Sunday, February 8, 2015

வங்கிகள் பாதுகாப்பானவையா?

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வங்கி ஒன்றில் அண்மையில் நடந்த நகைத் திருட்டும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் நடந்த திருட்டு முயற்சிகளும், வேறு பல இடங்களில் நடந்த ஏ.டி.எம். மைய திருட்டுகளும் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கின.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், சாமான்யர் ஒருவர் வங்கியில் கடன் பெறுவதென்பது மிகவும் சிரமமான விஷயம். அதையும் மீறி வங்கிக் கடன் பெற்றுவிட்டால், அதைத் திரும்பச் செலுத்தும் வரை அவருக்கு நிம்மதி இருக்காது. அதனால், அப்போது கடன் வாங்குவதற்கே பலர் யோசனை செய்வார்கள்.

அவசர பணத் தேவைக்கு பொதுமக்கள் பெரிதும் நம்பியிருப்பது வங்கிகள் தரும் நகைக் கடனை மட்டுமே.

இப்போது, வங்கிகள் அதிகமாகக் கடன் வழங்கினால்தான் அவற்றின் வர்த்தகம் அதிகரிக்கும் நிலை. இதனால், எல்லா வங்கிகளும் போட்டி போட்டுக் கடன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

வீடு, கார், இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான கடன், நகைக் கடன், தனி நபர் கடன் என பல்வேறு வகைகளில் வங்கிக் கடன்கள் வழங்கப்படுகின்றன. வங்கிகளின் நடைமுறைகளிலும் அண்மைக்காலமாக பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஏழை, எளிய மக்கள் தங்களின் அவசர பணத் தேவைக்காக, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்திருந்த 48 கிலோ நகைகளை ஒரு கும்பல் திருடிச் சென்றுள்ளது.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இதேபோன்ற மற்றொரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் உள்ள வங்கிளையொன்றிலும் நடந்துள்ளது. சில நாள்களுக்கு முன்னர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இரு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 48 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வங்கியில் இரவுக் காவலர் கிடையாதாம். பொதுமக்களின் நகைகளையும் ரொக்கத்தையும் வைத்துள்ள ஒரு வங்கியில் இரவுக் காவலர் இல்லாதது ஏன்?

அந்த வங்கிக் கட்டடத்தில் பாதுகாப்புக்காக உள்ள ஐந்து கதவுகளைத் திறந்தால்தான் எவரும் உள்ளே வர முடியுமாம். அப்படியென்றால், இந்த விஷயங்களெல்லாம் அறிந்தவர்கள்தான் இந்த நகைத் திருட்டில் ஈடுபட்டிருக்க முடியும்.

ஒரு வங்கியில் உள்ள கண்காணிப்புக் கேமராவின் இணைப்பையும் பாதுகாப்புப் பெட்டக எச்சரிக்கை மணி இணைப்பையும் துண்டித்துவிட்டு மிகச் சாதாரணமாக 48 கிலோ நகைகளை ஒரு கும்பல் திருடிச் செல்கிறது என்றால், அந்த வங்கியின் பாதுகாப்பைப் பற்றி என்ன சொல்வது? பாதுகாப்புக்காக சிறிய தொகையை செலவு செய்யக்கூடாதா?

எப்போதுமே திருடர்களின் குறி கிராமங்களில் ஒதுக்குப் புறமாக உள்ள வங்கிக் கிளைகள்தான்.

கிருஷ்ணகிரி மாவட்ட வங்கியில் திருடப்பட்ட நகைகளின் உரிமையாளர்கள் மிகவும் ஏழைகள். தங்களின் நகைகள் மீண்டும் தங்களுக்குக் கிடைக்குமா என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.

அவர்களுக்கு வங்கியின் அதிகாரிகள் இதுவரை சரியான பதிலைச் சொல்லவில்லை. எடைக்கு எடை நகையோ அல்லது தங்கமோ கிடைக்கும் என்று மட்டும் சொல்லியுள்ளனர்.

