Monday, October 2, 2017

புற்றீசல் போல் பெருகும் மதுக்கடைகள்'மது'ரை:போதையில் பொங்கி வழியும் குடிமகன்கள்
பதிவு செய்த நாள்
அக் 02,2017 02:05



மதுரை;மதுரையில் மூடப்பட்ட மதுக்கடைகள் எல்லாம் மீண்டும் புற்றீசல் போல் திறக்கப்பட்டு வருகிறது. போதையில் பொங்கி வழியும் 'குடிமகன்'களின் கூட்டத்தால் மதுரையே தள்ளாடிக் கொண்டிருக்கிறது.சில மாதங்களுக்கு முன் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சாலையோர மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட குடியிருப்பு பகுதிகளில் புதிய டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த பொதுமக்கள் புதிதாக அமைத்த மதுக்கடைகளை அடித்து நொறுக்கினர். இப்பிரச்னைக்கு பின் மதுக்கடைகள் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால், மதுரையில் தற்போது மூடப்பட்ட மதுக்கடைகள் எல்லாம் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெரியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் அடுத்து, அடுத்து மூன்று மதுக்கடைகள் 'பட்டை'யை கிளப்பிக் ண்டிருக்கிறது.குடிமகன்களின் தொல்லையால் பஸ் ஸ்டாண்ட்டுக்குள் பெண்கள் தலைகாட்ட அஞ்சுகின்றனர். திறந்த வெளி பார் போல் இங்குள்ள கடைகள் உள்ளன. உள்ளே இருந்து குடிப்பது யார், என்ன ரகம் குடிக்கிறார்கள் என்பது வரை பளிச் என தெரிகிறது. 

பஸ் ஸ்டாண்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் இதை வேடிக்கை பார்க்கும் அவலம் உள்ளது. இந்த கடைகளுக்கு எங்கும் இல்லாத வகையில் இரண்டு வழிப்பாதை வேறு. இதே, போல் மதுரை ஆத்திகுளம் - புதுார் ரோட்டில் வீடுகளுக்கு நடுவே, புதுநத்தம் ரோடு திருப்பாலை கோயில் மற்றும் பள்ளிக்கு அருகில், நரிமேட்டில் பள்ளி அருகே என, பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மதுக்கடைகள் தடையின்றி செயல்பட்டு வருகிறது.இது போன்ற பொது இடங்களில் மதுக்கடைகள் அமைக்கக் கூடாது என்று தெரிந்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடைகளை திறப்பது, திறந்து வருவது வேடிக்கையாக இருக்கிறது. 

இந்த லட்சணத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் சம்பவங்களும் நடக்கிறது. மது விஷயத்தில் அதிகாரிகள் மயங்கி விடாமல் மக்கள் கூடும் இடங்களை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட வேண்டும். பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு மூடுவிழா நடத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
அறை கிடைக்காமல் பயணிகள் திணறல்:போக்குவரத்து நெரிசலில் தவிப்பு
பதிவு செய்த நாள்02அக்
2017
01:40

கொடைக்கானல்;கொடைக்கானலில் தொடர் விடுமுறையில் குவிந்த சுற்றுலாபயணிகள ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறை கிடைக்காமல் திணறினர். சிலர் குழந்தைகளுடன் பஸ்ஸ்டாண்ட்டில் தங்கினர்.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது.தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். இதனால் ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் திணறினர்.ரூ.800 க்கு பெறுமான அறைகள் ரூ.2,500 லிருந்து ரூ.3,000 வரை வாடகை நிர்ணயிக்கப்பட்டது. ரிசார்ட்ஸ்கள் அனைத்தும் ஆன் -லைனில் புக்காயின. சுற்றுலாபயணிகள் வருகையால் தனியார் காட்டேஜ்களுக்கு கொண்டாட்டமாகியது. 

5 பேர் தங்கக்கூடிய காட்டேஜ்கள் ரூ. 12.000 லிருந்து ரூ.20.000 வரை பேரம் பேசப்பட்டன. வேறு வழியின்றி சுற்றுலாபயணிகளும் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பல சுற்றுலாபயணிகள் பஸ்ஸ்டாண்ட் மற்றும் அடைக்கப்பட்ட கடைகளில் வெளியே துாங்கும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. உணவகங்களில் பொருட்களின் விலையை கூட்டி ஓட்டல் உரிமையாளர்கள் கல்லா கட்டினர்.

கொடைக்கானலுக்கு அதிகளவு வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோட்டின் இருபக்கமும் மணல் மற்றும் செங்கல் ஏற்றி செல்லும் பிக்அப், லாரி வாகனங்களின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசாரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டினர். 

நகரில் ஒரு வழிப்பாதை இல்லாததால், பயணிகள் வாகனங்களிலேயே பல மணிநேரம் திணற வேண்டி இருந்தது.
அரசியல், களமிறங்க,ஆயத்தமாகும்,கமலுக்கு,ரஜினி, சூடு!

சென்னை:அரசியல் களமிறங்க ஆயத்தமாகும் கமலுக்கு சூடு வைக்கும் வகையில், ''சினிமா செல்வாக்கால், அரசியலில் ஜெயிக்க முடியாது; அதற்கு மேல் ஒன்று உண்டு. அது, என்ன என மக்களுக்குத்தான் தெரியும்,'' என, சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில், ரஜினி பேசினார். 'முரசொலி' பவள விழாவில், 'தற்காப்பை விட தன்மானம் முக்கியம்' என, சீண்டிய கமலுக்கு பதிலடியாக அமைந்த ரஜினியின் பேச்சு, விழாவை விவாத மேடையாக்கியது.




