Monday, October 26, 2015

பிச்சை தராவிடினும் நன்றே..தினகரன்


உத்தரப் பிரதேச மாநில ரயில் நிலையம் ஒன்றில், ரூ.100 பிச்சை தராததால், ஆத்திரம் அடைந்த பிச்சைக்காரன், சம்பந்தப்பட்டவரை இழுத்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்து இருவரது உயிரையும் அநியாயமாக பறிபோகச் செய்துள்ளான். பிச்சைக்காரர்கள் இப்போதெல்லாம், ஏதோ கொடுத்து வைத்ததுபோன்று ரூ.10 கொடு, ரூ.20 கொடு என்று உரிமையோடு கேட்கிறார்கள். சாலையோர கடைகளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், சாப்பாடு வாங்கிக் கொடுக்கும்படி பலர் முன்னிலையில் வம்பு செய்கின்றனர். பிச்சைக்காரர்கள் சமூகத்துக்கு பாதிப்பு இல்லாமல் கோயில் குளங்களில் இருந்த காலம் மாறி இப்போது, அதையே ெதாழிலாக செய்யும் வாலிபர்களும் பெருகிவிட்டனர். எந்த வேலையும் இல்லாமல் குவியும் வருமானத்துக்காக அழுக்கு சட்டையுடன் பிச்சை எடுக்க கிளம்பி விடுகின்றனர். பிச்சைக் கொடுக்காதவர்கள் அல்லது, ஒரு ரூபாய், 2 ரூபாய் பிச்சை தருபவர்களை, ஜென்மத்துக்கு வெட்கி தலைகுனியும்படி பலர் முன்னிலையில் திட்ட ஆரம்பித்துவிடுகின்றனர்.

பிச்சை என்பதில் இருந்துதான் லஞ்சமே ஆரம்பம் ஆகின்றது என்பதை பலர் புரிந்து கொள்வதில்லை. பிச்சைக்காரர்களை பிடித்து, மறுவாழ்வு மையங்களில் அடைக்க வேண்டும் என்று பல முறை நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. ஆனால், இன்னமும் கூட, ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் பிச்சைக்காரர்களை சர்வசாதாரணமாக காண முடிகிறது. இதுபோன்ற பிச்சைக்காரர்களில் சிலர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். சாதாரணமானவர்களை காட்டிலும் இதுபோன்றவர்களால் எப்போதுமே அருகில் இருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம். உத்தரப் பிரதேசத்தில் அதுதான் நடந்துள்ளது.

சம்பவம் நடந்த பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டவர், அவர் என்ன செய்வார் என்ற ரீதியில் போலீசார் பேச ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால், இறந்த நபரின் குடும்பம் நடுத்தெருவில் நிற்பதை இவர்கள் அறிவார்களா? ஒவ்வொரு வாரமும் பிச்சைக்காரர்களை பிடித்து மறுவாழ்வு இல்லங்களில் அடைக்க வேண்டும். இதுபோன்றவர்களை தொடர்ந்து பிடித்து வந்தால் மட்டுமே பயம் ஏற்படும். 6 மாதத்துக்கு ஒரு முறை நான்கைந்து பேரை பிடித்து கொண்டு செல்வதால் மட்டும் எந்த பயனும் ஏற்படாது. அதேபோல் இன்று முதல் பிச்சை தருவதில்லை என்று மக்களும் உறுதி ஏற்க வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024