Wednesday, August 3, 2016

ரயிலை தவறவிட்டதால் அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்த உம்மன்சாண்டி: சக பயணிகள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி

Return to frontpage

கேரளாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏற்க மறுத்துவிட்டார். சாதாரண எம்எல்ஏ.வாகவே இருக்கிறேன் என்று கூறினார். அதனால் அரசியல் பரபரப்பில்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரயிலில் வருவதாக திட்டமிட்டிருந்தார்.

ஆனால், ரயிலை தவறவிட்டுவிட்டார். அவரது பாதுகாவலர்கள் கார் ஏற்பாடு செய்வதாக கூறியதையும் ஏற்க மறுத்து விட்டார். கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினார்.

அந்த பேருந்தில் இருந்த பெண் நடத்துநர் கூறும்போது, ‘‘உம்மன்சாண்டி பேருந்தில் ஏறியதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அவருக்கு ஓட்டுநருக்கு பின்னால் இருக்கும் இருக்கையை ஒதுக்கி கொடுத்தேன்’’ என்றார். பேருந் தில் இருந்த சக பயணிகளும் ஆச்சரியம் அடைந்தனர். அவரிடம் சென்று பலர் பேசினர். பலர் உற்சாகமாக கைகுலுக்கி ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.

உம்மன்சாண்டி பேருந்தில் பயணம் செய்யும் தகவல் அறிந்து நிருபர்கள் பலரும் அதே பேருந்தில் பயணம் செய் தனர். திருவனந்தபுரத்தில் உம்மன் சாண்டியை அழைத்து செல்ல வந்திருந்த கார் இருக்கும் இடத்திலும் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்தனர். திருவனந்தபுரம் வந்ததும் அவர்களிடம் உம்மன்சாண்டி கூறும்போது, ‘‘கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் பயணம் செய்வதை எப்போதும் விரும்புவேன். அதிலும் விரைவு பேருந்தில் செல்வது பிடிக்கும். ஆனால், நிறைய நிகழ்ச்சிகள் இருந்ததால் என்னால் பயணம் செய்ய முடிவதில்லை. இப்போது பயணம் செய் வதற்கு நிறைய நேரம் இருக்கிறது. பேருந்தில் தொடர்ந்து பயணம் செய்வேன்’’ என்றார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கொல்லத்தில் இருந்து திருவனந்த புரத்துக்கு 75 கி.மீ. தூரம் உம்மன்சாண்டி பேருந்தில் பயணம் சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

கூர்நோக்கு இல்லமும் சீர்நோக்குப் பார்வையும்

அன்பும் மன்னிப்பும் புறக்கணிக்கப்பட்ட மனதை சட்டங்கள் எப்படிச் சீர்செய்யும்?

குற்றவாளி பிறக்கிறானா அல்லது உருவாக்கப்படுகிறானா என்ற கேள்வி உளவியலில் பெரும் விவாதப்பொருள். இரண்டும் என்பதுதான் உண்மை. ஆனால், சமூகத்தின் பங்கு பற்றி அதிகம் பேசுகிறோம். காரணம், குற்றத்தின் காரணம் மற்றும் பாதிப்பு இரண்டும் சமூகத்தைச் சேருகிறது. இருந்தும்கூட சட்டரீதியாகப் பார்க்கும் அளவுக்குக் குற்றங்களைச் சமூகரீதியாகப் பார்க்கத் தவறுகிறோமோ என்று அஞ்சத் தோன்றுகிறது.

தண்டனையை அதிகரித்தால் குற்றங்கள் குறையும் என்ற பார்வையை மீறி இங்கு குற்றங்கள் புரிந்து கொள்ளப் படுவதில்லை. குற்றம் பற்றிய செய்திகளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்கூட இங்கு பாரபட்சமாகத்தான் உள்ளன. சென்ற மாதத்தில், சென்னையின் கூர்நோக்கு இல்லத்தில் நடந்த தப்பித்தல், தற்கொலை முயற்சி, பிடிபடல் சம்பவங்கள் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் முழுப் பக்கச் செய்தியாக வந்தது. பிளேடால் அறுத்துக்கொண்டு மிரட்டும் பிள்ளைகளையும், பதைக்கும் பெற்றோர்களின் அவலத்தையும் படமாகப் போட்டது என்னை செய்தியைப் படிக்க விடாமல் அலைக்கழித்தது. அரை குறையாகத்தான் செய்தியைப் படித்தேன். பின் மனதில் மீரா நாயரின் ‘சலாம் பாம்பே’ படம் ஓடியது. கல்லூரிக் காலத்தில் பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள கூர்நோக்கு இல்லம் சென்ற நினைவுகள் வந்துபோயின. மறுநாளும் அந்தப் புகைப்படங்கள் வேலைக்கு நடுவில் என்னை அலைக்கழித்தன. அதையெல்லாம்விட என்னைப் பாதித்தது, பேசிய நண்பர்கள் யாரையும் இந்தச் செய்திகள் பெரிதாகப் பாதிக்காததுதான்! நகரம் இயல்பாக இயங்கிக்கொண்டிருந்தது. பெரும் சமூக நிகழ்வு என்றால், ‘கபாலி’ ரிலீஸ்தான்.

பதினைந்து வயதில் குற்றப் பின்னணி

குற்றம் நடக்கையில் தடுக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்று பேசும் நாம், குற்றவியல் பற்றிய அடிப்படை அக்கறையற்ற சமூகமாக மாறிவருகிறோமோ என்ற சந்தேகம் வந்தது. மணிரத்னம் பட நாயகன்போல பால்கனியிலிருந்து பார்த்து, ‘ஏன் இப்படிச் செய்றாங்க?’ என்று கேட்டுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப் போய்விடுகிறோமோ?

பதினைந்து வயதுகளில் குற்றப் பின்னணி என்பது எவ்வளவு கொடுமையானது? அவன் குற்றவாளியா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், குற்றங்கள் நிகழும் சூழலில் வளர்ப்பு, குற்றம் செய்ய வாய்ப்புகள், காவல் துறையில் பிடிபட்டு குற்றவாளியாக நடத்தப்படும் வாய்ப்புகள் போன்றவை, இந்தச் சிறுவர்களை விளிம்பு நிலைக்குச் சுலபத்தில் தள்ளிவிடுகிறது.

இன்று குற்றப் பின்னணியற்ற, நல்ல விழுமியங்கள் கொண்ட குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளிடமே நடத்தைக் கோளாறுகள் ஏராளமாக உள்ளதை ஒரு உளவியல் சிகிச்சையாளனாகப் பார்க்கிறேன். ஆனால், அனேகமாக இவை வெளியில்கூட வருவதில்லை. காரணம், வசதி வாய்ப்புகளும் குடும்பத்தின் முழு ஆதரவும், பிற சமூக ஊக்கிகளும் இவர்களை எப்படியோ ஆளாக்கிவிடுகின்றன. பலர் எனக்குத் தெரிந்து, நல்ல படிப்பும், வேலையும், தொழிலும் பெற்று கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

பொய்யான கற்பிதங்கள்

ஆனால், நலிந்த பிரிவிலிருந்து வரும் பிள்ளைகளின் நிலை அப்படியல்ல. அவர்களைக் குற்றவாளியாகப் பார்க்க சமூகம் தயாராக உள்ளது. பழைய பேப்பர் வாங்க வரும் பையனைச் சந்தேகமாகப் பார்ப்போம். கூரியர் பையனைச் சுமாராக நடத்துவோம். ஆங்கிலம் பேசும் வெள்ளைச் சட்டை அணிந்த விற்பனை சிப்பந்தியை கெளரவமாகப் பதில் சொல்லி அனுப்புவோம். நம் கற்பிதங்கள் அப்படி. வெள்ளைத் தோல், ஆங்கிலம், நல்ல உடைகள், நாகரிகப் பெயர்கள் போன்றவை நம்மை அவர்கள் மேல் கெளரவம் கொள்ள வைக்கின்றன.

கறுப்பு நிறம், கசங்கிய உடை, சிறுபான்மை அடையாளம், கொச்சை மொழி என்றால், அவர்களை அப்புறப்படுத்தத் தயாராகிவிடுகிறோம். அவர்கள் பொருளாதார நிலையிலோ, கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களில் முன்னேறினால்கூட, நம் ஏற்புத்தன்மை பெரிதாக மாறுவதில்லை.

ஒருமுறை குப்பம் ஒன்றில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியபோது, ஒவ்வொரு பெண்ணும் இரண்டுக்கு மேற்பட்ட வேலை செய்கையில், ஆண்களில் சரி பாதிப் பேர் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது தெரியவந்தது. வேலை இல்லாத மனம் அதற்கான ஒரு வேலையைத் தேடிக்கொள்கிறது. குற்றம்கூட ஒரு தொழில்தான்.

வலைப்பின்னலின் சதி

முறையான கல்வியும், நியாயமான வேலையும் கிடைத்தால் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். எல்லா குற்றங்களிலும் சிறார்களை ஈடுபடுத்துவது தற்செயலான நிகழ்வு அல்ல; ஒரு வலைப்பின்னலாக விரியும் வர்த்தகத் திட்டத்தின் ஒரு செயல் திட்டம்.

போதை மருந்து, பாலியல் தொழில், திருட்டு, பிச்சை என எல்லா தொழில்களிலும் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். காவல் துறையால் ஓரளவே தடுக்க முடியும். புனரமைப்பு, கல்வி, திறன் வளர்ப்பு, உளவியல் ஆலோசனை, வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டாலொழிய இளம் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்க முடியாது.

ஒரு நிறுவன அமைப்பு பெரும்பாலும் மனிதர்களை ஒடுக்கி வைக்கும், எத்தனை மேன்மையான குறிக்கோள்களைக் கொண்டிருந்தாலும். ஆலயம் சார்ந்த அமைப்புகள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக, பள்ளிக்கூடங்கள் சிறைச்சாலைகள்போல இயங்குகின்றன. மருத்துவமனைகளையும் குறிப்பாக, மன நல மருத்துவமனைகளைச் சொல்லலாம். அதனால், கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகளிலும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது.

காவல் துறையும் பரிதாபத்துக்குரியதுதான். புதரில் சிறுவர்களைத் தேடும் காவல் துறைப் பணியாளர்கள் பற்றிப் படிக்கையில் ‘விசாரணை’ படம் நினைவுக்கு வருகிறது. ‘விசாரணை’ அதிகம் விமர்சிக்கப்படாமல் போன படைப்பு என்பது என் கருத்து. அதை செளகரியமாக ஒதுக்கிவைத்துவிட்டது தமிழ்ச் சமூகம்.

கவனிக்கத்தக்க வழக்கம்

சில மாதங்களில் கவுதம் மேனனின் இன்னொரு போலீஸ் படம் வரலாம். அதில் ஒட்ட முடி வெட்டி, வெள்ளைச் சட்டை போட்ட நாயகன், கறுத்த… நீள்முடி வில்லனை ஒரு புல்லட்டில் விசாரணை இல்லாமல் சுட்டுத்தள்ளுவார். சமூகத்தைத் துப்புரவாகத் துலக்கிச் சீர்திருத்தும் உடல் மொழியுடன்.

தமிழ் ரசிகர்கள் நாம் அதை வெற்றிப் படமாக்குவோம். அடுத்த முறை குற்றச் செய்தி படித்தால், ‘போலீஸ் என்ன பண்ணுது?’ என்று கேள்வி கேட்டுவிட்டு நம் கடமையை முடித்துக்கொள்வோம். நெஞ்சைக் கீறி தற்கொலைக்கு மிரட்டுவது நம் பிள்ளைகள் என்றால், இப்படி விலகிச் செல்வோமா?

அன்பும், மன்னிப்பும், நன்மதிப்பும், அங்கீகாரமும், ஆதரவும், ஊக்குவிப்பும் பெருகப் பெருக நடத்தைகள் மாறுவதை நான் பலமுறை குழு சிகிச்சையில் கண்டிருக்கிறேன். உபுண்டு என்ற ஆப்பிரிக்கப் பழங்குடியினர், குற்றத்தைக் கையாளும் வழக்கம் கவனிக்கத் தக்கது. தவறிழைத்த மனிதனை நடுவில் நிறுத்தி, அவன் நற்குணங்களைத் தொடர்ந்து கூறுவார்கள். அவன் செய்த நல்ல செயல்களைப் பட்டியல் போடுவார்கள். இரண்டு மூன்று நாட்கள்கூட இந்தச் சடங்கு தொடரும். சம்பந்தப்பட்டவர் மனம் இளகி, தன் தவறுக்கு வருந்தி நல்வழிக்குத் திரும்புவார்.

அன்பும், மன்னிப்பும் புறக்கணிக்கப்பட்ட மனதை சட்டங்கள் எப்படிச் சீர்செய்ய முடியும்?

- ஆர்.கார்த்திகேயன், உளவியல் மற்றும் மனித வள ஆலோசகர். இந்தியப் பயிற்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் தேசியத் தலைவராகச் சமீபத்தில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

முதல்முறையாக மதுரை மருத்துவமனை சாதனை

அபூர்வ வகை 'பாம்பே ஓ' ரத்தம் உடையவருக்கு அறுவை சிகிச்சை: தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரை மருத்துவமனை சாதனை


தென் தமிழகத்திலேயே முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் அபூர்வ `பாம்பே ஓ’ ரத்த வகையை சேர்ந்தவருக்கு, அதே வகை ரத்தம் செலுத்தி இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ரத்தத்தில் ஏ, பி, ஏபி, ஓ உள்ளிட்டவற்றின் பாசிட்டிவ், நெகட்டிவ் சார்ந்த 8 வகைகள் இருக்கின்றன. ரத்தப் பரிசோதனையில் பெரும்பாலும் எல்லோருக்கும் இந்த ரத்த வகைகளே கண்டறியப்படுகின்றன. மதுரை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் இதய அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சக்திவேல் (52) என்பவருக்கு அபூர்வ `பாம்பே ஓ’ வகை ரத்தம் கண்டறியப்பட்டது. அவருக்கு தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் அதே வகை ரத்தம் செலுத்தி மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இந்த வகை ரத்தம் கிடைப்பது அபூர்வம் என்பதால் இவருக்கு ரத்தம் வழங்க சென்னை, சேலம் பகுதிகளில் இருந்து பாம்பே ஓ வகை ரத்தக் கொடையாளர்களை மருத்துவர்கள் தேடிக் கண்டுபிடித்து வரவழைத்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கித் துறை தலைவர் பேராசிரியர் எம்.சிந்தா கூறியது: உலகளவில் 1952-ம் ஆண்டு பாம்பேயில் முதன்முதலில் இந்த `பாம்பே ஓ’ வகை ரத்தம் ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பாம்பேயில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த ரத்த வகைக்கு `பாம்பே ஓ’ வகை ரத்தம் எனப் பெயரிடப்பட்டது.

இந்த ரத்த வகை இந்தியாவில் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கும், ஐரோப்பிய நாடுகளில் 1 லட்சம் பேரில் ஒருவருக்கும் இருக்கலாம். ஏ, பி, ஏபி, ஓ வகை பாசிட்டிவ், நெகட்டிவ் ரத்த வகையை சார்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், இந்த பாம்பே ஓ ரத்தவகையை சார்ந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அடை யாளப்படுத்தப்படாமல் இருப்பதால் இந்த வகை ரத்தம் கொண்டவர்கள் மருத்துவ உலகில் அபூர்வமானவர்களாகக் கருதப் படுகின்றனர்.

இந்த ரத்தக் கொடையாளர்கள் தமிழ கத்தில் வெறும் 30 பேர் மட்டுமே உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ரத்த வகையை சார்ந்த ஒருவர் கண்டறியப்பட்டு தென்னி ந்தியாவிலே முதல்முறையாக அவருக்கு அதே வகை ரத்தம் செலுத்தி இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்றார்.

`பாம்பே ஓ’ ரத்த வகையை கண்டறிவது அவசியம்

பேராசிரியர் எம்.சிந்தா மேலும் கூறியது: சாதாரணமாக ஓ குருப் ரத்த வகையில் மட்டுமில்லால் அனைத்து வகையிலும் ஹெச் ஆன்டிஜென் இருக்கும். இந்த ஹெச் ஆன்டிஜென் இல்லாததையே பாம்பே ஓ ரத்த வகை எனச் சொல்கிறோம். இந்த வகை ரத்தத்தை சாதாரண ரத்தப் பரிசோதனையில் கண்டறிய முடியாது. ஆன்டி ஹெச் சீரா என்ற ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இதில்தான், பாம்பே ஓ வகை ரத்தமுடையவர்களை கண்டறிய முடியும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த வகை பரிசோதனை செய்யப்படாததால் பாம்பே ஓ வகை ரத்தம் உடையவர்கள், ஓ பாசிட்டிவ், நெகட்டிவ் என்றே நினைத்துக் கொண்டிருப்பர். இவர்கள் மற்றவர்களுக்கு ரத்தம் தரும்போதும், மற்றவர்களிடம் இருந்து ரத்தம் பெறும்போதும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போதே இவர்களுக்கு பாம்பே ஓ வகை ரத்தம் இருப்பது கண்டறியப்படும். இவர்களுக்கு மாற்றுவகை ரத்தம் செலுத்தினால் இறந்துவிடுவர். அதனால், ஓ பாசிட்டிவ், நெகட்டிவ் உடையவர்கள் தன்னுடைய ரத்த வகை பாம்பே ஓ வகை ரத்தம்தானா என்பதை பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்றார்.