சென்னை, அடையாறில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு, தமிழக அரசு, 2.8 கோடி ரூபாயில், மணிமண்டபம் அமைத்துள்ளது. அவரது பிறந்த நாளான நேற்று, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மணி மண்டபத்தை திறந்து வைத்து பேசியதாவது:

சிவாஜி கணேசன் மணி மண்டப விழாவில் பங்கேற்றதன் மூலம், நாம் அனைவரும் பெருமை அடைந்துள்ளோம். அண்ணாதுரை, ஈ.வெ.ரா., போன்றவர்களால், பாராட்டப் பட்டவர் சிவாஜி.

பல உதவிகள்

வரலாற்று தலைவர்கள், கடவுள்களை நாம் நேரில் பார்த்தது இல்லை. அவர்களை, நம் கண் முன் நிறுத்தியவர் சிவாஜி. செவாலியே உள்ளிட்ட பல விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர்.

திரையுலகில், மூன்றாவது தலைமுறையாக, அவரது குடும்பத்தினர் சிறப்பு சேர்த்து வருகின்றனர். தமிழக அரசு, திரைத் துறைக்கு, பல உதவிகளை செய்து வருகிறது. 1993 முதல், சிவாஜி கணேசன் பெயரில் விருதையும் வழங்கி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் ரஜினி பேசியதாவது:

மணிமண்டபத்தை திறந்து வைத்த பன்னீர்செல்வம் அதிர்ஷ்டசாலி; அது, பல , தடவை நிரூபணமாகி உள்ளது. காலம் காலமாக நிலைத்து நிற்கும் இந்த சிறப்பை, பன்னீர்செல்வம் பெற்றது பாக்கியம். நடிப்புலக சக்கரவர்த்தியாக விளங்கிய சிவாஜி கணேசன் நடை, உடை, பாவனை என, அனைத்திலும் புரட்சி செய்தார்.உலக அளவில், இவரைப் போல் யாரும் நடிக்க முடியாது என்ற சிறப்பை பெற்றவர். வெறும் நடிப்பு மட்டுமே, இவருடைய சிறப்பு இல்லை. வரலாற்று நாயகர்கள், புராணத் தலைவர்களை மக்களின் கண் முன் நிறுத்தியவர்.

அதனாலேயே, இவருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கடவுள் மறுப்பு உச்சத்தில் இருந்த போது, நெற்றியில் திருநீறு பூசி நடித்து வெற்றி கண்டவர்.

பெருமையானது

இறந்த பின், சிலர் மண்ணாவர்; சிலர் சாம்பல் ஆவர். ஆனால், சிலையான சிவாஜியுடன் பழகி இருப்பது, நமக்கு பெருமையான விஷயம். அரசியல், சினிமா இரண்டும் இணைந்த விழா இது. நடிப்பு மட்டுமின்றி,அரசியல் பாடத்தையும், சிவாஜி சொல்லி கொடுத்து உள்ளார். சிவாஜி தனி கட்சி துவங்கி, தேர்தலில் சொந்த தொகுதியிலேயே தோற்றார். அது, அவருக்கு கிடைத்த அவமானம் அல்ல; அத்தொகுதி மக்களுக்கு ஏற்பட்ட அவமானம்.

அரசியலில் வெற்றி பெற சினிமா புகழ், செல்வாக்கு, பணம் மட்டும் போதாது. அதற்கு மேல் ஒன்று உண்டு. அது என்னவென மக்களுக்கு மட்டுமே தெரியும். எனக்கு தெரியாது; அந்த ரகசியம் கமலுக்கு தெரிந்து இருக்கலாம் என, நினைக்கிறேன்.அதை, இப்போது கேட்டால் சொல்ல மாட்டார்; 'என்னுடன் வா சொல்கிறேன்' என்கிறார். ஒரு வேளை இரண்டு மாதத்திற்கு முன் கேட்டு இருந்தால், சொல்லியிருப்பார் என, நினைக்கிறேன். சிவாஜி கணேசனுக்கு புகழ் சேர்ந்த ஜெயலலிதா, கருணாநிதிக்கு நன்றி.இவ்வாறு ரஜினி பேசினார்.

தன்மானம்

'சினிமா செல்வாக்கால் ஜெயிக்க முடியாது' என்ற ரஜினியின் பேச்சு,அரசியலில் களமிறங்க ஆயத்தமாகும் கமலுக்கு, சூடு வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆக., 10ல், சென்னையில் நடந்த, 'முரசொலி'

பவள விழாவில், ரஜினி மேடையில் அமராமல், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார். கமல், தன் பேச்சில், 'எனக்கு தற்காப்பை விட தன்மானம் முக்கியம்' எனபேசி, ரஜினியை மறைமுகமாக கிண்டலடித்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த விழாவில் ரஜினி பேசியுள்ளார். சிவாஜி மணி மண்டப திறப்பு விழா, அரசியல் விவாத மேடையாகி விட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

நடிகர் கமல் பேசியதாவது:

மாநில, தேசிய, ஆசிய எல்லைகளை கடந்த உலக நடிகர் சிவாஜி. நான் நடிகனாகவில்லை என்றால், ஒரு ரசிகனாக வெளியே இருந்து, இந்நிகழ்ச்சியை பார்த்து இருப்பேன். நடிப்பை கற்றுக் கொடுத்து, என்னை போன்ற பலரின் வாழ்க்கையை மேம்படுத்திய, கலைஞனுக்கு நன்றி செலுத்தும் விழா இது.

