Thursday, July 21, 2016

அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவிகள்!

கழிப்பறைக்கு ரூ.333 கோடி; தண்ணீர் யார் தருவார்?' -அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவிகள்!


 அரசுப் பள்ளிகளில் கழிவறை அமைக்கவும், தூய்மைப் பணிகளை மேம்படுத்தவும் 333 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்' என தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில், ' எங்கள் பள்ளி கழிப்பறையில் தண்ணீரே வருவதில்லை. பொது வெளியில் ஒதுங்க வேண்டிய துன்பத்திற்கு ஆளாகிறோம்' என வேதனைப்படுகின்றனர் திருவாரூர், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகில் உள்ள சேங்காலிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், நானூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, பள்ளி கழிப்பறையில் தண்ணீர் வராததால் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

நம்மிடம் பேசிய மாணவி ஒருவர், " எத்தனையோ முறை ஹெச்.எம்மை பார்த்து சொல்லிட்டோம். அவங்க எதைப் பத்தியும் கவலைப்படலை. தண்ணி இறைக்கும் மோட்டார் ரிப்பேர் ஆகிவிட்டது. அதை சரி செய்யாமல் விட்டுட்டாங்க. ' ஸ்கூல்ல நிதி இல்லை, சரி பண்ண முடியாது' ன்னு சொல்றாங்க. வகுப்பு நேரத்தில் அவசரத்திற்குக் கூட பாத்ரூம் போக முடியலை. இடைவேளையில் மறைவான இடம் பார்த்து ஒதுங்க வேண்டிய அளவுக்கு அவஸ்தைப்படறோம். டீச்சர்களுக்கும் இதே நிலைமைதான். நாங்க எல்லாம் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து படிக்கிறோம். கல்வி அதிகாரிகள்கிட்ட புகார் கொடுத்தும் கவனிக்க மாட்டேங்கறாங்க. கொஞ்சம் சொல்லுங்க சார்..." என்கின்றனர் வேதனையோடு. 

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியயை விஜய கவுரியிடம் பேசினோம். " இங்கு நிலத்தடி நீர் மட்டம் ரொம்பவே குறைந்து போய்விட்டது. மாணவர்கள் குடிப்பதற்காக ஊராட்சிமன்ற தண்ணீர் வருகிறது. கழிப்பறைக்குப் போதுமான தண்ணீர் இல்லை. கழிப்பறையைப் பயன்படுத்த முடியவில்லை என்பது உண்மைதான். மோட்டாரும் ரிப்பேர் ஆகிவிட்டது. அதைச் சரி செய்வதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் சரி செய்யப்படும்” என்றார்.

' சுத்தமான கழிப்பிடங்களே நாட்டின் தேவை' என்ற குரல்கள் வலுத்து வரும் வேளையில், கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் பொது வெளியில் ஒதுங்குவதைப் பற்றி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் கவலைப்படுமா?

-ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...