உத்தரகண்ட் மாநிலத்துக்கு கிடைத்த முக்கியத்துவம் சென்னை பேரிடருக்குத் தரப்படவில்லை.
தமிழகத்தின் ஊடகங்கள், சென்னைப் பேரிடரின் தீவிரத்தையும், அது ஏற்படுத்தியுள்ள சேதங்கள் ஒவ்வொரு பிரிவிலும் எத்தகையவை, இயல்பு நிலைக்குத் திரும்ப எத்தனை காலம் ஆகும், சேத மதிப்பு என்னவாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள், துறை சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்து கேட்டு, மத்திய அரசுக்குப் போட்டியாக தனி மதிப்பீடு செய்திருக்க வேண்டும். ஆனால், தொலைக்காட்சி ஊடகங்களின் பெரும்பாலான நேரமும், சாதாரண மக்களின் கோபக் குரல்களை மட்டுமே ஒளிபரப்பி அரசியலுக்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்காமல், தமிழக அவலம் குறித்து மாநிலங்கள் அவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் பேசியிருப்பது வரவேற்புக்குரியது. ஆளும் கட்சியின் கோரிக்கைகளைவிட எதிர்க்கட்சிகள் பிரச்னையின் கடுமையை எடுத்துரைக்கும்போதுதான், மற்றவர்களுக்கு நிலைமையின் தீவிரம் உறைக்கும். மழை நின்ற பிறகு, வெள்ளம் வடிந்த பிறகு ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுப் பரவும் அபாயத்தைத் தடுக்கவும், எதிர்கொள்ளவும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்கிற அவரது எச்சரிக்கையில் அர்த்தமுள்ளது. கனிமொழி குறிப்பிட்டிருப்பதுபோல, போதுமான அளவு படகுகளையும், மருத்துவ உதவியையும், தமிழகத்துக்கு உடனடியாக அனுப்பித் தருவது மத்திய அரசின் கடமை.
மத்திய அரசு இந்தப் பேய்மழையை தேசியப் பேரிடராக அறிவிப்பதும், இழப்பை மறு மதிப்பீடு செய்வதும் இன்றியமையாதது!


மழை சற்று ஓய்ந்ததால் சென்னை மக்கள் நிம்மதி; ஒரு சில பகுதிகளில் இயல்புநிலை மெதுவாக திரும்புகிறது; இன்னும் வெள்ளம் குறையாத இடங்களில் மீட்பு-- நிவாரண பணிகள் தீவிரம்; வெளியூர்களுக்கு பஸ்- ரெயில்கள் ஓட தொடங்கின

logo
ஞாயிறு, டிசம்பர் 06,2015, 5:59 AM IST
பதிவு செய்த நாள்:
ஞாயிறு, டிசம்பர் 06,2015, 5:59 AM IST

மழை சற்று ஓய்ந்ததால் சென்னை நகரில் சில பகுதிகளில் மெதுவாக இயல்புநிலை திரும்புகிறது. வெள்ளம் குறையாத இடங்களில் மீட்பு–நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெளியூர்களுக்கு பஸ்–ரெயில்கள் ஓட தொடங்கின.
`
சென்னை,

கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்து உலுக்கிவிட்டது.

மீட்புப்பணி

மழை வெள்ளத்தின் காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பஸ், ரெயில் போக்குவரத்து முடங்கியது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். உணவு, பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தீயணைப்பு படையினர், மாநில மீட்புப்படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் முப்படைகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இயல்புநிலை திரும்புகிறது

தற்போது மழை சற்று ஓய்ந்து இருப்பதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் விடுவிப்பது குறைந்துள்ளதால் அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளத்தின் அளவு சற்று குறைந்து உள்ளது. சில பகுதிகளில் வெள்ள நீர் வடிய தொடங்கி இருப்பதால், அங்கு மெதுவாக இயல்புநிலை திரும்புகிறது.

வெள்ளம் வடிந்த பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அத்தியாவசியப்பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்தினர். ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்கு கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து இருந்தனர்.

பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக வாகனங்கள் குவிந்தன.

மின்சார ரெயில் சேவை

மழை வெள்ளத்தால் பாதித்திருந்த சென்னை புற நகர் மின்சார ரெயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கி உள்ளது. சென்னை கடற்கரை–தாம்பரம் இடையே புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்திருந்தாலும், தற்போது எழும்பூர்–தாம்பரம் இடையே மட்டும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

தொலைத்தொடர்பு சேவையை பொறுத்தமட்டில், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட தரைவழி தொலைபேசி இணைப்புகள், செல்போன் சேவைகள் ஓரளவு மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளன.

தென் சென்னையில் பல இடங்களில் மழை, வெள்ளத்தால் மின் விபத்துக்கள் நேராமல் தடுக்கும் வகையில், கடந்த 2 நாட்களாக மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன. இப்போது நிலைமைக்கேற்ப, மின் சப்ளை மீண்டும் தொடங்கி உள்ளது.

வெளியூர்களுக்கு பஸ்–ரெயில்கள்

சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் ஓடத்தொடங்கின. ஏராளமான பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.

கனமழையின் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் மற்றும் சென்னை வழியாக செல்லும் ரெயில்களும் நாளை (7–ந் தேதி) வரை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. என்றாலும் நேற்று முதல் ரெயில்கள் ஓடத் தொடங்கின.

ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கான கட்டணம் (கிளார்க் கட்டணம் மட்டும் கழித்து) முழுமையாக திரும்ப தரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.டி.ஆர். என்னும் டிக்கெட் டெபாசிட் ரசீதை அளித்து கட்டணங்களை திரும்பப் பெறலாம்.