'இப்படியொரு கொடூர சாவைப் பார்த்தது இல்லை!' -கலங்கடிக்கும் கலைச்செல்வி மரணம்

vikatan.com

தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர். ' எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா' எனக் கதறுகிறார்கள் கிராமத்து மக்கள்.

தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம் சாலியமங்கலம். இந்தப் பகுதியில் தலித் சமூகத்து மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த 31-ம் தேதி இரவு தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகள் கலைச் செல்வி, தோட்டம் ஒன்றின் முள்புதரில் நிர்வாணமான நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார். படுகொலைக்கு முன்னதாகக் கொடூரமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்துக் கொலைக்குக் காரணமான ராஜா மற்றும் குமார் ஆகியோரைக் கைது செய்திருக்கிறது போலீஸ். குற்றவாளிகளை ரிமாண்ட் செய்வதில் காவல்துறை கால தாமதம் செய்ய, மதுரை எவிடென்ஸ் அமைப்பு தலையிட்டு ரிமாண்ட் செய்ய வைத்திருக்கிறது.

கலைச்செல்வியின் உறவினர்கள் நம்மிடம், " ராஜேந்திரனோட முதல் மனைவி மாரியம்மாள் உடம்பு சரியில்லாமல் செத்துப் போயிட்டாங்க. அவங்க அக்கா பாப்பம்மாள் வீட்டிலதான் கலைச்செல்வி வளர்ந்து வந்தாள். வீட்டு வேலைகளைக் கவனிக்கறதுன்னு அந்தப் பொண்ணு இருக்கற இடமே தெரியாது. சம்பவம் நடந்த அன்னைக்கு நைட் புள்ளை எங்க போச்சுன்னு ஊர் முழுக்க தேடிக்கிட்டு இருந்தாங்க. விடிய விடிய தேடியும் கிடைக்கல. மறுநாள் காலையில முள்புதர்ல நிர்வாணமா கிடக்கறாள்னு செய்தி வந்துச்சு. கொடூரமா கொன்னு போட்டுட்டானுங்க. குமார், ராஜான்னு இந்த பேருக்கும் ஊருக்குள்ள எந்த வேலையும் இல்லாம, வெட்டியா இருப்பானுங்க. தலித் பொண்ணுங்களைத் தூக்கிட்டுப் போறதுதான் இவனுக வேலையே. அவங்க சமூகத்து பெரியவங்களும் இதைத் தட்டிக் கேட்க மாட்டாங்க" என வேதனைப்பட்டனர். கலைச்செல்வியின் அப்பா ராஜேந்திரனோ, " என் புள்ளையக் கொன்ன மாதிரியே அவனுங்களும் சாகனும். எங்களுக்கு வேற எதுவும் வேணாம். அரசாங்கத்தோட எந்த உதவியும் வேண்டாம்" எனக் கதறி அழுதார்.

எவிடென்ஸ் கதிர் நம்மிடம், " என் வாழ்நாளில் இப்படியொரு கொடூர சாவைப் பார்த்ததில்லை. நுங்கம்பாக்கத்தில் கொல்லப்பட்ட சுவாதியைவிட, பல மடங்கு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் கலைச்செல்வி. ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் கொல்லப்பட்டால் தேசிய அளவில் பரபரப்பான விவாதமாகிறது. அதுவே, ஏதோ ஒரு கிராமத்தில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டால், யாரும் கண்டுகொள்வது இல்லை. மிகுந்த வேதனையாக இருக்கிறது. அந்தப் பெண்ணின் உடலில் கொடூரமான காயங்கள் இருக்கின்றன. வாயில் கிழிந்த உள்ளாடையைத் திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு சாகும் வரையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் பாலியல் சித்ரவதை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். சாலிய மங்கலத்தில் வேற்று சாதி ஆண்களை எதிர்த்துப் பேச முடியாத நிலையில், அந்த ஊர் தலித் மக்கள் உள்ளனர்.

ஆண்டுக்கு 15 பெண்கள் வரையில் பாலியல் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள். ' இந்தக் கொடுமையை எதிர்த்துப் பேச முடியாத நிலைமையில இருக்கிறோம். அரசாங்கத்துகிட்ட சொல்லி எங்களைக் காப்பாத்துங்கய்யா' என அந்த மக்கள் கதறுகின்றனர். இதைப் பற்றி விரிவாக ஆய்வு நடத்த இருக்கிறோம். ' பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக வந்து புகார் கொடுங்கள்' என அறிவுறுத்தியிருக்கிறோம். ' அரசாங்கம் எந்த இழப்பீடும் தர வேண்டாம். இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டா போதும்' என்பதுதான் அவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

சாலிய மங்கலத்தில் தலித் மக்கள் மீது நடக்கும் கொடுமைகள் குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று படுகொலைகள் நடக்கும்போது மட்டுமே, அம்மக்கள் படும் துன்பங்கள் வெளி உலகிற்குத் தெரிய வருகின்றது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியாகவே எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்" என்றார் கொந்தளிப்போடு.

தலித் பெண்ணின் மரணம் பற்றிய தகவல் வெளியாகி 48 மணி நேரங்கள் கடந்தும் அரசு நிர்வாகத்தில் எவ்வித சலனமும் இல்லை. ' சாலிய மங்கலத்தை அரசு சீரியஸாக கவனிக்க வேண்டும்' என எச்சரிக்கை குரல் எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்
.

உங்கள் புரொஃபஷனல் இமேஜை வளர்த்துக் கொள்ள 5 வழிகள்!

உங்கள் புரொஃபஷனல் இமேஜை வளர்த்துக் கொள்ள 5 வழிகள்!


ஒருவர் மிகவும் சந்தோஷமான மனநிலையோடு சேஷியலாக பழகக் கூடிய நபராகவும், மிகவும் தாமதமாக தனது வேலைகளை செய்பவராகவும் இருக்கலாம், இல்லையென்றால் தனிமையில் அதிகம் இருப்பவராகவோ, யாரோடும் சிரித்துப் பேசாத நபராகவோ இருக்கலாம். இதெல்லாம் தனிப் பட்ட வாழ்க்கையில் சரி, ஆனால் புரொஃபஷனல் இமேஜ் என்ற ஒரு விஷயம் உள்ளது. ஒரு நபர் அலுவலகத்திலும், வேலையிலும் இப்படி இருக்க வேண்டும் என்ற புரொஃபஷனல் விஷயங்களைக் கட்டாயம் தெரிந்து அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1. உங்கள் வேலை என்ன?

உங்கள் வேலை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் இலக்குகளைச் சரியாகத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் நிர்வாகம் சில கூடுதல் விஷயங்களை எதிர்பார்க்கலாம். அதனைச் செய்ய நீங்கள் தகுதியானவர் என்பதால் தான் அந்த வேலை உங்களுக்கு வழங்கப்படுகிறது. அதேசமயம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மையான வேலையையும், இலக்கையும் அடைந்துவிட்டுப் பின் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் முதன்மையான வேலை தான் உங்களது புரொஃபஷனலிஸத்தை பிரதிபலிக்கும். அதில் தெளிவாக இருங்கள். பின்னர் கூடுதல் வேலைகளைக் கவனியுங்கள்.

2. கற்றுக் கொள்ளுங்கள்!

உங்கள் வேலைக்குத் தேவையான விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன் என்று இருக்காதீர்கள். தினசரி கற்றுக் கொள்ளும் மனநிலையுடன் அனைத்து வேலைகளையும், நபர்களையும் அணுகுங்கள். நீங்கள் அணுகும் வேலையும், நபரும் உங்களைச் சோர்வடைய வைக்கும் விஷயமாக இருக்கக் கூடாது. அது உங்களுக்கு ஒரு புதிய விஷயத்தைக் கற்றுத்தரும் ஒன்றாக இருக்க வேண்டும். உங்களிடம் கேட்டால் சில விஷயங்களுக்குத் தீர்வு இருக்கும் என்ற நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

3. வேலை - நட்பு சமநிலை!

உங்களை ஒருவர் இவர் நமது நண்பர் தானே நாம் சில வேலைகளைச் செய்ய தவறினால் கோபம் கொள்ள மாட்டார். இவர் எப்போது சொன்னாலும் வேலைகளை முடித்துவிடுவார் என்பன போன்ற, உங்களை நிர்ணயிக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். வேலைகளில் எந்தப் பாகுபாடும் பார்க்காதீர்கள். வேலையைத் தரும் பாஸ் முதல், நீங்கள் வேலை வாங்கும் நபர் வரை அனைவரிடமும் நன்றாகப் பழகலாம். ஆனால் வேலையில் நியாயமாக இருங்கள். அதேபோல் எப்போது சொன்னாலும்(உங்கள் அலுவலக நேரம் தவிர) வேலையைச் செய்யும் நபராக இருக்காதீர்கள். அது உங்களை அப்படியேஒரே நிலையில் வைத்திருக்கும். அவசர உதவிகளை மட்டும் செய்யும். எப்போதும் அதிகம் தேவைப்படும் நபராக இருங்கள்.





4. செயல் திறனை அதிகரியுங்கள்!

உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையோ அல்லது பொறுப்போ அதில் செயல்திறனை அதிகரியுங்கள். உதாரணமாக உங்களிடம் 10 பேர் முடிக்கும் வேலையை 8 பேரை கொண்டு முடிக்க சொன்னால் தனிமனிதர்களின் பொறுப்பை உணர்ந்து குழுவாகச் செயல்திறனை கூட்டுங்கள். தானாக வேலையின் செயல்திறன் அதிகரிக்கும். உங்களது குறுகிய இலக்குகளால் பெரிய இலக்குகள் சாத்தியமாகும். உங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும்.

5. உடல்மொழி!

நீங்கள் செய்யும் வேலை 80 சதவிகிதம் என்றால் மீதமுள்ள 20 சதவிகிதத்தை உங்கள் உடை, உடல்மொழி ஆகியவை தான் நிர்ணயிக்கின்றன. உங்கள் உடை புரொஃபஷனலாக இருப்பது அவசியம். சில நிறுவனங்களில் உடை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளப்படாது. ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்களில் உடை கட்டுப்பாடு என்பது அந்த அளவுக்கு இல்லை. ஆனால் உடல் மொழி அனைத்து இடங்களிலும் கவனிக்கப்படும் விஷயமாக இருக்கிறது. நீங்கள் பேசும் போது சில வார்த்தைகளைத் தவிர்த்து, சில சைகைகளைச் செய்யாமல், சரியான அமரும், நிற்கும் முறைகளைப் பிரதிபலித்தால் நீங்கள் பர்ஃபெக்ட் புரொஃபஷனல் இமேஜை பெறுவீர்கள்.



- ச.ஸ்ரீராம்

வேலை செய்யும் இடத்தில் இந்த 6 வாக்கியங்களை பயன்படுத்தாதீர்கள்! #DailyMotivation

vikatan

நீங்கள் சிறப்பாக வேலை செய்பவராக இருக்கலாம். ஒழுக்கம் உட்பட அனைத்திலும் ‘அட.. நம்பர் ஒன்யா இவன்’ என்று பேர் வாங்கி இருக்கலாம். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் இந்த ஆறு வாக்கியங்கள், நிர்வாகத்துக்கு உங்கள் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். அவை என்னென்ன தெரியுமா?

1. ‘இது முடியாது’ அல்லது ‘இதனைச் செய்வது கடினம்’

புதிதாக நிர்வாகம் ஒரு திட்டத்தை செயல்படுத்தலாம் என ஆலோசனை கேட்கும் போது. செய்ய முடியாது அல்லது அதனை செயல்படுத்துவது கடினம் என்று கூறாதீர்கள். ஒருவேளை உண்மையிலேயே அந்தத் திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்றால், அதிலுள்ள சிரமங்களைப் புரிந்து கொண்டு அதனை உங்கள் அலுவலகத்துக்கு ஏற்றவாறு மாற்றி, எப்படி செய்தால் அந்தத் திட்டம் வெற்றி பெறும் என யோசியுங்கள். ஆரம்பிக்கும் போதே முடியாது என்ற‌ வார்த்தையை பயன்படுத்துவதை நிர்வாகம் எப்போதும் விரும்பாது.

2. இது என் வேலை அல்ல

தனிப்பட்ட ஒருவரோ அல்லது ஒரு துறையோ சில காரணங்களால் இயங்க முடியாமல் போகும் போது அந்த வேலையை உங்களிடம் அளித்தால், ‘இது என்னுடைய வேலை அல்ல; இதனை நான் செய்ய மாட்டேன்’ என்று கூறாதீர்கள். உங்களுக்கு அந்த வேலை தெரிந்ததால் - அல்லது அதை உங்களால் செய்ய முடியும் என்று நிர்வாகத்திற்கு உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால்தான் - அந்த வேலை உங்களுக்கு அளிக்கப்படுக்கிறது. இதுபோன்ற நேரங்களில் வாய்ப்புகளை வீணாக்காமல், சிறப்பாக முடிக்க பழகுங்கள்.



3. இது சிறப்பாக இல்லை!

ஓர் அணி, ஏதோ ஒரு வேலையைச் செய்து அதனை அறிக்கையாக அளிக்கும் போது, இந்த வேலை சிறப்பாக இல்லை. இதில் இந்த விஷயங்கள் இல்லை என்று கூறாதீர்கள். அதில் உள்ள குறைகளை அவர்களுக்கு பரிந்துரைகளாக அளிக்க முயற்சி செய்யுங்கள். இது அந்த அணிக்கு உத்வேகத்தை அளிப்பதுடன், உங்களது தலைமை பண்பையும் பிரதிபலிக்கும் விதமாக அமையும்.

4. இல்லை என்று துவங்காதீர்கள்!

நீங்கள் பங்கேற்கும் முக்கியமான மீட்டிங்குகளையோ அல்லது தனிப்பட்ட உரையாடல்களையோ, இல்லை என்ற வார்த்தையோடு ஆரம்பிக்காதீர்கள். உதாரணமாக ஒருவர் ஒரு செயலை எப்படி செய்யலாம் என்று கேட்கும் போது ''இல்லை, இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை வழங்காமல், இந்தச் செயலை இப்படிச் செய்யலாமே’ என வழங்குங்கள். அவருக்கும் உடனடி வெறுப்பு வராமல் இருக்கும். உங்கள் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.



5. நாம் இப்படி செய்வதில்லை

அலுவலகத்தில் புதிய முயற்சியை ஒருவர் செய்கிறார் என்றால், அதனை என்ன என்று கவனியுங்கள். அது புதிதாக உள்ளது என்பதற்காக ''இது போன்ற விஷயங்களை நாம் செய்வதில்லை'' என்று கூறி புதுமைகளை மறுத்துவிடாதீர்கள். எல்லா விஷயங்களுமே புதிதாக யாரோ ஒருவர் உருவாக்கிய விஷயம் தான் எனபதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

6. அவர் சரியில்லை, அவர் சோம்பேறி, நிறுவனத்தைப் பிடிக்கவில்லை!

ஒரு நபரை ‘அவர் சரியில்லை’ என்றோ அல்லது ‘அவர் சோம்பேறித்தனமாக இருக்கிறார்’ என்றோ விமர்சிக்காதீர்கள் தனிப்பட்ட மனிதர்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. உயரதிகாரியாக இருந்தாலும், தனக்குக் கீழ் பணிபுரிபவர்களின் வேலையை மட்டுமே விமர்சிக்க முடியும். அதேபோல் நிறுவனத்தைப் பிடிக்கவில்லை என்று விமர்சித்துவிட்டு பணிபுரியாதீர்கள். என்னதான் நீங்கள் சிறப்பாக பணிபுரிந்தாலும், இவர் விருப்பமில்லாமல் பணிபுரிகிறார் என்ற மனநிலையையே அது உருவாக்கும்.

ச.ஸ்ரீராம்

ஆன்லைனிலேயே இனி காஞ்சிபுரம் பட்டுப்புடவை வாங்கலாம்

சவுந்தரியா ப்ரீதா

கைத்தறி ஆடைகளை சந்தைப்படுத்தும் நோக்கில், இந்திய கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் 13 ஈ காமர்ஸ் நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது.

