Wednesday, August 3, 2016

சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்தார்; ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நீடாமங்கலம்,

சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு குரு இடம் பெயர்ந்ததையொட்டி நேற்று ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குருப்பெயர்ச்சி விழா

ஆண்டு தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பகவான் சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு நேற்று காலை 9.30 மணிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி குருபரிகாரத்தலமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 3.30 மணிக்கு 2-வது கால யாகசாலை பூஜைகளும், தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.

மகாதீபாராதனை

இதனையடுத்து கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், சனீஸ்வரபகவான் ஆகிய சாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதன்பின்னர் குரு பகவானுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டது. சரியாக 9.30 மணிக்கு குருபகவான் பெயர்ச்சியான நேரத்தில் குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணிகளில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

திட்டை கோவில்

இதேபோல் பிரசித்தி பெற்ற தஞ்சையை அடுத்த திட்டை என்ற தென்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலிலும் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவையொட்டி குருபகவானுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குருப்பெயர்ச்சியையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருவொற்றியூர்

திருவொற்றியூர் குரு தட்சிணாமூர்த்தி கோவிலில் மட்டும் குருபகவான் வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதால் வட குருஸ்தலம் என்று அழைக்கப்படுகின்றது.

குருப்பெயர்ச்சியையொட்டி அங்கு கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கிய லட்சார்ச்சனை பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு நிறைவு பெற்று குரு தட்சிணாமூர்த்திக்கு 108 மூலிகைகள் மற்றும் ஹோம திரவியங்கள் நிறைந்த கலச நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இங்கு வெளிமாவட்டங்களிலும் இருந்து வந்த பக்தர்கள் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்தனர். பாடி திருவல்லீசுவரர் கோவிலிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...