டிசம்பர் 1–ந் தேதியில் இருந்து ரத்தான டிக்கெட்டுகளுக்கு டிசம்பர் 4–ந் தேதியில் இருந்து 10–ந் தேதி வரையில் டிக்கெட் டெபாசிட் ரசீது வழங்கப்படும். ரெயில் புறப்படும் நாளில் இருந்து 30 நாட்களுக்கு ‘ரீபண்ட்’ விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிவாரண பணிகள் தீவிரம்

மழை சற்று ஓய்ந்துள்ள போதிலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியவில்லை. வெள்ளம் வடியாத இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புறநகர் பகுதிகளான மணலி, செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், கண்ணகி நகர், பழைய மாமல்லபுரம் சாலை, வரதராஜபுரம், கோட்டூர்புரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களை போட்டன.

ராணுவ தளபதி தகவல்

மழை, வெள்ளத்தின் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ராணுவ தளபதி தல்பீர் சிங், சென்னை வந்து உள்ளார். நேற்று அவர் 2–வது நாளாக விமானத்தில் பறந்து வெள்ள சேத நிலைமையை ஆய்வு செய்தார். அவருடன் பொது கட்டளை அதிகாரியும் சென்று இருந்தார்.

இது தொடர்பாக ராணுவம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘‘சிவில் நிர்வாகத்துக்கு தேவைப்படுகிறவரை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவ வீரர்கள், மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். தேவைக்கேற்ப கூடுதலான படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கூடுதலான பொறியியல் சாதனங்களுடன், மருத்துவ குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்’’ என ராணுவ தளபதி தல்பீர் சிங் தெரிவித்து இருக்கிறார் என கூறப்பட்டு உள்ளது.

தாம்பரம்

வெள்ள பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்து 500 பேரை ராணுவத்தினர் பத்திரமான இடங்களுக்கு மீட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

‘தாம்பரம், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், முடிச்சூர், டிபன்ஸ் காலனி, தி.நகர், கோட்டூர்புரம், காசி தியேட்டர், பெருங்குடி மற்றும் பிற பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட குழுக்கள் பணியில் உள்ளன. வெள்ளத்தால் ஏற்படுகிற உடல் நல பாதிப்புகளை சந்திக்கிற வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களை, மருந்தகங்களுடன் அமைப்பதற்கு ராணுவம் கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளது’ எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படை

ராணுவ வீரர்களுடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தாம்பரம், முடிச்சூர், கோட்டூர்புரம், வேளச்சேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொரட்டூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளையும், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் பணிகளையும், அந்த படையின் தலைமை இயக்குனர் ஓ.பி.சிங் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

16 ஆயிரம் பேர் மீட்பு

சென்னை வெள்ள மீட்பு–நிவாரண பணியில் 20 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் குழு, இப்போது புதிதாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

இதன்மூலம் ஏறத்தாழ 1,600 வீரர்கள், ஐம்பது குழுக்களாக பிரிந்து மீட்பு, நிவாரண பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 21 அதிகாரிகளும் களத்தில் இறக்கப்பட்டு உள்ளனர். எங்கள் படையினர், இதுவரையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்த அளவுக்கு வீரர்களை ஈடுபடுத்தியது இல்லை.

200 படகுகள் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தில் தவித்த 16 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

இரவு–பகலாக...

தொடர்ந்து மீட்புப் பணி இரவு–பகலாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற பொருட்களும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

இன்னும் கூடுதல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், மீண்டும் மழை தொடங்குவதற்கு முன் நிவாரணப் பொருட்கள், பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதில் எங்கள் குழுக்களை சேர்ந்தவர்கள் உறுதியாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் கூட்டம்

இதற்கிடையே டெல்லியில் சி.எம்.ஜி. என்னும் நெருக்கடி மேலாண்மை குழுவின் கூட்டம், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி தலைமையில் நேற்று நடந்தது. இதில், ராணுவம், உணவு, ரெயில்வே, விவசாயம், சுகாதாரம், தொலை தொடர்பு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத்துறை, தேசிய பேரிடர் படை உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்னை வெள்ள மீட்பு, நிவாரண பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இயன்றவரையில் குடிநீர், பால், தின்பண்டங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சென்றடைவதற்கு தேவையான பணிகளை முழுவீச்சில் நடத்துமாறு அதிகாரிகளுக்கு ராஜீவ் மகரிஷி உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Friday, December 4, 2015

100 ஆண்டில் இல்லாத மழை வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கியதால் மக்கள் அவதி




சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அடையாற்றின் மேம்பாலத்தைக் கடந்து திரண்டு செல்லும் வெள்ள நீர். | படம்: பி.ஜோதிராமலிங்கம்
போட்டோ கேலரி
வெள்ளம் சூழ்ந்த சென்னையின் பேரவலத்தைப் பேசும் படங்கள்


சென்னையில் கடந்த 100 ஆண்டில் இல்லாத மழை அளவால் தலைநகரம் வெள்ளக்காடானது. ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கியதால் மக்கள் அவதியுற்றுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதி பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன், "தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் பெரும் பாலான பகுதிகளில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது.

கடலோர மாவட்டங்கள், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும். நீலகிரி, கோவை போன்ற மலை மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். விட்டுவிட்டு மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்" என்றார்.

100 ஆண்டில் இல்லாத அளவு

சென்னையில் கடந்த 1901-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி 24 மணி நேரத்தில் 26.1 செ.மீ. மழை பெய்தது. இதுவே இதுவரை அதிக பட்ச மழை அளவாக இருந்தது. ஆனால், நேற்று காலை நிலவரப் படி சென்னையில் அதிக பட்சமாக 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புறநகர் பகுதிகளில் அதிக அளவாக 49 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

2 நாட்களாக இடைவிடாது கொட்டும் மழையால் மிதக்கும் சென்னை

சென்னையில் இரண்டு நாட்களாக இடைவிடாது கொட்டும் கன மழையால் மாநகரமே வரலாறு காணாத அளவுக்கு வெள்ளத்தில் மிதக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

கன மழையால் நிரம்பி வழியும் சென்னையின் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அடையாற்றின் குறுக்கே உள்ள பாலங்களும் மூழ்கியுள்ளன. இதனால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது.

