Monday, July 25, 2016

ஒரே வேலையில் அழுத்தமாக உணர்கிறீர்களா? #MondayMotivation #DailyMotivation

VIKATAN 

வாரத்தின் ஆறு நாட்களும் ஒரே வேலையில் மூழ்கி சோர்ந்து போகும் நபரா நீங்கள், அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். ஏதாவது ஒரு வேலையில் சிக்கி, முழுவதுமாக அதே வேலையில் ஈடுபட்டு வரும்போது ஒருகட்டத்தில் அந்த வேலை அப்படியே தடைபட்டு நின்று போக வாய்ப்புள்ளது. இது உங்கள் செயல்திறனை குறைப்பது மட்டுமின்றி உங்களை அடுத்தகட்டத்துக்கு நகராமல் நீண்ட நாட்கள் அதே இடத்தில் முடக்கிவிடும்.

இதுபோன்ற தருணங்களில் ஒருவர் இத்தகைய சிக்கலிலிருந்து முழுவதுமாக மீண்டு, புதுமையான விஷயங்களில் ஈடுபட, சில விஷயங்களை தொடர்ந்து ஒரு மாதம் செய்ய வேண்டும். அப்படி செய்தாலே, ஒருவர் புதுமையான மனிதராக மீண்டும் தன்னை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும்.

"ஒரே வேலையில் சிக்கிக் கொள்ளும் ஒருவருக்கு அவரது வயதும், பணிபுரியும் துறையும் தடையில்லை. முதலில் இரண்டு விஷயங்கள் உள்ளன. சில விஷயங்களை செய்ய வேண்டும், சில விஷயங்களை கட்டாயம் செய்யக்கூடாது. இந்த 30 நாட்களிலும் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்...

1.சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்

தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் தினசரி சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். உங்கள் சைக்கிள் பயணங்களில் உங்களை கவனம் சிதற வைக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் பயணத்தையும், நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். எந்த தொந்தரவும் குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை செய்ய பழகுங்கள்.


2.ஒரு நாளைக்கு 10000 ஸ்டெப்ஸ் நடைபயணம்!

ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10000 ஸ்டெப்ஸ் என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10000 ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். அதற்காகஒருவர் தினமும் 7.5 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும் என்பது இல்லை.உங்கள் வீட்டு மாடிக்கு ஏறுவது துவங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேண்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும்.

3.தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள்!

தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதே போல் 30 நாட்களும் புகைப்படம் எடுங்கள். உங்கள் மனநிலை முதல் நாளிலிருந்து தற்போது எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களை புதுமையாக சிந்திக்க வைக்க இந்த பழக்கம் மிகவும் உதவியாக இருக்கும். அது மிகப்பெரிய போட்டொகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது.


4.ஒரு நாவல் எழுதுங்கள்!

ஒரு நாவல் எழுதுங்கள் என்று கூறியவுடன் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். 'நான் ஒரு கணினி பொறியாளர்... நான் எப்படி நாவல் எழுதுவது?' என்று. ஒரு நாளைக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை 1667 வார்த்தைகளில் எழுத துவங்குங்கள் 30வது நாள் 50000 வார்த்தைகள் கொண்ட ஒரு நாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும்.

5. காதலிக்க பழகுங்கள்:

காதல் என்றவுடன் எதிர்பாலின ஈர்ப்பு என்ற அர்த்தம் இல்லை. உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். நீங்கள் செய்யும் சில கெத்தான விஷயங்களுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற‌ நேரங்களில் வேலையை பற்றிய‌ நினைவு இல்லாத உற்சாகமான வேலைகளில் நாட்டம் செலுத்துங்கள்.நண்பர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதிற்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள்.

எதை செய்யக் கூடாது?

1. 30 நாட்களில் சமூக வலைதளங்களில் இயங்காதீர்கள்,

2. காஃபைன் நிறைந்த பானங்களை அருந்தாதீர்கள்.

3. தொலைகாட்சி பார்ப்பதை ஓரளவுக்கு தவிர்த்துவிடுங்கள்.

4. வேலையை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

5. அலுவலக நேரம் தவிர அதிக நேரம் அலுவலகத்தில் இருக்காதீர்கள்.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
உங்கள் திங்கட்கிழமை எப்படி? ஒரு எனர்ஜி க்விஸ் #WelcomeMonday

ஹாய்! ஃப்ரெண்ட்ஸ் திங்கட்கிழமை காலை உங்களுக்கு நேற்றே ஃபேஸ்புக்கில் உங்கள் நன்பர் யாரவது ஒருவர் நாளைக்கு மன்டே என பீதியை கிளப்பி இருக்கலாம். அல்லது இன்று காலை மன்டே மோட்டிவேஷன் என்ற ஹாஷ்டேக்குடன் உங்களை துள்ளி ஓட வைத்திருக்கலாம். உங்கள் மன்டே கபாலி ரஜினி போல மகிழ்ச்சி மன்டேவா? இல்லை என்ன கொடுமை சார் இதுவா? உங்களது மன்டே எப்படி இருக்கும் என்பதை ஒரே ரஜினி பன்ச் சொல்லும்...நீங்களே பாருங்களேன்...ஒரு செல்ஃப் டெஸ்ட்... How is your Monday Morning? - Self test #MondayMotivationHow is your Monday Morning? - An Energy Quiz #WelcomeMonday | உங்கள் திங்கட்கிழமை எப்படி? ஒரு எனர்ஜி க்விஸ் #WelcomeMonday - VIKATAN