திருட்டுப் போன நகைகளுக்கு உரிய ரசீதுகளை வைத்திருப்பவர்கள் கடன் வாங்கிய பணத்தைத் திரும்பக் கட்டினால் நகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருக்கின்றனர். நகைகள் கிடைக்காவிட்டால் இது எப்படி சாத்தியமாகும்?

வேறு நகைகளைத் தருவது என்றால் எப்படி? தங்கத்தின் அன்றைய கிராம் விலைக்கும் கூடுதலாகத்தான் ஆபரண விலை இருக்கும். கூடுதல் செலவுக்கு யார் பொறுப்பேற்பது? இது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

வங்கிகள், ஒவ்வோர் ஆண்டும் தங்களின் லாபக் கணக்கை அதிகரித்துக் காட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், வங்கிக் கிளைகளுக்கும் ஏ.டி.எம். மையங்களுக்கும் போதுமான இரவுக் காவலர்களை நியமிக்க வேண்டும்.

மேலும், தங்களின் நகைகளை இழந்து தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, நகைகளாகவே வழங்க வேண்டும்.

ஏ.டி.எம். மையங்களில் வைப்பதற்காகக் கொண்டு சென்ற பணம் திருட்டு, ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்ட பணம் திருட்டு என திருடுபவர்களும் புதுப்புது விதமாகத் திருடுவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொழில் நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ப திருட்டுகளும் அதிகரித்து வருகின்றன. வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணம் அவருக்குத் தெரியாமலே மாயமாகும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன.

அந்தச் சமயத்தில் தவறு தங்கள் ஊழியர்கள் மீது என்று தெரிந்தால் வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகம் பணத்தைத் திரும்பத் தருகிறது. இது போல வாடிக்கையாளர்கள் இழந்த நகைகளையும் அவர்களுக்குத் திரும்பத் தர வேண்டும்.

வங்கிகள், பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் தேசிய மயமாக்கப்பட்டன. ஆனால், இப்போது லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பெரும்பாலான வங்கிகள் செயல்படுகின்றன.

முன்பெல்லாம், வங்கிகளில் இருக்கும் பெட்டகங்கள் பாதுகாப்பானவை என்று கருதினர். ஆனால், இப்போது வங்கியிலுள்ள பெட்டகத்தையே திருடலாம் எனும்போது வங்கிகள் பாதுகாப்பானவையா என்ற கேள்வி எழுகிறது.

முதலில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வங்கிக் கிளைகளின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட வங்கியின் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறினால், வங்கிகள் பாதுகாப்பானவயா என்ற கேள்வி மாறி வங்கிகள் பாதுகாப்பற்றவை என்கிற முடிவுக்கு பொதுமக்கள் வருவதென்பது தவிர்க்க முடியாதது!

வேண்டாமே இந்தப் பிடிவாதம்!


சென்னை சட்டக் கல்லூரியை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கொண்டு செல்லக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மற்றும் மாணவர் விடுதிக்கு ஏழு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையிலும், வளாகத்தைவிட்டு வெளியேற மறுத்து, மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தை முன்னிட்டு மாணவர்கள் நடத்திய சாலை மறியலும், பாரிமுனை பகுதியில் ஆறு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட இடையூறும்,அதனைத்தொடர்ந்து காவல் துறை நடத்திய தடியடியும், மாணவர்களின் கல்வீச்சில் பொதுமக்கள் காயமடைந்ததும் விரும்பத்தகாத நிகழ்வுகள்.

சென்னை சட்டக் கல்லூரி 1891-இல் தொடங்கப்பட்டது.

அந்தக் கட்டடம் பிரிட்டிஷ் அரசின் கட்டடக் கலைஞர் ஹென்றி இர்விங் என்பவரால், இந்தோ - சாக்ரானிக் பாணியில், இந்து - முகமதிய கலாசாரங்களை பிரதிபலிக்கும் கட்டடமாக அமைக்கப்பட்டது. தற்போது அக்கட்டடம் வலுவிழந்து நிற்கிறது.

