Monday, October 2, 2017

சாட்டையால் பெண்களை அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா!

சி.ய.ஆனந்தகுமார்
கோ.ராகவேந்திரகுமார்

இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடியிருக்கும் அந்த மைதானத்தில், தலைவிரிகோலமாக நீண்ட வரிசையில் மண்டியிட்ட பெண்கள் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி அமர்ந்தனர். அடுத்த நொடி ஒரு பெரியவர், மிக நீளமான சாட்டையை வேகமாக சுழற்றியபடி அந்தப் பெண்கள் மீது வீசினார். ஒரு சில பெண்கள் அந்தச் சாட்டையடியை 3 முறைக்கும் மேல் தாங்கினர். சிலர் ஒரே அடியில் வலிதாங்க முடியாமல், அலறியடித்தபடி ஓடினர். திருச்சி அருகே நடந்த பெண்களுக்கு பேய் விரட்டிய காட்சிதான் அது.




திருச்சி மாவட்டம், முசிறி அருகிலுள்ள தாத்தையங்கார்பேட்டை அடுத்துள்ளது வெள்ளாளப்பட்டி கிராமம். இங்குள்ள அச்சப்பன் கோயிலில் நடக்கும் பெண்களுக்கு சாட்டையால் அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா நேற்று காலை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு அச்சப்பன், அகோர வீரபத்திரர், மதுரை வீரன், வெடிகாரக்குள்ளன், மகாலட்சுமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இன்று காலை சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்றன. தெய்வங்களின் பஞ்சலோக சிலைகள் ஊஞ்சலில் வைக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து சுவாமிகளை வழிப்பட்டனர். பிறகு சுவாமி சிலைகளைப் பல்லக்கில் வைத்து பக்தர்கள் காட்டுக் கோயிலுக்கு சுமந்து சென்றனர். அங்குப் பூசாரிகள் பாரம்பரிய உடை அணிந்து தப்பு அடித்து ஆடினர். பின்னர் கோயில் பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார்.

அதனைத் தொடர்ந்து பெண்களைச் சாட்டையால் அடித்து பேய்களை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூசாரி கையில் மிக நீளமான சாட்டையை சுழற்ற ஆரம்பித்தார். அருகில் இருந்த பூசாரிகள் மட்டை போன்று நீளமான குச்சியை கையில் வைத்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில், காட்டுக்கோயில் மைதானத்தில் தலைவிரிகோலமாக நீண்ட வரிசையில் மண்டியிட்ட பெண்கள் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி அமர்ந்தனர்.



அடுத்து அந்தப் பூசாரி, வேகமாகச் சாட்டையை சுழற்றி அடிக்க, ஒரு சில பெண்கள் நான்கு, ஐந்து முறை சாட்டையால் அடி வாங்கினர். சிலர் ஒரு அடியிலேயே பதறியடித்து ஓடினர்.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர்,

“ஆயுத பூஜைக்கு அடுத்த நாளான விஜயதசமி அன்று ஆண்டுதோறும் அச்சப்பன் கோயிலில் சாட்டை அடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்குச் சாட்டையால் அடிவாங்கினால் திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வேலைவாய்ப்பு, கல்வியில் சிறந்து விளங்க முடியும், கடன் பிரச்னை அகலும், தொழில் வளர்ச்சி அடைய முடியும், விவசாயம் செழிக்கும், என்ற நம்பிக்கையில் இங்குப் பக்தர்கள் சாட்டையால் அடி வாங்குகின்றனர். இது தவிர பேய் பிடித்தவர்கள், பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சாட்டையடி வாங்கினால் சரியாகிவிடும் என்பது நம்பிக்கை” என்றார்.

இந்தச் சாட்டை அடி திருவிழாவில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் அமர்ந்து வேண்டுதல் நிறைவேறவும், நிறைவேறிய வேண்டுதலுக்காக நேர்த்திக் கடன் செலுத்தும் வகையிலும் பெண்கள் சாட்டையடி பெற்றனர். திருச்சி, நாமக்கல், துறையூர், சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024