எத்தனை அரசுகள் வந்தாலும், சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும். இதை, வற்புறுத்தியோ, கெஞ்சியோ, மிரட்டியோ கேட்க வேண்டியதில்லை. மணி மண்டபம் அமைத்து,விழா எடுத்த அரசுக்கும், அரசியலுக்கும் நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் பிரபு பேசுகையில்,''சிவாஜி மணி மண்டபம் திறப்பு விழாவால், ஜெயலலிதாவின் கனவு நனவாகி உள்ளது. சிவாஜி சிலையை அமைத்த, கருணாநிதியின் பெயரும், கல்வெட்டில் இடம் பெற வேண்டும்,'' என்றார்.விழாவில், அமைச்சர்கள் ஜெயகுமார், ராஜு, பாண்டியராஜன், பெஞ்சமின், மயிலாப்பூர், எம்.எல்.ஏ., நட்ராஜ், நடிகர்கள் நாசர், விஷால், சுஹாசினி உள்ளிட்ட திரையுலகினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

எதிரும், புதிரும் கைகோர்ப்பு

* எதிரும், புதிருமாக கடுமையாக விமர்சித்து கொண்ட அமைச்சர் ஜெயகுமாரும், நடிகர் கமலும், மேடையில், கை குலுக்கி, சிரித்து பேசினர். கமலுக்கு, ஜெயகுமார் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்
* மணிமண்டபம் திறப்பு விழா முடிந்து, வி.ஐ.பி.,க்கள் சென்றதும்,
ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், சிவாஜி சிலை முன் நின்று, புகைப்படம் எடுத்தனர். சில ரசிகர்கள், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்
* மெரினா கடற்கரை சாலையில் அகற்றப்பட்ட சிவாஜி சிலை, மணிமண்டபத்தின் வெளியே நிறுவப்படாமல், உள்ளே நிறுவப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்
* மணிமண்டபத்தின் உள்ளே, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில்
பிரபலமான நடிகர்களுடன், சிவாஜி கணேசன் உள்ள புகைப்படங்கள் இடம் பெறவில்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளது
* மணிமண்டப வாசல், வடக்கு திசை பார்த்து, வாஸ்து அடிப்படையில்அமைக்கப்பட்டுள்ளது.
சிலையும், வடக்கு நோக்கியே அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, கடற்கரை சாலையில், சிவாஜி சிலை, வடக்கு நோக்கியே நிறுவப்பட்டிருந்தது.
தூய்மையான கோயிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு!

செ.சல்மான்

ஈ.ஜெ.நந்தகுமார்


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை இந்தியாவில் சுத்தமான கோயிலாக மத்திய அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. இதனால் மதுரை மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு காரணமான மதுரை கலெக்டர் வீரராகவராவையும், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகரையும், அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

தூய்மை பாரதம் திட்டத்தை மதுரை மாவட்டத்தில் தீவிரமாக செயல்படுத்திய மாவட்ட நிர்வாகம், கடந்த சில நாள்களாக தூய்மையே சேவை திட்டத்தை இடைவெளி இல்லாமல் செயல்படுத்தி வருகிறார்கள். வைகை ஆற்றைஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் பங்களிப்புடன் இரண்டு நாள்களாக சுத்தம் செய்து டன் கணக்கில் குப்பைகளை அப்புறப்படுத்தினார்கள். அதுமட்டுமில்லாது பள்ளிகளில் கலெக்டரே நேரடியாக இறங்கி சுத்தம் செய்தார். அவருடைய சுறுசுறுப்பை பார்த்து மற்ற அதிகாரிகளும் , பொதுமக்களும் களத்தில் இறங்கினார்கள்.




மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஐநூறு மீட்டர் சுற்றளவில் பிளாஸ்டிக், பாலித்தீன் பயன்பாட்டுக்கு தடை போட்ட மாநகராட்சி நிர்வாகம் மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்படவர்களுக்கு அபராதம் வித்திக்க தொடங்கியது. அதுபோல் கோயிலுக்குள் குப்பைகளை போடுபவர்களை எச்சரித்து வளாகம் முழுவதும் குப்பைக்கூடைகளை வைத்தனர். வரும்காலத்தில் குப்பை போடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி யாரும் அசுத்தம் செய்துவிடாமல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார்கள்.



கலெக்டரும், மாநகராட்சி கமிஷனரும் மிக உறுதியாக செயல்பட்டதால் சுத்தமான கோயிலாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர்ராஜு, உதயகுமார், எம்.எல்.ஏக்கள், கலெக்டரையும், கமிஷனரையும் பாராட்டினார்கள்.
"பார்த்தோம், பார்க்கவில்லை.." அதிரவைத்த அமைச்சர்களையும் விசாரிக்குமா விசாரணை கமிஷன்?