இதன்மூலம் காஞ்சிபுரம் பட்டையோ, மங்கள்கிரி பருத்திப் புடவையையோ, கோவை பட்டையோ ஆன்லைனிலேயே வாங்கிக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் நெசவாளர்களிடம் இருந்து அவற்றை நேரடியாகப் பெற்றுக்கொள்ளவும் வழிவகைசெய்யப்பட்டிருக்கிறது.

கைத்தறிப் பொருட்களை ஈ காமர்ஸ்ம் மூலம் விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு கொள்கை வடிவமைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து அவற்றை சந்தைப்படுத்தும் நோக்கில், கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் 13 ஈ காமர்ஸ் நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது.

இந்த விற்பனையில் ஆர்வமுள்ள நிறுவனங்கள், வளர்ச்சி ஆணைய அலுவலகத்துக்கு தங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம். அதே நேரம் அவர்கள், தங்களின் இணையதளத்தில் கைத்தறி வணிகத்துக்காக தனிப்பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். அவற்றில் குறிப்பிட்ட நெசவாளர்களோடு இணைந்து விற்பனை செய்யும் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆடைகளில் கைத்தறி சின்னமோ, இந்திய கைத்தறி அடையாளமோ இருக்க வேண்டும்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலோக் குமார், ''இந்த நிறுவனங்கள் மூலம் கடந்த வருடத்தில் ரூ 1.7 கோடிக்கு பொருட்கள் விற்பனை ஆகியுள்ளன. சில நிறுவன இணையதளங்கள் இரண்டு அல்லது மூன்று நெசவாளர்களோடு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன.

வெளிப்படையான கொள்கை

எங்களுடையது வெளிப்படையான கொள்கை. இப்போது வரை எங்களுடன் 13 நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன. இன்னும் சில ஈ காமர்ஸ் நிறுவனங்களும் இதில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன. இணையதள இணைப்புகள் மூலம் கூட்டுறவு சங்கங்கள், மற்ற சங்கங்கள் மற்றும் நெசவாளர்களே இவற்றை விற்றுக்கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி'' என்கிறார்.

கடந்த அக்டோபரில் கைத்தறி வளர்ச்சி ஆணையத்துடன் இணைந்துள்ள அமேசான் நிறுவனம் கைத்தறி புடவைகள், அணிகலன்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட 4,000 பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளது. அந்நிறுவனம் ராஜஸ்தான் (கோட்டா) நெசவாளர்கள், மேற்கு வங்கம் (நாடியா), ஒடிஷா (பர்ஹார்) மற்றும் தெலங்கானா (போச்சம்பள்ளி) நெசவாளர்களோடு இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கைத்தறிப் புடவைகளை ஆன்லைனில் வாங்கத் தனிப்பிரிவு வைத்திருக்கும் நிறுவனங்கள் சிலவற்றின் விவரம்:

ஷாதிகா இணையதள இணைப்பு: ஷாதிகா

கோகூப் இணையதள இணைப்பு: கோகூப்

அமேசான் இணையதள இணைப்பு: அமேசான்

சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்தார்; ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நீடாமங்கலம்,

சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு குரு இடம் பெயர்ந்ததையொட்டி நேற்று ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குருப்பெயர்ச்சி விழா

ஆண்டு தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பகவான் சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு நேற்று காலை 9.30 மணிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி குருபரிகாரத்தலமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 3.30 மணிக்கு 2-வது கால யாகசாலை பூஜைகளும், தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.

மகாதீபாராதனை

இதனையடுத்து கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், சனீஸ்வரபகவான் ஆகிய சாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதன்பின்னர் குரு பகவானுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டது. சரியாக 9.30 மணிக்கு குருபகவான் பெயர்ச்சியான நேரத்தில் குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணிகளில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

திட்டை கோவில்

இதேபோல் பிரசித்தி பெற்ற தஞ்சையை அடுத்த திட்டை என்ற தென்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலிலும் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவையொட்டி குருபகவானுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குருப்பெயர்ச்சியையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருவொற்றியூர்

திருவொற்றியூர் குரு தட்சிணாமூர்த்தி கோவிலில் மட்டும் குருபகவான் வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதால் வட குருஸ்தலம் என்று அழைக்கப்படுகின்றது.

குருப்பெயர்ச்சியையொட்டி அங்கு கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கிய லட்சார்ச்சனை பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு நிறைவு பெற்று குரு தட்சிணாமூர்த்திக்கு 108 மூலிகைகள் மற்றும் ஹோம திரவியங்கள் நிறைந்த கலச நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இங்கு வெளிமாவட்டங்களிலும் இருந்து வந்த பக்தர்கள் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்தனர். பாடி திருவல்லீசுவரர் கோவிலிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tuesday, August 2, 2016

ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு...புனித நீராட ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!

vikatan.com

ராமேஸ்வரம்: ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு தினமான இன்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மறைந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக சிறப்பு தர்ப்பண பூஜைகள் செய்த பின்னர் அவர்கள், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.



ஆடி அமாவாசை மற்றும் ஆடி பெருக்கு தினமான இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே வரத் துவங்கினர். இன்று காலை அக்னி தீர்த்தத்தில் கூடியிருந்த பக்தர்கள் முன்னிலையில், தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீராமர் பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுத்தார். இதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்களும் புனித நீராடியதுடன் மறைந்த தங்களின் முன்னோர்கள் நினைவாக சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி, அம்பாள் சன்னிதிகளில் அவர்கள் தரிசனம் செய்தனர்.



22 தீர்த்தங்களிலும் நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடியதால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. கோயில் தீர்த்தமாடுவதற்காக 4 ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். வெளியூர்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய இரு நிகழ்வுகளும் ஒரே தினத்தில் வருவது 14 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சிறப்பு நிகழ்வாகும். இந்த சிறப்பு நிகழ்வு குறித்து அர்ச்சகர் பக்‌ஷி சிவராஜன் கூறுகையில், '' பிதுர்களின் காலம் என அழைக்கப்படும் தட்ஷியாயண காலத்தில் வருவது ஆடி அமாவாசை. இந்த நாளில் மறைந்த தங்களின் முன்னோர்கள், தங்களை தேடி வருவார்கள் என்பது காலம் காலமாக இந்துக்களிடையே கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாட்டில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி தங்கள் முன்னோர்களின் நினைவாக உலகின் முதலில் உருவான தானியங்களில் ஒன்றான எள்ளினை தண்ணீரில் கரைத்து பூஜைகள் செய்வார்கள்.

கடல்கள், நதிகள், ஆறுகள் சங்கமிக்கும் இடங்களில் தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது விசேஷமானது என ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கர்ம காரியங்கள் விடுபட்டிருந்தால், இந்த நாளில் அந்த பூஜைகளை செய்வதன் மூலம் தோஷங்கள் விலகி முழுமையான பலன் கிடைக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல வடமாநிலங்களில்கூட, செவ்வாய்க்கிழமையில் வரும் இந்த அமாவாசையை ’சீராவன்’ அமாவாசையாக குறிப்பிட்டு சிறப்பாக கடைப்பிடிப்பார்கள்.

இந்த சிறப்பான நாளுடன், ஆடிப்பெருக்கு தினமும் சேர்ந்து வந்துள்ளது. பூமியில் வாழும் ஜீவராசிகள் உயிர் வாழத் தேவையான விவசாய தானியங்களை விளைவிக்கத் தொடங்கும் காலம் இதுவாகும். விவசாயத்திற்கு நீர்தான் பிரதானம். எனவே விவசாயப் பணிகளில் ஈடுபடும் மக்கள், நாட்டில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி அந்த தீர்த்தங்களை காவடியாக எடுத்து சென்று நிலங்களில் தெளித்து பொன் பூட்டிய ஏறுகளின் மூலம் நிலங்களை உழத் துவக்குவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் பழக்கமாகும்.



ஆடி மாதமான இந்த மாதத்தில் தமிழகத்தில் ஓடும் ஆறுகளான காவேரி, தாமிரபரணி, வைகை மற்றும் நதிகள் எல்லாம் பெருகெடுத்து ஓடும். இந்த நாளில் காவிரியை தாயாக கருதும் பெண்கள் தங்களின் தாலிச் சரடுகளை மாற்றி வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் எல்லா வளங்களும் பொங்க வேண்டும் என வேண்டுதல் நடத்துவார்கள். இந்த நாளில் உறவுகள் மேம்பட சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு காதோலையும், கருக மணியையும் கொடுப்பது வழக்கம்.

மேலும், ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகியன ஒருசேர வரும் இந்த நாளில், ‘அதிசார வக்ரம்’ எனப்படும் குருபகவான் ஒரே ஆண்டில் சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளுக்கு இடம் பெறும் நிகழ்வும் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளும் ஒரு சேர வரும் இந்த அரிய நாளில் இறைவனையும், தங்கள் முன்னோர்களையும் ஒருசேர வழிபடுவதன்மூலம் விவசாயம் செழிக்கும், மழை அதிகமாக பெய்து அறுவடை அதிகரிக்கும். வறண்ட பூமி செழிக்கும்" என்றார்.

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி

யார் இந்த சசிகலா புஷ்பா? சசிகலா விவகாரத்தில் என்ன நடந்தது? முழு பின்னணி!

vikatan.com

எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் அரசியலில் நுழைபவர்கள் எவரும் முதலில் அறிந்துகொள்ளவேண்டிய பாடம். அதிமுகவில் அதுதான் அரிச்சுவடி.

அரசியலில் யாரும் எதிர்பாராத ஜெட் வேகத்தில் உயரச் சென்று அதிகாரங்களை அடைந்து, புகழையும் பெருமையையும் அடைந்தவர் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. தன் கட்சியின் தலைவர் தன்னை அறைந்தார் என மாநிலங்களவையின் மையத்தில் நின்று அவர் சொல்லிய ஒற்றை வார்த்தையால் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமடைந்திருக்கிறார் அவர். ஏற்கெனவே இந்திய அளவில் பிரபலமான அரசியல் தலைவரான ஜெயலலிதாவை இன்னும் பெரிய சர்ச்சையில் தன் பேச்சினால் சிக்கவைத்திருக்கிறார் சசிகலா புஷ்பா.

யார் இந்த சசிகலா புஷ்பா...

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்தவர் சசிகலா புஷ்பா. ஆசிரியப் படிப்பு படித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்த சமயத்தில், நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தை சேர்ந்த லிங்கேஸ்வர திலகர் என்பவருடன் திருமணமானது. ஆசிரியை ஆவதுதான் அவருடைய லட்சியமாக இருந்தது. அதற்காக அடுத்தடுத்து கல்வித் தகுதிகளை ஏற்படுத்திக்கொண்டாலும் வேலை கிடைத்தபாடில்லை. விரக்தியுடன் சென்னைக்கு கணவருடன் ரயில் ஏறினார் சசிகலா புஷ்பா .
சென்னையில் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்துவந்த ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் நர்சரி டீச்சராக சேர்ந்தார். கூடவே மசாஜ் சென்டர் ஒன்றையும் வருமானத்திற்காக நடத்தி வந்தார்.

அந்த சமயத்தில் அ.தி.மு.கவில் செல்வாக்கோடு வலம்வந்த ஜெயக்குமாருடன் அறிமுகம் ஏற்பட்டது. அதன் மூலம் அதிமுகவில் பொறுப்புகள் பெற முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. அதன் பின்னர், அவரின் செல்வாக்கில் சென்னை அண்ணாநகரில் மகளிருக்கான தங்கும் விடுதி ஒன்றை நடத்திவந்தார். அவரின் கணவரும் இந்த சமயத்தில் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார்.



ஆனாலும் பொருளாதார ரீதியாக சிரம திசைதான். போராட்டம் மிகுந்த வாழ்க்கையை நடத்தி வந்தார். அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதை விட்டு அகலவே இல்லை. அ.தி.மு.கவில் பெயரும் புகழும் பெற வேண்டுமானால் தலைமைக்கு நெருக்கமானவர்களுக்கு அறிமுகமாகி இருக்கவேண்டும் என்ற திட்டமிடுதலுடன் தலைமையுடன் நெருக்கமான சிலருடன் நட்பு கொண்ட சசிகலா, அந்த வரிசையில் அதிமுக வின் நிழல் மனிதரான மணல் தொழிலதிபர் ஒருவருடன் நட்பு கிடைத்தபின் விடுவிடுவென வளர்ச்சி அடைந்தார்.

மணல் தொழிலதிபருடன் நெருக்கமாக இருந்த சசிகலா, கட்சியில் தனக்கு ஏதாவது பொறுப்பு வாங்கிக் கொடுக்குமாறு அவரை நெருக்க தொடங்கினார். சசிகலா புஷ்பாவின் இந்த தொடர்ச்சியான வலியுறுத்தல் காரணமாக அந்த தொழிலதிபர் மூலம், 'மிடாஸ்' மோகனிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவரிடமும் கட்சிப் பொறுப்பு பற்றியே சசிகலா புஷ்பா வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் சசிகலா புஷ்பாவிற்கு கார்டனுக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் நெருக்கமானார். இது கட்சியில் இன்னும் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள காரணமானது.

அதனால்,சென்னையில் குடியிருந்த போதிலும் 2010 ம் ஆண்டு நெல்லை மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பொறுப்பு சசிகலா புஷ்பாவுக்கு கிடைத்தது. கட்சி மேலிட வட்டத்தில் நல்ல அறிமுகமானவராக வலம் வரத் துவங்கினார் . 2011 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியின் வேட்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் பரவலாக உள்ளூர்க் கட்சி நிர்வாகிகள் பலரும், ‘யார் இந்த சசிகலா புஷ்பா? இவருக்கு எப்படி சீட் கிடைத்தது?’ என்று விவாதிக்க தொடங்கினார்கள். அந்தத் தேர்தலில் ஜெயலலிதா மற்றொரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதுடன், தனக்கு தெரியாமல் முதல் பட்டியல் வெளியானதாகவும் அறிவித்தார்.



இரண்டாவது பட்டியலில் சசிகலா புஷ்பா பெயர் இடம்பெறவில்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும், கட்சித் தலைமையுடன் நெருக்கமாக இருக்க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். 2011ல் கட்சியின் இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் துணைச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. சசிகலா புஷ்பாவுக்கென்று ஆதரவு வட்டம் உருவானது. கட்சியின் சார்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் அளவுக்கு ஜெயலலிதாவால் அப்போது முக்கியத்துவம் தரப்பட்டது.

அந்த அளவுக்கு கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியது. பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயராக வேண்டும் என்கிற கனவுடன் தீவிரமாகச் செயல்பட்டார். கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் மூலமாக காய் நகர்த்தினார். ஆனால், சொந்த ஊர்ப் பிரச்னை அதற்கு முட்டுக் கட்டையானது. சென்னையில் வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை என்பதை புரிந்து கொண்ட அவர், தூத்துக்குடி மாவட்டத்துக்கு தனது வாக்காளர் முகவரி உள்ளிட்டவற்றை மாற்றினார்.
அவர் எதிர்பார்த்தது போலவே, தூத்துக்குடி மாநகராட்சித் தேர்தலில், மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.அதில் வெற்றி பெற்று மேயராகவும் தேர்வானார். அந்த சமயத்தில் மாநகராட்சிக் கூட்டம் நடந்த போதே ஆணையரை பேச விடாமல் மைக்கை பிடுங்கியதாக சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி சர்ச்சையானது. கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும், கட்சித் தலைமையுடன் இருந்த நெருக்கம் காரணமாக அவருக்கு ஏற்றம் மட்டுமே ஏற்பட்டது. மேயர் பொறுப்பில் இருந்தபோதே 2014 ல் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பைக் கொடுத்தது, அ.தி.மு.க. தலைமை. அத்துடன், மாநில மகளிரணி செயலாளர் பொறுப்பும் அவரைத் தேடி வந்தது. மாநிலங்களவை அதிமுக கொறடாவாகவும் அவர் ஆக்கப்பட்டார். பளபளப்பாக சென்று கொண்டிருந்த அவரது அரசியல் வாழ்வினை ஒரு ஆடியோ அதகளம் செய்துவிட்டது.

ஆண் நண்பர் ஒருவருடன் சசிகலா புஷ்பா செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி கட்சி எல்லையைத் தாண்டி, அவர் மற்றவர்களின் கவனத்திற்கும் வந்தார். அந்த ஆடியோவில் அவர், ‘நேற்று நான் *******இருந்தேன். டெல்லியில் குளிரா இருக்குல்ல.. அதான் *****ந்தேன்’ என்கிற ரீதியில் பரபரப்பாக பேசியதுடன், ‘****** மாவட்ட ஆட்சியர் ஒரு தத்தி. அவருக்கு எதுவுமே தெரியாது’ என்று அதிகாரிகளையும் மட்டம் தட்டி, தம் சொந்தக் கட்சி தொடர்பான ரகசியங்கள் சிலவற்றையும் பேசியிருந்தார்.



