Tuesday, October 27, 2015

சென்னையில் பல இடங்களில் நில அதிர்வு உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் பதறியடித்து கீழே இறங்கினர்

சென்னை,

பதிவு செய்த நாள்:
செவ்வாய், அக்டோபர் 27,2015, 12:16 AM IST


சென்னையில் நேற்று பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்தவர்கள் பதறியடித்து கீழே இறங்கினர்.

சென்னையில் நில அதிர்வு

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று பகல் 2.40 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. அது 7.5 ரிக்டர் அளவு என்று பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக அருகே உள்ள வடஇந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சென்னையிலும் பல இடங்களில் உணரப்பட்டது.

நந்தனம், பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர் உள்பட பல்வேறு இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தகவல்தொழில்நுட்ப அலுவலகம்

கோடம்பாக்கத்தில் உள்ள 9 மாடி கட்டிடம் ஒன்றில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதில் 600–க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கிறார்கள். நேற்று மதியம் 2.40 மணிக்கு திடீர் என்று அந்த கட்டிடத்தில் நில அதிர்வு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் நில அதிர்வை உணர்ந்தனர். உடனே அங்கு வேலையில் இருந்த ஏராளமானவர்கள் பதறியபடி வேகமாக கீழே இறங்கிவந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு நில அதிர்வு ஏற்பட்டதை கூறி, தாங்கள் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். 30 நிமிடங்கள் கீழேயே நின்ற அவர்கள், பின்னர் அலுவலகத்துக்கு சென்று வழக்கமான பணிகளை தொடங்கினார்கள்.

பட்டினப்பாக்கம்

பட்டினப்பாக்கம், நந்தனம், கோயம்பேடு, அம்பத்தூர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள், ஊழியர்களும் இதனை உணர்ந்தனர். குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் தான் இந்த அதிர்வை அதிகம் உணர முடிந்தது.

பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நான் வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்து கம்ப்யூட்டர் இயக்கிக்கொண்டிருந்தேன். பகல் 2.45 மணி அளவில் நான் உட்கார்ந்து இருந்த நாற்காலியை யாரோ தள்ளிவிடுவது போல இருந்தது. பிறகுதான் அது நில அதிர்வு என்பதை உணர்ந்து கீழே இறங்கினேன். அதுபோல எங்கள் குடியிருப்பில் உள்ள ஏராளமானவர்கள் கீழே இறங்கி வந்தனர் என்றார்.

தீபாவளி விற்பனை களை கட்டத்தொடங்கியது தியாகராயநகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்..daily thanthi



சென்னை,

தீபாவளி விற்பனை களை கட்டத்தொடங்கியுள்ளது. தியாகராயநகரில் விடுமுறை தினமான நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.தீபாவளி பண்டிகை

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையன்று மக்கள் புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். அரசு மற்றும் தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக ‘போனஸ்’ வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது இயல்பானது. தீபாவளி பண்டிகையின்போது உறவினர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.அங்காடித் தெரு

அந்தவகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 10–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், சென்னையில் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது.

சென்னை நகரின் முக்கிய வணிகதளமாக விளங்கும் தியாகராய நகர் பகுதியில் நேற்று தீபாவளி பண்டிகைக்கு தேவையான துணிமணிகள் உள்பட பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் நேற்று காலை முதல் இரவு வரை தியாகராய நகர் பகுதி மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. குறிப்பாக அங்காடித்தெரு என்று அழைக்கப்படும் ரெங்கநாதன் தெரு முழுவதும் மனித தலைகளாகவே காட்சியளித்தது.மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், தியாகராயநகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் மக்கள் கூட்டம் இயல்பான நாட்களை விடவும் அதிகமாக காணப்பட்டது.

பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி., மைக்ரோ ஓவன் உள்ளிட்ட பொருட்களை சிறப்பு தள்ளுபடியில் மக்கள் வாங்கிச்சென்றனர். மேலும், நேற்று விடுமுறை தினம் என்பதால், தீபாவளி பொருட்கள் வாங்க வருவோர்களின் எண்ணிக்கை வழக்கமாக வரும் கூட்டத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.அதிநவீன கேமரா

கூட்டநெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி திருட்டு–வழிப்பறி, கொள்ளைகளில் ஈடுபடும் ஆசாமிகளை கண்காணிப்பதற்காக தியாகராய நகர், பாண்டி பஜார், வடக்கு உஸ்மான் சாலை, தெற்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 70 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக பாண்டி பஜார் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துவிட்டன. மற்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதவிர கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, பைனாக்குலர் மூலமும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

பாதுகாப்பு ஏற்பாடுகளை தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் மாம்பலம் போலீசார் மேற்கொண்டுவருகின்றனர். தீபாவளி பொருட்கள் வாங்க வரும் மக்கள் சுமுகமாக நடந்து செல்லும் வகையில் ரங்கநாதன் தெரு, நடேசன் தெரு மார்க்கெட் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரிய கடைகளின் வெளியே இருந்த சுமார் 500–க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளை பாதுகாப்பு கருதி போலீசார் நேற்று அகற்றினார்கள்.

இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த 100 போலீசார் மற்றும் வாகனங்களை ஒழுங்குபடுத்த 50 போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பண்டிகை நெருங்கும் சமயத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.வியாபாரிகள் மகிழ்ச்சி

தியாகராயநகர் பகுதியை போன்று புரசைவாக்கம், என்.எஸ்.சி. போஸ் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள் என தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

பொதுமக்களின் வருகை அதிகரித்து வருவதையடுத்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று பொருட்கள் வாங்க வந்தவர்களை விடவும் அதிக மக்கள் கூட்டம் நவம்பர் 1–ந்தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) காணப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

வேலை வாய்ப்பில் ஊழலுக்கு இடம் இல்லை

logo

பிரதமரோ, முதல்–அமைச்சரோ, சுதந்திர தினத்தன்று ஒரு அறிவிப்பை பிரகடனப்படுத்தினால், அது பரிசீலனை என்ற எல்லையைத்தாண்டி, நிறைவேற்றப்படுவதற்கு தயாராக இருக்கிறது என்ற உறுதி மக்களிடம் இருக்கும். அந்த வகையில், கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தன் உரையின்போது, இளைஞர் சமுதாயத்துக்கு குறிப்பாக வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கித்தவிக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை, உற்சாகம் ஊட்டும் சில முடிவுகளை அறிவித்தார். ‘‘நாட்டில் ஊழல் இருக்கும் இடங்களில் ஒரு இடம் வேலைவாய்ப்புதான். ஏழைகளிலும் ஏழையான பரம ஏழை தன் மகனுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்று தணியாத ஆசைகொண்டு இருக்கிறார். இளைய சமுதாயத்தினர் ரெயில்வேயிலோ, ஆசிரியருக்கோ, பியூன், டிரைவர் போன்று எந்த வேலைக்காகவும் இண்டர்வியூ கார்டு வந்துவிட்டால், யாரை ரெக்கமண்டேஷன் அதாவது, பரிந்துரைக்காக அணுகலாம்? என்று யோசிக்கத்தொடங்கிவிடுவார்கள். அந்த இளைஞரின் விதவைத் தாய்கூட இந்த வேலைக்காக யாரிடம் பரிந்துரைக்கு செல்லலாம்? என்று குழம்புவார். ஏனெனில், நாட்டில் நியாயமும், அநியாயமும் திறமை அடிப்படையில் இல்லாமல், இண்டர்வியூ அடிப்படையில்தான் முடிவாகிறது. இண்டர்வியூவில் தோல்வி அடைந்துவிட்டாய் என்று எளிதாக கூறிவிடுகிறார்கள். ஓரிரு நிமிடங்கள் இண்டர்வியூ நடத்தி ஒருவரை மதிப்பீடு செய்யும் திறன் படைத்த மனோதத்துவ நிபுணரைக்கூட நான் இதுவரையில் பார்த்ததில்லை. ஒரு ஏழை தாயின் மகனோ, மிகச்சிறிய வேலையைத்தேடும் குறைவான படிப்புள்ளவர்களோ இதுபோல இண்டர்வியூவுக்கு செல்லவேண்டுமா?, இணையதளத்தில் தாக்கல் செய்யப்படும் மார்க்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யமுடியாதா?, உடல்தகுதி தேவைப்படும் பதவிகளுக்கு தனிவழி முறைகள் தேவைதான். ஆளுமை மற்றும் தோற்றம் தேவைப்படும் பதவிகளுக்கு இண்டர்வியூ தேவைதான். இளநிலை பதவிகளுக்காக நேர்காணல் தேர்வுகளை விரைவில் நிறுத்திவிட்டு, திறமை அடிப்படையில் வேலைவழங்குமாறு மாநில அரசுகளையும், மத்திய அரசாங்கத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இது ஏழை மக்களை பெரிதும் பாதிக்கும் ஊழலை ஒழிக்க உதவும்’’ என்று முழங்கினார்.

தான் சொன்னதை நிறைவேற்றும் வகையில், மாதந்தோறும் ‘மனதின் குரல்’ என்று வானொலியில் பேசும் உரையில் நேற்று முன்தினம் உரையாற்றும்போது, மத்திய அரசாங்க பணிகளில் ‘கெஜட்டெட்’ பதவிகள் தவிர, மற்ற அனைத்து வகையான டி, சி, பி, பிரிவு பணிகளுக்கான நேர்முகத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இது வருகிற 2016–ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விண்ணப்பதாரர்களை நேரில் பார்க்காமல் தேர்ந்தெடுப்பதில் சில குறைபாடுகள் இருந்தாலும், இனி மத்திய அரசாங்கத்தில் திறமை உள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுக்காமல் வேலைகிடைக்கும். லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருபவர்கள் போட்ட பணத்தை எடுக்க முதல்நாளில் இருந்தே லஞ்சம் வாங்கத்தொடங்கிவிடுவார்கள். லஞ்சம் கொடுப்பவர்களுக்கு வேலை என்று இருக்கும் நிலையில் திறமைக்கு நிச்சயமாக இடம் இருக்காது. ‘‘எதிலும் நேர்மை, எங்கும் நேர்மை’’ என்ற பாதையின் கதவு லஞ்சம் இல்லாத தேர்வுதான். இந்த முறையை உடனடியாக மாநில அரசுகளும் பின்பற்றவேண்டும். இதுமட்டுமல்லாமல், இண்டர்வியூவில் கலந்துகொள்பவர்களுக்கு அவர்களின் விடைத்தாள் நகலையும் கொடுக்கும் முறைவேண்டும். இதன்மூலம் வேலை கிடைக்காதவர்களும் தாங்கள் எந்த இடத்தில் தவறியிருக்கிறோம் என்று பார்த்து அடுத்தமுறை தவறாமல் இருக்க பாடம் புகட்டும்.

Monday, October 26, 2015

பழக பழகத்தான் பிடிக்கும்............தினகரன்



நன்றி குங்குமம் டாக்டர்

சுகர் ஸ்மார்ட் தாஸ்

வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் லிஃப்ட் வேலை செய்யவில்லை. நாம்தான் படி ஏறி செல்ல வேண்டும்... ஒவ்வொரு படியாக!- ஜோ ஜிரார்ட் (அமெரிக்க விற்பனையாளர் / கின்னஸ் சாதனையாளர்)

வயிற்றுப் பகுதியில் அதிக எடையை ஆசையோடு வைத்திருக்கும் ஆப்பிள் வடிவ நபர்களும், இடுப்பில் அதிக சுற்றளவை இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் பேரிக்காய் வடிவ நபர்களும் கவனத்தில் கொள்ள வேண்டியது இதுதான்... எடையோடு வடிவமும் சேர்ந்து வினையாற்றும் என்பதால், சராசரி வடிவத்துக்கு மாற வேண்டியது முழுமுதல் கட்டாயம்.சரி... டயட்டில் இருப்பதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள்.

அப்போது உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் எப்படி மாறுகின்றன?

ஒருவித கையறு நிலையை உணர்கிறீர்களோ? எல்லோரும் பிரமாதமான உணவு வகைகளை இஷ்டம் போல வெட்டும்போது, நாம் மட்டும் ஏன் இப்படி பட்டினியும் பத்தியமுமாகக் கிடக்கிறோம் எனத் தோன்றுகிறதோ? இந்த தாழ்வு மனப்பான்மையே அதிகமாக சாப்பிட வைத்து விடும்... நல்ல நிலைக்கு மாறுவதற்கு எதிரான முடிவை எடுக்கச் செய்து விடும்... ஜாக்கிரதை! இப்படிச் சொல்லிப் பார்க்கலாமே... ‘நான் ஹெல்த்தியான லைஃப்ஸ்டைலுக்குள் நுழைகிறேன். விரைவிலேயே பொருத்தமான உடல் நலத்துடன், ஸ்லிம் ஆக, ஆற்றல் மிக்கவராக ஆகப் போகிறேன்!’

எந்த ஒரு எடை குறைப்புத் திட்டத்துக்கும் பின்னடைவாக இருப்பது ஊக்கக் குறைவுதான். நம் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என நாமே நம்பத் தொடங்கும் போதுதான், அந்தச் செயலில் இயல்பூக்கம் உருவாகும்.

அப்படியானால் நம் மனத்திண்மையை எப்படி மேம்படுத்துவது?

எது முக்கியம் என முடிவெடுங்கள் தோற்றம், உடல் நலம், குடும்பம், சமூகத்தில் நன்மதிப்பு... இவையெல்லாம் முக்கியமா என நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். வாழ்க்கையில் நமக்கு என்னவெல்லாம் வேண்டும் என முடிவெடுத்தாலே, அதை அடைவது எளிதாகி விடும். ஒரு பழத்துண்டுக்கும் ஒரு சாக்லெட்டுக்கும் இடையேயான ஒரு சாய்ஸ் உங்கள் கையில் உள்ளது. சில நொடி சபலங்களைத் தாண்டி, புத்திசாலித்தனமாக முடிவெடுக்க நம்மால் நிச்சயம் முடியும்!

ஹெல்த்தியாக சிந்தித்தால் ஹெல்த்தியாக மாறலாம்

நம்மை ஆற்றல்மிக்க ஆரோக்கிய மனிதராக நினைக்கத் தொடங்குவது அவசியம். அதுவே அந்தப் பாதையில் நாம் தொடர்ந்து பயணிப்பதற்கு வழிகாட்டும். நாம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது ஜீரா வழியும் ஜிலேபியால் நம்மை வென்று விட
முடியாது. அந்த வெற்றியை ஆப்பிளுக்கு வேண்டுமானால் வழங்கலாம்!

சுறுசுறுப்பாக நடை போடுவோம்

முகத்தில் புன்னகையோடு நிமிர்ந்த நெஞ்சோடு, எப்போதும் தன்னம்பிக்கை கொண்டு, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வோமே. இது பழகப் பழக இனிதாகும். ஆம்... ஹெல்த்தியான வாழ்க்கை முறையும் பழகப் பழகத்தான் பிடிக்கும்!

எதிர் சிந்தனையை எகிறச் செய்வோம் அவ்வப்போது எதிர் எண்ணங்கள், தன்னம்பிக்கையைக் குறைக்கும் சிந்தனைகள் தோன்றக்கூடும். மண்டைக்குள் ‘எப்படி இருந்தே நீ... இப்போ இப்படியெல்லாம் கஷ்டப்படணுமா?’என்றெல்லாம் குரல்கள் இழுக்கும். ‘வா வா வா’ என வம்புக்கு இழுத்து, கடத்திப் போய் கிட்னி திருடும் வடிவேலு பட காமெடி போன்றதுதான் அது. அதற்கெல்லாம் செவி சாயக்க வேண்டியதே இல்லை.

உதாரணமாக... நாம் சாப்பிட வேண்டிய அளவு முடிந்த பிறகும், அதன் சுவை ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடேன்’ என ஆசை காட்டும். அந்த ஆசைக்கு மயங்கினால், நம்மை நாமே தண்டிப்பதாகத்தானே அர்த்தம். ஆகவே, ‘நோ தேங்க்ஸ்’ சொல்லி, அவ்விடம் விட்டு அகன்று விட வேண்டும் அக்கணமே. இதுபோன்ற எதிர் எண்ணங்களும் சுய பச்சாதாபங்களும் நம்மை பின்னடைவுக்குள் தள்ளிவிடும் என்பதை மறக்க வேண்டாம். எதிர் எண்ணங்களுக்கு எதிரான எண்ணங்களை அதற்குப் பதிலாகக் கூறி, அதை ஓட ஓட விரட்டுவோம். நல்ல சாய்ஸ் நம் சாய்ஸ் என்கிற நிலையில் நெகட்டிவ் எண்ணங்களுக்கு என்ன வேலை இருக்கிறது. அவை தொலையட்டும்!

