Thursday, November 19, 2015

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?

Dinamani

By ஆசிரியர்

First Published : 19 November 2015 01:34 AM IST


ஆயுர்வேத, சித்த, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்கக் கூடாது என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐ.எம்.ஏ.) மகாராஷ்டிரத்துக்கு எதிராகத் தொடுத்த வழக்கில், அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட பிறகும், தொடர்ந்து ஆங்கில மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தின் மீதான விமர்சனத்தை ஆங்காங்கே தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பதிலடியாக சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் அறிக்கை வெளியிடுகிறார்கள்.
மகாராஷ்டிர அரசு கொண்டுவந்த சட்டத்தின்படி, ஓராண்டு மருந்தியல் சான்றிதழ் படிப்பு முடித்த பின்னர் ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்களும் அலோபதி மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.
அந்த முயற்சி ஆங்கில மருத்துவத்துக்கு தீங்காக அமைந்துவிடும் என்று இந்திய ஆங்கில மருத்துவம் செய்வோர் அச்சம் கொள்கின்றனர். இத்தகைய போக்குகள் போலியான ஆங்கில மருந்துவர்களை உருவாக்கிவிடும் என்று அவர்கள் தெரிவிக்கும் கருத்து நியாயமானதுதான். ஆனால் அதற்காக, இவ்வாறான பல்வேறு மருத்துவப் பிரிவுகளிடையே காணக்கூடிய ஒத்திசைவான சிகிச்சை முறைகளை மறுதலிப்பது தேவையற்றது. சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் அலோபதி மருந்துகள் வெறும் வலி நிவாரணிகளாக மட்டுமே இருந்தால், அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பது தேவையற்றது.
பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, இப்போதும்கூட மறுபதிப்பு காணும் டாக்டர் டேவிட் வெர்னர் எழுதிய "டாக்டர் இல்லாத இடத்தில்' (Where there is no Doctor: A village health care handbook) என்கிற புத்தகம் சாதாரண நபர்களுக்கான முதலுதவி மற்றும் அடிப்படை மருந்துகளைப் பரிந்துரைக்கிறது. இந்திய மருத்துவர்கள் சங்கம் இந்தப் புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோர முடியுமா?
டாக்டர் இல்லாத கிராமத்தில் ஒரு சாதாரண நபருக்குத் தரப்படும் உரிமைகூட, ஆங்கில மருத்துவர்களைப் போலவே குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் படித்து பட்டம் பெற்ற சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்களுக்குக் கிடையாதா? ஒரு சாதாரண நபரைக் காட்டிலும் இவர்கள் ஆங்கில மருத்துவத்தை தவறாகப் புரிந்துகொண்டு, மருந்துகளைத் தவறாகப் பரிந்துரைத்துவிடுவார்களா? உயிரிழப்பை ஏற்படுத்திவிடுவார்களா?
முதலுதவி மருத்துவத்துக்கும், போலி மருத்துவத்துக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. நுட்பமாகப் பார்த்தால் இந்த எதிர்ப்பு சாதாரண மக்களுக்கு யார் வேண்டுமானாலும் முதலுதவி அளிப்பதா என்கின்ற பிரச்னையால் வருவதில்லை. இது தொழில் போட்டி. அதுதான் இந்த எதிர்ப்புக்கு மிக அடிப்படையான காரணம். இதனால்தான், டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர் நல்ல தீர்வு என்றால், அதையும் ஆங்கில மருத்துவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
ஒரு சில அலோபதி மருத்துவர்களால்கூட மஞ்சள் காமாலைக்குப் பெரிதும் பரிந்துரைக்கப்படும் லிவ்-52 என்பது மூலிகையில் தயாரிக்கப்பட்ட மருந்துதான். மலேரியா காய்ச்சலுக்கு மருந்தாக சீனாவில் அறியவந்த மூலிகைப்பட்டை பரவலாகத் தரப்படுகிறது. குணமாவதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எலும்பு முறிவு சிகிச்சைகளுக்கும் மூட்டுவலிக்கும் பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் மூலக்கூறுகள் நாட்டு மருத்துவர் சொல்லும் பச்சிலைகளில் இருக்கின்றன. இதை ஆங்கில மருத்துவம் படித்தவர்கள் பரிந்துரைக்கக்கூடாது என்று சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் வழக்குத் தொடுத்தால் அது நியாயமாக இருக்குமா?
ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் கொஞ்சம் தமிழ் இலக்கியத்தையும் தெரிந்து வைத்திருப்பதைப் போல, அலோபதி மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில வலி நிவாரணிகளை அறிந்து வைத்திருப்பதிலும், குறுகிய கால பயிற்சிக்குப் பிறகு அதை முதலுதவி என்ற அளவில் இந்திய பாரம்பரிய மருத்துவர்கள் பரிந்துரைப்பதிலும் கூடத் தவறு இருக்க முடியாது.
இந்திய மருத்துவத்தில் ரணச் சிகிச்சையும் (அறுவைச் சிகிச்சைகள்) ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. ஆனால், இன்றைய தேதியில் அவற்றை யாரும் செய்வதில்லை. அறுவைச் சிகிச்சை முழுமையாக ஆங்கில மருத்துவர்களுக்கு உரித்தானதாக இருக்கிறது. அறுவைச் சிகிச்சையில் போட்டிபோட சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் தயார் இல்லை. மிக எளிய, சிறு காய்ச்சல், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான மாத்திரைகள், வலிநிவாரணிகள் மட்டும் பரிந்துரைக்க அனுமதிக்கலாம். அதுவும்கூட, அலோபதி மருத்துவத்தில் நம்பிக்கையுள்ள நோயாளிகளுக்கு தாற்காலிக மருத்துவமாகத்தான் அவர்களே பரிந்துரைக்கிறார்கள்.
என்னதான் விமர்சனம் செய்தபோதிலும், இன்று தமிழ்நாட்டில் நிலவேம்புக் குடிநீர் சூரணம் விற்பனை அதிகரித்துள்ளது. சித்த மருத்துவத்தில் முதன்மையான நிறுவனங்களின் தயாரிப்புகளை மக்கள் கேட்டு வாங்கிச் செல்லும் நிலை இருக்கிறது. ஆனால், இவற்றின் தரம் என்ன? நிலவேம்புக் குடிநீரில் கலக்கப்பட வேண்டிய ஒன்பது வகை மூலிகைகளும் தரமாக, குறிப்பிட்ட அளவில் கலந்திருக்கிறதா என்பதைக் கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்புக் காலத்தில் ஓரிரு மாதம் எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர்களின் படிப்பு குறித்து தெரிந்துகொள்ளவும், அதேபோன்று அலோபதி மாணவர்கள் இந்த பாரம்பரிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓரிரு மாதம் சென்று அதனைத் தெரிந்துகொள்வதும், மாற்று மருத்துவப் பிரிவுகளின் மீது பரஸ்பரம் மரியாதைக்கும் புரிதலுக்கும் வழி வகுக்கும்.
மருத்துவ முறை எதுவாக இருந்தாலும், வியாதி குணமாக வேண்டும். தவறானவர்கள் தவறான சிகிச்சையை மேற்கொள்ள அனுமதிக்காத வரையில், அலோபதி மருத்துவர்களின் அச்சம் தேவையற்றது.

மழை அளவு படிப்படியாக குறைந்தது சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது..daily thanthi

மழை அளவு படிப்படியாக குறைந்தது சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது


மாற்றம் செய்த நாள்:
வியாழன் , நவம்பர் 19,2015, 3:45 AM IST
பதிவு செய்த நாள்:
வியாழன் , நவம்பர் 19,2015, 1:27 AM IST
சென்னை,

வடகிழக்கு பருவ மழை படிப்படியாக குறைந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன. மின்சாரம் வினியோகம் மற்றும் போக்குவரத்து சேவை சீரடைந்து செயல்பட தொடங்கியது.

மக்கள் தவிப்பு

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரே நாளில் சென்னை புறநகரில் 33 செ.மீட்டர் மழை கொட்டியதால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

ஆங்காங்கே மழை நீர் வெள்ளம் போல் சாலைகளில் ஓடியது. இதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பல வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. ரெயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

பலத்த மழையால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் எதிர்பார்த்ததை விட அதிகளவு உயர்ந்தது.

மீட்பு பணியில் முப்படைகள்

புறநகரில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி ஏற்கனவே தண்ணீர் தேங்கி நின்ற நிலையில் ஏரிகள், குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. சில குடியிருப்புகளில் தரை தளம் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. அந்த வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. கீழ் தளத்தில் வசித்தவர்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி காணப்பட்டன.

மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இறங்கினர். தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க ராணுவம், கடற்படை, விமானப்படையை சேர்ந்த வீரர்களும், கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் மழை, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

ஹெலிகாப்டரில் மீட்பு

சில இடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆந்திரா நோக்கி சென்றதால் தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறைந்தது. நேற்று சூரிய வெளிச்சம் லேசாக எட்டிப்பார்த்தது. இதனால் மேலும் பாதிப்பு பயத்தில் இருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

பம்மல் அனகாபுத்தூர் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தேங்கி இருந்த மழை நீர் தானாக வடிய தொடங்கியது. வெளியேறாமல் இருந்த மழைநீரை அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சீரான மின்சார வினியோகம் அளிக்கப்பட்டது. நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து மீண்டும் இயங்க தொடங்கியது. மின்சார ரெயில் சேவை பாதிப்பின்றி இயங்கின. பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். முகாம்களில் தங்கி இருந்த 90 சதவீத மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

வேளச்சேரியில் தொடரும் சோகம்

எனினும் சென்னை புறநகர் பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளை இன்னும் மழைவெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு மழைநீர் வடியாததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் இரவில் கடும் குளிரில் தூங்காமல் வெட்ட வெளியில் தங்கி உள்ளனர்.

கழுத்து அளவுக்கு தண்ணீர் தேங்கி இருப்பதாலும், பாம்பு மற்றும் விஷ பூச்சிகளின் பயத்தாலும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் வினியோகிக்கப்பட்டன.

Wednesday, November 18, 2015

மீட்பு பணியில் முப்படை தீவிரம்; சென்னையில் மழை நின்ற பிறகும் ஓயாத துயரம்

daily thanthi

மாற்றம் செய்த நாள்:
புதன், நவம்பர் 18,2015, 6:00 AM IST
பதிவு செய்த நாள்:
புதன், நவம்பர் 18,2015, 4:25 AM IST
சென்னை,

சென்னை நகரில் கடந்த சனிக்கிழமை தொடங்கி 3 நாட்களாக தொடர்ந்து பெய்த மழை நகரையே புரட்டிப்போட்டு விட்டது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சாலைகளில் தேங்கிய வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பு என மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

சென்னை நகரில் நேற்று மழை இல்லை. இதனால், தொடர் மழையில் சிக்கி தவித்த சென்னைவாசிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

மழைநீர் வடியத் தொடங்கியது

புரசைவாக்கம், புளியந்தோப்பு, ஓட்டேரி, பெரம்பூர், வியாசர்பாடி, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், அரும்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம், பாடி, கொரட்டூர், கொளத்தூர், மாதவரம், சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழை நீர் வடியத் தொடங்கியது.