இவையெல்லாம் உங்களை பழைய நிலைக்கு எடுத்து செல்பவையாக இருந்துவிடும். உங்களை புதுமையாக சிந்திக்க வைக்க இவற்றை கொஞ்சம் தவிர்க்க பழகுங்கள். இதனை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, நீங்கள் நினைத்த புதுமையான உங்களை 30 நாட்களில் நீங்களே தயார்படுத்தி இருப்பீர்கள்.

இதனை சரியாக பின்பற்றினால், 30 நாட்களுக்குள் நீங்கள் சரியான பாதையில் பயணிக்க, புதுமையாக உணர, அடுத்தகட்டத்து உங்களை நகர்த்த உதவியாக இருக்கும்.

-ச.ஸ்ரீராம்

Sunday, July 24, 2016

கபாலி - ஒரு கெட்ட கனவு!

dinamani-epaper

ஆயிரம் ரூபாய், ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் என்று டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் திரைப்படம் பார்ப்பதற்காக விடுமுறையே அளிக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்பட்ட நிலையில், ரஜினிகாந்தின் "கபாலி' திரைப்படம் ஏதோ சிசில் பி. டெமிலியின் "பைபிள்'; வில்லியம் வைலரின் "பென்ஹர்'; ஜோசப் மான்கிவிஷின் "கிளியோபாட்ரா', பிரான்சிஸ் போர்டு கொப்போலாவின் "காட்பாதர்', ஜேம்ஸ் கேமரோனின் "டைடானிக்'; ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் "ஜுராஸிக் பார்க்' வரிசையில் சர்வதேச அளவில் பேசப்படப் போகிற "மேக்னம் ஓபஸ்' என்று எதிர்பார்த்துப் போய் அமர்ந்தால், பா. ரஞ்சித் இதற்கு முன் இயக்கிய "மெட்ராஸ்' திரைப்படம் அளவுக்குக்கூட ரசிகர்களைத் திருப்திப்படுத்தாததாக அமைந்திருக்கிறது. இந்தத் திரைக்கதையில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் எதற்கு?

ரஜினிகாந்தின் தோற்றமும் சரி, ரசிகர்களைச் கவர்ந்திருக்கும் அவரது இயல்பான சுறுசுறுப்பும் சரி இப்போது "மிஸ்ஸிங்'. இதை அவரும், இயக்குநரும் உணர்ந்து செயல்பட்டிருந்தால் இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கத் துணிந்திருக்க மாட்டார்கள்.

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் என்பதால், பாராட்டுப் பெற்ற பா. ரஞ்சித் என்கிற இயக்குநரை, "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தை வைத்து அவரது இமேஜும் கெடாமல், இவரது "லோ பட்ஜெட்' அடித்தட்டு சிந்தனையும் மாறாமல் படமெடுக்கச் சொன்னதன் விளைவு, ரஜினி ரசிகர்களையும் திருப்பிப்படுத்தாத, நல்ல சினிமா பார்த்த திருப்தியும் ஏற்படாத ஒரு அரைவேக்காட்டு, கலவையாகக் "கபாலி' உருவாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக அரைத்துக் கொண்டிருக்கும் அரதப் பழசான நல்ல தாதாவுக்கும் கெட்ட தாதாவுக்குமான மோதல்தான் கதை. அந்த தாதாக்களின் கதையை அப்படியே படமாக்கினால் "முற்போக்குவாதி' பட்டம் கிடைக்காது என்பதனால், அதில் தமிழ் உணர்வையும், ஜாதிக் கொடுமையையும் கலந்து படமாக்க முற்பட்டிருக்கிறார் பா.ரஞ்சித்.

மலைகளாகக் கிடந்த மலேசியாவை சீராக்கி பொன் விளையும் பூமியாக மாற்றிய தமிழர்களுக்குத் தலைமை தாங்குகிறார் கபாலியாக வரும் ரஜினி. அந்த முன்னேற்றம் பிடிக்காத மலாய் முதலாளிகள் ரஜினியையும், அவரது குடும்பத்தையும் சிதறடிக்கிறார்கள். பின் அந்த முகாமுக்குள் நடக்கும் தீப்பொறி உரசலில் வெடித்துக் கிளம்பி, "தமிழன் முன்னேறினா பிடிக்காதா..! ஒரு தமிழன் ஆளக் கூடாதா? நான் ஆளப் பிறந்தவன்டா...' என ரஜினி தரும் பதிலடிதான் கபாலியின் கதைக் களம்.