அதன் பின்னர் இறங்கு முகம்தான் கட்சியில். கட்சியின் அனைத்துப் பொறுப்புகளும் பிடுங்கப்பட்டன. அத்துடன் மாநிலங்களவை கொறடா பொறுப்பில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார். ஆனாலும், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். மீண்டும் இழந்த இடத்தை திரும்பப் பெற்று விடமுடியும் என்கிற நம்பிக்கையுடனேயே அவர் செயல்பட்டார். ஆனால் திமுக எம்.பி சிவாவுடனான சர்ச்சை அதை இன்னும் சிக்கலாக்கியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக மாநிலங்களவை எம்.பி.,திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், இந்த புகைப்படங்கள் உண்மை இல்லை என்றும் தனது கணவருடன் இருந்த படங்களை யாரோ விஷமிகள் 'மார்பிங்' செய்து வெளியிட்டு தன்னை அசிங்கப்படுத்துவதாகவும் அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார். அந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் திருச்சி சிவாவை மையப்படுத்தியே சர்ச்சை அவர் வாழ்வில் மையம் கொண்டுவிட்டது.

சசிகலா, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) சென்னை திரும்ப, டெல்லி விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கிருந்த திருச்சி சிவாவை சட்டையைப் பிடித்து அடித்ததாக செய்தி வெளியாகி, இப்போது அவர் கட்சியை விட்டு கட்டம் கட்டப்படும் அளவுக்கு நிலை வந்துவிட்டது. தனது கட்சித் தலைமையை அவமரியாதையாக பேசியதால்தான் உணர்ச்சிவசப்பட்டு சிவாவை அடித்து விட்டதாக அவர் அந்த சம்பவத்திற்கு காரணம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக உடனடியாக விளக்கம் அளிக்க சென்னையில் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தார்.

அந்த சந்திப்பு அவரது அதிமுகவுடனான அரசியல் வாழ்வின் இறுதி என்றே இப்போது சொல்லப்படுகிறது. காரணம் இரும்புப் பெண்மணி என இந்திய மீடியாக்களால் சொல்லப்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இமேஜை அசைத்துப் பார்க்கும் விதமாக நாடாளுமன்ற மாநிலங்களவையின் நடுநாயகமாக நின்று சர்ச்சைக் கருத்துக்களைப் பேசியிருக்கிறார்.

கிட்டத்தட்ட அதிமுகவிற்கும் அதன் தலைமைக்கும் பெரும் சங்கடங்களைத் தரும் பேச்சு அது. “கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இரு எம்.பிக்கள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் பற்றி பேச விரும்புகிறேன். திருச்சி சிவாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். திருச்சி சிவா மிகவும் நேர்மையானவர். என் கட்சித் தலைவர் பற்றி, அவர் பேசியதற்காக, உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்துவிட்டேன் . திருச்சி சிவாவிடமும், திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. நான் என் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய என் தலைவரால் நிர்பந்திக்கப்படுகிறேன்.

ஆனால், எனக்கு அவர் மீது நன்மதிப்பு இருக்கிறது. இந்த பதவியை எனக்கு கொடுத்தற்கு, நான் மிகவும் நன்றி உணர்வோடு இருப்பேன். ஆனால், என்னை இந்தப் பதவியில் இருந்து விலக வற்புறுத்துகிறார்கள். நான் என் பதவியில் இருந்து விலகமாட்டேன்.இந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்கு இருக்கிறது. இங்கே பேசாமல் எங்கே பேசப்போகிறேன். என்னை அவமானப்படுத்தினார்கள். நேற்று, என் தலைவர் என்னை அறைந்தார். என்னை இங்கு தம்பிதுரை தான் அழைத்துவந்தார். என் குடும்பத்தினரிடம் கூட பேச என்னை அனுமதிக்கவில்லை. ஒரு தலைவர் ஒரு எம்.பியை அறைவது என்ன விதத்தில் சரி. பெண்களின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது. தமிழ்நாட்டில் எனக்குப் பாதுகாப்பு இல்லை. என்னால், என் வீட்டில் கூட வாழமுடியவில்லை" என அழுதபடியே தெரிவித்தார் சசிகலா புஷ்பா.

இதன்மூலம் ஜெயலலிதாவை நோக்கி இந்திய மீடியாக்கள் தங்கள் கேமிராவின் வெளிச்சத்தை ஆர்வத்தோடு நீட்ட நாடாளுமன்றத்தில் நடுமையத்தில் நின்று ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறார் சசிகலா புஷ்பா. இந்தப் பேச்சின் சுருக்கத்தை மாநிலங்களவை பத்திரிகையாளர்கள் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்புவதற்குள், சசிகலா புஷ்பா கட்டம் கட்டப்பட்ட செய்தியை அந்த பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பிவைத்து சசிகலாவுக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது அதிமுக தலைமை.


அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திப்பிலும், ஒருபோதும் தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் அப்படி யாரும் தன்னை வற்புறுத்த முடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

.

இது ஒருபுறமிருக்க, சசிகலாவின் வளர்ச்சி அ.தி.மு.கவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பினாமி பெயர்களில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருப்பதாக அதிமுகவினர் சொல்கிறார்கள். குறிப்பாக மாற்றுக் கட்சியினர் பெயரில்தான் சசிகலாவின் சொத்துக்கள் உள்ளதாக அதிர்ச்சிக் கொடுக்கிறார்கள் அவர்கள். திருச்சி சிவாவுக்கும், சசிகலாவுக்கும் ஏற்பட்டமோதலுக்கு பின்னணியும் இதுதான் என்கிறார்கள்.



தங்களுக்கு கீழ்ப் படியாத சந்தர்ப்பங்களில் அதிமுக தலைமை, தங்களை அடித்ததாக கடந்த காலங்களில் புகார்கள் கிளம்பியதுண்டு. பத்துக்கு பத்து அறைகளில் புறப்பட்ட இந்த புகார், இப்போது மாண்புமிகு எம்.பிக்கள் குழுமிய இடத்தில் பேசப்பட்டிருப்பதுதான் சர்ச்சை ஆகியிருக்கிறது.


“நமது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று மாநிலங்களவையிலேயே ஒரு உறுப்பினர் கண்ணீருடன் கேள்வி எழுப்பியதன்மூலம் கட்சிக் கட்டுப்பாடு, தலைமையுடன் முரண், அரசியல் சர்ச்சை என்பதையெல்லாம் மீறி அவர் தனது பிரச்னையில் கட்சித் தலைமை மீதான அதிருப்தியை ஒரு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்வரும் குற்றப் புகாராகவே மாநிலங்களவையில் முன்வைத்திருக்கிறார். இந்திய அரசியலில் இப்போது சசிகலா புஷ்பா விவாதப் பொருளாகி இருக்கிறார். இன்னும் சில தினங்களுக்கு இந்திய மீடியாக்களின் லைவ் வேன்களை சென்னை தெருக்களில் அதிகம் பார்க்கலாம்.

- ஆண்டனிராஜ், எஸ். மகேஷ்

Monday, August 1, 2016

எல்சிடி டி.வி.யை உடைத்த தொழிலாளி

ரூ.5 ஆயிரம் மதிப்பு டிவிக்கு ரூ.7 ஆயிரம் வரியா?- மதுரை விமான நிலையத்தில் எல்சிடி டி.வி.யை உடைத்த தொழிலாளி


திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் துபையில் தொழிலாளியாக பணியாற்றுகிறார். நீண்ட நாளாக சொந்த ஊருக்கு வராமல் இருந்தார். இந்நிலையில், தனது மனைவி, குழந்தைகளை பார்க்க சொந்த ஊருக்கு திரும்பத் திட்ட மிட்டார். இதுபற்றி குடும்பத்தினரிடம் தெரிவித்த போது, அவர்கள் எல்சிடி வாங்கிவரும்படி கூறியுள்ளனர். இதற்காக ஆசை, ஆசையாக மலிவான விலையில் டிவி ஒன்றை துபையில் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை மதுரை விமான நிலையத்துக்கு அவர் வந்தார். அவர் கொண்டு வந்திருந்த பொருட்களை பரிசோதித்த அதிகாரிகள் எல்சிடி டிவிக்கு ரூ. 7 ஆயிரம் வரி விதிப்பதாகக் கூறினர். அதிர்ச்சி அடைந்த முருகேசன், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள டிவிக்கு எப்படி ரூ. 7 ஆயிரம் வரி செலுத்த முடியும். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ரூ.2 ஆயிரம் மட்டும் இருக்கிறது என அதிகாரிகளிடம் கெஞ்சிக் கேட்டும் அவர்கள் கேட்கவில்லையாம். இதனால் கோபமடைந்த முருகேசன், தான் கொண்டு டிவியை போட்டு உடைத்தார். இச்சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செரீப் கூறியது: துபை போன்ற வெளிநாடுகளுக்கு சாதாரண பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு வரி என்ற பெயரில் அதிக தொகை வசூலிப்பது, கெடுபிடி செய்வதால் தங்களது குடும்பத்தினர் ஆசைப்படும் பொருட்களை தொழிலாளர்களால் கொண்டுவர முடியவில்லை. லால்குடியை சேர்ந்த முருகேசன் துபையில் தள்ளுபடி விலையில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள எல்சிடி டிவியை வாங்கி வந்துள்ளார். இதற்கு ரூ. 7 ஆயிரம் வரி கேட்டதால் கோபத்தில் உடைத்துவிட்டு, மன வேதனையுடன் சென்றார்.

விலை உயர்ந்த கம்பெனி பொருட்களுக்கு கூடுதல் வரி வசூலிக்கலாம். சாதாரண தொழிலாளர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு நடைமுறையிலுள்ள வரியை வசூலிக்க அதிகாரிகள் முன் வரவேண்டும் என்றார்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியது: முருகேசன் கொண்டு வந்த டிவிக்கு விதிமுறைப்படிதான் ரூ. 7 ஆயிரம் வரி விதிக்கப்பட்டது. அதை அவர் செலுத்த முன்வரவில்லை. அந்த டிவியை, அவர் கை தவறி கீழே போட்டு விட்டதால் சேதமடைந்தது. இதுபற்றி அவரே எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார் என்றார்.

சவுதியில் 7 மாதங்களாக வேலையிழந்து சம்பளம், உணவின்றி பரிதவிக்கும் 10,000 இந்தியரை தாயகம் அழைத்துவர ஏற்பாடு: சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

Return to frontpage

சவுதி அரேபியாவில் உணவு இன்றி பரிதவிக்கும் 10,000 இந்தியர்கள் விமானம் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே மத்திய அரசு உத்தரவின்பேரில் சவுதியின் ஜெட்டா நகரில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் 5 நிவாரண முகாம் கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரை சேர்ந்த சவுதி ஒகர் கட்டுமான நிறுவனத்தில் 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 4 ஆயிரம் பேர் இந்தியர்கள். அண்மைகாலமாக மத்திய கிழக்கு நாடுகளில் கட்டுமானத் தொழில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால் கடந்த 7 மாதங்களாக சவுதி ஒகர் நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. அன்றாட சமையலுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் அளிக்கவில்லை. இதனால் 4 ஆயிரம் இந்திய தொழிலாளர்களும் வேலையிழந்து உணவின்றி பரிதவித்து வந்தனர்.

மேலும் சில சவுதி நிறுவனங் களில் பணியாற்றும் இந்தியர்களுக் கும் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களும் பசி, பட்டினியில் பரிதவித்தனர்.

அமைச்சர் சுஷ்மா அறிவிப்பு

இந்தப் பிரச்சினை குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சவுதி அரேபியாவில் ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உணவின்றி பரிதவித்து வருகின்றனர். அவர் களுக்காக இந்தியத் தூதரகம் சார்பில் 5 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த முகாம்களில் 2,450 இந்திய தொழிலாளர்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களாக அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.

சவுதியில் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உணவின்றி தவிக்கும் உங்கள் சகோதர, சகோதரிகளுக்கு தாராளமாக உதவி செய்யுங்கள். இந்தியர்களின் மனஉறுதிக்கு முன்பு எதுவும் பெரிது இல்லை.

பாதிக்கப்பட்ட இந்தியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவர்கள் அனைவருக்கும் ஜெட்டா வில் இந்திய தூதரகம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங் கும். குவைத் நாட்டிலும் இந்திய தொழிலாளர்கள் வேலையிழந்து தவிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. எனினும் அங்கு நிலைமை கவலைப்படும் அளவுக்கு இல்லை.

சவுதி அரேபியாவில் தவிக்கும் 10 ஆயிரம் இந்தியர்களையும் விமானம் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப் படும் புகைப்படங்களை சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் வெளியிட் டுள்ளார்.

சவுதி செல்லும் வி.கே.சிங்

இதனிடையே இந்திய தொழிலாளர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்ய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் விரைவில் சவுதி செல்கிறார். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை இந்தியா அழைத்து வர தேவை யான ஏற்பாடுகளை அவர் செய்வார் என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜெட்டாவில் அடுத்த சில நாட்களில் மேலும் 3 முகாம்கள் திறக்கப்பட உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியா, குவைத் அரசுகளுடன் இந்திய வெளி யுறவு அமைச்சகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சவுதி அரசு விசாரணை

இதுதொடர்பாக சவுதி அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சில கட்டுமான நிறுவனங்கள் ஊழியர் களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட நிறு வனங்கள் சட்டத்தை மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம், தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தன.

அதிமுகவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா நீக்கம்


அதிமுகவில் இருந்து மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்'' என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

2014-ல் எம்.பி. ஆன சசிகலா புஷ்பாவுக்கு 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பதவிக்காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவையில் கண்ணீர் மல்க பேச்சு:

இதனிடையே, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அரசு தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மாநிலங்களவை இன்று கூடியதும், அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, "நான் தமிழ்நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாத அளவுக்கு எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. என் பதவியை ராஜினாமா செய்யுமாறு நான் நிர்பந்திக்கப்பட்டேன். ஆனால், எனது பதவியை நான் ராஜினாமா செய்யப்போவதில்லை" என்றார்.

ஆனால், தொடர்ந்து அவர் பேச முடியாத அளவுக்கு அவையில் அமளி நீடித்ததால், அவரால் மேலும் பேச முடியாமல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.

சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் பேசிக் கொண்டிருந்த வேளையிலேயே அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பின்னணி:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்போது திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் வார விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு, மீண்டும் டெல்லி செல்வது வழக்கம். அதன்படி கடந்த சனிக்கிழமை என்பதால் திமுக எம்பி திருச்சி சிவாவும், அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவும் சொந்த ஊர் திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாய்தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆவேசமடைந்த சசிகால புஷ்பா, திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்ததாகவும் சொல்லப்பட்டது.

இது தொடர்பாக திருச்சி சிவா, விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஊடகங்களில் எல்லாம் எனக்கும் அவருக்கும் கைகலப்பு என்று செய்தி வருகின்றன. இருவரும் தாக்கிக் கொண்டால்தான் கைகலப்பு. நான் சசிகலா புஷ்பாவை அடிக்கவே இல்லை. அவர் மட்டும்தான் என்னை அடித்தார். அவர் பெண் என்பதால் நான் எதுவும் செய்யவில்லை.

‘நானும் எம்.பி., திருச்சி சிவாவும் எம்.பி., அப்படி இருக்கும்போது அவருக்கு மட்டும் ஏன் கூடுதல் மரியாதை கொடுக்கிறீர்கள்’ என்று அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் சசிகலா புஷ்பா வாக்குவாதம் செய்தார். அவரது செயல் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசையும், முதல்வரையும் நான் விமர்சித்ததாக சசிகலா புஷ்பா கூறியுள்ளார். பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு பற்றி குறை கூற வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

அப்படியே விமர்சனம் செய்திருந்தாலும், பொது இடத்தில் அடிப்பதுதான் மரபா? அரசியல் ரீதியாக விமர்சனங்களை செய்தால் பொது இடத்தில் அடிப்பது என்ற புதிய மரபை அவர் தொடங்கி வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடருவதா அல்லது வேறு நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன் என்றார்.