கே.கே.நகர், எம்.எம்.டி.ஏ. காலனி, சின்மயா நகர், விஜயராகவபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அதிக குதிரை திறன் கொண்ட ‘டீசல்’ பம்புகள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். மழைநீர் வடிகால்வாய்களில் மழைநீர் தங்கு, தடையின்றி வடியும் வகையில் அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன.

பஸ்கள் வழக்கம்போல் இயங்கின

பிரதான சாலைகளில் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கியிருந்த மழை நீர் வடியத் தொடங்கியதால், கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்ட மாநகர போக்குவரத்து பஸ் சேவை நேற்று சீரடைந்தது.

சென்னை நகரிலும், புறநகர் பகுதிகளிலும் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்ல முடிந்தது.

துயரம் ஓயவில்லை

ஆனால் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, மழை நின்ற போதிலும் மக்களின் துயரம் ஓய்ந்தபாடில்லை. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீர் இன்னும் வடியாமல் அப்படியே உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

புறநகரில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி ஏற்கனவே தண்ணீர் தேங்கி நின்ற நிலையில் ஏரிகள், குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம் அந்த பகுதிகளில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சில குடியிருப்புகளில் தரை தளம் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. சில வீடுகளில் உள்ளவர்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்து உள்ளனர். குடிநீர், உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் அவர்கள் தவிக்கிறார்கள்.

மேற்கு தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மேற்கு தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. வீடுகளில் சுமார் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் நிற்கிறது. கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அப்படியே நிற்கின்றன.

மீட்பு பணியில் முப்படையினர்

மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுடன் ராணுவம், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த வீரர்களும், கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் மழை, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.

தீயணைப்பு துறையினர், மீன்வளத்துறையினர் ஆகியோருடன் போலீசார் இணைந்து 130 படகுகளின் உதவியுடன் 11 இடங்களில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தாம்பரம் நகராட்சி, பெருங்களத்தூர் பேரூராட்சி, வரதராஜபுரம் ஊராட்சி, திருமுடிவாக்கம் ஊராட்சி பகுதிகளில் சிக்கித்தவித்த சுமார் 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர்.

ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சில இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் பலர் மீட்கப்பட்டனர். தாம்பரம் சி.டி.ஓ. காலனி, புளுஜாக்கர், வரதராஜபுரம், பல்லவன் குடியிருப்பு, ராயப்பா நகர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப்பொட்டலங்கள், பிஸ்கெட், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

சிலர் வீடுகளின் மொட்டை மாடியில் நின்றபடி உணவு குடிநீர் கேட்டு குரல் எழுப்பினார்கள். ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களுக்கு உணவுப்பொட்டலங்களும், குடிநீர் பாட்டில்களும் போடப்பட்டன.

மண்ணிவாக்கம் பகுதியில், மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளில் சிக்கித்தவித்த 150 பேரை ரப்பர் படகு மூலம் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

வேளச்சேரியில் விஜயநகர் 13-வது பிரதான சாலை, 8-வது பிரதான சாலை, சங்கர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால், அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாமல் தவித்தனர். அவர்களை தனியார் பங்களிப்புடன் போலீசார் படகுகள் மூலம் மீட்டு வெளியே கொண்டுவந்தனர். மேலும் வீடுகளின் உள்ளேயே முடங்கியவர்களுக்கு தண்ணீர், பிஸ்கெட், உணவு பொட்டலங்கள், பால் உள்ளிட்ட பொருட்களும் வினியோகிக்கப்பட்டது.

குடிசைகள் மூழ்கின

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சைதாப்பேட்டை பாலம் அருகே கரையோரம் வசித்த மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தரை தளத்தில் உள்ள வீடுகளின் உள்ளே மழை நீர் புகுந்தது. மாடி வீடுகளில் இருப்பவர்கள் உள்ளேயே முடங்கி உள்ளனர்.

அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல்பஜார் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்ததால், அங்கு உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர்.

ஜாபர்கான் பேட்டை பாரி நகர் கரிகாலன் தெரு, காந்தி நகர் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் உள்ளவர்களை தீயணைப்பு படையினர் படகு மூலம் மீட்டு பத்திரமாக கொண்டு வந்து கரை சேர்த்தனர்.

கூவம் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, அமைந்தகரையில் கூவம் ஆற்றின் கரையோரம் வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அறிக்கை

இந்திய பாதுகாப்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநில அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சென்னை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இந்திய ராணுவத்தினர் கடந்த 16-ந் தேதியில் இருந்து ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை வெள்ளநீர் சூழ்ந்த பகுதியில் இருந்து 882 பேர் படகுகள் மற்றும் உயிர்காக்கும் உடை (லைப் ஜாக்கெட்) மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 320 பேருக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டன. 150 பேருக்கு மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டன. குறிப்பாக நேற்று முடிச்சூர், சமத்துவ பெரியார் நகர், திருநீர்மலை, அனகாபுத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் ராணுவத்தினர் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதிய குழு அறிக்கை

logo

மாற்றம் செய்த நாள்:
செவ்வாய், நவம்பர் 17,2015, 8:53 PM IST
பதிவு செய்த நாள்:
செவ்வாய், நவம்பர் 17,2015, 8:53 PM IST

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய சிபாரிசு குழு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை அமல்படுத்தப்படுவது வழக்கம். இதன்படி 6-வது ஊதிய குழுவின் சிபாரிசு, 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் 7-வது ஊதிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் வர்த்தக பிரிவினர், நிறுவனங்கள், பாதுகாப்பு துறையினர் மற்றும் அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, அறிக்கை தயாரித்தனர். இந்த அறிக்கை வியாழக்கிழமை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் சமர்ப்பிக்கப்படும் என்று குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் தெரிவித்தார்.

மத்திய அரசின் பரிசீலனைக்குப்பின் உயர்த்தப்பட்ட புதிய ஊதியம், வருகிற ஜனவரி மாதம் (2016) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் 28 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர். தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கும், 7-வது ஊதிய குழு சிபாரிசு அமல்படுத்தப்பட உள்ளது. 

சபரிமலையில் சமுதாய மையம்

புதன், நவம்பர் 18,2015, 2:30 AM IST


logo

நேற்று கார்த்திகை மாதம் 1–ந் தேதி பிறந்தது. ஏராளமான அய்யப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருப்பதற்காக கழுத்தில் ருத்ராட்ச மாலை அல்லது துளசி மாலை அணிந்து, எளிய கருப்பு அல்லது நீலம் அல்லது காவி உடை அணிந்து தொடங்கினார்கள். இந்த 41 நாட்களும் கடுமையான விரதம் இருந்து பின்பு தலையில் இருமுடி கட்டிக்கொண்டு, கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சபரிமலைக்கு அய்யப்பனை தரிசிக்க செல்வார்கள். ஆயிரக்கணக்கில் என்று தொடங்கி, லட்சக்கணக்காகி, இப்போது கோடிக்கணக்கில் பக்தர்கள் கேரளா மட்டுமல்லாமல், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் செல்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து செல்லும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டேப்போகிறது.

மற்ற கோவில்கள் போல, சபரிமலை அய்யப்பன் கோவில் ஆண்டு முழுவதும் திறந்து இருப்பதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாளன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அடுத்த மாதம் 5–வது நாளன்று நடை சாத்தப்படும். இதுதவிர, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் 15–ந் தேதிவரை மகரஜோதிக்காகவும், கார்த்திகை மாதம் முழுவதும் மண்டல பூஜைக்காகவும் நடை திறந்து இருக்கும். இந்த நாட்களில் வரும் அய்யப்ப பக்தர்களுக்காக கேரள அரசாங்கமும், தேவஸ்தானமும் அனைத்து வசதிகளையும் செய்துவருகிறது. பாதுகாப்புக்காக கேரளா போலீசாருடன், தமிழ்நாடு உள்பட அண்டை மாநில போலீசாரும் நியமிக்கப்படுகிறார்கள். பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு போகும் வழியில் நிலக்கல் என்ற இடத்தில் தென்மாநிலங்கள் அனைத்துக்கும் தலா 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்–மந்திரி அறிவித்திருக்கிறார். தெலங்கானா அரசாங்கம் இந்த நிலத்தை பெற்றுக்கொண்டுவிட்டது. இதை தமிழக அரசு எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்தவேண்டும். கேரள அரசாங்கம் இந்த நிலம் கொடுப்பதன் முக்கிய நோக்கம் அங்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பில் சமுதாய மையங்கள் அமைத்து, அந்தந்த மாநிலங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என்பதுதான். தமிழக அரசும் உடனடியாக இங்கு சமுதாய மையம் அமைத்து, தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு என்னென்ன வசதிகளை செய்து கொடுக்கலாம் என்று ஆலோசித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கேரள அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சென்னையிலும், பம்பா ஆற்றின் கரையிலும், சன்னிதானத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, தமிழக பக்தர்களுக்கு துணையாக இருக்கவேண்டும். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளித்துவிட்டு, தாங்கள் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் சில உடமைகளை ஆற்றில் போட்டுவிடுவது வழக்கம். ஐகோர்ட்டு ஆணைப்படி, இவ்வாறு ஆற்றில் போடுவது தடை செய்யப்பட்டுள்ளது, இதை மீறி போடுபவர்களுக்கு 18 மாதம் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளதை, தமிழக பக்தர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

இப்படி ஆற்றில் பயன்படுத்திய ஆடைகளையும், உடமைகளையும் போடவேண்டும் என்று ஒரு தவறான நம்பிக்கைதான் இருக்கிறது. அப்படி ஒரு ஐதீகமே இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு செல்லும் பக்தர்கள் என்னென்ன நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும்?, என்னென்ன செய்யக்கூடாது?, எந்தெந்த வசதிகள் அவர்களுக்காக செய்யப்பட்டுள்ளன என்பது போன்ற தகவல்களையெல்லாம் சபரிமலை அடிவாரத்திலேயே தேவஸ்தானம், பக்தர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

சென்னை மா"நரகம்'!