மற்றவர்களையும் வண்டியில் ஏற்றுவோம் தனக்கு நீரிழிவு இருக்கிறது என்கிற விஷயத்தைக்கூட ரகசியமாக வைத்திருக்கிற நபர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இது ஒரு மோசமான நிலை. இந்த விஷயத்தை வெளியில் சொல்லாத போது, ஆரோக்கியமற்ற உணவுகளை விரும்பியோ, விரும்பாமலோ அதிக அளவில் சாப்பிடும் நிலை ஏற்படும். ‘சுகர் இல்லாத காபி’ என்று கேட்டு வாங்கக்கூட கூச்சப்படுகிறவர்களை நாம் பார்க்கிறோம். ஹோட்டலில் தவறுதலாக சுகர் சேர்க்கப்பட்ட காபி அளிக்கப்பட்டாலும் கூட, அதை மாற்றித்தரும் படி கேட்காமல், அப்படியே பருகுபவர்கள் பலர் உண்டு.

அதற்கு அவர்கள் கூறும் காரணம்... ‘பரவாயில்லை’. நம் உடல் நம் உணவு நம் உரிமை. இதில் ‘பரவாயில்லை’ என்ற விட்டுக் கொடுத்தலுக்கு அவசியமே இல்லை. ஆதலால், உணவு விஷயத்தில் எந்த இடத்திலும் தயக்கமே வேண்டாம். ‘இதுதான் வேண்டும்... இப்படித்தான் வேண்டும்’ என உறுதியாகக் கேட்டு வாங்கியே சாப்பிடலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. வீட்டிலும் அப்படித்தான். நாமே உணவு மற்றும் உடற்பயிற்சி விஷயங்களில் அக்கறை காட்டாத போது, வீட்டில் உள்ளவர்களும் காலப்போக்கில் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இதன் முக்கியத்துவமும் புரியாமல் போகும். அதன் பிறகுநாம் தனிமைப்படுத்தப்படுவோம். நீரிழிவு கட்டுப்பாடு கையை விட்டுப் போய் விடும். நாம் தினசரி வாழ்வில் எடுக்கிற சிறுசிறு முடிவுகள் கூட, நம் வாழ்க்கையை ஆரோக்கியமாக மாற்றி அமைக்கிற பணியைச் செய்யும். இதில் நம் குடும்பத்தினரையும் நண்பர்களையும் இயல்பாக ஈடுபடுத்தும் போது, நம் பணி எளிதாகி விடும். அதோடு, அறிந்தோ அறியாமலோ அவர்களும் ஆரோக்கிய கப்பலில் ஏறி நம்மோடு பயணிப்பார்கள். நம்முடைய திட்டத்தில் பலவித சமூக, கலாசார காரணிகள் தடங்கல் விளைவிக்கக் கூடும். இருப்பினும், நம் உறுதியும் குடும்பத்தினரின் ஆதரவும் இருக்கும் போது, இந்தப் பயணம் நிச்சயம் இனிமையாகவே அமையும்!

ஸ்வீட் டேட்டா

உலக நீரிழிவாளர்களில் 46.3 சதவிகிதத்தினருக்கு, தங்களுக்கு நீரிழிவு இருப்பதே தெரியாது!

(கட்டுப்படுவோம்...கட்டுப்படுத்துவோம்!)

பிச்சை தராவிடினும் நன்றே..தினகரன்


உத்தரப் பிரதேச மாநில ரயில் நிலையம் ஒன்றில், ரூ.100 பிச்சை தராததால், ஆத்திரம் அடைந்த பிச்சைக்காரன், சம்பந்தப்பட்டவரை இழுத்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்து இருவரது உயிரையும் அநியாயமாக பறிபோகச் செய்துள்ளான். பிச்சைக்காரர்கள் இப்போதெல்லாம், ஏதோ கொடுத்து வைத்ததுபோன்று ரூ.10 கொடு, ரூ.20 கொடு என்று உரிமையோடு கேட்கிறார்கள். சாலையோர கடைகளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், சாப்பாடு வாங்கிக் கொடுக்கும்படி பலர் முன்னிலையில் வம்பு செய்கின்றனர். பிச்சைக்காரர்கள் சமூகத்துக்கு பாதிப்பு இல்லாமல் கோயில் குளங்களில் இருந்த காலம் மாறி இப்போது, அதையே ெதாழிலாக செய்யும் வாலிபர்களும் பெருகிவிட்டனர். எந்த வேலையும் இல்லாமல் குவியும் வருமானத்துக்காக அழுக்கு சட்டையுடன் பிச்சை எடுக்க கிளம்பி விடுகின்றனர். பிச்சைக் கொடுக்காதவர்கள் அல்லது, ஒரு ரூபாய், 2 ரூபாய் பிச்சை தருபவர்களை, ஜென்மத்துக்கு வெட்கி தலைகுனியும்படி பலர் முன்னிலையில் திட்ட ஆரம்பித்துவிடுகின்றனர்.

பிச்சை என்பதில் இருந்துதான் லஞ்சமே ஆரம்பம் ஆகின்றது என்பதை பலர் புரிந்து கொள்வதில்லை. பிச்சைக்காரர்களை பிடித்து, மறுவாழ்வு மையங்களில் அடைக்க வேண்டும் என்று பல முறை நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. ஆனால், இன்னமும் கூட, ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் பிச்சைக்காரர்களை சர்வசாதாரணமாக காண முடிகிறது. இதுபோன்ற பிச்சைக்காரர்களில் சிலர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். சாதாரணமானவர்களை காட்டிலும் இதுபோன்றவர்களால் எப்போதுமே அருகில் இருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம். உத்தரப் பிரதேசத்தில் அதுதான் நடந்துள்ளது.

சம்பவம் நடந்த பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டவர், அவர் என்ன செய்வார் என்ற ரீதியில் போலீசார் பேச ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால், இறந்த நபரின் குடும்பம் நடுத்தெருவில் நிற்பதை இவர்கள் அறிவார்களா? ஒவ்வொரு வாரமும் பிச்சைக்காரர்களை பிடித்து மறுவாழ்வு இல்லங்களில் அடைக்க வேண்டும். இதுபோன்றவர்களை தொடர்ந்து பிடித்து வந்தால் மட்டுமே பயம் ஏற்படும். 6 மாதத்துக்கு ஒரு முறை நான்கைந்து பேரை பிடித்து கொண்டு செல்வதால் மட்டும் எந்த பயனும் ஏற்படாது. அதேபோல் இன்று முதல் பிச்சை தருவதில்லை என்று மக்களும் உறுதி ஏற்க வேண்டியது அவசியம்.

அல்லல் படும் ஆதார்..தினகரன்


ஆதார் எண் - அமெரிக்காவில் எப்படி சமூக பாதுகாப்பு எண் முக்கியத்துவம் பெறுகிறதோ அந்த அளவுக்கு, இந்தியர்களுக்கு மிக முக்கியமானது என்றால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; காரணம், எல்லா உரிமையும் உள்ள இந்தியர் என்று நாம் சொல்லிக்ெகாள்ள வேண்டுமானால், அதற்கான ஒரே அதிகாரப்பூர்வ அடையாளமாக அது வருங்காலத்தில் இருக்கும் என்று நம்பப்பட்டது. பாஸ்போர்ட் எப்படியோ அப்படி மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் நடைமுறைப்படுத்த வேண்டிய ஆதார் அட்டை வழங்குவதில் தான் எவ்வளவு குழப்பங்கள்; குளறுபடிகள்; திருப்பங்கள். ஏன் இப்படி...? உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அதற்கு மத்திய அரசும் பணிந்து பயந்து நடுங்கி, தெளிவான விஷயங்களை சமர்ப்பித்து தன் தரப்பை வலுவாக எடுத்து காட்ட முடியாமல் தவிக்கிறதே...?

சுப்ரீம் கோர்ட்டும், இப்படி ஒரு தெளிவில்லாத, தனி மனிதனின் அடிப்படை உரிமை, சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான ஆதாரை எப்படி கட்டாயமாக்க முடியும் என்று திரும்ப திரும்ப அடித்து கேட்கிறதே? ஆதார் திட்டத்துக்காக நாடு முழுவதும் கணக்கெடுத்து பிரமாண்ட முறையில் நடைமுறை ஏற்பாடுகளை செய்ய சாப்ட்வேர் நிறுவன தலைவர் நந்தன் நிலகேனியை அமர்த்தி முந்தைய மன்மோகன் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஆனால், மக்களவை தேர்தலுடன் நிலகேனி மூட்டை கட்டி விட்டு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டு தோற்றார். அத்தோடு ஆதாரும், யாரும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அம்போ நிலைக்கு தள்ளப்பட்டது.

மோடி வந்ததும், ஆதார் வேண்டுமா, வேண்டாமா என்று ஒரு பட்டிமன்றமே நடந்து, கடைசியில் வேண்டா வெறுப்பாக அதை தொடர அனுமதித்தது அரசு. ஆதார் மூலம் தான் காஸ் மானியம், நலத்திட்ட உதவிகளை மோடி அரசு செய்தாலும், அதை முழுமையாக பயன்படுத்த முடியாமல் தவிக்கிறது.
மன்மோகன் அரசு செய்ததை தவிர, ஆதார் விஷயத்தில் எந்த மாற்றத்தையும் மோடி அரசு செய்யவே இல்லை. அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் இவ்வளவு சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று அறிந்தும் அரசு பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது தான் வருத்தமான விஷயம்.
ஆதார் திட்டம் ஆரம்பித்ததில் இருந்தே குழப்பம் தான்; நாடு முழுக்க, ஏன் தமிழ்நாட்டை எடுத்து கொண்டாலே, ஆதார் அட்டை பதிவுக்கு எந்த அளவுக்கு போலீஸ் தடியடி, குளறுபடிகள் நடந்தன என்பது தெரிந்ததுதான்.

பதிவு செய்வதில் ஆரம்பித்து, அட்டை தருவது வரைக்கும் பல கட்டங்களில் திடமான, வலுவான நடைமுறை பின்பற்றப்படவே இல்லை. இனியாவது மோடி அரசு விழித்தால் ஆதாருக்கு வழி பிறக்கும். இப்போது உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிற குறைகளை சரிவர ஆராய்ந்து, பரிசீலித்து பாதுகாப்பு அம்சங்களை கடுமையாக்க வேண்டும். ஆதாரை வைத்து தனி மனிதர்களுக்கு பிரச்னை வந்தால் அதை தீர்க்கவும், ஆதாரை தவறாக பயன்படுத்தினால் அதற்கு கடும் தண்டனை வழங்கவும் தேவையான திருத்தங்களை கொண்டு வந்து முழுமையாக பயன்படுத்தும் வகையில் செய்ய வேண்டும். அப்போது தான் ஆதார் அட்டைக்கும் ஒரு தேசிய அங்கீகாரம் கிடைக்கும். அதை இனியாவது செய்யுமா மத்திய அரசு?

ஆம்னி பேருந்துகளில் செல்ல அடையாள அட்டை கட்டாயம்.......dinamani


By எம்.மார்க்நெல்சன், சென்னை,

First Published : 26 October 2015 04:07 AM IST




ஆம்னி பேருந்துகளில் அடையாள அட்டையுடன்தான் இனி பயணிக்க முடியும். மேலும், இவற்றில் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ஆம்னி பேருந்துகளில் அண்மைக்காலமாக பயணிகளின் உடைமைகள் திருடப்படுகின்றன; பேருந்துகளும் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதனால், இவற்றில் பயணிப்போர் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் தமிழகத்தில் 1,200 பேருந்துகள், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் 800 பேருந்துகள் என மொத்தம் 2 ஆயிரம் பேருந்துகள் பாதுகாப்பு நடைமுறைகள் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பாண்டியன், பொதுச் செயலர் இளங்கோவன், செயலர் அன்பழகன் ஆகியோர் கூறியதாவது:
அடையாள அட்டை இருந்தால்தான், ஆம்னி பேருந்துகளில் இனி பயணிக்க முடியும்.
ரயில்களில் உள்ளதுபோல் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை பயணிகள் கட்டாயம் காண்பிக்க வேண்டிய வகையில் புதிய நடைமுறையை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன.
தவிர்க்க முடியாத ஒரு சில சூழலில், அடையாள அட்டை இல்லாமல் வரும் பயணியிடம் செல்லிடப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு பின்னரே பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்றனர்.
நவீன தீயணைப்பான்கள்
ஆம்னி பேருந்துகளில், தீ விபத்து ஏற்பட்டால், அதை உடனடியாகக் கட்டுப்படுத்தும் வகையில் நவீன ரக தீயணைப்பான்கள் இடம்பெறும். பாட்டில் வடிவில் இவற்றை திறக்கவோ அல்லது அழுத்தவோ வேண்டியதில்லை. தீப் பிடித்த பகுதியை நோக்கி, தூக்கி எரிந்தால் போதும். தீ கட்டுக்குள் வந்துவிடும். இதைப் பயன்படுத்துவது தொடர்பான செய்முறை பயிற்சி ஆம்னி பேருந்துகளின் ஊழியர்களுக்கும் அண்மையில் வழங்கப்பட்டது. ரூ.2,300 மதிப்பிலான இதில், 3 தீயணைப்பான்கள் பேருந்துக்குள்ளும், 2 ஓட்டுநரிடமும் இருக்கும்.
கண்காணிப்பு கேமரா

பயணிகளின் உடைமைகள் திருடு போவதைத் தடுக்கும் வகையில், கண்காணிப்புக் கேமராக்கள் 10 சதவீத பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பேருந்துகளிலும் விரைவில் பொருத்தப்பட்டு விடும்.

கடந்த ஆண்டு கட்டணமே!

பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

கடந்த ஆண்டு தீபாவளியின்போது, வசூலிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தையே, இந்த ஆண்டும் வசூலிக்க உள்ளோம் என்று ஆம்னி உரிமையாளர்கள் கூறினர்.


துபை விமான நேரத்தில் மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது..dinamani


By dn, திருச்சி,

First Published : 25 October 2015 08:49 AM IST


திருச்சி - துபை இடையே இயக்கப்பட்டு வரும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நேரத்தில் தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் இயங்கப்பட்ட விமானம் பகல் நேரத்தில் இயக்கப்படவுள்ளது.

துபையிலிருந்து தினசரி நள்ளிரவு 12.05 மணிக்கு திருச்சி வந்து பயணிகளை இறக்கி ஏற்றிக்கொண்டு மீண்டும் 12.55 மணிக்கு துபை செல்லும். இந்த விமானம் குளிர்கால அட்டவணை மாறுதல் தொடர்பாக பகல் நேர விமானமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த விமானம் இனி பகல் 12.45-க்கு திருச்சி வந்து அதன் பின்னர் 1.30-க்கு மீண்டும் துபை புறப்பட்டுச்செல்லும்.

இந்த நடைமுறை இன்று தொடங்கி டிசம்பர் 6-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதன் பின் மீண்டும் மாற்றம் செய்யப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்டண சேவையை இந்த வாரம் முதல் துவங்குறது யூடியூப்..dinamani

By dn

First Published : 25 October 2015 02:36 PM IST


பத்தாண்டு காலம் இலவச சேவையை வழங்கிவந்த யூடியூப் இணையதளம், அதன் முதலாவது கட்டண சேவையை இந்த வாரம் துவங்கியிருக்கின்றது.

சந்தாதாரர்கள் இதன் மூலம், விளம்பரங்கள் இல்லாத, பிரத்தியேக காணொளி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். யூடியூப் ரெட் என்ற இந்த சேவையில், மாதம் 9.99 டாலர் பணம் (ரூ. 650) செலுத்தினால், செல்பேசி, கணினி, என எல்லா தளங்களிலும் விளம்பரமின்றி வீடியோக்களை காணலாம். அக்டோபர் 28 முதல் அறிமுகமாகும் இந்த சேவை, முதலில் அமெரிக்காவில் மட்டும் தொடங்கப்படுகிறது. இணையம் மூலமான ஒளிபரப்புச் சந்தையில் வலுத்துவரும் போட்டிச் சூழலை, யூடியூப் எப்படி எதிர்கொள்ளப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விமானத்தில் குழந்தை பெற்ற தைவான் பெண்ணுக்கு அபராதம்

dinamani

By DN, தைபே

First Published : 25 October 2015 04:05 PM IST


அமெரிக்க விமானத்தில் குழந்தை பெற்ற தைவான் பெண்ணுக்கு அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது.

