Tuesday, August 27, 2019

தமிழக ஒதுக்கீட்டில் மருத்துவ, 'சீட்': வெளி மாநிலத்தினருக்கு எச்சரிக்கை

Added : ஆக 27, 2019 01:10

மதுரை:'மருத்துவப் படிப்பிற்கு, தமிழக ஒதுக்கீட்டின் கீழ், வெளிமாநிலத்தினர், 126 பேர், 'சீட்' பெற்ற வழக்கில், ஆவணங்கள் தாக்கல் செய்யத் தவறினால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.
மதுரை, சோம்நாத் என்பவர் தாக்கல் செய்த மனு:'நீட்' தேர்வில் தேர்ச்சியடைந்தேன். எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு விண்ணப்பித்தேன்.வெளி மாநிலத்தினர், 126 பேர், கலந்தாய்வில் பங்கேற்று, தமிழக ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; விதிமீறல் நடந்துள்ளது.தரவரிசை பட்டியலை ரத்து செய்ய வேண்டும். பிற மாநிலத்தினரை நீக்கி, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு, புதிதாக கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.இதுபோல், மேலும் சிலர், மனு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவிட்டதாவது:எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட, 126 மாணவர்களும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, எங்கு படித்தனர் என்பதற்குரிய ஆவணங்கள், இருப்பிடச் சான்றுகளை, தாக்கல் செய்ய வேண்டும்.தமிழகம் தவிர, பிற மாநில ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கவில்லை; கவுன்சிலிங் செல்லவில்லை என, பிரமாண பத்திரம், செப்., 9ல் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.05.2026