vikatan

ஜெ.பிரகாஷ்



தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒருவருடத்தைக் கடக்கவிருக்கும் நிலையில், அவரது மரணத்தில் எழும் சர்ச்சைகளும், அ.தி.மு.க-வில் நிலவும் குழப்பங்களுமே இன்றைய சமூக வலைதளங்களுக்கும், பத்திரிகை உலகுக்கும் செய்தியாக இருக்கிறது. ஜெ-வின் மரணத்துக்குப் பிறகு தமிழக அரசியலே மாற்றம் கண்டது. அந்த நேரத்தில், அவருடைய மரணம் பற்றி விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன. ஆனால், அவர் நின்ற தொகுதி (ஆர்.கே.நகர்) காலியாக அறிவிக்கப்பட்டு... இடைத்தேர்தல் வந்ததால், அவற்றையெல்லாம் மறந்துபோயினர் நம் அரசியல்வாதிகள். அதற்குப் பின் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகத் தகவல் சொல்லப்பட, அந்தத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைத்தது தேர்தல் ஆணையம். இடையில் மீண்டும் அ.தி.மு.க-வில் பல நாடகங்கள் அரங்கேற... திரும்பவும் பூதாகரமாய் வெடித்திருக்கிறது ஜெயலலிதாவின் மரணம் பற்றிய விவகாரம். இதையடுத்து, ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும்'' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிரடியாய் அறிவிப்பை வெளியிட்டார்.

இதற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், '' 'ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை கமிஷன்' அறிவித்திருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் வேலை மட்டுமல்ல, ஜெயலலிதாவின் மரணத்தை முன்வைத்து தர்மயுத்தத்தை முடித்துக்கொண்டு இரு அணிகளும் இணைந்து, சச்சரவின்றி ஊழல் அத்தியாயத்தைத் தொடங்கப் போடுகிற மோசடித் திட்டம்'' என்று தெரிவித்திருந்தார். அதேபோல் நடிகர் ஆனந்தராஜும், ''இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விசாரணை கமிஷன், மக்களுக்கு மிகப்பெரிய கண்துடைப்பாகத்தான் இருக்கும். இதன்மூலம் யாரும் எதையும் புதிதாகத் தெரிந்துகொள்ளப் போவதில்லை. அ.தி.மு.க-வில் இருக்கும் அணிகள் தங்களுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவே மாறிமாறித் திட்டம் தீட்டுகின்றன. ‘பன்னீர்செல்வம் கேட்டதற்காக விசாரணை கமிஷன் அமைக்கவில்லை’ எனச் சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து விசாரிக்க நினைத்திருந்தால் அதை முன்பே செய்திருக்க வேண்டும். அதோடு, ஓய்வுபெற்ற நீதிபதியைவைத்து இதை விசாரிப்பதில் என்ன நோக்கம் இருக்கிறது என்று புரியவில்லை. அப்படி விசாரணை அமைக்கப்பட்ட எந்த வழக்குகளும் முடிவுக்கு வந்ததுமில்லை'' என்று தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், ''ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால், அதைச் சந்திக்கத் தயார்'' என்று அப்போலோ மருத்துவமனையின் செயல் தலைவர் பிரதாப் சி.ரெட்டி அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர், ''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. எனவே, விசாரணை கமிஷன் அமைத்தால், அதைச் சந்திக்கத் தயாராகவே உள்ளோம். மேலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் யாருடைய தலையீடும் இல்லை'' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாகத் தற்போது நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி தற்போது மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வின் நீதித்துறை உறுப்பினராக உள்ளார். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பான விவகாரம் 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது, ''கர்நாடக நீதிமன்ற முடிவுகளில் சென்னை நீதிமன்றம் தலையிட முடியாது'' என்று தீர்ப்பளித்தவரும் ஆறுமுகசாமிதான்.

'கமிஷனின் விசாரணை அறிக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படவேண்டும்' என்று கூறப்பட்டுள்ள நிலையில், அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது அ.தி.மு.க-வினர் பலரும் அவர் பற்றிய தகவல்களை வெளியிட்டனர். அந்தச் சமயத்தில், ''அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனையில் அம்மாவைப் (ஜெ.வை) பார்தோம்; அம்மா இட்லி சாப்பிட்டாங்க... சட்னி சாப்பிட்டாங்க... நலமாக இருக்காங்க" என்றார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால், இப்போது ''அம்மாவை (ஜெ-வை) மருத்துவமனையில் நாங்கள் யாரும் பார்க்கவேயில்லை. நாங்கள் சொன்னது பொய். எங்களை மன்னித்துவிடுங்கள்'' என்று பல்டி அடிக்கிறார் அதே அமைச்சர். இதற்கு விடைகொடுக்கும் வகையில், ''நாங்கள் எல்லோருமே பார்த்தோம்'' என்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸோ, ''அம்மா, என்னைப் பார்த்து கையசைத்து வாழ்த்தினார்'' என்கிறார்.

''ஜெ-வின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கும் வேளையில், அவர் வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-வும் இப்படி ஆளுக்கொரு கருத்தைச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? அரசாங்கம், விசாரணை கமிஷனை அமைத்தபிறகும் இவர்கள் சொல்லும் பலவித கருத்துகளால் மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆக, அனைத்துக்கும் பதில் சொல்லும் விதமாக விசாரணை கமிஷன் கொடுக்கும் அறிக்கை இருக்க வேண்டும். அதில், எம்.எல்.ஏ., அமைச்சர்கள் சொன்ன தகவல்கள் உண்மையா என்று ஆராயப்பட வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கின்றனர் அ.தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள்.

பதில் சொல்லுமா விசாரணை கமிஷன்?
சாட்டையால் பெண்களை அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா!