கடந்த 8 ஆம் தேதி சீனவைச் சேர்ந்த விமானம் ஒன்று தைவான் நாட்டின் தலைநகர் தைபேவிலிருந்து அலாஸ்கா வழியாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு இயக்கப்பட்டது.

அந்த விமானத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் பயணித்தார். விமானத்தில் பயணம் செய்தபோது, திடீரென்று அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அலாஸ்கா நகரின் மீது பறந்தபோது, அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அதன்பின்பு அந்த விமானம் மீண்டும் தைபேவுக்கு திருப்பி விடப்பட்டது.

இதுகுறித்து விமானத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தியபோது, பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தை பிறக்கும் தருவாயில் இருந்தபோதும் அதை மறைத்து விமானத்தில் அந்த பெண் பயணம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அமெரிக்கா சென்ற விமானத்தை மீண்டும் தைபே நகருக்கு திருப்ப காரணமாக இருந்த பெண்ணிடம் இழப்பீடு கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானத்தின் செய்தித் தொடர்பாளர் வீனி லீ கூறினார்.

வெளிநாடுகளிலிலிருந்து அடிக்கடி பணம் வரும் வங்கி கணக்குகளை கண்காணிக்க முடிவு

Dinamani

By Venkatesan Sr, புதுதில்லி

First Published : 25 October 2015 09:53 PM IST


வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி பணம் வந்தால் அந்த வங்கி கணக்கை கண்காணித்து, தவறு நடக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பாங்க் ஆப் பரோடா வங்கி மூலம் ரூ.6,100 கோடி பண பரிமாற்ற மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தில்லியில் உள்ள பரோடா வங்கி கிளையில் இருந்து ஹாங்காங்கிற்கு பணம் பரிமாற்றம் நடந்ததில், 59 போலி நிறுவனங்கள் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதாவது, போலி நிறுவனம் உருவாக்கி அந்நிய செலாவணி பரிவர்த்தனை மூலம் சுங்க வரியை திரும்ப பெற்றுள்ளனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஒரு லட்சம் டாலருக்கு குறைவான பரிவர்த்தனை விவரங்களையும் தெரிவிக்குமாறு வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையர் டி.எம்.பாஷின் கூறுகையில், ‘ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கும் குறைவான தொகை பரிமாற்றம் செய்யப்பட்டாலும் அது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட வேண் டும் என்று ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளோம். சிறிய அளவிலான அந்நிய செலாவணி பரிமாற்றம் நடைபெற்றாலும் அதை கவனித்து தகவல் தர வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்’ என்றார்.

தற்போதுள்ள நடைமுறைகளின்படி அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கு மேல் பரிவர்த்தனை நடந்தால்தான் அதனை வங்கிகள் கண்காணித்து கேஒய்சி விதிப்படி அறிவிக்கின்றன.

ஆனால், சிறிய அளவிலான பரிவர்த்தனைகள் ஒரே வங்கி கணக்கில் சிறிது சிறிதாக சேரும்போது இது கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதை பயன்படுத்தி மோசடிகள் நடந்தா லும் தெரியாமல் போய் விடுகிறது. குறைந்த அளவிலான பரிவர்த்தனைகளை தெரிவிக்கும் பட்சத்தில், வெளிநாடுகளில் இருந்து ஆயிரம், இரண்டாயிரம் டாலர் அனுப்பினால் கூட கண்காணிக்கப்படும்.

இதன்மூலம் அந்நிய செலாவணி பரிவர்த்தனை மோசடிகளை தடுக்க முடியும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் கருதுகிறது

குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு ஆண்மை அகற்ற பரிந்துரை..dinamalar


சென்னை:குழந்தைகளிடம், பாலியல் தொந்தரவு செய்யும் குற்றவாளிகளுக்கு, ஆண்மை அகற்ற சட்டம் கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் வில்லியம்ஸ், தமிழகத்தில் ஏழை மாணவர்கள் காப்பகம் ஒன்றுக்கு, 2011ல் வந்தார். அந்த காப்பகத்தில் இருந்த, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை, படிக்க வைப்பதாக கூறி, டில்லிக்கு அழைத்துச் சென்றார். மேலும், மாணவனின் தாய்க்கு, பண உதவியும் செய்துள்ளார்.

டில்லி, ஒய்.எம்.சி.ஏ., விடுதியில், தங்கியிருந்த போது, மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, இயற்கைக்கு மாறாக உறவு கொண்டார். பின்னர், மாணவனை அங்கேயே விட்டு விட்டு, லண்டனுக்கு சென்று விட்டார்.பிறகு, அந்த மாணவன், சிலர் செய்த பண உதவியால், சென்னைக்கு திரும்பினான். மாணவனுக்கு நடந்த கொடுமையை அறிந்த, குழந்தைகள் நல அமைப்பு ஒன்று, போலீசில் புகார் செய்தது.

புகாரை பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், வில்லியம்ஸ் மீது குற்றம்சாட்டி, குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

வில்லியம்ஸ் மீது, கோர்ட், பிடிவாரன்ட் பிறப்பித்தது . இதன் அடிப்படையில், வில்லியம்சை, தேடப்படும் குற்றவாளி என, இன்டர்போல் என்கிற சர்வதேச போலீஸ் அறிவித்தது.

தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரன்டையும், தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதையும், ரத்து செய்ய கோரி, சென்னை ஐகோர்ட்டில், வில்லியம்ஸ் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'டில்லியில் நடந்த சம்பவத்துக்கு, தமிழக போலீசார், வழக்கு பதிவு செய்ய முடியாது, தமிழக கோர்ட்டுக்கு விசாரிக்கவும் அதிகாரம் இல்லை.

மாணவனிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை. குழந்தைகள் நல அமைப்பு உள்நோக்கத்துடன், எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது' என கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:

நாட்டில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதிகரித்து வருகிறது, 2012ல், 38 ஆயிரத்து 172 வழக்குகளும், 2014ல், 89 ஆயிரத்து 423 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்க பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், பள்ளி நிர்வாகமும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம், ஆண்மை அகற்றும், தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

தபாலில் அனுப்பிய மதிப்பெண் சான்றிதழ் மாயம்



கோவை: பாரதியார் பல்கலையின் தொலைமுறைக் கல்வி முறையில் பட்டம் முடித்த மாணவர்கள் சிலருக்கு தபாலில் அனுப்பப்பட்ட சான்றிதழ்கள் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்விக் கூடத்தில் இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ., பாடப்பிரிவுகள், பி.எட்., எம்.எட்., என, ௨௦௦க்கும் மேற்பட்ட பாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த

மாணவர்கள் இம்முறையில் அதிகம் பயின்றுவருகின்றனர். இம்முறையில் கல்வி முடிக்கும் மாணவர்களுக்கு தபால் மூலம் பட்ட சான்றிதழ்கள், மதிப்பெண், புரவிஷனல் உள்ளிட்ட சான்றிதழ்கள் அனுப்பப்படுகின்றன. நகரத்தில் இருப்பவர்களுக்கு சான்றிதழ்கள் முறையாக

சென்றுவிடுகின்றன. ஆனால், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு சான்றிதழ்கள் முறையாக சென்றடைவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி சரண்யா கூறுகையில், ''நானும் எனது தோழியும் சின்ன தடாகத்திலுள்ள ஒரே வீட்டு முகவரியில் பட்ட சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தோம். என் தோழிக்கு தபாலில் சான்றிதழ் கிடைத்துவிட்டது; எனக்கு வரவேயில்லை.

''பல்கலையில் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை. பலமுறை தொடர்புகொண்ட பிறகுதான் நகல் சான்றிதழ் ஒன்றுக்கு, ௧,௫௦௦ செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றனர். இதனால், வீண் அலைச்சலும், செலவும் ஏற்படுகிறது,'' என்றார்.

இந்தியக் கல்வியின் எதிர்காலம்!

Dinamani

By உதயை மு. வீரையன்

First Published : 26 October 2015 01:19 AM IST


பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அண்மையில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டு, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூலை 21 அன்று போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை யு.ஜி.சி. வெளியிட்டது.
÷இந்த நிலையில் இந்தப் பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்போது கேட்டுக் கொண்டுள்ளது. இதுபற்றி மாநிலத் தலைமைச் செயலர்களுக்கு யு.ஜி.சி. கடிதம் அனுப்பியுள்ளது.
÷பட்டியலில் இடம்பெற்றுள்ள போலி பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி. சார்பில் அனுப்பப்பட்ட கடிதங்கள் முகவரி தவறு எனத் திரும்பி வந்துள்ளன. இதனால் அந்தப் போலிப் பல்கலைக்கழகங்கள் வேறு முகவரியில் செயல்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து ஏமாந்து போகும் நிலை உருவாகும்.
÷எனவே, பட்டியலில் இடம்பெற்றுள்ள பல்கலைக்கழகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை அந்தந்த மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், இந்த நடவடிக்கை தொடர்பான தகவலையும் யு.ஜி.சி.-க்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
÷உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவாக எட்டு பல்கலைக்கழகங்களும், தில்லியில் ஆறு பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடு, பிகார், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் தலா ஒன்றுமாக 21 போலிப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருக்கின்றன.
÷இந்தப் போலிப் பல்கலைக்கழகங்கள் பற்றிய எச்சரிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறதே தவிர, இதன்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவே தெரியவில்லை. இதனை நம்பி மாணவர்கள் சேர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இவற்றைத் தடுக்காததன் காரணம் ஊழல் என்பதைத் தவிர வேறு என்ன?
÷இதனையொட்டி மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.), இந்தியக் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதைப் பற்றி ஓர் எச்சரிக்கை செய்துள்ளது.
÷யு.ஜி.சி.-இன் வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றாமல் சில கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்புகளை வழங்குவது கவனத்துக்கு வந்துள்ளது என்றும், இந்தக் கல்வி நிறுவனங்களில் பெறப்படும் பட்டங்கள், பட்ட மேற்படிப்புக்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ செல்லத் தகுந்ததாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
÷இந்தியாவில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் வெளிநாட்டுக் கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னதாக அந்தந்த நாடுகளின் அங்கீகாரக் கவுன்சில்கள் மூலம் உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
÷இந்திய சுயநிதிக் கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை குறைந்த அளவு "பி' கிரேடு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளைக் குறைந்த அளவு 5 ஆண்டுகள் வழங்கியிருக்க வேண்டும்.
÷இந்த ஒப்பந்தம் மூலம் அளிக்கப்படும் படிப்புகள் பற்றிய முழு விவரத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கல்லூரி இணையதளத்தில் வெளியிட வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னதாக தொடர்புடைய இணைப்புப் பல்கலைக்கழகத்திடமும், யு.ஜி.சி.யிடமும் முன் அனுமதி பெற வேண்டும் என்னும் விதிகளை யு.ஜி.சி. வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
÷இந்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தங்கள் கடமைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கின்றன. உள்ளூர்த் தொழில்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக உலக முதலீட்டாளர்களை அறைகூவி அழைக்கின்றன. இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பொதுத் துறை நிறுவனங்களில் தொடங்கி, லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் வரை விற்பனை செய்வதற்கே அரசு துடிக்கிறது.
÷இப்போது கல்வித் துறையிலும் அயல்நாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மத்திய அரசு முனைப்புக் காட்டுகிறது. இதன் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை.
÷160 நாடுகள் கலந்து கொள்ளும் உலக வர்த்தக மையம் (WTO), வரும் டிசம்பர் 15 அன்று கென்யா நாட்டின் நைரோபியில் கூடுகிறது. இந்த பத்தாவது வட்ட அமைச்சக மாநாட்டில் கல்வித் துறைக்குள் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடப் போகிறது.
÷உலக வர்த்தக மையம் என்பது உலகின் செல்வந்த நாடுகள் தாங்கள் உற்பத்தி செய்தவற்றை வளரும் மற்றும் வளரா நாடுகளுக்குள் தடையில்லாமல் விற்பனை
செய்ய உதவுகிறது. இதில் உறுப்பினராக இருந்தால் மற்ற உறுப்பினர் நாடுகளின் ஒப்புதலோடு அந்த நாடுகளைச் சந்தையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
÷இந் நிலையில் பொருள்களை மட்டும் பிற நாடுகளுக்கு விற்பனை செய்து கொண்டிருந்த நாடுகள் இப்போது மருத்துவம், காப்பீடு, கல்வி போன்ற சேவையையும் விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்துள்ளன. இதனால் சேவையில் வணிகத்துக்கான காட்ஸ்
(GATS) ஒப்பந்தம் உருவானது.
1995 ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இந்தியா அதில் உறுப்பு நாடாக இருக்க ஒப்புதல் அளித்துவிட்டது. 2004-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கமும் ஒப்புதல் அளித்துவிட்டுச் சென்றது. 2005-இல் மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசும் சம்மதம் தெரிவித்து விட்டுப் போய்விட்டது.
÷இப்போது நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசாங்கம் இதனை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. முந்தைய அரசுகளின் கொள்கைகளை எதிர்த்து விமர்சித்து வெற்றி பெற்று வந்தவர்கள், பழைய வழியிலேயே போய்க் கொண்டு இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
÷காட்ஸ் ஒப்பந்தம் மாணவரை வாங்குபவர் என்றும், ஆசிரியரை விற்பவர் என்றும், பல்கலைக்கழகங்களைக் கடைகள் என்றும் சொல்கிறது. அதன் அறிக்கையில் மாணவர்கள், ஆசிரியர்கள் என்ற வார்த்தைகளே இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
÷அவர்கள் கடை திறந்தால் அவர்களுக்கு மற்ற கடைக்காரர்களோடு சமமான போட்டி இருக்க வேண்டும். அதாவது அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், மானியங்கள் அவர்களுக்கும் தரப்பட வேண்டும் என்று கூறுகிறது காட்ஸ் ஒப்பந்தம்.
÷160 நாடுகளின் கடைகள் வரும் என்பதால் அரசாங்கத்தினால் அனைவருக்கும் சலுகைகள், மானியங்கள் வழங்க இயலாது என்பதால் மானியமும், சலுகைகளும் இல்லாமல் அரசுப் பல்கலைக்கழகங்கள் படிப்படியாக மூடப்படலாம்.
÷திறக்கப்படும் கல்விக் கடைகள் தரமானதாக இருக்கும் என்று யாராலும் உத்தரவாதம் வழங்க இயலாது என்று காட்ஸ் கூறுகிறது. அத்துடன் பாடத் திட்டம், கற்றுக்கொடுக்கும் முறை ஆகியவை அவர்களாலேயே முடிவு செய்யப்படும்.
÷அவர்கள் கல்வி, வணிகம் செய்ய நமது நாட்டுச் சட்டம் ஏதாவது தடையாக இருந்தால் அதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். கல்விக்கான கட்டணத்தை அவர்களே முடிவு செய்வார்கள். நமது அரசு, நீதிமன்றம் ஆகிய எதற்கும் அவர்கள் கட்டுப்பட்டவர்கள் அல்லர். இவ்வாறு அவர்களுக்கு வசதியாக ஒப்பந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
÷இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்தியாவின் இறையாண்மைக்கு மிகப்பெரிய அறைகூவலாகும். வளர்ந்த நாடுகளோடு போட்டி போட முடியாமல், இருப்பதையும் இழக்கும் அபாயம் ஏற்படும். நமது மொழி, கலை, பண்பாடு அனைத்தும் காலப்போக்கில் அழிந்துவிடும். மத்திய, மாநில அரசுகளின் உரிமைகள் எல்லாம் பறிக்கப்படும்.
÷இந்தியக் கல்வித் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வெளிப்படையாகக் கூறாமல் ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை எப்படியோ தெரிந்து கொண்ட கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், இடதுசாரி சிந்தனையாளர்களும் இதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அரசாங்கம் எப்போதும் போல மெüனம் சாதித்து வருகிறது.
÷மனித குல வரலாற்றில் கல்விக்கென ஓர் இன்றியமையாத இடம் உண்டு. அதுதான் நாகரிக வளர்ச்சியின் ஆரம்பம். அறியாமை அகலாமல் நாகரிகம் ஏற்பட முடியாது. அறியாமை இருளை அகற்றுவதற்கு கல்வி வெளிச்சம் அவசியமாகிறது. நாகரிக சமுதாயத்தில் முக்கியப்புள்ளியாக கல்வி இருந்து வருகிறது.
÷ஆதிக்க சமுதாயமும், அரசாங்கமும் கல்வியினை மக்களுக்கு அளிக்காமல் மறுதலித்துக் கொண்டே வந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மக்களுக்குக் கல்வி தரப்பட்டால் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்; ஆதிக்கத்தையும், அரசாங்கத்தையும் எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம்.
÷இந்திய அரசமைப்புச் சட்டம், 14 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை உறுதி செய்கிறது. இருந்தாலும் நாடு விடுதலையடைந்து 68 ஆண்டுகள் ஆகியும் கல்வி பெறும் உரிமை மக்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லையே!
÷தொடக்கக் கல்விதான் இப்படியென்றால் உயர்கல்வி எட்டாத உயரத்தில் ஏறிக் கொள்ளுமோ? இந்திய மக்களின் எதிர்காலம் போல இந்தியக் கல்வியின் எதிர்காலமும் உறுதி செய்யப்பட வேண்டும்.
போலிப் பல்கலைக்கழகங்கள் பற்றிய எச்சரிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறதே தவிர, இதன்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவே தெரியவில்லை. இதனை நம்பி மாணவர்கள் சேர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இவற்றைத் தடுக்காததன் காரணம் ஊழல் என்பதைத் தவிர வேறு என்ன?

