Friday, November 11, 2016

அறிவித்தபடி இயங்காத ஏடிஎம் மையங்கள்: அவதிப்படும் பொதுமக்கள்


சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஏடிஎம் மையத்தின் முன் திரண்டிருந்த மக்கள் | படம்: எல்.சீனிவாசன்.

இரு நாட்களுக்குப் பிறகு ஏடிஎம் மையங்கள் நாடு முழுவதும் இன்று முதல் (11-ம் தேதி) இயல்பாக இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் விசாரித்தவரை நிலைமை தலைகீழாக இருக்கிறது.

பெரும்பாலான ஏடிஎம்-கள் இயங்காததால் மக்கள் பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர். அன்றாட அத்தியாவசியச் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் சாமானிய மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஐஸ்ஹவுஸ் போன்ற பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் ஏதும் திறக்கவில்லை. சென்னை பெரம்பூர் பகுதியில் ஒன்றிரண்டு ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடிந்தது. அண்ணா நகர் பகுதியில் இருக்கும் ஹெச்டிஎப்சி ஏடிஎம் மையங்கள் ஏதும் இன்னும் இயங்கவில்லை. மதியம் 3.30 மணிக்கு மேல் அந்த மையங்களில் பணம் எடுக்கலாம் என வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மதுரை நிலவரம்:

மதுரை மாவட்டத்தில் ஆங்காங்கே ஒருசில ஏடிஎம் மையங்கள் மட்டுமே திறந்திருக்கின்றன. அத்தியாவசியத் தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் ஒவ்வொரு ஏடிஎம் மையமாக அலைந்து திரிகின்றனர். தபால் அலுவலகங்களில் 'எங்களுக்கு இன்னும் பணம் வரவில்லை' என்ற பதிலையே திரும்பத்திரும்ப கூறுகின்றனர்.

சில வங்கிகளில் எங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்குத்தான் பணம் வழங்க முன்னுரிமை மற்ற வங்கி கணக்குடையவர்களுக்கு இப்போதைக்கு பணமில்லை எனக் கூறி அனுப்புகின்றனர். கையில் ரூ.500, ரூ.1000 இருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது போதிய பணம் இல்லாததாலேயே ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படவில்லை என்றனர்.

கோவை திண்டாட்டம்:

கோவை நகரிலும் ஒரு சில ஏடிஎம் மையங்களில் மட்டுமே பணம் எடுக்க முடிகிறது. சில ஏடிஎம் மையங்கள் திறந்துள்ளன. ஆனால், அவற்றை பணத்துக்காக இயக்கினால், "பணம் இல்லை" என்ற அறிவிப்பு மட்டுமே வருகிறது என்று மக்கள் புலம்புகின்றனர். வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று புதிய நோட்டுகளை மாற்றியவர்கள் கவலை வேறாக இருக்கிறது. ரூ.2000 எடுத்துக் கொண்டு எந்தக் கடைக்குச் சென்றாலும் சில்லறை இல்லை ரூ.2000-க்கும் பொருட்கள் வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்கள் என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சேலத்திலும் தவிப்பு:

சேலத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. ஐஓபி, எஸ்பிஐ போன்ற ஒருசில ஏடிஎம் மையங்களில் மட்டுமே பணம் எடுக்க முடிகிறது. நேற்று போலவே இன்றும் வங்கிகளில் மக்கள் அதிகளவில் திரண்டுள்ளனர்.



படம்: எஸ்.குருபிரசாத்.

மாநகராட்சியில் பழைய ரூ.500, ரூ.1000 பயன்படுத்தி வரி செலுத்தலாம் என்ற அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால், மக்கள் பழைய நோட்டுகளை கொடுத்து வரி பாக்கியை செலுத்தி வருவது ஆறுதல் தரும் விஷயம்.

திருச்சியில் ஓரளவு சிரமம் குறைவு:

திருச்சி டவுன் பகுதியில் ஏடிஎம் மையங்கள் ஓரளவு இயங்கிவருவதாக அங்கிருந்து வந்த தகவல் தெரிவிக்கின்றது. எஸ்.பி.ஐ., ஐ.ஓ.பி. வங்கிகளில் பணம் எடுக்க முடிவதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால், கேவிபி, ஹெச்டிஎப்சி போன்ற ஏடிஎம் மையங்களில் பணம் இன்னும் நிரப்பப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.



திருச்சியில் ஏடிஎம் மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் | படம்: எஸ்.ஞானவேல் முருகன்.

செல்லாத நோட்டுகளை வைத்து என்ன செய்வது? : திருப்பி கொடுத்த தேர்தல் பொறுப்பாளர்கள்

அரவக்குறிச்சி: ஆளுங்கட்சிக்கு பாதகமாக வந்த தகவலையடுத்து, தேர்தல் பொறுப்பாளர்களின் அவசரக் கூட்டத்தை நேற்று, அமைச்சர்கள் நடத்தினர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் போட்டியிடுகிறார். 11 அமைச்சர்கள், 30க்கும் மேற்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், அ.தி.மு.க.,வுக்கு சாதகமான நிலை இல்லை என, உளவுத்துறை போலீசார், ஆளுங்கட்சி தலைமையிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, திடீரென நேற்று, ஓட்டுச்சாவடி வாரியாக, தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொறுப்பாளர்கள், 'தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்ட பணம் போதுமானதாக இல்லை' எனக் கூறியதாக தெரிகிறது.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: மொத்தம் உள்ள, 245 ஓட்டுச்சாவடிகளில், தலா, 25 என, 11 அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது; செலவுகளை, அமைச்சர்கள் பார்த்து கொள்ள வேண்டும். இருப்பினும், அனைத்து செலவுகளையும் தானே பார்த்து கொள்வதாக, வேட்பாளரான செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். ஆனால், ஓட்டுச்சாவடி முகவர்கள், ஊராட்சி கிளை செயலர்களுக்கு மட்டுமே பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. உள்ளூர் மற்றும் வேறு மாவட்டத்தில் இருந்து வந்த கட்சி நிர்வாகிகள், தங்கள் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆளுங்கட்சி செல்வாக்கு குறைந்து வருகிறது என்ற தகவல், உளவுத்துறை போலீசாரால் தலைமைக்கு சென்றது. இதன் காரணமாக, நேற்று முன்தினம், அமைச்சர்கள் ரகசிய கூட்டம் நடத்தினர். நேற்று, அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோர், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் கூட்டம் நடத்தினர்.அங்கு, ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய், ஊராட்சி கிளை செயலருக்கு, 2,000 ரூபாய் அளித்துள்ளனர். இதனால், அதிருப்தியடைந்த பொறுப்பாளர்கள், '500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல், சாப்பாட்டுக்கு கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலையில் உள்ளோம். இதையெல்லாமல் கொண்டு கொள்ளாமல், செல்லாத, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வழங்கினால், அதை வைத்து என்ன செய்ய முடியும்' எனக் கூறி, பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர். உடனே அமைச்சர்கள், 'தலைமையிடம் பேசி, மாற்று ஏற்படும் செய்கிறோம்' என்று சமாளித்தபடி சென்றுவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கறுப்பு பணத்தை 'வெளுக்க' அறக்கட்டளைகள் : புதிய வழியில் பதுக்கல்காரர்கள்

செல்லாத ரூபாய் நோட்டுகளை, சட்டப்பூர்வமாக மாற்ற, அறக்கட்டளைகள் துவக்க, முக்கிய பிரமுகர்கள் திட்டமிடுவதால், புதிதாக பதிவாகும் அறக்கட்டளைகளை, அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் பயன்பாட்டில் இருந்த, 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்தது. இது, அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை தந்தாலும், கறுப்பு பணத்தை பதுக்கியுள்ள, கோடீஸ்வரர்கள், பெரும் புள்ளிகளுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. தங்களது வேலையாட்கள், தெரிந்தவர்கள் மூலம், வங்கிகளில், பழைய நோட்டுகளை மாற்றினாலும், சில ஆயிரம் ரூபாய்க்கு மேல், பதுக்கல் பணத்தை மாற்ற முடியாது. எனவே, கோடிக்கணக்கில் குவித்து வைத்திருக்கும் கறுப்பு பணத்தை, சட்டப்பூர்வமானதாக மாற்ற, அவர்கள் இரவு, பகலாக, மூளையை கசக்கிக் கொண்டிருக்கின்றனர். உத்தர பிரதேசத்தில் சிலர், பயந்து போய், 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை எரித்ததாக செய்தி வெளியானது.ஆனால், சற்று விவரமான பெரும் புள்ளிகள், குறிப்பாக, அரசியல்வாதிகள், அறக்கட்டளைகள் துவக்கி, கறுப்பு பணத்தை, சட்டப்படி அங்கீகாரம் உடையதாக மாற்ற திட்டமிட்டு வருவதாக, அரசியல் கட்சிகள் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: பழைய ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், சில அரசியல்வாதிகள், கறுப்பு பணத்தை மாற்ற, நல்ல காரியங்களை செய்வதற்கான அறக்கட்டளை போல, போலி அறக்கட்டளைகள் துவக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள், அந்த அறக்கட்டளைகளின் நிர்வாக குழுவில், படிப்பறிவில்லாத, தாங்கள் இடும் கட்டளைகளுக்கு கீழ்படியும் நபர்களை, உறுப்பினர்களாக நியமிப்பர். பின், அறக்கட்டளைகளுக்கு, பணத்தை நன்கொடை கொடுத்ததாக கணக்கு காட்டி, அதை செல்லத்தக்கதாக மாற்ற திட்டம் தீட்டி வருகின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகள், புதிதாக பதிவாகும் அறக்கட்டளைகளையும், அவற்றுக்கு பெரும் தொகையை நிதியுதவியாக அளிப்போரையும் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி?


புதுடில்லி: 'கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது எப்படி' என, இணையத்தில் அதிகமானோர் தேடியுள்ள தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கறுப்புப் பணத்தை ஒடுக்கவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள், கையில் உள்ள நோட்டுகளை எப்படி மாற்றுவது குறித்து கவலையடைந்தனர். அதே நேரத்தில், 'கூகுள்' இணையதளத்தில், நேற்று முன்தினம் அதிகமான மக்கள் தேடிய விஷயம், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்பதே. இதில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான, பா.ஜ., ஆளும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், இது குறித்த தகவல்களை அதிகமாக தேடியுள்ளனர். அதைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், டில்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இது குறித்த தகவலை அதிகமாக தேடியுள்ளனர். மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் குறித்த விபரங்களையும், கூகுளில் அதிகமானோர் தேடியுள்ளனர்.
28 கோடி பேர் : நம் நாட்டில், 28 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இணையத்தை அதிகமாக பயன்படுத்துவதில், உலக அளவில், சீனா முதலிடத்திலும், இந்தியா

இரண்டாவது இடத்திலும் உள்ளது.

பணமின்றி தவித்தவர்களுக்கு இலவச உணவு நெல்லையில் மனிதாபிமான ஓட்டல்


திருநெல்வேலி:500, 1000 ரூபாய் செல்லாது அறிவிப்பால், பணமின்றி தவித்தவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஓட்டலில் இலவச உணவு வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்த வருகின்றனர் நெல்லையை சேர்ந்தவர்கள்.

திருநெல்வேலி என்.ஜி.ஓ.,காலனியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே பாலாஜி சைவ உணவகத்தை, அதே பகுதியை சேர்ந்தவர்கள் விஷ்ணு, கோபி ஆகியோர் நடத்துகின்றனர்.
இவர்களது ஓட்டல் அருகே பெருமளவு இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்களின் குடும்பங்கள் அதிகம் உள்ளன.

500 ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்ட அன்று இரவிலேயே மாணவர்கள், அரசு ஊழியர்கள் கையில் பணம் இருந்தாலும் நுாறு ரூபாய் நோட்டுகள் இல்லாததால், டீ குடிக்க கூட முடியாமல் சிரமப்பட்டனர்.