Dinamani


By ஆசிரியர்

First Published : 18 November 2015 01:22 AM IST


ஒட்டுமொத்த தமிழகமும், பெருமழை வந்துவிட்டால் தண்ணீரில் மிதக்கும் அவலம் தொடர்கிறது என்றால், ஆட்சி அதிகாரத்தின் இருப்பிடமான தலைநகர் சென்னை படும்பாடு சொல்லி மாளாது. கடந்த ஒரு வார மழையில் சென்னை வெள்ளத்தில் மிதந்தது என்று கூறுவதா, மூழ்கிக் கிடந்தது என்று வர்ணிப்பதா எனத் தெரியவில்லை. சென்னை மாநகரிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த வார அடைமழையால் மக்கள் அடைந்த துயரம் சொல்லி மாளாது.
ஆழிப்பேரலை, தானே புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்தால் அதில் நியாயமிருக்கிறது. எத்தனைதான் சிறப்பான ஏற்பாடுகளும், கட்டமைப்பு வசதிகளும், நிர்வாகத் திறமையும் இருந்தாலும்கூட அவற்றை எதிர்கொள்ள இயலாது என்பது தெரியும். ஆனால், பருவமழை, அடைமழை போன்ற ஆண்டுதோறும் சந்திக்கும் இயற்கை நிகழ்வுகளைக்கூட நம்மால் எதிர்கொள்ள முடியாமல் போவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளாகியும், ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் ஒதுக்கியும்கூட இன்னும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைக்கூட நம்மால் ஏன் உருவாக்க முடியவில்லை?
சென்னையைப் பொருத்தவரை மழை நீர் உடனடியாக வெளியேறாமல் தேங்கி நிற்க வேண்டிய அவசியமே இல்லை. இயற்கையாகவே வெள்ளம் வடிந்தோடும்படியான நகரமைப்பு, கடலையொட்டியுள்ள சென்னைக்கு உண்டு. சென்னை மாநகரில் கூவம், அடையாறு என்று இரண்டு ஆறுகளும், பக்கிங்ஹாம் உள்ளிட்ட 16 கால்வாய்களும், இது போதாதென்று பல கழிவு நீர் ஓடைகளும், திட்டமிட்டு நிறுவப்பட்டிருக்கும் மழை நீர், கழிவு நீர் வடிகால் குழாய்களும் இருக்கின்றன.
சென்னையிலுள்ள இரண்டு ஆறுகளையும், 16 கால்வாய்களையும் முறையாகத் தூர்வாரிப் பராமரிக்காததன் விளைவுதான், மழை பெய்தால் இப்படித் தண்ணீர் தேங்கி நிற்பதன் அடிப்படைக் காரணம் என்று நாமே இதற்குமுன் பல தலையங்கங்களில் குறிப்பிட்டிருக்கிறோம். மழைக் காலத்துக்கு முன்னால், இந்தக் கால்வாய்களை சுத்தம் செய்வதும், மழை நீர், கழிவு நீர் வடிகால் குழாய்களிலுள்ள அடைப்புகளை அகற்றித் தயார் நிலையில் வைத்திருப்பதும் நிர்வாகம் செய்திருக்க வேண்டிய முன்னேற்பாடு. செய்ததாகக் கணக்குக் காட்டப்படுமே தவிர, முறையாகச் செய்யாமல் விடுவதுதான் அதிகாரவர்க்கத்தின் வழக்கம். அதுதான் நடந்திருக்கிறது.
சென்னையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் பங்களிப்பாக ஏறத்தாழ இரண்டு லட்சத்துக்கும் அதிகமான திருட்டு கழிவு நீர் இணைப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர், மழை நீர் வடிகால் குழாய்களில் விடப்படுவது, மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு ஒரு முக்கியமான காரணம். வெளிநாடுகளில், மழை நீர் வடிகால் பாதை என்பது இரண்டு அடியே ஆழமுள்ள திறந்த பாதையாக இருக்கும். எப்போது மழை பெய்தாலும் தண்ணீர் உடனடியாக வடிந்துவிடுவதற்கும், அடிக்கடி சுத்தம் செய்வதற்கும் ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும். இங்கே அப்படி அமைத்தால், நமது மகா ஜனங்கள் அதைக் குப்பை போடுவதற்கு பயன்படுத்தி விடுவார்களே, என்ன செய்ய?
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் இதேபோலப் பெருமழை வந்தபோது, அதற்கு முன்னால் 30 ஆண்டுகளாகத் தூர் வாரப்படாமலிருந்த 16 கால்வாய்களும் தூர்வாரப்பட்டன. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளும், நடவடிக்கைகளும் அதற்குப் பிறகு ஒப்புக்குத்தான் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை இந்தப் பெருமழை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது.
சென்னை மாநகரத்தைப் பொருத்தவரை, இத்தனை குழப்பங்களுக்கும் குளறுபடிகளுக்கும் காரணம், தொலைநோக்குப் பார்வையே இல்லாத நகர் மற்றும் ஊரமைப்புத் துறையும், பெருநகர் வளர்ச்சிக் குழுமமும்தான். இவர்கள் மக்களின் நன்மையைவிட, ரியல் எஸ்டேட் அதிபர்களின் வளர்ச்சியைக் கருதி மட்டுமே செயல்படுவதுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ஜார்ஜ் டவுன், புரசைவாக்கம் போன்ற சென்னையின் பழைய பகுதிகள்தான் நியாயமாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் உருவான புறநகரின் பகுதிகள்தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. அப்படியானால் அது திட்டமிடலின் குற்றமே தவிர, இயற்கையின் சதியல்ல.
அடுக்குமாடிக் குடியிருப்புகளே எழுப்பப்பட்டிருந்தாலும், அது யாருடையதாக இருந்தாலும் தயவுதாட்சண்யமே இல்லாமல் அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் இரு மருங்கிலுமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது; விதிமீறல் கட்டடங்களுக்கு தரப்பட்டிருக்கும் திருட்டு இணைப்புகளை அகற்றுவது; 16 கால்வாய்களையும் தூர் வாருவது; தெருவோரக் கடைகளின் உணவுக் கழிவுகள் கால்வாய்களில் கொட்டப்படாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக அரசு மேற்கொள்ளாமல் போனால், இந்த நிலைமை தொடரும். அடுத்த அடைமழையிலும் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் அல்லது மூழ்கும்!
மழை வந்துவிட்டால், சென்னை மாநகரம் ஒரு மாநரகமாக மாறுவது பல ஆண்டுகளாகத் தொடரும் அவலம். இத்தனைக்கும், சென்னை ஒரு கடலோர நகரம். போதாக்குறைக்கு சென்னையின் குறுக்கே இரண்டு ஆறுகளும், பக்கிங்ஹாம் கால்வாயும் ஓடிக் கடலில் கலக்கின்றன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டால், எவ்வளவு அடைமழை பெய்தாலும் சாலையில் சொட்டுத் தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க முடியும். இதெல்லாம் தெரிந்தும்கூட, சென்னை வெள்ளத்தில் மிதப்பது ஆண்டுதோறும் எதிர்கொள்ளும் அவலமாக இருக்கிறதே, இதற்கு யாரைக் குறை சொல்வது என்று தெரியவில்லை.

Tuesday, November 17, 2015

பெண் எனும் பகடைக்காய்: கழிப்பறையும் பெண்ணின் உரிமையும்........ பா.ஜீவசுந்தரி

Return to frontpage




கழிப்பறை ஒரு வீட்டின் அத்தியாவசியம். சமையலறை ஒரு பெண்ணுக்கு அவசியம் என்று கருதுகிற சமூகம், கழிவறையின் அவசியத்தை உணர்ந்திருக்கிறதா? கழிவறை, நகரங்களில் மிக மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டாலும், கிராமங்களில் இன்னமும் தொடரும் அவலமாகத்தான் கழிவறைப் பிரச்சனை இருக்கிறது. அவர்கள் அதன் அருமையை உணரவில்லை; முழுமையையும் எட்டவில்லை. காடு கரைகள், கண்மாய்க் கரைகள் என்று தேடிப் போகிறார்கள். நோய்க்கூறுகளை உள்வாங்கும் இடமாக அவை இருக்கின்றன. ஆள் நடமாட்டமில்லாத இடம் தேடிப் போவதும், நடமாட்டம் இருப்பின் இயற்கை உபாதைகளை அடக்கி வைத்துக்கொள்வதும் எவ்வளவு அவஸ்தைகள்?

சில நேரங்களில் பாம்புகளின் ரூபத்தில் மரணத்தையும் ஆண் மன விகாரங்களின் வெளிப்பாடாகப் பாலியல் வல்லுறவு போன்ற ஆபத்துகளையும் இந்தப் ‘பயணங்கள்’ ஏற்படுத்துகின்றன. கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச கிராமம் ஒன்றில் இரு இளம்பெண்கள், இருட்டிய பின் காடு கரைகளைத் தேடிச் சென்றபோது பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கவில்லையா? நடிகை வித்யா பாலன், விளம்பரங்களில் தோன்றி, ’முக்காடு போட்டு முகத்தை மூடிக்கொள்வது மட்டும் பெண்ணின் கௌரவமல்ல, இயற்கை உபாதைகளுக்காக வெளியில் செல்லாமல் இருப்பதும்தான்’ என்று சொல்வது எத்தனை பொருள் பொதிந்தது.

சூரிய உதயத்துக்கு முன் இருள் பிரியாத அதிகாலைப் பொழுதிலும், அதைத் தப்பவிட்டால், ஒரு நாள் முழுதும் அவதியுடன் காத்திருந்து, இருள் கவியும் மாலைப் பொழுதிலும், மறைவிடம் தேடிச் செல்வது வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரங்கள். பதின் பருவப் பெண்கள் மாத விலக்கான காலங்களில் இன்னும் கூடுதல் தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டும் என்பதும் மறுக்க முடியாத நிதர்சனங்கள்.

பன்னிரண்டு வயதை எட்டிப் பிடிக்கும் பெண் குழந்தைகள், பருவமடையும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களில் இதுவும் ஒன்று என்பதை மறுக்க முடியுமா? பள்ளிகளில் கழிப்பறைகள் இருந்தாலும் போதிய தண்ணீர் வசதி இல்லாவிட்டால், அதைப் பயன்படுத்த முடியாத நிலை. காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் பெண் குழந்தைகள் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் வரை சிறுநீர் கழிக்காமல் இருப்பதும், தாகத்துக்குத் தண்ணீர் குடிக்காமல் தவிர்ப்பதும் கொடூரமில்லையா?

கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பெண் குழந்தைகள், பல மைல் தொலைவிலிருந்து பயணித்து வருபவர்கள் இத்தகைய அத்தியாவசியத் தேவைகள் மறுக்கப்படுவதாலேயே கல்வியின் மீதும் கவனம் குவிக்கத் தவறுகிறார்கள். சில வேளைகளில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி பாதியிலேயே நிறுத்தப்படும் அவலமும் நிகழ்கிறது. குடும்பச் சூழல், பருவமடைதல், இவற்றுடன் கழிப்பறையும் இங்கு ஒரு காரணமாகிறது.

ஒரு முறை சென்னை உயர் நீதிமன்றத்தில், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். புகழ் பெற்ற யூரோ கைனகாலஜிஸ்ட் ஒருவர் சிறப்பு அழைப்பாளராக அழைப்பப்பட்டிருந்தார். பேச்சாளராக என்னையும் அழைத்திருந்தார்கள். என்னால் அதில் கலந்துகொள்ள இயலவில்லை. அந்தக் கூட்டமே பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரகத்தொற்று நோய் பிரச்சனைகள் தொடர்பானதுதான். நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவர் என் தோழி. பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பிட வசதி இல்லாமையும், அதன் போதாமையும் பற்றி அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இப்படிச் சொன்னார். “இவ்வளவு பேசுகிறோம், பெண்களுக்கான சட்ட உரிமைகளுக்காக வாதாடுகிறோம். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்திலேயேகூட பெண்களுக்குப் போதுமான கழிப்பிட வசதி இல்லை” என்று தடாலென்று போட்டு உடைத்தார். இதுதான் இங்கு உண்மை. விடுதலைக்குப் பின் பெண்ணின் பிரச்சினைகளாக கல்வி, திருமணம், பாலியல் இவற்றினூடாக, நாகரிகத்தில் உச்சமடைந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ளும் நாம்தான் இன்னமும் பெண்களுக்கான கழிப்பறைகளின் அவசியம் பற்றியும் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

பேருந்துப் பயணங்களின்போது மோட்டல்களில் அல்லது கட்டணக் கழிவறைகளில் பேருந்து நிறுத்தப்படும்போது, அங்குள்ள கழிவறைகள் சொல்லும் கிராமப் புறங்களின் உண்மை நிகழ்வை. தண்ணீர்ப் பற்றாக்குறையும் சுத்தம் பேணாமையும் சிறுநீர்த் தொற்றைக் கொண்டுவந்து சேர்த்துவிடுமே. பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது குறித்தும் நம் மக்களுக்கு சொல்லித் தர வேண்டியிருக்கிறது.