Saturday, October 24, 2015

விபத்துக்கு யார் காரணம்?

Dinamani

By ஆசிரியர்

First Published : 24 October 2015 01:40 AM IST


தமிழக நெடுஞ்சாலை விபத்துகளில் கொத்துக் கொத்தாக மனித உயிரிழப்பு ஏற்படுவதற்கு இரண்டு விதமான விபத்துகள்தான் காரணம். ஒன்று, டயர் வெடித்து வாகனம் கட்டுப்பாட்டை இழப்பதால், சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்கிறது. இரண்டாவதாக, நின்று கொண்டிருக்கும் வாகனத்தின் மீது விரைந்து வரும் வாகனம் மோதுவதால் ஏற்படும் விபத்து.
இந்த இரண்டு விபத்துகளுமே மனிதத் தவறுகளால் நடைபெறுபவை. ஆனால், இதுவரை நெடுஞ்சாலைத் துறையோ, வாகன உற்பத்தியாளர்களோ, நெடுஞ்சாலைக் கண்காணிப்பு காவலர்களோ இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்ச முயற்சியைக்கூட மேற்கொள்ளவில்லை.
ஆயுதபூஜைக்கு முன் தினம் இருங்களூர் அருகே நடந்த விபத்தில் 10 பேர் இறந்தனர். இதற்காக டிரெய்லர் லாரி, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் இருவருமே கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகமிக இயந்திரத்தனமான அரசு நடைமுறை. விபத்துக்கான காரணம் வெறும் கவனக்குறைவு மட்டுமல்ல.
லாரியில், அதன் உடல்பகுதிக்குள் அடங்காமல் வெளியே அகன்று இருந்த இரும்புத் தகடுகள்தான் பேருந்தின் ஒரு பகுதியை வெட்டிக் கிழித்துள்ளன. இருக்கையில் இருந்தவர்களின் வயிற்றுப் பகுதியை வெட்டி இரண்டு கூறாக்கியதால் வாகனத்தின் வலது பக்க இருக்கைகளில் ஜன்னல் ஓரம் அமர்ந்தவர்கள் மட்டும் இறக்கவும், மற்றவர்கள் காயமடையவும் நேர்ந்தது. இதேபோன்ற சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் அருகே நடந்தது. இரும்புத் தகடு பேருந்தின் வலப்புறத்தைக் கிழித்துச் சென்றதில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகளின் கால்கள் துண்டாகின.
ஒரு லாரியின் உடல்பகுதியைத் தாண்டிச்செல்லும் இரும்புத் தகடுகளை ஏற்றிச் செல்ல எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது? அதுவும் இரவு நேரத்தில்? அதிலும் குறிப்பாக, இந்த இரும்புப் பலகைகளின் கடைசி முனைப் பகுதியில் சிகப்பு விளக்குகளால் எச்சரிக்கை செய்யப்படாமல்? வாகனம் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டுவிட்டால், எச்சரிக்கை விளக்குகளையும் லாரி ஓட்டுநர் அணைத்துவிடுவதா? நாற்கரச் சாலையில் வாகனங்களை நிறுத்தத் தனி இடங்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டுள்ளபோது, ஏன் நெடுஞ்சாலையில் நிறுத்துகிறார்கள்? இது குற்றமில்லையா?
இத்தகைய வாகனங்களை அந்த நாற்கரச் சாலையில் இயங்க அனுமதித்ததற்காக அந்த பகுதிக்குரிய போக்குவரத்து கண்காணிப்பு அதிகாரிகள் அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். போக்குவரத்து காவல் துறை வழக்கு மட்டும்தான் பதிவு செய்யுமா? அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்களா?
அண்மையில் புகழ்பெற்ற தனியார் ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் குடிபோதையில் ஓட்டியதைக் கண்டு பயணிகள் எதிர்த்தனர். முசிறி அருகே பேருந்து நிறுத்தப்பட்டது. அந்த ஓட்டுநரைக் காவல் துறையிடம் ஒப்படைத்தார்கள். அவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், மாற்று ஓட்டுநரை அனுப்ப அந்த நிறுவனம் ஏழு மணி நேரம் எடுத்துக்கொண்டது. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதற்காக அந்த நிறுவனத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பயணிகள் பேருந்தின் ஓட்டுநர் குடித்துவிட்டு ஓட்டினால் அதற்கு அந்த நிறுவனத்துக்குப் பொறுப்பு கிடையாதா? ஒருவேளை இந்த ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளாகிப் பலர் இறந்திருந்தாலும், ஓட்டுநர் குடித்திருந்தது மறைக்கப்பட்டிருக்கக்கூட வாய்ப்பு உள்ளது. பயணிகளுக்கு என்னதான் பாதுகாப்பு என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி.
அடுத்ததாக, டயர் வெடிப்பு விவகாரம். டயர்கள் ஏன் வெடிக்கின்றன? இந்தக் கேள்வியைப் போக்குவரத்துத் துறையோ அல்லது வாகன உற்பத்தியில், டயர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களோ சட்டை செய்வதே இல்லை.
டயர்களில், டியுப்களில் மிகச் சிறு குமிழ் போன்ற இடைவெளிகள், வெற்றிடங்கள் உற்பத்தி நிலையிலேயே ஏற்பட்டுவிடும் என்றும், வாகனம் அதிவேகத்தில் செல்லும்போது வெப்பத்தால் அந்தக் குமிழியில் சிக்கியுள்ள காற்று வெப்பமடைந்து விரிந்து வெடிக்கும்போது, அது அளவில் சிறியதாக இருந்தாலும், அவை மிகச் சிறு மாற்றத்தையே ஏற்படுத்தினாலும், அதிவேகம் காரணமாக வாகனம் நிலைகுலைகிறது என்றும் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இதுகுறித்து குறைந்தபட்சம் கார், லாரி ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்துவதும்கூட கிடையாது.
எந்தெந்த டயர்கள் பூட்டப்பட்ட, எத்தனை எடையுள்ள வாகனங்கள், எத்தனை கிலோ மீட்டர் தூரம் சென்றதும் சற்று ஓய்வுக்காக நிறுத்தப்பட வேண்டும் என்பதை ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினாலே டயர்வெடிப்புகளை தவிர்த்துவிட முடியும். இந்தப் பொறுப்பு டயர் உற்பத்தி நிறுவனங்களுக்கு இருக்கிறது. அவர்கள் இதுகுறித்துக் கவலைப்படுவதில்லை.÷
டயர் வெடித்ததால் விபத்து என்று பதிவு செய்யும் காவல் துறை, அந்த டயர் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு, அது வெடிக்கக் காரணம் என்ன என்பதை ஆய்வுக்கு அனுப்புகிறதா? குறைந்தபட்சம் இத்தகைய நடவடிக்கைகளை ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படிப்பு சார்ந்த கல்லூரி மாணவர்களின் பொறுப்பில் ஒப்படைத்தால்கூட அவர்கள் இதுகுறித்து ஆய்வு செய்வார்கள்.
வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறை வெறும் இயந்திரத்தனமாக, ஊழல் நிறைந்ததாக இருப்பதும் இத்தகைய விழிப்புணர்வு ஏற்படாமல் போனதற்குக் காரணம். ஏதாவது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்குப் பணம் கட்டிவிட்டு, அரைகுறையாக ஓட்டத் தெரிந்தாலும் போதும், எந்த வாகனத்துக்கான ஓட்டுநர் உரிமம் என்றாலும் கிடைத்துவிடும் என்ற நிலைதான் இந்தியா முழுவதிலும் இருக்கிறது.
இந்தியாவில் உயிர் - விலைமதிக்கவியலாத ஒன்றா, விலைமதிப்பில்லாத ஒன்றா?

தினத்தந்தி

logo

புதுடெல்லி,


வெளிநாடுகளில் இருந்து ரூ.5 லட்சம் வரை மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு அபராதமும், அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு வருபவர்கள் மீது வழக்கு அல்லது கைது நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெளிநாடு சென்று திரும்புவோரை தொந்தரவு செய்வதை குறைக்கும் வகையில், தண்டனை விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. அதன்படி, இனிமேல், ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பொருட்களை கொண்டு வந்தால், வழக்கு அல்லது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது. அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு வந்தால்தான், அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

இதுபோல், மத்திய உற்பத்தி வரி, சுங்க வரி, சேவை வரி உள்ளிட்ட சட்டங்களின் கீழ் குற்றங்கள் இழைப்போரை கைது செய்வதற்கான பண உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், இந்திய கள்ள நோட்டுகள், ஆயுதம், வெடிபொருட்கள், அரியவகை உயிரினங்கள் ஆகியவற்றை கடத்தி வருவோர் மீது, அந்த பொருட்களின் மதிப்பை கவனத்தில் கொள்ளாமல், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கைது செய்வதற்கும், வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளிப்பதற்குமான விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஒரே செல்போனில் 2 சிம்களிலும் வாட்ஸ்ஆப் வசதி ஆர். தினகரன் | தமிழில்: கா.கி

Return to frontpage

அலுவலக எண், தனிப்பட்ட உபயோகம் என இன்று ஒருவரே பல எண்களை வைத்துக் கொண்டிருப்பது சாதாரணமான சங்கதி. இதனால் இரண்டு சிம்கள் பொருத்தக் கூடிய டூயல் சிம் மொபைல்களை பயன்படுத்துவோரும் இன்று அதிகம்.

ஆனால், இந்த போன்களில் இருக்கும் பிரச்சினை, இருக்கும் இரண்டு எண்களில் ஒரு எண்ணிலிருந்து மட்டும்தான் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும். மற்றொரு எண்ணைக் கொண்டு, அதே மொபைலில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது. இதனால், வாட்ஸ்ஆப் பயன்பாட்டுக்காக மட்டும் வேறொரு புது மொபைலை நாடும் நிலை உள்ளது.

ஆனால் தற்போது, ஒரு மொபைலில் இரண்டு நம்பர்களுக்கும் தனித் தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் விதமாக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் டூயல் சிம் மொபைல் பயன்படுத்துபவர் என்றால், திசா (Disa) என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் மொபைலில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கான வழிமுறைகள் மிக எளியவை. திசா செயலியை https://goo.gl/bW2ELo என்ற இணைப்பின் மூலம் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

அதில் ‘+’ என்ற தேர்வை அழுத்தி, உங்கள் மற்றொரு எண்ணை (அதாவது வாட்ஸ்ஆப் பயன்படுத்தாத எண்) '+91' என குறியீட்டோடு தரவும். (உதாரணம்: +91 98765*****)

அடுத்து வெரிஃபை செய்வதற்கான கட்டம் வரும். இதைத் தாண்டினால் ஒரே நேரத்தில் இரண்டு எண்களுக்கு தனித்தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்த உங்கள் மொபைல் தயாராகிவிடும். நீங்கள் ஏற்கெனவே வைத்துள்ள வாட்ஸ்ஆப் இல்லாமல், திசா செயலிக்குள் இன்னொரு வாட்ஸ்ஆப் பக்கம் உருவாகிவிடும்.

ஆனால் தற்போது திசா செயலியில் உள்ள வாட்ஸ்ஆப் மூலம் செய்திகளை அனுப்ப மட்டுமே முடியும். வாட்ஸ்ஆப் கால்கள் (Whatsapp call) செய்ய முடியாது. அதே போல ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் மட்டுமே தற்போது இந்த செயலி வேலை செய்யும்.
Keywords: வாட்ஸ்ஆப், இரண்டு எண்கள், புதிய செயலி, டூயல் சிம், திசா செயலி

யார் மூலம் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பலாம்?

logo

சரித்திர காலம்தொட்டே, ‘‘திரை கடலோடியும் திரவியம் தேடு’’ என்பது தமிழர்களின் வாழ்வு முறையாக இருந்து இருக்கிறது. இப்போது பல ஆண்டுகளாக ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்கிறார்கள். இதில் படித்தவர்கள் மட்டுமல்லாமல், படிக்காதவர்களும் அடங்குவார்கள். அரபு நாடுகளில் கட்டுமானப்பணி போன்ற பல பணிகளுக்கு முறைசாரா தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல தொடங்கியபிறகு, கிராமப்புறங்களில் ஏராளமான குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்த நிலையில் இருந்து வளமான நிலைக்கு சென்றன. எனவே, ஏழை குடும்பங்களில் யாராவது ஒருவர் அரபு நாடுகளுக்கு சென்றால், அவர்கள் அங்கு சம்பாதித்து பணம் அனுப்புவார்கள், நாம் வசதியான நிலையில் வாழலாம் என்ற கனவுடன் இருப்பதையெல்லாம் விற்றுவிட்டு, போதாக்குறைக்கு கடன் வாங்கி அனுப்புகிறார்கள். பலர் இவ்வாறு அனுப்பும்போது, அரசு நிர்வாகங்கள் அல்லது அரசு அங்கீகாரம் இல்லாத ஏஜெண்டுகள் மூலமாக செல்வதால் பணமும் நிறைய கொடுக்கவேண்டியது இருக்கிறது, சொன்ன வேலையோ, சொன்ன சம்பளமோ கிடைக்காமல் திக்கு தெரியாத நாட்டில் போய் அவதிப்படுகிறார்கள். தப்பித்து தமிழ்நாட்டுக்கு திரும்பிவிட்டால் போதும் என்று தவிக்கிறார்கள். இதில் வீட்டு வேலைக்கு செல்லும் தாய்க்குலத்தின் பாடுதான் பரிதாபம். சொல்லொண்ணா துயரத்தில் நரக வேதனையை அனுபவிக்கிறார்கள்.

சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்ற கஸ்தூரி என்ற பெண், அவர் வேலைபார்த்த வீட்டு பெண்ணால் வலது கை வெட்டி துண்டிக்கப்பட்டதாகக்கூறி, அங்கு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அந்த பெண்ணோ, ‘நான் வெட்டவில்லை, கஸ்தூரி 3–வது மாடியில் இருந்து சேலையைக்கட்டி தப்பித்துச்செல்ல கீழே இறங்கும்போது, ஜெனரேட்டர் மீது விழுந்ததால் கை துண்டிக்கப்பட்டுவிட்டது’ என்கிறார். விசாரணையில், கஸ்தூரியும் முறையான அனுமதிபெற்று சவுதிக்கு வேலைக்கு செல்லவில்லை என்கிறார்கள். அதாவது, வீட்டுவேலைக்கு செல்லும் அனுமதி இல்லாமல் சென்றிருக்கிறார் என்று தகவல்கள் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சவுதி அரேபியாவில் வீட்டுவேலைகள் செய்வதற்காக இந்தியாவில் இருந்து ஆட்கள் அனுப்புவதற்காக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், 5 லட்சத்துக்கும்மேல் அங்கு பணியாற்ற இந்தியாவில் இருந்து செல்லமுடியும். அரசின் நிறுவனங்கள் அல்லது அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலமாக வேலைக்கு செல்பவர்களுக்கு, தூதரகம் மூலமாக அனைத்து பாதுகாப்பும் இருக்கும். ஆனால், போலி ஏஜெண்டுகள் அல்லது அரசின் அங்கீகாரம் இல்லாத ஏஜென்சிகள் மூலமாக முறையான விசா இல்லாமல் செல்லும்போதுதான் அனைத்து பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டு வேலைக்காக செல்ல விரும்பும் தமிழர்கள், போலி ஏஜெண்டுகளிடம் ஏமாறாமல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறவேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசால் 30–11–1978 அன்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால், தொடங்கி இத்தனை ஆண்டுகளாகியும், இந்த நிறுவனத்தின் மூலமாக 2014–2015 வரை 8,469 பேர்களே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கேரளாபோல, தமிழ்நாட்டிலும் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அல்லது அரசின் அங்கீகாரம்பெற்ற நிறுவனங்கள் மூலம்தான் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பவேண்டும். அவர்களின் பாதுகாப்பான பணிக்கு இந்த நிறுவனங்கள்தான் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்ற நிலையை தமிழக அரசு உருவாக்கவேண்டும். அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இன்னும் தீவிரமாக இயங்கவேண்டும். இந்த ஆண்டில் ஏராளமானவர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி முத்திரை பதிக்கவேண்டும்.