இதை நேரடியாக பார்த்த இருவரும், ''யார் வேண்டுமானாலும் தங்களது ஓட்டலில் சாப்பிட்டுக்கொள்ளலாம். முடிந்தால் பணம் கொடுங்கள், இல்லாவிட்டால் நினைவில் வைத்துக்கொண்டு பின்னர் கொடுங்கள்,''என கூறி கடந்த இரு நாளும் வந்தவர்களுக்கெல்லாம் உணவு வழங்கினர். நேற்று பாங்குகள் திறக்கப்பட்டு ஓரளவு நிைலமை சீரடைந்ததாலும், நேற்று இரவு வரையிலும் உணவு வழங்கினர்.

இதுகுறித்து விஷ்ணு கூறுகையில், நாங்கள் ஓட்டல் தொழிலை அண்மையில் தான் துவக்கினோம். நாங்கள் தினம் தினம் பார்க்கும் மனிதர்கள் பட்டினியால் வாடுவதை எப்படி சகித்துக்கொள்ள முடியும். பணம் இல்லை என்பதற்காக உணவு இல்லை என்று மறுப்பதோ, உணவு பண்டங்களை வைத்துக்கொண்டு கடையை வழக்கத்திற்கு மாறாக இழுத்து மூடுவதிலோ எங்களுக்கு உடன்பாடில்லை.

எனவே பலரும் எங்கள் ஓட்டலில் சாப்பிட்டுச்சென்றார்கள். அவர்கள் நிலைமை சகஜமான பிறகு பணம் தரலாம். தராமலும் போகலாம். ஆனால் பசியோடு வந்த அவர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறியதில் எங்களுக்கு திருப்தி, என்றார்.
இவரை பாராட்ட... 9786077881 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

எரிப்பார்களா புதைப்பார்களா?


எரிப்பார்களா புதைப்பார்களா?
ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் இனி, செல்லாது' என்ற, அறிவிப்பால், பாதாளத்தில் விழுந்தது போன்று பதறுகின்றனர், கறுப்பு பண பதுக்கல்காரர்கள். இவர்கள், தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை, எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற பரிதவிப்பில் உள்ளனர்.

அரசியல், அதிகார மட்டத்தில் செல்வாக்கு மிகுந்த நபர்களை தொடர்பு கொண்டு, உதவி கோரி வருவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற சட்டவிரோத பண பரிமாற்றங்களை வருமான வரித்துறையினர், தற்போது தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், அதையும் மீறி சில சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது, அம்பலத்துக்கு வந்துள்ளது.

தனியார் பள்ளி ஊழியர்களின்வங்கி கணக்கில் கறுப்பு பணம்


திருப்பூரிலுள்ள தனியார் பள்ளியில் பணி யாற்றும், பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியை கூறியதாவது:எங்களது பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, 100ஐ தாண்டும். நேற்று முன் தினம், பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து, அவசர கூட்டத்துக்கு வருமாறு எங்களுக்கு அழைப்பு வந்தது. என்னவோ, ஏதோ, என்ற தவிப்புடன் நாங்கள் பங்கேற்றோம்.

அந்த கூட்டத்தில் பேசிய பள்ளி நிர்வாகி, 'எங்களிடம் பழைய, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உள்ளன. மத்திய அரசின் திடீர் உத்தரவால் அவற்றை, வங்கிக் கணக்கில் மொத்தமாக செலுத்துவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன.

இதனால், ஊழியர்களான உங்களின் வங்கிக் கணக்கில், ஒவ்வொருவரின் பெயரிலும், குறிப் பிட்ட தொகையினை செலுத்த ஏற்பாடு செய்கிறோம்.அந்த தொகையை நீங்கள் செலுத் தியதாகவே வங்கி கணக்கில் இருக்கட்டும்.

'நான்கு, ஐந்து மாதங்கள் வரை, அந்த பணத்தை நீங்கள் எங்களுக்கு திரும்பத்தர வேண்டாம். அதன்பின், மாதத்தவணை அடிப்படையில், உங்களது சம்பளத்தில் இருந்து நாங்களே மாதம் 5,000 ரூபாய் வீதம் பிடித்தம் செய்து கொள்கிறோம்; இது, வட்டியில்லா கடனாக இருக்கட்டும். இதுநாள் வரை, இந்நிறுவனம், உங்களுக்கு உதவியிருக்கிறது. தற்போதைய நெருக்கடியை சமாளிக்க, நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்' என்றார்.

பள்ளி நிர்வாகத்தின் இந்த முடிவை, ஊழியர் களில் பலரும் ஏற்கவில்லை. காரணம், எங்களது பெயரிலான வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டால், அதற்கு நாங்களே பொறுப்பாளி; வருமானவரி செலுத்தவும் நேரிடலாம். தவிர, இது ஒருவித முறைகேடும் கூட. நாங்கள் முன்பு, ஒரு முறை ஊதிய உயர்வு கோரியபோது, நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறியது பள்ளி நிர்வாகம்.

இப்போது, எப்படி இவ்வளவு பணம் வந்தது. பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணம், செல்லாமல் போவதை தடுக்க, புதிய நோட்டுகளாக மாற்றிட முயற்சி செய்கிறது. இது தொடர்பாக, வருமானவரித்துறை மற்றும்

ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பியுள்ளோம். இவ்வாறு, அந்த ஊழியர் தெரிவித்தார்.

வேறு வழி உண்டா...


கோவையை சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமை யாளர் கூறியதாவது:வெளிமாவட்டம் ஒன்றில், எனது நண்பர் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். மத்திய அரசின் அறிவிப்புக்குப்பிறகு என்னை தொடர்பு கொண்ட அவர், தனக்கும், தனது பங்குதாரர்களுக் குச் சொந்தமான, ஏறத்தாழ 15 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. அவற்றை செல்லத்தக்கதாக மாற்ற என்ன செய்ய வேண்டும். வேறு வழி ஏதாவது இருக்கிறதா, என்று கேட்டார்.

வருமானத்துக்குரிய கணக்கை முறையாக காட்டி யிருந்தால், இதுபோன்ற நெருக்கடி, பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்காது. தற்போது அவர், அந்த பணத்தை கணக்கு காண்பித்தால், அல்லது அதிகாரி களால் கண்டறியப்பட்டால், 200 மடங்கு தொகை யினை அபராதமாக செலுத்த நேரிடும். அதனால், கணக்கில் காட்டவும் முடியா மல், அழிக்கவும் மனமில்லாமல், ஏறத்தாழ பைத்தியம் பிடித்தது போன்ற நிலைக்கே, நண்பர் சென்றுவிட்டார்.

கறுப்பு பணத்தை குழிதோண்டி புதைப்பது நல்லதா, எரிப்பது நல்லதா என்ற விவாதத்தையும் தற்போது கேட்க முடிகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

வாகனங்களில் பறக்குது 'கறுப்பு' குறையுது தங்கக்கட்டி இருப்பு


கோவை நகரை சேர்ந்த முக்கிய வர்த்தகர் ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் அறிவிப்பு, கறுப்பு பணம் பதுக்கியவர்களின் துாக்கத்தை தொலைத் திருக்கிறது. அவர்கள் வசமிருக்கும் கோடிக்கணக் கான மதிப்பிலான, 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை எல்லாம் செல்லாக்காசாக, வெற்றுத்தாளாக மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு மாற்றிவிட்டது. பதுக்கிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பை காப்பாற்ற, பதுக்கல்காரர்கள் துடிக்கின்றனர்.

வாகனங்களில் பணத்தை ஏற்றிக்கொண்டு அங்கு மிங்குமாக அலைகின்றனர் என்றும் கூட சொல்கி றார்கள். சிலர், தங்களது நட்பு மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி, தங்க வியாபாரிகளிடம், பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, தங்கக் கட்டிகள் வாங்கியுள்ளனர்.

மார்க்கெட்டில் தற்போது, சொக்கத்தங்கத்தின் விலை கிராம் 3,200 ரூபாய் என்றால், மத்திய அரசின் நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கிராம் 4,200 ரூபாய் வரை விலை வைத்து, வியாபாரி கள் விற்கின்றனர். இதன் மூலம், கிலோவுக்கு குறைந்தது, 10 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. வாங்கும் நபருக்கும் நஷ்டம் கிடையாது.

காரணம், அவர், கூடுதல் பணம் கொடுத்தாவது தங்கத்தை வாங்காவிடில், பதுக்கி வைத்திருக்கும் மொத்த கறுப்பு பணத்தின் மதிப்பையும் இழந்து விடுவார். இந்த சட்டவிரோத வியாபாரத்தின் மூலமாக, மிகப் பெரிய அளவில், மொத்தமாக அதாவது 100,200 கோடி அளவிலான கறுப்பு பணத்தை, தங்கமாக மாற்றிக்கொள்ள வாய்ப் பில்லை என்றபோதிலும், ஒரு சில கோடி ரூபாய் களை வைத்திருப்பவர்கள், மாற்றிக்கொள்ள இயலும்.

வருமானவரி செலுத்தப்படாத, கணக்கில் காட்டப் படாத, கறுப்பு பணத்தை, அதாவது 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை பெறும் தங்க வியாபாரிகள், அவற்றை தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி கொள்வதில் எவ்வித பிரச்னையும் இருக்காது. காரணம், அவர்கள் சட்ட ரீதியாக கொள்முதல் செய்து, கணக்கு காட்டி இருப்பு வைத்திருந்த தங்கத்துக்கு ஈடான தொகையினை, வங்கி கணக்கில் பழைய நோட்டாக இருப்பினும் செலுத்த முடியும்.

அதேவேளையில்,கையிருப்பு தங்கம் முழுவதும் விற்று முடிக் கப்பட்டுவிட்டபின், புதிதாக
தங்கம் கொள் முதல் செய்யும்போது,பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை செலுத்த முடியாது என்பதை யும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருப்பினும், மேற்கண்ட 'பிசினஸ்'சில், நகைத்தொழிலுடன் தொடர்பில் இருக்கும் மிகச்சிலர் ஈடுபட்டுள்ளனர். பிறர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை.கறுப்பு பணத்தை வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

'கறுப்பு பண பதுக்கல்காரர்கள், தாங்களாக முன்வந்து, தங்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்பை காட்டி, 47 சதவீத வரியை செலுத்தலாம். இந்த பணத்தை எப்படி சம்பாதித்தோம் என்பது பற்றியெல்லாம் தெரிவிக்க வேண்டியதில்லை' என, தெரிவித்தது. இத்திட்டத்தில், சேர்ந்தவர்கள் மிகச்சிலரே.

'ஒவ்வொரு முறையும், மத்திய அரசில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் இவ்வாறு தான் மிரட்டுகிறார்கள்; இதை 'சீரியஸ்' ஆக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை' என்றே, பலரும் அலட்சியமாக இருந்துவிட்டனர். சிலர், மத்திய அரசின் திட்டத்தை ஏற்று, கறுப்பு பணத்தை கணக்கில் காண்பித்தார்கள். அதற்குண்டான வரியினை செலுத்த மத்திய அரசு, ஓராண்டு கால அவகாசமும் அளித்திருக்கிறது.

மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று, அன்று கணக்கு காண்பித்தவர்கள், இன்று நிம்மதியாக இருக்கிறார்கள். ஒரு கோடி ரூபாயில், 47 லட்சம் அரசுக்கு போனாலும், 53 லட்சம் மிஞ்சு கிறது. ஆனால் இன்று, கறுப்பு பண கணக்கு காண்பிக்காதவர்களின் நிலையோ பரிதாபம். பதுக்கி வைத்திருக்கும் ஒட்டுமொத்த பணத் தின் மதிப்பும் போய்விட்டது. துாக்கமிழந்து தெருத்தெருவாக அலைகிறார்கள்.