அடையாற்றின் கரையோரங்களில் உள்ள கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பாலங்களின் மேல் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. சாலைகள் ஆறுகள் போல காட்சிய ளிக்கின்றன. கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தையும், கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் இணைக் கும் 100 அடி சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கோயம் பேடு பேருந்து நிலையத்திலிருந்து மிகக்குறைவாகவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விமான நிலையம் மூடல்

மீனம்பாக்கம் விமான நிலை யத்தின் ஓடுபாதைகளில் தண்ணீர் தேங்கியதால் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. டிசம்பர் 6 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சென்னையின் புறநகர் பகுதிக ளான பொத்தேரி, ஊரப்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், முடிச்சூர், மன்னிவாக்கம், மேற்கு தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்மாடி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் 2-வது, 3-வது மாடிகளிலும், மொட்டை மாடிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

உள்ளகரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், பட்ர வாக்கம், விநாயகபுரம், கொளத் தூர், பெரம்பூர், வியாசர்பாடி, சூளை, பட்டாளம், புரசைவாக்கம், காசி திரையரங்க பகுதி, அசோக் நகர், வில்லிவாக்கம் சிட்கோ நகர், எம்.ஜி.ஆர். நகர், கே.கே.நகர், உள்ளிட்ட பகுதிகளில் சாலை களில் 5 அடி முதல் 8 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது. பெரம் பூர் பேருந்து நிலையம் அருகே தெருவில் 5 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி புதிய மேம்பாலத்தின் அருகிலுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு களுக்குள் 5 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது.

அண்ணாசாலையில் உள்ள மூசா காதிரி தர்காவுக்குள் மழை நீர் புகுந்தது. அந்த தர்கா வளாகத்தில் 2 அடி அளவுக்கு தண்ணீர் சூழ்ந் துள்ளது. அண்ணா சாலை அருகே கூவம் கால்வாய் கரையில் வசித்து வரும் பூதப்பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த 100 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மீனவர்களின் படகுகளை இரவல் வாங்கி போலீஸார் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினர். புறநகர் பகுதிகளில் பைபர் படகு, ரப்பர் படகு மூலம் ராணுவத்தினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கு வதற்கு ஏற்பாடு செய்தனர். சில இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பள்ளிகள், சமூக நலக் கூடங்கள், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குடிநீர், பால் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

சாலை, ரயில் போக்குவரத்து மட்டுமின்றி, விமானப் போக்குவரத்தும் இல்லாததால் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, மாநிலத்தின் பிற பகுதிகளுடன் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

பால், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மக்கள் தவித்து வருகின்றனர்.

சென்னை மாநகருக்கு வெளியூர்களில் இருந்து பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கூட வர முடியாமல் போனது. மேலும், தொடரும் மழை மற்றும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக நகரின் பல சாலைகள் போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை.

இதனால் கடைகளுக்கு தேவையான பால், குடிநீர் கேன் போன்ற பொருட்களை பிற இடங்களிலிருந்து கொண்டு செல்ல முடியவில்லை. பெரும் பாலான பகுதிகளில் கடைகள் திறக்கப்படவேயில்லை. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் குடிநீர், பால் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்துக்கு மேலும் ரூ.1,000 கோடி உடனடி உதவி: வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் பிரதமர் மோடி அறிவிப்பு


Dinamani

By சென்னை,

First Published : 04 December 2015 03:32 AM IST




சென்னை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரிலிருந்து வியாழக்கிழமை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி.

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மேலும் ரூ.1,000 கோடி உடனடியாக வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களை ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், தில்லி புறப்பட்டுச் செல்லும் முன்பாக, பிரதமரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு, கடற்கரை சாலையில் உள்ள சென்னை அடையாறு ஐ.என்.எஸ். விமான தள அலுவலகத்தில் நடந்தது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மேலும் ரூ.1,000 கோடி வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கூடுதல் மீட்புக் குழுக்கள்-பிரதமர் உறுதி: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அளவிலான சேதங்களைக் கருத்தில் கொண்டு, மீட்பு-நிவாரணப் பணிகளில் மேலும் 10 ராணுவக் குழுக்களையும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 20 குழுக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக கூடுதலாக 10 ராணுவக் குழுக்களையும், தேசிய மீட்புப் படையைச் சேர்ந்த 20 குழுக்களையும் அனுப்ப வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதுகுறித்து உரிய துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உடனடியாக குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு குறித்து விளக்கம்: கடந்த 23-ஆம் தேதியன்று பிரதமரிடம் அளித்த கோரிக்கை மனு குறித்து சந்திப்பின் போது நினைவூட்டிய முதல்வர் ஜெயலலிதா, மீட்பு-நிவாரணப் பணிகளுக்காக ரூ.8 ஆயிரத்து 481 கோடி தேவை எனவும், ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக் காட்டினார்.
மேலும், வெள்ளச் சேதங்களைப் பார்வையிட உடனடியாக மத்திய குழுவை அனுப்பி வைத்தமைக்கும், ரூ.940 கோடியை நிவாரண நிதியாக வழங்கியதற்கும் முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார். இந்த ரூ.940 கோடி தொகையில், ரூ.133.79 கோடியானது, கடந்த 2014-15 ஆம் நிதியாண்டின் மாநில பேரிடர் மீட்பு நிதியின் பாக்கித் தொகையாகும் என்று தெரிவித்த முதல்வர், மேலும் ரூ.254.62 கோடியானது நிகழ் நிதியாண்டில் மாநில பேரிடர் மீட்பு நிதிக்கான இரண்டாவது தவணைத் தொகையாகும் எனத் தெரிவித்தார்.
இந்தத் தொகைகள் மாநில அரசால் ஏற்கெனவே செலவிடப்பட்டன என்பதைச் சுட்டிக் காட்டிய முதல்வர், மத்திய அரசு ஒதுக்கிய ரூ.940 கோடியில் ரூ.552 கோடியானது 14-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்ட தமிழகத்துக்கான செலவினத் தொகையாகும். அது, தனித்த திட்டங்களுக்காக வழங்கப்பட்டதே தவிர வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அல்ல என்பதை பிரதமரிடம் தெரிவித்தார்.
மேலும் சேதங்கள்: கடந்த 23-ஆம் தேதியன்று தங்களிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்ட சேதங்களைக் காட்டிலும் இப்போது மேலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, மேலும் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக கூடுதல் அறிக்கையைத் தயார் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே, அந்த அறிக்கை மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமரிடம் தெரிவித்தார்.
கவலை தெரிவித்த பிரதமர்: தமிழகத்தில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலை குறித்த முதல்வர் ஜெயலலிதாவின் கருத்துகளை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். மேலும், மாநிலத்தில் ஏற்பட்ட கவலைத்தரத்தக்க நிலை குறித்து அவர் தனது கவலைகளைத் தெரிவித்தார். சென்னை நகரம் என்பது வளர்ச்சியின் மையமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிரதமர் அப்போது தெரிவித்தார்.
ரூ.5,000 கோடி அளிக்க வலியுறுத்தல்
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர்
ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், ரூ.1000 கோடியை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக விடுவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: சென்னை வெள்ளப் பாதிப்பு உள்பட தமிழக வெள்ளச் சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரை முதல்வர் கேட்டுக் கொண்டார்.