Friday, October 23, 2015

ஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா? கவலை எதுக்கு... அரிசி இருக்கு!...vikatan

ஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா? கவலை எதுக்கு... அரிசி இருக்கு!

யுத பூஜை அன்று அனைவரும் கார், பைக்கை எல்லாம் குளிப்பாட்டுவார்கள் என தெரிந்ததோ என்னவோ, என் செல்லக்குட்டி ராகவன், காலையிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் என் ஸ்மார்ட் போனை குளிப்பாட்டிட்டான்.

விளைவு, போனுக்கு ஜலதோஷம், எனக்கு வீட்டிலேயே பூஜை... போன் ஆன் ஆகுது, Incoming call வருது; ஆனா touch screen work ஆகலை; Touch screen work ஆகாம போன்ல எதையுமே பண்ண முடியல; Phone ஐ unlock கூட பண்ண முடியலை;

திருதிரு-னு முழிச்சுட்டு இருக்கும் போதுதான் ஆபத்பாந்தவன் Google - ஞாபகம் வந்தது. 

இப்படி போன் தண்ணீரில் நனைந்து விட்டால், phone back cover, sim card, memory card, battery எல்லாத்தையும் கழற்றி விட்டு, ஒரு air lock cover-ல அரிசிய போட்டு, அதுக்கு phone-ஐ போட்டால், phone-க்குள் இருக்கும் தண்ணீரை அரிசி உறிஞ்சி விடுமாம். அரிசியால LCD Screen க்கு பின்னால் இருக்கும் தண்ணீரை கூட உரிஞ்ச முடியும் என்று Google கூறியது.
air lock cover-க்கு எங்கே போவது என நினைக்கையில், "பேசாம phoneஐ அரிசி பாத்திரத்துக்குள்ளேயே போட்டுட்டா என்ன?" என அம்மா கேட்க, phoneஐ அரிசி பாத்திரத்துக்குள் போட்டு புதைச்சுட்டு, 'திக்திக்' மனதோட அரை மணி நேரம் கழித்து எடுத்து பார்த்தேன்.

WOW... Touch Screen இப்போ நல்லா ஒர்க் ஆகுது. உடனே outgoing calls போகுதா, key pad work ஆகுதா, music play ஆகுதா-னு எல்லாம் செக் பண்ணிணேன். Rear Camera lensல தண்ணீர் திரை போல தெரிந்தது. மறுபடியும் அரை மணி நேரம், அரிசியின் உதவி தேவைப்பட, இப்போ என் phone- perfectly alright.

எதிர்பாராம உங்களில் யாராவது மழையில் போனுடன் நனைந்து விட்டால், இந்த தகவல் உபயோகமாக இருக்கும் என நினைத்து Share செய்தேன்.

-உமாதேவி கணேசன்

அமராவதிக்கு வாழ்த்துகள்!

Dinamani


By ஆசிரியர்

First Published : 23 October 2015 12:58 AM IST


புதிய மாநிலத்தை உருவாக்குவதைக் காட்டிலும் மிகக் கடினமான வேலை புதிய தலைநகரம் அமைப்பது. புது தில்லி, சண்டீகர் போன்ற நகரங்களுக்குப் பிறகு, இந்தியாவில் புதிதாக ஒரு தலைநகரை உருவாக்கும் பொறுப்பும், பெருமையும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குக் கிடைத்துள்ளது.

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டவுடன், ஹைதராபாத் நகரை பத்து ஆண்டுகள் வரைதான் பொதுத்தலைநகராக பயன்படுத்த முடியும் என்ற நிலையில், ஒரு புதிய இடத்தைத் தலைநகராகத் தேர்வு செய்து, வசதிகளை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு ஆந்திர மாநில முதல்வருக்கு ஏற்பட்டது. குண்டூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் என, தற்போதைய நகரங்களில் ஒன்றையே தலைநகராகத் தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பும், அப்பகுதி சார்ந்த மக்களின் அழுத்தமும் இருந்தாலும், புதிய இடத்தைத் தேர்வு செய்தார் சந்திரபாபு நாயுடு.

கிருஷ்ணா நதிக்கரையோரம் குண்டூர்- விஜயவாடாவுக்கு இடையே அமராவதியில் 32 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில் அமையவிருக்கும் தலைநகருக்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. பூமிபூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். பத்து ஆண்டுகளில் இந்த நகரை, அதாவது சந்திரபாபு நாயுடுவின் மொழியில் சொன்னால், இந்தியாவின் சிங்கப்பூரை, அமைத்துவிட வேண்டும் என்ற தீவிரத்துடன் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு இல்லாமல் இல்லை. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. ஒரு தலைநகருக்கான அலுவலகம், சட்டப்பேரவை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான வீடுகள் ஆகியவற்றை அமைக்க அதிகபட்சம் 1,000 ஏக்கர் போதும் என்றார்கள். புதிய இடத்தில் மரங்கள் வெட்டப்படும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்த்தன. நான்கு போகம் காணும் விளைநிலம் பறிக்கப்படுவதாக விவசாய அமைப்புகள் எதிர்த்தன. 58 தாலுகாக்களைச் சேர்ந்த 500 கிராம மக்கள் வெளியேற வேண்டுமா என்று கேள்வி எழுந்தது. எல்லா எதிர்ப்புகளையும் மீறித்தான் இந்த நகரம் இப்போது அடிக்கல் விழாவைக் கண்டுள்ளது.

இதற்கு அடிப்படைக் காரணம், ஆந்திர மாநிலத்தின் தற்போதைய நகரங்கள் எவையுமே, விரிவு செய்யப்பட முடியாதவை. தேவையெனில் ஒரு துணை நகரை, அலுவல் சார்ந்து அமைக்கலாமேயொழிய, ஒரு தலைநகராக மாற்றமடைவது எந்த நகரிலும் சாத்தியமில்லை. ஆகவேதான் சந்திரபாபு நாயுடுவின் இந்த முயற்சி முதல் வெற்றியைக் கண்டுள்ளது. கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மேலதிகமான இழப்பீட்டுத் தொகையை அளிக்க நாயுடு உறுதி அளித்துள்ளார்.

அமராவதி வெறும் அரசு நிர்வாகத்துக்கான நகரமாக மட்டுமே இருக்காது. அது பொருளாதார நகரமாக, மக்கள் நகரமாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன், வணிக வளாகங்கள் மட்டுமன்றி, இயற்கை சார்ந்த நீர்த் தடாகங்களுடன் ஒரு சிங்கப்பூர் போல, ஹாங்காங் போல இருக்கும் என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிடுகிறார். இதற்கான பெருநகரத் திட்டத்தை சிங்கப்பூர் நிறுவனங்கள் அளித்துள்ளன. சந்திரபாபு நாயுடு நினைப்பது போலவே இந்த நகரம் அமைந்துவிட்டால், ஆசியாவிலேயே சிறந்த நகரமாக இது அமையும்.

இந்தியாவின் முக்கிய நகரங்கள், குறிப்பாக, மாநிலத் தலைநகரங்கள் பல நூற்றாண்டு பழைமையானவை. அவற்றில் சாலைகளை விரிவுபடுத்துவது என்றால், தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களின் இருப்பிடங்களை அழிக்க வேண்டியதாக இருக்கும். நூறடிச் சாலைகளையும், அறுபது அடிச் சாலைகளையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இந்த நிலையில் நவீன நகரங்கள் புதிதாக அமைக்கப்படுவது மட்டுமே நடைமுறை சாத்தியமாக இருக்கும்.

அதனால், சந்திரபாபு நாயுடு திட்டமிடுவது போல, புதிதாக உருவாக்கப்படும் நகரங்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்குத் திட்டமிடப்படாமல், அடுத்த 100 ஆண்டுகளுக்கான நகரமாகத் திட்டமிடப்பட வேண்டும். ஏனெனில், இந்தியாவில், எல்லா தலைநகரங்களும் மக்கள் நெரிசலாலும், கட்டட விதிமுறை மீறல்களாலும் சுருங்கிக் கிடக்கின்றன.

சென்னையிலும் இதே நிலைமைதான். சாலைகளை அகலப்படுத்தும் முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஏற்கெனவே இருந்த சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டன. கூவமும் அடையாறும் சுருங்கிப் போய் சாக்கடையாகின. கழிவுநீர் ஓடைகள்கூட ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை.

தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர், தலைநகரைத் திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்று சொன்னபோது, அவரது எண்ணம் காவிரியோரம் ஒரு புதிய தலைநகரை உருவாக்க வேண்டும் என்பதுதான். ஒருவேளை அவரது கனவும்கூட ஒரு சிங்கப்பூர் நகரமாக இருந்திருக்கக்கூடும். குறைந்தபட்சம், பல அலுவலகங்களின் தலைமையிடத்தை திருச்சிக்கு மாற்றுவதாகவும் இருந்திருக்கலாம். ஆனால் ஏளனங்களால் அவர் அதைக் கைவிட நேர்ந்தது.

இன்று இந்தியாவின் அனைத்து தலைநகரங்களின் நிலையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உருவெடுத்துள்ளது. இந்தியாவின் தலைநகரங்கள் அனைத்தும் அதிகார மையங்களின் இருப்பிடமாக வலுப்பெற்ற போதிலும், மக்கள் வாழத் தகுதியற்ற, சுகாதார வசதிகளே இல்லாத நிலைமை உருவாகியுள்ளது.

எல்லா மாநிலங்களிலும் புதிய தலைநகரை உருவாக்குதல் சாத்தியமில்லை என்றாலும், இணையத்தால் அலுவலகங்கள் நடத்த முடியும் எனும் சூழலில், பல அரசுத் துறை அலுவலகங்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்வதன் மூலம் தலைநகரின் இறுக்கத்தைத் தளர்த்த முடியும். ஒரே இடத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் வைத்திருப்பது இனியும் இயலாது.

அமராவதி ஒரு சிங்கப்பூர் ஆக வாழ்த்துகள்.

பருப்பு விலை என்னாச்சு?

logo

1967–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார கூட்டங்களில், ‘‘பக்தவச்சலம் அண்ணாச்சி, பருப்பு விலை என்னாச்சு?, வெங்கட்ராமன் அண்ணாச்சி, வெங்காயம் விலை என்னாச்சு?’’ என்ற கோஷங்கள்தான் பெரிதும் எழுப்பப்பட்டன. அந்த வகையில்தான், சமீபகாலங்களாக அரிசி விலை கட்டுக்குள் இருந்தாலும், பருப்பு, உளுந்து விலை விண்ணை தொட்டுவிடுவேன் என்று பயங்காட்டிக்கொண்டு இருக்கிறது. வெங்காயம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. இந்தியா முழுவதிலும் பருப்பு விலை மற்றும் உளுந்து விலை உயர்வுதான் மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. நேற்று சென்னையில் துவரம் பருப்பு விலை ஒரு கிலோவுக்கு ரூ.210 ஆகவும், பாக்கெட் துவரம் பருப்பு விலை ரூ.225 ஆகவும், உளுந்தம் பருப்பு ஒரு கிலோ விலை ரூ.180 ஆகவும், பாக்கெட் உளுந்தம் பருப்பு ரூ.200 ஆகவும் இருந்தது.

ஓட்டல்களில் 2 இட்லி வாங்கி நிறைய சாம்பார் ஊற்றி பிசைந்து சாப்பிட்ட காலம் எல்லாம் போயே போய்விட்டது. இப்போது சிறிய ஓட்டல்களில்கூட சாம்பாரை தூக்குவாளியில் கொண்டுவந்து ஊற்றுவதில்லை. சிறிய கிண்ணங்களில் கொண்டுவந்துதான் தருகிறார்கள். பருப்பு வடை, உளுந்த வடையின் அளவெல்லாம் சிறியதாகிவிட்டது. சாம்பார் வடையை ஓட்டல்களில் காணவேயில்லை. வருமானம் குறைந்த வீடுகளில் இப்போதெல்லாம் சமையலில் சாம்பார் என்பது எட்டாக்கனியாகிவிட்டது. இரண்டு சிறிய மீன்களைப்போட்டு குழம்பு வைத்துவிடலாம் என்றே நினைக்கிறார்கள். மீன் விலை குறைந்துவிட்டது. மத்தி மீன் கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும், கெண்டை மீன் கிலோ 30 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரையிலும் என்று தொடங்கி பல மீன்கள் கைக்கு எட்டும் விலையிலேயே இருக்கிறது.

துவரம் பருப்பு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் விளைவதில்லை. மத்திய பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மட்டும்தான் விளைகிறது. பருவமழை பொய்த்ததாலும், சாகுபடி பரப்பு 12.5 லட்சம் ஹெக்டேர் குறைந்ததாலும், சாகுபடி செய்த நிலங்களில் விளைச்சல் குறைந்துவிட்ட காரணத்தாலும், சராசரி உற்பத்தி 10.66 சதவீதம் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டில் ஒரு கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் டன்னாக இருந்த பருப்பு உற்பத்தி, இந்த ஆண்டு ஒரு கோடியே 72 லட்சம் டன்னாக குறைந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் பருப்பின் தேவை ஆண்டுக்கு ஏறத்தாழ 2 கோடியே 30 லட்சம் டன்னாகும். இந்த பற்றாக்குறையை சரிசெய்ய வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யவேண்டும், அல்லது சாகுபடி பரப்பை உயர்த்தவேண்டும். இப்போது 5 ஆயிரம் டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 ஆயிரம் டன் வரப்போகிறது. இன்னும் 10 ஆயிரம் டன் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது என்கிறார்கள். இதெல்லாம் நிச்சயமாக போதாது. இன்னும் இருமாதங்களுக்கு பருப்பு தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். இன்னும் விலை உயர்ந்தால் மக்களால் அதை தாங்கிக்கொள்ளவே முடியாது. கப்பலில் இறக்குமதி செய்வதற்கு பதிலாக, அவசர அத்தியாவசியம் கருதி, விமானம் மூலம் இறக்குமதி செய்ய பரிசீலிக்கவேண்டும். அடுத்த ஆண்டுக்கு இப்போதே திட்டமிடவேண்டும். சாகுபடி பரப்பை உயர்த்தவேண்டும். இந்த மாநிலங்களில்தான் விளையும் என்ற நிலையை மாற்றி, அனைத்து மாநிலங்களிலும் சீனா, இஸ்ரேல் நாடுகளைப்போல, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி துவரை பயிரிடவேண்டும். மொத்தத்தில், ரெயில்வே பட்ஜெட்போல, வேளாண்மைக்கும் தனி பட்ஜெட் போட்டு, அனைத்து பயிர்களையும் திட்டமிட்டு பயிரிடவேண்டும்.

Tuesday, October 20, 2015

பெண் எனும் பகடைக்காய்: சிறகடிக்கும் ஒற்றைப் பறவைகள்! ..........பா.ஜீவசுந்தரி

Return to frontpage

தனது இறுதி ஊர்வலத்தில் மக்கள் வெள்ளத்தின் மீது ஆச்சி மனோரமா மிதந்து சென்ற காட்சி நம் வாழ்நாள் முழுவதும் மறக்காது. அநேகமாக அண்மைக் காலங்களில் பெண் ஆளுமை ஒருவரின் இழப்புக்காக இவ்வளவு மக்கள் வெள்ளம் திரண்டதில்லை.

பொதுவாகத் தங்கள் அபிமான ஆண் நடிகர்கள் அல்லது அரசியல் தலைவர்களுக்கே இது போன்ற பெரும் வெள்ளம் திரளும். ஆனால், ஆச்சிக்குத் திரண்ட கூட்டம் சிந்திக்க வைக்கிறது. அவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நகைச்சுவை நாயகியாக நடித்தவர் என்பதாலா அல்லது ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புரிந்தவர் என்பதாலா, அல்லது பழக மிகவும் இனியவராக, யார் மீதும் தவறாக ஒரு சொல் கூறாதவராக, யாரிடமிருந்தும் ஒரு சொல் கேளாதவராக வாழ்ந்து அனைவரிடமும் நட்பு பேணியதாலா?

