Tuesday, October 31, 2017

வங்கிகளைக் காக்கும் வாடிக்கையாளர்


By எஸ். ராமன்  |   Published on : 31st October 2017 02:27 AM  |
அரசு வங்கித் துறையில் அவ்வப்போது ஏற்படும் நிகழ்வுகள் ஒவ்வொரு இந்திய குடிமகனின் அன்றாட வாழ்க்கையில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை படைத்தது. 
கடந்த வாரத்தில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் வங்கித் துறை சார்ந்த மறு முதலீட்டு (Recapitalisation of banks) அறிவிப்பு, வாராக்கடன்களால் அடித்தளம் தளர்ந்து, சோர்ந்து போயிருந்த அத்துறைக்கு புத்துணர்வை ஊட்டியது என்றால் அது மிகையாகாது.
கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளின் முதலீட்டு தொகையின் (Capital funds) பெரும் பங்கை விழுங்கிக் கொண்டிருக்கும் வாராக்கடன்கள், வங்கிகளின் கடன் வழங்கும் திறன் மற்றும் அவற்றின் புற மதிப்பீடுகளையும் (External ratings) வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கின்றன. 
இந்த இடர்ப்பாடுகளிலிருந்து தப்பி வெளியே வருவதற்கான சூத்திரம் தெரியாமல், விழி பிதுங்கிக் கொண்டிருந்த அரசு வங்கித் துறை, இந்த அறிவிப்பால் சற்று ஆசுவாச பெருமூச்சு விட ஆரம்பித்திருக்கின்றது என்று கருதலாம்.
நிதி அமைச்சரின் அறிவிப்பின்படி, வங்கிகளின் கடந்த கால மூலதன இழப்பீடுகளை சரிகட்டும் பொருட்டு, 1.35 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான மூலதன முதலீட்டு பத்திரங்களை (Recapitalisation bonds) மத்திய அரசு வெளியிடும். 
பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு, வங்கிகளின் பண கையிருப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. உபரி தொகை சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், சமீப காலத்தில், வங்கிகளின் கடன் வழங்கும் தொகையின் வளர்ச்சி, 5 சதவீதத்திற்கும் கீழ் குன்றியுள்ளது. 
இது கடந்த பத்து ஆண்டுகளில் காணப்பட்ட மிகக் குறைந்த அளவிலான வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகையை வங்கிகள் லாபகரமாக பயன்படுத்தவில்லை என்றால், அவற்றின் செலவு கணக்கு அதிகரித்து, ஏற்கெனவே பழுது நிலையில் துவண்டு கொண்டிருக்கும் நிதி நிலை அறிக்கைகள் மேலும் பழுதடைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 
அம்மாதிரி வைப்புத் தொகை, வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கடனாகக் கணக்கிடப்படுமே தவிர, அதை மூலதன கணக்கில் சேர்க்க முடியாது. 
எனவே, வங்கிகளிடம் குவிந்திருக்கும், வருமானம் ஈட்டமுடியாத உபரித் தொகையை மறுமுதலீட்டு பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என திட்டமிடப்பட்டிருக்கிறது. 
மறுமுதலீட்டு பத்திரங்களைப் பற்றிய முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. 1990}ஆம் ஆண்டு, வங்கிகள் சந்தித்த பொருளாதார இடர்ப்பாடுகளை களைய, இம்மாதிரி பத்திரங்கள் வெளியிடப்பட்டன. 
அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் நோக்கும்போது, மறு முதலீட்டு பத்திர விற்பனையின் மூலம் பெறப்படும் நிதியை அரசாங்கம், வங்கிகளின் பங்குகளை வாங்க பயன்படுத்தும். 
இதனால், வாராக்கடன்களால் தேய்ந்து கொண்டிருக்கும் வங்கிகளின் மூலதன கணக்கு வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வங்கிகளில் அரசாங்கத்தின் பங்கு தற்போதைய 51 சதவீதத்திலிருந்து மேலும் உயரும் வாய்ப்புகள் உள்ளன.
