Thursday, October 1, 2015

சிவாஜி கணேசன்: சும்மா கிடைத்துவிடவில்லை புகழும், பெயரும்!

vikatan.com


யாரைக் கேட்கிறாய் வரி! எதற்கு கொடுக்க வேண்டும் கிஸ்தி!

எங்களோடு வயலுக்கு வந்தாயா! நாற்று நட்டாயா! களை பறித்தாயா! ஏற்றம் இறைத்து நெடுவயல் பாயக்கண்டாயா!


அல்லது அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா!மாமனா! மச்சானா! மானங்கெட்டவனே!





நண்டு சிண்டுகளும் சர்வ சாதாரணமாக உச்சரிக்கும் வசனம் இது. அந்த அளவிற்கு இவ்வசனம் சென்றடைவதற்கு காரணம் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்.

" மண்ணுலகம் போற்றும் மாபெரும் நடிப்புப் பல்கலைக்கழகம் "
'பட்டைதீட்டப்பட்ட நடிப்பில் இவருக்கு நிகர் இவரே!'
அவ்வாறு புகழ்பெற்ற சிவாஜி கணேசன் தமிழ் திரைப்படத்தின் மாபெரும் சரித்திரக் குறியீடு!.

விழுப்புரம் மாவட்டத்தில் சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணிக்கும் அக்டோபர் 1,1928 ல் பிறந்தவர். இவரது இயற்பெயர் சின்னையா பிள்ளை கணேசன்.இவர் திரைப்பட உலகிற்கு வரும் முன் பல மேடை நாடகங்களில் நடித்தார்.

'இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தி்ல் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் திறமையை வியந்து, தந்தை பெரியார் அன்போடு சிவாஜி கணேசன் என அழைக்க, அதுவே அவரது பெயராக நிலைத்தது.




நல்ல குரல் வளம், கணீரென தெளிவான உச்சரிப்பு இவருக்கே உரித்தான அடையாளங்கள். பராசக்தி படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் தடம் பதித்தார்.

இவர் அல்லாது ராஜ ராஜ சோழன்,கப்பலோட்டிய தமிழன்,கட்டபொம்மன் இன்னும் பல வீரர்களையும் தேசத்தலைவர்களையும் பாமரத்தமிழன் அறிந்திருப்பானோ? இவர் நடித்த மனோகரா,பாசமலர், வசந்தமாளிகை பந்த பாச உணர்வுகளின் ஊற்று.

இவர் நடித்த படங்கள் 300 க்கு மேல், இவர் தொடாத கதாபாத்திரங்களே இல்லை.

இவருடைய பராசக்தி திரைப்படத்தின்போது அப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.வி.எம் சரவணன், புதுமுகமான இவரை நடிக்க வைக்க நம்பிக்கையில்லாமல் யோசித்தார்.

நேஷனல் பிக்சர்ஸ் பி்.ஏ பெருமாள் மன உறுதியோடு அவரை நடிக்க வைத்தார். அதையெல்லாம் தாண்டி அவரின் நடிப்பின் சிறப்பால் அப்படம் வெற்றி விழா கண்டது. ஊன்றுகோல் கொடுத்த அவரை மறக்காது, இறுதி மூச்சிருக்கும் வரை அவரின் வீட்டிற்கு சென்று சீர் அளித்து, அவரிடம் ஆசி பெற்று சென்றிருக்கிறார்.

விளம்பரம் அல்லாது இயலாதோர்க்கு பல உதவிகளை வழங்கினார்.

சீனப் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு தன் நகைகளை நன்கொடையாக வழங்கினார். நடிப்பிற்காக இவர் மேற்கொண்ட சிரமங்கள் சொல்லி மாளாதவை.



சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் அவர் நடிப்பின் தோரணையை மட்டும் கண்டு களித்தோமே, ஆனால் அதன் பின்னே இருக்கும் வலிகள் பல நாம் அறியாதவை. அச்சமயம் பல மாறுபட்ட வேடங்களில் இரவு பகலாக நடித்ததால் தன் உடலை வருத்திக் கொண்ட அவர், அவ்வசனத்தை பேசிய பின்னர் அவர் வாயிலிருந்து ரத்தம் கசிந்தது. அதனையும் பொருட்படுத்தாது முரசு கொட்டிக் கொண்டே பேசி முடித்தார்.

அதே படத்திற்காக படத்தளத்தில் ஆங்கிலேயருடன் போரிடுவது போன்ற காட்சிக்காக குதிரையின் மீது அமர்ந்து வாள் ஏந்தி சண்டையிட்டார். அப்போது குதிரை திடீரென எதிர்பாராது, துப்பாக்கி சத்தம் கேட்டு தரி கெட்டு ஓட ஆரம்பித்தது,போகக்கூடாது என எச்சரிக்கபட்ட பகுதிக்கு அவரை இழுத்து சென்றது. அவர் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. படக்குழுவினர் அவரை தேடி ஓடினர். அங்கு சென்று பார்த்தபோது மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, கை கால்களில் ரத்தம் வழிய வழிய நின்றபடி, "ஷாட் நன்றாக வந்ததா?" என்று கேட்டார் நடிகர் திலகம்.

"இந்த ஷாட் இரண்டாயிரம் பேர் நடித்தது. அது என் ஒருவனால் வீணாகக்கூடாது என்றுதான் இந்த சிரமத்தை மேற்கொண்டேன்" என்றார். இவ்வாறு ரத்தம் சிந்தி நடிப்புக்கே தன்னை அர்பணித்ததற்காக கிடைத்த விருதுகள் இங்கே...

1966- பத்மஸ்ரீ விருது.
1969- தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது.
1984- பத்ம்பூஷன் விருது.
1986-ல் கெளரவ டாக்டர் பட்டம் அண்ணாமலை பல்கலைகழகம் வழங்கியது
இவரின் படம் பதித்த 4ரூபாய் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
1995- செவாலியர் விருது பிரான்சினால் வழங்கப்பட்டது.
1996- ல் குடியரசுத் தலைவர் அளித்த தாதாசாகிப் பால்கே விருது.

அவர் நடித்து வெளிவந்த வெற்றிப்படம் கர்ணன். இப்படம் 48 வருடங்களுக்கு பின்னர் இதனின் முக்கியத்துவம் உணர்ந்து டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

சென்னை மாநகரில் இவரின் பெயரில் அமைந்த சாலை அமைந்துள்ளது.

இவருக்காக சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர் பெயரிலான மணிமண்டபம் கட்ட அரசு நதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அவமானங்கள், பல இன்னல்கள் என கடந்து வரலாற்றினை தன் வசமாக்கிக் கொண்ட அவரின் பிறந்தநாளை, அதே வரலாற்றில் அடையாளம் காண்கிறோம் இன்று..!

ப.பிரதீபா

No comments:

Post a Comment

Can’t alter patta sans valid title, officials duty bound to rectify anomalies, says Madras HC

  Can’t alter patta sans valid title, officials duty bound to rectify anomalies, says Madras HC 10.08.2026 The petitioner contended that his...