கிராமங்களில் அரசு கட்டித் தந்திருக்கும் கழிப்பறைகளும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல், பூட்டியே வைக்கப்பட்டிருப்பதும், அவை தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டு வைக்கும் இடமாக மாறியிருப்பதும் அந்த மக்களின் மாறாத மனநிலையையே எடுத்துக் காட்டுகின்றன. வீட்டில் கழிப்பறை இருந்தாலும், ’காற்றோட்டமாக’ வெளியில் சென்று வருவதையே விரும்புவதாகச் சொல்லும் சில கிராமத்துப் பெண்களின் மனநிலையை என்னென்பது?

கிராமங்கள் இருக்கட்டும். நகரங்களிலும் பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பிட வசதி என்பது மிக மிகக் குறைவு. அலுவலகங்களில் கழிப்பிட வசதி இருந்தாலும், மாதவிலக்குக் காலங்களில் நாப்கின்களைப் போடுவதற்கான குப்பைக் கூடைகள் இல்லாதது பற்றி யாரிடம் நொந்துகொள்வது? அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பல தோழிகள் இந்த இடர்ப்பாட்டை எதிர்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பெண்களே தங்கள் சொந்தக் கைக்காசு செலவழித்துக் குப்பைக் கூடைகள் வாங்கி வைத்ததாகவும், சில நாட்களின் பின் அந்தக் கூடைகள் காணாமல் போவதையும் வருத்தத்துடன் சொல்வார்கள்.

கிராமங்களில் வீடுகளுக்குள் கழிவறைகளைக் கட்டிப் பயன்படுத்துவதில் சாதி சார்ந்த மனோபாவமும் உள்ளீடாக ஒளிந்திருப்பதை மறுப்பதற்கில்லை. அதை யார் சுத்தம் செய்வது என்பது ஒருபுறம். நாம்தான் அதற்காகவே குறிப்பிட்ட சாதியினரை ஒதுக்கி வைத்திருக்கிறோமே. தீண்டாமை இன்னமும் கைக்கொள்ளப்படும் இந்தச் சமூகத்தில் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க முடியாத மனநிலையும் மனத்தடையும்கூட, கழிப்பறைகளை அவர்கள் மறுப்பதற்கான காரணிகள். காந்தி முன்னெடுத்த போராட்டங்களில் எல்லாம் கழிப்பறை பற்றியும், அதன் தூய்மை பற்றியும், அதை நாமே சுத்தம் செய்வது பற்றியும் பேசிய பேச்சுகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை. மற்றொன்று கலாசாரத்தின் பெயரால் மறுப்பது. வீட்டுக்குள் கழிவறை என்பது, வீட்டுக்கான புனிதத்தைக் குலைத்துவிடும் என்பது. ‘மனு ஸ்மிருதி’ குறிப்பிடுவதும் இதைத்தானே.

சீமா படேல் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாபூர் கிராமத்துப் பெண். கழிப்பறை வசதி வேண்டுமென்று அவர் கேட்ட பின்னும் அதைக் காதில் போட்டுக்கொள்ளாத கணவன், புகுந்த வீட்டாரின் அலட்சியத்தால் வீட்டையே புறக்கணித்து வெளியேறினார். கணவன் அதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போக, ‘கழிவறை கட்டித் தருவதில் என்ன சிக்கல்?’ என கோர்ட் எதிர்க்கேள்வி கேட்டது. வேறு வழியின்றி கழிப்பறை கட்டிய பின், 20 மாதங்களுக்குப் பின் சீமா படேல், குழந்தையுடன் கணவன் வீடு திரும்பியிருக்கிறார். கோர்ட் தலையிட்டுக் கேள்வி கேட்டதாலேயே கழிவறை கட்டப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவு வருத்தத்துக்குரியது. அடிப்படை உரிமைகூட கோர்ட்டுக்குப் போனால்தான் கிடைக்கும் போலிருக்கிறது. அதைக் கட்டுவதற்கு உதவியவரும் உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவி என்பதையும் கவனத்தில் கொள்வோம்.

கொசுறு: இந்தியா முழுமைக்கும் இதே நிலை என்றால், நம் தமிழக நிலை என்ன? தமிழகத்தில் 49 சதவீதம் வீடுகளில் கழிப்பறை இல்லை என்று இந்தியக் கணக்குத்துறை அலுவலரின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. அட, நமக்கு டாஸ்மாக் போதாதா?

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

குறள் இனிது: கொஞ்சம் நடிங்க பாஸ்!

Return to frontpage

சோம.வீரப்பன்
 

நீங்கள் தண்ணீர் இருக்கும் குளமோ, ஏரியோ, ஆறுகளைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிறது? அங்கு மீன்களைப் பார்த்து ரசித்திருக்கிருக் கிறீர்களா? அவைகளைப் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசைப்பட்டிருக்கிறீர்களா? தூண்டில் இல்லாமலே மீன் பிடிக்க என்றாவது முயன்றதுண்டா? நாம் கரையோரத்தில் அமர்ந்து காலை நனைக்கும் பொழுதும், தண்ணீரில் நிற்கும் பொழுதும், பல மீன்கள் அருகில் வந்தாலும், நம்மால் ஒன்றைக் கூட பிடிக்க முடியாது. நமது கால் விரல்களைக் கடிக்கும் மீன்கள் கூட, நாம் சிறிது அசைந்தாலும் உடனே ஓடி விடும். அப்படியிருக்க கொக்கு மட்டும் எப்படி அவற்றைப் பிடித்து விடுகிறது?
கொக்கு மீன் பிடிக்கும் முறை வித்தியாசமானது. மீனைத் தேடி, அது அங்கும் இங்குமாக நடக்காது. ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும். நடிகர் திலகத்திற்கு ஒப்பான நடிப்பிருக்கும். அது சிலை போல நிற்பதால் மீன்கள் பயமின்றி அதனருகில் செல்லும். ஆனால், சிறிய மீன்களைக் கண்டும் காணாதது போல அது விட்டுவிடும். தனக்குத் தேவையான மீன் அருகில் வந்தவுடன் சட்டென அதனை ஒரே குத்தாகக் கொத்தி விடும். சிறிது தாமதித்தாலும், குறி தப்பினாலும் மீன் நழுவி ஓடி விடுமே!
காவல் துறையினர் இந்த மாதிரி பாவ்லா காட்டி பிடித்த குற்றவாளிகள் ஏராளம். சில மாதங்களுக்கு முன்பு வடமாநிலக் கொள்ளையரை சென்னைப் புறநகரில், கூண்டோடு பிடித்தது ஞாபகம் இருக்கும். சமீபத்தில் டெல் நிறுவனம் EMC2 நிறுவனத்தை வாங்குவதற்கு இரகசியமாக செயல்பட்டதையும், ஆனால் அதையும் மீறி அச்செய்தி கசிந்ததால், அவற்றின் பங்கு விலைகள் பாதிக்கப்பட்டதையும் படித்து இருப்பீர்கள். நாணயமில்லாத பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கும் இந்த முறை மிகவும் உபயோகமானது.
வணிகமோ, அலுவலகமோ, போட்டியாளரை, எதிரியை வீழ்த்த வேண்டுமென்றால், ஒன்றும் செய்யாததுபோல் கொஞ்சம் நடிப்பதன் மூலம் அவரை அசர வைப்பது நன்று. அசிரத்தையாக இருப்பவரைத் தானே வெல்வது எளிது. ஆனால் எதிரி சுதாரிக்கும் முன்பே அவரைத் தாக்க வேண்டும். எதிர்பார்க்காத எதிரியிடமிருந்து, எதிர்பார்க்காத நேரத்தில் விழும் அடியில்தான் வலியும் அதிகம். பாதிப்பும் அதிகம். அத்துடன் என்ன நடக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்வதற்கு முன்பே, வேலையை முடித்துக் கொள்ள வேண்டும். உங்கள் தாக்குதலின் போது குறி தப்பக் கூடாது. மேலும் வேகமும், பலமும் இல்லையென்றால் மீன் வழுவுவது போல, எதிரியும் தப்பித்து விடுவார். நீங்கள் எடுக்கும் நடவடிக்கை, எதிரியை முழுவதுமாக முடிப்பதாக இருக்க வேண்டும். அப்புறம் என்ன? உங்களுக்கு வெற்றிதான்!!
காரியம் சாதிக்க நினைப்பவர்கள், சரியான காலம் வரும் வரை கொக்கைப்போல ஒடுங்கி இருக்க வேண்டும்; நேரம் வாய்க்கும் பொழுது, கொக்கு பாய்ந்து மீனை இரையாக்கிக் கொள்வது போல, விரைந்து செயல்பட வேண்டுமென்கிறார் வள்ளுவர்.
கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து (குறள் 490)
somaiah.veerappan@gmail.com

சென்னையில் 82% மழை அதிகம்


DINAMANI

By சென்னை,

First Published : 17 November 2015 02:49 AM IST


வட கிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது, சென்னையில் தற்போது வழக்கத்தை விடக் கூடுதலாக 82 சதவீத அளவுக்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் 28-இல் தொடங்கியது. பருவ மழை தொடங்கியது முதல் தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது.
இதனால், அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் 480 மி.மீ., மழையும், காஞ்சிபுரத்தில் 340 மி.மீ. மழையும் பதிவானது.
அதைத் தொடர்ந்து, தென் மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டிருந்தத் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், வட மாவட்டங்களில் பலத்த, மிகப் பலத்த மழை பெய்தது.
தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை பதிவானது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், அதிகபட்சமாக 370 மி.மீட்டர் மழை பெய்தது.
சென்னையில் 82 சதவீதம் கூடுதல்: தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் 16-ஆம் தேதி வரையில் சராசரியாக 382.7 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. இது, வழக்கமான சராசரியைவிட 57.3 மி.மீ. குறைவாகும்.
வட கிழக்குப் பருவமழை காலத்தில், சென்னை மாவட்டத்தில் வழக்கத்தை விட 82 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதாவது, 16 நாள்களில் (அக் 1-16) சென்னை மாவட்டத்தில் 910 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. அதேபோல் புதுச்சேரியில் வழக்கத்தை விட கூடுதலாக 1 சதவீதம் பெற்று, 520 மி.மீட்டர் அளவுக்கு மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