அவரது இழப்பிலிருந்து மீள முடியாமல் அவரை அறிந்தவர்கள் கூறிய அஞ்சலிக் குறிப்புகள் அனைத்திலும் ஓர் உண்மை இருந்தது. அவர் ஒற்றைப் பறவையாக வாழ்ந்தவர். அவர் ஏற்ற பாத்திரங்கள் இனித்ததைப் போல அவரது சொந்த வாழ்க்கை இனிப்பானதல்ல. சோகங்கள், துயரங்கள், துரோகங்கள் இவற்றைச் சந்தித்துக்கொண்டேதான் அவர் மக்களுக்கு மகிழ்வூட்டிக்கொண்டிருந்தார்.

தோல்வியை எதிர்கொள்வதன் சவால்கள்

ஒரு பெண் தன் மண வாழ்க்கை தோல்வியுறும்போது எதிர்கொள்ளும் துன்பங்கள் அவ்வளவு எளிதான வையல்ல. அதிலும் குழந்தைகளுடன் தனித்து விடப்படும்போது அவர்களுக்கு அன்பும் ஆதரவும் தந்து அரவணைக்கக்கூடிய பெற்றோர், உடன் பிறந்தவர்களின் அண்மை மிக அவசியம். தன் கையே தனக்குதவி என வாழ நேரும்போதும் பொருளாதார பலம் பெற்றால்தான் பாதிக் கிணறு தாண்டியவர்களாவார்கள். அது துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் அவர்களுக்கு அளிக்கும். அவர்களின் பெரும் பலமும் அதுவே.

உற்றவர்களின் ஆதரவு இல்லாதபோது அக்கறை என்ற பெயரில் உள்ளே புகும் நபர்கள், சாய்ந்துகொள்ளத் தமக்குத் தோள் கொடுப்பதாக நினைத்து மயங்கி மீண்டும் சரிவை நோக்கித் தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர்க் கதைகள் ஏராளம். உண்மையிலேயேயே மாறாத அன்பும் அக்கறையும் கொண்டவர்களும் இல்லாமல் இல்லை. ஆனால், இவர்கள் அக்கறையானவர்கள்தானா என்பதைக் கண்டுகொள்வதற்குள் காலம் குப்புறத் தள்ளிவிட்டுக் குழியும் பறித்துவிடுகிறது. ஆச்சிக்கு தாயாரின் உற்ற துணை, அசலான நண்பர்கள் பலரின் ஆதரவு இருந்தது.

பல ஆண்டுகளின் முன் சென்னைப் புறநகரில் 25 கி.மீ தாண்டிக் குடியிருந்தபோது, அன்றாடம் மின்சார ரயிலில் பயணித்து அலுவலகம் வர வேண்டும். அதில் பெண்கள் பெட்டி என்பது பலவிதமான கூட்டுக் கலவைகளும், உணர்வுகளும், வண்ணங்களும் நிறைந்த அனுபவத்தைக் கொடுக்கும். தலைவிரி கோலமாக, இடுப்பில் குழந்தை, குழந்தைக்கான உணவு, உடை அடங்கிய பை, ஹேண்ட்பேக் சகிதம் ஓடி வந்து ரயிலைப் பிடிக்கும் ஒரு பெண்ணை தினமும் நாங்கள் சந்திப்போம்.

அந்த ஒரு மணி நேர ரயில் பயணத்தில் ஒவ்வொரு பெண்ணும் மற்றவருக்கு உற்ற தோழியாய், தாயாய் உருமாறி பரஸ்பரம் உதவிக்கொள்வோம். குழந்தைக்கு ஒரு பெண் சோறூட்டுவதற்குள், தலைவிரி கோலமாய் வந்தவள் கூந்தலைச் சீவி முடித்து சிங்காரித்திருப்பாள். மற்றொரு பெண் அந்தக் குழந்தைக்கு உடையுடுத்தி, அலங்காரம் செய்வாள். அதிகாலை முதல் வீட்டு வேலைகள், சமையலை முடித்துவிட்டுச் சாப்பிட நேரமில்லாமல் வரும் பெண்கள் தங்கள் சாப்பாட்டுக் கடையை அங்குதான் முடிப்பார்கள். வாய்க்குப் பிடித்ததை சமைத்துச் சாப்பிட முடியாத, வயிற்றுப் பிள்ளையுடன் வரும் ஒரு கர்ப்பிணிக்காக, அவள் விருப்பம் அறிந்து சமைத்து எடுத்து வந்து கொடுக்கும் அன்பு அதன் உச்சம்.

சென்ட்ரல் ஸ்டேஷன் வருவதற்குள் இத்தனையும் நடந்து முடிந்திருக்கும். பின் அவரவர் வழி, அவரவர் பாடு.

மாலை வீடு திரும்பும் போதும் இதே காட்சி. உதிரியாக வாங்கி வரும் பூ தொடுத்து முடிக்கப்பட்டிருக்கும்; அடுத்த நாள் சமையலுக்கான கீரைக்கட்டுகள் பல கைகளின் உதவியோடு ஆய்ந்து முடிக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சிகள் எப்போதும் காணக்கூடியவை. மின்சார ரயிலில் அன்றாடம் பயணிக்கும் அத்தனை பெண்களுக்கும் இது அத்துப்படி. அதே அன்பு, பிரியம், வாத்ஸல்யத்துடன் இப்போதும் அம்மாதிரி நட்பும் பயணமும் தொடர்கின்றன. ஒரு மணி நேரப் பயணத்தில் கிடைக்கும் இந்த மாதிரியான அன்பும், ஆதரவும் வாழ்க்கைப் பயணம் முழுவதும் அவளுக்கு எல்லா இடங்களிலும் கிடைத்துவிட்டால் ஒற்றைப் பெண் எதையும் சாதிப்பாள்.

குழந்தைகளை வளர்க்கும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வேறு மாதிரியானவை. ஒருவருக்கொருவர் அவர்களே எதிரிகள், அவர்களே நண்பர்கள் என இரட்டை அவதாரம் எடுக்க வேண்டும். அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப கொஞ்சம் தாமதமானாலும் பயம் அடிவயிற்றில் உருக்கொள்ளும். குழந்தை என்ன செய்கிறானோ / செய்கிறாளோ என்ற கவலை வேலைகளின்போது கவனத்தைச் சிதறடிக்கும். பள்ளிப் பருவம் தாண்டும்போது வேறு மாதிரியான பயங்கள். வளரிளம் பருவத்தில் இருக்கும் குழந்தைகளைக் கையாள்வதில் மிகுந்த பொறுமையையும் எச்சரிக்கை உணர்வையும் கைக்கொள்ள வேண்டும். பின் கல்லூரிப் படிப்பு தாண்டும் வரை பயம், பயம், பயம்தான்.

ஒரு குழந்தை மட்டும் கொண்டுள்ள பெற்றோர் எதிர்கொள்ளும் அச்ச உணர்வு மிக நியாயமானது. தன் வாழ்க்கைதான் இப்படியானது, தன் குழந்தைகள் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என நினைக்காத பெற்றோர்கள் யார் இங்கு? ஒற்றைப் பெண் எப்போது இங்கு சாதனையாளராகிறாள்? அவள் பொருளாதார ரீதியாகத் தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்து, குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்து, அவர்களுக்கான எதிர்கால வாழ்க்கையை நல்ல விதமாக அமைத்துக் கொடுக்கும்போதுதான் அவளுக்கான சவால் நிறைவு பெறுகிறது.

இதில் எது ஒன்றில் சறுக்கினாலும் அவள் தோல்வி கண்டவளாகவே சமூகத்தால் புறம் தள்ளப்படுவாள். ஆனால், பொருளாதாரம் எனும் கடிவாளம் அவர்கள் கையிலேயே இருக்க வேண்டும், அப்போதுதான் மரணத்தின்போதும் அவள் வாழ்க்கையை வென்றவளாகிறாள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் ..... ஒய்.ஆண்டனி செல்வராஜ்



மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் மொத்தம் 2,626 படுக்கைகள் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு 2,600 முதல் 2,800 உள் நோயாளிகளும், 9,000 வெளி நோயாளிகளும் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைப்படி 100 வெளி நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் பணிபுரிய வே ண்டும். அதன்படி, ராஜாஜி மருத் துவமனையில் தினமும் வரும் 9,000 வெளிநோயாளிகளுக்கு குறைந்தபட்சம் 90 செவிலியர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், செவி லியர் பற்றாக்குறையால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மதுரையைச் சேர்ந்த சுகாதார சமூக செயற்பா ட்டாளர் ஆனந்தராஜ் கூறியது:

இந்திய மருத்துவக் கவுன் சில் நிர்ணயித்துள்ளபடி போது மான செவிலியர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரியவில்லை. 1,200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி யாற்ற வேண்டும். ஆனால், இங்கு 338 நிரந்தர செவிலியர்கள், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த 81 டெபுடேஷன் செவிலியர்கள் உட்பட 420 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். அரசு ராஜாஜி மருத்துவமனையில் 49 வெளிநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. ஒரு பிரிவுக்கு 2 செவிலியர்கள் வீதம் 98 செவிலியர்கள் கட்டாயம் பணி யாற்ற வேண்டும். ஆனால், 49 செவிலியர்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றனர். பொது வார்டில் 8 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும் என விதி உள்ளது. அனேக பொது வார்டுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு 3 அல்லது 4 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

செவிலியர்களுக்கு வார விடுமுறை மற்றும் இதர விடுமுறை என்று கழித்தாலும், சராசரியாக ஒவ்வொரு ஷிப்டிலும் 60-லிருந்து 80 நோயாளிகளுக்கு 3 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுகளில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது இங்கு 3 அல்லது 4 செவிலியர்கள் மட்டுமே ஒரு ஷிப்டில் பணியில் உள்ளனர்.

பல வார்டுகளில் 150-க்கும் மேற்பட்ட படுக்கைகளுக்கு, ஒன்று அல்லது இரண்டு செவிலியர்கள் மட்டும் நியமிக்கப்பட்டு பணியில் உள்ளனர். பிரசவ வார்டில் அறுவை சிகிச்சை முடிந்தபிறகு தாய்மார்களை, குழந்தைகளுக்கு பால் ஊட்ட பழக்குவது, வலி உள்ளிட்ட இதர பிரச்சினைகளை கேட்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

ஒரு செவிலியரே 150-க்கும் மேற்பட்ட பெண்களை கவனிப்பதால், தரமற்ற மருத்துவச் சேவையே நோயாளிகளுக்கு கிடைக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘போதுமான செவிலியர்கள் உள்ளனர்’

இதுகுறித்து மருத்துவமனை டீன் ரேவதியிடம் கேட்டபோது, மருத்துவமனையில் மூன்று ஷிப்டுகளிலும் போதுமான செவிலியர்கள் பணிபுரிகின்றனர். டெபுடேஷன் மூலமும் தேனி, சிவகங்கை வெளி மாவட்டங்களில் இருந்தும் செவிலியர்கள் இங்கு வந்து பணிபுரிகின்றனர். தமிழகம் முழுவதும் தற்போது 7400 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தினசரி 2 பேர் வீதம் சராசரியாக மதுரை அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்து வருகின்றனர். இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைப்படி செவிலியர்கள் பணியாற்றுவது சாத்தியமில்லாதது. போதுமான செவிலியர்களைக் கொண்டு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கி வருகிறோம் என்றார்.

மொபைல் பரிவர்த்தனை பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?..

Return to frontpage


கோப்புப் படம்

சமீப காலமாக மொபைல் போன்கள் கிட்டத்தட்ட மணிபர்ஸ்களைப் போல உருமாற்றம் அடைந்துள்ளன. மொபைல் வாலட்டுகள் இந்த வசதிகளை அளிக்கின்றன. நமது வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பதைப்போல மொபைல் வாலட்டில் வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப செலவு செய்யலாம்.இப்படி மொபைல் போன் மூலம் நிதியியல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம் என்கிறபோது இன்னும் அதி முக்கியத்துவம் வாய்ந்த பயன்பாட்டு பொருளாக செல்போன் மாறியுள்ளது.

நவீன வசதிகள் வளர வளர மனிதனின் சோம்பேறித்தனமும் கூடவே வந்து விடுகிறது. செல்போன் வராத காலங்களில் லேண்ட்லைன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் தொலைபேசி எண்களை எழுதி வைத்திருக்கும் ஒரு டைரியையும் கூடவே தூக்கிக் கொண்டு செல்வோம். செல்போன் வந்த பிறகு இது போன்ற எண்களை குறித்து வைக்கும் வேலைகளுக்கு விடை கொடுத்து விட்டோம். குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் காலத்தில் செல்போன் எண்களை மாத்திரமல்ல, அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்துக்கொள்ளும் பல வசதிகளும் வந்துவிட்டன. இங்குதான் சிக்கல் தொடங்குகிறது.

சாதாரண செல்போன் யுகத்தில் செல்போன் தொலைந்துவிட்டால் பெரிய பாதிப்புகள் இருந்திருக்காது. அதிகபட்சமாக போனை இழப்போம். அதில் சேமித்து வைத்துள்ள தொலைபேசி எண்கள் கிடைக்காமல், நமது தொடர்புகளை இழப்போம். சில அரிதான சம்பவங்களில் சிம் கார்டு மூலம் சில அசௌகர்யங்கள் ஏற்படலாம். அதாவது இது முழுக்க செல்போனோடு சம்பந்தபட்டதாகத்தான் இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் வருகை

ஆனால் ஸ்மார்ட்போன்கள் காலத்தில் இவ்வளவு சாதாரணமாக இந்த விஷயத்தைக் கையாள முடியவில்லை. செல்போன் பயன்படுத்துபவரின் தனிப்பட்ட தகவல்களும் சேர்ந்தே போய்விடுகிறது. குறிப்பாக பல்வேறு தேவைகளுக்கான செயலிகளை பயன்படுத்தும் இந்த நாட்களில் செல்போன் என்பது மிகவும் பாதுகாப்புக்குரிய முக்கிய பொருளாகவே மாறிவிட்டது.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களை பெரும்பாலானோர் மொபைல் மூலமாகவே பயன்படுத்தி வருகின்றனர். தவிர இ-காமர்ஸ் நிறுவனங்கள் மொபைல் செயலி மூலமான விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகின்றன.

இந்த வகையிலான பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக செயலி களில் நமது தனி விவரங்களை ஒரு முறை பதிவு செய்துவிட்டால் போதும். செல்போன் மூலமாக அந்த தளத்துக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் கொடுக்க தேவையில்லை.

இது போன்ற வசதிகள் காரணமாகத்தான் செல்போன் தொலைந்து போகாமல் இருக்க கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியிருக்கிறது.

டிஜிட்டல் மணிபர்ஸ்

தவிர தற்போது நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பல செயலிகள் வந்துவிட்டன. பெரும்பாலானவர்கள் இதை பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். குறிப்பாக வங்கிகளின் நெட் பேங்கிங் வசதிகளிலிருந்து தற்போது மொபைல் பேங்கிங் சேவைகளுக்கு மாறி வருகின்றனர். மேலும் சில வங்கிகள் மற்றும் செயலிகள் செல்போன் மூலம் கிரெடிட் கார்டு தகவல்களை சேமித்து வைத்து, இதன் மூலம் பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட இதர வர்த்தகச் சேவைகளையும் வழங்கி வருகின்றன.

அதாவது சமீப காலமாக மொபைல் போன்கள் கிட்டத்தட்ட மணிபர்ஸ்களைப் போல உருமாற்றமும் அடைந்துள்ளன. மொபைல் வாலட்டுகள் இந்த வசதிகளை அளிக்கின்றன. நமது வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பதைப்போல மொபைல் வாலட்டில் வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப செலவு செய்யலாம்.

இப்படி மொபைல் போன் மூலம் நிதியியல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள் ளலாம் என்கிறபோது இன்னும் அதி முக்கியத்துவம் வாய்ந்த பயன்பாட்டு பொருளாக செல்போன் மாறியுள்ளது.

சரி இது போன்ற சூழ்நிலைகளில் செல்போன் தொலைந்து விடுகிறது என்றால் என்ன செய்வது? சட்ட ரீதியான நடவடிக்கைகள் என்பது அடுத்த கட்டம்தான். அது நமது தனிப்பட்ட விவரங்களை தவறாக கையாளப்படுவதிலிருந்து பாதுகாப்பளிக்கும். ஆனால் மொபைல் போன் கிட்டத்தட்ட ஒரு பர்ஸ் போல இருப்பதால் இதில் இருக்கும் நிதி சார்ந்த தகவல்கள் மற்றும் பணம் திருடப்பட்டால் என்ன செய்வது ? இதுதான் தற்போதைய நிலையில் மொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய விஷயம்.