தங்களுக்கு அறிமுகமான வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் வங்கி அதிகாரிகளின் உதவியை நாடுகிறார்கள். தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு, இனி என்ன செய்ய முடியும்?

'டாஸ்மாக்'கில்நள்ளிரவு 'பண மாற்றம்'


கோவையில் பணியாற்றும் 'டாஸ்மாக்' பணியாளர்கள் சிலர் கூறியதாவது:மதுவிற்ற பணத்தை வங்கியில் செலுத்தும் முன், எங்களுக்கு ஒரு வாய்மொழி உத்தரவு வந்தது, 'பணத்தை அப்படியே வைத்திருங்கள்' என்று. எதற்கு இப்படி கூறினார்கள் என, தெரியாமல் குழம்பிப் போனோம்.

அதற்கான விடை அடுத்த சில மணி நேரங்க ளில் கிடைத்தது. முக்கிய புள்ளி ஒருவரின் பெயரிலான நபர்கள், 1,000, 500 ரூபாய் நோட்டு களுடன் டாஸ்மாக் கடைகளுக்கு, வாகனங் களில் பரபரப்புடன் வந்தார்கள்.

அவர்கள் கோவை, திருப்பூர், நீலகிரி கடை களுக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் சென்றிருக்கக்கூடும். தாங்கள் கொண்டு வந்திருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகளை எங்களிடம் கொடுத்துவிட்டு, அதற்கு ஈடான மதிப்பில் 100, 50 ரூபாய் நோட்டுக்களை வாங்கிச் சென்றுவிட்டார்கள். 'அவர்கள் வந்ததும் தெரியாது; போனதும் தெரியாது' என சொல்லுமளவுக்கு, அவ்வளவு வேகம்,

அவர்களது நடவடிக்கையில்.வந்த நபர்கள் யார், அனுப்பியது யார், பணத்தை எங்கு கொண்டு போனார்கள் என்றெல்லாம் எங்களுக்கு தெரியாது. இந்த பண மாற்று சம்பவம், டாஸ்மாக்கில் மட்டுமல்ல; அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் நடந்ததாக கூறப்படுகிறது.

சிலர், தங்களது நட்பு மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி, தங்க வியாபாரிகளிடம், பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, தங்கக் கட்டிகள் வாங்கியுள்ளனர்.

மத்திய அரசின் முடிவுக்கு உயர் நீதிமன்றம் வரவேற்பு: ரூ.500, ரூ.1000 செல்லாது என்பதை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல் லாது என மத்திய நிதி அமைச்ச கம் வெளியிட்டுள்ள அறிவிப் பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தியன் நேஷனல் லீக் மாநில பொதுச் செயலர் எம்.சீனிஅகமது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடும்போது, “முன்னேற்பாடு நடவடிக்கைகள் இல்லாமல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் சிரமத் துக்கு ஆளாகியுள்ளனர். புதிதாக 2000 ரூபாய் நோட்டு வெளியிட்டி ருப்பது இந்திய ரிசர்வ் வங்கி சட்டத் துக்கு விரோதமானது” என்றார்.

தவறில்லை

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், “5, 10, 50, 100, 1000 என ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம். புதிதாக ரூ.2000 நோட்டு வெளியிடுவதில் தவறில்லை. 1946, 1978 ஆண்டு களில் இதுபோல் ரூபாய் நோட்டு கள் செல்லாது என அறிவிக்கப் பட்டுள்ளது” என்றனர்.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிடும் போது, “ரூபாய் நோட்டுகளை செல்லாது என்பதும், புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதும் மத்திய அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது” என்றார்.

கள்ள நோட்டுகள்

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிப்பு வெளியிட்டபோது, இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கறுப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகள் அச்சிடுவதைத் தடுக்கவும், ஊழலை ஒழிக்கும் நோக்கத்திலும், பயங்கரவாதத்துக்கு கள்ள நோட்டுகளை பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த நோக்கத்தில் கொண்டுவரப் பட்டுள்ள இத்திட்டம் வரவேற்கத் தக்கது.

இந்தியாவில் அதிக அளவு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், போதைப் பொருள் கடத்தலுக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் கள்ள நோட்டுகள் பயன்படுத்தப்படு வதாகவும், இதனால் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளது. இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டதில் அரசிய லமைப்பு சட்டம் உட்பட எந்த சட்டத்தையும் மத்திய அரசு மீறவில்லை. இதனால், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டியதில்லை. சிரமங்கள் தற்காலிகமானது. இதை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலை யிட முடியாது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக ஏற்காவிட்டா லும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடு வது நல்லதல்ல. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்த தகுதியுடன் இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் குவிந்தன: டெல்லி, மும்பையில் வருமான வரி சோதனை

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் குவிந்தன. இதனிடையே, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 

நாடு முழுவதும் காலாவதியான ரூபாய் நோட்டுகளை ஒப்படைத்துவிட்டு புதிய நோட்டுகளைப் பெறுவதற்காக லட்சக்கணக்கானோர் நேற்று வங்கிக் கிளைகளை முற்றுகையிட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

கருப்புப் பணம், கள்ள நோட்டுகள், தீவிரவாத நிதியுதவி ஆகியவற்றைத் தடுப்பதற்காக புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதேநேரம், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிதாக அச்சிடப்பட்ட 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

பெட்ரோல் பங்க்குகளில் மட்டும் 2 நாட்களுக்கு பழைய நோட்டுகள் பெறப்படும் என அறிவித்தார். இதனால் பெரும்பாலானோர் பெட்ரோல் பங்குகளை முற்றுகையிட்டதால் அங்கும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்ப முடியாமலும், ஓட்டலில் சாப்பிட முடியாமலும் திண்டாடினர்.

இதனிடையே, நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை 500, 1,000 பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் ஒப்படைத்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கென ஒரு படிவம் தரப்பட்டது. அதை நிரப்பி அதனுடன் அடையாள அட்டையின் நகலையும் இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் காலையிலேயே பொதுமக்கள் வங்கிகள், அஞ்சலகங்களை முற்றுகையிட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். சில இடங்களில் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுச் சென்றனர்.

மேலும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள சில வங்கிகள், அஞ்சலகங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. சில வங்கிகளில் ஒருசில மணி நேரங்களிலேயே புதிய நோட்டுகள் தீர்ந்துவிட்டன.

பழைய நோட்டுகளுக்கு பதிலாக ஒவ்வொருவரும் தலா ரூ.4,000 வரை மட்டுமே புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனினும், சில வங்கிக் களைகளில் ரூ.2000 மட்டுமே வழங்கப்பட்டதாக மக்கள் புகார் கூறினர். அதேநேரம், பழைய நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.

இங்கு சில்லறை கிடைக்கும்: மாற்றி யோசித்த மற்றும் சிலர்

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய மக்கள் சில 'உத்தி'களைக் கையாண்டு நிலைமையைச் சமாளித்து வருகின்றனர்.

"நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்" என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், நம் மக்கள் சில உத்திகளைக் கையாண்டு நிலைமையைச் சமாளித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முழுக்க 36 கிளைகளைக் கொண்டு, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சரவண பவன் உணவகத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இதுகுறித்து சரவண பவன் உணவக நிர்வாகி கே. கமலக்கண்ணன் கூறும்போது, ''நாங்கள் எந்த தயக்கமும் இல்லாமல் ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொள்கிறோம். வங்கிகள் திறந்தவுடன் அவற்றை மாற்றிக் கொள்வோம்'' என்றார்.

சில சுவாரஸ்யமான தீர்வுகள்

சில வாடிக்கையாளர்கள் இந்தப் பிரச்சனைக்கு வேறு விதமாகத் தீர்வு கண்டனர். சாப்பிட்ட/ செலவழித்த இருவரின் தொகையை ஒருவரே செலுத்த மற்றொருவர், அவருக்கு ஆன்லைனில் ரீசார்ஜ் செய்துவிடுவதாக உறுதிகூறிச் சென்றார்.

இன்னும் சிலர் காஃபி குடித்துவிட்டு, கிரெடிட் கார்டு மூலமாக அதற்கான தொகையைக் கட்டினர். இது இந்திய வழக்கமில்லைதான். ஆனால் மாறித்தானே ஆகவேண்டும். சின்னத் தொகையாக இருந்தாலும், பணமில்லாத இந்த நேரத்தில் இதுவே சிறந்த வழியாக இருக்க முடியும்.

''யூடூ டாக்ஸி நிறுவனம் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கிறது. அதே நேரம் மீதிச் சில்லறையைத் தருவதில்லை. அதற்குப் பதிலாக அடுத்த பயணத்துக்கான அட்டையை வழங்கிவிடுகிறது'' என்கிறார் அதன் வாடிக்கையாளர் சிவசங்கரன்.

இண்டஸ்இண்ட் வங்கி, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு 2 மடங்கு அதிக பாயிண்டுகளை வழங்குகிறது.

பிரச்சனைகள் எழும்போதுதான் மனிதர்கள் கண்டுபிடிப்பாளர்களாக மாறுகிறார்கள் போல!

நெட்டிசன் நோட்ஸ்: செல்லாத நோட்டுகளும் மளிகைக்கடை நடத்தும் நல்லவரும்!

கோப்புப் படம்
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து, புழக்கத்தில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து, நெட்டிசன்கள் அதன் சாதக, பாதகங்களை அடுக்கி வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

விலாசினி ரமணி

நேற்றுதான் கையில் இருந்த கடைசிப் பணம் வரை ஹாஸ்பிடலில் செலுத்தினேன். இன்று காலையிலிருந்து எங்கும் வெளியில் செல்லவில்லை. குழந்தைகள் உண்டியலில் சில்லறையாக 200 ரூபாய் தேறும். பக்கத்திலுள்ள எல்லா ஏ.டி.எம்மும் அத்தனை கூட்டமாகவும் பணம் இல்லாமலும் இருக்கின்றன. வீட்டில் மளிகை பொருட்கள், காய்கறி, பழங்கள் எதுவும் இல்லை. என் வங்கிக் கணக்கிலிருந்து எப்படி பணம் எடுப்பேன்? வீட்டிற்கு எப்படி பொருட்கள் வாங்குவேன்?

Amudha Suresh

இந்த ஐநூறு ஆயிரம் புரட்சியில் அந்தக் காவேரி வாரியமும், விவசாயிகள் தற்கொலையும், கூடங்குளமும் மறைஞ்சு போச்சு!

Marx P Selvaraj

காலையில் இருந்து உழைத்து மாலையில் கையில் வாங்கிய பணத்தை இரவில் செல்லாது என்று சொல்லும் ஒரு அரசு யாருக்காக இயங்குகிறது?

பொன் கார்த்திக்

நல்லதோ கெட்டதோ இதுவரை இல்லாத ஒரு புது முயற்சியை எடுக்குது அரசாங்கம். ரெண்டு நாள்தானே பொறுத்துக்குவமே... இதனால கள்ள நோட்டு ஒழியுமா, கருப்புப் பணம் ஒழியுமான்னு இப்பவே ஆராய்ச்சியோ பட்டிமன்றமோ தேவையில்லாத ஒன்று. இப்போதைக்கு வரவேற்போம். தீமைன்னு உறுதியா தெரிஞ்சா விமர்சிப்போம், எதிர்ப்போம்.

அரசு + மக்கள் இணையும் போது தான் எந்த திட்டமும் வெற்றி பெறும். திட்டங்கள் வெற்றி பெற்றால்தான் நாடு வளர்ச்சியடையும். இரு கைகள் இணைந்தால்தான் ஓசை வரும். ஒரு கையிலயும் ஓசை வரும், ஆனா கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும். வலி பொறுப்போம். வலிமை பெறுவோம்....

