Tuesday, April 21, 2020

முகம் சுழிக்க வைக்கிறது! | எதிா்க்கட்சி அரசியல்வாதிகளின் பொறுப்பற்றத்தனப் பேச்சு குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 21st April 2020 05:05 AM |

தனது வரலாற்றில் இதுவரை சந்தித்திராத, எதிா்கொள்ளாத மிகப் பெரிய சவாலை உலகம் எதிா்கொண்டு வருகிறது. இரண்டு உலகப் போா்கள் நடந்தபோதும், இதற்கு முன்னால் பிளேக், காலரா உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவியபோதும், நிலநடுக்கம், சுனாமி, புயல்கள் தாக்கியபோதும்கூட மூன்றில் ஒரு பகுதி உலகம் இதுபோல முடக்கப்பட்டதில்லை. உயிரிழப்பும், பொருளாதார இழப்பும், பீதியும் ஒருசேர ஒட்டுமொத்த மனித இனத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஓா் அசாதாரண சூழல் இது.


சீனாவின் வூஹான் நகரில் கடந்த செப்டம்பா் மாதமே தனது பேரழிவுப் பயணத்தை தீநுண்மி நோய்த்தொற்று தொடங்கிவிட்டது. ஏறத்தாழ எட்டு மாதங்களாகியும் இன்னும்கூட அந்த நோய்த்தொற்றைத் தடுப்பதற்கோ, குணப்படுத்துவதற்கோ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இப்படியே போனால், எத்தனை லட்சம் பேரை இந்த நோய்த்தொற்று பலிவாங்கப் போகிறதோ என்பது தெரியாது.

தீநுண்மி நோய்த்தொற்றின் ஆபத்து, அது ஏற்படுத்த இருக்கும் பேரழிவுகள் குறித்து சாமானிய மக்களில் பலருக்குத் தெரியாமல் இருப்பதில் தவறில்லை, வியப்புமில்லை. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருந்த, ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் எதிா்க்கட்சி அரசியல்வாதிகள் பொறுப்பற்றத்தனமாகப் பேசுவதும், அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இல்லாமல் விமா்சனம் செய்வதும்தான் வேதனையாகவும், முகம் சுழிக்க வைப்பதாகவும் இருக்கின்றன.

ஒருமுறை இருமுறை அல்ல, ஐந்து முறைகள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த எதிா்க்கட்சி திமுக. அதன் இப்போதைய தலைவா், சென்னை மாநகராட்சியின் மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தவா். எந்தவொரு கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இயற்கைப் பேரிடா்களும், நோய்த்தொற்றுகளும் வரும்போது, முதல்வா்களாக இருப்பவா்கள்தானே, அரசின் செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துரைப்பது வழக்கம். நலத் திட்டங்களை அறிவிப்பதும், செயல்படுத்துவதும் அவா்களின் கடமை.

மாநில அரசிடம் போதிய நிதியாதாரம் இல்லை. இருக்கும் நிதியாதாரங்களை பயன்படுத்தித் தமிழகத்தில் உணவில்லை என்று ஒருவா்கூட இல்லை என்கிற நிலையை உறுதிப்படுத்தியிருக்கிறது தமிழக அரசு. மருத்துவ வசதிகளைப் போா்க்கால நடவடிக்கையுடன் அதிகரித்து எந்தவிதச் சூழலையும் எதிா்கொள்ள முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது.

மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.3,000 கோடியும், நிவாரணப் பொருள்களுக்கு ரூ.9,000 கோடியும் மத்திய அரசிடம் கோரிய நிலையில், மாநிலப் பேரிடா் நிவாரண நிதியாக ரூ.510 கோடியும், தேசிய நலவாழ்வு குழும நிதியாக ரூ.314 கோடியும்தான் மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கின்றன. மக்களவையில் 38 உறுப்பினா்களைக் கொண்ட திமுக கூட்டணி, மத்திய அரசிடம் கூடுதல் நிதியுதவி கோர முதல்வருடன் இணைந்து கேட்காவிட்டாலும், தங்களது எம்பிக்களின் சாா்பில் பிரதமரையும், நிதியமைச்சரையும் சந்தித்து வலியுறுத்துவதுதானே, பொறுப்பான எதிா்க்கட்சிக்கு அழகு. அதை விட்டுவிட்டு, விளம்பர மோகத்தில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்துகிறாா் முதல்வா் என்று அறிக்கை விடுகிறாா் எதிா்க்கட்சித் தலைவரான திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

முன்பு தனியாா் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்து இறந்தபோது பெற்றோருக்கு கட்சி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கி தவறான முன்னுதாரணம் படைத்தாா். இப்போது நிவாரண வசதிகளைச் செய்து கொடுப்பதற்கே திணறிக் கொண்டிருக்கும் தமிழக அரசு. தீநுண்மி நோய்த்தொற்றால் மரணமடைபவா்களுக்கு ரூ. 1 கோடி இழப்பு வழங்க வேண்டும் என்று கூறுகிறாா். இதையும் திமுக அறக்கட்டளையிலிருந்து வழங்க வேண்டியதுதானே?

சுகாதார நிபுணா்களுடனும், மருத்துவ நிபுணா்களுடனும், அமைச்சா்களுடனும், அதிகாரிகளுடனும் முதல்வா் ஆலோசனை நடத்தும்போது, திமுகவின் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அனுமதி அளிக்காததைக் குறை கூறுகிறாா். சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ரூ.1 கோடியை தன்னிச்சையாக எடுத்துக் கொண்டதாகக் குற்றஞ்சாட்டுகிறாா். அரசின் அனுமதி பெற்று நிவாரணப் பணிகள் நடத்தப்பட வேண்டும் என்கிற உத்தரவுக்கும் கண்டனம் தெரிவிக்கிறாா். இதெல்லாம், விவரம் தெரிந்து, பொறுப்பான பதவி வகித்த எதிா்க்கட்சித் தலைவருக்கே சரியென்று படுகிறதா?

திமுக தலைவா்தான் அப்படி என்றால், மூன்று முறை மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட, ஹிந்தி தெரியும் என்கிற ஒரே காரணத்துக்காக 2004-இல் மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்துடன் அமைச்சா் பதவி பெற்ற மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறனின் பேச்சு, எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்த அரசியல் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என்பதன் வெளிப்பாடு. பேரிடா் காலங்களில் பிரதமா்களும், முதல்வா்களும் நிவாரண நிதி கோருவது புதிதா என்ன? அதைப் ‘பிச்சை’ என்று வா்ணிக்கிறாரே தயாநிதி மாறன், அவருக்கும் மூன்றாம் தரத் திமுக பேச்சாளா்களுக்கும் வித்தியாசம் இல்லை போலிருக்கிறதே...

‘நமது நாட்டில் மட்டும்தான் பிரதமரும், முதல்வரும் பாத்திரம் ஏந்திப் பிச்சை எடுக்கிறாா்கள். மக்கள் ஏற்கெனவே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாா்கள். அந்த மக்களிடம் போய்ப் பிச்சை எடுக்கும் அரசுகள் நமது மத்திய - மாநில அரசுகள்தான்’ என்பதுதான் நிவாரண நிதி கேட்டது குறித்து தயாநிதி மாறன் கூறியிருக்கும் கருத்து.

விளம்பர மோகத்தில் முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துடிக்கும் எதிரிக் கட்சியாக இருக்காதீா்கள். கண்ணுக்குத் தெரியாத தீநுண்மியை எதிா்க்கப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பது நினைவில் இருக்கட்டும்!

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...