சி.ய.ஆனந்தகுமார்
கோ.ராகவேந்திரகுமார்

இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடியிருக்கும் அந்த மைதானத்தில், தலைவிரிகோலமாக நீண்ட வரிசையில் மண்டியிட்ட பெண்கள் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி அமர்ந்தனர். அடுத்த நொடி ஒரு பெரியவர், மிக நீளமான சாட்டையை வேகமாக சுழற்றியபடி அந்தப் பெண்கள் மீது வீசினார். ஒரு சில பெண்கள் அந்தச் சாட்டையடியை 3 முறைக்கும் மேல் தாங்கினர். சிலர் ஒரே அடியில் வலிதாங்க முடியாமல், அலறியடித்தபடி ஓடினர். திருச்சி அருகே நடந்த பெண்களுக்கு பேய் விரட்டிய காட்சிதான் அது.




திருச்சி மாவட்டம், முசிறி அருகிலுள்ள தாத்தையங்கார்பேட்டை அடுத்துள்ளது வெள்ளாளப்பட்டி கிராமம். இங்குள்ள அச்சப்பன் கோயிலில் நடக்கும் பெண்களுக்கு சாட்டையால் அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா நேற்று காலை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு அச்சப்பன், அகோர வீரபத்திரர், மதுரை வீரன், வெடிகாரக்குள்ளன், மகாலட்சுமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இன்று காலை சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்றன. தெய்வங்களின் பஞ்சலோக சிலைகள் ஊஞ்சலில் வைக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து சுவாமிகளை வழிப்பட்டனர். பிறகு சுவாமி சிலைகளைப் பல்லக்கில் வைத்து பக்தர்கள் காட்டுக் கோயிலுக்கு சுமந்து சென்றனர். அங்குப் பூசாரிகள் பாரம்பரிய உடை அணிந்து தப்பு அடித்து ஆடினர். பின்னர் கோயில் பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார்.

அதனைத் தொடர்ந்து பெண்களைச் சாட்டையால் அடித்து பேய்களை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூசாரி கையில் மிக நீளமான சாட்டையை சுழற்ற ஆரம்பித்தார். அருகில் இருந்த பூசாரிகள் மட்டை போன்று நீளமான குச்சியை கையில் வைத்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில், காட்டுக்கோயில் மைதானத்தில் தலைவிரிகோலமாக நீண்ட வரிசையில் மண்டியிட்ட பெண்கள் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி அமர்ந்தனர்.



அடுத்து அந்தப் பூசாரி, வேகமாகச் சாட்டையை சுழற்றி அடிக்க, ஒரு சில பெண்கள் நான்கு, ஐந்து முறை சாட்டையால் அடி வாங்கினர். சிலர் ஒரு அடியிலேயே பதறியடித்து ஓடினர்.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர்,

“ஆயுத பூஜைக்கு அடுத்த நாளான விஜயதசமி அன்று ஆண்டுதோறும் அச்சப்பன் கோயிலில் சாட்டை அடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்குச் சாட்டையால் அடிவாங்கினால் திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வேலைவாய்ப்பு, கல்வியில் சிறந்து விளங்க முடியும், கடன் பிரச்னை அகலும், தொழில் வளர்ச்சி அடைய முடியும், விவசாயம் செழிக்கும், என்ற நம்பிக்கையில் இங்குப் பக்தர்கள் சாட்டையால் அடி வாங்குகின்றனர். இது தவிர பேய் பிடித்தவர்கள், பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சாட்டையடி வாங்கினால் சரியாகிவிடும் என்பது நம்பிக்கை” என்றார்.

இந்தச் சாட்டை அடி திருவிழாவில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் அமர்ந்து வேண்டுதல் நிறைவேறவும், நிறைவேறிய வேண்டுதலுக்காக நேர்த்திக் கடன் செலுத்தும் வகையிலும் பெண்கள் சாட்டையடி பெற்றனர். திருச்சி, நாமக்கல், துறையூர், சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.

தாத்தாக்கள் ஆளுவதற்கு பேரன்கள் ஓட்டுப்போடுகிறார்கள்.

இளம் வாக்காளர்களை ஆளும் முதிய அரசியல்வாதிகள்..! இது ஜனநாயக முரண்

ஐஷ்வர்யா கே.பாலசுப்பிரமணி




தாத்தாக்கள் ஆளுவதற்கு பேரன்கள் ஓட்டுப்போடுகிறார்கள். ஆம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு பக்கம் நாட்டின் 75 சதவிகிதம் பேர் 40 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறை வாக்காளர்கள். இன்னொருபுறம் இந்திய அரசியல்வாதிகளில் 80 சதவிகிதம் பேர் 70 வயதைக் கடந்தவர்கள்.

விடுதலைப்போராட்டம்

இந்தியாவின் அரசியல் எழுச்சியை ரீவைண்ட் செய்து பார்த்தால், அதில் சில சூழல்கள்தான் இளைஞர்களை அரசியலை நோக்கி இழுத்திருக்கிறது. சுதந்திரப் போராட்ட கால சூழலில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அரசியலுக்குள் வந்தார்கள். நாடு விடுதலை பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டும் அவர்களிடம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அரசியலுக்குள் அவர்கள் கலந்தார்கள்.

இன்றைக்கு முதிய அரசியல்வாதிகள் என்ற அடைமொழியோடு இருக்கும் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ், நல்லகண்ணு போன்றோர் அந்த வரிசையில் இடம்பெறுள்ளவர்கள்.