ஜெயலலிதாவிடம் சசிகலா புஷ்பா விளக்கம்

இது தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சசிகலா புஷ்பா நேற்று அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, நேற்று பிற்பகல் போயஸ் தோட்டத்துக்கு சென்ற சசிகலா புஷ்பா, நடந்த சம்பவம் தொடர்பாக கட்சித் தலைமையிடம் விளக்கக் கடிதம் அளித்துவிட்டு சென்றார்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்பு அதிமுக மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார். அதன்பிறகு திருச்சி சிவா எம்.பி.யுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. அது மார்பிங் செய்யப்பட்ட படம் என கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆண் நண்பருடன் சசிகலா புஷ்பா பேசுவது போன்ற ஆடியோ வெளியானது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால் சசிகலா புஷ்பா மீது கட்சித் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Now, confusion over MBBS admission deadline


TIMES OF INDIA

Hyderabad: Even as they appear fated to deal with a third Telangana Eamcet exam, further trouble is brewing for aspirants to government medical colleges.

As per Medical Council of India's (MCI) Regulations on Graduate Medical Education (RGME), 1997, the last date up to which first-year MBBS students can be admitted to a college is August 31. However, Kaloji Narayana Rao University of Health Sciences (KNRUHS) vice-chancellor Dr B Karunakar Reddy says the deadline for admissions is September 30.

MCI member Dr K Ramesh Reddy said, "Till last year, the last date for first-year MBBS admissions in medical colleges used to be September 30 as mentioned in Appendix E of RGME. But this rule was amended in January 2016, advancing the admissions deadline to August 31 through a notification in Gazette of India."

In fact, in the 'note' attached to the amended rule, the MCI clearly states that "in any circumstances, the last date for admission/joining will not be extended after August 31."

The RGME also goes on to state that any student "identified as having obtained admission after the last date for closure of admission be discharged from the course of study."

However, Dr B Karunakar Reddy told TOI that the last date for completing admissions is September 30 as listed by the MCI in its RGME on page 10. Asked about the latest amendment to RGME fixing the deadline as August 31, he said, "We have written to the MCI seeking a clarification on this point. However, they have not responded to our query so far."

While maintaining there is no cause for worry, he pointed out how there is no sight of results for the National Eligibility cum Entrance Test (NEET) exam, held as recently as July 24, which makes meeting the August 31 deadline impossible in that case too.

Incidentally, the authorities in Telangana State Council for Higher Education (TSCHE) -- on whose behalf the JNTU conducted T Eamcet I and II respectively -- too back KNRUH. TSCHE chairman Prof T Papi Reddy said that the September 30 deadline is already in vogue. "In case there are extraordinary circumstances delaying the admissions, the government can approach the Supreme Court to relax the deadline," he said.

However, with the state government yet to notify the date for Eamcet III in the wake of its decision to scrap the second edition of the test due to question paper leak, experts fear that the confusion over the admission deadline will make matters worse.

மனைவி சம்பாத்தியம்.. மகிழ்ச்சியான வாழ்க்கை.

DAILY THANTHI

திருமணத்திற்கு தயாராகி பெண் தேடும் இளைஞர்களில் ஒரு பகுதியினர், தங்களுக்கு வேலைக்குப் போகும் பெண் தேவை என்று சொல்கிறார்கள். அவர்கள் அப்படி எதிர்பார்க்கும் அளவுக்கு இன்று பொருளாதார தேவை முக்கியமானதாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

ஆண்கள் எதிர்பார்ப்பதுபோன்று அவர்களுக்கு வேலைக்குப் போகும் மணப்பெண்கள் கிடைக்கிறார்கள். கல்யாணம் நல்லபடியாக நடக்கிறது. இரண்டு சம்பளமும் வீட்டிற்கு வருகிறது. ஆனால் அதன் மூலம் நிம்மதி கிடைக்கிறதா?

இரண்டு சம்பளம் மகிழ்ச்சியை கொடுப்பதற்கு பதில் பல வீடுகளில் கவலையை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையை வளப்படுத்துவதற்கு பதிலாக, பிரச்சினையை ஏற்படுத்தி குடும்பத்தையே போர்க்களமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

பெண்களின் நிர்வாகத் திறமையின் மீது ஆண்களுக்கு எப்போதும் சந்தேகம் இருக்கும். பெண்கள் வீண் செலவு செய்கிறார்கள் என்ற நினைப்பும் அவர்கள் மனதில் இருந்துகொண்டிருக்கும். திருமணத்திற்கு பின்பு மனைவி தனது முழு சம்பளத்தையும் தன்னிடம் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பெரும்பாலான ஆண்களிடம் இருக்கும். ஆனால் அதுவரை சுதந்திரமாக செலவழித்த மனைவிக்கோ அது பெரிய எரிச்சலை உருவாக்கும். தான் செய்யும் ஒவ்வொரு செலவையும் கணவரிடம் சொல்லிக்கொண்டிருக்க, சம்பாதிக்கும் மனைவிகள் விரும்புவதில்லை. அப்படி சொல்ல வில்லை என்றால், மனைவி செய்யும் ஒவ்வொரு செலவும் தண்டச் செலவு என்று விமர்சிக்கும் போக்கு கணவரிடம் உருவாகும்.

குறிப்பாக அழகு நிலையம் செல்வது, அழகு சாதனைப் பொருட்கள் வாங்குவது, ஆடை அணிகலன்கள் வாங்குவது, தன் தோழிகளுடன் வெளியிடங்களுக்குச் செல்வது, தன்வழி உறவினர்களுக்கு செலவழிப்பது இவை எல்லாம் ஆண்கள் விரும்பாத செலவுகள் என்ற பட்டியலில் இருந்துகொண்டிருக்கிறது.

கணவரிடம் தனது சம்பளத்தை அப்படியே தர விரும்பாத மனைவிகள் பலவிதமான கேள்விகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. பலவித சந்தேக வளையங்களுக்குள் சிக்கித்தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

மனைவியின் பணம் எப்படி செலவாகிறது, என்ற கேள்வி கணவருக்கு ஏற்பட்டால் அவர் உடனே அந்த கேள்வியை கேட்டுவிடுவதில்லை. கேள்வியை கேட்டு, பதிலைப் பெறாமல் கசப்பை மனதில் வளர்த்துக்கொண்டு மனைவி மீது நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருப்பார்கள். காலப்போக்கில் அது காரணமில்லாமல் வளர்ந்து, ஒருநாள் பூதாகர மாக வெடிக்கும். அப்போது குடும்பம் தடுமாறிப்போகும். இதனால் நடக்கும் விவாகரத்துகள் ஏராளம். புத்திசாலிகளாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கும் பலர் இந்த பிரச்சினைக்கு முறையான தீர்வு காணமுடியாமல் பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மனைவியின் வருமானத்தை கணவர் பெறுவதும், அதை குடும்பத்தின் தேவைக்காக செலவிடுவதும் தவறல்ல. ஆனால் அளவுக்கு மீறி அவர்களது சுதந்திரத்தில் தலையிடுவதுதான் தவறு. பெண்கள் அவர்களது தேவைகளை அவர்களே நிறைவேற்றிக்கொள்வது நல்லதுதான் என நினைத்து அமைதியாக இருப்பதுதான் ஆண்களுக்கு அழகு.

அவர்களுடைய அடிப்படை உரிமைகளில் தலையிடாமல், அவர் களது சம்பளத்தை அவர்களே கையாள அனுமதிப்பது கணவன், மனைவி இருவருக்குமே நல்லது. பெண்களும் பண விஷயங்களில் கணவரின் ஆலோசனைகளை பெறுவது மிக சிறந்தது.

பெண்கள் செலவுகளில் அதிக அக்கறைகாட்டாமல், சேமிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. அவர்களுக்கென்று தனி சேமிப்பு இருக்கவேண்டும். பெண்களால் எல்லா காலமும், எல்லாவிதமான வேலைகளையும் செய்துகொண்டிருக்க முடியாது. அவர்களது வேலைக்கு இடையூறு வரலாம். வேலைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகலாம். அப்போது எல்லா தேவைகளுக்கும் கணவரிடம் எதிர்பார்க்கும் நிலை உருவாகிவிடக்கூடாது.

அதுவரை தனது வருமானத்தில் தாராளமாக செலவு செய்துவிட்டு, அதன் பின்பு கணவரிடம் எதிர்பார்ப்பது ஒருவித மனஅழுத்தத்தை உருவாக்கத்தான் செய்யும். அதுமட்டுமல்ல கணவரது வருமானம் திடீரென்று தடைபட்டுபோனால்கூட அதை சமாளிக்க மனைவி சேமிப்பது அவசியமானதாக இருக்கிறது.

சில கூட்டுக்குடும்பங்களில் அனைவரின் சம்பளமும் வீட்டின் மூத்த நபரிடம் ஒப்படைக்கப்படுகிறது. பின்பு அவரவர் தேவைக்கு பணம் பெற்றுக்கொள்ளும் நிர்வாக நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தகைய குடும்பங்களில் சம்பாதிக்கும் பெண்களுக்கு எதிர்காலத்தை பற்றிய கவலை ஏற்படுகிறது. தான் சம்பாதிக்கும் பணம் தனக்கு தேவைப்படும்போது கைகொடுக்காமல் போய்விடுமோ? என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படுவது இயல்புதான். அவர்களது அச்சத்தை போக்கி, அவர்களது எதிர்காலத்திற்கு உத்தரவாதம் தரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு முன்பு தனது சம்பளத்தை எல்லாம் தனது தாயாரிடம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு தனது மாமியாரிடம் அவ்வளவு மன ஈடுபாட்டோடு கொடுப்பதில்லை. அதற்கு காரணம், பிறந்த வீட்டார் மேலிருக்கும் நம்பிக்கை புகுந்த வீட்டினர் மேல் உருவாகாமல் இருப்பதே! அந்த நம்பிக்கையை தந்து பெண்களை அன்னியோன்யமாக உறவாடச் செய்வது புகுந்த வீட்டாரின் கடமை.

நம் உழைப்பு மதிக்கப்படுகிறது. நமது வருமானம் சேமிக்கப்படுகிறது. நமது எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது என்ற எண்ணம் வந்தால்தான் பெண்கள் மகிழ்ச்சியாக பணிக்கு செல்வார்கள். மகிழ்ச்சியாக குடும்பத்தையும் கவனிப்பார்கள். இல்லாவிட்டால் வேலையையும், குடும்பத்தையும் அவர்கள் பாரமாக நினைக்கத் தொடங்கிவிடுவார்கள்.

Sunday, July 31, 2016

இன்ஜி., கல்லூரிகள் நாளை திறப்பு : 'பேஸ்புக், வாட்ஸ் ஆப் சாட்டிங்'குக்கு தடை


தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள் நாளை திறக்கப்படுகின்றன. கல்லுாரி வளாகத்தில் சமூக வலைதளங்களில், 'சாட்டிங்' செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவ, மாணவியருக்கும், அவர்களது பெற்றோருக்கும், நடத்தப்பட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பின் வரும் விதிகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
டி-ஷர்ட், பெர்முடாஸ் மற்றும் அரை டிரவுசர் அணிந்து வகுப்பறைக்கு வரக்கூடாது

விடுமுறை நாட்களில் கல்லுாரி வளாகத்தில் தேவையின்றி கூடி கும்மாளம் போடக்கூடாது

வகுப்பறையில் எந்த காரணத்தை கொண்டும், மொபைல்போன், டேப்லேட் போன்றவற்றில்

கேம்ஸ் விளையாடுதல், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் சாட்டிங்

செய்வது போன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை

மொபைல்போனை, 'ஸ்விட்ச் ஆப் அல்லது சைலன்ட் மோடில்' வைத்து கொள்ள வேண்டும்

ஈவ்டீசிங், ராகிங் போன்ற ஒழுக்க சீர்கேடுகளில் ஈடுபட்டால், கல்லுாரியிலிருந்து வெளியேற்றப்படுவதுடன், அண்ணா பல்கலையின் எந்த இணைப்பு கல்லுாரியிலும் சேர முடியாது

கல்லுாரி வளாகங்களில், இரு சக்கரம் மற்றும் கார் போன்ற வாகனங்களை கொண்டு வருதல் அறவே தடை செய்யப்படுகிறது. கல்லுாரி நுழைவு வாயில் அருகில் வாகனங்களை நிறுத்தி கொள்ள வேண்டும்

அன்றாட பாடங்களை முடிப்பதுடன், வகுப்புகளை கட் அடிப்பது, கல்லுாரி நேரங்களில் சினிமா தியேட்டர் மற்றும் பொழுது போக்கு இடங்களுக்கு செல்வது கூடாது

தேர்வுகளில் ஒரு தாளில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பெற்றோருக்கு தகவல் அளித்து, விளக்கம் கேட்கப்படும். மேலும், அடுத்த தேர்வில் தேர்ச்சி பெறுவோம் என்ற உறுதிமொழி எழுதி வாங்கப்படும்.இவ்வாறு விதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Thursday, July 28, 2016

பிணக்கை போக்கும் கணக்கு ஆசிரியை

பிணக்கை போக்கும் கணக்கு ஆசிரியை


கணக்கு என்றாலே காத தூரம் ஓடும் மாணவர்கள் காலங்காலமாய் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஆசிரியை ஜோ.ரூபி கேத்தரின் தெரசாவை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் ரூபி கேத்தரின் தெரசா. வீடியோ பதிவாக இவர் உருவாக்கியிருக்கும் ‘எளிய முறையில் கணிதம் கற்பித்தல்’ இப்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கணித ஆசிரியர்களின் மடிக் கணினிகளில் பேசிக் கொண்டிருக்கிறது.

எளிய உத்திகள் இதோ!

ரூபி உருவாக்கியிருக்கும் எளியமுறையில் வாய்ப்பாடு எழுதும் முறையைப் பின்பற்றினால் ஒன்று முதல் இருபது வரையிலான வாய்ப்பாடுகளைத் தங்கு தடையின்றி நிமிடங்களில் எழுதி முடித்துவிடலாம். எண்களைக் கூட்டுவதற்காக இவர் சொல்லித் தரும் உத்தியைக் கையாண்டால், எத்தனை இலக்க எண்ணையும் எளிதில் கூட்டி விடை சொல்லிவிட முடியும். இதேபோல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முறைகளுக்கும் எளிய உத்திகளை பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனாக தருகிறார் ரூபி.

எண்களின் வகுபடு தன்மை, எண்களை வர்க்கப்படுத்துதல் உள்ளிட்டவைகளையும் எளிமையாகப் புரிந்துகொள்ள வழிகளைக்காட்டும் இவர், 1986-ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். கடந்த முப்பது ஆண்டுகளில் இவரிடம் கணக்குப் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களில் ஒருவர்கூடக் கணிதத்தில் தேர்ச்சியைத் தவறவிட்டதில்லை.

கணிதம் கற்றுத் தரும் வீடியோக்கள்

“ஆரம்பத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் வேலைபார்த்தபோது எளிய முறையில் கணிதம் கற்பிக்கப் பயிற்சி எடுத்தேன். ஆனால், மதிப்பெண்ணை மட்டுமே குறியாகக் கொண்டு தனியார் பள்ளிகள் செயல்படுவதால் அங்கே, நான் கற்ற கணிதப் பயிற்சி பயன்படவில்லை. அரசுப் பள்ளிக்கு வந்தபிறகுதான் அதற்கான தேவை ஏற்பட்டது. அரசுப் பள்ளிக் குழந்தைகள் கணிதத்தின் அடிப்படைச் செயல்பாடுகளே தெரியாமல் தடுமாறியபோதுதான் எனக்குள்ளும் ஒரு தேடல் ஏற்பட்டது. இந்தக் குழந்தைகளுக்காக எதையாவது செய்தாக வேண்டுமே என நினைத்தேன். நான் எடுத்துக்கொண்ட பயிற்சிக்குச் செயல்வடிவம் கொடுத்தேன்” எனப் பெருமிதம் கொள்கிறார் ரூபி கேத்தரின் தெரசா.

பத்தாம் வகுப்புக்குக் கீழே உள்ள மாணவர்களுக்கு எளிய முறையில் கணிதம் கற்றுத் தர 60 வீடியோக்களையும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக 70 வீடியோக்களையும் உருவாக்கி அதைத் தனது ‘பிளாக் ஸ்பாட்’ பக்கங்களில் பேசவைத்திருக்கிறார் ரூபி. அடுத்த கட்டமாக, பிளஸ் டூ மாணவர்களுக்கும் எளிய முறையில் கணிதம் கற்கும் உத்திகளை வடிவமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

இது போதாது என்பேன்!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே மெத்தனமாகத்தான் இருப்பார்கள் என்ற பொதுக்கருத்தையும் தகர்த்திருக்கிறார் இவர். பள்ளிவிட்டுச் சென்றதும் எளிய முறை கணிதப் பயிற்சியை முறையாக அனைவருக்கும் கொண்டு செல்வதற்காக வீட்டிலும் தினமும் மூன்றரை மணி நேரம் உழைக்கிறார். ‘சென்னை ட்ரீம்ஸ்’ பக்கத்தில் வெளியிடப்பட்ட ரூபியின் எளிய முறை கணிதப் பயிற்சி வீடியோவை மட்டுமே இதுவரை 1.85 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். கணித ஆசிரியர் குழுக்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இரண்டாயிரம் பேர் இவரது எளியமுறை கணிதப் பயிற்சி முறையைக் கையில் வைத்திருக்கிறார்கள்.