அந்த டிசம்பர் 2-ஆம் நாள்...!


Dinamani


By பிரபா ஸ்ரீதேவன்

First Published : 02 December 2015 01:24 AM IST


போபால் விஷ வாயு பேரிடர் நினைவிருக்கிறதா? ஏதோ புகை மூட்டம்போல நினைவு வருகிறது, இல்லையா? பலருக்கு அந்த சம்பவத்தினால் வாழ்க்கையே புகை மூட்டம் ஆகிவிட்டது. அவர்கள் மட்டுமில்லை அந்த சம்பவத்திற்குப பின் பிறந்த குழந்தைகள்கூடப் பலவிதமான குறைபாடுகளுடன் பிறந்து புகை மூட்டமாகவே வாழ்கிறார்கள்.
1984-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி நள்ளிரவு நேரம். மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பூச்சிமருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலையில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. துரும்பு பிடித்த குழாய்கள், கசிந்து கொண்டிருந்த அடைப்புத் தடுக்குகள் (வால்வ்) ஆகியவை காரணமா என்று தெரியவில்லை.
குழாய் உடைந்து தண்ணீர் அங்கிருந்த இ - 610 (உ-610) எண்ணுள்ள அந்தத் தொட்டியில் 60 டன் மீதைல் ஐசோ சயனேட் (எம்.ஐ.சி.) என்கிற உயிர்க்கொல்லி ரசாயனம் தேக்கி வைத்திருந்த தொட்டி ஒன்றில் பாயத் தொடங்கியது.
மீதைல் ஐசோ சயனேட்டில் தண்ணீர் கலந்ததும், ஏறத்தாழ 40 டன் விஷவாயு உற்பத்தியாகி அடுத்த சில வினாடிகளில் சுற்றிலும் புகைமண்டலமாகப் பரவத் தொடங்கியது. எந்தவொரு ஆபத்தான ரசாயனத் தொழிற்சாலையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டுமல்லவா?
ஆபத்து நிறைந்த யூனியன் கார்பைடின் போபால் பூச்சிமருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் பாதுகாப்புக் கருவிகள் இந்த அளவிலான வெப்பத்தையும், அழுத்தத்தையும் எதிர்கொள்ளும் அளவில் அமைக்கப்பட்டிருக்கவில்லை. அங்கே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உபகரணங்களும் செயல்பாட்டில் இருக்கவில்லை அல்லது சரியாக வேலை செய்யவில்லை அல்லது பராமரிப்பில் இருந்தன.
பிறகென்ன? புகைமண்டலம் மேலெழுந்து அந்தத் தொழிற்சாலையை அப்படியே சூழ்ந்து கொண்டுவிட்டது. இரவு நேரக் காற்றின் துணையுடன் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த போபால் நகரப் பகுதிகளையும் தனது மரணப் பிடியில் சிக்க வைக்கும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது விஷவாயு.
சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்களின் நுரையீரல்களில் நுழைந்து மரண தாண்டவமாடத் தொடங்கிவிட்டிருந்தது அந்த உயிர்க்கொல்லி ரசாயன வாயு.
அதிகாலை ஒரு மணி அளவில், மூச்சுத் திணறலுடனும், இருமலுடனும் போபால் நகர மக்கள் திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் எங்கும் புகைமண்டலம். அருகில் இருப்பவர்களைக்கூடச் சரியாக அடையாளம் காண முடியவில்லை. கண்களில், எரியும் கொள்ளியைச் சொருகியதுபோல எரிச்சல். அங்குமிங்கும் மக்கள் ஓடத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகு அங்கே ஏற்பட்ட கலவரச் சூழலில் பெற்றோரிடமிருந்து பிரிந்து சென்ற குழந்தைகள் பலர். அங்குமிங்கும் பரபரப்பில் ஓடுபவர்களால் மிதிபட்டு இறந்த குழந்தைகளும், முதியவர்களும் கணக்கிலடங்கார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) என்கிற அரசு ஆய்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, அந்த முதல் நாள் இரவில் மட்டும் யூனியன் கார்பைட் தொழிற்சாலையைச் சுற்றிலும் வசிக்கும் ஏறத்தாழ 5.20 லட்சம் பேர்களின் ரத்தக்குழாய்களில் விஷவாயு நச்சு கலந்து அவர்களது அனைத்து உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2-ஆம் தேதி இரவின் விஷவாயுக் கசிவுக்குப் பிறகு, டிசம்பர் 3-ஆம் தேதி காலையிலிருந்து பொய், பித்தலாட்டம், நயவஞ்சகம், ஏமாற்று அனைத்தும் கலந்து ஒரு மிகக் கொடுமையான நாடகம் அரங்கேறத் தொடங்கியது. எல்லோரும் பொய் சொன்னார்கள். அனைவரும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களையும், ஏமாளியான இந்திய தேசத்தையும் ஏமாற்றினார்கள். இதில் அரசும் முக்கியப் பங்கு வகித்தது என்பதுதான் உலக ஜனநாயக வரலாற்றில் மன்னிக்கவே முடியாத துரோகம்!
இதுபோன்ற ஒரு விபத்திற்கு தீர்வு காண்பதுபோல ஒரு திருப்திகரமான சட்டத்தை நம் அரசு இயற்றி இருக்கவேண்டும். அதற்கு பின் அந்த விபத்தை அடிப்படையாக கொண்டு பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், அவை அனைத்தும் குறைபாடுடன்தான் காணப்படுகின்றன.
முதலில் போபால் விஷ வாயு கசிவு (மனுக்களை பரிசீலித்தல்) சட்டம் 1985 (Bhopal Gas Leak Disaster (Processing of Claims) Act 1985) இயற்றப்பட்டது. இந்தச் சட்டப்படி அரசாங்கமே பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக விண்ணப்பிக்கலாம் என்றிருந்தது. அதாவது உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். அரசு தான் விபத்துக்கே காரணம்.
அவ்வாறிருக்கையில் அந்த அரசே பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பேசுவேன் என்றால் அது தர்க்க ரீதியான முரண்பாடு. அரசு எப்படிக் காரணம் என்றால், அரசுதான் யூனியன் கார்பைட் கம்பெனிக்குப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்காமல், விஷவாயு தயார் செய்ய அனுமதித்தது!
இதற்கு முன்பே பல சிறு விபத்துகள் ஏற்பட்டிருந்தன. இருந்தும் அரசு அசட்டையாக இருந்துவிட்டது. பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை (கார்ப்பரேட்) நிறுவனத்திற்கு பூச்சிமருந்துத் தயாரிப்பு ஆலை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கித் தன்னுடைய மக்களின் நலனை புறக்கணித்தது. ஆகையால் சட்டத்தின் பார்வையில் அரசே ஒரு கூட்டுக் குற்றவாளி.
அப்படியிருந்தும் பயிரை மேய்ந்தவர்களே வேலியாக நாங்கள் இருக்கிறோம் என்று மகுடம் சூட்டிகொண்டார்கள். இதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