இளைஞர்களை ஈர்த்த பெரியார்

தமிழகத்தில் தமிழர்களின் இன உணர்வைத் தட்டி எழுப்பிய ஆளுமை பெரியார். பார்ப்பனிய எதிர்ப்பு, தன்மானம், பெண் விடுதலை, பகுத்தறிவு என தமிழர்களிடையே இன மான உணர்ச்சியை தட்டி எழுப்பியவர் பெரியார். அவரின் பின்னால் அப்போது இளைஞர்களாக இருந்த அண்ணா, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் அணிவகுத்தனர்.

பெரியாரின் வழித்தோன்றலாக வந்த அண்ணா இந்தி எதிர்ப்பு எழுச்சியில் இளைஞர்களை ஈர்த்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, இந்தி மொழிக்கு எதிரான எழுச்சியை முன்னெடுத்தவர் அண்ணா. அவரைப் பின்பற்றி அரசியலுக்கு வந்த இளைஞர்கள்தான் இன்றைக்கு தி.மு.க, அ.தி.மு.க-வில் இருக்கும் முதிய அரசியல்வாதிகள். சுதந்திரப் போராட்ட காலத்து அரசியல் சூழலும், இந்தி எதிர்ப்பு அரசியல் சூழலும் இந்தியாவில், தமிழகத்தில் இப்போது இல்லையா.

நேர்மையானவர்கள் வருவதில்லை

இந்தச் சூழல் குறித்து தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நல்லகண்ணுவிடம் கேட்டோம். “தனிப்பட்ட முறையில் நான் சிறுவயதிலேயே அரசியலுக்கு வந்தவன். எங்கள் காலத்தில் நாங்கள் அரசியலுக்கு இழுக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருந்தன. ஆனால், தற்போது அப்படி ஒரு சூழல் இல்லை. மற்றொரு புறம் கட்சிக் களத்தில் பணியாற்றும் இளைஞர்கள் எவ்வித பின்னணியும் நோக்கமும் இல்லாமல் இருக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் ஆபத்து.



இங்கே அரசியல் வேறு மாதிரி இருக்கிறது. நேர்மையானவர்கள் இதற்குள் வருவதில்லை. அரசியலில் காலம் காலமாக இருப்பவர்களே மீண்டும் மீண்டும் ஆட்சிக்குப் போட்டி போடுகிறார்கள். அரசியல் என்றால் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிப்பது மட்டுமில்லை. மக்களின் தேவைகளுக்காக உறுதியான காரணங்களுடன் போராடுவதும் அரசியல்தான். ஜல்லிக்கட்டு தடை நீக்கக் கோரி தமிழ் மக்களின் உரிமைக்காக மாணவர்களும் இளைஞர்களும் ஒன்று திரண்டார்கள். அது ஒரு மாபெரும் எழுச்சி.நெடுவாசலில் விவசாயத்தைக் காப்பதற்காக களம் இறங்கியிருக்கிறார்கள். எதற்காக குரல்கொடுக்க வேண்டும் என்கிற தெளிவு இளைஞர்களிடம் இருக்கிறது. அது அரசியல் களத்தில் கட்சிப்பணியில் இருந்தபடிதான் செயலாற்ற வேண்டும் என்று இல்லை” என்கிறார்.

அரசியல்தான் மற்ற எல்லாவற்றுக்கும் ஆளுமையாக இருக்கிறது. ஆளுமைகளுக்கு எல்லாம் ஆளுமை என்று சொல்லலாம். அதிக அளவு தந்திரங்கள், எண்ணற்ற சூழ்ச்சிகள், கணக்கில் அடங்கா அவமானங்களைக் கொண்டதுதான் அரசியலாக இருக்கிறது. இது எல்லாவற்றையும் தாண்டி பதவி சுகத்தை அனுபவிப்பதற்குள் அரசியல்வாதிகளுக்கு வயதாகி விடுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் கூட பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்களாகத்தான் இருக்கின்றனர். எம்.எல்.ஏ- பதவிக்காக போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதைத் தாண்டியவர்களாகத்தான் இருக்கின்றனர். லோக்சபா தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் 60 வயது ஆனவர்களுக்குத்தான் வாய்ப்புகளே கிடைக்கின்றன. இது அரசியல் முதிர்ச்சியாக கருத்தப்படுகிறது. அடிமட்டத் தொண்டனாக இருந்து மக்களைப் புரிந்து கொண்டு லோக்சபா வரை செல்வதற்கு அரசியல் அனுபவம் தேவைப்படுகிறது என்கின்றனர். மற்ற துறைகளைப் போலவே சம்பளமும், பதவியும் உடனே கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பும் இளைஞர்களிடம் இருக்கிறது. ஆனால், இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் அது சாத்தியம் இல்லை.

2021-ல் இளைஞர்கள் இறங்குவார்கள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் யுவராஜிடம் பேசினோம். "தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சியில் 

இருக்கும் திராவிடக் கட்சிகள் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அளிக்கவில்லை. தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இளைய தலைமுறையினர்களை சிந்திக்கவிடவில்லை. மற்ற மாநிலங்களைப் போல அவ்வளவு எளிதாக மக்களால் தலைவர்களைச் சந்திக்கவும் முடியாது. அதனாலேயே இளைஞர்களுக்கும் அரசியலைப் பற்றி ஒரு தெளிவான சிந்தனை இல்லாமல் இருந்தது. அந்த சூழல் இப்போது முற்றிலுமாக மாறி வருகிறது. இளைஞர்கள் அரசியல் பற்றி நிறையப் பேசுகிறார்கள். தங்கள் தலைவர்களிடம் நேரடியாகச் சொல்ல முடியாததை சமூக வலைதளங்களின் வழியாகச் சொல்லும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தற்போது இல்லையென்றாலும் 2021 தேர்தலில் முழுக்க முழுக்க இளைஞர்களின் பங்கு நிச்சயம் இருக்கும். இளைஞர்களுக்கான தேவைகள் மற்றும் சிந்தனைகளுடன் அந்த தேர்தல் அமையும். அதனை அடிப்படையாகக் கொண்டே தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன" என்கிறார்.