“இது போதாது, அரசுப் பள்ளிகளை நம்பிவரும் ஏழைக் குழந்தைகளுக்காக ஆசிரியர்கள் இன்னும் அர்ப்பணிப்போடு சேவை செய்யவேண்டும் அதற்காகத்தான் இரவு பகல் பாராது உழைத்துக் கொண் டிருக்கிறேன்” என்கிறார் ரூபி கேத்தரின் தெரசா.

தொடர்புக்கு: 94432 36930

கபாலியும் காலி வத்திப்பெட்டியும்!....... சமஸ்



ரஜினி படம் ஒரு தேர்த் திருவிழா. தேர் பார்க்கப்போவது என்று முடிவெடுத்துவிட்டால், கூட்டத்தோடு பார்ப்பது கூடுதல் கொண்டாட்டம். திருவிழா என்பது சுவாமி பார்ப்பது மட்டும் இல்லை. ஆனால், ஊர் முழுக்க உள்ள அத்தனை திரையரங்குகளிலும் படத்தை எடுத்து, அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளைத் தொடங்கிவிட்டாலும் சமீப காலமாக முதல் நாள் அன்று ரஜினி படம் பார்ப்பது சாத்தியப்படுவதில்லை. கொள்ளைக் கட்டணம் கொடுத்துப் படம் பார்க்க மனம் ஒப்புவதில்லை.

திரையரங்கம் சென்று சினிமா பார்ப்பது அரிதாகி நீண்ட நாட்கள் ஆகின்றன. சென்னையில், சாதாரண நாட்களில், ஒரு குடும்பம் திரையரங்கம் போய் படம் பார்த்து வருவதற்கே எழுநூறு, எண்ணூறு ரூபாய் வேண்டும். சராசரியாக ஒரு டிக்கெட் விலை ரூ.120. வாகனம் நிறுத்த ரூ.50. பத்து ரூபாய் பப்ஸின் விலை அரங்கினுள்ளே ரூ.50. சம்பாத்தியத்துக்கும் செலவழிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. சோளப் பொரியை நூறு ரூபாய் கொடுத்து வாங்கித் தின்ன தனித்த ஒரு பராக்கிரம மனம் வேண்டி இருக்கிறது.

திரையரங்குகள் இன்றைக்கு எல்லோருக்குமான இடங்களாக இல்லை. ஒருகாலத்தில் சாதியை உடைத்து நொறுக்கிப் போட்டவை. இன்றைக்கு வர்க்கம் பார்த்து மேலே இருப்பவர்கள் மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கின்றன. இல்லாவிட்டால், சாமானிய நிலையிலுள்ள குடும்பங்கள் நொறுக்குத்தீனி எடுத்து வருவதைக்கூடத் தடுக்கும் முடிவை அவை எப்படி எடுக்கும்? ஆக, இப்போதெல்லாம் சிடியில்தான் படம் பார்க்கிறேன். இதில் தவறு ஏதும் இருப்பதாகக் கூறும் புண்ணியவான்கள் சாமானிய குடும்பங்கள் ஐம்பது, நூறு ரூபாயில் படம் பார்க்க வேறு ஏதேனும் வசதி இருக்கிறதா என்று கூற வேண்டும்.

திரையரங்கில் பைசா செலவழிப்பதில்லை என்கிற வைராக்கியத்துடன் படம் வெளியான ஐந்தாம் நாள் ‘கபாலி’க்குப் போனோம். முதல் நாள் ரூ.2,000-க்கு டிக்கெட் அன்றைக்குத்தான் ரூ.120-க்குக் கிடைத்தது. படம் பிடித்திருந்தது. குறிப்பாக ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால், வயதுக்கேற்ப ரஜினியின் சினிமா பயணத்தை சரியான தடம் நோக்கி நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் இரஞ்சித். “பழைய ரஜினி படங்களின் ‘மாஸ்’ இல்லை” என்று பலரும் பேசக் கேட்க முடிந்தது. அதற்கான காரணத்தை இரஞ்சித்திடம் தேடுவதைக் காட்டிலும் ரஜினியிடம் தேடுவது உசிதமாக இருக்கும் என்று தோன்றியது. இந்தப் படத்திலும் சரி; இதற்கு முந்தைய சமீபத்திய படங்களிலும் சரி; எங்கெல்லாம் முன்புபோல் ரஜினி துள்ள வேண்டும் என்று நினைக்கிறாரோ அங்கெல்லாம் அவருடைய வயது அவரைக் கைவிடுவதைக் கவனிக்க முடிந்தது. ஒரு ரசிகனாக படத்தில் வயதான ரஜினியையும் வயதுக்கேற்ற ஆர்ப்பாட்டமான அவருடைய நடிப்பையும் ரொம்பவே பிடித்திருக்கிறது. சமீப ஆண்டுகளில் ‘படையப்பா’வுக்குப் பின் அதிகம் ஒன்றவைத்த ரஜினி படம் இது.

ரஜினி படத்தை இரஞ்சித் இயக்குகிறார் என்ற தகவல் வெளியான நாள் தொடங்கி ‘கபாலி’ தொடர்பான விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஒருகட்டத்தில் இரஞ்சித்தை அடிப்படையாக வைத்து, ‘கபாலி தலித் அரசியல் பேசும் சினிமாவா?’ என்பது விவாதங்களின் மையப்புள்ளி ஆனது. பின் படத்துக்குச் சாதிய சாயம் பூசும் வேலையும் நடந்தது. படத்தில் மலேசிய தமிழனாக ரஜினி பேசியிருக்கும் சில வசனங்களைக் கதைக்கு வெளியிலிருந்து பார்க்கலாம் என்றாலும்கூட, ஒடுக்குமுறைக்கு எதிரான சாடலாகவே அவை பட்டன. காலங்காலமாக சினிமாவில் பிராமணர், தேவர், கவுண்டர், பிள்ளைமார், படையாச்சிகளின் புகழ் பாடிய வசனங்கள் உருவாக்காத உறுத்தலை ஒடுக்குமுறைக்கு எதிரான வசனங்கள் நமக்கு உருவாக்குகின்றன என்றால், பிரச்சினை படத்தில் இல்லை; அது நம் மனதில் இருக்கிறது.

திகைப்பூட்டிய விஷயம் ஒன்று உண்டு. படம் நெடுக நூற்றிச்சொச்சம் பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்படுகிறார்கள். அரசின் தணிக்கைத் துறை எப்படி அனைவரும் பார்ப்பதற்கான ‘யு’ சான்றிதழை வழங்கியது? படத்தை ‘ஜாஸ் சினிமாஸ்’ வெளியிட்டிருப்பதை நண்பர் சுட்டிக்காட்டினார். ‘எந்திரன்’ படம் வெளியானபோது உருவான சர்ச்சைகள் ஞாபகத்துக்கு வந்தன. அந்தப் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது காட்சி மாற்றம்!

திரையரங்கிலிருந்து வெளியே வந்தபோது பசி வயிற்றைப் பிறாண்டியது. கடலைவண்டி கண்ணில் பட வறுத்த கடலை வாங்கினோம். ஒரு பொட்டலம் ரூ.10. அவ்வளவு கூட்டம் வந்து செல்லும்போதும் பெரிய போணி ஆனதுபோலத் தெரியவில்லை. பெரியவர் காலையிலேயே வந்துவிடுவாராம். அதிசயமாக நூறு பொட்டலம் விற்றால்கூட எல்லாம் போக பெரியவருக்கு என்ன கிடைக்கும் என்று தோன்றியது. “மனுஷன் கடலை திங்கிறதை மறந்துட்டான் சார். நாளெல்லாம் நின்னாலும், முப்பது பொட்டலம்கூடப் போறதில்லை. கேவலமா நெனைக்கிறாங்க. அடுத்த தலைமுறையில கடலை வண்டினு ஒண்ணு இருக்காது சார்” என்றார். கடலையை எடுத்து மடித்தவர், “சூடு கொஞ்சம் கம்மி” என்றவாறே கொடுத்தார்.

அணைந்திருந்த அடுப்பைப் பற்றவைக்க முயன்றார். தீப்பெட்டியின் கடைசி குச்சி அது. அடுப்பு பற்றியதும் காலிப் பெட்டியைத் தூக்கி எறிந்தார். “ஒரு ரூவா தீப்பெட்டி. இதுல நாம கட்டுற வரி இருபத்தெட்டு காசு. ‘கபாலி’ படம் மொத நாள் வசூல் நம்மூர்ல மட்டும் இருவது கோடியாம். டிக்கெட் மூவாயிரம் வரைக்கும் வித்திருக்கான். ஒரு ரூவா அரசாங்கத்துக்கு வரி கிடையாது. எப்படி சார் உருப்படும் இந்த ஊர்?”

கடலையை வறுக்க ஆரம்பித்தார். வண்டியைக் கடப்போர் கவனத்தைத் திருப்ப சட்டியைக் கரண்டியால் தட்டினார். ‘டங்… ணங்… டங்…’

பெருமளவு கருப்புப் பணம் புழங்கும், சூதாட்டத்தைப் போல் நடக்கும் சினிமா துறைக்கு எதற்காக அரசாங்கம் சலுகை அளிக்க வேண்டும்? கேளிக்கை வரி விதிக்கப்பட்டால், நூறு ரூபாய் டிக்கெட்டுக்கு முப்பது ரூபாய் அரசுக்குப் போகும். தமிழில் படப் பெயரைச் சூட்டுபவர்களுக்கு கேளிக்கை வரியை ரத்துசெய்யும் முடிவை 2006-ல் தமிழக அரசு அறிவித்த ஆரம்ப ஆண்டுகளிலேயே வருவாய் இழப்பு ரூ.50 கோடியைத் தொட்டது. பெருமளவில் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்லக் கூடிய நிதி இது. இந்த இழப்பைப் பற்றி அந்நாட்களில் கருணாநிதி பேசிய வார்த்தைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. “எதை எதையோ தாங்கிக்கொண்ட இந்த இதயம், இந்த ஐம்பது கோடியையா தாங்கிக்கொள்ளாமல் போய்விடப்போகிறது?”

அன்றைய ஐம்பது கோடி, இன்றைக்கு நூறு கோடியாகி இருக்கலாம். நாளை இருநூறு, முந்நூறு, ஐந்நூறு கோடிகள் ஆகலாம். இழப்பை கருணாநிதி தாங்கவில்லை; ஜெயலலிதாவும் தாங்கவில்லை!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

கவனம் குவித்தால் சி.ஏ. வெல்லலாம்!


சார்ட்டட் அக்கவுண்டன்ட்டாக இருக்கும் ஒருவர் நமக்கு அறிமுகமானாலேயே ‘அடேங்கப்பா பெரிய அறிவாளியாக இருப்பாரோ’ என்கிற மைண்ட் வாய்ஸ், உடனடியாக நம்மில் பலரிடம் ஒலிக்கும்!

இந்திய அளவில் கல்வி அறிவைச் சோதிக்கும் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாக சார்ட்டட் அக்கவுண்டன்ஸி (Chartered Accountancy Exam) தேர்வு கருதப்படுகிறது. முதல் முயற்சியிலேயே ஒருவர் இத்தேர்வில் வெற்றிபெறுவது, இன்றும் அதிசயமாகக் கருதப்படுகிறது. ஆனால் சி.ஏ தேர்வில் முதல்முறையிலேயே வெற்றிபெற்று லாவகமாக சாதித்துக்காட்டிவிட்டார் ராம். சேலத்தை சேர்ந்த ராம் 2016-ம் ஆண்டுக்கான சி.ஏ. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 20 வயதே ஆன இவர் அகில இந்திய அளவில் நடத்தப்படும் சி.ஏ. தேர்வில் 800-க்கு 613 மதிப்பெண்கள் பெற்று தமிழர்களின் பெருமையாக மாறியுள்ளார்.

கற்றல் கைகொடுக்கும்

“எதில் சவால் அதிகமோ அதைச் செய்துபார்க்க எனக்கு எப்போதுமே பிடிக்கும். அப்படித்தான் சி.ஏ. தேர்வை எழுத முடிவெடுத்தேன்” என்று வெற்றியின் உற்சாகத்தோடு பேசுகிறார் ராம். இவர் ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே அப்போது சென்னையில் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட்டாக வேலைபார்த்த தன்னுடைய அண்ணன் ஹரிஷ் குமாரால் சி.ஏ. பக்கம் ஈர்க்கப்பட்டதாகச் சொல்கிறார். இது மிகவும் கடினமான படிப்பு என்றுதான் எனக்கு ஆரம்பத்தில் தோன்றியது. அதுவே எனக்கு சவாலாகவும் மாறியது” என்கிறார். இத்துறையில் தன்னிச்சையாகவும் வேலைபார்க்கலாம் அல்லது ஒரு நிறுவனத்திலும் பணி புரியலாம் என்கிற இரட்டை அனுகூலம் இருப்பதால் ராமுக்கு சி.ஏ. கனவு வளர ஆரம்பித்தது.

இவரது தந்தை ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை ஊழியர். தாய் பெரம்பலூரில் நூலகராகப் பணிபுரிந்து வருகிறார். ஆறாவது படிக்கும்போதே ராமுக்கு சார்ட்டட் அக்கவுண்டன்ஸி மீது ஆர்வம் இருப்பதைக் கண்டுபிடித்த அவருடைய அம்மா புதுமையான முறையில் அவரைத் தயார்படுத்தியிருக்கிறார். “நம்முடைய இலக்கு ஒன்றாக இருந்தாலும் பல விஷயங்களைக் கத்துக்கணும்; அது புத்தியைக் கூர்மைப்படுத்த உதவும்னு அம்மா எப்பவுமே என்கிட்ட சொல்லுவாங்க. அதனால் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளையும், தமிழ், ஆங்கிலம் டைப் ரைட்டிங்கும் கத்துக்கிட்டேன்” என்கிறார் ராம். இத்தனையும் கற்றுக்கொள்வதால் நேரடியான பயன்பாடு இருக்கிறதா இல்லையா என்பதை யோசிக்காமல் கற்றலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்ததன் பலன் இன்று புரிகிறது என்கிறார். ஏதோவிதத்தில் தட்டச்சுகூட சி.ஏ.வுக்கு உதவியிருக்கிறது என உறுதியாகச் சொல்கிறார்.



பெற்றோருடன் ஸ்ரீராம்

நட்புக்குக் கிடைத்த வெற்றி

மிகவும் சீரியஸாகப் பேசுகிறாரே என நினைத்தால் நண்பர் கூட்டம், மாணவர் குழுத் தலைவர், மாணவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனக் கலகலப்பான இளைஞராகவும் இருக்கிறார். சொல்லப்போனால், ராமின் பால்ய நண்பர் ஷுபம் பண்டாரியும் இதே சி.ஏ. தேர்வில் தேர்வாகியுள்ளார். “மூன்றாம் வகுப்புப் படிக்கும்போதிலிருந்து நானும் பண்டாரியும் நெருங்கிய நண்பர்கள். சி.ஏ.தான் எங்கள் இருவருடைய கனவு. சேர்ந்து, படித்து, விளையாடி, வளர்ந்தோம். நான் முதலிடம் பிடித்திருக்கிறேன்; அவன் பட்டியலில் வேறொரு இடத்தைப் பிடித்திருக்கிறான். அவ்வளவுதான் வித்தியாசம்! நிச்சயமாக எங்களுடைய வெற்றியின் ரகசியத்தில் நட்புக்கும் முக்கிய பங்குண்டு” எனப் புன்னகைக்கிறார்.

சி.ஆர். சார்ட்டட் அக்கவுண்டன்ட் சி.நரேந்திரனிடம் ஆர்ட்டிக்கல் ஷிப் (article ship) என்கிற மூன்றாண்டு பயிற்சியும், சென்னை பிரைம் அகாடமியில் சில காலம் பெற்ற பிரத்தியேகப் பயிற்சியும் தேர்வில் வெல்ல உதவின என்கிறார். தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்ட்டட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா பரிந்துரைக்கும் புத்தகங்களைத்தான் முழுவதுமாக வாசித்திருக்கிறார் ராம். “வழக்கமாக சி.ஏ. படிப்புக்குரிய புத்தகங்களைத்தான் நானும் படித்தேன். அது 40 சதவீதம்தான் உதவும். மற்றபடி மூன்றாண்டுகள் ஒரு ஆடிட்டரிடம் வேலைபார்த்தபோதுதான் செயல்முறையில் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். தேர்வு எழுதும்போது அதை சரியாக நடைமுறைப்படுத்தினேன்” என்கிறார்.