இது தொடர்பாக மொபைல் சர்வீஸ் மற்றும் செல்போன் விற்பனை நிறுவனங்கள் மற்றும் மொபைல் வாலட் பயனாளிகளிடமும் பேசினோம்.

ஸ்மார்ட்போன்களில் தற்போது கிடைக்கும் வசதிகளைப் போல பல மடங்கு வசதிகள் தினசரி அப்டேட் ஆகிக்கொண்டிருக்கின்றன. இதனால் போன்களின் பாதுகாப்பு என்பது முழுக்க முழுக்க தனிநபர்களின் பாதுகாப்பு சார்ந்ததாகவே இருக்கிறது.

பொதுவாக ஸ்மார்ட் போன்களை இயக்குவதற்கு ரகசிய குறியீடு உள்ளதுபோல அமைப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். என்றாலும் செல்போன் தொலைந்து போனால் ரகசிய குறியீடுகளை எடுக்க முடியாது என்றில்லை. மொபைல் சாப்ட்வேர் தெரிந்தவர்கள் அதை ஓப்பன் செய்துவிட முடியும். எனவே சிம்கார்டு மட்டும் செயலிழக்கச் செய்துவிட்டால் போது மானதல்ல என்பதை உணர வேண்டும்.

மொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் செயலிகளின் பாஸ்வேர்டுகள்.

பொதுவாக வங்கிச் செயலிகளில் பயன்பாடுகளை பொறுத்த வரை ஒவ்வொருமுறை பயன்படுத்தும் போதும் வாடிக்கையாளர் எண் மற்றும் ரகசிய எண் கேட்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் என்னதான் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகள் கொடுத்தாலும் அதையும் உடைக்கும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அதாவது வாலட்டில் வைக்கும் பணமோ, கிரெடிட் கார்டு தகவல்களோ 100 சதவீதம் பாதுகாப்பாகத்தான் இருக்கும் என்றும் சொல்ல முடியாது என்கின்றனர்.

மொபைல் வாலட்டுகளுக்கு நுழைய பாஸ்வேர்டு தனியாகத்தான் உள்ளிட வேண்டும். இதை அவ்வப்போதும் கொடுக்கலாம். அல்லது 24 மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை என்கிற வகையிலும் செட்டிங்குகள் இருக்கிறது. இந்த இரண்டாவது வகையில் செட்டிங் செய்திருப்பவர்களது மொபைல் போன் வாலட்டில் பணம் இருந்தால் எளிதாக எடுத்துவிட முடியும் என்கின்றனர்.

டிஜிட்டல் பரிவர்த்தனை

சமீப காலத்தில் மொபைல் வாலட் முறையிலான டிஜிட்டல் பரிவர்த் தனை நடவடிக்கைகளை அரசாங்கமும் ஊக்குவித்து வருகிறது. இந்த வகை யிலான சேவைகளுக்கு அனுமதி வழங்குவதில் புதிய நிறுவனங் களும் இறங்குகின்றன. ஏனென் றால் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனை நடவடிக்கைகள் தனிநபர் களது கணக்கில் முழுமையாக வந்துவிடு கிறது. இதில் சட்ட விரோத பண பரிவர்த் தனைகளுக்கு வாய்ப்பே இல்லை என்பதால் அரசு ஊக்குவிக்கிறது.

ஆனால் மொபைல் வாலட்டில் அதிகமான பணத்தை வைத்துக் கொள்ளாமல் அவ்வப்போது தேவைக்கு ஏற்ப கிரெடிட்கார்டு அல்லது டெபிட் கார்டிலிருந்து பணத்தை பரிமாற்றம் செய்து கொண்டு வாலட் மூலம் பயன்படுத்தலாம். இதுவரை வாலட் பரிமாற்றங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவில்லை. ஆனால் இனி நடக்காது என்றும் சொல்ல முடியாது என்கின்றனர் இவர்கள்.

ஒவ்வொரு புதிய வசதியும் மனிதனை மேலும் சோம்பேறியாக்குவது என்கிற பேச்சும் இருக்கத்தான் செய்கிறது. அதை உறுதிபடுத்துவதுபோலத்தான் மொபைல் பயன்பாடு உருவாகி யுள்ளது. அதே சமயத்தில் நவீன கண்டுபிடிப்புகள் மனிதனை மேலும் நவீன மனிதனாக்குகிறது என்பதையும் மறுக்க முடியாது.

நாம் நவீன மனிதனாக இருக்கும் அதே வேளையில் சோம்பேறியாகவும் மாறாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்போனுக்கு பாதுகாவலர் நீங்கள்தான்.

ஆங்கிலம் அறிவோமே - 80: கொலைகளின் ஆங்கிலம் .............ஜி.எஸ்.சுப்ரமணியன்

Return to frontpage

What is your good name?

What is your respectable name?

இரண்டில் எது மேலும் பவ்யமானது என்று கேட்டுள்ளார். Good அல்லது respectable தேவையில்லை! What is your name? என்பதே போதுமானது. மரியாதை பொங்க வேண்டுமென்றால் May I know your name என்றோ Can you please tell your name என்றோ கேட்கலாமே!

எனக்கென்னவோ நமது இந்தி மொழி பேசும் மக்கள் மூலமாகத்தான் ‘good name’ வந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இந்தியில் ‘ஆப் கா ஷுப் நாம் கியா ஹை? (Aap kaa shub naam kya hai?) என்று கேட்பது வழக்கம். அந்த ஷுப் (சுபம்) தான் (shub) ஆங்கிலத்தில் good ஆக எதிரொலித்திருக்க வேண்டும்.

The என்பதை ‘தி’ என்று உச்சரிக்க வேண்டுமா? அல்லது ‘த’ என்று உச்சரிக்க வேண்டுமா? என்று ஒரு வாசகர் கேட்டிருக்கும் கேள்வி வேறு சிலரது மனங்களிலும் எழுந்திருக்க வாய்ப்பு உண்டு.

அதாவது The என்பதை ‘தில்’ என்பதில் உள்ள ‘தி’ என்பதுபோல் உச்சரிக்க வேண்டுமா அல்லது தர்மம் என்பதில் உள்ள ‘த’ என்பதுபோல் உச்சரிக்க வேண்டுமா? அதாவது THIS என்பதில் உள்ள THI என்பதுபோல் உச்சரிக்க வேண்டுமா? அல்லது THAT என்பதில் உள்ள THA என்பதுபோல உச்சரிக்க வேண்டுமா? அதாவது (‘ஐயகோ, விளக்கம் புரியுது. விடையைச் சொல்லுங்க’ என்று குரல்கள் கேட்கின்றன). சரி சரி

A,E,I,O,U ஆகியவற்றை vowels என்றும் பிற ஆங்கில எழுத்துக்களை consonants என்றும் குறிப்பிடுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

Vowelsக்கு முன்னால் உள்ள the என்றால் அதை ‘தி’ என்று உச்சரிக்க வேண்டும். The orange தி ஆரஞ்ச். The Umbrella தி அம்ரெல்லா.

Consonantsக்கு முன்னால் உள்ள the என்றால் அதை ‘த’ என்று உச்சரிக்க வேண்டும். The basket த பாஸ்கெட். The purse த பர்ஸ்.

வெகு நாட்கள் கழித்து மொட்டை மாடியில் படுத்துக்கொண்டபோது வானத்தில் தெரிந்த நட்சத்திரங்கள் வெகு ரம்யமாக இருந்தன.

“Never I have seen such a sight’’ என்றான் இளைய மகன். அவனது ஆங்கிலத்தைத் திருத்தி அவன் பரவசத்தை நான் அப்போது குலைக்கவில்லை.

ஆனாலும் ஒரு சிறு விளக்கம். Never என்ற வார்த்தையோடு ஒரு வாக்கியம் தொடங்கினால் அதைத் தொடர்ந்து auxiliary verb இடம் பெறும்.

அதாவது “Never have I seen such a sight’’ என்றுதான் அந்த வாக்கியம் இருந்திருக்க வேண்டும்.

FETICIDE INFANTICIDE



ஒரு வாசகர்“ Suicide என்று அந்த வார்த்தைக்கு ஏன் பெயரிட்டார்கள்?” என்று கேட்டிருக்கிறார். இன்னொருவர் “Infanticide, Feticide ஆகிய இரண்டும் ஒன்றா” என்று கேட்டிருக்கிறார்.

பொதுவாக cide என்பது கொலையைக் குறிக்கிறது. Homicide என்பது மனிதரை மனிதர் செய்யும் கொலை. லத்தீன் மொழியில் sui என்றால் தன்னைத் தானே என்று அர்த்தம். எனவே suicide என்றால் தற்கொலை.

Genocide என்றால் இனப்படுகொலை. Insecticide என்றால் பூச்சிகளைக் கொல்வது. Biocide என்றாலும் நடைமுறையில் பூச்சிக் கொல்லிதான்.

Feticide என்பதும் Infanticide என்பதும் ஒன்றுதான் என்று சிலர் கருதினாலும் அப்படியல்ல. Feticide என்பது கருவில் இருக்கும்போது கொல்வது. அதாவது கருச்சிதைவு. கணிசமான நாடுகளில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு Feticide-ஐ சட்டங்கள் அனுமதிக்கின்றன.

Infanticide என்பது தன் குழந்தையை அதன் பெற்றோரே (முக்கியமாக அம்மாவே) கொல்வது. ஒருவயதுக்கு உட்பட்ட குழந்தையைக் கொல்வதைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள். Infanticide-ஐ எந்த நாட்டின் சட்டமும் அனுமதிப்பதில்லை.

மன்னரைக் கொன்றால் அது Regicide. தந்தையைக் கொன்றால் Patricide. அன்னையைக் கொன்றால் Matricide.

அதற்காக cide-ல் முடியும் வார்த்தைகள் எல்லாம் கொலையைக் குறிப்பவை என்று ஒட்டுமொத்தமாக மனதில் ‘கொல்ல’ வேண்டாம்.

எடுத்துக்காட்டாக, coincide. ஒரே நேரத்தில் நடப்பது, ஒரே புள்ளியில் இணைவது போன்றவற்றைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். Our vacations coincided this year. The interest of employers and employees do not generally coincide. The centres of concentric circles coincide.

“That was a sheer coincidence’’ என்றால் அது திட்டமிட்டதல்ல. மிகவும் தற்செயலாக நடைபெற்றது என்று பொருள்.

“Personification குறித்து குறிப்பிட்டிருக்கிறீர்கள். Metaphor குறித்து நான் படித்ததும் இதுவும் ஒன்றாக இருக்கிறதே இரண்டும் ஒன்றுதானே?’’ என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். இந்த இரண்டோடு Simile என்பதையும் சேர்த்தே விளக்கி விடலாம் என்று தோன்றுகிறது.

Simile (ஸ்மைல் அல்ல ஸிமிலி) என்பது உவமை.

She was as busy as a bee.

It was as black as coal.

You were as brave as a lion.

Metaphor என்பதை உருவகம் எனலாம். அதாவது ஒன்றுக்குக் குறியீடாக மற்றொன்றைச் சொல்வது. மற்றபடி பொதுவான வாக்கியங்களில் அப்படிப் பயன்படுத்த மாட்டோம். Life is a roller coaster என்றால் வாழ்க்கையில் நாம் நிஜமாகவே (அதாவது நம் உடல்) உயரத்திலும், பள்ளத்திலும் சென்று வருகிறோம் என்பதில்லை. நிகழ்வுகள் மாறி மாறி வருகின்றன என்றுதான் அர்த்தம்.

Time is money என்பார்கள். அதற்காக ஒரு பொருளை கடையில் வாங்கிக் கொண்டு time-ஐ கொடுக்க முடியுமா என்ன? Time is money என்பது ஒரு Metaphor.

My neighbour is a fox என்றால் அவர் தந்திரமானவர் என்றுதானே அர்த்தம். அவருக்கு நான்கு கால்கள் இருக்குமா என்ன?

Personification என்பது Metaphor-லிருந்து மாறுபட்டது. உயிரற்ற பொருள் அல்லது தன்மைக்கு உருவம் கொடுப்பது. அதாவது மனிதத் தன்மையை உயிரற்ற ஒரு பொருளுக்கு அளிப்பது.

The trees sighed in the wind.

The moon winked at me.

The stars danced playfully.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

SRMC NOTIFICATION 2016-17


இ-மெயில் திருத்த சேவை!..vikatan

இ-மெயில்-மெயிலை பயன்படுத்துவது எப்படி என பாடம் நடத்துவது எல்லாம் இனி தேவையில்லாத விஷயம் என்றுதான் நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால் இ-மெயிலை சரியாக பயன்படுத்துவது எப்படி என்பது தொடர்பாக எல்லோரும் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. சரியாக எனும் போது மறுமுனையில் இருப்பவர் அதிருப்தியோ,ஆவேசமோ அடையாத வகையில் வாசகங்களை மெயிலில் இடம்பெறச்செய்வது!

ஏனெனில் மெயிலில் நாம் பயன்படுத்திம் தொனி அதை வாசிப்பவர் மனதில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதிலும் போகிற போக்கில் அதிகம் யோசிக்காமல் அனுப்பி வைக்கப்படும் மெயில்கள் வர்த்தக முறிவுகளை கூட உண்டாக்கலாம்.
இதற்கு முக்கிய காரணம், கடிதம் எழுதும் போது அதற்கென ஒரு வடிவத்தை, அலுவல் மொழியை பயன்படுத்த பழகியிருப்பது போல அதன் நவீன கால வடிவமான ஈ-மெயிலுக்கு என ஒரு அமைப்புக்கு நாம் பழகியிருக்கவில்லை என்பதுதான்.

அலுவலகத்தில் உடன் பார்க்கும் நண்பருக்கு மெயில் அனுப்பும் போது, கோப்பு தேவை அனுப்பவும் என ஒற்றை வரியை டைப் செய்வதற்கும், தயவு செய்து,இந்த கோப்பை உடனே அனுப்பி வைக்கவும் என கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இப்படி இ-மெயில் அனுப்பும் போது அதில் இடம்பெறும் வாசகங்களில் அலட்சியம், ஆணவம் போன்ற தொனி கேட்பதை தவிர்கக்ச்செய்யும் சேவையை, பாக்ஸ்டைப் அறிமுகம் செய்துள்ளது. இ-மெயில் திருத்தச்சேவையான இதில், நாம் உத்தேசித்துள்ள வாசகங்களை டைப் செய்தால் அவற்றை சரி பார்த்து, பணிவு அம்சம் கொண்ட வாசகங்களாக மாற்றித்தருகிறது.

மெயிலில் உள்ள வார்த்தைகளில் எவை பணிவற்றவை என சுட்டிக்காட்டி, அவற்றை எப்படி மாற்றலாம் எனும் ஆலோசனை சொல்கிறது. நண்பர்களுக்கு அனுப்பும் மெயில்களை கூட விட்டுவிடலாம். ஆனால் வர்த்தக நோக்கிலான மற்றும் அலுவல் நோக்கிலான மெயில்களில் இந்த கவனம் மிகவும் அவசியம். இந்த சரி பார்த்தல் சேவையை ஜிமெயிலுடன் இணைந்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.

இதன் பரிந்துரைகள் 100 சதவீதம் துல்லியமானவை என்று சொல்ல முடியாது என்றாலும், இ-மெயில் நாகரீகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சேவை. ஆங்கில மொழியில் உள்ள வாசகங்களை மட்டுமே இந்த சேவை திருத்தி தருகிறது என்றாலும் கூட, இதன் பின்னே இருக்கும் அடிப்படை அம்சங்கள் எந்த மொழியில் இ-மெயில் அனுப்பும் போதும் கவனிக்க வேண்டியவைதான்.