புவி வெப்பமயமாதல் - ஒரு தவறான கணிப்பு

Dinamani

By ஆர். சாமுவேல் செல்வராஜ்

First Published : 17 November 2015 02:00 AM IST


இந்த நூற்றாண்டில் மனித குலம் எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்னைகளில் (பயங்கரவாதத்தை விட) ஒன்று புவி வெப்பமயமாதல். மனித நடவடிக்கைகளினால் பசுமை இல்ல (குறிப்பாக கார்பன்) வாயுக்களின் அளவு அதிகரித்து
வருகிறது.
இந்த வாயுக்களின் பெருக்கத்தினால் புவி வெப்பமடைகிறதாகவும், கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், பருவமழை பொய்த்து போகுதல் போன்ற காலநிலை தொடர்பான இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுவதாகவும் கருதி வந்த அறிஞர்களுக்கு நாசா, தற்போது வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
புவியின் வெப்பநிலை உயர்வுக்கும், கடல்மட்ட உயர்விற்கும் கார்பன் ஒரு முக்கிய காரணி இல்லை எனவும், இவை அனைத்தும் இயற்கை நிகழ்வுகளே என பல ஆய்வுகள் கூறத் தொடங்கியுள்ளன. புவி வெப்பமயமாதலுக்கும் கார்பனுக்கும் தொடர்பு இல்லை என கூறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. புவி வெப்பமயமாதலுக்கு என்னென்ன மனித நடவடிக்கைகள் முக்கியக் காரணிகளாக உள்ளன என்பதைப் பார்ப்போம்:
= பசுமை இல்ல வாயுக்களின் பெருக்கம் (கார்பன் - டை - ஆக்ûஸடு, மீத்தேன், ஓசோன், நைட்ரஸ்-ஆக்ஸைடு, குளோரோ-புளோரோ கார்பன்) - இது வெப்பத்தை அதிகரிக்கும் மனித விளைவு.
= வாகனங்கள், மற்றும் தொழிற்சாலை பெருக்கத்தினால் வெளியேறும் தூசுக்கள் (Dust) - இது வெப்பத்தைக் குறைக்கும் மனித விளைவு.
= நகர வெப்பத்தீவு (Urban Heat Island) விளைவு என்ற புதிய நடவடிக்கையால் அதாவது உயரமான கட்டடங்கள் கட்டுதல், காடுகள் அழிக்கப்படுதல், தார்ச் சாலைகள் போன்றவை உள்ளூர் வெப்பத்தை அதிகரிக்கின்றன.
= தேவையற்ற மரங்கள் வளருதல், அதாவது கருவேல மரங்கள், யூகலிப்டஸ், ஆகாயத் தாமரை போன்ற மரம், செடி, கொடிகளினால் நிலத்தடி நீர் பற்றாக்குறை- பருவமழை பொய்த்தல் போன்றவை ஏற்படுதல் - இதுவும் ஒரு புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணி ஆகும்.
= குளிர்சாதன கருவிகள் மூலம் வெளியேறும் வேதிப்பொருள்கள் வளிமண்டல மேல்மட்ட ஓசோனை குறைப்பதால், தரைமட்டத்தில் பல காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுவும் ஒரு மனிதனின் தொழில் புரட்சியினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றமே.
= வாகனங்கள் மற்றும் தொழில்சாலை கழிவுகளினால் தரைமட்டத்தில் குறைவாக இருக்க வேண்டிய ஓசோன் வாயு அதிகரித்து வருகிறது. இதனால் கூட புவியின் வெப்பம் உயரும்.
= பெரிய அளவிலான விளைச்சல் நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு (கார் தொழில்சாலை, வேறு பல தொழில்சாலை) பயன்படுத்துதல். - இதுகூட நிலத்தடி நீரையும், நீர்மட்டத்தையும் பருவமழையை பாதிக்கும் காரணியாக உள்ளது.
= காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்தல், செல் கோபுரங்கள் இவை கூட சிறிய மற்றும் உள்ளூர் அளவில் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற பல மனித நடவடிக்கைகள் புவியின் வெப்பத்தை உயர்த்தும் நிலையில் கார்பன் அளவைக் கொண்டு புவியின் வெப்பத்தை கணிப்பது ஒரு தவறான அறிவியல் கருத்தாகும்.
= புவி வெப்பத்திற்கும் கார்பனுக்கும் உள்ள தொடர்பை அறிஞர்கள் மறுப்பதற்கு இரண்டாவது காரணம் : காலநிலை வரலாற்றில், 30 ஆண்டுகளுக்கு உயரும் வெப்பநிலை, அடுத்த 30 ஆண்டுகளில் குறைகிறது.
அதாவது, 1910-1940 வரையிலான காலக்கட்டத்தில் ஏறும் முகத்தில் இருந்த வெப்பநிலை 1940-70 வரையிலான காலக்கட்டத்தில் குறைந்து காணப்பட்டது. அதன்படி 1970-2000 மீண்டும் வெப்பம் உயர்ந்தது. மறுபடியும் 2000-2030 காலக்கட்டத்தில் வெப்பம் குறைந்து வருகிறது.
காலநிலை அறிஞர்கள் கூறும் கருத்து காலநிலை வரலாற்றின் புள்ளி விவரத்திற்கு எதிராக உள்ளது. அதாவது, வெப்பநிலை மாறிமாறி உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
= வாகனங்கள் மற்றும் தொழில்சாலைகள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களுக்கு சமமாக மிகவும் நுண்ணிய தூசுக்களும் (Aerosol) காற்றில் கலக்கின்றன. வாயுக்கள் வெப்பத்தை உயர்த்துகிறது என்றால், தூசுக்கள் வெப்பத்தைக் குறைக்கும். இந்த எதிரெதிர் விளைவுகள் அறிஞர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
= நகரங்களில் மேற்கொள்ளப்படும் நகர வளர்ச்சி, அதாவது கட்டடங்கள், தார்ச்சாலைகள் போன்றவை ஓர் இடத்தின் வெப்பத்தை உயர்த்துகின்றன. இந்நிலையில் ஓர் இடத்தின் வெப்பநிலையைத் தீர்மானிப்பது அங்கு நிலவும் பசுமை இல்ல வாயுக்களின் அளவா? அல்லது நகர வெப்பத் தீவு விளைவா?
= பசுமை இல்ல வாயுக்களின் பெருக்கத்தினால் வெப்பநிலை உயர்ந்தால் கடல்நீர் ஆவியாதலும் அதிகமாகும். இந்த ஆவியாதலினால் மேகங்கள் அதிகளவில் தோன்றும். இதனால், சூரிய ஒளி புவிக்கு வருவது தடுக்கப்படும். இந்நிலையில் புவி வெப்பமயமாதலை குறித்தான அறிவியல் ஆய்வுகள் இன்னும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன.
= முடிவாக, அறிஞர்கள் மறுக்கும் முக்கியக் கருத்து என்னவென்றால், கார்பன் வாயுக்களின் பெருக்கத்திற்கு ஏற்ப, புவி அகச்சிவப்பு கதிர்களின் அளவு பெருகுவது இல்லை.
இந்நிலையில், புவி வெப்ப உயர்வை கார்பன் வாயுக்களின் அளவோடு தொடர்புபடுத்தும் அறிவியல் கருத்துகள் இன்னும் பொதுமக்கள் இடையே ஒரு குழப்பத்தையும், அச்சத்தையுமே ஏற்படுத்தி வருகின்றன.
அதாவது, குருடர்கள் யானையைத் தடவியது போன்றுதான் புவி வெப்பமயமாதலுக்கும் கார்பனுக்கும் இடையே உள்ள தொடர்பு அமைந்துள்ளது.

அனுமதிப்பதில் தவறில்லை!


Dinamani

By ஆசிரியர்

First Published : 17 November 2015 01:55 AM IST


வெளிநாட்டவர் இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற அனுமதியில்லை என்று மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்கு செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்ப மையங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அவர்களைப் பொருத்தவரை இது வணிகம். வெளிநாட்டினர் மூலம்தான் இந்த வணிகம் சாத்தியம்.
வெளிநாட்டினர் இங்கு வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு ஆகும் செலவு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை. அது மேலை நாடுகளின் மருத்துவச் செலவுடன் ஒப்பிடும்போது மிகமிகக் குறைவு. ஆண்டுக்கு 2,000 குழந்தைகள் வாடகைத்தாய் மூலம் பிறக்கின்றன. இந்தியர்களில் சிலரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகின்றனர் என்றாலும், அவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஆகவே, செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்ப மையங்கள் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்க்கின்றன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், தாய்லாந்து நாட்டில் ஒரு வாடகைத் தாய்க்கு நேர்ந்த துயரச் சம்பவம்தான் அரசின் முடிவுக்குக் காரணம். ஐம்புவா என்ற அந்தப் பெண்மணி ஆஸ்திரேலிய தம்பதிக்காக குழந்தை பெற ஒப்புக் கொண்டார். கரு வளர்ந்த நிலையில் அது இரட்டையர் எனத் தெரிய வந்தது. ஓர் ஆண், ஒரு பெண். ஆண் குழந்தை மூளைவளர்ச்சி குறைவான குழந்தையாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியதால், கருவைக் கலைக்க முடியாத நிலை, ஆஸ்திரேலியத் தம்பதி, பெண் குழந்தையை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றனர். ஆண் குழந்தையை வளர்க்க போதிய நிதி இல்லாமல், இந்த வாடகைத்தாய் வேண்டுகோள் விடுத்தபோது இந்த விவகாரம் உலகம் முழுதும் பேசப்படுவதாக மாறியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாய்லாந்து அரசு, வெளிநாட்டவர் அங்கே வந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதைத் தடை செய்துள்ளது. தற்போது இந்தியாவும் அதேபோன்று தடை விதித்துள்ளது.
கடந்த மாதம் இந்தப் பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் "வணிக ரீதியிலான செயற்கைக் கருவூட்டலை ஆதரிக்கவில்லை' என்று மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. வாடகைத் தாய்க்கான மருத்துவச் செலவுகளுடன், குழந்தையைச் சுமந்து பெற்றுக் கொடுத்ததற்குப் பணமும் தரப்படும் என்கிற நிலையில், இதை அந்தத் தாயின் சுதந்திரமாகத்தான் கருத வேண்டுமே தவிர, அரசு ஏன் தடுக்க வேண்டும் என்பது புரியவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளாகவே வெளிநாட்டினர் பலர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இந்தியா வருவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஏறத்தாழ 3,000-க்கும் அதிகமான செயற்கைக் கருவூட்டல் மையங்கள் இவர்களை நம்பிக் கடை விரித்திருக்கின்றன. உலகிலேயே, சட்டப்படி வணிகரீதியிலான செயற்கைக் கருத்தரித்தலை அனுமதிக்கும் ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதுதான் அதற்குக் காரணம்.
இந்திய அரசு வெளிநாட்டினருக்குத் தடை விதித்ததற்குப் பதிலாக, கிடப்பில் உள்ள செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப (ஒழுங்காற்று) சட்டம் 2014-யை நிறைவேற்றினாலே போதும். இதில் பல்வேறு சிக்கல்களுக்கு இயல்பான முடிவுகள் எட்டப்படும். இச்சட்டம் மிகத் தெளிவாக விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி, தம்பதியில் ஒருவர் மலடாக இருந்தால் மட்டுமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற அனுமதிக்கப்படுவார். அவர் இந்தியராக, அல்லது இந்தியரைத் திருமணம் செய்த வெளிநாட்டவராக, அல்லது வெளிநாடு வாழ் இந்தியர் அல்லது புலம்பெயர் இந்தியர், இந்திய வம்சாவளியினராக இருந்தால் அனுமதிக்கப்படுவர். வாடகைத் தாய்க்கோ, குழந்தைக்கோ ஏற்படக்கூடிய பேறுகாலச் செலவும், பேறுகால அசம்பாவிதங்கள் அனைத்துக்கும் பொறுப்பேற்கும் விதமாகக் காப்பீடு செய்ய வேண்டும். வாடகைத் தாய்க்கு அளிக்கப்படும் தொகையை ஒப்பந்தமாக வழங்க வேண்டும்.
இதேபோன்று, வாடகைத் தாய்க்கும் நிபந்தனைகளை இச்சட்டம் விதித்துள்ளது. அவர் இந்தியக் குடிமகளாக இருக்க வேண்டும். 23 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராகவும், ஏற்கெனவே ஒரு குழந்தை பெற்று, அக்குழந்தைக்கு குறைந்தது 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே வாடகைத்தாயாக இருக்கலாம். வாடகைத்தாய் சுமக்கும் குழந்தைக்காக அவர் சினை முட்டை தானம் செய்வது கூடாது. வாடகைத் தாய், குழந்தையை ஏற்கும் தாய் ஆகியோருடைய ரகசியம் காக்கப்பட வேண்டும். குழந்தை பிறப்பு பதிவு செய்யும்போது, குழந்தையை ஏற்கும் தம்பதியே தாய் - தந்தையராகக் குறிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கலாம்.
இவ்வளவு தெளிவான சட்ட விதிமுறைகள் உள்ள ஒரு சட்டத்தை இன்னமும் நாம் நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல. குறிப்பாக, தாய்லாந்தில் வெளிநாட்டவர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடியாது என்று நிலை உருவான பின்னர், இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், இந்தச் சட்டத்தை நிச்சயமாக விரைவில் கொண்டு வந்தாக வேண்டும்.
செயற்கைக் கருவூட்டல் என்பது இன்றைய அளவில் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 2,500 கோடி டாலர்கள் புழங்கும் தொழில். இவ்வளவு பணமும் வெளிநாட்டினரால்தான் இந்தியாவுக்குக் கிடைத்து வருகிறது. இந்தப் பணத்தின் மூலம் பெரும் பயனடைவது கருவூட்டல் மையங்கள்தானே தவிர, ஏழை வாடகைத் தாய் அல்ல. அதனால், ஏழை மகளிருக்குப் பாதுகாப்பும், உரிய பணமும் கிடைப்பதை அரசு, செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்ப (ஒழுங்காற்று) சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் உறுதிப்படுத்துவதுதான் இன்றைய தேவை. வாடகைத் தாய் மூலம் குழந்தை கேட்பவர் இந்தியரா, வெளிநாட்டவரா என்பதல்ல முக்கியம்.


