Thursday, December 10, 2015

வெள்ள நிவாரண நிதி வழங்க கணக்கெடுக்கும் பணி தீவிரம் 3 ஆயிரம் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று தகவல்களை சேகரிக்கின்றனர்



மாற்றம் செய்த நாள்:
வியாழன் , டிசம்பர் 10,2015, 4:45 AM IST
பதிவு செய்த நாள்:
வியாழன் , டிசம்பர் 10,2015, 12:48 AM IST
சென்னை,

சென்னையில் மழையால் ஏற்பட்ட சேதங்களை கண்டறிந்து உதவிகள் வழங்குவதற்கு வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.

இந்த பணியில் 3 ஆயிரம் ஊழியர்கள் வீடு, வீடாக சென்று தகவல்களை சேகரித்தனர்.

வெள்ள நிவாரணகணக்கெடுக்கும் பணி


வடகிழக்கு பருவமழையினால், சென்னை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை கண்டறிந்து உரிய நிவாரண உதவிகளை வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் வெள்ள நிவாரண கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தொல்லியல் துறை ஆணையர் டி.கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் மைதிலி கே.ராஜேந்திரன் ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் முன்னிலையில், வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கும் அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

3 ஆயிரம் அலுவலர்கள்


நேற்று முதல் இந்த அலுவலர்கள் சென்னை முழுவதும் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினார்கள். இந்த பணியில் மொத்தம் 21 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரம் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று தகவல்களை சேகரிக்கின்றனர்.

இந்த அலுவலர்களை கண்காணிக்க 21 மாவட்ட வருவாய் அலுவலர்களும், 21 துணை கலெக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 10 வட்டங்களில் இந்த கணக்கெடுக்கும் பணிகளை அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.

கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் சென்னையில் 10 வட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாள்தோறும் தங்களுடைய பகுதிகளில் சென்று தகவல்களை சேகரித்து வருவதற்காக 85 வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குடும்ப அட்டை, வங்கி கணக்கு...


கணக்கெடுக்கும் குழுவினர் வரும்போது, பொதுமக்கள் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். மழையினால் குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் சேதமடைந்திருந்தாலோ அல்லது மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருந்தாலோ அந்த தகவலை மட்டும் கணக்கெடுக்கும் குழுவினரிடம் தெரிவித்தால் போதும்.

வங்கி சேமிப்பு கணக்கு இல்லாதவர்களுக்கு தனியாக சேமிப்பு கணக்கு தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், கணக்கெடுப்பு பணியின் போது வீடுகள் பூட்டப்பட்டிருந்தால், கணக்கெடுக்கும் அலுவலர் அந்த வீட்டினை ‘மறு கணக்கீடு’ என்று குறிப்பிடுவார்கள்.

பின்னர், அந்த வீடுகளுக்கு மீண்டும் கணக்கெடுக்க வருவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்த அறிக்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் சமர்ப்பிக்கின்றனர்.

கணக்கெடுக்க வரும் அலுவலர்கள் கேட்கும் தகவல்கள் 


* வார்டு, பகுதி, தெரு பெயர்

* குடும்ப தலைவர், குடும்ப தலைவி பெயர்

* முகவரி

* குடும்ப அட்டை எண்

* வங்கி கணக்கு எண் இருந்தால், வங்கி பெயர், கிளை பெயர், கணக்கு எண்

* குடிசை வீடா அல்லது கட்டிட வீடா?

* குடிசை வீடாக இருந்தால் முழுமையாகவா அல்லது பகுதியாக பாதிப்பா?

* கட்டிட வீடாக இருந்தால் முழுமையாகவா அல்லது பகுதியாக பாதிப்பா?

* இடிபாடுகள் இல்லையென்றால், பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி முழுமையாகவா அல்லது பகுதியாக பாதிப்பா?

* குடும்ப அட்டை எண் இல்லை என்றால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை எண் குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு இருந்தால், குடும்ப அட்டை வைத்து எந்த கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்களோ? அந்த கடை பெயரையும், வங்கி கணக்கு வைத்துள்ள வங்கி பெயர் மற்றும் முகவரியையும் தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...