Wednesday, August 31, 2016

காலையில் தூய்மைப் பணி; மாலையில் கலைப் பணி- தவில் இசையில் அசத்தும் துப்புரவுத் தொழிலாளர்




ஒய்.ஆண்டனி செல்வராஜ்

Return to frontpage

ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். அதைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தவர்கள் அத்துறைகளில் பிரகாசிக்கின்றனர். வாய்ப்பு கிடைக்காதவர்கள் அவற்றை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். சிலர் விரும்பிய துறை கிடைக்காவிட்டாலும் கிடைத்த பணியை ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.

அப்படி ஒரு அற்புதமான கலைஞர்தான் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரியும் இளங்கோவன் (45). மதுரை வடபழஞ்சி யைச் சேர்ந்த இவர் சிறந்த தவில் வித்வானாகவும் இருக்கிறார். காலை நேரங்களில் மதுரை வீதி களில் குவியும் குப்பை, தேங்கும் சாக்கடை நீரை அப்புறப்படுத்தும் துப்புரவு தொழிலாளியாக இருக்கும் இளங்கோவன், மாலையில் நெற்றி யில் சந்தனப் பொட்டு, பட்டு வேட்டி, சட்டை சகிதமாக தவில் வித்வானாக மாறிவிடுகிறார். கோயில் திருவிழாக்கள், திருமண விழாக்களில் நடைபெறும் இசைக் கச்சேரிகளில் இவரது தவில் வாசிப்புக்கு ரசிகர்கள் அதிகம்.

விடுமுறை நாட்களில் மும்பை, கேரளம், திருச்செந்தூர், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நடை பெறும் இசைக் கச்சேரிகள், திருமணம், கோயில் விழாக்களுக்கு இவர் சென்று வருகிறார். தவில் வாசிப்பில் ஒரு துப்புரவுத் தொழிலாளி சாதித்து வருவது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து இளங்கோவன் கூறியது: எனது தந்தையும், அவரது தந்தையும தவில் வித்வான்தான். நான் 4-வது தலைமுறையாக தவில் வாசிக்கிறேன். என்னைப்போல எனது தந்தையும் துப்புரவுத் தொழி லாளியாக இருந்தே காலமாகி விட்டார். என்னுடன் பிறந்த தம்பி கள் இருவரும் அப்போது சிறியவர் கள். குடும்ப பாரம் காரணமாக எனது தவில் வித்வான் ஆசையை மூட்டை கட்டிவிட்டு குடும்ப கஷ்டத்துக்காக வும், அப்பா இறந்ததால் அரசு வேலை கைவிட்டு போய்விடக் கூடாது என்பதற்காகவும் வாரிசு அடிப்படையில் துப்புரவு வேலையில் சேர்ந்தேன்.

தவில் வித்வானாக ஆசைப்பட்ட என்னால் ஆரம்ப காலத்தில் துப்புரவுப் பணியில் முழு ஈடுபாட்டு டன் பணிபுரிய முடியவில்லை. தவில் வாசிப்பதையும் விட முடிய வில்லை. இதனால், மன அமைதிக் காக மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தவில் வாசிக்க ஆரம்பித்தேன். அதில் எனக்கு ஒரு மனநிறைவு கிடைத்தது. துப்புரவு பணியிலும் மரியாதை, பிடிப்பு ஏற்படத் தொடங்கியது. தற்போது வேலை நாட்களில் வேலைக்கு சரியாக போயிடுவேன். விடுமுறை நாட்களில் கச்சேரிக்கு செல்கிறேன்.

ஒருமுறை சென்றால் 2 ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். துப்புரவு வேலைக்கு செல்கிறபோது தவில் வித்வான் என்பதை மறந்துவிடுவேன்.

அந்த வேலைக்கு தகுந்தாற்போல் செல்வேன். கச்சேரிகளுக்கு செல்லும்போது அதற்கு தகுந்தாற்போல் மாறி விடுவேன் என்றார்.

கூடுதல் பொறுப்பு இருக்கிறது

இளங்கோவன் மேலும் கூறும்போது, "நான் தவில் வித்வான் என்பது ஆரம்பத்தில் என்னுடன் பணிபுரிகிறவர்களுக்கு தெரியாது. ஒருமுறை என்னுடைய துப்புரவு ஆய்வாளர், எனது தவில் கச்சேரியை உள்ளூர் கேபிள் டிவியில் பார்த்துள்ளார். சக ஊழியர்களிடம் என்னைப் பற்றி விசாரித்ததாக கேள்விப்பட்டேன். அவர் திட்டுவாரோ என்ற பயத்துடன் மறுநாள் வேலைக்குச் சென்றேன். ஆனால், அவரோ என்னைப் பார்த்து பிரமித்து, உனக்குள்ளே இவ்வளவு திறமையா, எங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டாயே என உரிமையோடு கண்டித்தார். சக தொழிலாளர்கள் முன்னிலையில் என்னை அழைத்துப் பாராட்டினார்.

அன்று முதல் துப்புரவு தொழில் மீது கூடுதல் மதிப்பும், பொறுப்பும் ஏற்படத் தொடங்கியது. இந்த தவில் வாசிப்பு தொழிலில் 6 மாதம் வேலை கிடைக்கும், மற்ற 6 மாதங்கள் சும்மா இருக்க வேண்டும். எனக்கு அரசு வேலை இருப்பதால் பிரச்சினை இல்லை. மற்ற கலைஞர்கள் நிலையோ பரிதாபம்.

குடும்ப கஷ்டத்துக்காக மோதிரம், சங்கிலி, தோடு, தவில், நாதஸ்வரம் உள்ளிட்டவற்றை அடகு வைப்பார்கள். மீண்டும் வருமானம் வந்ததும் திருப்புவார்கள். மனைவி, குழந்தை என நான் ஒரு குறுகிய குடும்ப வட்டத்துக்குள் இருப்பதால் என்னால் துப்புரவு வேலையை உதறிவிட்டு முழு நேரமும் தவில் வாசிப்பில் இறங்க தயக்கமாக உள்ளது" என்றார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...