தமிழனுக்கு சம்பள உயர்வு பெற்றுத்தரும் கபாலி, அங்கிருக்கும் தமிழர் தலைவரான நாசருக்குப் பின் தலைமை இடத்துக்கு வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாய் தன் மனைவி ராதிகா ஆப்தேவை பறிகொடுத்துவிட்டு சூழ்ச்சி வலைகளில் சிக்கி சிறைக்குப் போகும் அவர், 20 வருடங்களுக்குப் பின் திரும்புகிறார். அதன் பின் நடக்கும் அரசியலும், அதைச் சுற்றி நடக்கும் ஆட்டங்களும்தான் கதை. சில உணர்வுப்பூர்வமான பக்கங்கள் இருப்பது மட்டுமே பொறுமை இழக்காமல் நம்மை உட்கார வைக்கின்றன.

சிறைக்குள்ளிருந்து 20 வருடங்கள் கழித்து வெளியே வரும் கபாலியைப் பார்த்ததும் நிமிர்ந்து அமர்ந்தது தவறு. விறுவிறுப்பாக அடுத்த கட்டம் ஆரம்பிக்கப் போகிறது என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு கட்டத்திலும், பொங்கிவரும் பாலில் தண்ணீரை ஊற்றுவதுபோல திடீர் தொய்வை வலுக்கட்டாயமாக ஏற்படுத்தும் திரைக்கதை அமைப்பு. தாதாக்களின் கிராஸ் ஃபயரில் பலியாகும் அப்பாவி பொதுமக்களின் கதிதான் ரசிகர்களுக்கும்!

கோட் சூட், கூலிங் கிளாஸ், ஒரு கத்தி, பல துப்பாக்கிகளைக்கொண்டு அதைச் சாதிப்பதுதான் ரஜினி ஸ்பெஷல். அது மட்டுமே, ரஜினி இல்லையே. ஆக்ஷனும் இருந்தால்தானே அது ரஜினி. ரஜினியின் பேச்சில் வேகம் இல்லை. நடையில் சுறுசுறுப்பில்லை. நடிப்பில் அவருக்கே உரித்தான தனித்தன்மை இல்லை. அவரை ரொம்பவும் சிரமப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு இடத்தையும் "மகிழ்ச்சி' என்று சொல்லி முடித்து வைக்கும் ரஜினியின் உச்சரிப்பில், அதற்குப் பின் சிலபல இடங்களில் "மகிழ்ச்சி' என்பது மட்டுமேதான் ஒலிக்கிறது. அப்படிப் பேசாத சமயம், ஒன்று சுடுகிறார்... அல்லது நீண்ட வசனங்களைப் பேசுகிறார்.

மாறிப்போன மலேசியாவை பிரமிப்போடு பார்க்கிற காட்சி. அந்த வெண்தாடியும், அந்த தாடிக்குள்ளிருந்து அவ்வப்போது கசிந்து வரும், அந்த அலட்சிய சிரிப்பும், பழைய "பாட்சா' ரஜினியுடன் ஒப்பிட்டுப் பார்த்து வேதனைப்பட வைக்கிறது.

மலேசியாதான் கதைக்களம். ஆனால், மலேசியாவை ஒழுங்காகக் காட்டியிருக்கிறார்களா என்றால் இல்லை. கோலாலம்பூரில் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தை, சென்னை என்றால் அந்தக் காலத்தில் எல்.ஐ.சி. கட்டடத்தையோ, சென்ட்ரல் ரயில் நிலையத்தையோ காட்டுவதுபோலக் காட்டுகிறார்கள். அவ்வளவுதான்.

மலேசியா, சென்னை, தாய்லாந்து என்று அடுத்தடுத்து கதையை நகர்த்திச் செல்லும், "செயின் ரியாக்ஷன்' எத்தனை சுவாரஸ்யமானதாக அமைந்திருக்க வேண்டும்? சர்வதேச நிழல் உலக தாதாக்கள் ஒவ்வொரு சவாலையும் எவ்வளவு மதியூகத்துடன் கடக்க வேண்டியிருக்கும்? ஆனால், ரஜினி கையாளுகிற ஒவ்வொரு சவாலும்... அடப் போங்க சார்... சலிப்பூட்டுகிறது...

வழக்கமாக ரஜினிக்கு இணையான ஆளுமைகள் அவரின் படத்தில் இருப்பார்கள். அப்படி இந்தப் படத்தில் யாரும் இல்லாதது பெரும் குறை. தன்ஷிகா, கிஷோர், ஜான் விஜய், கலையரசன், தினேஷ், ரித்விகா, மைம் கோபி என காட்சிகள் எங்கும் தெரிந்த முகங்கள். இருந்தும், செயற்கைத்தனம்.

படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் யாருமே கதையுடன் பொருந்திப்போகவில்லை. "மெட்ராஸ்' படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் தவிர எல்லோரும் இதில் நடித்துள்ளனர். தனது முந்தைய படத்தில் நடித்தவர்களை இந்தப் படத்திலும் பயன்படுத்த நினைப்பதைப் பாராட்டலாம். அதற்காக பொருத்தமில்லாத கதாபாத்திரங்களில் அவர்களை நடிக்க வைத்தது சரியா...?

ராதிகா ஆப்தே வரும் ஒரு சில இடங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது. ரஜினியும், ராதிகாவும் சந்தித்துக் கொள்கிற அந்த காட்சி உருக்கம். "உன் கருப்பு கலரை அப்படியே எடுத்து பூசிக்கணும்' என்று பேசுகிறபோது ராதிகாவின் கண்கள் உதிர்க்கிற வெட்கம் பேரழகு.

பின்னணி இசையில், "நெருப்புடா தீம்' மட்டுமே ஒலிக்கிறது. படம் முழுக்கவே சந்தோஷ் நாராயணனை நினைக்க வைப்பது அது மட்டுமேதான். "பாபா' தோல்விப்படமாக இருந்திருக்கலாம். ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கவிஞர் வாலியும், கவிஞர் வைரமுத்துவும் எழுதிய அத்தனை பாடல்களும் ரசிகர்களைக் கட்டிப் போட்டன. பாடல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தன. இதில் அப்படிச் சொல்ல ஒரு பாட்டுக்கூடத் தேறாது.

வசனங்களில் இயல்பு இருந்தாலும், தனித்துவம் இல்லை. சம்பந்தமே இல்லாமல் திடீரென்று "நான் ஆண்ட பரம்பரை கிடையாதுடா. ஆனால், ஆளப்பிறந்தவன்டா' என்று வசனம் பேசுகிறார் கபாலியாக வரும் ரஜினி. கோட் சூட் போட்டா உங்களுக்கு ஏன் எரிகிறது என்று கேட்பது சரி, அதற்காக மகாத்மா காந்தியை ஏன் ஏளனப்படுத்திக் கொச்சைப்படுத்த வேண்டும் என்று புரியவில்லை.

ஒரு கலைஞன் எந்த வயதிலும், நிலையிலும் நடிக்க விரும்புவதிலும், நடிப்பதிலும் தவறில்லை. ஆனால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டிய இயக்குநர் பா. ரஞ்சித் அல்ல. அவரை நன்றாகத் தெரிந்திருக்கும், அவரை வைத்துப் பல நல்ல படங்களை இயக்கி இருக்கும் எஸ்.பி. முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார், மகேந்திரன் போன்றவர்கள்.

இயக்குநர் பா. ரஞ்சித்தின் களம் வேறு. பார்வை வேறு. எந்தவித இமேஜ் சுமையும் இல்லாத நடிக - நடிகையர்தான் அவரது படங்களுக்குப் பொருத்தமானவர்கள். குறைந்த பட்ஜெட் படங்கள்தான் அவரது களம். அவரை ரஜினியைக் கதாநாயகனாக வைத்துப் படம் இயக்கச் சொன்னது, குருவி தலையில் பனங்காயை வைத்த கதையாகி விட்டிருக்கிறது.

எல்லாம் போகட்டும். எந்த ஒரு முடிவும் இல்லாத ஒரு உப்புச்சப்பே இல்லாத கிளைமாக்சுடனா ஒரு ரஜினிகாந்தின் படத்தை முடிப்பது? இது ரஜினிகாந்த் படமல்ல, பா. ரஞ்சித் படம் என்றால், இத்தனை பெரிய பட்ஜெட்டிலா இந்தப் படத்தை எடுப்பது?

வெறும் கற்சிலையைப் பார்க்கக் கோயில்களில் சிறப்பு தரிசன டிக்கெட் வசூலிக்கும்போது, மனிதக் கடவுளான ரஜினி படத்திற்கு ரூ.1,000 வசூலிப்பதில் தவறில்லை என்று நியாயப்படுத்துகிறீர்களாமே, ரஞ்சித்? சபாஷ்! என்னே உங்களது முற்போக்கு சிந்தனை! ரஜினியை மனிதக் கடவுளாகக் கருதும் நீங்கள், அவரை அவரது பாணியிலேயே நடிக்க வைத்துப் படம் இயக்கி இருக்கலாமே. பிறகு எதற்காக "ரஞ்சித் படம்' என்கிற போலித்தனம்?

மொத்தத்தில் வழக்கமான ரஜினிகாந்த படமாகவும் இல்லாமல், பா. ரஞ்சித் படமாகவும் இல்லாமல், தொய்வில்லாத விறுவிறுப்பான திரைக்கதையும் அமைக்கப்படாமல், துண்டு துண்டான காட்சிகளை வெட்டி ஒட்டியதுபோல உருவாக்கப்பட்டிருக்கிறது "கபாலி' திரைப்படம்.