"பாதிக்கப்பட்டவர்கள் எளியவர்கள். அவர்களால் இந்தக் கடினமான வழக்கை நடத்த முடியாது. வழக்கில் அரசு பங்கேற்காவிடில் அவர்கள் தோற்றுவிடுவார்கள்' என்பது தான் அரசுத் தரப்பு வழங்கிய விசித்திரமான வாதம்.
ஆனால், நடந்தது என்ன? மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன என்று அளவிடும் முன்பாகவே யூனியன் கார்பைட் (UCC) உடன் ஒரு சமரசத்திற்கு அரசு வந்துவிட்டது. அந்த 1985}ஆம் ஆண்டு சட்டத்தை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனு முடிவு பெறுவதற்கு முன்பாக சமரசம் செய்து கொண்டு விட்டது.
மாவட்ட நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கேட்ட இழப்புத் தொகையில் 17% தொகைக்கு சமரசம் செய்து விட்டது. இதற்கிடையில், டவ் கெமிகல்ஸ் நிறுவனம் யூனியன் கார்பைட் நிறுவனத்தை அமெரிக்காவில் வாங்கியது. அவ்விரு ஸ்தாபனங்களின் ஒப்பந்தப்படி டவ் கெமிகல்ஸ் யூனியன் கார்பைடின் சொத்தை மட்டும் எடுத்துக்கொண்டது. யூனியன் கார்பைட் வழங்க வேண்டிய இழப்பீடு உள்ளிட்ட அதன் உடன்பாடுகள் அந்தரத்தில் விடப்பட்டன.
இவ்வளவு ஆண்டுகள் சென்றபின் பாதிப்பை குறைவாக மதிப்பிட்டுவிட்டதாகவும், இழப்பீடு கூடுதலாக இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றத்தில் ஒரு திருத்தல் மனுவைத் தாக்கல் செய்துள்ளது அரசு.
யூனியன் கார்பைட், டவ் செமிகல்ஸ் பின்னால் ஒளிந்துகொண்டது, டவ் கெமிகல்úஸா யூனியன் கார்பைட் கடன்பாடுகளுக்கு தான் பொறுப்பல்ல என்று சொல்லிவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் தானே, அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன?
1991-இல் பொதுப் பொறுப்பு காப்பீட்டு சட்டம் இயற்றப்பட்டது (Public Liability Insurance Act). இந்த சட்டத்தின் அடிப்படையில் 56.56 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. அதில் 46.45 லட்சம் மட்டுமே ஒரு விபத்திற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால், இது போன்ற பெரும் விபத்து நம் நாட்டில் நடக்கவேயில்லையா?
1997-இல் விசாகப்பட்டினத்தில் ஹெச்.பி.சி.எல். தொழிற்சாலை வெடித்தது. 2002-இல் ஐ.பி.எல். வடோதராவில் விஷ வாயு கசிந்து 250 பேர் பாதிக்கப்பட்டனர். 2008-இல் ஜாம்ஷெட்பூரில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் குளோரின் வாயு கசிந்து, அந்த விபத்தில் 150 பேர் பாதிக்கப்பட்டனர்.
2012-இல் விசாகப்பட்டினம் இரும்பு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு 19 பேர் உயிர் இழந்தனர். இன்னும் இது போலத் தொடர்கிறது பட்டியல். அவையெல்லாம் விபத்தே இல்லையா? இல்லை, அதில் பாதிக்கப்பட்டவர்கள் நம் கண்களில் படவில்லையா?
தேசிய சுற்றுப்புறச் சூழல் தீர்ப்பாயச் சட்டம் என்று ஒரு சட்டம் இயற்றினார்கள். அதில் அபாயகரமான பொருள்களைக் கையாளுவதால் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்று ஒரு ஷரத்து இருந்தது. அந்த சட்டம் அமலுக்கே வரவில்லை.
பிறகு கிரீன் ட்ரிப்யூனல் சட்டம் வந்தது. அதில் இந்த ஷரத்து நீர்த்துப் போனது. எந்த விபத்து நேர்ந்தாலும் இழப்பீடு தருவதாக மாற்றப்பட்டது. இதனால் விஷ வாயு போன்ற அபாயகரமான பொருள்கள் சம்பந்தப்பட்ட பெரிய பெரிய வர்த்தக ஸ்தாபனங்கள் தங்கள் தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்ற பொறுப்பு வலியுறுத்தப் படாமல் போயிற்று.
இதே யூனியன் கார்பைட் அமெரிக்காவில் நிறுவியிருக்கும் தொழிற்சாலையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அசிரத்தையாக இருக்கிறது. அவர்களை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? நம் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இல்லாத அக்கறை அவர்களுக்கு ஏன் இருக்க வேண்டும்?
வரும் காலத்தில் இது போன்று ஏதாவது நடந்தால், (நடக்கக் கூடாது, நடக்கக் கூடாது) அதற்கு ஒரு முழுமையான சட்டமே இன்னும் வரவில்லையே...
போபாலைப் பற்றி ஓர் ஆவணப் படம் பார்த்தேன். அதில் ஒரு பணியாளர் வருவார். தினமும் தன் இளம் மனைவியிடம் தொழிற்சாலையில் ஏதோ சரியாக இல்லை, பயமாக இருக்கிறது என்பார். யாரும் செவி சாய்க்கவில்லை. அவர் இறந்தார். அது மட்டுமல்ல, அவர்கள் பையன் நிரந்தர பாதிப்புடன் வாழ்கிறான். அந்த இளம் பெண் அழிக்கப்பட்ட வாழ்க்கையுடன் போராடுகிறாள்.
இப்பொழுது அவர் இளம் பெண் இல்லை 31 ஆண்டுகள் ஓடிவிட்டன. இது அந்த நிறுவனம் செய்த படுகொலை அல்லாமல் என்ன? அதுபோன்ற நிகழ்வுகளுக்கும் ஒரு சட்டம் வரவேண்டும்.
2014-இல் வரிசையாக ஆங்கில தினசரி ஒன்றில் போபால் பேரிடர் பன்முகங்களை விளக்கும் வகையில் தொடர்ந்து கட்டுரைகள் வெளிவந்தன. "தினமணி' நாளிதழிலும் "போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!' என்கிற தொடர் கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரைகளின் அம்சங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
புகை மூட்டத்துக்குள்ளே போபால் பேரிடர் குறித்த நினைவுகள் காணாமல் போய்விடக் கூடாது. இன்றும் அங்கே மக்கள் அதன் விளைவுடன் போராடுகிறார்கள். நாம் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இனிமேலாவது வலுவான சட்டங்கள் வரவேண்டும். அப்படிச் சட்டங்கள் வருவதற்கு நாம் போராட வேண்டும்!
இதே யூனியன் கார்பைட் அமெரிக்காவில் நிறுவியிருக்கும் தொழிற்சாலையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அசிரத்தையாக இருக்கிறது. அவர்களை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்?
நம் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இல்லாத அக்கறை அவர்களுக்கு ஏன் இருக்க வேண்டும்?

