Friday, November 11, 2016

செல்லாத நோட்டுகளை வைத்து என்ன செய்வது? : திருப்பி கொடுத்த தேர்தல் பொறுப்பாளர்கள்

அரவக்குறிச்சி: ஆளுங்கட்சிக்கு பாதகமாக வந்த தகவலையடுத்து, தேர்தல் பொறுப்பாளர்களின் அவசரக் கூட்டத்தை நேற்று, அமைச்சர்கள் நடத்தினர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் போட்டியிடுகிறார். 11 அமைச்சர்கள், 30க்கும் மேற்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், அ.தி.மு.க.,வுக்கு சாதகமான நிலை இல்லை என, உளவுத்துறை போலீசார், ஆளுங்கட்சி தலைமையிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, திடீரென நேற்று, ஓட்டுச்சாவடி வாரியாக, தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொறுப்பாளர்கள், 'தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்ட பணம் போதுமானதாக இல்லை' எனக் கூறியதாக தெரிகிறது.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: மொத்தம் உள்ள, 245 ஓட்டுச்சாவடிகளில், தலா, 25 என, 11 அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது; செலவுகளை, அமைச்சர்கள் பார்த்து கொள்ள வேண்டும். இருப்பினும், அனைத்து செலவுகளையும் தானே பார்த்து கொள்வதாக, வேட்பாளரான செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். ஆனால், ஓட்டுச்சாவடி முகவர்கள், ஊராட்சி கிளை செயலர்களுக்கு மட்டுமே பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. உள்ளூர் மற்றும் வேறு மாவட்டத்தில் இருந்து வந்த கட்சி நிர்வாகிகள், தங்கள் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆளுங்கட்சி செல்வாக்கு குறைந்து வருகிறது என்ற தகவல், உளவுத்துறை போலீசாரால் தலைமைக்கு சென்றது. இதன் காரணமாக, நேற்று முன்தினம், அமைச்சர்கள் ரகசிய கூட்டம் நடத்தினர். நேற்று, அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோர், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் கூட்டம் நடத்தினர்.அங்கு, ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய், ஊராட்சி கிளை செயலருக்கு, 2,000 ரூபாய் அளித்துள்ளனர். இதனால், அதிருப்தியடைந்த பொறுப்பாளர்கள், '500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல், சாப்பாட்டுக்கு கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலையில் உள்ளோம். இதையெல்லாமல் கொண்டு கொள்ளாமல், செல்லாத, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வழங்கினால், அதை வைத்து என்ன செய்ய முடியும்' எனக் கூறி, பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர். உடனே அமைச்சர்கள், 'தலைமையிடம் பேசி, மாற்று ஏற்படும் செய்கிறோம்' என்று சமாளித்தபடி சென்றுவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை Published On: 10 Jul 202...