Ram Kumar

நாம் கொடுத்த எட்டணா, நாலணாவை வாங்க மாட்டேன் எனச் சொன்னக் கடைக்காரர்கள் எல்லாம், சில்லரைக்கு பதிலாக மிட்டாய் கொடுத்தக் கடைக்காரர்கள் எல்லாம் இனி வாலன்டியராக நம்மிடம் சில்லரைக்காகத் தவம் இருப்பார்கள்.. அரசியல்வாதி, உழைப்புறிஞ்சி முதலாளிகள், குறிப்பாக திடீரென முளைத்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் என எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி இது.

Umamaheswari ‏

ஆயிரம் ரூபாய் நோட்டு. காந்தி சிரிக்கிறார் மக்கள் அழுகின்றனர்.

சிவாஜி ‏

மோடியின் இந்த அதிரடி திட்டத்தால் கருப்பு பணம் ஒழியுதோ இல்லையோ, கள்ள நோட்டு ஒழியும்!

Dinesh N

கருப்புப் பணத்துக்கெதிரான இந்த அதிரடி முடிவு திடீரென்று எடுத்த முடிவல்ல....ஆட்சி அமைத்த உடனேயே SIT எனப்படும் ஸ்பெக்ஷல் இன்வஸ்டிகேக்ஷன் டீம் கருப்புப் பணம் குறித்த தகவல்களை திரட்டத் தொடங்கப்பட்டது. பிரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் வாயிலாக சாமான்ய இந்தியனும் வங்கிக் கணக்கு தொடங்க வாய்ப்பு வழங்கப்பட்டது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை முறைப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது....உள்நாட்டில் தானே முன் வந்து கணக்கில் காட்டப் படாத பணத்தை முறைப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

Mugil Siva

'எல்லாரும் நம்ம ரெகுலர் கஸ்டமர்ஸ்தாண்ணே. திடீர்னு சொன்னா எங்க போவாங்க. நேத்து நைட்ல இருந்து நிறைய பேருக்கு அக்கவுண்ட்ல எழுதிதான் பொருள் கொடுத்துக்கிட்டிருக்கேன்' என்று நோட்டை எடுத்துக் காண்பித்தார் எனது ஏரியாவில் மளிகைக்கடை நடத்தும் நல்லவர்.

Pattukkottai Prabakar Pkp

பிரதமர் மோடியின் இந்த அதிரடியான நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். பொது மக்களுக்கு ஒரு வாரத்திற்கு சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். அதையும் ஒருவருக்கு ஒருவர் உதவுவதன் மூலம் சரிசெய்துகொள்ள முடியும். சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்களின்போது சமாளிக்கவில்லையா என்ன? பஞ்சம், போர் சமயங்களில் முன் தலைமுறை மக்கள் சந்திக்காத பிரச்சினைகளா?

இந்த நடவடிக்கையின் மூலம் கண்டிப்பாக கணிசமாக கருப்புப் பணம் ஒழியும். தவிர.நம் நாட்டுக்குள் இறக்கி விட்டிருக்கும் கள்ள நோட்டுகள் பெரிய அளவில் கட்டுக்குள் வரும். நேர்மையாளர்களும், நாட்டில் தூய்மை பரவ வேண்டும் என்று விரும்புபவர்களும் இந்த நடவடிக்கையை எதிர்க்க மாட்டார்கள்.

Prabhu Mpr

இனி கேஷ் டிரான்ஸாக்‌ஷன்ஸ் குறைந்து, கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா ஆன்லைன் பரிவர்த்தனைகள் மட்டுமே கொண்ட நாடாக மாறும். நாட்டில் நடக்கும் எல்லா பரிவர்த்தனைகளும் கணக்கில் வரும்போது அரசின் வருமானம் கூடும். லஞ்சம் மற்றும் முறையற்ற, விஷயங்களை தவிர்க்க முடியும்.

தேர்தலின் போது வோட்டுக்கு பணம் கொடுக்கும் அனைவரும் கருப்பு பணத்தையே நம்பி இருக்கிறார்கள். இனி அது சாத்தியமில்லை. பெரும்பாலும் நல்ல விஷயங்களே இதில் இருப்பதாக தெரிந்தாலும் நிஜமான பாதிப்புகளை ஓரிரு மாதங்கள் கழித்தே சொல்ல முடியும். சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். நாட்டின் நலனுக்காக மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என பிரதமரும் அறிவித்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.

Sowmiya

இன்று பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த பாட்டி ஆயிரம் முறை அவரிடம் இருந்த அந்த மூன்று நூறு ரூபாய் தாள்களை திருப்திப் பார்வை பார்த்துக் கொண்டே வந்ததார். அந்த பாட்டிக்கு பேங்குக்கு போகத் தெரியுமாங்கறத நெனச்சாதான் கஷ்டமா இருக்கு ..!

Vaa Manikandan

புழக்கத்தில் இருக்கிற அதே சமயம் கணக்கில் வராத பணத்தை முடக்குவதுதான் முதல் காரியமாக இருக்க வேண்டும். அதைச் செய்திருக்கிறார்கள். இதோடு எல்லாமும் முடிந்துவிடுவதில்லை. இன்னமும் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த திட்டத்துக்கான முக்கியக் காரணம் வெளியிலிருந்து வரும் ஹவாலா பணத்தைத் தடுப்பது, இங்கேயிருந்து வெளிநாடு செல்லும் பணத்தை முடக்குவது என என்னுடைய குருவி மண்டைக்கே நிறையத் தோன்றுகிறது. நாட்டை ஆள்கிறவர்களும் பொருளாதார வல்லுநர்களும் யோசித்திருக்க மாட்டார்களா? செய்வார்கள் என நம்பலாம். என்னவோ ஒரே ராத்திரியில் மோடி முடிவெடுத்துவிட்டு ஸ்டண்ட் அடிப்பதாக எழுதியும் பேசிக் கொண்டிருப்பவர்கள் துளியாவது யோசித்துப் பார்க்கலாம். இது அவ்வளவு எளிய முடிவா? ரிசர்வ் வங்கியிலிருந்து, பொருளாதார நிபுணர்கள் வரை ஆலோசனை நடத்தாமலா முடிவெடுத்திருப்பார்கள்? ஏதாவது குதர்க்கம் நிகழ்ந்தால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் கண்டுவிடும் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலா அறிவித்திருப்பார்கள்? பிசகினால் நாடு திவாலாகிவிடும்.

Aishwarya Govindarajan

ரயிலில் சுண்டல் விற்கும் நரைமுடி ஊமை ஆச்சிக்கும், 16 வயதிலேயே கையில் குழந்தையை வைத்துக்கொண்டு கடலை மிட்டாய் விற்கும் சிறுமிக்கும் தங்கள் கையில் இருக்கும் பத்து ரூபாயை கொடுத்து வீணடிக்க வேண்டாம் என பத்திரப்படுத்துகிறார்கள் சக பயணிகள். அவர்களது இந்த இரண்டு நாட்களை நரகமாக்கிவிட்டு அரசும் சட்டமும் அப்படியென்ன தன் கடமையை செய்துவிடப் போகிறது.. !

P Kathir Velu

பொருளாதாரம் பேசுவது, அரசைக் குறை சொல்வது, அவகாசம் கொடுத்திருக்கலாமே எனச்சொல்வது, அந்த பதினைந்து லட்சம் என்னானது எனக்கேட்பது, தொலைக்காட்சியில் நாம எப்படியாச்சும் சமாளிச்சுக்குவோம்ங்க தினக்கூலிகளை நினைச்சுப் பாருங்க எனச்சொல்வது, பதுக்கல் பணக்காரர்கள் சிக்கல் குறித்து மகிழ்வது... ஆகியவற்றிற்கு முன்னால் அவசியமான ஒன்று இப்படியான பதைபதைப்புக்குள்ளாகும் மனிதர்களை ஆற்றுப்படுத்துவது.

சாமானியர்களுக்கு தாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து, கையில் வைத்திருக்கும் பணத்திற்கு உத்திரவாதம் தேவைப்படுகிறது. அவர்களை எந்த வகையிலும் பதட்டப்படுத்தாமல், நிதானமான வழிகளைச் சொல்லி, அவர்களின் பணம் எவ்வகையிலும் இழப்பாகிவிடாது என்பதை அழுத்தமாகச் சொல்லி வழி நடத்துவது படித்தவர்கள், நிலைமை புரிந்தவர்களின் கடமை.உண்மையில் இப்போது பலருக்கு உடனடியாகப் பணம் தேவையில்லை. ஆறுதலும், நம்பிக்கையும் தான். அதைக் கொடுங்கள்.

பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா? - வங்கி, வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம்

அதிக அளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் பல்வேறு வங்கிகளின் கிளைகளில் மாறி மாறி செலுத்தினால், வருமான வரித் துறையிடம் இருந்து தப்பிக்க முடியுமா என்பது குறித்து அதிகாரி கள் விளக்கம் அளித்துள்ளனர்.
காலாவதியாகும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய 2000, புதிய 500 ரூபாய் நோட்டுகள் அல்லது 100, 50, 20 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘500, 1000 ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக லட்சக்கணக்கில் வைத்திருப்பவர்கள் ஒரேயடியாக வங்கியில் செலுத்தினால்தான் கேள்விகள் எழும். அதற்கு பதிலாக, பல்வேறு வங்கிகளின் கிளைகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் செலுத்தினால், வருமான வரி செலுத்தாமல் தப்பிவிடுவார்களே’ என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இது சாத்தியமா? என்று கேட்டதற்கு வருமான வரித் துறை மற்றும் வங்கி அதிகாரிகள் அளித்த விளக்கம் வருமாறு:

எந்த வங்கிக் கிளையிலும் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை செலுத்தும்போதோ, எடுக்கும்போதோ கண்டிப்பாக வருமான வரி நிரந்தர கணக்கு (PAN) எண்ணை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும்போது, பல் வேறு வங்கிகளின் எத்தனை கிளை களில் தனித்தனியாக பணம் செலுத் தினாலும், குறிப்பிட்ட நபரின் பணப் பரிவர்த்தனை முழுவதும் ‘பான் எண்’ வாயிலாக வருமான வரித் துறையினருக்கு தெரிந்துவிடும்.

கணிசமான தொகையை பரிவர்த் தனை செய்பவர்கள் பற்றிய விவரங் களை வங்கி நிர்வாகமே வருமான வரித் துறைக்கு தெரிவிப்பதும் உண்டு. ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள்’ (நோ யுவர் கஸ்டமர்) என்ற முறையின் கீழ் வங்கிகள் சேகரித்து வைத்திருக்கும் வாடிக்கையாளர் விவரங்களை வருமான வரித் துறையினர் கேட்டுப் பெறவும் செய்யலாம்.

ஒருவர் குறிப்பிட்ட வங்கியின் பல்வேறு கிளைகளில் வங்கிக் கணக்கு தொடங்கும்போது கணக்கு வைத்திருப்போருக்கான பிரத்யேக எண் (வாடிக்கையாளர் ஐடி) ஒன்று ஏற்படுத்தப்படும். அது வாடிக்கை யாளருக்கு தெரியாது. அவர் எத் தனை கிளையில் கணக்கு தொடங்கி னாலும் அவருக்கு ஒரே ஒரு எண் தான். அந்த எண் மூலம் அவரது மொத்த பணப் பரிவர்த்தனை விவரங்களை அந்த வங்கியிடம் இருந்து வருமான வரித் துறையினர் பெறலாம்.

அதேநேரத்தில், பல்வேறு வங் கிக் கிளைகளில் தினமும் ரூ.49 ஆயி ரம் வீதம் பணம் செலுத்தினால், அதைக் கணக்கிட இயலாது. அது போன்ற சூழலில், யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டாலோ, புகார் வந் தாலோ, அதன் அடிப்படையில் குறிப் பிட்ட நபரின் பணப் பரிவர்த்தனை சோதித்து அறியப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித் தனர்.