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை!

Dinamani


By தி. இராசகோபாலன்

First Published : 03 December 2015 01:58 AM IST


அடாது பெய்த மழைநீராலும், விடாது பெய்த மழைநீராலும் நிரம்பிய ஏரி, குளங்களின் விளிம்புகளில் தளும்பிய தண்ணீர், இரண்டொரு நாள்களில் வடிந்துவிடும். ஆனால், அல்லற்பட்டு ஆற்றாது அழுத ஏழை எளியவர்களின் கண்ணீர், எத்தனை நாள் ஆனாலும் வடியாது. இன்றைக்கு மனிதர்களுக்கு மீன் விருந்து நடக்கின்றது, ஒருநாள் மீன்களுக்கு மனித விருந்து நடக்கும் எனச் சொன்ன வி.எஸ். காண்டேகரின் வாக்குப் பலிதமாயிற்றே!
தண்ணீரில் மூழ்கிய ஒருவனை, அத்தண்ணீர் ஒரே முழுக்கில் சாகடித்துவிடாதாம்! அவன் தப்பிப்பதற்கு அவனை மூன்று முறை மேலே கொண்டு வருமாம். அவன் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், கடைசியாகத்தான் சாகடிக்குமாம்!
மழை நம்மை மூன்று முறையன்று, முந்நூறு முறை, மூவாயிரம் முறை எச்சரித்து விட்டதே... நாம்தாம் பாடம் கற்கவில்லை.
பல்லவர்கள் காலத்தில் உத்திரமேரூரில் வயிரமோகன் என்ற குறுநில மன்னன் ஒரு மிகப்பெரிய ஏரியை வெட்டினான். அது வயிரமேகத் தடாகம் என வழங்கப்படுகிறது. அவ்வேரியின் அகலம் போதாதென்று, கி.பி. 802-இல் நந்திவர்மன் மகன் தந்திவர்மன் மேலும் அகலப்படுத்தினான். அவன் பின்னர் வந்த கம்பவர்மன், (கி.பி.868 - 900) கடல்போல் நீர் கொள்ளுமாறும், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்காகவும், வயிரமேக தடாகத்தின் கரைகளை மேலும் உயர்த்தினான். பிற்காலப் பல்லவர் காலத்து உத்திரமேரூர்க் கல்வெட்டுக்கள் இருபத்தைந்தில், ஆறு கல்வெட்டுக்கள் அந்த ஏரியை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று சொல்கின்றன.
அவ்வேரியிலிருந்து பாசனத்திற்காக ஏழு வாய்க்கால்கள் வெட்டப்பட்டனவாம்.
1) கணபதி வாய்க்கால், 2) சுப்பிரமண்யர் வாய்க்கால், 3) ஸ்ரீதேவி வாய்க்கால், 4) சரசுவதி வாய்க்கால், 5) பார்வதி வாய்க்கால், 6) பகவதி வாய்க்கால், 7) பரமேசுவரன் வாய்க்கால் என்பன ஆகும். ஏரிகுளங்களைப் பராமரிப்பதற்கு ஏரி ஆயம் என ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆயத்துப் பெருமக்கள் தாம், எந்த நேரத்தில், எந்த வாய்க்காலைத் திறந்துவிட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள். சங்கக் காலத்தில் ஏரிகுளங்களைப் பராமரிப்பது, மன்னன் பணியாக இருந்தது.
பல்லவர் காலத்தில் மக்கள் பணியாகவும் மாறிற்று. அந்த ஏரியைப் பாதுகாப்பதற்கு அவ்வூர் மக்கள் பூமி தானம், சொர்ண தானம் (தங்கம்) போன்ற ஏழு தானங்களைச் செய்தார்களாம் (தகவல் டாக்டர் இரா. நாகசாமி, உத்திரமேரூர், பக்.35-38). கண்மாய்களைப் பாதுகாத்தலும், கலிங்குகளைக் கண்காணித்தலும் ஏரி ஆயத்தின் பணிகளாம். வாய்க்கால் வழி தண்ணீரைப் பெறுகின்ற விவசாயிகள் வரிகட்ட வேண்டும். தண்ணீரைத் தவறாகப் பயன்படுத்தினால் தண்டனை உண்டு. இப்படிப்பட்ட மக்கள் வாழ்ந்தபோது, மறுபடியும் வெள்ளம் எப்படிப் பெருக்கெடுக்கும்?
ஒவ்வோர் ஆண்டும் ஏரியை ஆழப்படுத்துவார்கள். தோண்டிய மண்ணை எடுத்து, ஏரியின் கரைகளை மேலும் பலப்படுத்துவார்கள்.
