Saturday, August 27, 2016

கற்பை நிர்ணயிக்க நாம் யார்?

கற்பை நிர்ணயிக்க நாம் யார்?

Return to frontpage


Inline image 1

கன்னித்தன்மைப் பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை

ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்களின் ஒழுக்கத்தைச் சந்தேகப்படுவது, எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அரங்கேற்றப்படும் கொடூரம். பெண்களின் ‘கற்பை’ச் சோதனையிடுவதும் நிர்ணயிப்பதும், அதைக் காரணமாகச் சொல்லி அவர்களின் வாழ்க்கையையே சிதைப்பதும் இன்னமும் பல இடங்களில் நடப்பதுதான் இன்னும் வேதனை!

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தின் நாசிக்கில், போலீஸ் வேலையில் சேரப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த 25 வயதுப் பெண் ஒருவருக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளைக்கு இது இரண்டாவது திருமணம். இருவரும் ‘கஞ்சர்பாத்’ என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றும் சமூகம் அது. கண்காணிக்கவும், தண்டனை வழங்கவும் ‘சாதிப் பஞ்சாயத்து’ உள்ளது. அதை மீறி யாரும் காவல்துறைக்கோ நீதிமன்றத்துக்கோ செல்ல முடியாது. திருமணமான அன்றே தனது மனைவியை விவாகரத்து செய்தார் அந்த மனிதர், மனைவி கன்னித்தன்மை இழந்தவர் என்ற புகாருடன். அவருக்குத் துணை நின்றது, அச்சமூகத்தின் விநோதமான ‘விதிமுறை’.

அந்தச் சமூகத்தில் பெண்களின் கன்னித்தன்மைக்கு ‘சாதிப் பஞ்சாயத்து’அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. முதலிரவின்போது, தம்பதிகள் இருக்கும் அறைக்கு வெளியில் பஞ்சாயத்தார் காத்திருப்பார்கள். வெண்மையான துணி விரிப்பின் மீதுதான் முதலிரவு நடக்கும். அவர்களைப் பொறுத்தவரை, துணிவிரிப்பில் படும் ரத்தக் கறைதான் மணப்பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபிக்கும் சோதனை. உறவின்போது மனைவிக்கு ரத்தம் வரவில்லை. எனவே, அவள் ‘கன்னித்தன்மை அற்றவள்’ என்றார் அந்த நபர். அவருக்கு இது இரண்டாவது திருமணம். இரண்டாவது மனைவியும் கன்னியாகத்தான் வேண்டும். என்ன புனிதம் பாருங்கள்!

கண்டுகொள்ளப்படாத கண்ணீர்

தான் கன்னிதான் என்றும், கடுமையான உடற்பயிற்சி காரணமாக உடலில் மாற்றம் ஏற்பட்டு ரத்தம் வராமல் இருந்திருக்கலாம் என்றும் கதறினார் அந்தப் பெண். அதைக் கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை. தாலி கட்டிய ஒரே நாளில் திருமணத்தை ரத்து செய்துவிட்டது பஞ்சாயத்து. அடுத்த நாள், போலீஸில் புகார் செய்ய மணப் பெண்ணும் அவர் தாயாரும் தயாரானபோது, சாதிக் கட்டுப்பாட்டுக்குப் பயந்த அப்பெண்ணின் தந்தை, அவர்களிடமிருந்த செல்பேசியைப் பிடுங்கிக்கொண்டு இருவரையும் அறையில் பூட்டிவைத்தார். சம்பவத்தைக் கேள்வியுற்ற பெண்கள் அமைப்பு மூலம்தான், விஷயம் வெளியில் வந்தது.

கற்பு என்பது மனம் தொடர்பானது. கன்னித்தன்மை என்பது உடல் சம்பந்தப்பட்டது. தன் விருப்பம் இல்லாமல், சூழ்நிலை காரணமாகப் பலாத்காரம் செய்யப்பட்டவரைக் கற்பிழந்தவராகக் கருத முடியாது. கற்பும் கன்னித்தன்மையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அதனால்தான் ‘கற்பு நிலை என்று சொல்லவந்தார் / இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்றார் பாரதி. ஆனால், கற்பும் கன்னித்தன்மையும் பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று பொதுப் புத்தியில் உறைந்துபோயிருக்கிறது.

‘கஞ்சர்பாத்’ சமூகத்தில் மட்டுமல்ல, பல சமூகங்களில் இந்தக் கொடூரமான முட்டாள்தனம் பின்பற்றப்படுகிறது. சோதனையில் தோல்வியுறும் பெண்ணின் திருமணம் உடனடியாக ரத்து செய்யப்படும். அவர் யாருடன் முதல் உறவு கொண்டார் என்று கேட்டு, அவரைச் சித்ரவதையும் செய்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை கன்னிப் பெண் என்றால், முதல் உறவின்போது ரத்தம் வர வேண்டும். சைக்கிள் ஓட்டுவதன் மூலமோ அல்லது உடற்பயிற்சியின்போதோ கன்னித்திரை கிழியும் என்பதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஏற்கெனவே, உறவுகொண்டதாக ஒப்புக்கொண்டால், அந்தப் பெண்ணின் தந்தைக்குப் பஞ்சாயத்து அபராதம் விதிக்கும்.

இதுதொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாநில போலீஸாருக்கு மகாராஷ்டிர பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகைமுரண் என்னவென்றால், இந்தியாவிலேயே முதன்முதலாக, சமூகப் புறக்கணிப்புக்கு எதிராகவும், சாதிப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும் 2016-ல் சட்டம் நிறைவேற்றியது மகாராஷ்டிர மாநிலம்தான். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, சட்டத்துக்குப் புறம்பான இது போன்ற அமைப்புகளுக்கும், மனிதத்தன்மையே இல்லாத விதிகளுக்கும் முடிவு கட்டப்படலாம்.

அநாகரிகம்

2013-ல் மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவராஜ் சிங் சவுஹான் தலைமையில், ‘கன்யா தான் யோஜனா’ என்ற திட்டத்தின்படி 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. அப்போது, அப்பெண்களில் பலர், மாவட்ட அதிகாரிகளால் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 2009-லும் இதே போன்ற சம்பவம் நடந்திருக்கிறது.

இந்தியாவில், சமீபகாலம் வரை பாலியல் வல்லுறவு வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், ‘கன்னித்தன்மை அற்றவர்கள் உறவுக்குச் சம்மதித்திருக்கலாம் என்ற அனுமானம் தவறானது. எனவே, கன்னித்தன்மை பரிசோதனையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று 2013-ல் பி.எஸ்.சவுஹான் மற்றும் எம்.எம்.கலிபுல்லா ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு சொல்லிவிட்டது. ஆனாலும், சில நீதிமன்றங்கள் கன்னித்தன்மை பரிசோதனையைப் பின்பற்றுகின்றன.

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களிடம் அவர்களது கன்னித்தன்மையை உறுதிசெய்ய பெண்களின் பிறப்பு உறுப்பில் நடத்தப்படும் இரு விரல் சோதனை அறிவியல் பூர்வமற்றது என்று கூறி அதைத் தடைசெய்தது மத்திய சுகாதார அமைச்சகம்.

பல நாடுகளில் கன்னித்தன்மை பரிசோதனை உள்ளது. பெரும்பாலும் பெண்களின் கன்னித்தன்மை குறித்துச் சந்தேகம் எழுப்புவது கணவர்கள்தான். சில நாடுகளில் அரசுத் துறைகளே அந்தக் கேள்வியைக் கேட்கின்றன. தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில், ஒவ்வொரு வருடமும் ‘ரீட் டான்ஸ்’ என்ற அரை நிர்வாணக் கலை நிகழ்ச்சி நடக்கும். அதில் கலந்துகொள்ளப் பெண்கள் கன்னித்தன்மை சான்றிதழ் கொடுக்க வேண்டும். 2016-ம் ஆண்டு புதிய விதியின்படி, இந்தோனேசிய ராணுவத்தில் சேர, ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுவரை அந்நாட்டு போலீஸில் பெண்கள் சேர கன்னித்தன்மை சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. சர்வதேச மனித உரிமை இயக்கம் ஆட்சேபணை செய்ததால் இந்த நிபந்தனை நீக்கப்பட்டது.

பட்டியல் இன்னும் முடியவில்லை. ஈரானில், ஏடெனா ஃபர்கடானி என்ற கார்ட்டூனிஸ்ட், தன் ஆண் வழக்கறிஞருடன் கைகுலுக்கினார் என்ற குற்றச்சாட்டின்பேரில், கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 1970-களில் திருமண விசாவில் பிரிட்டனுக்கு வந்த வெளிநாட்டுப் பெண்களுக்கு அந்த நாட்டு அரசு கன்னித்தன்மை பரிசோதனை நடத்திய வரலாறு உண்டு.

பெண்கள் உலகமெங்கும், எல்லாத் துறைகளிலும் பல தடைகளை உடைத்து முன்னேறி நாட்டை ஆள்கிறார்கள். இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். எத்தனையோ சாதனைகளைச் செய்துவருகிறார்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது, தங்கள் ஒழுக்கத்தை நிரூபிக்க இப்படியெல்லாம் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். கன்னித்தன்மை பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை என்பதைச் சமூகம் உணர வேண்டும். இது அவர்களது தனி உரிமையில் தலையிடும் விஷயம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், இதற்கெனத் தனியான சட்டமோ அல்லது சிறப்புச் சட்டமோ தேவையில்லை. இருக்கும் சட்டங்களின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். அதைச் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, மக்களின், சமுதாயத்தின் பொறுப்பும்கூட!

- என்.ரமேஷ், வழக்கறிஞர்.

தொடர்புக்கு: nrameshadvocate@gmail.com

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...