இதற்கிடையே, குறிப்பிட்ட வங் கிக் கணக்கில் தினமும் ரூ.49 ஆயிரம் வீதம் பணம் செலுத்துவோர் பற்றிய விவரங்களையும் தெரிவிக்குமாறு வங்கிகளை வருமான வரித் துறை கேட்டிருப்பதாகத் தெரிகிறது.

Thursday, November 10, 2016

அமெரிக்காவின் 45-வது அதிபர் டொனால்டு ட்ரம்ப்: உலகை வியப்பில் ஆழ்த்திய முடிவுகள் ... பிடிஐ

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், நியூயார்க் நகரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று பேசினார். உடன் அவரது குடும்பத்தினர். | படம்: ஏஎப்பி

பல்வேறு கருத்து கணிப்புகளை பொய்யாக்கி அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி: நாடு முழுவதும் வெற்றி கொண்டாட்டம்

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், பல்வேறு கருத்து கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (70) வெற்றி பெற்றுள்ளார்.

எதிர்பாராத இந்த வெற்றியால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அதேநேரம், நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக தலைவர்கள் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடை பெற்றது. ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் வெளி யுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் (69) குடியரசு கட்சி சார்பில் அரசியல் அனுபவம் இல்லாத கோடீஸ்வர தொழிலதி பரான டொனால்டு ட்ரம்பும் (70) போட்டியிட்டனர்.

முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் வகை யில் அமைந்தது. பிரச்சாரத்தின் போது, இருவரும் பரஸ்பரம் தனிப்பட்ட முறையில் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறினர்.

அமெரிக்காவில் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிப் பேன், மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என்ற ட்ரம்பின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர் மீது சில பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதனால், அவரது கட்சிக்குள் ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. பெரும்பாலான ஊடகங்களும் ட்ரம்புக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்தன. இதனால், ஹிலாரி வெற்றி பெறுவார் என பல்வேறு நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

எனினும், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது தனது தனிப்பட்ட இ-மெயில் சர்வரை அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி யதாக ஹிலாரி மீது ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இது ஹிலாரிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதால் ட்ரம்பின் செல்வாக்கு சற்று அதிகரித்தது. எனினும், ஹிலாரியே வெற்றி பெறுவார் என இறுதிக் கட்ட கருத்து கணிப்புகளும் தெரிவித்தன.

இந்நிலையில் 8-ம் தேதி 50 மாகாணங்களிலும் வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்பட்டன. தொடக்கத்தில் இருவருக்கும் இடையே, இழுபறி நிலவியபோதிலும், யாருமே எதிர்பாராத வகையில் பல்வேறு கருத்து கணிப்புகளை பொய்யாக்கி ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

குறிப்பாக, பென்சில்வேனியா, ஓஹியோ, புளோரிடா, டெக்சாஸ், அலாஸ்கா மற்றும் வடக்கு கரோலினா உள்ளிட்ட மாகாணங்கள் ட்ரம்பின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தன.

நாட்டின் முதல் பெண் அதிபரா வார் என ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் (69) அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். மொத்தம் உள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் இதுவரை ட்ரம்புக்கு 289-ம், ஹிலாரிக்கு 218-ம் கிடைத்துள்ளது.

இன்னும் சில மாகாண முடிவுகள் வர வேண்டி உள்ளது. எனினும், இந்தத் தேர்தலில் வெற்றி பெற 270 வாக்குகள் தேவை என்பதால் ட்ரம்ப் வெற்றி பெறுவது உறுதி.

இந்த தேர்வாளர்கள் புதிய அதிபர் மற்றும் துணை அதிபரை டிசம்பர் மாதம் முறைப்படி தேர்ந்தெடுப்பார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார். இவர் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.

தேர்தல் வெற்றி குறித்து தனது பிரச்சார தலைமை அலுவலகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் பேசும்போது, “நாம் அனை வரும் ஒன்றாக இணைய வேண்டிய தருணம் இது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் அதிபராக இருப்பேன் என உறுதி கூறுகி றேன். ஹிலாரி கிளின்டன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு எனக்கு வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் தெரிவித்தார். கடுமையான போட்டியாக விளங்கிய அவருக்கு நன்றி தெரி வித்தேன்” என்றார்.

நாட்டின் 45-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப், முதல்முறை அதிபராக பொறுப் பேற்றவர்களில் அதிக வயது டையவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ட்ரம்பின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களும் குடியரசு கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர்.

உலக தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் தெரசா மே, துருக்கி பிரதமர் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பங்குச்சந்தைகள் வீழ்ச்சி

ஹிலாரி கிளின்டன் வெற்றி பெறுவார் என உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர் பாராதவிதமாக ட்ரம்ப் வெற்றி பெற்ற தால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக பங்குச்சந்தைகளில் நேற்று கடும் வீழ்ச்சி காணப்பட்டது. அமெரிக்க டாலர் மதிப்பும் கடுமையாக சரிந்தது.

ஹிலாரி மீதான இ-மெயில் புகாருக்கு ஆதாரம் இல்லை என அந்நாட்டு புலனாய்வு அமைப்பு (எப்பிஐ) கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. எனினும், இ-மெயில் விவகாரம் தொடர்பான புதிய புகார் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கடந்த மாத இறுதியில் எப்பிஐ இயக்குநர் தெரிவித்தார். இது ஹிலாரிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

எனினும், வாக்குப்பதிவுக்கு 2 நாள் முன்னதாக, இந்தப் புகாருக்கு ஆதாரம் இல்லை என அறிவித்தார். ஆனாலும் காலதாமதமாக இந்த அறிவிப்பு வெளியானதால் ஹிலாரி யின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தாலி வாங்கக்கூட இயலாமல் தவிப்பு: நாளை முகூர்த்தநாள்: திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் பாதிப்பு

எஸ்.கோபாலகிருஷ்ணன்

THE HINDU TAMIL 

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் நாளை (நவ.11) திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் தாலிகூட வாங்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளை முகூர்த்த நாள்

நாளை (நவ.11) முகூர்த்த நாள் என்பதால் பலரும் திருமணத்துக்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளவர்கள் விழாவுக் குத் தேவையான அடிப்படை செலவுகளை செய்வதற்குக்கூட நூறு ரூபாய் நோட்டுகளே வேண்டும் என்று கடைகளில் கேட்பதால் கையில், 500,1000 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த சரவணன், கூறும்போது, “நவம்பர் 11-ம் தேதி (நாளை) எனக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவைகளாக அறிவித்துள்ளனர். என்னிடம் இருப்பது பெரும்பாலும் 500, 1000 ரூபாய் நோட்டுகள்தான். எனவே காய்கறி, மளிகைப் பொருட்கள் தொடங்கி அனைத்துக்கும் பணப் பட்டுவாடா செய்யமுடியாமல் தவிக்கிறேன்.

இந்த அறிவிப்பால் உடனடி யாக பாதிக்கப்பட்டிருப்பது எங்களைப்போன்று திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளவர்கள்தான். எனவே, திருமண அழைப்பிதழ் போன்றவற்றை ஆதாரமாக பெற்றுக்கொண்டு எங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமாவது வங்கிகள் மூலம் தேவையான 100 ரூபாய் நோட்டுகளை உடனடியாக வழங்குமாறு வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்” என்றார்.

நகைக்கடையில் மறுப்பு

கோட்டூரைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத, மணமகனின் தாயார் ஒருவர் கூறும்போது, “என் மகனுக்கு நவம்பர் 11-ம் தேதி (நாளை) திருமணம் வைத் துள்ளேன். அதற்காக ஏற்கெனவே முன்பணம் கொடுத்து வைத்திருந்த தாலிக்கு மீதத்தொகையை கொடுத்து, தாலியை வாங்கலாம் என்று நகைக் கடைக்குச் சென்றேன். ரூ.500 நோட்டுகளாக இருப்பதால் அதனை வாங்க மறுத்துவிட்டனர். பல இடங்களில் கேட்டும் 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை.

திருமணத்துக்காக தாலி வாங்க வந்தவரை கடையில் திருப்பி அனுப்பியது எனக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவழியாக, என் மகன் வேலைபார்க்கும் நிறுவனத்தில் 100 ரூபாய் நோட்டுகளை கடனாகப் பெற்று பிரச்சினையை சமாளித்தோம். மீதமுள்ள செலவுக்கு என்ன செய்வது என்று கவலையாக உள்ளது” என்றார்.

மன்னார்குடி ரோட்டரி சங்கத் தலைவரும், நிதி ஆலோசகருமான செந்தில்குமார் கூறியது:

தனது வருமானத்தை மீறி பெரும்பொருட்செலவு செய்து சுபகாரியங்களை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒவ்வொரு சாமானிய, நடுத்தர குடும்பத்தினரின் தன்னம்பிக்கைக்கும் பின்புலமாக இருப்பது மொய்ப் பணம் ஒன்றுதான்.

தற்போது அதிக புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவை என்று அறிவித்திருப்பதால், மொய்ப் பணம் வைக்க விரும்புபவருக்கு ரூ.100 அல்லது புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் விரைவாக கிடைத்தால்தான் மொய் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகளை மொய்யாக வைத்தால் செல்லாத பணத்தை வைத்ததாகிவிடுமே என்ற உணர்வு இருதரப்பிலும் உருவாக வாய்ப்புள்ளது. இது வெளிப்படையாக விவாதிக்க முடியாத பிரச்சினை. பொருளாதர சீர்திருத்தங்களில் இந்த பாதிப்பை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்றார்.

இதுகுறித்து திருமண மண்டப உரிமையாளர்கள் கூறியபோது, “வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை செல்லாத பணத்தை வங்கியில் செலுத்த அவகாசம் கொடுத்துள்ளனர். அதனால் திருமண மண்டப வாடகையைப் பெற்றுக்கொள்வதில் நாங்கள் கெடுபிடி எதுவும் செய்யவில்லை” என்றனர்.

மளிகை கடைக்காரர்கள் கூறியபோது, “மளிகை கடைகளில் தெரிந்தவர்களிடம் மட்டும் 500, 1000 ரூபாயைப் பெற்றுக்கொள்கிறோம். ஆனால், சில்லறை வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பதுக்கல் பணம் வெளிவர வாய்ப்பு: சோதனை தீவிரப்படுத்தப்படுமா?


ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பொதுமக்கள் மாற்றிக்கொள்வதில் சிக்கல் இருக்காது என்பதால், பதுக்கி வைத்த கருப்பு பணத்தை தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சியினர் பட்டுவாடா செய்ய வாய்ப்பு உள்ளது. அதனால், தேர்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற் பட்டுள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்க நாடு முழு வதும் நேற்று முன்தினம் இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அவற்றை வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.

இதனால், பணம் பதுக்கிய பெரும் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர் அந்தப் பணத்தை எப்படி மாற்றுவது எனத் தெரியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தப் பணத்தை மாற்ற அவர்கள் மறைமுகமாக பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்றும், அதற்காக அவர்கள் ஆடிட்டர்களிடம் ஆலோசனை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே 19-ம் தேதி தேர்தல் நடக்கும் திருப்பரங்குன்றம், அரவக்கு றிச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தொப்பு தொகுதிகளில் முக்கிய அரசியல் கட்சியினர், பணத்தைத் தண்ணீராக செலவு செய்து வருகின்றனர். வேட்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்களுடைய கருப்பு பணம், தேர்தல் செலவு போர்வையில் ஏற்கெனவே வெளியே வந்துகொண்டு இருக்கிறது. தற்போது 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் தேர்தல் செலவு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக பதுக்கி வைத்த பணத்தை நேரடியாக மாற்ற முடியாமல் தவிக்கின்றனர்.

பிரச்சாரத்துக்கு வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நேற்று சாப்பாடு, டீசல், பெட்ரோல், டீ, வடை, மைக் செட் செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் பதுக்கி வைத்திருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை வழங்க முடியாமல் அரசியல் கட்சியினர் சிரமம் அடைந்தனர்.