இம்மாதிரி பத்திர வெளியீட்டால், அரசாங்கத்திற்கு அதற்கான வட்டி சுமை, வருடத்திற்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும். இந்த வட்டி செலவு, அரசாங்கத்தின் வரவு, செலவு கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். 
அதே சமயத்தில் மூலதனங்கள் மூலம், வங்கிகளின் கடன் வழங்கு திறன் அதிகரித்து, கூடுதல் லாபத்திற்கு வழி வகுக்கும். கூடுதல் லாபத்திலிருந்து அரசுக்கு வழங்கப்படும் டிவிடென்ட் தொகை அதிகரித்து வட்டி செலவை ஓரளவு ஈடு கட்டும்.
இதைத் தவிர, வங்கிகளின் மூலதனத்தை வலுப்படுத்துவதற்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவில், பட்ஜெட்டிலிருந்து படிப்படியாக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும். 58 கோடி ரூபாய் அளவிற்கான பங்குகளை விற்று, மூலதனத்தை பெருக்க வங்கிகள் அறிவுறுத்தப்படும்.
டிவிடென்ட் போன்ற நேரிடையான பலன்களைத் தவிர, வங்கிகளின் கூடுதல் கடன் வழங்கும் திறனால், சிறு மற்றும் குறுந்தொழில்களைப் பயனடைய செய்யும் விதமாக திட்டங்கள் வெளிவர இருக்கின்றன.
இந்தச் செயல்பாடுகள், நாட்டின் தொழில் வளர்ச்சியையும், அதன் இணைப்பாக, வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும். நாட்டின் தொழில் உற்பத்தி வளர்ச்சி, ரூபாயின் மதிப்பை, சர்வதேச நாணய சந்தையில் உயர வழிவகுக்கும். இந்தச் செயல்பாடுகளால், உலகப் பொருளாதார சந்தையில் நம் நாட்டின் தரம் (Soverign rating) உயரும்.
கடனை திருப்பி செலுத்தாத பல பெரும் நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திவால் சட்டத்திற்கு (Insolveny Act) உட்படுத்தப்பட்டு வருகின்றன. திவால் நிறுவனங்களின் பெயரில் இருக்கும் கடன் நிலுவைத் தொகையில் 50 சதவீதம் வரையில், வங்கிகள் தங்கள் வரவுக்கணக்கிலிருந்து ஒதுக்கீடு (Provision for bad debts) செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது. இதனால், வரும் காலங்களில் வங்கிகளின் ஒதுக்கீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
கடந்த சில மாதங்களாக அமலில் இருக்கும் திவால் சட்டத்தின் செயல்பாட்டு புள்ளிவிவரங்களைக் கூர்ந்து நோக்கும்போது, நிலுவையில் இருக்கும் வாராக்கடன்களில், என்னதான் முயன்றாலும், அதிக பட்சமாக 10 சதவீதம் வரையில் கூட வங்கிகளால் வசூலிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 
இதனால், வங்கிகளின் பொருளாதார இழப்புகள் அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை. வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத பெரும் தொழில் அதிபர்களுக்கு இது எளிதில் "வெளியேறும் ஒரு வழி'யாக (Easy exit route) அமைந்து விடுமோ என்ற பய உணர்வு பொருளாதார வட்டாரங்களில் உலவுவது நிஜம்.
கடன் வழங்குவதிலும், கொடுத்த கடனை வசூலிப்பதிலும் வங்கிகள் காட்டிய மெத்தனப் போக்குதான் தற்போதைய தொய்வு நிலைமைக்குக் காரணம். தற்போது நிலுவையில் இருக்கும் வாராக்கடன்களின் பெரும் பகுதி, வங்கிகளின் கூட்டமைப்பால் (Consortium of banks) வழங்கப்பட்டவையாகும். 