எவ்வளவு செலவழிக்க முடியும்?

இளைஞர்கள் அரசியலுக்கு வரத் தயங்குவதற்கு பொருளாதாரச் சூழலும் ஒரு காரணியாக இருக்கிறது என்கிறார் எழுத்தாளர் சரவணன்

சந்திரன், “வயதானவர்களுக்குத்தான் அரசியல் என்ற புரிதல் இன்றும் இருக்கிறது. இரண்டாவது முக்கியப் பிரச்னை இளைஞர்களின் பொருளாதாரப் பிரச்னை. தனது குடும்பத்திற்கான எந்தவிதப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் வயதானவர்கள் நிறைந்துள்ள ஒரு துறையில் இளைஞர்களால் கால்பதிக்க முடியாது. பொருளாதாரப் பின்புலம் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கட்சிகள் அதற்கான இடத்தை அளிப்பதில்லை. தற்போது தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் தங்கள் கட்சியில் இளைஞர்களுக்கு வாய்பளிப்போம் என்று இப்போதுதான் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் கட்சியின் செல்வாக்குள்ள எம்.எல்.ஏ-க்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் தொகுதிகளில் நிலச்சுவாந்தார்கள் போலதான் செயல்பட்டுவருகிறார்கள். அவர்களை மீறி எந்தச் செயலும் மக்களால் செய்ய இயலவில்லை என்பதே நிதர்சனம்.

இப்படி அரசியலில் சேரமுடியாதவர்கள் ரசிகர் மன்றங்களில் இணைகிறார்கள், ரசிகர் மன்றங்கள் தேவை இல்லை என்பவர்கள் அதிலிருந்து வெளியேறுகிறார்கள் ஆனால் அவர்களுக்கு தேசிய கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் இடம் தராதபோது சிறுகட்சிகளில் இணைகிறார்கள். மாநிலத்தில் கட்சிகள் தங்களிடம் இணைபவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி, “உங்களால் எவ்வளவு செலவழிக்க முடியும்?” என்பதே. ஆனால் எந்த இளைஞனிடம் கோடிக் கணக்கில் பனம் இருக்கிறது. அதனால் அவர்களும் இடம் தரமாட்டார்கள், இவர்களும் வரமாட்டார்கள்" என்கிறார்.

ஒருங்கிணைக்கும் தலைவர் இல்லை

இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் கடந்த பின்னர், காங்கிரஸ் ஆட்சிகாலங்களில் ஊழல் மலிந்து விட்டது என்ற பரவலான குற்றசாட்டு எல்லா மட்டத்திலும் இருந்து வந்தது. இதை அறுவடை செய்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநிலத்தின் முதல்வர் வரை உயரமுடிந்தது ஜனநாயகத்தின் ஆச்சர்யங்களில் முதன்மையானது. ஆம் ஆத்மியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சுதா என்ன சொல்கிறார்?

"சுதந்திரப் போராட்டம் போலவோ, இந்தி எதிர்ப்புப் போலவோ, ஊழல் எதிர்ப்பு போன்ற ஒரு சூழல் தமிழகத்தில் இப்போது இல்லை

இப்போது தமிழகத்தில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல் போராட்டம், தாமிரபரணிக்காக நடக்கும் போராட்டம், மீனவர்கள் போராட்டம் இவைகளில் எல்லாம் இளைஞர்கள் பெரும் அளவில் பங்கேற்கின்றனர். இனிமேல் அதுபோன்ற போராட்டங்கள் தொடரும் என்றே கருதுகின்றேன். ஆனால், இளைஞர்களை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு தலைமை தமிழகத்தில் இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல் கட்சிகளில் 50 சதவிகிதம் அளவுக்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு தற்போது இருக்கும் ஊடகங்கள் வாயிலாக அரசியல் ரீதியான விழிப்புஉணர்வு ஏற்பட்டுள்ளது" என்கிறார்.

அமெரிக்காவில் அதிபராக இருப்பவர்கள், இரண்டு முறைகளுக்கு மேல் அந்தப் பதவியில் வகிக்க முடியாது. ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக ஒருவரே முதல்வராக இருந்திருக்கிறார்கள். இருந்து வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதிய தலைவராக இருந்து மறைந்த ஜோதிபாசு மேற்கு வங்கத்தில் 23 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். தி.மு.க தலைவர் கருணாநிதி 19 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 16-வது ஆண்டாக முதல்வராக இருக்கிறார். டெல்லியில் ஷீலா தீட்சித் 15 ஆண்டுகாலம் முதல்வராக இருந்திருக்கிறார், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா 15 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார்.

கட்சித் தலைவர்களை எடுத்துக் கொண்டால், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா 60 வயதானவர். தி.மு.க தலைவர் கருணாநிதி 92 வயதானவர். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 64 வயதானவர். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ 72 வயதானவர்தான். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் 64 வயதானவர். இப்படி தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் எல்லோருமே 60 வயதைக் கடந்தவர்கள்.