வழக்கமாக, தேர்தலுக்கு முந்தைய 2 நாளில் அந்தந்த ‘பூத்’ நிர்வாகிகள் மூலம் பணம் பட்டுவாடா நடக்க ஆரம்பிக்கும். அதனால், பதுக்கி வைத்திருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாக்காளர்களுக்கு திட்டமிட்டபடி பட்டுவாடா செய்து, அந்தப் பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொள்ளும்படி வாக்காளர்களிடம் கூறி விடலாம் என அரசியல் கட்சியினர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வாக்காளர்கள், அந்தப் பணத்தை வங்கிகளில் மாற்றிக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்பதால், அவர்களும் அரசியல் கட்சியினர் வழங்கும் பணத்தைப் பெற வாய்ப்பு உள்ளது. அதனால், தேர்தல் நடக்கும் இந்த தொகுதிகளில் கருப்பு பணம் அதிக அளவு வெளிவர வாய்ப்பு உள்ளதால் தேர்தல் ஆணையம் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம்





500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அரசும், ரிசர்வ் வங்கியும் கூறியதுபோல் எளிதாக மாற்ற முடியாமல் மக்கள் சில இடங்களில் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

"நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்" என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படவே ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உதவி மையம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. விரிவான செய்திக்கு > பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவது எப்படி?- பதற்றம் தணிக்க ரிசர்வ் வங்கியின் 20 வழிகாட்டுதல்கள் |

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அஞ்சல் நிலையங்களில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சம் ரூ.4 ஆயிரம் வரை பெறலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதன்படி இன்று (வியாழக்கிழமை) காலை முதலே வங்கிகள், தபால் நிலையங்கள் வாயிலில் மக்கள் அதிகளவில் திரண்டனர்.

சென்னை திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள வங்கிகளில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் நம்மிடம் கூறும்போது, "எனது பணம் ரூ.6000-த்தை மாற்றுவதற்காக வந்தேன். வங்கியில் ஒரு படிவம் தந்தார்கள். அதை பூர்த்தி செய்து, கொடுத்தேன். ஆனால், பணத்தை டெபாசிட் செய்துவிட்டு செல்லுங்கள். இப்போதைக்கு பணமில்லை. பணத்தை உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்வோம் என்று சொல்லிவிட்டனர். இப்போதைக்கு எனக்கு செலவுக்கு பணமில்லை" என்றார்.

இதேபோல் வாடிக்கையாளர்கள் பலரிடமும் அதிகாரிகள் சொன்னதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வங்கி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



பணம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் | படம்: எல்.சீனிவாசன்.

வங்கி நிலைமை இப்படியிருக்க சென்னை திருவல்லிக்கேணி தபால் நிலையத்தின் வாசலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தபால் அலுவலகத்தில் ஆயத்தப் பணிகள் நடப்பதால் உள்ளே மக்களை அனுமதிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பொறுமையிழந்து கூச்சலிட்டனர். நிலைமையை சமாளிக்க வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

திருச்சி நிலவரம்:

திருச்சியில் இன்று காலை 7 மணி முதலே வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மக்கள் பெருமளவில் திரண்டனர். போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வங்கிகளில் மக்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் மக்கள் வரிசையாக அனுமதிக்கப்படுகின்றனர்.

வங்கியில் ஏற்கெனவே கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது சேமிப்பு புத்தகத்தை அளித்து பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். அவர்களுக்கு ரூ.10,000 (5 புதிய ரூ.2000 நோட்டுகள் வீதம் வழங்கப்படுகிறது). ஆனால் வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லாதவர்கள் படிவம் ஒன்றை பூர்த்தி செய்து அடையாள அட்டை ஒன்றை காண்பித்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு ரூ.4000 வழங்கப்படுகிறது.



படம்: எஸ்.ஞானவேல்முருகன்

ரூ.2000 புதிய நோட் ஒன்றும் எஞ்சிய பணம் ரூ.100, ரூ.50, ரூ.20 மற்றும் ரூ.10-ஆக வழங்கப்படுகிறது. திருச்சி முழுவதும் இன்னும் ரூ.500 புதிய நோட்டுகள் வரவில்லை.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு நடுத்தரவர்க்க மக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தபால் நிலையங்களில் தாமதம்:

திருச்சி நகர் முழுவதும் தபால் நிலையங்களுக்கு இன்னும் பணம் வரவில்லை. இதனால், மக்கள் காத்திருக்கின்றனர். வழக்கமான தபால் அலுவல்கள் மட்டுமே அங்கு மேற்கொள்ளப்படுகின்றன. பகல் 12 மணிக்கு மேல் பணம் விநியோகிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மதுரையில் அடையாள அட்டை கெடுபிடி:

மற்ற ஊர்களைப் போலவே மதுரையிலும் மக்கள் தங்கள் பணத்தை மாற்றிக்கொள்ள அலைமோதுகின்றனர். பணத்தைப் பெற்றுக்கொள்ள ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை என எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பாரத ஸ்டேட் வங்கி ஆதார் அல்லது பான் கார்டு மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். தங்களது சிரமத்தை புரிந்து கொள்ளாமல் வங்கி நடந்து கொள்வதாக அதிருப்தி தெரிவித்தனர்.



ஒத்தக்கடை பாங்க் ஆஃப் இந்தியா வங்கி அருகே காத்திருக்கும் மக்கள்| படம்:கி.மகாராஜன்.

மதுரையிலும் தபால் நிலையங்களில் பணம் விநியோகம் தொடங்கவில்லை. ஆனால், காலை 7 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

சேலத்தில் ரூ.4000/- மட்டுமே:

சேலம் மாவட்டத்தில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கில்லாதவர்கள் என அனைத்து மக்களுக்கு வெறும் ரூ.4000/- மட்டுமே மாற்றித் தரப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் தபால் நிலையங்களில் பொது மக்களிடம் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்து அதில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக பணத் தேவை இருக்கும்போது இவ்வாறாக கணக்கு ஆரம்பித்து பின்னர் பணத்தை எடுப்பது நடைமுறை சிக்கலுக்கு வழிவகுக்கும் என மக்கள் குமுறல்களை தெரிவித்தனர்.



சேலத்தில் வங்கி வளாகத்தில் திரண்டிருந்த பொது மக்கள் | படம்: எஸ்.குருபிரசாத்.

சேலம் மாநகர் முழுவதுமே கடந்த 2 நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது. பணப்புழக்கம் அதிகம் இல்லாததால் செவ்வாய்ப்பேட்டை, லீ பஜார், புது பஸ்ஸ்டாண்ட், சின்னக்கடை வீதி, பஜார் வீதி போன்ற பகுதிகள் முடங்கிப் போயிருக்கின்றன.

கோவையில் கட்டுக்கடங்கா கூட்டம்:

கோவை நகரில் ஒவ்வொரு வங்கியின் முன்னும் குறைந்தது 3000 பேராவது திரண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டத்தை சமாளிக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் கையில் பணமிருந்தும் வங்கியில் அதை மாற்றி அத்தியாவசியப் பொருட்களை விற்க முடியாமல் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.



கோவையில் புது கரன்சி நோட்டுடன் புன்னகை பூக்கும் பெண்கள் | படம்: ஜெ.மனோகரன்.

தபால் நிலையங்களில் பண பட்டுவாடா தொடங்கவில்லை. இன்னும் பணம் வரவில்லை என தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்தாலும் மக்கள் வரிசையில் காலையில் இருந்தே காத்திருக்கின்றனர்.

சில்லறை தட்டுப்பாட்டால் காய்கறி சந்தையில் காய்கறிகள், பழங்கள் தேங்கிக் கிடக்கின்றன. பெட்ரோல் பங்குகளில் ரூ.500/-க்கு மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படுகிறது என மக்கள் பரவலாக புகார் கூறியுள்ளனர்.

உங்கள் ஊர் நிலவரம் எப்படி?

தலைநகர் சென்னையில் ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் இன்னல்களை சந்தித்துவரும் நிலையில் உங்கள் ஊரில், உங்கள் பகுதியில் நோட்டுகளை எளிதாக மாற்ற முடிகிறதா? இல்லை சிரமம் நிலவுகிறதா? அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

ரூ.500, ரூ.1000 செல்லாது அறிவிப்பால் தேர்தல் பணியில் அதிமுக, திமுக சோர்வு: புதிய உற்சாகத்தில் பாஜக வேட்பாளர்


ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக, திமுகவினர் தேர்தல் பணியில் சோர்வு காணப்பட்டது. பாஜக வேட்பாளர் வழக்கத்தைவிட உற்சாகமாக நேற்று வாக்கு சேகரித்தார்.

நேற்று முதல் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிமுக, திமுகவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்விரு கட்சிகளையும் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொகுதிக்குள் முகாமிட்டுள்ளனர். இவர்களின் தினசரி செலவு, உள்ளூர் வாசிகளுக்கான செலவு, வாகன எரிபொருள், தங் குமிடம், உணவு என அனைத்து செலவுகளுக்கும் தினசரி ஓரிரு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவை அனைத்தும் ரூ.500, 1000 என்றிருந்த நிலையில், பிரதமரின் அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியினர் தங்களின் தேவை களைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் நேற்று வாக்காளர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்ட வில்லை. 30 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தொகுதியில் இருந்து வெளியேறினர். பணியிலி ருந்த பலரும் ஆர்வமின்றி சோக த்துடனேயே காணப்பட்டனர்.

இதுகுறித்து இவ்விரு கட் சியினரும் கூறுகையில், ‘பணப் பிரச்சினை அனைவரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எங்களுக்கு வாக்களியுங்கள் என கேட்கச் செல்வதை வாக்காளர்கள் ஏற்கவில்லை.

வாக்கு கேட்டால், பணப் பிரச்சினையைத்தான் முதலில் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து எந்த கருத்தையும் எங்களால் தெரிவிக்க இயலவில்லை. பதிலளிக்கும்போது தவறான புரிதல் ஏற்பட்டு விடுகிறது. இதனால் வாக்குகள் பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் கவனமாகச் செயல்படுகிறோம். ஓரிரு நாளில் இப்பிரச்சினை சரியாகும் என எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.

இதற்கிடையே, பிரதமரின் அறிவிப்பை தனது பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பாஜக வேட்பாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் நேற்று தீவிரம் காட்டினார். நிலையூர், வலையங்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மிகுந்த உற்சாகத்துடன் அவர் பிரச்சாரம் செய்தார்.

ஸ்ரீனிவாசன் பேசியது: பொருளாதார புரட்சியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்திவிட்டார். போக்ரான் அணுகுண்டுக்கு இணையானது இந்த நடவடிக்கை. ஒரே கல்லில் 20 மாங்காய்களை அடித்துவிட்டார். இதனால் கள்ளநோட்டு, கருப்பு பணம் வைத்திருப்போருக்கு மட்டு மே பாதிப்பு. தொழிலதிபர்கள் முறையான வரி செலுத்துவர். வெளிநாடுகளில் இருந்து மதமாற்றம், தீவிரவாதத்துக்காக பணத்தை கொண்டுவர முடியாது. மத்திய பட்ஜெட்டிற்கு இணையான கருப்பு பணம் உள்ளது. 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியால் இந்த நிலை. பிரதமரின் நடவடிக்கையால் பயங்கரவாதம், ரவுடியிசம் ஒழியும். சட்டம், ஒழுங்கு மேம்படும். கல்விக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ரியல் எஸ்டேட் தொழில் சீரடைவதால் நிலம், வீடுகளின் விலை கணிசமாகக் குறையும்.

தேர்தல் செலவு, வாக்காளர் களுக்கு பணம் விநியோகம் குறையும். அனைத்து கட்சிகள் மட்டுமின்றி, உலக அளவில் மோடியின் செயலுக்கு பாராட்டு குவிகிறது.