ஏரிக்கரையை எப்போதும் வலிமையுடையதாக வைத்திருப்பதற்கு அக்கால மக்கள் செலுத்திய அக்கறை, அர்ப்பணிப்பைப் படித்தால் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. ஏரிக்கரையைச் சுற்றி ஒரு கோல் அளவுக்கு நிலம் வாங்கி, அதனைத் தானமாகக் கொடுப்பார்கள். அதற்குப் பஹிர் பூமி (வெளிநிலம்) எனப் பெயர். இந்நிலத்தில் பயிர் செய்வதோ, வண்டிகளை ஓட்டுவதோ கூடாது.
கரையைச் சுற்றி வலுவான நிலம் இருந்தால்தான், கரை உடைந்து, உடைப்பு எடுக்காமல் இருக்குமாம். கரைகளைக் கெட்டிப்படுத்துவதற்காக அமைந்திருக்கும் குறுங்காடுகளை, புதர்களை யாரும் வெட்டினால் ஐந்து பவுன் தண்டனையாம். (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி ஆறு, எண்கள் 370-375).
வெள்ளம் வராமல் பாதுகாப்பதற்கும், வருகின்ற வெள்ளத்தை மடைமாற்றம் செய்வதற்கும் அமைக்கப்பட்ட மக்கள் தாம் அக்காலத்தில் வெள்ளாளர் என அழைக்கப்பட்டார்களாம் (தகவல்: தமிழ்நாட்டு வரலாறு, வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை, ப.83).
கூர்த்த அறிவுடைய அக்காலத்து மக்கள் குளங்கள், ஆறுகள் இல்லாத இடங்களில் தாம் ஏரிகளை வெட்டியிருக்கிறார்கள். கங்கைக்கரைவரை வென்ற இராசேந்திரசோழன், கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழகங்கம் எனும் ஏரியை வெட்டியது அதன் பொருட்டாக இருக்கலாம்.
தென் ஆற்காடு மாவட்டத்தில் திருக்காஞ்சி எனும் ஓர் ஏரி புயலால் உடைபட்டபோது, அதனை உள்ளூர் அரையன் என்ற தனிமனிதர், அந்த ஏரியின் கரையை அடைத்தாராம். ஏரிக்கரையின் இரண்டு பக்கங்களில் கல் அடுக்கி, கற்படைபோட்டுச் சேதம் விளையாதபடி கரை வலுப்படுத்தப்பட்டதாம். திருக்கச்சூருக்கு அருகே ஓர் ஏரி விரிவுபடுத்தப்பட்டது (தகவல்: கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சோழர்கள், பக்.760 - 761).
குலோத்துங்கச் சோழன் மகன் விக்கிரம சோழன் (கி.பி.125) காலத்திலும் இப்படியோர் ஏரியுடைப்பும் பெரு வெள்ளமும் ஏற்பட்டு மக்கள் கோவிலுக்குள் அடைக்கலம் அடைந்ததைக் கோவிலடிக் கல்வெட்டு ஒன்று, இவ்வூர்... மாதேவர் கோயிலில் திருமண்டபத்தில் கூட்டம் குறைவறக் கூடியிருந்து, பண்ணின பரிசாவது, காலம் பொல்லாததாய் நம்மூர் அழிந்து குடியோடிப் போய்க்கிடந்தமை என்பதாகத் தெரிவிக்கின்றது (தொகுதி: ஏழு, எண்.496).
அந்நேரத்தில் அரசனும், செல்வம் மிக்கவர்களும், தம்பெருங்கொடையால் மக்களை இயன்றவரையில் காப்பாற்றியதோடு, கோயிலதிகாரிகள் அன்னார்க்குக் கடன் கொடுத்து உதவி புரிந்ததாகவும் டி.வி. சதாசிவப்பண்டாரத்தார் தெரிவிக்கிறார் (சோழர் சரித்திரம், பக்.75-76).
இன்றைக்கு மக்கள் படுகின்றபாடு அன்றைக்கும் இருந்திருக்கிறது. ஆனால், அன்றைக்கு இருந்த மக்களுக்கு, அத்துயரச் சம்பவங்கள் மீண்டும் வரக்கூடாது என்பதிலே கவனமும் இருந்திருக்கின்றது.
ஏரிகளைக் காப்பதில் மன்னர்களுக்கு - மக்களுக்கு இருந்த பொறுப்புணர்ச்சி மகேசனுக்கும் இருந்திருக்கிறது. மதுராந்தகம் ஏரியைப் பெருமாள் காக்கின்றார் என்ற தொன்மத்திலே வரலாறும் இருப்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கின்றது. 1798-ஆம் ஆண்டு மதுராந்தகம் ஏரி வெள்ளப்பெருக்கால் உடைப்பெடுத்து, அதுவொரு தீவாகவே ஆகிவிட்ட சூழ்நிலை.