Monday, November 16, 2015

Madras HC allows ineligible MDS students to complete course Updated: November 13, 2015 08:29 IST | Sureshkumar


The Hindu.. Chennai


Citing mistake on the part of Tamil Nadu Dr. MGR Medical University in implementing a notification prescribing 50 per cent marks as eligibility criteria for admission to Master of Dental Surgery (MDS), the Madras High Court has allowed students of four dental colleges to complete the course though they have been admitted flouting the rule.

Justice M.M. Sundresh passed the direction on a batch of petitions moved by four dental colleges challenging an order dated April 27, 2014 passed by the university cancelling the registration of students enrolled in MDS degree course as they failed to fulfil the eligibility criteria prescribed by the university.

Though the university issued a notification prescribing the eligibility in 2007 it failed to implement the same till 2014. Utilising the opportunity, private dental colleges continued enrolling students who scored below 50 per cent in undergraduate course.

As the university issued orders cancelling the registration of such ineligible students in 2014, the institutions approached the court claiming that there was delay on part of the university in intimating the decision. The petitioners also claimed that the students who were admitted in the academic year 2013-14 were in the verge of completing their course.

Opposing the plea, the university contended that the institutions have violated the regulations and now they cannot contend contrary. “Equity of law should prevail and therefore no interference is required,” counsel for the university said. Noting that the regulations would certainly govern the case of the petitioner institutions, the judge however said, “Had the regulations of 2007 been implemented strictly, the students of the petitioner institutions would not have been affected.” Considering the fact that the students are about to complete their course, Justice Sundresh set aside the order passed by the university with a direction to register them within eight weeks.


Cites mistake on part of university in implementing a notification prescribing 50 % as eligibility criteria

Published: November 15, 2015 12:52 IST Updated: November 15, 2015 13:12 IST இருளுக்கு இங்கே இனி என்ன வேலை? - உறவுகளால் பெருகிய நம்பிக்கை!


Return to frontpage

புற்றுநோயிலிந்து மீண்டு வந்த போராளியின் உண்மைக் கதை)

எனக்கு மார்பகப் புற்றுநோய் என்று உறுதி செய்த பிறகும் டாக்டர் சுப்பையாவின் வார்த்தைகள், வாழ்க்கை மீதான நம்பிக்கையைக் கூட்டின. நானும் என் கணவரும் மகிழ்ச்சியோடு மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தோம். என் மனதைப் பிரதிபலிப்பது போலவே வானம் நிர்மலமாக இருந்தது. வீடு திரும்பும் வழியெல்லாம் என் உறவுகளுக்கு இதை எப்படிச் சொல்வது என்று யோசித்துக்கொண்டே வந்தேன்.
மறைத்துவைப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை. தவிர, பகிர்ந்துகொள்ளும்போதுதான் வேதனையும் பாதியாகும். வீட்டுக்கு வந்ததும் என் மாமனாருக்கு போன் செய்தேன். கோவில்பட்டி பக்கத்தில் இருக்கும் கடம்பூர் கிராமத்தில் இருக்கிறார் அவர். அன்பும் இனிமையும் ஒருங்கே அமைந்தவர் அவர். அதிர்ந்துகூட பேசத் தெரியாது அவருக்கு. அன்பு ஒன்றே ஆக்கும் சக்தி என்பதற்கு நல்ல உதாரணம் என் மாமனார்தான். என்னை அவர் இன்னொரு மகளாகத்தான் பார்த்தார். நான் கேட்காமலேயே நிறைய செய்வார்.
புத்தாடைகள் வாங்கிவந்து ஆச்சரியம் தருவார். ஊரிலிருந்து வரும்போதெல்லாம் எனக்குப் பிடித்தத் திண்பண்டங்கள் வாங்கிவருவார். அவரைப் போல எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பது சாத்தியமா என்று பலமுறை யோசித்திருக்கிறேன். அப்படியொரு இளகிய மனம் கொண்டவரிடம் எப்படி இதைச் சொல்வேன் என்று நினைத்துக்கொண்டேதான் போன் செய்தேன். விஷயத்தைச் சொன்னதும் அந்தப் பக்கம் எந்தச் சத்தமும் இல்லை. அந்தச் சில நிமிட மௌனம் அவரது பயத்தையும் பதற்றத்தையும் சொன்னது. ‘என்னம்மா இப்படி ஆயிடுச்சே’ என்றார். ‘நீங்க இப்படி பேசக் கூடாது மாமா.
நீங்க மனசு உடையக் கூடாது. நீங்கதான் உறுதியா இருந்து எங்களுக்கு நம்பிக்கை தரணும்’னு சொல்லி அவரைச் சமாதானப்படுத்தினேன். கிட்டத்தட்ட அவரிடம் நானும் என் கணவரும் ஒரு மணி நேரம் பேசினோம். கடைசியாக என் மாமனார், ‘அவதான் அப்படிப் போய் சேர்ந்துட்டான்னு பார்த்தா அந்த வியாதி உனக்கும் வந்துடுச்சே’ என்று சொன்னார். அந்த வார்த்தைகள்தான் என்னைக் கொஞ்சம் அசைத்துவிட்டன.
காரணம் என் மாமியாரும் இளம் வயதிலேயேமார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். நான் என் மாமியாரின் புகைப்படத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி என் மாமனாரும் கணவரும் எவ்வளவோ பேசியிருக்கிறார்கள். அவர்களின் பேச்சில் இழையோடு அன்பைப் பார்க்கும்போதே, அத்தனை அற்புதமான மாமியாருடன் இருக்கக் கொடுத்துவைக்கவில்லையே என்று தோன்றும்.
உலகின் அன்பு மொத்தத்துக்கும் உருவம் கொடுத்தால் அதுதான் என் மாமியார். எப்போதும் சிரித்த முகத்துடன் வேலை செய்தபடியே இருப்பார். நன்றாக ஓடியாடிக் கொண்டிருந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக உடல் மெலிந்தார். என்னென்னவோ வைத்தியம் செய்து பார்த்தும் என்ன வியாதி என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. நாளுக்கு நாள் அவர் உருக்குலைந்துகொண்டே போனார்.
ஒரு நாள் என் மாமனார் வீட்டுக்குத் தெரிந்தவர் ஒருவர்தான் அது மார்பகப் புற்றுநோயாக இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். அந்த நாளில் புற்றுநோய் குறித்துப் போதுமான விழிப்புணர்வு இல்லை. அதற்கான சிறப்பு மருத்துவ வசதிகளும் குறைவு. இருந்தாலும் என் மாமனார் மனம் தளராமல் தன் மனைவியை கேரளாவுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்திருக்கிறார். அப்போதும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. உடலும் மனமும் வேதனைப்பட்டு என் மாமியார் இறந்தபோது அவருக்கு 36 வயது!
மரணிக்க வேண்டிய வயதா அது? அப்போது என் கணவரும் நாத்தனாரும் பள்ளிக் குழந்தைகள். திடகாத்திரமாக இருந்த தன் அம்மா, தன் கண் எதிரிலேயே உருக்குலைந்து மடிந்துபோனதை என் கணவரால் ஜீரனிக்கவே முடியவில்லை. அந்த நாட்களின் வேதனையைப் பலமுறை என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். தாயில்லாமல் வளரும் பிள்ளைகளின் மனவேதனை எப்படியிருக்கும் என்பதற்கு என் கணவரும் நாத்தனாருமே சாட்சி.
மருத்துவ வசதியும் விழிப்புணர்வும் இருந்திருந்தால் தங்கள் அம்மாவைக் காப்பாற்றியிருக்க முடியுமே என்ற கவலை இப்போதும் என் கணவருக்கு உண்டு. தன் தாயின் இழப்பு தந்த பயமோ என்னவோ, எனக்கு மார்பகப் புற்றுநோய் என்று தெரிந்த நொடியில் இருந்து என்னை அதிலிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பு அவருக்கு. மறந்தும்கூட என்னிடம் அவநம்பிக்கையாகப் பேசியதில்லை.
தன் மனைவியைத் தன்னிடமிருந்து பறித்துக்கொண்ட புற்றுநோய் தன் மருமகளுக்கும் வந்துவிட்டதே என்று மறுகும் மாமனாரை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் தவித்தேன். உடனே சுதாரித்துக் கொண்டேன். நான் உடைந்து போனால் வயதான அவரும் நிச்சயம் நம்பிக்கை இழந்துவிடுவார். ‘என்னம்மா இப்படி ஆகிடுச்சே’ என்று பரிதவித்தவரை நானும் என் கணவரும் சமாதானப்படுத்தினோம்.
‘நீங்களே இப்படி உடைஞ்சு போனா எப்படி மாமா? நீங்கதான் எனக்கு ஆறுதல் சொல்லணும். நீங்க தைரியமா இருந்ததான் நானும் எல்லாத்தையும் கடந்துவர முடியும்’னு சொன்னேன். அன்னைக்குக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்கிட்டே பேசினோம். அதுக்குப் பிறகுதான் அவர் ஓரளவுக்கு சமாதானமானார்.
என் மேல் அக்கறை கொண்ட இன்னொரு புகுந்தவீட்டுச் சொந்தம் என் கணவரின் தங்கை நித்யா. அவள் திருமணமாகி திருவாரூரில் இருக்கிறாள். வளர்ந்த குழந்தை அவள், மெல்லிய மனது கொண்டவள். தன் அண்ணன் மேல் வைத்திருக்கும் பாசத்தில் ஒரு சதவீதமும் குறையாமல் என் மீதும் பாசம் கொண்டவள். அவளிடம் சொன்னால் தாங்கிக் கொள்வாளா என்ற தயக்கத்துடன்தான் போன் செய்தேன்.
ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட மிக பக்குவத்துடன் நடந்துகொண்டாள் அவள். ஒரு வேளை அவள் அழுதால் நானும் உடைந்துவிடுவேன் என்று நினைத்தாளோ என்னவோ. ‘எதுவும் ஆகாது, கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாகிடும்’னு பெரிய மனுஷி மாதிரி சொன்னா. அந்த அணுகுமுறை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நாம சோர்ந்துபோய் இருக்கும்போது இப்படி யாராவது ஆறுதல் சொன்னா இதமாத்தானே இருக்கும்? அப்படியொரு இதத்தை அவளுடைய பேச்சு தந்தது.
எனக்குப் புற்றுநோய் வந்த விஷயத்தை நான் என் அப்பாவிடம் சொல்லவில்லை. அம்மாதான் விஷயத்தை அவரிடம் சொன்னார். அப்பா எப்பவுமே கண்டிப்பான ஆளு. எல்லாமே ஒரு ஒழுங்குமுறையில இருக்கணும்னு நினைப்பார். அப்படித்தான் எங்களையும் வளர்த்தார். எந்தப் பிரச்சினையா இருந்தாலும் அதைத் தள்ளி நின்னு அலசுவார். உணர்ச்சிவசப்படறதால எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாதுன்னு அவருக்குத் தெரியும்.
எதையுமே தர்க்கப்பூர்வமாதான் அணுகுவார். ரொம்ப உறுதியானவர். அம்மா மூலமா விஷயம் கேள்விப்பட்டு என்கிட்டே அப்பா பேசினார். பேச்சுல ஒரு சின்ன பிசிறுகூட இல்லை. ரொம்ப தெளிவா, நம்பிக்கையா பேசினார்.
என்னைச் சுற்றியிருக்கும் சொந்தங்களின் அன்பிலும் நம்பிக்கையிலுமே எனக்குப் பாதி வியாதி குணமானது போல இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு ஆபரேஷன். சுற்றுலாவுக்குத் திட்டமிடுவது போல மொத்தக் குடும்பமும் என் ஆபரேஷனுக்கு திட்டமிட்டது.