1976-ஆம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியபோது தனியொரு அடுக்குவளாகம் கட்டப்பட்டு, கூடுதலாக ஏழு வகுப்பறைகள் உருவாகின. இந்த வளாகத்தை பாரம்பரியக் கட்டடமாக அன்று அரசு அறிவித்திருந்தால், இந்தப் புதிய கட்டடம் அமைவதற்கான வாய்ப்பு 1976-இல் ஏற்பட்டிருக்காது. அப்போதே வேறு இடம் தேட வேண்டிய அவசியம் நேரிட்டிருக்கும். இப்போது இடத்தை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

இந்தப் பாரம்பரியக் கட்டடத்தை இடிக்கப் போகிறோம் என்று அரசு சொன்னால் அதை சட்டக் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பது நியாயம். இந்தக் கட்டடம், வேறு அரசு அலுவலகங்கள் அல்லது உச்சநீதிமன்றத்தின் வேறு பிரிவுகளுக்கு ஒதுக்கப்படும் என்று சொன்னாலும் மாணவர்கள் எதிர்க்கலாம், போராடலாம். அதில் நியாயம் இருக்கிறது. ஆனால், பழைமையான கட்டடம் வலுவிழந்து வருவதாலும், மாணவர்கள் எண்ணிக்கையின் அளவுக்கு ஏற்ப கட்டடத்தில் வசதிகள் இல்லை என்பதாலும் வேறு இடத்துக்கு கல்லூரியை மாற்ற வேண்டிய நிர்பந்தமானது, தமிழக அரசு மேற்கொண்ட முடிவு அல்ல; காலம் திணித்த முடிவு.

மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சட்டக் கல்விகள் இயக்குநர், "அடுத்த ஆண்டு முதலாக கல்லூரியில் சேரும் மாணவர்கள்தான் புதிய வளாகத்தில் படிக்கப் போகிறார்கள். தற்போது படிக்கும் மாணவர்கள் அனைவரும் படிப்பை முடித்து வெளியேறும் வரை, இந்தக் கட்டடத்தில் படிப்பீர்கள்' என்று உறுதி கூறியதையும்கூட மாணவர்கள் ஏற்க மறுத்து, "நிரந்தரமாக இந்தக் கல்லூரி இதே வளாகத்தில்தான் செயல்பட வேண்டும்' என்று கோரியிருக்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இணைவு பெறும் சட்டக் கல்லூரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் மிக முக்கியமானது சட்டக் கல்லூரியின் பரப்பளவு. நகரம் எனில் ஐந்து ஏக்கர், ஊரகப் பகுதி என்றால் பத்து ஏக்கர் இருக்க வேண்டும். கட்டடத்தில் விரிவுரைக்கூடம் ஒரு மாணவருக்கு 15 சதுர அடி அளவாகவும், நூலகம் உள்ளிட்ட பிற அறைகள் ஒரு மாணவருக்கு 20 சதுர அடி என்பதாகவும் கணக்கிடப்பட்டு, கட்டடம் அமைந்திருந்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை 28.3.2013 முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

இந்த விதிமுறை ஏற்கெனவே இணைவு பெற்றுள்ள கல்லூரிகளுக்குப் பொருந்தாது என்பது உண்மைதான். ஆனால், அது நிரந்தரச் சலுகை அல்ல. மற்ற சட்டக் கல்லூரிகளுக்கு இணையாக பழைய கல்லூரிகளும் தங்களை மாற்றிக் கொள்வதற்கான காலஅவகாசம்தான் இது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

"உயர்நீதிமன்றத்தையொட்டி இப்போது சட்டக் கல்லூரி இருப்பதால்தான் மூத்த வழக்குரைஞர்களிடம் சட்ட நுணுக்கங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள முடிகிறது' என்று மாணவர்கள் முன்வைக்கும் வாதத்தில் அர்த்தம் இருக்கிறது என்றாலும்கூட, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள சட்டக் கல்லூரிகள் நீதிமன்றத்தையொட்டியா இருக்கின்றன என்ற கேள்வியும் எழுகிறது.