ஏழைகளின் முன்னே ற்றத்திற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளால் 2 நாட்களுக்கு ஏற்படும் இடையூறுகளை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் பலன் ஏழைகளுக்கு கிடைக்கும்போது, இந்தியாவின் வளர்ச்சி பலமடங்கு உயரும். இதை மக்கள் அனுபவப்பூர்வமாக உணர்வர். திருப்பரங்குன்றத்தில் பாஜகவிற்கு வெற்றி தேடித்தந்தால் மத்திய அரசின் திட்டப்பலன்களை நேரடி யாக இத்தொகுதிக்கு கொண்டு வருவேன் என்றார்.

College violates SC order, fined Rs 37 crore

TNN | Nov 9, 2016, 12.24 PM IST
LUCKNOW: Expressing serious displeasure on their taking admission in MBBS course in 2015 despite the Supreme Court's restraint order, the Lucknow Bench of the high court on Monday denied adjustment of students in any other medical college.

It directed Dr MC Saxena College of Medical Sciences to return Rs 25 lakh to each of the 150 students as damages, including fees. The court directed the college to deposit the total amount running to the tune of Rs 37.50 crore with the director general, medical education, within two months.

It asked the DG to distribute the amount among the 150 students after their verification. The court also asked the district magistrate to realize the amount from the college as land arrears in case it was not deposited within the stipulated period. HC has summoned the compliance report from the DG within three months.

Justice DK Arora passed the order on a petition by Dodia Narendra Dilipbhai and other students. The petitioners had sought a direction from the court that they should be allowed to be adjusted on vacant seats of other medical colleges and then be allowed to appear for first-year examination of MBBS.

The court found that the Medical Council of India had disapproved the college from taking admission on MBBS seats due to lack of requisite infrastructure but HC had on 24 September, 2015, permitted the college to take admission on certain conditions subject to further orders. The Supreme Court stayed this order on September 29 on MCI's petition and finally rejected the HC's September 24, 2015, order on March 10, 2016.

மோடியின் துணிச்சலுக்கு ஒரு சலாம்!

மோடியின் துணிச்சலுக்கு ஒரு சலாம்!

செல்லாத நோட்டு செய்தியை கேட்ட உடனேயே, என் மனதில்;
1. பஞ்சாப், உ.பி., தேர்தலுக்கு பா.ஜ.,வை தயார் பண்ணிட்டாங்க
2. சொந்த வீடு கனவு நனவாவதற்கு இன்னும் ரொம்ப காலம் காத்திருக்க வேண்டியது இல்லை என்பவை தான், உடனடியாக தோன்றிய விஷயங்கள்.

தேர்தல் அரசியல்

தீவிரவாதத்தையும், கறுப்பு பணத்தையும் மையப்படுத்தி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக, பிரதமர் அறிவித்திருந்தாலும்; அதில் உ.பி., பஞ்சாப் தேர்தல்களும் உடனடி காரணிகள் என்பதில் ஐயம் இல்லை. 

பஞ்சாப் தேர்தல் வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ளது. உ.பி., தேர்தல் மார்ச் மாதம் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கறுப்பு பணம் இல்லாமல் கட்சிகளுக்கு தேர்தலை சந்திப்பது சிரமம் என்பது தெரிந்த விஷயம் தான். பா.ஜ.,வும் கட்சி தானே அதற்கு என்ன ஆதாயம்? 

மத்தியில், 10 ஆண்டுகள் ஆட்சி செய்து, 2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், போன்ற பல பத்திரிகை பரபரப்புகளை அரங்கேற்றிய காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளிடம் நல்ல பண பலம் உள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் கூட, கல்லா கட்டும் பாதையில் பயணிப்பதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. 

இவை இரண்டும் தான், பஞ்சாபில், பா.ஜ., - அகாலி தளம் ஆட்சிக்கு சவால். கடந்த மாதம் வெளியிடப்பட்ட பஞ்சாப் கருத்து கணிப்புகள், காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சி தான் வெற்றி பெறும் என, தெரிவிக்கின்றன. இனி நிலை மாறுமா என்பதை பார்க்க வேண்டும். 

பஞ்சாபில் நிலை அப்படி இருக்க, உ.பி.,யில், 2014 லோக்சபா தேர்தலின் போது, மொத்தமுள்ள, 80 இடங்களில், பா.ஜ., 71 இடங்களை பிடித்து அசத்தியது. அது, மோடி அலை உச்சத்தில் இருந்த காலகட்டம். அதையும் தவிர, சட்டசபை தேர்தலில், ஆளும் சமாஜ்வாதி கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் பண பலத்தையும், அடியாள் பலத்தையும் சந்திக்க வேண்டுமானால் பெரும் பொருட்செலவாகும் நிலை தான் உள்ளது. 

அதற்கு பதில், அவர்களின் பண பலத்தை குறைத்துவிட்டால், பா.ஜ.,வுக்கு, தேர்தலை சந்திப்பது சற்று எளிமையாகும் என்பது நிதர்சனம். வெறும் அரசியல் தானா?அப்போது இதெல்லாம் வெறும் அரசியல்தானா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இது செயல்படுத்தப்
பட்ட நேரம் அரசியலுக்கு சாதகமான நேரமே ஒழிய,இதற்கான திட்டங்களும்,தயாரிப்புகளும், மோடி ஆட்சிக்கு வந்த அன்றில் இருந்தே நடந்து வருகின்றன. 

* கடந்த, 2014ல், ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில், கறுப்பு பணத்திற்கான 
சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை மோடி உருவாக்கினார்
* அதே ஆண்டில், 'ஜன் தன் யோஜனா'வை துவங்கி, வங்கிகள் மூலம் பண பரிவர்த்த னையை அதிகரிக்க முயற்சி எடுத்தார். அதனால், இன்று, 22கோடி புதிய வங்கி கணக்கு கள் துவங்கப்பட்டு உள்ளன. நாட்டில் உள்ள,31 கோடி வங்கி கணக்குகளில், இந்த திட்டத்தில் துவங்கப்பட்டவை தான் பெரும்பான்மை
* மொரீஷியஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடு களோடு, வரி ஏய்ப்பை தடுக்க வங்கி பரிவர்த்த னைகள் குறித்து தகவல் பரிமாற்றத்திற்கான ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது
* கடந்த, 2015ல், வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை பற்றி தன்னார்வமாக, தண்டனை 
பயமின்றி தெரிவித்து, தகுந்த வரி கட்டி, அதை சட்டப்பூர்வமான பணமாக மாற்றிக்கொள்ள 
ஒரு சட்டம் இயற்றப்பட்டது 
* அதே போன்று, இந்த ஆண்டு, உள்நாட்டில் உள்ள கறுப்பு பணத்திற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த தன்னார்வ முயற்சிகளால், வெறும்,33 ஆயிரம் கோடி ரூபாய் வரை தான், வரி வசூலிக்க முடிந்தது. அதிலும், தன்னார்வமாக முன்வந்தவர்கள், தங்களின் முழு கறுப்பு பண விபரத்தையும் கொடுக்கவில்லை என்று, தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகள் உறுதிப்படுத்தின 
* பினாமி சொத்துக்களுக்கும், பரிவர்த்தனைகளுக்கும் கிடுக்கிப்பிடி போடுவதற்கு ஒரு கடுமையான சட்டம், இந்த ஆண்டு, கொண்டுவரப்பட்டது 
* சமீபத்தில் நிறைவேறிய, ஜி.எஸ்.டி., மசோதாவிலும் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த பல அம்சங்கள் உள்ளன 
* வங்கி கணக்கோடு, ஆதார் எண் இணைப்பு, நேரடி மானியம் உள்ளிட்டவையும் இதற்கான திட்டங்களே. ஆகையால், மோடி அரசின் ஒவ்வொரு நகர்வும், கறுப்பு பணத்தை ஒழிப்பதை நோக்கித்தான் உள்ளது. 

இதனால் கறுப்பு பணம் ஒழிந்துவிடுமா?

'புதிய நோட்டுகள் தான் வருகின்றனவே, ஒரு முறை இந்த நடவடிக்கையை எடுப்பதால் கறுப்பு பணம் ஒழிந்துவிடுமா, இருக்கவோ இருக்கு தங்கம்' என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதுவரை வாளியில், நீர் பிடித்து, சோப்பு போட்டு ஆகிவிட்டது; இது முதல் சலவை 

தான். முதல் சலவையில் அழுக்கு போகவில்லை என்றால், இரண்டாவது சலவையும் நடக்கும். நேற்று காலை வரை, டுவிட்டரில் 'பிளாக் மணி' என்ற தலைப்பில் இந்த விஷயம் பேசப்பட்டது; ஆனால், மாலைக்குள் அதுவே, 'டீமானிடைசேஷன்' என்ற தலைப்புக்கு மாறிவிட்டது. 

இங்கு, 'டீமானிடைசேஷன்' என்றால், ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனை நடக்கும் சூழல். அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலம் நடக்க வேண்டும், மின்னணு வடிவில் பணம் மாற வேண்டும்; அது தான் மோடி அரசினுடைய குறிக்கோள். அப்படி நடக்கும் போது, இயல்பாகவே கறுப்பு பணத்திற்கு இடமில்லாமல் போகும். 

கறுப்பு பணத்திற்கு முக்கிய காரணிகளான ஊழலும், லஞ்சமும் குறையும். அந்த கோணத்தில் இருந்து பார்க்கும் போது, 

* புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வரும் என்று கூறி உள்ளனர்; எவ்வளவு வரும் என்று கூறவில்லை. நேற்று முன்தினம் வரை, இந்தியாவில் உள்ள மொத்த ரொக்கத்தில், 84 சதவீதம், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. 500 மற்றும் 2,000ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவில் அச்சடிக் கப்படலாம். இன்று நீங்கள் வங்கிக்கு சென்று ரொக்கம் கேட்கும் போது, அனைத்தும்,50 அல்லது100 ரூபாய் நோட்டுகளாக உங்களுக்கு கொடுக்கப்படலாம் 
* நேற்று முன்தினம் இரவு வரை தங்கம் வாங்க முடிந்திருக்கும். அதுவும் கடையில் இருப்பு உள்ளவரை மட்டும் தான். இனி என்ன செய்வது? ஒரு சில வியாபாரிகள், 'பின் தேதியிட்டு பில் போட்டுக் கொள்கிறோம்' என்று துணிச்சலாக முன்வரலாம். அவ்வளவே. 

ரொக்கத்திற்கு கட்டுப்பாடு விதித்ததற்கு அடுத்தபடியாக அசல் தங்கத்திற்கும் கட்டுப்பாடு வரும் போல் தெரிகிறது. அதற்கு முன்னேற்பாடாக தான், தங்க கடன் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. '100சவரனுக்கு மேல் வைத்திருப்பவர்கள், அதற்கான சொத்து ஆதாரங்களை காட்ட வேண்டும்' என்று சட்டம் வரும் காலம், வெகு துாரத்தில் இல்லை 

* தங்கத்தை விட்டால் மிஞ்சி இருப்பது நிலமும், வெளிநாடும் தான். நிலத்தை வாங்க, கண்டிப்பாக கறுப்பு பணம் தேவை என்ற சூழல் உள்ளது. ரொக்கம் கட்டுப்படும் போது, நிலத்தை வாங்குவது அசாத்தியமான காரியமாக மாறும். 

* நிலத்தை தங்கள் பேரில் வாங்கினால், வருமான வரி கேள்விகளும் வரும். பினாமி பேரில் வாங்கினால், இனி அதை மீட்க முடியாது, நஷ்டஈடு இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் என்று, புதிய பினாமி சட்டம் சொல்கிறது 

* வெளிநாட்டுக்கு பெரும் பணக்காரர்களை தவிர, மீதமுள்ளோரால் பணத்தை கடத்த முடியாது; அதுவும், ரொக்கம் குறையும் போது, ஹவாலா பரிவர்த்தனைகள் மிக மிக கடினமாகிவிடும். அதனால், கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த, இது சரியான நடவடிக்கை தான் என்றே தோன்றுகிறது. 