இணைய முகவரி:https://labs.foxtype.com/politeness

- சைபர் சிம்மன்

Monday, October 19, 2015

நுகர்வோரே விழித்திருங்கள்.....dinamani


By எஸ். பாலசுந்தரராஜ்

First Published : 19 October 2015 02:01 AM IST


நாம் கடையில் சென்று ஒரு பொருளை வாங்கும்போது, பெரும்பாலானோர் அதில் ஐ.எஸ்.ஐ. முத்திரை அல்லது அக்மார்க் முத்திரை உள்ளதா என கவனிப்பதில்லை.
மேலும் பலர் தயாரிப்பு தேதி, காலாவதி தேதியையும் பார்ப்பதில்லை. பொதுமக்களின் இந்த அறியாமையை சில வியாபாரிகள் பயன்படுத்தி தங்களது பொருள்களை விற்பனை செய்து விடுகிறார்கள். எனவே, நுகர்வோர் விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியமாகிறது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, பகுதி2(1)(டி) பிரிவின்படி நுகர்வோர் என்பதன் விளக்கம், பணம் கொடுத்து ஒரு பொருளையோ, பணியையோ, சேவையையோ தன் சொந்த உபயோகத்திற்கு பெறும் ஒருவர் நுகர்வோர் ஆவர். பொருளை வணிக நோக்கத்துடன் வாங்கும் நபர் நுகர்வோராக இருக்க முடியாது.
இருப்பினும், தனது சுய வேலைவாய்ப்பிற்காக அல்லது தனது வாழ்வின் ஆதாரத்திற்கான பொருளை வாங்கியிருப்பவர் அவர் நுகர்வோராகக் கருதப்படுவார். பொருளின் தரம், எடை, அளவு, தூய்மை போன்றவற்றில் குறைபாடு இருந்தால் அந்தப் பொருளை தரமற்ற பொருள் என கருத வேண்டும்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, பிரிவு2(1)(ஜி) பிரிவின் படி பணம் கொடுத்து சேவையைப் பெற்றுக்கொள்ளும்போது, வாக்களித்தபடி சேவை கொடுக்கப்படாமல் சேவை பெற்றவரை இன்னல்களுக்கு ஆளாக்குவது சேவை குறைபாடு ஆகும்.
உதாரணமாக, பேருந்து பயணத்தின் போது பணம் கொடுத்து பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர் அல்லது நடத்துநர் நம்மை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினால் அல்லது குறிப்பிட்ட நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாவிட்டால் அது சேவை குறைபாடு ஆகிறது. இது பணம் கொடுத்து வாங்கும் சேவைகள் (சர்வீஸ்) எனப்படும்.
தொலைபேசி சேவை, காப்பீடு சேவை, பணம் கொடுத்துப் பெறும் மருத்துவச் சேவை, வங்கிச் சேவை, ரயில்வே சேவை, உணவு விடுதி உள்ளிட்டவையும் இதுபோன்ற பணம் கொடுத்து வாங்கும் இதர சேவைகள்.
நுகர்வோர் சேவை குறைபாடுகள், பொருள்களின் அளவு, தரம் குறித்து புகாரின் தன்மையைப் பொருத்து மாவட்ட, மாநில, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் புகார் செய்யலாம்.
கோரும் நஷ்டஈட்டுத் தொகை ரூ.20 லட்சம் வரை இருந்தால் மாவட்ட நீதிமன்றத்திலும், ரூ.20 லட்சத்திற்குமேல் ஒரு கோடி ரூபாய் வரை இருந்தால் மாநில நுகர்வோர் நீதிமன்றத்திலும், ரூபாய் ஒரு கோடிக்கு மேற்பட்டு இருந்தால் தேசிய நுகர்வோர் தீர் ஆணையத்திடம் நேரடியாகப் புகார் செய்யலாம்.
பொருள் அல்லது சேவையை விலைகொடுத்து வாங்கிய நபர், பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்பு, மத்திய, மாநில அரசு, ஒத்த நோக்கங்களைக் கொண்ட நுகர்வோரின் சார்பில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நுகர்வோர் கூட்டாக புகார் செய்யலாம்.
நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்யும் முன்னர் வாங்கிய பொருள்களுக்கான ரசீதை அவசியம் வைத்திருக்க வேண்டும்.
அனைத்து மூல ஆவணங்களையும் ஒரு கோப்பில் வைத்திருங்கள். நீதிமன்ற உத்தரவின்றி வேறு எவரிடமும் அதைக் கொடுக்காதீர்கள். தேவைப்படும்போது நகல் எடுத்து பயன்படுத்துங்கள்.
புகார் செய்பவரின் பெயர் மற்றும் முழுமையான முகவரி, எதிர்தரப்பினர் பெயர் மற்றும் முழுமையான முகவரி, பொருள் வாங்கிய மற்றும் சேவை பெற்ற தேதி, செலுத்தப்பட்ட தொகை, பொருள்களின் விவரம், வர்த்தக நடைமுறை, குறையுள்ள பொருள், சேவையில் குறைபாடு, கூடுதல் கட்டணம் வசூலித்தது, இவற்றில் எதைப் பற்றி கூற வேண்டுமோ அது குறித்து தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
பட்டியல், ரசீது நகல்கள், இதுதொடர்பான கடிதப் போக்குவரத்து இருப்பின் அதன் நகல்கள், இந்தச் சட்டத்தின் கீழ் எதிர்நோக்கும் நிவாரணத் தொகை உள்ளிட்ட விவரங்கள் நீங்கள் அளிக்கும் புகாரில் இருக்க வேண்டும்.
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய, ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டஈடு கோரினால் ரூ.100-ம், ஒன்று முதல் ஐந்து லட்சம் வரை ரூ.200-ம், ஐந்து லட்சம் முதல் 10 லட்சம் வரை ரூ.400-ம், 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை ரூ.500-ம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் வரைவு காசோலையாக புகாருடன் இணைக்க வேண்டும்.
மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை ரூ.2,000-ம், 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை ரூ.4,000-ம் வரைவு காசோலை இணைக்க வேண்டும்.
தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரூ.5,000}துக்கு வரைவு காசோலையை இணைக்க வேண்டும்.
தில்லியில் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறி அமர்ந்திருந்த பயணியிடம், திருடன் ஜன்னல் வழியே நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டான். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் ரயில்வே சேவை குறைபாட்டினால்தான் திருட்டு நடைபெற்றது என நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ரயில்வே நிலையத்திற்குள் கட்டணம் செலுத்திய பின்னர்தான் பயணி நிலையத்திற்குள் வருகிறார்.
எனவே, திருட்டு நடைபெற்றது ரயில்வே துறையின் சேவை குறைபாடுதான். உரிய நஷ்டஈட்டை ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, நுகர்வோரே விழித்திருங்கள்.

திருத்தப்பட வேண்டிய தீர்ப்பு!


Dinamani


By ஆசிரியர்

First Published : 19 October 2015 01:58 AM IST


உச்சநீதிமன்றம், 99-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தையும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் 2014-ஐயும், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும், நீதிபதிகளே நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வழிமுறையே தொடர வேண்டும் என்று ஐந்து பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கூறிவிட்டது. நடைமுறையில் இருக்கும் முறையில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தவும், மாற்றங்களைக் கொண்டு வரவும் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் நவம்பர் 3-ஆம் தேதி அமர்வு மறுபடி கூடும்போது அரசு முன்வைக்கலாம் என்றும் தீர்ப்பு கூறியிருக்கிறது.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் 2014, நாடாளுமன்றத்தால் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, 20 சட்டப்பேரவைகளின் ஒப்புதலையும் பெற்ற சட்டம். இந்தச் சட்டத்தின் மூலம் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், எந்தத் தகுதி, காரணங்களுக்காக ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார் என்பதை மக்கள் மன்றத்துக்குத் தெரிவிக்காமல், நீதிபதிகளே நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றது நாடாளுமன்றம்.
இதை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்திருப்பதன் மூலம், நாடாளுமன்றத்தால்கூடக் கேள்வி கேட்க முடியாத அதீத அதிகாரம் தங்களுக்கு இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லிவிட்டிருக்கிறது நீதித் துறை. அரசியலமைப்புச் சட்டம், மத்திய அரசு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறதே தவிர, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனைப்படி என்றோ, பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு என்றோ குறிப்பிடவில்லை.
மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயமாக்கல் போன்ற இந்திரா அரசின் நடவடிக்கைகளை, அன்றைய உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது, அரசுக்குக் கட்டுப்பட்ட நீதித் துறையை இந்திரா காங்கிரஸ் அரசு ஏற்படுத்த முற்பட்டது. கேசவானந்த பாரதி வழக்கில், நாடாளுமன்றத்துக்கு அரசியல் சாசனத்தை மாற்றவோ, சுருக்கவோ அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பிரதமர் இந்திரா காந்தியை மேலும் கோபப்படுத்தியது. அந்தத் தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளையும், பதவிமூப்பு வழக்கத்தைப் புறக்கணித்துவிட்டு தமக்கு வேண்டிய ஒருவரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்தார் பிரதமர் இந்திரா காந்தி.
அப்போது முதல் தொடங்கியது நீதித் துறைக்கும் நாடாளுமன்றத்துக்குமான மோதல். 1980 முதல் நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் அரசுக்குத்தான் முன்னுரிமை நிலவி வந்தது. 1993-இல், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, நீதிபதி ஜே.எஸ். வர்மா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் "கலந்தாலோசித்து' என்பதை மாற்றி "ஆலோசனையின் பேரில்' என்று புதிய விளக்கத்தைக் கொடுத்தார். அதுமுதல் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் முறை தொடங்கியது. ஓய்வுபெற்ற பிறகு, நீதிபதி வர்மாவே தனது தீர்ப்பின் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டார். நீதித் துறையும் அரசும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று கருத்து தெரிவித்தார்.
நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை அரசுக்கு எதிரானவை எனும் நிலையில், அரசின் கைப்பாவையாக நீதித் துறை செயல்பட்டால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்கிற நீதித் துறையின் வாதத்தைத் தள்ளிவிட முடியாது. நீதித் துறையின் சுதந்திரம் அரசியல் தலைமையின் தலையீட்டால் பாதிக்கப்படுவதும், ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அதேநேரத்தில், தலைமை நீதிபதிக்கும் அவரால் தேர்ந்தெடுக்கப்படும் குழுவினருக்கும் வேண்டப்பட்டவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லைதான். ஊழலும் முறைகேடுகளும் அதிகரித்துவிட்ட நிலைமையில், அரசுக்கு நீதிபதிகள் நியமனத்தில் முழு அதிகாரம் அளிப்பது என்பது, உச்ச, உயர்நீதிமன்ற நியமனங்கள்கூட விலை பேசப்படும் அவலத்துக்குத் தள்ளப்படும் அவலத்தை ஏற்படுத்தக்கூடும். நீதித் துறையிலும் ஊழலும், வேண்டியவர் வேண்டாதவர் என்கிற பாகுபாடும், திறமையைவிடத் தோழமைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் செயல்பாடும் காணப்படுவதாக ஓய்வுபெற்ற சில நீதிபதிகளே வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் இப்போதைய முறை தொடர்வதும் சரியல்ல.
அமெரிக்காவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிபரால் நியமிக்கப்பட்டு மேலவையின் ஒப்புதலைப் பெறுவதாக இருக்கிறது. இங்கிலாந்தில், இதற்கென்று ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளிலிருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கும் நபர்கள்தான் நீதிபதிகளாக அரசியால் நியமிக்கப்படுகிறார்கள். அரசுக்கு நியமனத்தில் எந்தவித அதிகாரமோ, கருத்தோ இருக்க முடியாது என்கிற வாதம் மக்களாட்சியில் ஏற்புடையதல்ல.
ஆலோசனைகளும், பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன என்று நீதிபதிகளின் அமர்வே கூறியிருக்கும் நிலையில், இப்போதைய முறையில் தவறுகள் இருப்பதை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் பொருள். தவறு திருத்தப்படுவதுதான் முறை. மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியது இப்போதைய நியமன முறையில் அல்ல. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தில்தான். எங்கெல்லாம் திருத்தங்கள் தேவை என்பதைத்தான் தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்க வேண்டுமே தவிர, நாடாளுமன்றத்தின் முடிவை ஒட்டுமொத்தமாக விசிறி அடித்திருப்பது நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தின் தேவைக்கு மேலும் வலு சேர்க்கிறது!

Sunday, October 18, 2015

சீனப்பட்டாசை தடுக்கவேண்டியது யார்?...daily thanthi

அடுத்த மாதம் 10–ந் தேதி தீப ஒளித்திருநாளாம் தீபாவளி வருகிறது. எவ்வளவு போனஸ் வரும்?, அதற்கு என்னென்ன செலவுகள் இருக்கும்? என்று மனதில் உள்ள கால்குலேட்டர்களை வைத்து கணக்கிடும் வேலைகள் இப்போதே குடும்ப தலைவர்களுக்கு தொடங்கிவிட்டது. இல்லத்தரசிகளுக்கோ இந்த ஆண்டு தீபாவளிக்கு என்னென்ன பலகாரங்கள் செய்யலாம்? என்பது தொடங்கி துணிமணிகள் உள்பட பல யோசனைகள் நிழலாடும். ஆனால், எது இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பட்டாசு என்றால் தனி மகிழ்ச்சிதான். பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை.

தீபாவளி நெருங்கும் இந்த வேளையில், சென்னை முதன்மை சுங்க ஆணையர் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரம், ஒரு அபாய எச்சரிக்கையை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. ‘‘வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பட்டாசுகள் தொடர்பாக ஓர் எச்சரிக்கை’’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த விளம்பரத்தில், ‘‘இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், பட்டாசுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி கிடையாது. ஏனென்றால், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் பொட்டாசியம் குளோரைடு என்னும் வேதிப்பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருள் எளிதில் தீப்பிடிக்கக்கூடியது மட்டுமன்றி, திடீரென்று வெடிக்கக்கூடியதாகும். மேலும், இவ்வகைப் பட்டாசுகள் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவதோடு, சுகாதாரக்கேடுகளையும் விளைவிக்கும். பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு நலன் கருதி, மேற்கூறிய வெளிநாட்டு பட்டாசுகளை யாராவது கையிருப்பில் வைத்திருந்தாலோ, அல்லது விற்பனை செய்தாலோ, அதன் விவரங்களை உடனே தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என்று கூறப்பட்டு இருந்தது. சீனாவில் இருந்துதான் சட்டவிரோதமாக இந்த பட்டாசு இறக்குமதி செய்யப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை சொல்வதற்கு ஏன் தயக்கம்?

சீனாவில் உற்பத்தி செய்து கள்ளத்தனமாக கொண்டுவரப்படும் பட்டாசுகள் பொட்டாசியம் குளோரைடு கொண்டும், தமிழ்நாட்டில் சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசு அலுமினியம் நைட்ரேட்டாலும் உற்பத்தி செய்யப்படுகிறது. பொட்டாசியம் குளோரைடால் தயாரிக்கப்படும் பட்டாசுகள் அதிக குளிர் பிரதேசத்துக்குத்தான் பொருத்தமானது. இந்தியா போன்ற வெப்பமான பிரதேசங்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. திடீர் விபத்துக்களை உருவாக்கி ஆனந்த தீபாவளியை கண்ணீர் தீபாவளியாக்கிவிடும். பொட்டாசியம் குளோரைடைவிட, அலுமினியம் நைட்ரேட் விலை இருமடங்குக்கு மேல் அதிகம், அதுமட்டுமல்லாமல், அலுமினியம் நைட்ரேட் பயன்படுத்தப்படும் அளவில் 10–ல் ஒரு பங்கு பொட்டாசியம் குளோரைடை பயன்படுத்தினால் போதும். இதுபோல பல காரணங்களால்தான் ஆபத்து மிகுந்த சீன பட்டாசின் விலை மிகக்குறைவாக இருக்கிறது. ஆனால் குறைந்த விலை என்பதால் ஆபத்தை விலை கொடுத்து வாங்கமுடியுமா? சீனபட்டாசு இறக்குமதி செய்ய அனுமதி இல்லை. அப்படியும் இந்தியாவுக்குள் நுழைகிறது, தாராளமாக கிடைக்கிறது என்றால் அதைத்தடுக்கவேண்டிய அதிகாரிகள் ஏன் செய்யவில்லை? என்று மத்திய–மாநில அரசுகள் கேட்கவேண்டும்.

இந்த பட்டாசுகள் சீனாவில் இருந்து திருட்டுத்தனமாகத்தான் கொண்டுவரப்படுகின்றன, மும்பையில் இருந்தும், தூத்துக்குடி துறைமுகம் மூலமாகவும் கண்டெய்னர்களில் கொண்டுவரப்படுகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக சட்டசபையில் அமைச்சரே சொல்லியிருக்கிறார். எனவே, சுங்கத்துறை பொதுமக்களுக்கு சொல்வதுபோல, எப்படி வந்தது? என்று அந்த துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவேண்டும். மேலும், சீன பட்டாசை விற்பனை செய்யமுடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டால் சரக்குகள் தேங்கிப்போய்விடும், இனி வியாபாரிகள் யாரும் வாங்கவும்மாட்டார்கள். அதை தீவிரமாக செய்யவேண்டும்.

NEWS TODAY 20.09.2024