ஒவ்வொரு சட்டக் கல்லூரியிலும் ஒவ்வொரு வாரமும் ஒரு சிறந்த வழக்குரைஞரை அழைத்துப் பேச வைத்து, அவரிடம் தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவது மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். தற்போது மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் குறை, நிறைகள் என்ன? தற்போது அவசர சட்டத்தின் மூலம் அமலுக்கு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுகுடியமர்த்துதல் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள விதித்தளர்வில் சாதக, பாதகமென்ன? இதுபோன்ற கருத்தரங்குகள் அல்லது சட்ட வல்லுநர்களின் சிறப்பு சொற்பொழிவுகள் எந்த சட்டக் கல்லூரியிலும் நடத்தப்படுவதாகத் தெரியவில்லை.

மாணவர்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி புரிய வைக்க முடியும். அவர்களும் புரிந்துகொள்வார்கள். ஆனால், இதில் அரசியல் கட்சிகள்தான் மிகப்பெரும் தடையாக இருக்கின்றன. இன்றைய அரசியல் சூழலால், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் மாணவர்களுக்கு துணை நிற்பதால்தான் இந்தப் போராட்டம் பிடிவாதத்துக்காக நடத்தப்படுகிறதே தவிர, வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

அரசு எடுத்த முடிவு காலத்தின் கட்டாயம். கட்சிகளின் அரசியல் ஆதாயத்துக்கு மாணவர்கள் பலியாகிவிடக் கூடாது. சட்டப் படிப்பின் அடிப்படை, வாதம் செய்வதுதான்; பிடிவாதம் செய்வதல்ல.

கத்திப்பாராவில் குளிர்சாதன வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் சென்னையில் முதல்முறையாக அமைப்பு


சென்னையில் முதன்முதலாக கத்திப்பாரா ஆசர்கானாவில் ரூ.1 கோடி செலவில் குளிர்சாதன வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் இன்னும் ஒரு வாரத்திற்குள் திறந்து வைக்கப்படும் என கண்டோன்மென்ட் போர்டு அதிகாரி தெரிவித்தார்.

பொதுமக்கள் அவதி

சென்னைக்கு நுழைவு பகுதியாக ஆலந்தூர் கத்திப்பாரா உள்ளது. கத்திப்பாரா ஆசர்கானா பகுதியில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள் அதிக அளவில் நின்று செல்கின்றன. மாநகர பஸ்களும் நின்று செல்கின்றன. தினமும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இங்குள்ள பஸ் நிறுத்தங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பகுதி பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மென்ட் போர்டு எல்லையில் வருகிறது. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள், வயதானவர்கள் கழிப்பிட வசதி இன்றி கடும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

நவீன பஸ்நிறுத்தம்

பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மென்ட் போர்டு நிர்வாகத்தின் சார்பில் கத்திப்பாரா ஆசர்கானா பகுதியில் குளிர்சாதன வசதி, டி.வி. மற்றும் ஏ.டி.எம். வசதிகளுடன் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் நவீன பஸ் நிறுத்தங்கள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிப்பிட வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது. பஸ் நிறுத்தம் முழுவதும் ரகசிய கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படும். பஸ் நிறுத்தத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக ஆட்கள் இருப்பார்கள். பொதுமக்கள் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறையில் இருந்து டி.வி. பார்த்துக் கொண்டு இருக்கலாம்.

எந்த பகுதிக்கு செல்லும் பஸ் வருகிறது என்பதை அறையில் உள்ள டி.வி.யில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வாரத்தில் திறப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் முதன்முதலாக குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ் நிறுத்தம் இது தான்.

இந்த புதிய பஸ் நிறுத்தம் இன்னும் ஒருவாரத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க கண்டோன்மென்ட் போர்டு நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.பிரபாகரன் கூறினார்.

மின் இணைப்பு பெயர் மாற்றத்தில் தவறான தகவல்:ஒரே விவரம் இல்லாததால் மக்கள் கடும் அதிருப்தி

மின் இணைப்பு பெயர் மாற்றத்தின் போது, மின் கணக்கீட்டு அட்டை, கம்ப்யூட்டர் ரசீதில், தவறான தகவல் இருப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, 1.73கோடி உட்பட, மொத்தம், 2.53 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.