தொழில் பாதிக்கப்படுமா?


நம் நாட்டில், 80 சதவீத பண பரிவர்த்தனைகள் ரொக்கம் மூலம் தான் நடக்கின்றன. சிறு வியாபாரி கள், சிறு தொழில் முனைவோர், விவசாயிகள் என, பலர் ரொக்கத்தை நம்பி தான் இருக்கின்றனர்; இவர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்படுவர் என்ற, வாதம் முன்வைக்கப்படுகிறது. 

கண்டிப்பாக குறுகிய கால பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், இப்போது, ஏறத்தாழ அனைத்து குடும்பங்களிடமும் வங்கி கணக்கு உள்ளது. மின்னணு முறையில் பண பரிவர்த்தனை செய்ய, ஆயிரம் வழிகள் வந்துவிட்டன. 

அதனால், வேண்டாவெறுப்பாக மாறினாலும், வங்கி மூலம் பண பரிவர்த்தனைக்கு அனைவரும் மாறி தான் ஆக வேண்டும். இப்போது நடக்காவிட்டால் எப்போது நடக்கும்? சந்தையில் பரிவர்த்தனை களும், நுகர்வும் குறையும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், உயர்ந்த விலையுள்ள பொருட்களின் நுகர்வு தான் குறையும். 

சாதாரண பொருட்களின் விலை குறையும்; எப்படி?


உதாரணத்திற்கு, இதுவரை வரியை பற்றி சிந்திக்காத ஒரு பெரிய வெங்காய வியாபாரியை எடுத்துக்கொள்வோம். அவரிடம், சரக்கை, மூன்று மாதம் இருப்பு வைப்பதற்கு இப்போது கறுப்பு பணம் உள்ளது என்றால், இதற்கு பின் அது இருக்காது. வாங்கிய பொருளை உடனடியாகவோ, மூன்று மாதங்களுக்கு முன்போ விற்றாக வேண்டும். விலை விண்ணை தொடும் வரை காத்திருக்க இயலாமல் போகும். அதனால், காய்கறி விலை குறையும்.

இப்படி, விலை குறையும் போது, பண வீக்கமும் குறையும், நுகர்வும் அதிகரிக்கும். அதன் மூலம் தொழில் மீண்டும் வளம் பெறும். அது மட்டும் அல்லாமல், மக்கள் வங்கியில் கொண்டு ரொக்கத்தை செலுத்தும் போது, அவர்களுக்கு கிடைக்கப் போவது, குறைந்த அளவு ரொக்கம் தான். மீதமுள்ள பணம், அவர்கள் கணக்கில் செலுத்தப் படும். அதை எளிதில் ரொக்கமாக எடுக்க முடியாத படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. வங்கி யில் பணம் இருப்பு அதிகரித்தால், வட்டி விகிதம் இயல்பாகவேகுறைந்துவிடும். 

இதன் மூலம், நுகர்வு கடன் அதிகரித்து, நுகர் வும் அதிகரிக்கும். அதுவும் தொழில் களுக்கு சாதகமாக இருக்கும்.ஆனால்,கல்வி தொழிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் பாதிக்கப்படும். 

ரியல் எஸ்டேட்


ரியல் எஸ்டேட் தொழில், அரசியல்வாதிகளின் கறுப்பு பணத்தில் தான் பெரும்பாலும் இயங்கு கிறது என்பது நாடறிந்தது. கறுப்பு பண முதலீடு என்பதால், கிட்டத்தட்ட இலவசமாக வந்த பணம் போல தான்; வங்கிக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை. அதனால் தான் லட்சக் கணக்கான வீடுகள் விற்காமல் இருப்பினும், விலை, பெரும் வீழ்ச்சி காணாமல் இருக்கிறது. 

கறுப்பு பணத்தில் மோடி கைவைத்து உள்ளதால், இந்த நிலை கண்டிப்பாக மாறும்.

Advertisement

இழப்புகளை குறைக்க வீட்டு விலைகளும் குறையும்; வாடகையும் குறையும். ஆக்கிர மித்தல், வளைத்துப் போடுதல் ஆகிய கவுன்சி லர் தொழில்கள் அவ்வளவு பிரகாசமாக தெரியாது. இதனால்,காஞ்சிபுரம் மாவட்டம் போன்ற தொழில் பகுதிகளில் சட்டம் - ஒழுங்கும் சீரானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

சொந்த வீடு, எட்டா கனியாக இருந்த அனைவருக்கும், இது மோடி கொடுத்துள்ள வரப்பிரசாதம்.மாற்றங்கள் என்ன?
* அடுத்த சலவைக்கு காத்திருக்காமல் இப்போதே சுதாரிப்பவர்கள், வரி கட்ட துவங்குவர். இதனால், கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்; இது போதுமான அளவிற்கு அதிகரித்தால், நாட்டில் வரி கட்டும், 2-3 சதவீதம் பேரின் மீதான சுமை குறைந்து, வரி விகிதங்கள் குறையும்
* அனைவரும் மின்னணு பண பரிமாற்றத்திற்கு மாறிவிட்டால், வருமான வரியே இல்லாத நாடாக கூட, நம் நாடு மாறலாம். பரிவர்த்தனைகள் மீது மட்டும் வரி விதிக்கும் திட்டத்தை முன்வைத்து, ஒரு குழுவினர், அரசிடம் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்
* வரி கட்டுவோரின் எண்ணிக்கையும், வரி வருமானமும் அதிகரிக்கும் போது, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசால் கூடுதல் நிதி ஒதுக்க முடியும். இதன் மூலம் தனிநபர் வருமானம் 
அதிகரிக்கும் 
* படிப்படியாக, 'டீமானிடைசேஷன்' திட்டம் அமலுக்கு வரும் போது, லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சிரமமான செயல்களாக மாறும். யோசித்துப் பாருங்கள், போலீஸ்காரன் கிரெடிட் கார்டில் லஞ்சம் வாங்க முடியுமா? 
* லஞ்ச பணத்தை வைத்திருப்போருக்கு இது ஏற்கனவே பெரிய சாட்டை அடி. ஏனெனில், மற்றவர்களை போல் அபராதம் கட்டிவிட்டு, தங்கள் பணத்தை சட்டப்பூர்வமான பணமாக அரசு ஊழியர்களால் மாற்றிகொள்ள முடியாது. 

அவர்கள், சாதாரண மக்களை கசக்கி பிழிந்து சம்பாதித்த பணம் .அத்தனையும் இப்போது, ஆட்டுத்தீவனம் அல்லது ஆண்டவன் சொத்து 
* தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது, 'தன்னார்வ தொண்டர்கள்' கூட்டங்களை சேர்ப்பது எல்லாம் சிரமமாகிவிடும் 
* சாதாரண ஊழல்கள், லஞ்சம் மூலம் அரசியலில் சம்பாதிப்பது சிரமம் என்று தெரிந் தால், கிராம அளவிலும், நகராட்சி அளவிலும் செயல்படும் பல தொழில் முறை அரசியல் வாதிகளுக்கு, அரசியல் தொழில் கசந்துவிடும். இதனால், சற்று மக்கள் தொண்டு மனப் பான்மை கொண்டவர்கள் உள்ளே வர வாய்ப்பு ஏற்படும்
* பணம் வாங்காமல் ஓட்டு போடுவோருக்கும், வரி கட்டுவோருக்கும் நாட்டு பிரச்னைகள் சற்று அதிகமாக உறைக்கத்தான் செய்யும். அதனால், ஜனநாயகம் வலுப் பெறுமா என்பதை, வரும் உள்ளாட்சி தேர்தலில் பார்ப்போம்.

அசாத்திய சாதனை


மொத்தத்தில், மோடியின் இந்த செயல் பொருளாதாரத்திலும், சமூகத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்த வித்திட்டு உள்ளது. இது உண்மையிலேயே, வரலாற்று சிறப்புமிக்க செயல் தான். அதுவும் மிக மிக துணிச்சலான செயல். ஏனெனில், எப்பேற்பட்ட நேர்மையானவராக, மோடி இருந்தாலும், அவரும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் தான். 

அந்த கட்சி எப்பேற்பட்ட தேசபக்தி நிறைந்த கட்சி என்று யார் சொன்னாலும், அதில் உறுப்பினர்
களாக உள்ள, 11 கோடி பேரும் நேர்மையானவர்கள்; லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அப்பாற்
பட்டவர்கள் என்று யாராலும் உத்தரவாதம் தர முடியாது.சக கட்சியினரை மீறி, கறுப்பு பணத்தை ஒழிக்க துணிந்துள்ளார். அதே போல், அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். கறுப்பு 
பணத்திற்கும் பெயர் போன மாநிலம் அது. இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், அந்த மாநிலத்தைச் சேர்ந்த பண பலமிக்கவர்கள் தான். 

இதனால், அங்கே, சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும் அடி கூட விழலாம். இருப்பினும், மோடி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்றால், அது அவரது நேர்பட்ட சிந்தனைக்கு அத்தாட்சி.உண்மையிலேயே அவருடைய துணிச்சலை பார்த்து தலை வணங்கத்தான் தோன்றுகிறது. அவரது இந்த முயற்சி வெற்றி அடைய, நம்மால் ஆனதை செய்வோம்.

அடுத்தது தங்கம்


அடுத்தபடியாக அசல் தங்கத்திற்கும் கட்டுப்பாடு வரும் போல் தெரிகிறது. அதற்கு முன்னேற்பாடாக தான், தங்க கடன் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. '100 சவரனுக்கு மேல் வைத்திருப்பவர்கள், அதற்கான சொத்து ஆதாரங்களை காட்ட வேண்டும்' என, சட்டம் வரலாம்.

- கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு -
துணை ஆசிரியர், தினமலர்

JIPMER doctors can now attend court proceedings online

  • SPECIAL CORRESPONDENT

JIPMER has started a tele-evidence service which enables doctors to attend a court case without leaving the premises.

JIPMER Director Dr. S.C. Parija said this facility had been created as per the guidelines and norms of Ministry of Health and Family Welfare.

‘Tele-evidence’ means attending court cases by doctors online without physically making an appearance in court, he said. Recently, a JIPMER doctor had attended a court hearing online and given his statement.

This had been made possible by JIPMER’s state-of-art telemedicine equipment and technology, including Indian Space Research Organisation (ISRO) Satellite and fiber optic connectivity provided by National Knowledge Network (NKN), National Informatics Centre (NIC), Ministry of Information Technology, and the Department of Electronics and Information Technology (DEITY), Government of India.

Telemedicine

JIPMER’s telemedicine infrastructure includes HD video conferencing system, desktop video conferencing system, interactive smart board, digital X-ray scanner, LCD monitors, IP PTZ Camera, mobile telemedicine van, head-mounted video camera, Wi-Fi routers and spectacle-mounted video camera.

In 2013, Ministry of Health and Family Welfare (MoH&FW), Government of India, declared JIPMER as Regional Resource Centre (RRC) for Telemedicine for more than 160 medical colleges of South Indian States, including Andhra Pradesh, Karnataka, Kerala, Tamil Nadu, Telangana, and Puducherry. JIPMER is also running seven telemedicine-driven projects such as Tele-Ophthalmology Project, Tele-Onconet Project, Medical Virtual Class Room (MVCR) Project, National Knowledge Network (NKN) Project, National Medical College Network (NMCN) Project, ISRO Telemedicine Project and Sabarimala Telemedicine Project.

According to Dr. Ravi Kumar Chittoria, Nodal Officer, Telemedicine, and Head of Department of Plastic Surgery JIPMER ‘tele-evidence service’ would facilitate discussion of court cases related to patient and legal issues over real time video conferencing. In the near future, with the help of National Informatics Centre (NIC) Puducherry, JIPMER is going to collaborate with Puducherry judiciary to start tele-evidence service in Puducherry courts, he added.

NEWS TODAY 27.09.2024