அட்டகாசமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மலேசிய நடிகர் வின்ஸ்டன் சாவோ அல்ல இந்தப் படத்தின் வில்லன். ரஜினியின் மேஜிக் துளிக்கூட இல்லாத கதைதான் கபாலிக்கு வில்லன்.

நமது மனத்திரையில் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டாராகவே தொடரவிடுங்கள். அவரை இனியும் நடிக்கச் சொல்லி சிரமப்படுத்தி, அவருக்கு இருக்கும் இமேஜையும், ரசிகர்களின் பேரன்பையும் வேரறுத்து விடாதீர்கள். "கபாலி' ஒரு கெட்ட கனவாக இருந்துவிட்டுப் போகட்டும்!

செப்டம்பர் 30–ந்தேதிக்குள் கருப்பு பணத்தை தெரிவிக்காவிட்டால் சும்மா விடமாட்டோம் பிரதமர் மோடி எச்சரிக்கை



புதுடெல்லி,


கருப்பு பண விவரங்களை செப்டம்பர் 30–ந்தேதிக்குள் தெரிவிக்காதவர்களை வருமான வரித்துறை சும்மா விடாது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.

கருப்பு பணம்

கருப்பு பண விவரங்களை, தானாக முன்வந்து தெரிவித்து, சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 4 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 1–ந்தேதி தொடங்கிய இத்திட்டம் செப்டம்பர் 30–ந்தேதி முடிவடைகிறது.

இந்த காலகட்டத்தில், தங்களது கருப்பு பண விவரங்களை அளிப்பவர்கள், 45 சதவீத வரி மற்றும் அபராதம் செலுத்தி, வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால், செப்டம்பர் 30–ந்தேதிக்குள் கருப்பு பண விவரங்களை அளிக்காதவர்கள் மீது, அதன்பிறகு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மோடி எச்சரிக்கை

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நகை வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மோடி, கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அவர் பேசியதாவது:–

கணக்கில் காட்டப்படாத பணத்தில் பெரும்பகுதி, நகைகளிலும், ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்யப்படுகிறது. சிலர் பெருமளவு பணத்துடன் நகை வியாபாரிகளை தேடிச் செல்வதை நான் அறிவேன். அவர்கள், செப்டம்பர் 30–ந் தேதிக்குள், தங்களிடம் உள்ள கருப்பு பண விவரங்களை அளித்து, தங்களை தூய்மையானவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்யாவிட்டால், செப்டம்பர் 30–ந்தேதிக்கு பிறகு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சும்மா விடாது

வரி ஏய்ப்பு செய்தவர்கள், கடந்த காலங்களில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே நடவடிக்கையை செப்டம்பர் 30–ந்தேதிக்கு பிறகு எடுக்கும் நிலைக்கு மத்திய அரசை தள்ளிவிடாதீர்கள். அந்த பாவத்தை நான் செய்ய விரும்பவில்லை.

செப்டம்பர் 30–ந்தேதிக்குள், கருப்பு பண விவரத்தை அளிக்காத யாரையும் வருமான வரித்துறை சும்மா விடாது.

நிம்மதியாக தூங்கலாம்

அரசுக்கோ, வருமான வரித்துறைக்கோ எதற்கு பயப்பட வேண்டும்? எனவே, கருப்பு பண விவரத்தை அளித்து விடுவது நல்லது. அதன்பிறகு நிம்மதியாக தூங்கலாம்.

வீடுகளிலும், கோவில்களிலும் தங்கம் சும்மா கிடக்கிறது. வீடுகளில் உள்ள தங்கத்தை ஆண்டுக்கு இரண்டு, மூன்று தடவை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

எனவே, அந்த தங்கத்தை நீங்கள் அரசிடம் முதலீடு செய்யலாம். தேவைப்படும்போது, எடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரமும் முன்னேறும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வருவாயைப் பெருக்குவோம்; செலவுகளை குறைப்போம்