புதிய மின் இணைப்பு:புதிய மின் இணைப்பு பெற, ஒரு முனை, 1,650 ரூபாய்; மும்முனை, 8,500 ரூபாய் கட்டணத்துடன், மீட்டர், 'கேபிள்' போன்றவற்றிற்கு, மதிப்பீட்டு தொகை, தனியாக செலுத்த வேண்டும். ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை, வேறு ஒருவரின் பெயருக்கு மாற்ற, அதற்கான விண்ணப்பத்தை, மின் வாரிய இணையதளத்தில், பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து, வீடு பெயர் மாறியுள்ள சொத்து பத்திரம், சொத்து வரி ரசீது, குடிநீர் வரி ரசீது, வாரிசு சான்றிதழ் என, ஏதேனும் ஒன்றின் நகலுடன் இணைத்து, 200 ரூபாய் கட்டணத்துடன், உதவி பொறியாளர் அலுவலகத்தில் வழங்க வேண்டும். உதவி பொறியாளர், விண்ணப்பத்தை சரிபார்த்து, செயற் பொறியாளர் அலுவலகத்தில் உள்ள, கணக்கீட்டு பிரிவிற்கு, அனுப்பி வைப்பார்.

செயற் பொறியாளர் அலுவலகத்தில், விண்ணப்பதாரர் கோரிய பெயருக்கு, மின் இணைப்பு செய்யப்பட்டு, அதன் விவரம், உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில், உதவி பொறியாளர் அலுவலகத்தில், மின் பயன்பாடு கணக்கீட்டு அட்டையில், புதிய பெயர் எழுதப்பட்டு, விண்ணப்பதாரரிடம் வழங்கப்படும். இந்த விவரம், அனைத்தும், பிரிவு அலுவலகத்தில் உள்ள, கம்ப்யூட்டரில் பதிவு செய்ய வேண்டும்.

கம்ப்யூட்டர் ரசீதில்...:ஆனால், அவ்வாறு, பதிவு செய்வது கிடையாது. இதனால், மின் கட்டண மையங்களில், மின் கட்டணம் செலுத்தும் போது, தரப்படும், ரசீதில், சொத்தின் பழைய உரிமை யாளர் பெயர் உள்ளது. ஒரே மின் இணைப் பில், மின் கணக்கீட்டு அட்டையில், ஒருவர் பெயரும், கம்ப்யூட்டர் ரசீதில், வேறு ஒருவர் பெயரும் இருப்பது, மக்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உதவி பொறியாளர் அலுவலகத்தில்,மக்கள் தரும் விண்ணப்பம், அனைத்தும், பதிவேடுகளில்,பதிவு செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு, பதிவு செய்யாமல், இடைத்தரகர் மூலம் விண்ணப்பம் பெறுவதால், இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால், விண்ணப்பத்தை, கம்ப்யூட்டரில் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

ஏழு நாட்கள்:மின் இணைப்பில், பெயர் மாற்றம் செய்ய வழங்கப்படும், விண்ணப்பம் மீது, ஏழு நாட்களுக்குள், தீர்வு காண வேண்டும். ஆனால், உதவி, செயற் பொறியாளர், ஒரு மாதத்திற்கு மேல், அதை மாற்றி தராமல், மக்களை அலைக்கழிக்கின்றனர். எனவே, மின் வாரிய இயக்குனர்கள், தலைமை, மேற்பார்வை பொறியாளர்கள், பிரிவு அலுவலகங்களில், நேரடி ஆய்வு செய்தால் மட்டும், மக்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

- நமது நிருபர் -



காஸ் மானியத்தின் நிலை என்ன இணையதளத்தில் பார்க்கலாம்

மதுரை:ஆதார் அட்டை இல்லாதவர்கள் நேரடியாக காஸ் வினியோக மையத்திற்கு சென்று வங்கிக்கணக்கு நகலை கொடுத்து மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். இணையதளத்திலும் சரிபார்க்கலாம்.