சி.ஐ.எஸ்.எஃப். கட்டுப்பாட்டில் இன்று முதல் உயர்நீதிமன்ற வளாகம்! By சென்னை, First Published : 16 November 2015 12:47 AM IST

சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பணியை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சி.ஐ.எஸ்.எஃப்) திங்கள்கிழமை (நவ. 16) முதல் மேற்கொள்ள உள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவம்பர் 16 முதல் மத்தியப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அக்டோபர் 30-இல் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, 650 வீரர்களை கொண்டு 6 மாதங்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தேவையான முன்வைப்புத் தொகை ரூ.16.60 கோடியை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நவம்பர் 5-இல் தமிழக அரசு வழங்கியது.
இதன்பின்னர், மத்தியப் படை பாதுகாப்பு வழங்குவதற்கான பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தன.
மத்திய படையியினர் பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கீழமை நீதிமன்றங்களையும், உயர் நீதிமன்றக் கட்டடங்களையும் தனித்தனியே பிரிக்க இரும்பு தகடுகளைக் கொண்டு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்புப் பணிக்காக சுமார் 450 வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்துக்கு மட்டும் மத்திய படை: 30-க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்றங்களைக் கொண்ட பகுதியில் மட்டுமே சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அதிலும், உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பணிகளை மாநில போலீஸாருடன் இணைந்துதான் மத்திய படையினர் மேற்கொள்ள உள்ளனர். குடும்ப நல நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் அனைத்தும் மாநில போலீஸாரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
"அடையாள அட்டை இல்லாமல் நுழைய முடியாது'
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் (தனியே பிரிக்கப்பட்ட பகுதி) திங்கள்கிழமை முதல் அடையாள அட்டை இல்லாமல் நுழைய முடியாது. 6 வாயில்களில் (சோதனை மையங்கள்) மத்திய படையினரின் முழுமையான சோதனைக்குப் பிறகே அனைவரும் அனுமதிக்கப்படுவர்.
வழக்குரைஞர்கள் பார் கவுன்சில் அடையாள அட்டை அல்லது வழக்குரைஞர் சங்க அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். வழக்கு தொடுத்தவர்கள் என்றால், அனுமதிச் சீட்டு பெற 2 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு நுழைவுச் சீட்டு பெற்ற பின்னர் சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றக் கட்டடத்துக்கு அருகில் உள்ள வாயில்களில் வழியாக உயர் நீதிமன்றத்துக்கு உள்ளே வர வேண்டும். இது தவிர வழக்குரைஞர்கள் கார், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனியே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முறைப்படி ஒப்படைப்பு
மாநில போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை உயர்நீதிமன்ற வளாகம் (தனியே பிரிக்கப்பட்ட பகுதி) சி.ஐ.எஸ்.எஃப். வசம் ஞாயிற்றுக்கிழமை முறையாக ஒப்படைக்கப்பட்டது.
காவல் துறையின் துணை ஆணையர் (பூக்கடை) செந்தில் குமார், சி.ஐ.எஸ்.எஃப். தலைமை காமாண்டன்ட் ஸ்ரீதரிடம் இந்தப் பணியை ஒப்படைத்தார்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற பாதுகாப்பு சி.ஐ.எஸ்.எஃப்.,கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் தலைமை நீதிபதியின் அறை, தலைமைப் பதிவாளர், பதிவாளர்கள் அறைகள், பிரதான வாயில்கள், உயர்நீதிமன்ற அறைகள் ஆகியவற்றின் முன்பு மத்திய படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, உயர்நீதிமன்ற பகுதி முழுவதையும் மாநில போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் குழுவினரும் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்துக்கு இடமாக பொருள்கள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து, ஒப்படைக்கவே சோதனை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் பக்தர்கள் கடும் அவதி

பதிவு செய்த நாள்:
ஞாயிறு, நவம்பர் 15,2015, 8:59 PM IST

திருமலை,

திருமலையில் பலத்த மழை பெய்து வருவதால் திருப்பதி மலைப்பாதையில் பாறைகளும், மரங்களும் சரிந்து சாலையில் விழுகின்றன. திருப்பதி 2–வது மலைப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதால் அடிவாரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மோகாலிமிட்டா இடத்தில் திருமலையை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் சுமார் 20 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு இணைப்புச்சாலை வழியாக திருமலைக்கு திருப்பி விடப்படுகின்றன. இதனால் குறித்த நேரத்தில் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

ஒரே மலைப்பாதையில் அனைத்து வாகனங்களும் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மலைப்பாதையை சீரமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மோகாலிமிட்டாவில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் நீண்டதூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: மீட்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் உயர் அதிகாரி தகவல்

பதிவு செய்த நாள்:
திங்கள் , நவம்பர் 16,2015, 3:00 AM IST
சென்னை,
அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் எல்லா விதமான மீட்பு பணிகளையும் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக உயர் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
தொடர் கனமழைதமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொள்வது? என்பது குறித்து மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தொடர் மழைக்கு எல்லா விதத்திலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) கே.எஸ்.கந்தசாமி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–
தொடர் மழை காரணமாக சென்னைக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. நீர்தேக்க பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 2 முதல் 50 குதிரைத்திறன் கொண்ட 170 பம்புசெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. மழைநீரை வடியவைக்க 57 ஜே.சி.பி. எந்திரங்கள், நீரை உறிஞ்சும் 75 ‘சூப்பர் சக்கர்’ எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 71 எந்திரங்கள் சென்னை குடிநீர் வாரியத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுகள்சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை சேர்ந்த 1,090 பொதுமக்கள் அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாயக்கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாநகர், ராயபுரம் மண்டலங்கள் உள்பட பாதிக்கப்பட்ட மண்டலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் இதுவரை 90 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உணவு பொட்டலங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 120 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது வரை இந்த முகாம்கள் மூலம் 19 ஆயிரத்து 200 பேர் பயனடைந்து உள்ளனர்.
சாய்ந்த மரங்கள் அகற்றம்சென்னை நகரில் மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட 6 சுரங்கப்பாதைகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் மாநகராட்சிக்குட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்திருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட 4 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நகரின் 490 இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 186 இடங்களில் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (நேற்று) மட்டும் சென்னையில் மழைக்கு சாய்ந்த 7 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி தயார்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் 3 மிதவை படகுகளும், தீயணைப்பு துறை சார்பில் 6 படகுகளும் தயார் நிலையில் உள்ளன. 45 பேர் கொண்ட ஒரு குழுவும், 35 பேர் கொண்ட மற்றொரு குழுவும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 6 படகுகளும் தயார் நிலையில் உள்ளன. மிதவை பலூன்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளன. இந்த குழுக்கள் பேசின்பிரிட்ஜ் மற்றும் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். செயற்பொறியாளர் தலைமையில் 30 பேர் கொண்ட குழுக்களாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. ‘1913’, ‘9445190228’, 044–25387235 உள்ளிட்ட எண்களில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம். எனவே இந்த மழைக்காலத்தில் எல்லா விதமான மீட்பு பணிகளையும் மேற்கொள்ள அனைத்து விதத்திலும் சென்னை மாநகராட்சி தயார் நிலையிலேயே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

பாரீசில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் 2008–ம் ஆண்டு மும்பை தாக்குதலை நினைவூட்டுகிறது உறவினர்கள் கண்ணீர் பேட்டி