வயது நிர்ணயம் தேவை

இளைஞர்களின் அரசியல் எண்ணத்தில் சலிப்பு ஏற்படுவதற்கு காரணம் இதுதான். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருக்கிறது. ஆனால், அரசியல்வாதிகளின் ஓய்வு என்பது அவர்களாக பார்த்து அரசியலில் இருந்து விலகுவது அல்லது அவர்கள் உயிரோடு இருக்கும் வரை தொடர்கிறது. அரசியலிலும் இது போன்று வயது நிர்ணயிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் பரவலாக எழத்தான் செய்கிறது. இது குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால் சாமியிடம் கேட்டோம். "இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதை மறுக்க முடியாது. அரசியல் குறித்த புரிதல் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அரசியல்வாதிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்போதுதான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு வயது நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது வரவேற்க தகுந்த ஒன்று" என்றார்.



சுயநல அரசியல்

டிஜிட்டல் உலகை சிருஷ்டிக்கும் பல கோடி ரூபாய்கள் வர்த்தகம் செய்யும் ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருப்பவர்களின் வயது 30-க்குள் இருக்கிறது. இந்தியாவில் சிறந்த சி.இ.ஓ-க்கள் பட்டியலில் உள்ளவர்கள் பெரும்பாலனவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். ஃபேஸ்புக், வாட்ஸ் அப்-களில் அரசியல்வாதிகளை இளைஞர்கள் பகடி செய்கிறார்கள். மோடியின் மதவாதத்தை கிழிக்கிறார்கள், கருணாநிதியின் குடும்ப அரசியலை போட்டுத்தாக்குகிறார்கள். காங்கிரஸ் ஊழலை கலாய்கிறார்கள். ஆனால், அவர்கள் கள அரசியலில் இறங்க தயங்குகிறார்களா? அரசியல்வாதிகளிடம் இருந்து இளைஞர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள்?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவி நல்லிசை அமிழ்துவிடம் கேட்டோம். " தமிழகத்தின் முதிய அரசியல்வாதியான நல்லகண்ணுவை ஒதுக்கி விட முடியாது. ஆனால், அதே நேரத்தில் இன்றைக்கு புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் தீபாவையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரைக்கும் இளைஞர்கள் ஒருவித தயக்கம் காரணமாக அரசியலில் பங்கேற்காமல் இருந்திருக்கின்றனர். இப்போது அதற்கான முன்னேற்புகள் இருப்பதாகக் கருதுகிறேன். காலம், காலமாக அரசியல்வாதிகளாக இருப்பவர்கள், தங்களுக்கு எது நல்லதோ அதைத்தான் செய்கிறார்கள். அதை விடுத்து மக்களுக்கு என்ன நன்மையோ அதைச் செய்பவராக இருக்கவேண்டும். பொதுநலமாக பேசும் அரசியல்வாதிகள் சுயநலமாகத்தான் செயல்படுகின்றனர்" என்கிறார்.

தீர்மானிப்பது யார்?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை எழும்பூர் கவின் கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் கே.நவ்சாத். அவர் என்ன சொல்கிறார். "இளைஞர்கள் விரும்பக் கூடிய சூழலாக அரசியல் இல்லை. படிப்பு, வேலை என்று ஏற்கனவே திட்டமிடப்பட்ட பாதையில்தான் இளைஞர்கள் செல்கின்றனர். இந்தப் பாதையைக் கூட ஒரு இளைஞனின் பெற்றோரோ அல்லது சமூகமோதான் தீர்மானிக்கிறது. பிறரால் திட்டமிடப்பட்ட பாதையில்தான் நாங்கள் செல்கிறோம். சினிமா, கிரிக்கெட் போல ஒரு டாபிக் ஆகத்தான் அரசியலைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அரசியல் படிப்பதற்கும் யாரும் தயாராக இல்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இத்தனை லட்சம் இளைஞர்கள் பங்கேற்றது என்பதே ஆச்சர்யமான விஷயம்தான். வாழ்வியல், கலாசாரம் சார்ந்தது என்பதால் பங்கேற்றனர் என்று வேண்டுமானால் சொல்லலாம். இளைஞர்களை ஒருங்கிணைத்து அரசியல் முன்னெடுக்கப்பட்டால், குறைந்த அளவில்தான் இளைஞர்கள் முன்வருவார்கள் என்று கருதுகின்றேன்" என்றார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற இன்னொரு இளைஞர் சக்திவேல், "தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று கூறுவதற்கே தயக்கமாக இருக்கிறது. அவருக்கு ஓ.பன்னீர்செல்வம் பரவாயில்லை என்ற மனநிலை இருக்கிறது. அதற்காக அவரை ஏற்றுக்கொள்கிறோம் என்று அர்த்தம் இல்லை. புதிதாக ஒரு கட்சி, இளைஞர்களுக்கான கட்சி வராதா என்று என்னைப் போன்ற இளைஞர்களிடம் ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது" என்கிறார்.

தமிழகத்துக்குத் தலைமையேற்கப்போகும் இளம் தலைவர் யார் என்று தொலைகாட்சிகளில் ஒரு தேடல் வைத்தாலாவது இளம் தலைவர் கிடைப்பாரா?

Dismissal from service should be reserved for grave misconduct: SC

Dismissal from service should be reserved for grave misconduct: SC The Supreme Court ruled that dismissal from service should be imposed on...