ஆதார் அட்டை உள்ளவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஆதார் நகலை காண்பிக்க வேண்டும். அதன்பின் காஸ் வினியோக மையத்திற்கு சென்று பதிய வேண்டும். இரண்டு பதிவுகளும் முழுமையானால் உடனடியாக வங்கிக்கணக்கில் மானியம் வரவு வைக்கப்படும்.மதுரையில் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் இரண்டு இணைப்புகளும் முழுமை பெற்றதா என்பதை காஸ் இணைப்புக்கு பதிவு செய்துள்ள மொபைல் போன் எண்ணிலிருந்து *99*99# க்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். வங்கியில் தாமதமா அல்லது காஸ் வினியோக மையத்தில் தாமதமா என்பதை சரிபார்க்கலாம். இரண்டும் சரியாக இருந்தால் எந்த தேதி இணைப்பு முழுமையானது என்ற விபரம் தெரிவிக்கப்படும்.

ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு இரண்டு மாதங்கள் முன்பே மொபைல் போன் எண்ணுக்கு 17இலக்க காஸ் எண் அனுப்பப்பட்டுள்ளது. அந்த எண்ணை காஸ் வினியோக மையத்தில் காண்பித்து வங்கிக்கணக்கு நகலை ஒப்படைத்தால் உடனடியாக மானியத்திற்கு வரவு வைக்கப்படும்.வங்கியின் ஐ.எப்.எஸ்.சி., கோடு எண்ணை தெரிவிக்க வேண்டும் அல்லது mylpg.in இணையதளத்தில் காஸ் எண்ணை பதிவு செய்யும் போது 17 இலக்க எண் குறிப்பிடப்படும். அதன்மூலம் மானியம் குறித்த நிலையை தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து முன்னோடி வங்கி அலுவலர் முருகபிரபு கூறியதாவது:மதுரையில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் மூலம் 6.5 லட்சம் காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 7.2 சதவீத இணைப்புகள் ஆதார் அட்டை பெற்றுள்ளன. ஆதார் அட்டை பெற்றவர்களில் 54 சதவீதம் பேர் காஸ் வினியோக மையத்தில் பதிவு செய்துள்ளனர். 45 சதவீதம் பேர் வங்கியில் பதிவு செய்துள்ளனர். மீதி உள்ள 9 சதவீத பேருக்கு வங்கிக்கணக்கு பரிவர்த்தனைகள் நடந்து வருகின்றன, என்றார்.

மின் வாரியத்தை மிரட்டும் உலக கோப்பை கிரிக்கெட்:கூடுதல் செலவாகும் அபாயம்



உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, விரைவில் துவங்க உள்ளதால், தமிழக மின் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும் என்பதால், மின் வாரியம், கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் தேவை, சராசரியாக, 13 ஆயிரம் மெகாவாட் என்றளவில் உள்ளது. இதை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின் உற்பத்தி ஆகாததால், மின்தடை செய்யப்படுகிறது.

இந்தியா உட்பட, 14 நாடுகள் பங்கேற்கும், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், வரும் 14ம் தேதி துவங்கி, மார்ச் 29ம் தேதி வரை நடக்கிறது. இந்திய நேரப்படி, அதிகாலை 3:00 மணிக்கு துவங்கி, பகல் 1:00 மணி வரை, நாள்தோறும், இரு போட்டிகள் நடக்க உள்ளன. தமிழகத்தில், சிறியவர் முதல் பெரியவர் வரை, கிரிக்கெட் போட்டியை ஆர்வமுடன் பார்க்கின்றனர். இதனால், கிரிக்கெட் போட்டி நடக்கும் போது, மின் தேவை வழக்கத்தை விட, 500 மெகாவாட் அதிகரிக்கும்.