Monday, July 25, 2016

போலி உதிரி பாகங்கள்

உயிருக்கு எமனாகும் போலி உதிரி பாகங்கள்


காலையில் அவசர அவசரமாக குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, அலுவலகம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென மோட்டார் சைக்கிளை யாரோ இழுப்பது போன்றிருக்கும். அதை உணர்ந்து சுதாரிக்கும் முன்பாகவே நம்மைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சார், டயர் பஞ்சர் என கூறிக் கொண்டே நம்மைக் கடந்து செல்வர். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அருகிலுள்ள பஞ்சர் கடையைத் தேடி அல்லது மொபைல் போனில் அவரை அழைத்து பஞ்சர் போட கழற்றினால், அவரோ சார், டியூப் மவுத் போயிடுச்சு, வேற டியூப் போடணும் என்பார். சரி வாங்கி வா என்றால், அருகில் கடை இல்லை, இதுபோன்ற தேவைக்கு தானே டியூபை வாங்கி வைத்திருப்பதாகக் கூறுவார். வேறு வழியின்றி அதை மாட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு பிற்பகலில் செல்வோம்.

அடுத்த 10 அல்லது 15 நாளில் இந்த சம்பவம் முற்றிலும் மறந்தே போயிருக்கும். அலுவலகத்தில் நிறுத்தியிருக்கும்போது காற்று இறங்கியிருக்கும். தெரிந்த மெக்கானிக் வந்து மீண்டும் டயரைக் கழற்றுவார். அவர் கூறும் தகவல் நம்மை விதிர்த்துப் போகச் செய்யும். சார் இது டுபாக்கூர் டியூப். இது ஒரு வாரம் கூட தாங்காது. இதன் விலை வெறும் ரூ. 60 என்பார். வேறு வழியின்றி அங்கீகாரம் பெற்ற டீலரிடமிருந்து பில்லுடன் டியூப் வாங்கி போடுவார்.

இது ஒரு சம்பவம்தான். இதுபோல உதிரி பாகங்களை சாலையோரக் கடைகளில் மாற்றி தவித்தவர்கள் ஏராளம்.

தினசரி நிகழும் சாலை விபத்துகளுக்கு என்ன காரணம் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அதிக வேகத்தில் சென்றது, அல்லது குடி போதையில் வாகனங்களை ஓட்டியதால்தான் விபத்து நிகழ்ந்ததாக பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

ஆனால் உண்மையில் இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் 20 சதவீத விபத்துகளுக்குக் காரணம், போலியான உதிரி பாகங்கள்தான். இது வெறுமனே யாரோ பதிவு செய்த புள்ளி விவரம் அல்ல. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (எஸ்ஐஏஎம்) நடத்திய ஆய்வில்தான் இது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் 6 தயாரிப்புகளில் 2 தயாரிப்புகள் போலியானவை என்று பாகிஸ்தான் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

போலிகள்

போலிகளின் புழக்கம் இன்று, நேற்று தோன்றியதல்ல, 1872-ம் ஆண்டிலேயே என்ஜினுக்கு உயவு எண்ணெய்யாக தயாரிக்கப்பட்ட மெக்கோய் உயவு எண்ணெய்க்கு போலிகள் வந்து அந்நிறுவன வருமானத்தையே அழித்துவிட்டன.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இதற்கு இணையாக போலித் தயாரிப்புகளும் வளர்ச்சி கண்டு வருகின்றன.

இந்திய ஆட்டோமொபைல் துறையில் போலிகளின் வரவால் ஏற்பட்ட பாதிப்பு சரியாக உணரப்பட்டது 1980-களில்தான். சில நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மட்டும்தான் போலிகள் வருவதில்லை. மற்றபடி பெரும்பாலான தயாரிப்புகளுக்கு போலிகள் சந்தையில் சர்வசாதாரணமாக புழங்குகின்றன.

உண்மையான உதிரி பாகங்களைப் போலவே இவை தயாரிக்கப்படும். அதேபோல அவை எப்படி பேக் செய்யப்பட்டிருக்கிறதோ அதைப் போல இவை பேக் செய்யப்பட்டிருக்கும். இவை தரத்தில் குறைந்தவை. நுகர்வோரைக் குழப்பும் விதமாக இத்தயாரிப்புகள் புழக்கத்தில் இருக்கும்.

வாகனங்களில் அடிக்கடி மாற்றும் ஸ்பார்க் பிளக், பிரேக் வயர், ஆயில் ஃபில்டர், ஏர் ஃபில்டர், முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள், வைபர்ஸ், ஸ்டார்ட்டர் மோட்டார், பேரிங், ஆயில் பம்ப், பிரேக் பேட், பிஸ்டர் ரிங்ஸ், உயவு எண்ணெய் (லூப்ரிகன்ட்) டியூப் போன்றவை போலியாக அதிகம் தயாரிக்கப்படுகின்றன. போலிகள் ரூ. 12 ஆயிரம் கோடி முதல் ரூ. 14 ஆயிரம் கோடி வரை விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு சக்கர வாகனங்களுக்கான போலி தயாரிப்புகளின் மதிப்பு பாதிக்கும் மேல் உள்ளது. அதாவது ரூ. 5 ஆயிரம் கோடி முதல் ரூ. 7 ஆயிரம் கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக விலை குறைந்த தயாரிப்புகள் பெரும்பாலும் இதுபோன்ற போலியான தயாரிப்புகளாகத்தான் இருக்கும்.

கடையின் விற்பனையாளர் விலை குறைந்த தயாரிப்பை அளிக்கிறார் என்றாலே அதில் வில்லங்கம் இருக்கிறது என்று உணர வேண்டும்.

கார் அல்லது மோட்டார் சைக்கிளாக இருந்தாலும் இதுபோன்ற தரம் குறைந்த போலியான உதிரி பாகங்களைப் பயன்படுத்துவது உங்களது பயணத்தை பாதிப்பதோடு விபத்துகளுக்கும் வழிவகுத்துவிடும்.

பாதிப்பு

போலியான பொருள்களை பயன்படுத்துவோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது நிச்சயம். அடுத்து புதிய பொருள் தயாரிப்பு, கண்டுபிடிப்புகளை இது பாதிக்கும். ஒரு பொருள் கண்டுபிடித்து அதன் பலனாகக் கிடைக்கும் வருமானம் நிறுவனத்துக்குக் கிடைக்காமல் போகும்.

அரசுக்கு வரி வருவாய் குறையும். ஏனெனில் பெரும்பாலும் இதுபோன்ற போலி பொருள்கள் கள்ளக் கடத்தல் மூலமாகவோ அல்லது போலியான ஆவணங்கள் மூலமாக சந்தையில் விற்பனைக்கு வருபவை. சுமார் 35 சதவீத போலி தயாரிப்புகளால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2,200 கோடி அளவுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

போலியான பொருள்கள் தயாரிப்பு எளிது. மேலும் இதற்கான மூலப் பொருள்கள் சீனாவிலிருந்து எளிதாகக் கிடைப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

போலிகளைத் தடுப்பது மற்றும் இவ்வித பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை.இதுவும் போலிகளின் பெருக்கத்துக்கு முக்கியக் காரணமாகும்.

லாபம் அதிகம்

அனைத்துக்கும் மேலாக போலிகள் மீதான லாபம் அதிகம். பொருள் தயாரிப்போருக்கும் லாபம். விற்பனை செய்வோருக்கும் ஒரிஜினல் தயாரிப்புகள் விற்பதைக்காட்டிலும் போலிகளுக்கு அளிக்கப்படும் கமிஷன் அதிகம். இத்தகைய தயாரிப்புகளுக்கான விலையை கடைக்காரரே நிர்ணயம் செய்வது மேலும் அவர்களுக்கு சாதகமான அம்சம். சில தயாரிப்புகளுக்கு 55 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை லாபம் கிடைக்கிறது. இதுவும் போலிகள் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.

சட்டப்படி போலிகளை ஒழிப்பதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஒழிக்க முடியாமலும் போகலாம். ஆனால் போலிகளை வாங்காமல் இருப்பது அவரவர் கைகளில்தான் உள்ளது.

விலை குறைந்த, அல்லது அருகாமையில் உள்ள கடைகளில் கிடைக்கிறது என்பதற்காக உதிரி பாகங்களை வாங்கினால் விபத்தை கை நீட்டி வரவேற்கிறோம் என்றுதான் அர்த்தம்.

தொடர்புக்கு: ramesh.m@thehindutamil.co.in

MCI could be dead;

MCI could be dead; new body may nurse medical education in India


The panel has firmed up the view that MCI should be scrapped to increase the number of medical colleges in the country for producing more doctors in view of growing demand for healthcare services, the source said.

Prime Minister's additional principal secretary P K Mishra and Niti Aayog CEO Amitabh Kant are also on board of the committee to look into the issue of poor regulation of medical education by MCI.

The three-member committee has proposed to set up an altogether new body with three pronged approach - career, enterprise and ethics.

Earlier this year, a parliamentary committee had called for revamping the MCI saying, it has failed in its role as a regulator which has led to a downfall in India's medical education system.

The committee even asked the government to exercise its constitutional authority and take decisive action to restructure and revamp the regulatory system of medical education and practice.

"Due to massive failures of the MCI and lack of initiatives on the part of the government in unleashing reforms, there is total system failure due to which the medical education system is fast sliding downwards and the quality has been hugely sidelined in the context of increasing commercialisation of medical education and practice," the report had said.

MCI has failed to create a curriculum that produces doctors suited to Indian context, specially in rural and poor urban areas, the panel had said.
It also failed to maintain uniform standards of undergraduate and postgraduate medical education.

"There is devaluation of merit in admission, particularly in private medical institutions due to prevalence of capitation fees, which make medical education available only to the rich and not necessarily to the most deserving," the Committee said.

MCI failed in setting up medical colleges in country as per need, resulting in geographical mal-distribution of medical colleges, with clustering in some states and absence in several others, acute shortage of medical teachers and abysmal doctor-population ratio, the panel said.



Also, the Council has failed to oversee and guide the continuing medical education in the country, leaving this important task in the hands of the commercial private industry.

It also failed to instill respect for a code of ethics in medical professionals and take disciplinary action against doctors found violating the code, the report said. PTI

First Published: Sunday, July 24, 2016 - 11:18

ஒரே வேலையில் அழுத்தமாக உணர்கிறீர்களா? #MondayMotivation #DailyMotivation

VIKATAN 

வாரத்தின் ஆறு நாட்களும் ஒரே வேலையில் மூழ்கி சோர்ந்து போகும் நபரா நீங்கள், அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். ஏதாவது ஒரு வேலையில் சிக்கி, முழுவதுமாக அதே வேலையில் ஈடுபட்டு வரும்போது ஒருகட்டத்தில் அந்த வேலை அப்படியே தடைபட்டு நின்று போக வாய்ப்புள்ளது. இது உங்கள் செயல்திறனை குறைப்பது மட்டுமின்றி உங்களை அடுத்தகட்டத்துக்கு நகராமல் நீண்ட நாட்கள் அதே இடத்தில் முடக்கிவிடும்.

இதுபோன்ற தருணங்களில் ஒருவர் இத்தகைய சிக்கலிலிருந்து முழுவதுமாக மீண்டு, புதுமையான விஷயங்களில் ஈடுபட, சில விஷயங்களை தொடர்ந்து ஒரு மாதம் செய்ய வேண்டும். அப்படி செய்தாலே, ஒருவர் புதுமையான மனிதராக மீண்டும் தன்னை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும்.

"ஒரே வேலையில் சிக்கிக் கொள்ளும் ஒருவருக்கு அவரது வயதும், பணிபுரியும் துறையும் தடையில்லை. முதலில் இரண்டு விஷயங்கள் உள்ளன. சில விஷயங்களை செய்ய வேண்டும், சில விஷயங்களை கட்டாயம் செய்யக்கூடாது. இந்த 30 நாட்களிலும் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்...

1.சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்

தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் தினசரி சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். உங்கள் சைக்கிள் பயணங்களில் உங்களை கவனம் சிதற வைக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் பயணத்தையும், நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். எந்த தொந்தரவும் குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை செய்ய பழகுங்கள்.


2.ஒரு நாளைக்கு 10000 ஸ்டெப்ஸ் நடைபயணம்!

ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10000 ஸ்டெப்ஸ் என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10000 ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். அதற்காகஒருவர் தினமும் 7.5 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும் என்பது இல்லை.உங்கள் வீட்டு மாடிக்கு ஏறுவது துவங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேண்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும்.

3.தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள்!

தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதே போல் 30 நாட்களும் புகைப்படம் எடுங்கள். உங்கள் மனநிலை முதல் நாளிலிருந்து தற்போது எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களை புதுமையாக சிந்திக்க வைக்க இந்த பழக்கம் மிகவும் உதவியாக இருக்கும். அது மிகப்பெரிய போட்டொகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது.


4.ஒரு நாவல் எழுதுங்கள்!

ஒரு நாவல் எழுதுங்கள் என்று கூறியவுடன் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். 'நான் ஒரு கணினி பொறியாளர்... நான் எப்படி நாவல் எழுதுவது?' என்று. ஒரு நாளைக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை 1667 வார்த்தைகளில் எழுத துவங்குங்கள் 30வது நாள் 50000 வார்த்தைகள் கொண்ட ஒரு நாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும்.

5. காதலிக்க பழகுங்கள்:

காதல் என்றவுடன் எதிர்பாலின ஈர்ப்பு என்ற அர்த்தம் இல்லை. உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். நீங்கள் செய்யும் சில கெத்தான விஷயங்களுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற‌ நேரங்களில் வேலையை பற்றிய‌ நினைவு இல்லாத உற்சாகமான வேலைகளில் நாட்டம் செலுத்துங்கள்.நண்பர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதிற்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள்.

எதை செய்யக் கூடாது?

1. 30 நாட்களில் சமூக வலைதளங்களில் இயங்காதீர்கள்,

2. காஃபைன் நிறைந்த பானங்களை அருந்தாதீர்கள்.

3. தொலைகாட்சி பார்ப்பதை ஓரளவுக்கு தவிர்த்துவிடுங்கள்.

4. வேலையை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

5. அலுவலக நேரம் தவிர அதிக நேரம் அலுவலகத்தில் இருக்காதீர்கள்.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
உங்கள் திங்கட்கிழமை எப்படி? ஒரு எனர்ஜி க்விஸ் #WelcomeMonday

ஹாய்! ஃப்ரெண்ட்ஸ் திங்கட்கிழமை காலை உங்களுக்கு நேற்றே ஃபேஸ்புக்கில் உங்கள் நன்பர் யாரவது ஒருவர் நாளைக்கு மன்டே என பீதியை கிளப்பி இருக்கலாம். அல்லது இன்று காலை மன்டே மோட்டிவேஷன் என்ற ஹாஷ்டேக்குடன் உங்களை துள்ளி ஓட வைத்திருக்கலாம். உங்கள் மன்டே கபாலி ரஜினி போல மகிழ்ச்சி மன்டேவா? இல்லை என்ன கொடுமை சார் இதுவா? உங்களது மன்டே எப்படி இருக்கும் என்பதை ஒரே ரஜினி பன்ச் சொல்லும்...நீங்களே பாருங்களேன்...ஒரு செல்ஃப் டெஸ்ட்... How is your Monday Morning? - Self test #MondayMotivationHow is your Monday Morning? - An Energy Quiz #WelcomeMonday | உங்கள் திங்கட்கிழமை எப்படி? ஒரு எனர்ஜி க்விஸ் #WelcomeMonday - VIKATAN

இவையெல்லாம் உங்களை பழைய நிலைக்கு எடுத்து செல்பவையாக இருந்துவிடும். உங்களை புதுமையாக சிந்திக்க வைக்க இவற்றை கொஞ்சம் தவிர்க்க பழகுங்கள். இதனை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, நீங்கள் நினைத்த புதுமையான உங்களை 30 நாட்களில் நீங்களே தயார்படுத்தி இருப்பீர்கள்.

இதனை சரியாக பின்பற்றினால், 30 நாட்களுக்குள் நீங்கள் சரியான பாதையில் பயணிக்க, புதுமையாக உணர, அடுத்தகட்டத்து உங்களை நகர்த்த உதவியாக இருக்கும்.