பதிவு செய்த நாள்:
திங்கள் , நவம்பர் 16,2015, 3:32 AM IST
மும்பை,
பாரீசில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் 2008–ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலை நினைவூட்டுவதாக அந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர்மல்க கூறினர்.
பாரீசில் தாக்குதல்பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் தனித்தனி குழுக்களாக புகுந்த 8 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் 129 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த சம்பவம் பல தீவிரவாத பேரழிவுகளை சந்தித்துள்ள மும்பை நகர மக்களை மேலும் ஆழமாக பாதித்துள்ளது என்றே கூறலாம்.
காரணம் இந்த தாக்குதல் கடந்த 2008–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் தீவிரவாத தாக்குதலை நினைவுபடுத்துவது போலவே உள்ளது தான்.
மும்பை தாக்குதல்மும்பையில் 2008–ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்தது இந்த சம்பவம், லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் 12 இடங்களில் ஈவு, இரக்கமின்றி மக்களை கொன்று குவித்தனர். நான்கு நாட்கள் இந்த தாக்குதல் நீடித்தது. மொத்தம் 164 பேர் உயிரிழந்தனர், 300–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நகல் எடுத்தது போலவே தற்போதைய பாரீஸ் நகர தாக்குதலும் உள்ளது.
இதுகுறித்து 2008–ம் ஆண்டு மும்பை தாக்குதலின் போது உயிரிழந்த போலீஸ் கூடுதல் கமிஷனர் அசோக் காம்தேவின் மனைவி வினிதா காம்தே கூறியதாவது:–
மேற்கத்திய நாடுகளில் சிறப்பு வாய்ந்த பாதுகாப்பை கொண்ட பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதை கண்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். தங்கள் மதத்தை வளர்ப்பதற்காக இவ்வாறு செய்ததாக அவர்கள் அறவித்துள்ளனர். மதத்தை பரப்புவதற்கு இது தவறான வழிமுறையாகும் மாறாக வன்முறையை விரும்பாதவர்களுக்கு அவர்களின் மதத்தின்மீது மேலும் கோபத்தையே இது ஏற்படுத்தும்.
கணவனை இழந்தேன்...இந்த சம்பவம் என் கணவரை இழந்த அந்த மோசமான நாளை மீண்டும் நினைவூட்டுவதாக உள்ளது. இதேபோன்ற தாக்குதலில் தான் நான் என் கணவரை இழந்தேன். அவருடன் வாழ்ந்த காலத்தின் பசுமையான நினைவுகளே எனக்கு இருக்கும் ஒரேயொரு ஆறுதலான விஷயம்.
இவ்வாறு வினிதா காம்தே கூறினார்.
இதேபோல் 2008–ம் ஆண்டு மும்பை தாக்குதலின் போது தன் குடும்பத்தினர் 6 பேரை இழந்தவர் சமீம் சாயிக்(வயது 39). இவர் கூறுகையில், ‘‘ பாரீஸ் தாக்குதல் சம்பவம் எனக்கு பழைய சில வலிமிகுந்த சம்பவங்களை நினைவூட்டுகிறது. 2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய தினம் இரவு நானும் எனது குடும்பத்தினரும் எங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரெயில் நிலையத்திற்கு சென்றோம்.
6 பேரை இழந்தேன்...அது ஒரு வித்தியாசமான இரவு. ரெயில் நிலையத்தில் எங்கு நோக்கினும் துப்பாக்கி சத்தமும், மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடுவதையுமே காண முடிந்தது. எங்கும் ரத்தமாக காட்சியளித்தது. அங்கு என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்துகொள்வதற்கு முன்னதாகவே என் குடும்பத்தினர் 6 பேரை நான் அநியாயமாக இழந்துவிட்டேன்.
இதேபோன்ற சம்பவம் தற்போது பாரீஸ் நகரில் நடந்துள்ளதை கேள்விபட்டதும் என் இதயத்துடிப்பே சிறிதுநேரம் நின்றுவிட்டது. இதை கேள்விப்படும்போது, ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே உணவு கிடைத்தால் கூட நம் சொந்த கிராமத்திற்கு சென்று நிம்மதியாக வாழ்ந்துவிடலாம் என்று தோன்றுகிறது. பெரிய நகரங்களில் வாழ்வது பீதியை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

உடன்குடி மின்சாரத்திட்டத்தின் நத்தை வேகம்

பதிவு செய்த நாள்:
ஞாயிறு, நவம்பர் 15,2015, 5:57 PM IST
தமிழ்நாட்டில் பல மின்சாரத்திட்டங்கள் வேகமாக நிறைவேற்றப்பட்டு வந்தாலும், தென்கோடியில் உள்ள உடன்குடியில் 2007–ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்ட அனல் மின்சார நிலைய திட்டம், மின்சார வேகத்தில் இல்லாமல் நத்தை வேகத்தில்கூட நகராமல் இருக்கிறது. தொடர்ந்து பல முட்டுக்கட்டைகள். 2007–ம் ஆண்டு உடன்குடி அனல் மின்சார நிலையம் அறிவிக்கப்பட்டபோது, தலா 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இரு யூனிட்கள் அமைக்கப்படும் என்றும், ‘பெல்’ நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து கூட்டாக இதைத்தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டு நிறுவனத்துக்கு ‘உடன்குடி மின்சாரக்கழகம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த மின்சார நிலையம் உடன்குடியில் 760 ஏக்கர் நிலத்தில் அமைக்கவும், இதில் அரசு நிலம் 650 ஏக்கர் என்றும், மீதமுள்ள 110 ஏக்கர் தனியார் நிலம் என்றும் முடிவு செய்யப்பட்டு, தனியாரிடம் இருந்து நிலமும் கையகப்படுத்தப்பட்டது. 25 கோடி ரூபாய் செலவில் மண்நிரப்பும் பணியும், இதர ஆரம்பக்கட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில், சில தொழில்நுட்ப காரணங்களால் ‘பெல்’ நிறுவனம் இல்லாமல், தமிழ்நாடு மின்சார வாரியமே இந்த அனல் மின்சார நிலையத்தை தனியாகத்தொடங்கி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மின்சார நிலையம் தலா 660 மெகாவாட் கொண்ட இரு யூனிட்டுகளை, ஆக மொத்தம் 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தொடங்க 2013–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவெடுக்கப்பட்டது. ரூ.8 ஆயிரம் கோடி செலவிலான இந்த திட்டத்துக்காக டெண்டர்விடப்பட்டது. இந்த டெண்டரில் ‘பெல்’ நிறுவனமும், இந்தோ–சீனா கன்சார்ட்டியம் என்ற இரு நிறுவனங்கள் கொண்ட ஒரு நிறுவனமும் பங்கேற்றன. இந்த இரு நிறுவன டெண்டர்களிலுமே குறைபாடு இருப்பதாக இதற்காக நியமிக்கப்பட்ட கன்சல்டன்சி நிறுவனம் கருத்து தெரிவித்ததையடுத்து, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் இந்த டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டருக்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதை எதிர்த்து சீன நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் பழைய டெண்டரை ரத்து செய்ததை எதிர்த்தும், அந்த டெண்டரில் குறைவான தொகையை குறிப்பிட்டிருப்பதால் அதாவது, ‘பெல்’ நிறுவனத்தை விட 137 கோடி ரூபாய் குறைவாக குறிப்பிட்டுள்ளதால், தங்கள் நிறுவனத்துக்கே உடன்குடி அனல் மின்சார நிலையம் அமைப்பதற்கான ஆணையை வழங்கவேண்டும் என்றும் தொடர்ந்த மெயின் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், உடன்குடி திட்டத்துக்கு புதிய டெண்டர் விடுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சத்தியநாராயணன் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து மின்சாரவாரியம் அப்பீல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், மதிவாணன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் புதிய டெண்டரை தமிழ்நாடு மின்பகிர்மானக்கழகம் பரிசீலிக்கலாம், ஆனால் இறுதி தீர்ப்பு வரும்வரை யாருக்கும் காண்டிராக்டு கொடுக்கக்கூடாது என்று கூறி மீண்டும் விசாரணையை இன்று 16–ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். இன்றுதான் புதிய டெண்டரை மின்பகிர்மானக்கழகம் திறந்து தொழில்நுட்பரீதியாக எந்த நிறுவனம் தகுதிபடைத்தது என்று பார்க்கிறது. ஆனால், நீதிபதி ராமசுப்பிரமணியம் மதுரை ஐகோர்ட்டு பெஞ்சுக்கு சென்றுவிட்டதால், இந்த வழக்கின் விசாரணையும் உடனடியாக முடிவுகாண முடியாத நிலையில் இருக்கிறது. மொத்தத்தில், உடன்குடி திட்டத்தின் சிக்கலெல்லாம் தீர்ந்து உடனடியாக மின்சார உற்பத்தி தொடங்கும் நன்னாளைத்தான் தமிழகம் குறிப்பாக, தென்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கன மழையால் தத்தளிக்கும் சென்னை மாநகரம்:திரும்பும் திசை எல்லாம் வெள்ளம்

பதிவு செய்த நாள்:
ஞாயிறு, நவம்பர் 15,2015, 8:43 PM IST
சென்னை,

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதகளில் கனமழை பெய்துவருகிறது.இதன்காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் நகரின் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை நிலவுகிறது.

பலத்த மழை காரணமாக வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மழைநீர் புகுந்தது. இதனால் வாகனங்களுக்கு பெட்ரோல் போட முடியாத நிலை ஏற்பட்டது.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் தண்ணிர் மற்றும் மழைநீர் வீடுகளுக்குள் வர தொடங்கி உள்ளது.தொடர் மழை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

Sunday, November 15, 2015

அஜித்தும், விநாயகர் சென்ட்டிமென்ட்டும்!



அஜித்தும், விநாயகர் சென்ட்டிமென்ட்டும்!




14 நவ,2015 - 17:51 IST
எழுத்தின் அளவு:

நடிகர் அஜித் வெற்றியின் ரகசியத்துக்கு காரணம், விநாயகர் என்பது, கோலிவுட்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயமாகும். 1996ல், வான்மதி படத்தில், பிள்ளையார் பட்டி ஹீரோ... பாடலும், 1999ல், அமர்க்களம் படத்தில், காலம் கலி காலம், ஆகி போச்சுடா... பாடலும் இடம் பெற்றன. இந்த வரிசையில், வேதாளம் படத்தில், வீர விநாயகா... பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த படங்கள் அனைத்தும், அஜித்தின் சினிமாத் துறைக்கு முக்கிய பங்களிப்பை அளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மங்காத்தா படத்தில் அஜித் பெயர் விநாயக். வீரம் படத்திலும் அவரது கேரக்டருக்கு விநாயகம் என்றே பெயர் வைத்திருந்தனர். தற்போது, வேதாளம் படத்தில், அஜித் கேரக்டரின் பெயர் கணேஷ். இப்படி, ஒட்டு மொத்தமாக, அஜித்தின் வெற்றிக்கான காரணம் விநாயகர் என்பதை கண்டு பிடித்துள்ளது கோலிவுட். இதை மற்ற நடிகர்களும் பின்பற்ற நேரம் பார்த்து வருகின்றனர்.

NEWS TODAY 20.09.2024