ஒவ்வொரு கூட்டமைப்பிலும், குறைந்தது ஐந்து முதல் இருபது வங்கிகள் பங்கேற்று கடன் தொகையை பிரித்து வழங்கும். ஆனால், கடன் வழங்கப்பட்ட பிறகு அதற்கான கட்டுப்பாடுகள் (Control and Ensuring end use of funds) மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய திறன்கள் வங்கிகளிடையே முழு அளவில் வளரவில்லை என்பதுதான் உண்மை நிலவரமாகும். 
வங்கிகளின் இந்த பலவீனத்தை கடன்தாரர்கள், தங்களுக்கு சாதகமாக முழு அளவில் பயன்படுத்திக் கொண்டார்கள்.
குறிப்பாக, கட்டமைப்பு வசதிகளுக்கான கடன்கள் (Advances for infrastructure facilities) வழங்குவதிலும், அவற்றை மேற்பார்வை இடுவதிலும் பொதுத் துறை வங்கிகளுக்கு சிறிதளவும் அனுபவம் இல்லை என்றே சொல்லலாம்.
அரசின் கஜானாவான வங்கிகளை நிர்வகிக்கும் பொறுப்பு, அதற்கான முழுத்தகுதி, ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர்களிடம்தான் ஒப்படைக்கப்படவேண்டும். 
மூன்று ஆண்டிற்கு ஒரு முறை வங்கியின் செயல் தலைவர்களை (Chief Executive officer) மாற்றுவதற்கு பதிலாக, அந்தந்த வங்கி அதிகார வர்க்கத்திலிருந்தே தலைவர்கள் நீண்ட கால பதவி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டால், தொடர் பணியால், அர்ப்பணிப்பு உணர்வு (Sense of belonging) அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு வங்கியின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி, வழி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு, அதன் செயல் குழுவையே Board of director  சாரும். அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுபவர்கள், வங்கித் துறை சார்ந்த விஷயங்களில் நிபுணர்களாக இருக்க வேண்டும் என்பது மிகமிக அவசியம். 
மேலும், ஒவ்வொரு வங்கியின் செயல் குழுவிலும், ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி அங்கம் வகிக்கிறார். அந்தப் பிரதிநிதிக்கு வங்கி சார்ந்த ஞானம் (Professional knowledge in commercial banking) மிக அவசியம். 
வங்கி செயல்பாடுகளில் காணப்படும் குறைகளை அவ்வப்போது ரிசர்வ் வங்கி தலைமையின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பை இந்தப் 
பிரதிநிதிகள் குறையின்றி நிறைவேற்ற வேண்டும். 
ஒரே மாதிரி சேவைகளை வழங்கும் பல வங்கிகளை இணைப்பது வங்கித் துறைக்கு பலம் சேர்க்கும். அம்மாதிரி இணைப்புகளால், ரிசர்வ் வங்கியின் மேற்பார்வை எளிதாகி, அதன் தரம் மேலும் மேம்படும். வங்கிகளில் வாராக்கடன்கள் குவிந்த பிறகு, கூட்டை கலைக்க முற்படுவதைவிட, ரிசர்வ் வங்கியின் தணிக்கை துறை பலப்படுத்தப்பட்டு, வங்கி தணிக்கைகளின் இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.
கூர்ந்து கவனித்தால், வங்கிகளை தற்போதைய பெரும் இடர்ப்பாடுகளிலிருந்து காப்பது, அவற்றின் வாடிக்கையாளர் தான். அவர்களின் வைப்புத்தொகைதான், சுழற்சியில், வங்கிகளின் மறு முதலீடு என மறு பிறப்பு எடுத்து, வங்கித் துறையை அழிவிலிருந்து காப்பாற்றுகிறது. 
ஆனால், வங்கித் துறையோ, அபரிமிதமான கட்டணங்களை வாடிக்கையாளர்களின் மீது தொடர்ந்து திணித்து, அவர்களின் வெறுப்பை சம்பாதிக்க முற்படுகிறது.
ஆபத்து நேரத்தில் தங்களுக்குக் கை கொடுத்து காப்பாற்றும் வாடிக்கையாளர்களை இனிய சேவைகளின் மூலம் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு வங்கி ஊழியரின் தலையாய கடமையாகும்.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...