மதுராந்தகம் ஏரி 13 சதுர மைல் பரப்பளவும் (34 சதுர கி.மீ. பரப்பளவு), 21 அடி ஆழமும் கொண்டது. அத்தகைய ஏரி இடிபாடுகளுக்கு உள்ளாகியதைக் கேட்ட அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் கர்னல் லயனல் பிளேஷ் (1795 - 1799) பேரதிர்ச்சிக்கு உள்ளாகி, ஏரிக்கரையிலேயே முகாமடித்துவிட்டார்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முயன்ற லயனல் பிளேஷ், பக்கத்தில் இராமர் கோயிலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சலவைக் கற்களைக் கவனித்துவிட்டு, குருக்களாரை அழைத்து, அவற்றைப் பயன்படுத்தி, உடைப்புகளை அடைத்துவிடலாம் எனும் யோசனையைத் தெரிவித்தார்.
ஆங்கிலேயன், அவர்களைக் கேட்கவேண்டுமென்ற அவசியம் இல்லை அதனை எடுத்துக் கொள்வது, அவருடைய அதிகார வரம்புக்கு உட்பட்டதுதான்.
என்றாலும், நாணயமுடைய அந்த அதிகாரி பூசகர்களின் விருப்பத்தைக் கேட்டார். குருக்கள், அக்கற்கள் ஜானகிவல்லி தாயார் சன்னிதி கட்டுவதற்காக வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினர். அதிகாரி மாற்று யோசனை கேட்டபொழுது, நாம் எல்லாம் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்தினால் ஏரியைக் காப்பாற்றிவிடலாம் எனப் பூசகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
உடன் அந்த அதிகாரியும் சேர்ந்து பிரார்த்தனை நடத்தி முடித்தவுடன், அந்த அதிகாரியின் கண்களுக்கு மட்டும், தொலைவில் இராம - இலக்குவனர் மட்டும் வில் அம்புகளோடு ஏரிக்கரையில் நிற்பதாகத் தென்பட்டதாம். ஏரியின் உடைப்புகளும் அடைப்பட்டனவாம்.
இச்செய்தியை அந்த அதிகாரியே கல்வெட்டில் செதுக்கி, ஆலய வளாகத்திற்குள் பதித்து வைத்திருக்கிறாராம் (இவரது சிறிய சிலை ஆலய வளாகத்திற்குள் இருக்கிறது). ஆங்கிலேயர்கள் மனிதர்களாக இருக்கும்போதுதான் சராசரியே தவிர, ஆளும் வர்க்கத்தாராக வருகின்றபொழுது நாணயமானவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
1985-ஆம் ஆண்டிலும் அதே மதுராந்தகம் ஏரியில் ஒரு பேரிடர் நேர்ந்தது. கன மான மழையால், மதுராந்தகம் ஏரியில் நாலாபக்கமும் உடைப்புக்கள் ஏற்பட்டு, மதுராந்தகம் ஒரு தீபகற்பத்திற்குள்ளேயே ஒரு தீவாகிவிட்டது. நடுத்தர மக்களும், குடிசைவாசிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். என்றாலும், அப்போதைய முதல்வர் எம்ஜி.ஆர்., நிர்வாக இயந்திரங்களைக் கடுமையாக முடுக்கி, போர்க்கால அடிப்படையில், துயரத்தில் துடித்தோரின் கண்ணீரைத் துடைத்தார்.
வாழ்க்கையில் படிப்பதற்கு நிறைய பாடங்கள் இருக்கின்றன. ஆனால், படித்தவண்ணம் நடக்கச் செய்வதற்குத்தான் பாடங்கள் இல்லை. ஓங்கி வளர்ந்த தென்னையில் ஓரடிக்கு ஓரடி தென்னையைச் சுற்றி வடுக்கள் இருக்கும். வளருகின்றபோது பழுத்த மட்டைகள், விழுவதற்கு முன்பு ஏற்படுத்திய வடுக்கள் அவை.
புதியதாக மரமேறுபவன், அந்த வடுக்களிலே கால் வைத்துத்தான் உச்சிக்குச் சென்று தேங்காயைப் பறிப்பான். சங்கப் புலவரிலிருந்து - பல்லவரைத் தொடர்ந்து - சோழர்களைக் கடந்து - ஆங்கிலேயர்கள் வரை, வடுக்களை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். நாம்தாம் வடுக்களிலே கால் வைக்காமல் சறுக்கிச் சறுக்கி விழுகின்றோம்.
பேரிடர்கள், காலங்கள் தோறும் நிகழுகின்றன. ஆனால், நிர்வாகம் செய்வதற்குத்தான் தகுந்த ஆள்கள் வருவதில்லை.
மழை நம்மை மூன்று முறையன்று, முந்நூறு முறை, மூவாயிரம் முறை எச்சரித்து விட்டதே... நாம்தாம் பாடம் கற்கவில்லை.

NEWS TODAY 20.09.2024