-ச.ஸ்ரீராம்

Sunday, July 24, 2016

கபாலி - ஒரு கெட்ட கனவு!

dinamani-epaper

ஆயிரம் ரூபாய், ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் என்று டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் திரைப்படம் பார்ப்பதற்காக விடுமுறையே அளிக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்பட்ட நிலையில், ரஜினிகாந்தின் "கபாலி' திரைப்படம் ஏதோ சிசில் பி. டெமிலியின் "பைபிள்'; வில்லியம் வைலரின் "பென்ஹர்'; ஜோசப் மான்கிவிஷின் "கிளியோபாட்ரா', பிரான்சிஸ் போர்டு கொப்போலாவின் "காட்பாதர்', ஜேம்ஸ் கேமரோனின் "டைடானிக்'; ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் "ஜுராஸிக் பார்க்' வரிசையில் சர்வதேச அளவில் பேசப்படப் போகிற "மேக்னம் ஓபஸ்' என்று எதிர்பார்த்துப் போய் அமர்ந்தால், பா. ரஞ்சித் இதற்கு முன் இயக்கிய "மெட்ராஸ்' திரைப்படம் அளவுக்குக்கூட ரசிகர்களைத் திருப்திப்படுத்தாததாக அமைந்திருக்கிறது. இந்தத் திரைக்கதையில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் எதற்கு?

ரஜினிகாந்தின் தோற்றமும் சரி, ரசிகர்களைச் கவர்ந்திருக்கும் அவரது இயல்பான சுறுசுறுப்பும் சரி இப்போது "மிஸ்ஸிங்'. இதை அவரும், இயக்குநரும் உணர்ந்து செயல்பட்டிருந்தால் இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கத் துணிந்திருக்க மாட்டார்கள்.

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் என்பதால், பாராட்டுப் பெற்ற பா. ரஞ்சித் என்கிற இயக்குநரை, "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தை வைத்து அவரது இமேஜும் கெடாமல், இவரது "லோ பட்ஜெட்' அடித்தட்டு சிந்தனையும் மாறாமல் படமெடுக்கச் சொன்னதன் விளைவு, ரஜினி ரசிகர்களையும் திருப்பிப்படுத்தாத, நல்ல சினிமா பார்த்த திருப்தியும் ஏற்படாத ஒரு அரைவேக்காட்டு, கலவையாகக் "கபாலி' உருவாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக அரைத்துக் கொண்டிருக்கும் அரதப் பழசான நல்ல தாதாவுக்கும் கெட்ட தாதாவுக்குமான மோதல்தான் கதை. அந்த தாதாக்களின் கதையை அப்படியே படமாக்கினால் "முற்போக்குவாதி' பட்டம் கிடைக்காது என்பதனால், அதில் தமிழ் உணர்வையும், ஜாதிக் கொடுமையையும் கலந்து படமாக்க முற்பட்டிருக்கிறார் பா.ரஞ்சித்.

மலைகளாகக் கிடந்த மலேசியாவை சீராக்கி பொன் விளையும் பூமியாக மாற்றிய தமிழர்களுக்குத் தலைமை தாங்குகிறார் கபாலியாக வரும் ரஜினி. அந்த முன்னேற்றம் பிடிக்காத மலாய் முதலாளிகள் ரஜினியையும், அவரது குடும்பத்தையும் சிதறடிக்கிறார்கள். பின் அந்த முகாமுக்குள் நடக்கும் தீப்பொறி உரசலில் வெடித்துக் கிளம்பி, "தமிழன் முன்னேறினா பிடிக்காதா..! ஒரு தமிழன் ஆளக் கூடாதா? நான் ஆளப் பிறந்தவன்டா...' என ரஜினி தரும் பதிலடிதான் கபாலியின் கதைக் களம்.

தமிழனுக்கு சம்பள உயர்வு பெற்றுத்தரும் கபாலி, அங்கிருக்கும் தமிழர் தலைவரான நாசருக்குப் பின் தலைமை இடத்துக்கு வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாய் தன் மனைவி ராதிகா ஆப்தேவை பறிகொடுத்துவிட்டு சூழ்ச்சி வலைகளில் சிக்கி சிறைக்குப் போகும் அவர், 20 வருடங்களுக்குப் பின் திரும்புகிறார். அதன் பின் நடக்கும் அரசியலும், அதைச் சுற்றி நடக்கும் ஆட்டங்களும்தான் கதை. சில உணர்வுப்பூர்வமான பக்கங்கள் இருப்பது மட்டுமே பொறுமை இழக்காமல் நம்மை உட்கார வைக்கின்றன.

சிறைக்குள்ளிருந்து 20 வருடங்கள் கழித்து வெளியே வரும் கபாலியைப் பார்த்ததும் நிமிர்ந்து அமர்ந்தது தவறு. விறுவிறுப்பாக அடுத்த கட்டம் ஆரம்பிக்கப் போகிறது என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு கட்டத்திலும், பொங்கிவரும் பாலில் தண்ணீரை ஊற்றுவதுபோல திடீர் தொய்வை வலுக்கட்டாயமாக ஏற்படுத்தும் திரைக்கதை அமைப்பு. தாதாக்களின் கிராஸ் ஃபயரில் பலியாகும் அப்பாவி பொதுமக்களின் கதிதான் ரசிகர்களுக்கும்!

கோட் சூட், கூலிங் கிளாஸ், ஒரு கத்தி, பல துப்பாக்கிகளைக்கொண்டு அதைச் சாதிப்பதுதான் ரஜினி ஸ்பெஷல். அது மட்டுமே, ரஜினி இல்லையே. ஆக்ஷனும் இருந்தால்தானே அது ரஜினி. ரஜினியின் பேச்சில் வேகம் இல்லை. நடையில் சுறுசுறுப்பில்லை. நடிப்பில் அவருக்கே உரித்தான தனித்தன்மை இல்லை. அவரை ரொம்பவும் சிரமப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு இடத்தையும் "மகிழ்ச்சி' என்று சொல்லி முடித்து வைக்கும் ரஜினியின் உச்சரிப்பில், அதற்குப் பின் சிலபல இடங்களில் "மகிழ்ச்சி' என்பது மட்டுமேதான் ஒலிக்கிறது. அப்படிப் பேசாத சமயம், ஒன்று சுடுகிறார்... அல்லது நீண்ட வசனங்களைப் பேசுகிறார்.

மாறிப்போன மலேசியாவை பிரமிப்போடு பார்க்கிற காட்சி. அந்த வெண்தாடியும், அந்த தாடிக்குள்ளிருந்து அவ்வப்போது கசிந்து வரும், அந்த அலட்சிய சிரிப்பும், பழைய "பாட்சா' ரஜினியுடன் ஒப்பிட்டுப் பார்த்து வேதனைப்பட வைக்கிறது.

மலேசியாதான் கதைக்களம். ஆனால், மலேசியாவை ஒழுங்காகக் காட்டியிருக்கிறார்களா என்றால் இல்லை. கோலாலம்பூரில் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தை, சென்னை என்றால் அந்தக் காலத்தில் எல்.ஐ.சி. கட்டடத்தையோ, சென்ட்ரல் ரயில் நிலையத்தையோ காட்டுவதுபோலக் காட்டுகிறார்கள். அவ்வளவுதான்.

மலேசியா, சென்னை, தாய்லாந்து என்று அடுத்தடுத்து கதையை நகர்த்திச் செல்லும், "செயின் ரியாக்ஷன்' எத்தனை சுவாரஸ்யமானதாக அமைந்திருக்க வேண்டும்? சர்வதேச நிழல் உலக தாதாக்கள் ஒவ்வொரு சவாலையும் எவ்வளவு மதியூகத்துடன் கடக்க வேண்டியிருக்கும்? ஆனால், ரஜினி கையாளுகிற ஒவ்வொரு சவாலும்... அடப் போங்க சார்... சலிப்பூட்டுகிறது...

வழக்கமாக ரஜினிக்கு இணையான ஆளுமைகள் அவரின் படத்தில் இருப்பார்கள். அப்படி இந்தப் படத்தில் யாரும் இல்லாதது பெரும் குறை. தன்ஷிகா, கிஷோர், ஜான் விஜய், கலையரசன், தினேஷ், ரித்விகா, மைம் கோபி என காட்சிகள் எங்கும் தெரிந்த முகங்கள். இருந்தும், செயற்கைத்தனம்.

படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் யாருமே கதையுடன் பொருந்திப்போகவில்லை. "மெட்ராஸ்' படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் தவிர எல்லோரும் இதில் நடித்துள்ளனர். தனது முந்தைய படத்தில் நடித்தவர்களை இந்தப் படத்திலும் பயன்படுத்த நினைப்பதைப் பாராட்டலாம். அதற்காக பொருத்தமில்லாத கதாபாத்திரங்களில் அவர்களை நடிக்க வைத்தது சரியா...?

ராதிகா ஆப்தே வரும் ஒரு சில இடங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது. ரஜினியும், ராதிகாவும் சந்தித்துக் கொள்கிற அந்த காட்சி உருக்கம். "உன் கருப்பு கலரை அப்படியே எடுத்து பூசிக்கணும்' என்று பேசுகிறபோது ராதிகாவின் கண்கள் உதிர்க்கிற வெட்கம் பேரழகு.

பின்னணி இசையில், "நெருப்புடா தீம்' மட்டுமே ஒலிக்கிறது. படம் முழுக்கவே சந்தோஷ் நாராயணனை நினைக்க வைப்பது அது மட்டுமேதான். "பாபா' தோல்விப்படமாக இருந்திருக்கலாம். ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கவிஞர் வாலியும், கவிஞர் வைரமுத்துவும் எழுதிய அத்தனை பாடல்களும் ரசிகர்களைக் கட்டிப் போட்டன. பாடல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தன. இதில் அப்படிச் சொல்ல ஒரு பாட்டுக்கூடத் தேறாது.

வசனங்களில் இயல்பு இருந்தாலும், தனித்துவம் இல்லை. சம்பந்தமே இல்லாமல் திடீரென்று "நான் ஆண்ட பரம்பரை கிடையாதுடா. ஆனால், ஆளப்பிறந்தவன்டா' என்று வசனம் பேசுகிறார் கபாலியாக வரும் ரஜினி. கோட் சூட் போட்டா உங்களுக்கு ஏன் எரிகிறது என்று கேட்பது சரி, அதற்காக மகாத்மா காந்தியை ஏன் ஏளனப்படுத்திக் கொச்சைப்படுத்த வேண்டும் என்று புரியவில்லை.

ஒரு கலைஞன் எந்த வயதிலும், நிலையிலும் நடிக்க விரும்புவதிலும், நடிப்பதிலும் தவறில்லை. ஆனால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டிய இயக்குநர் பா. ரஞ்சித் அல்ல. அவரை நன்றாகத் தெரிந்திருக்கும், அவரை வைத்துப் பல நல்ல படங்களை இயக்கி இருக்கும் எஸ்.பி. முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார், மகேந்திரன் போன்றவர்கள்.

இயக்குநர் பா. ரஞ்சித்தின் களம் வேறு. பார்வை வேறு. எந்தவித இமேஜ் சுமையும் இல்லாத நடிக - நடிகையர்தான் அவரது படங்களுக்குப் பொருத்தமானவர்கள். குறைந்த பட்ஜெட் படங்கள்தான் அவரது களம். அவரை ரஜினியைக் கதாநாயகனாக வைத்துப் படம் இயக்கச் சொன்னது, குருவி தலையில் பனங்காயை வைத்த கதையாகி விட்டிருக்கிறது.

எல்லாம் போகட்டும். எந்த ஒரு முடிவும் இல்லாத ஒரு உப்புச்சப்பே இல்லாத கிளைமாக்சுடனா ஒரு ரஜினிகாந்தின் படத்தை முடிப்பது? இது ரஜினிகாந்த் படமல்ல, பா. ரஞ்சித் படம் என்றால், இத்தனை பெரிய பட்ஜெட்டிலா இந்தப் படத்தை எடுப்பது?

வெறும் கற்சிலையைப் பார்க்கக் கோயில்களில் சிறப்பு தரிசன டிக்கெட் வசூலிக்கும்போது, மனிதக் கடவுளான ரஜினி படத்திற்கு ரூ.1,000 வசூலிப்பதில் தவறில்லை என்று நியாயப்படுத்துகிறீர்களாமே, ரஞ்சித்? சபாஷ்! என்னே உங்களது முற்போக்கு சிந்தனை! ரஜினியை மனிதக் கடவுளாகக் கருதும் நீங்கள், அவரை அவரது பாணியிலேயே நடிக்க வைத்துப் படம் இயக்கி இருக்கலாமே. பிறகு எதற்காக "ரஞ்சித் படம்' என்கிற போலித்தனம்?

மொத்தத்தில் வழக்கமான ரஜினிகாந்த படமாகவும் இல்லாமல், பா. ரஞ்சித் படமாகவும் இல்லாமல், தொய்வில்லாத விறுவிறுப்பான திரைக்கதையும் அமைக்கப்படாமல், துண்டு துண்டான காட்சிகளை வெட்டி ஒட்டியதுபோல உருவாக்கப்பட்டிருக்கிறது "கபாலி' திரைப்படம்.

அட்டகாசமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மலேசிய நடிகர் வின்ஸ்டன் சாவோ அல்ல இந்தப் படத்தின் வில்லன். ரஜினியின் மேஜிக் துளிக்கூட இல்லாத கதைதான் கபாலிக்கு வில்லன்.

நமது மனத்திரையில் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டாராகவே தொடரவிடுங்கள். அவரை இனியும் நடிக்கச் சொல்லி சிரமப்படுத்தி, அவருக்கு இருக்கும் இமேஜையும், ரசிகர்களின் பேரன்பையும் வேரறுத்து விடாதீர்கள். "கபாலி' ஒரு கெட்ட கனவாக இருந்துவிட்டுப் போகட்டும்!

செப்டம்பர் 30–ந்தேதிக்குள் கருப்பு பணத்தை தெரிவிக்காவிட்டால் சும்மா விடமாட்டோம் பிரதமர் மோடி எச்சரிக்கை



புதுடெல்லி,


கருப்பு பண விவரங்களை செப்டம்பர் 30–ந்தேதிக்குள் தெரிவிக்காதவர்களை வருமான வரித்துறை சும்மா விடாது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.

கருப்பு பணம்

கருப்பு பண விவரங்களை, தானாக முன்வந்து தெரிவித்து, சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 4 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 1–ந்தேதி தொடங்கிய இத்திட்டம் செப்டம்பர் 30–ந்தேதி முடிவடைகிறது.

இந்த காலகட்டத்தில், தங்களது கருப்பு பண விவரங்களை அளிப்பவர்கள், 45 சதவீத வரி மற்றும் அபராதம் செலுத்தி, வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால், செப்டம்பர் 30–ந்தேதிக்குள் கருப்பு பண விவரங்களை அளிக்காதவர்கள் மீது, அதன்பிறகு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மோடி எச்சரிக்கை

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நகை வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மோடி, கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அவர் பேசியதாவது:–

கணக்கில் காட்டப்படாத பணத்தில் பெரும்பகுதி, நகைகளிலும், ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்யப்படுகிறது. சிலர் பெருமளவு பணத்துடன் நகை வியாபாரிகளை தேடிச் செல்வதை நான் அறிவேன். அவர்கள், செப்டம்பர் 30–ந் தேதிக்குள், தங்களிடம் உள்ள கருப்பு பண விவரங்களை அளித்து, தங்களை தூய்மையானவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்யாவிட்டால், செப்டம்பர் 30–ந்தேதிக்கு பிறகு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சும்மா விடாது

வரி ஏய்ப்பு செய்தவர்கள், கடந்த காலங்களில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே நடவடிக்கையை செப்டம்பர் 30–ந்தேதிக்கு பிறகு எடுக்கும் நிலைக்கு மத்திய அரசை தள்ளிவிடாதீர்கள். அந்த பாவத்தை நான் செய்ய விரும்பவில்லை.

செப்டம்பர் 30–ந்தேதிக்குள், கருப்பு பண விவரத்தை அளிக்காத யாரையும் வருமான வரித்துறை சும்மா விடாது.

நிம்மதியாக தூங்கலாம்

அரசுக்கோ, வருமான வரித்துறைக்கோ எதற்கு பயப்பட வேண்டும்? எனவே, கருப்பு பண விவரத்தை அளித்து விடுவது நல்லது. அதன்பிறகு நிம்மதியாக தூங்கலாம்.

வீடுகளிலும், கோவில்களிலும் தங்கம் சும்மா கிடக்கிறது. வீடுகளில் உள்ள தங்கத்தை ஆண்டுக்கு இரண்டு, மூன்று தடவை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

எனவே, அந்த தங்கத்தை நீங்கள் அரசிடம் முதலீடு செய்யலாம். தேவைப்படும்போது, எடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரமும் முன்னேறும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

NEWS TODAY 25.09.2024