DAILY THANTHI   THALAYANGAM

தமிழக அரசின் பட்ஜெட் பெரிய எதிர்பார்ப்புகளை மக்களிடம் ஏற்படுத்தியிருந்தது. அதற்கேற்ப, இந்த ஆண்டு பட்ஜெட்டையும், வரியில்லாத, வரிஉயர்வு இல்லாத பட்ஜெட்டாகவே தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. ஆனால், வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை பட்ஜெட்டாகவே இருக்கிறது. எதிர்பார்த்த வருவாய் இல்லாதநிலையில், நினைத்ததற்கும் அதிகமாக செலவுகள் உயர்ந்துவிட்டநிலையில், இனி எந்தக்கோரிக்கை வைத்தாலும், சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்ற நிலைமை உருவாகிவிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல்செய்யும்போது, இந்த நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 4 கோடியே 23 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், இப்போது தாக்கல்செய்யப்பட்ட திருத்த பட்ஜெட்டில் அரசின் வருவாய் இந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 175 கோடியே 9 லட்சமாகத்தான் இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆக, வருவாய் குறைந்துவிட்டது. ஆனால், இடைக்கால பட்ஜெட் மதிப்பீட்டில் குறிப்பிட்டதைவிட செலவு அதிகமாகியிருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் இந்த நிதியாண்டில் அரசின் செலவு ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 159 கோடியே ஒரு லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டதற்கு மாறாக, ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 29 கோடியே 56 லட்சமாக செலவு உயரும் என்று திருத்தி மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2016–17–ம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.15 ஆயிரத்து 854 கோடியே 47 லட்சமாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.40 ஆயிரத்து 533 கோடியே 84 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய நிலுவையில் உள்ள விவசாயக்கடன் தள்ளுபடி மற்றும் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் போன்ற புதிய அறிவிப்புகளை செயல்படுத்துவதாலும், ஏற்கனவே உள்ள பல்வேறு நலத்திட்டங்கள், மானியங்களை தொடர்ந்து கொடுக்கவேண்டிய இருப்பதாலும் அரசுக்கு செலவு அதிகரித்துள்ளது.

அரசின் செலவில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய வகைகள் செலவினங்கள் மட்டும் ரூ.64 ஆயிரத்து 410 கோடியே 34 லட்சமாகும். இது மொத்தசெலவில் 39.27 சதவீதமாகும். இதுபோல, மானியம் மற்றும் உதவித்தொகைக்கான ஒதுக்கீடு ரூ.68 ஆயிரத்து 211 கோடியே 5 லட்சமாகும். அரசு வாங்கியுள்ள கடன்தொகை ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி என்றநிலையில் வட்டியாக மட்டும் ரூ.21 ஆயிரத்து 215 கோடியே 67 லட்சம் கட்டவேண்டியதிருக்கிறது. இது மொத்த வருவாய் செலவில் 12.93 சதவீதமாகும். ஆக, அரசின் மொத்தவருவாயில் அரசு ஊழியர்கள் சம்பளம், பென்சன், மானியம் மற்றும் உதவித்தொகை, வாங்கிய கடனுக்கான வட்டி ஆகியவற்றிற்கு மட்டும் 93.8 சதவீதம் சென்றுவிடுகிறது. மீதமுள்ள 6.2 சதவீத தொகையை வைத்துத்தான் அரசின் வளர்ச்சித்திட்டங்களுக்கான முதலீடுகள், புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான செலவுகளை சமாளிக்க வேண்டியதிருக்கும்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவால், ஆயத்தீர்வை வசூல் குறைந்தது உள்பட வணிகவரி வசூலும் பெருமளவு குறைந்துவிட்டது. சர்வதேச பொருளாதார வீழ்ச்சி காரணமாக, சிமெண்டு, இரும்பு, மின்சார சாதனங்கள், வாகனங்கள் விற்பனை, எல்லாவற்றிற்கும் மேலாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்டவீழ்ச்சியும் வருவாய் குறைவுக்கு காரணமாகும். 500 டாஸ்மாக் மதுபானக்கடைகளை அடைத்ததிலேயே ரூ.1,500 கோடி வருமானம் இழப்பு ஏற்படும். இந்த சூழ்நிலையில், புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், தேர்தல் அறிக்கைகளில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் நிதிவேண்டும். எனவே, வருமானத்தை பெருக்குவதிலும், செலவுகளை குறைப்பதிலும் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசர, அவசியம் வந்துவிட்டது. தேவையற்றவர்களுக்கு மானியங்கள் செல்வதை தவிர்க்க, மத்திய அரசாங்கம் மானியங்களை நேரடியாக வங்கியில் செலுத்தும் திட்டம்போல, புதிய திட்டங்களை செயல்படுத்துவதே நல்லது.

கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன்களில் அதிகரித்து வரும் 'ரேன்சம்வேர்' தாக்குதல்; தாக்குதலுக்கு ஆளாகும் டாப்-10 நாடுகளில் இந்தியா

DAILY THANTHI


புதுடெல்லி,

உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களில் அதிகரித்து வரும் ’ரேன்சம்வேர்’ தாக்குதல் பற்றி பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'சிமண்டெக்' வெளியிட்டிருக்கும் தகவல்கள் பின்வருமாறு:-

கடந்த சில ஆண்டுகளாக இண்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் மூலமாக பயனர்களை ஏமாற்ற தகவல் திருடர்கள் 'ரேன்சம்வேர்' (Ransomware) என்ற மால்வேரை பரப்பி வருகின்றனர். இந்த மால்வேர் நிரல்கள் ஒருமுறை நம் கம்ப்யூட்டரில் வந்துவிட்டால், அவை ஒட்டுமொத்த கம்ப்யூட்டரையும் முடக்கி விடும். பிறகு, பணம் செலுத்துவதற்காக ஒரு 'பாப்-அப் மெசேஜ்'-ஐ காண்பிக்கும். இதை கிளிக் செய்து அது கேட்கும் பணத்தை செலுத்திய பிறகே கம்ப்யூட்டரை மீண்டும் 'அன்லாக்' செய்ய முடியும். கம்ப்யூட்டர் மட்டுமின்றி தற்போது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இதன் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன.