இதனால், மின் வாரியத்திற்கு கூடுதல் செலவாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி, அலுவலகம் செல்ல வேண்டி இருப்பதால், காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை, உச்ச மின் தேவை இருக்கும். அந்த சமயத்தில், நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படும். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, காலையில் நடப்பதால், மின் தேவை, வழக்கத்தை விட, 750 - 1,000 மெகாவாட் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க, தனியாரிடம் மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

தேவை எகிறியது எப்போது? :தமிழகத்தில், கடந்த ஆண்டு, ஜூன் 24ம் தேதி, இரவு 8:25 மணிக்கு, மின் தேவை, 13,775 மெகாவாட் என இருந்தது. அதே ஆண்டு, ஜூன் 20ம் தேதி, ஒருநாள் முழுவதுமான மின் நுகர்வு, 29.34 கோடி யூனிட் என்றளவில் இருந்தது. அதிக மின் தேவை மற்றும் மின் நுகர்வில், இதுவே அதிகபட்ச அளவு. நடப்பாண்டில், இரண்டும் அதிகரிக்கும் என தெரிகிறது.

- நமது நிருபர் -

கஞ்சா போதையில் 'மட்டை'யானவருக்கு கொள்ளி: நெருப்பு சுட்டதும் எழுந்து ஓட்டம் பிடித்தார்



வேலூர்: கஞ்சா போதையில், 'மட்டையானவர்' இறந்ததாக நினைத்து, அவரது உடலை, தகன மேடையில் வைத்து, மகன் கொள்ளி வைத்தார்; நெருப்பு சுட்டதும், போதை ஆசாமி, எழுந்து ஓட்டம் பிடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சுவாரஸ்ய தகவல்:
வயிற்றுவலி:

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜலகம்பாறையைச் சேர்ந்தவர் விவசாயி செண்பகராயன், 50. இவர், வயிற்றுவலிக்காக, அதே பகுதியை சேர்ந்த நாட்டு வைத்தியர் மனோகரன், 55, என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம், இரவு 10:00 மணிக்கு, செண்பகராயனுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக, மனோகரனிடம் லேகியம் வாங்கி சாப்பிட்ட பின், வீடு சென்று தூங்கினார். நேற்று காலை 7:00 மணிக்கு, செண்பகராயனை, மனைவி அஞ்சையம்மாள் எழுப்பினார். அவர் எழுந்திருக்காததால், அதிர்ச்சியடைந்த அஞ்சையம்மாள், நாட்டு வைத்தியர் மனோகரனை அழைத்து வந்தார். மனோகரன், செண்பகராயனை சோதித்துப் பார்த்து, இறந்து விட்டதாக கூறினார். பின், பகல் 12:00 மணிக்கு, செண்பகராயனை தகனம் செய்ய, அப்பகுதியில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். இறுதிச் சடங்கு முடிந்த பின், செண்பகராயன் உடலுக்கு, மகன் சீத்தாராயன் கொள்ளி வைத்தார்.
பயந்த உறவினர்கள்:

அப்போது, திடீரென அலறியபடி, விறகு கட்டைகளை தள்ளிவிட்டு, செண்பகராயன் வெளியே ஓடினார்; பயந்த உறவினர்கள், நான்கு பக்கமும் சிதறி ஓடினர். அவர்களை கூப்பிட்ட செண்பகராயன், தான் உயிருடன் இருப்பதாக கூறினார். நிம்மதியடைந்த உறவினர்கள், நாட்டு வைத்தியர் மனோகரனை பிடித்து விசாரித்தனர். இதில், மனோகரன், லேகியத்தில் கஞ்சா பவுடர் கலந்து விற்பனை செய்வது தெரியவந்தது. செண்பகராயனுக்கு கஞ்சா கலந்த லேகியத்தை கொடுத்ததால், போதையில் மயங்கிக் கிடந்த அவர், இறந்து விட்டதாக கருதி உள்ளனர். பின், மனோகரனை மரத்தில் கட்டி வைத்து, மக்கள், 'பின்னி' எடுத்தனர். எல்லாம் முடிந்தபின் வந்த திருப்பத்தூர் போலீசார், வைத்தியரை கைது செய்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

NEWS TODAY 11.06.2026