Monday, October 30, 2017


இரட்டை இலை யாருக்கு?


இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த, இறுதி கட்ட விசாரணை, டில்லியில் இன்று, தேர்தல் கமிஷனில் நடக்கிறது. 'தங்களுக்கே உறுதியாக சின்னம் கிடைக்கும்' என, முதல்வர் பழனிசாமி தரப்பினர் நம்பிக்கைஉடன் உள்ளனர்.

முடக்கியது : ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட, இரு அணிகளின் சார்பிலும் சின்னம் கேட்கப்பட்டதால், உடனே முடிவெடுக்க முடியாமல், கட்சியின் பெயரையும், சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது.
முதல்வர் பழனிசாமி, பன்னீர் அணிகள் இணைந்த பின், 'இரட்டை இலை சின்னத்தை, தங்கள் அணிக்கு தர வேண்டும்' என, தேர்தல் கமிஷனில், கோரிக்கை வைக்கப்பட்டது. 
புதிய பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதற்குப் போட்டியாக, தினகரன் அணியினரும், தங்களுக்கே சின்னம் ஒதுக்க வேண்டும் என, மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இது தொடர்பான விசாரணை, டில்லியில் உள்ள, தேர்தல் கமிஷனில் நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணை, அக்., 6; இரண்டாம் கட்ட விசாரணை, அக்., 13; மூன்றாம் கட்ட விசாரணை, அக்., 23ல் நடந்தது. 
தலைமை தேர்தல் கமிஷனர், ஏ.கே.ஜோதி தலைமையில் நடந்த மூன்று கட்ட விசாரணையின் போதும், இரு தரப்பினரும் தங்கள் வாதத்தை முன் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, இறுதி கட்ட விசாரணை, இன்று நடக்கும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று மாலை, 3:00 மணிக்கு, விசாரணை துவங்க உள்ளது. 
இதில் பங்கேற்க, அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி., மனோஜ்பாண்டியன் ஆகியோர் நேற்று, டில்லி புறப்பட்டு சென்றனர். தினகரன் தரப்பினரும், நேற்றிரவு டில்லி சென்றனர்.
டில்லி செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில், அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணியே உண்மையான அ.தி.மு.க., எனவே, எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற, உறுதியான நம்பிக்கை உள்ளது. 

அழிக்க முயற்சி : எங்கள் பக்கம் அனைத்து நியாயமான வாதங்களையும், எடுத்து வைத்துள்ளோம். அதை தேர்தல் கமிஷன் பரிசீலித்து, நியாயமான முடிவை அறிவிக்கும். இன்று நடக்கும் விசாரணையே, இறுதியானதாக இருக்கும். அ.தி.மு.க.,வை அழிக்க எப்போதுமே நினைக்கும் கட்சி தி.மு.க., தான். இப்போது, தினகரனும், அ.தி.மு.க.,வை அழிக்க முயற்சிக்கிறார். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கொண்டாடவோ, அவரைப் பற்றி பேசவோ தினகரனுக்கு தகுதி இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...