பணம் பறிக்கும் நோக்கில் பரப்பப்படும் இந்த மால்வேர்கள் பெரும்பாலும், வியாபார நிறுவனங்களையே குறிவைக்கிறது. 2015-ம் ஆண்டு நிலவரப்படி ரேன்சம்வேரை பரப்பிய பின் கம்ப்யூட்டர்களை விடுவிக்க ஹேக்கர்கள் சராசரியாக 679 டாலர்களை வரை கேட்கின்றனர். இந்த வகை மால்வேர் தாக்குதல்களுக்கு அதிக அளவில் ஆளாகும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட புதிய ரேன்சம்வேர்களை கண்டறிந்துள்ளோம். குறிப்பாக, இந்த ஆண்டு கிரிப்டோ-ரேன்சம்வேர் அண்மையில் கண்டறியப்பட்ட புதிய வகை. இது கம்ப்யூட்டரை முடக்கிவிட்டால் அதை அன்லாக் செய்வது என்பது முடியாத ஒன்று. முறையாக பேக் அப் செய்திருக்காவிட்டால் ஹேக்கர்களுக்கு பணம் செலுத்துவது ஒன்றே வழியாக இருக்கும்.

இவ்வாறு சிமண்டெக் தெரிவித்துள்ளது.

Thursday, July 21, 2016

அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவிகள்!

கழிப்பறைக்கு ரூ.333 கோடி; தண்ணீர் யார் தருவார்?' -அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவிகள்!


 அரசுப் பள்ளிகளில் கழிவறை அமைக்கவும், தூய்மைப் பணிகளை மேம்படுத்தவும் 333 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்' என தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில், ' எங்கள் பள்ளி கழிப்பறையில் தண்ணீரே வருவதில்லை. பொது வெளியில் ஒதுங்க வேண்டிய துன்பத்திற்கு ஆளாகிறோம்' என வேதனைப்படுகின்றனர் திருவாரூர், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகில் உள்ள சேங்காலிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், நானூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, பள்ளி கழிப்பறையில் தண்ணீர் வராததால் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

நம்மிடம் பேசிய மாணவி ஒருவர், " எத்தனையோ முறை ஹெச்.எம்மை பார்த்து சொல்லிட்டோம். அவங்க எதைப் பத்தியும் கவலைப்படலை. தண்ணி இறைக்கும் மோட்டார் ரிப்பேர் ஆகிவிட்டது. அதை சரி செய்யாமல் விட்டுட்டாங்க. ' ஸ்கூல்ல நிதி இல்லை, சரி பண்ண முடியாது' ன்னு சொல்றாங்க. வகுப்பு நேரத்தில் அவசரத்திற்குக் கூட பாத்ரூம் போக முடியலை. இடைவேளையில் மறைவான இடம் பார்த்து ஒதுங்க வேண்டிய அளவுக்கு அவஸ்தைப்படறோம். டீச்சர்களுக்கும் இதே நிலைமைதான். நாங்க எல்லாம் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து படிக்கிறோம். கல்வி அதிகாரிகள்கிட்ட புகார் கொடுத்தும் கவனிக்க மாட்டேங்கறாங்க. கொஞ்சம் சொல்லுங்க சார்..." என்கின்றனர் வேதனையோடு. 

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியயை விஜய கவுரியிடம் பேசினோம். " இங்கு நிலத்தடி நீர் மட்டம் ரொம்பவே குறைந்து போய்விட்டது. மாணவர்கள் குடிப்பதற்காக ஊராட்சிமன்ற தண்ணீர் வருகிறது. கழிப்பறைக்குப் போதுமான தண்ணீர் இல்லை. கழிப்பறையைப் பயன்படுத்த முடியவில்லை என்பது உண்மைதான். மோட்டாரும் ரிப்பேர் ஆகிவிட்டது. அதைச் சரி செய்வதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் சரி செய்யப்படும்” என்றார்.

' சுத்தமான கழிப்பிடங்களே நாட்டின் தேவை' என்ற குரல்கள் வலுத்து வரும் வேளையில், கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் பொது வெளியில் ஒதுங்குவதைப் பற்றி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் கவலைப்படுமா?

-ஆ.விஜயானந்த்

குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி தாளாளர்!

பிளஸ் 2 தேர்வும் 'சென்டம்' ரகசியமும்.... குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி தாளாளர்!


பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வு பணிகளை கண்காணிக்கவும் சென்னையில் இருந்து இயக்குநர்கள், இணை இயக்குநர்களை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைப்பது வழக்கம்.

நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பிரபலமான தனியார் பள்ளிகளில், மாணவர்கள் 'மாஸ் காப்பியிங்கில்' ஈடுபடுவதாக நீண்ட நாளாகக் குற்றச்சாட்டு உண்டு. இதற்கிடையே ஈரோட்டில் பிரபலமான ஆதர்ஷ் மற்றும் ஐடியல் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 'பிட்' அடிப்பதாக அப்போதைய இணை இயக்குநரும் தற்போதைய மெட்ரிக் பள்ளி இயக்குநருமான கருப்பசாமிக்கு தகவல் கிடைத்தது.

ஈரோட்டில் உள்ள அந்த பிரபலமான பள்ளிக்கு இணை இயக்குநர் வரும் தகவல் கிடைத்ததும் மாணவர்களுக்கு சிக்னல் கொடுத்தனர், அங்குத் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள். அந்த பள்ளியில் இரு மாடிக்கட்டடங்களிலும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அப்போது அவசர அவசரமாக மாணவர்கள் ஜன்னல் வழியாக பிட்டுகளை தூக்கி எறிந்தனர். அந்த பிட்டுகள் பள்ளி வளாகத்தில் நுழைந்த இணை இயக்குநர் கருப்பசாமி தலை மீதே விழுந்ததுதான் வேடிக்கை.

தன் மீது விழுந்த பிட்டு பேப்பர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அந்த இரு பிரபலமான தனியார் பள்ளிகளில் 'மாஸ் காப்பியிங்' நடப்பதாக அரசுத் தேர்வுத்துறைக்கு அறிக்கை அனுப்பியதோடு தனது வேலையை முடித்துக்கொண்டார்.

இது ஒரு புறம் இருக்க, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இனிதே தொடங்கியது. திருச்சி லால்குடியில் ஒரு பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது வேதியியல், இயற்பியல், உயிரியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள்களில், குறிப்பிட்ட 5 மாணவர்கள் 200க்கு 200 மார்க் வாங்கியிருந்தனர். அந்த குறிப்பிட்ட 5 மாணவர்களின் விடைத்தாள்களில் இருந்த கையெழுத்து ஒரே மாதிரியாக இருந்ததை விடைத்தாளை திருத்திய ஆசிரியர் கண்டுபிடித்தபோதுதான் 'சென்டம்' ரகசியம் அம்பலமானது. அதாவது ஒரே நபரே 5 மாணவர்களுக்கும் விடைத்தாள்களில் விடைகளை எழுதியிருக்கிறார்.

இதில் ஆச்சர்யமான விஷயம்.. ஈரோட்டில் இணை இயக்குநர் கருப்பசாமி தலை மீது பிட்டுகளை வீசிய அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் விடைத்தாள்கள்தான் அது என்று தெரியவந்தது. எங்கேயோ உதைக்கிறது, என்று கருதிய அரசு தேர்வுத்துறை, அந்த விடைத்தாள்களை, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பிய போது, அவை ஒரே ஆளால் எழுதப்பட்டு, அந்த 5 மாணவர்களின் விடைத்தாள்களோடு இணைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த குறிப்பிட்ட 5 மாணவர்களை வரவழைத்து தனித்தனியாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, அது தங்களது கையெழுத்து இல்லை, என்று ஒத்துக் கொண்டனர்.



இது தொடர்பாக, இப்போது ஈரோட்டில் பிரபலமான அந்த இரு தனியார் பள்ளிகளில் தேர்வுப்பணியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி தலைமையாசிரியர் நசீர் உட்பட 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஈரோட்டின் பிரபலமான அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ், பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கட் ஆப் மார்க்கிலும் முதலிடம் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். இதே பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் 'சென்டம்' பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில்‘மெரிட்டில்’ சேர்ந்துள்ளனர்.

இப்போது அந்தப் பள்ளி மாணவர்களின் 'சென்ட்ம்' மார்க் மீது மற்றவர்களுக்கு சந்தேகக் கறை படிய தொடங்கியுள்ளது. இது தொடர்பாக விரிவாக விகடன்.டாட் காமில் நேற்று (புதன்) செய்தி வெளியானது. இது தொடர்பாக விளக்கம் கேட்க, ஐடியல் பள்ளி தாளாளர் சிவலிங்கத்தைத் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததாகவும் இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க முன்வந்தால் அதனை பிரசுரிக்க தயாராக உள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் நம்மை தொடர்பு கொண்டு பேசிய ஈரோடு ஐடியல் மற்றும் ஆதர்ஷ் பள்ளியின் தாளாளரான சிவலிங்கம், "எங்கள் பள்ளியில் எந்தத் தவறும் நடக்கவில்லை. மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடவில்லை. இப்போது எங்கள் மீது திட்டமிட்டே அதிகாரிகள் பழி சுமத்துகின்றனர். கடந்த 35 ஆண்டுகளாக கல்விப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. வீண் வதந்திகளைப் பெற்றோர்கள் நம்ப வேண்டாம். இதற்கு மேல் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

- எம்.கார்த்தி

NEWS TODAY 07.06.2026